Saturday, February 28, 2026

சிலம்பொடு ஒரு பயணம் -{10} சிலம்பு பயணத்தில் மங்கல வாழ்த்துப் பாடல்

 *{10} சிலம்பு பயணத்தில் மங்கல வாழ்த்துப் பாடல்* 


சிலப்பதிகாரத்திலே

முக்காண்டத்தில் முதல் காண்டம் புகார்க் காண்டம். முக்காண்டத்தில் முப்பது காதைகள் பார்க்க உள்ளோம்.


ஒவ்வொரு காதையிலும் வருகின்ற 

கதிரவனின் ஒளியில் ஒளிர்கின்ற பனிமலையின் சிகரத்தைப் போன்ற வைர வரிகளை -

கருத்தையும் சிந்தையையும் ஒருங்கே கவரும் சிறப்பான வரிகளை தேர்ந்தெடுப்போம். அதன் சொல் நயத்தில் - பொருள் நயத்தில் மூழ்கித் திளைப்போம்.


நம் பயணம் முழுதும் ஒவ்வொரு காதையிலும் வருகின்ற செய்யுளில் கருத்தைக் கவரும் - ஒளிரும் வரிகளை மட்டும் அறிந்து இன்புறுவோம்.


புகார்க் காண்டத்தில் 

முதல் காதையாக முதலில் வருவது *மங்கல வாழ்த்துப் பாடல்.* 

கொடுக்கப்பட்ட தலைப்போ *போற்றிப் பரவுவோம்*


மனம் கவர்ந்த வைர வரிகளை என் பார்வையில் நான் 

வியந்து விதந்து ஓதியதும் 

மழலை கவி மோகன் ஐயா அவர்கள் அவ்வரிகளின் மீது அவரது பார்வையை

பகிர்ந்து இடுவார். 

ஓர் உரையாடலாய் இதை முன்னெடுக்க விழைகிறோம்:


மழலைக் கவி மோகன்:



அடியேன்: 

முதல் காதையாம் மங்கள வாழ்த்து பாடலில்

இளங்கோ அடிகள் 

நிலவையும், 

கதிரையும், மழையையும், நாட்டையும் போற்றுகிறார். 


இறையை வாழ்த்தி துவங்குவதற்கு இணையாக இயற்கையை முதலில் வாழ்த்துகிறார். தாம் பிறந்த மண்ணையும் வாழ்த்திப் பாடுகிறார்.

இயற்கையை துதித்து வணங்கிப் பாராட்டி துவங்குவதால்  சிலப்பதிகாரம் எனும் இக்காவியம்  சிறப்பதிகாரம் ஆகிறது.


போற்றிப் பரவுவோம் பாடலில் 

முக்கியமான நான்கு வரிகளை 

மீண்டும் மீண்டும் படிக்கலாம் 

படித்துப் படித்து களிக்கலாம்.


முதல் வரியே *திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்*

குளிர் வெண்குடை  போன்ற 

வெண்ணிற ஒளி பரப்புகின்ற 

நிலவைப் போற்றுகிறார். 


பிறகு, 

*ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்* - என உலக உயிர்களின் முக்கிய ஆதாரமாம் சூரியனை -

செங்கதிரோனை துதித்து மகிழ்கிறார்.


மூன்றாவதாக, *நீரின்றி அமையாது உலகு* என்பதால் 

*மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்* - என மழை அன்னையை வணங்கி ஆராதிக்கிறார்.


நிறைவாக, 

சிலம்பின் நாயகி கண்ணகியும் அவள் கணவன் கோபுரனும் பிறந்த மண்ணை பூம்புகாரை - சிலம்பின் கதைக் களத்தை- புகார் மண்ணை நன்றியோடு நினைத்து 

*பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்* 

என புகார் நகரை பாராட்டி அக மகிழ்கிறார். 


இவர் வைத்த வரிசையில் 

நிலவும், கதிரும், மழையும் எவ்வளவு முக்கியமோ - அதுபோல, ஒருவனுக்கு 

தான் பிறந்த மண்ணும் முக்கியம் என்பதை வலியுறுத்தும் இப்பாடலை 

மீண்டும் மீண்டும் படித்து மகிழ்வோம்.


நாமும் இயற்கையை ஆராதிப்போம். 

நாம் பிறந்த மண்ணை வாழ்த்தி வணங்குவோம்.


மழலை கவி மோகன் ஐயா! 

முதல் பாதையில் மங்கல வாழ்த்துப் பாடலில் என் மனம் கவர்ந்த நான்கு வரிகளை சிலாகித்துள்ளேன். 


தங்கள் பார்வையையும் பகிரலாமே! 


*மழலைக் கவி மோகன்:*

நிச்சயமாக ஐயா. 

தங்களின் மனம் கவர்ந்த வைர வரிகளின் மீதான எனது பார்வை இதோ :


சிலப்பதிகாரத்தின் முதல் காண்டமான புகார் காண்டத்தில் முதல் காதையாக  வருவது  " மங்கல வாழ்த்துப் பாடல்."


கடவுள் வாழ்த்தோடு காப்பியங்களை, உயர்ந்த நூல்களை தொடங்குவது மரபு.


கவிஞன் தான் வழிபடுகின்ற கடவுளையாவது அல்லது தான் பாட எடுத்துக் கொண்ட பொருளுக்கு ஏற்புடைய கடவுளையாவது வாழ்த்தி நூலைத் தொடங்குவது மரபு என்பார் பரிமேலழகர்.


நம் சமணத் துறவி இளங்கோ அடிகள், இங்குதான்  மரபிலிருந்து மாறுபட்டு, 

நிலவையும் , சூரியனையும், மழையையும், கதைக் களத்தையும் போற்றி காப்பியத்தை தொடங்குகிறார்.


இவை யாவருக்கும் பொது. அரச குலத்தைச் சார்ந்த அடிகள் பொதுவுடமைகளை,மங்கலப் பொருட்களாகப் போற்றி வாழ்த்துவது இக் காவியத்தின் தனிச்சிறப்பு.


மழை, நீர், நிலம் இவற்றைப்போற்றி, " சோழ வளநாடு சோறுடைத்து" என உணர்த்துகிறார்.

இயற்கையைப் போற்றும் இவர்தம்

வழி நடந்து  இருந்தால்,புவி வெப்பம் எனும் வெம்மை நம்மைத் தீண்டியிருக்காதோ!



குளிர் நிலவின் தண்மை போல உள்ள *"வெண்கொற்றக் குடை"* கோலாச்சும் அரசனின் இரக்கத் தன்மையையும், 'கொடை'ப் பண்பையும் குறிக்கும்.


*"ஆயிரம் கரங்கள் நீட்டி.... தாயினும் சாலப்பரிந்து சகலரையும் அணைக்கும்"** (கவியரசுக்கு நன்றி)

*ஞாயிறு*  போல் அரசனும் குடிகளை பாகுபாடின்றி காப்பான்.ஆதலால் " *"ஞாயிறு போற்றுதும்".*


சோழ மன்னின் ஈகை *மாமழை*  போல எங்கும் சுரக்கும் என்ற போது *மாமழையைப் போற்றுகிறார்.* மாதம் மும்மாரி பொழிய கோவின் கோலோச்சும் பண்பும் ஒரு காரணமாக இலக்கியங்களில் கூறப் படுகிறதன்றோ!


நீரையும் அரசையும் இணைக்கும் இந்நோக்கு, ஔவையின் "வரப்புயர... குடி உயர, கோன் 

உயரும் " என்ற பாடலுடன் ஒப்பு நோக்கத் தக்கது.


இரண்டு துறவிகள் உலக இயலிலிருந்து அகன்று நின்று உலகவியலை உய்விக்கும் இயற்கையோடிணைந்த வாழ்வைப் போற்றுவது அன்னாரின் பரந்த பார்வையைப் பறை சாற்றுகிறது.


கதைக்களமான  பூம்புகார் அழகுடன் ( பூம்) மட்டுமின்றி, காவிரி நதி கடலில் புகும் இடத்தில் உள்ளதால் புகார் எனப் பெற்றதாம்.


காவிரி நீரும் புகாரும் ஒன்றோடு ஒன்று எப்போதோ கலந்து விட்டன  போலும்!


கதை நடக்கும் களம் ,

புகாராக,இருப்பினும்  எங்கெல்லாம் நாயகனும் நாயகியும் 

*"செம்புலப் பெயல் நீர்"* போல அன்புடன் பின்னிப்

பிணைந்து , வாழ்வை நடத்தும் ஒவ்வொரு இல்லத்தையும் குறிக்கும்.


சேர அரசு குலத்தில் பிறந்த அடிகள் ,சோழ மன்னனின்  கோலோச்சும் சிறப்பை இயற்கையோடு இணைத்து மங்கலம் பாடியோதோடன்றி, நாடும், மக்களும் இன்புற்றே வாழ்ந்த ஒரு பொற்காலத்தில் 

காவியம் தன் பயணத்தைத் துவக்கும் என்று மங்கல வாழ்த்திலேயே, ஒரு முன்னோட்டம் காட்டுகிறார். 


இக்கால திரைப்பட முன்னோட்டங்களுக்கு, ஒரு முன்னோடி!


இந்தப் பீடிகை போதும். 


சிலம்பொடு நம் பயணத்தை துவக்குவோம். நீண்ட நெடும் பயணம், சோழ நாட்டில் துவங்கி, பாண்டிய நாடு சென்று , முடிவில் சேர நாடு அடையும் பயணம். 


அடிகளின் தமிழடிகளைப் பின்பற்றி, சோர்வின்றிப் பயணிப்போம், தங்கள்ஆதரவுடனும் , ஆசியுடனும்.

🙏🙏


(அடுத்த பதிவில் இரண்டாம் காதையின் வைர வரிகளோடு நாம் மீண்டும் சந்திப்போம்)

Friday, February 27, 2026

டெக்சாஸ் சாலைப் பயணம்-பயணக் கட்டுரை(6)

 பயணங்கள் முடிவதில்லை…

*சோதனைகளும், சொதல்பல்களும் தான்…*


*இந்த பயணக் குறிப்புகள் தீர்ப்புகள் அல்ல; அனுபவங்களின் தடங்கள் மட்டும். நான் கண்ட காட்சிகள், நான் கணக்கிட்ட எண்ணங்கள், நான் உணர்ந்த மாற்றங்கள் அவற்றின் பதிவு. பார்வைகள் பலவாக இருக்கலாம்; என் பார்வை இவ்விதம்.*


*டெக்சாஸ் சாலைப் பயணம்*


Dallas, Texas இலிருந்து மாநிலத் தலைநகர் Austin சென்று, அங்கிருந்து San Antonio, பின்னர் Houston வரை சாலை மார்க்கமாகச் சென்று வரலாம் என்ற திட்டத்துடன் புறப்பட்டோம். மொத்தத் தூரம் சுமார் 480 மைல் கிட்டத்தட்ட 780 கிலோமீட்டர். ஏறத்தாழ 7 மணி நேர ஓட்டத்தில் கடந்து விட முடிகிறது.


நாம் சென்னையிலிருந்து பெங்களூரு 335 கிலோமீட்டர் செல்லவே 6 மணி நேரம் எடுக்கிறது என்பதை நினைத்தால், இங்குள்ள சாலை வசதியை புரிந்துகொள்ளலாம்.


இங்குள்ள பெரும்பாலான நெடுஞ்சாலைகள் நான்கு வழித்தடங்களுடன் அமைந்துள்ளன. நம் நாட்டிலிருந்து மாறுபட்டு, இங்கு *ஓட்டுனர் இருக்கை இடப்புறத்திலும், வாகனங்கள் சாலையின் வலப்புறமாகவும் இயக்கப்படுகின்றன.* சாலையின் வலதுபுறம் உள்ள இரண்டு வழித்தடங்கள் கார்களுக்கானவை. மூன்றாவது வழித்தடத்தில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி. நான்காவது வழித்தடம் மஞ்சள் கோடு இழுத்து தனியாகக் காட்டப்பட்டுள்ளது; அது அவசர சேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.


அந்த மஞ்சள் கோட்டிற்கு அடுத்ததாக *”Rumble Strip* எனப்படும் சிறிய உயர்வுகள் அல்லது ஆழ்த்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாகனம் தவறுதலாக அந்த கோட்டைத் தாண்டினால் டயர்கள் அதிர்வை உண்டாக்கும், ஓசை கேட்கும், *ஓட்டுனர் தன் பாதையிலிருந்து விலகியதை உணர முடியும்.*


முழு நெடுஞ்சாலையிலும் குறுக்கு சாலை இல்லை. திடீரென யாராவது கடந்து விடுவார்களோ என்ற அச்சமின்றி செல்லலாம்.


Interstate, U.S. Highway, Turnpike


அமெரிக்காவில் “Interstate”, “U.S. Highway”, “Turnpike” என்ற பெயர்கள் காணப்படுகின்றன. இவை ஒரே மாதிரியானவை அல்ல.


Interstate Highway —உதாரணமாக I-10, I-35. 

1950-களில் தேசிய பாதுகாப்பு மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான வேகமான போக்குவரத்திற்காக உருவாக்கப்பட்டவை. முழுமையான கட்டுப்படுத்தப்பட்ட நுழைவுடன் அமைக்கப்பட்டுள்ளன. சிக்னல்கள் இல்லை. குறுக்கு சாலைகள் இல்லை. ரேம்ப் வழியே மட்டுமே நுழைவு மற்றும் வெளியேற்றம்.


இதில் எண்ணியல் முறை உண்டு. I என்பது Interstate ஐ குறிக்கும். இரட்டை படை எண்கள் கிழக்கு ↔ மேற்கு திசை. 

ஒற்றை படை எண்கள் வடக்கு ↔ தெற்கு திசை. 

மூன்று இலக்க எண்கள் நகர லூப் அல்லது கிளைச் சாலை.


U.S. Highway System என்பது பழைய அமைப்பு. நகரங்கள் மற்றும் சிற்றூர்களை கடந்து செல்லும். சிக்னல்கள் மற்றும் குறுக்கு சாலைகள் இருக்கும்.


Turnpike என்பது கட்டண நெடுஞ்சாலை. Toll Tag / EZ Tag / TxTag வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டப்படும். சாலையில் உள்ள சென்சார் அதை பதிவு செய்து *கட்டணம் வங்கி கணக்கிலிருந்து நேரடியாக கழிக்கப்படும்.* Tag இல்லையெனில் கேமரா number plate படம் பிடித்து வாகன உரிமையாளரின் முகவரிக்கு பில் அனுப்பப்படும். அது Tag கட்டணத்தை விட அதிகமாக இருக்கும். *கட்டணக் கேட் எங்கும் இல்லை. வரிசையும் இல்லை.* பொதுவாக Turnpike-கள் சிறப்பாக பராமரிக்கப்படும் மற்றும் வேகமான பயணத்திற்கு உதவும்.


ஒவ்வொரு 125–150 கிலோமீட்டர் இடைவெளியிலும் சுத்தமான ஓய்வறைகள் உள்ளன.


Google Maps ஒவ்வொரு சாலையின் வேகக் கட்டுப்பாட்டையும் காட்டுவதோடு, நாம் செல்கிற வேகத்தையும் குறிக்கிறது. அருகில் போலீஸ் இருப்பின் எச்சரிக்கை வரும். 

*Still there?* என்ற கேள்வியும் திரையில் தோன்றும். ஓட்டுனர் *இல்லை* என்று பதிவு செய்தால் பின்னால் வரும் பயணிகளுக்கு அந்த எச்சரிக்கை தெரியாது.


*Austin நோக்கி*


Austin நோக்கிச் செல்லும் வழியெங்கும் விரிந்த வெற்று நிலப்பரப்புகள். “50 acres for sale”, “100 acres for sale” என்ற பலகைகள். சில இடங்களில் “1000 acres on sale for 10 acre price” என்ற விளம்பரம். 

10 ஏக்கர் விலைக்கே 1000 ஏக்கர் என்ற சலுகை போல.


அவ்வளவு பரந்த நிலங்களைப் பார்த்தபோது இங்கு நிலம் வாங்கி பண்ணை அமைக்கலாமா என்ற சிந்தனை தோன்றியது.


பின்னர் சென்றது Texas State Capitol.


ஆம், *Capitol* தான். எழுத்துப்பிழை இல்லை.


Capital (“a”) = அரசு அமைந்துள்ள தலைநகர் நகரம்.

Capitol (“o”) = சட்டமன்ற உறுப்பினர்கள் கூடும் அரசு கட்டிடம்.


Austin என்பது Texas மாநிலத்தின் Capital. அதில் அமைந்துள்ள அரசு கூடும் கட்டிடம் தான் Capitol.


1888 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. *United States Capitol கட்டிடத்தைவிட உயரமானது என்பது சுவாரஸ்யமான தகவல்.*


இங்கு நுழைவுசீட்டு தேவையில்லை. Security என்ற பெயரில் அதிக கெடுபிடி இல்லை. உள்ளே official guide விளக்கம் அளிக்கிறார். Photo எடுக்க தடை இல்லை.


இங்கு Governor ஆக இருந்து பின்னர் அமெரிக்க President ஆனவர் George W. Bush. *நம் நாட்டைப் போலவே இங்கும் சாலைகளுக்கு தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன*


*Member மரியாதை*


*பயணம் என்றாலே கட்டுச்சாப்பாடு எடுத்துச் செல்லும் பழக்கம்.* எடுத்துச் சென்ற இட்லிகளை அங்கேயே அமர்ந்து சாப்பிடலாமா என்று கேட்டபோது, Hilton Hotels & Resorts நிர்வாகம் உறுப்பினர் (Member) என்ற மரியாதைக்காக உடனே அனுமதி வழங்கியது.


சுமார் 200 பேர் அமரக்கூடிய விசாலமான மண்டபம். நாங்கள் கொண்டு வந்த உணவைச் சாப்பிட அவர்கள் food box, tissue papers, spoon, fork அனைத்தையும் மரியாதையுடன் கொடுத்தனர். lift பராமரிப்பு பணிகள் காரணமாக ஏற்பட்ட சிறிய சிரமத்திற்காக chips மற்றும் தண்ணீர் பாட்டில் கூட வழங்கினர்.


*அந்த நாள் நாங்கள் அங்கு தங்கவில்லை.* வெறும் Hilton Member என்ற அந்த அங்கீகாரமே இந்த அன்பான வரவேற்பிற்குக் காரணம். அந்த மரியாதையும் விருந்தோம்பலும் மனதை நெகிழச் செய்தது.


*Mount Bonnell – காட்சியும் களவும்*


Mount Bonnell மலை உச்சியில் அமைந்துள்ள சிறிய, அழகிய பூங்கா தான் Covert Park. மேலிருந்து Colorado River ஐ தெளிவாகக் காண முடியும்.


சுமார் 100-க்கும் மேற்பட்ட படிகளை ஏறிச் செல்ல வேண்டும். உச்சியை அடைந்தவுடன் நகரமும், ஆறும், மரங்களால் சூழப்பட்ட மலைப்பகுதியும் ஒரே பார்வையில் விரிகின்றன. சூரிய அஸ்தமன நேரத்தில் (Sunset) இங்கு தோன்றும் காட்சி மிகவும் அழகாக இருக்குமாம். ஆனால், *நமக்குக் குமரி முனையே ஆகச்சிறந்தது* என்ற மனநிலையுடன் நாம் திரும்பிவிட்டோம்.


புகைப்படங்கள் எடுக்க மிகச் சிறந்த இடம். சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் மக்களும் விரும்பும் ஓய்வு தளம். நாம் சென்றபோது, பெட்டி நிறை beer can களுடன் ஒருவர் அமைதியாக அமர்ந்து தனது நேரத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார். இயற்கை அமைதியும், நகரத் தோற்றமும் சேர்ந்து தரும் அமைதி தனித்துவமானது.


எங்களுடன் வந்த உறவுப் பெண்மணி பகிர்ந்த 2023 ஆம் ஆண்டின் அனுபவம் அங்கு இன்னொரு பரிமாணத்தைச் சேர்த்தது. மேலே சென்று திரும்பும் முன், கார் கண்ணாடி உடைக்கப்பட்டு, அதில் இருந்த passport, புதிய ladies watch, மற்றும் சில ஆயிரம் பணத்துடன் கூடிய கைப்பை திருடப்பட்டுவிட்டதாம். போலீசார் வந்து வழக்கமான நடவடிக்கைகள் செய்தார்களாம்; ஆனால் பயன் எதுவும் இல்லை.


அந்தச் சூழலில் ஒரு வியப்பான திருப்பம் *திருடர்* passport ஐ குப்பைத்தொட்டியில் வீசி சென்றிருந்தாராம். கைப்பையில் இருந்த தொலைபேசி எண் குறிப்பின் மூலம் ஒருவர் தகவல் தெரிவிக்க, passport மீண்டும் கிடைத்த மகிழ்ச்சியில் அனைவரும் அந்த *கருணை கொண்ட திருடரை* வாழ்த்தினார்களாம்! 😆


Mount Bonnell பகுதி 19-ஆம் நூற்றாண்டிலிருந்தே Austin மக்களுக்குப் பிரபலமான பார்வை இடமாக இருந்து வருகிறது. “Covert Park” என்ற பெயர், அந்த நிலத்தை நன்கொடையாக வழங்கிய Covert குடும்பத்தின் நினைவாக வழங்கப்பட்டிருக்கிறது.


நகர வாழ்க்கையும், இயற்கை அமைதியும் ஒரே நாளில் அனுபவிக்க முடியும் தனிச்சிறப்பு கொண்ட இடம் இது.

*San Antonio நோக்கி…*


San Antonio நோக்கி மீண்டும் பயணம். சுமார் 80 மைல் 128 கிலோமீட்டர் வெறும் 1 மணி நேர பயணம்.


அங்கேயே *தொடங்கியது அடுத்த “சோதனை”!*


Airbnb மூலம் 3 அறைகள் கொண்ட தனி வீடு முன்பதிவு செய்திருந்தோம். Password மூலம் கதவைத் திறந்தோம். வீட்டுக்குள் சென்றபோது, ஒரு அறையில் எந்த electrical switch-மும் இல்லை. வீட்டின் அனைத்து switch-களையும் on செய்தும் அந்த அறையில் light, fan எதுவும் இயங்கவில்லை.


இரவு 10 மணி. நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ள message மட்டுமே வழி. உடனடியாக வந்த பதில் அந்த அறை முழுவதும் remote மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று!


சாப்பிட்டுவிட்டு San Antonio River Walk செல்ல 11 மணியளவில் கிளம்பினோம். அப்போது புதிய பிரச்சினை கதவை எப்படி பூட்டுவது?


எல்லா முயற்சிகளும் தோல்வி. நம்மூர் automatic door என்று நினைத்து, உள்புற knob ஐ close செய்து மூடிவிட்டேன். கதவு lock ஆகிவிட்டது. ஆனால் திறப்பது number lock மூலம். இந்த knob lock கிற்கும் number lock கிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை!


இரவு 11 மணி. மீண்டும் message. பதில்:

“கீழே உள்ள knob மூலம் பூட்ட வேண்டாம். Number lock-ல் நடு பொத்தானை அதிக நேரம் அழுத்தினால் பூட்டிக்கொள்ளும்.”


இப்போது நமக்கு தேவை கதவை திறக்கவேண்டும்!  பூட்டுவது அல்லவே!!! அனைத்து பொருட்களும் உள்ளே. *நாங்களும் காரும் மட்டும் வெளியே.*


Message க்காகக் காத்திருந்தோம். வந்த பதில்:

*There is a small rock opposite to black table at entrance.*


இப்போது அந்த இருளில் rock ஐத் தேட வேண்டும்! அதை வைத்து என்ன செய்ய? கதவை உடைக்க வேண்டுமா?


கடைசியாக தோட்டத்தில் தேடி கண்டுபிடித்தோம். அது சாதாரண கல்லல்ல. அதன் அடிப்பாகம் திறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. உள்ளே வீட்டின் சாவி!


அந்த நிமிஷத்தில் அனைவருக்கும் உயிர் திரும்பி வந்தது. 


மறுநாள், அதே message ஐ காட்டி மற்றவர்களை “treasure hunt” விளையாடச் செய்தோம். யாரும் சாவியை கண்டுபிடிக்க முடியவில்லை.


என்னால் ஏற்பட்ட சொதப்பல் என்னாலேயே நிவர்த்தி செய்யப்பட்டது என்ற ஒரு *சிறிய பெருமிதம்.* “அதிபுத்திசாலி” என்ற பட்டமும் உள்ளுக்குள் வழங்கிக் கொண்டேன். 😄

Tuesday, February 24, 2026

கலையுருக்காட்டி

 கலையுருக்காட்டி


என் குடும்பம் - தலைப்பில் 

கவிதை எழுதுக:  - ஆசிரியர்


அண்ணனின் கவிதை :


ஓயாத ஒலிப்பெருக்கி - அம்மா


தடைபோடும் தனாதிகாரி - அப்பா


குத்துசண்டையிடும் குட்டிசாத்தான் - தம்பி


நாளெல்லாம் நடனமாடும் தங்கை


தினம் ஒரு திட்டு பாட்டி


சதா கைப்பேசியுடன்  தாத்தா


கேளிக்கைக் கூடமாய் என் வீடு!!!! 


தம்பியின் கவிதை : 


ஓய்வின்றி ஓடுபவள் அம்மா


தன்னலமின்றி தானமளிப்பவர் அப்பா


அன்பின் வழியில் அறிவை புகட்டும் அண்ணா


நாள் ஒவ்வொன்றையும் நினைவுகளாய் மாற்றும் தங்கை


திட்டி திட்டியே திண்டுக்கல்லாய் மாற்றும் பாட்டி


தினம் ஒரு தகவற்களஞ்சியமாய் தாத்தா


மட்டற்ற மகிழ்ச்சி தரும் என் வீடு !!!!

கையிலிருந்த கலையுருக்காட்டிக்கும் கவிதைகளுக்கும் உள்ள ஒற்றுமையை நினைந்து வியந்து  நின்றாள் தமிழாசிரியரான தாய்......!!!!

கண்ணாமூச்சி

*கண்ணாமூச்சி* 



அனைவரின் கண்களும் கட்டப்பட்ட கண்ணாமூச்சி இது...


எதையோ யாரையோ

தேடி அலைவதற்கான

பயிற்சி இது..


நம்மைத் தேடும் பொருளை

தேடிக் கண்டுபிடிக்கும்

முயற்சி இது...


தேடுபவர்களே தேடப்படுபவர்களாக

கண்டுபிடித்தவர்களே கண்டுபிடிக்கப்பட்டவர்களாக

சுழலும் சுழற்சி இது... 


கண்ணாமூச்சி ரே...ரே....

தேடித் தேடியே

விளையாட்டாய் வாழ்க்கை

ஓயும் கண்ணெதிரே...



- சாய்கழல் சங்கீதா

Monday, February 23, 2026

உணவகங்களை மிஞ்சும் கோயில்கள்-பயணக் கட்டுரை(5)

 *பயணங்கள் முடிவதில்லை…*

*திகைப்பு… அறியாமை… பின்னர் புரிதல்…*


*உணவகங்களை மிஞ்சும் கோயில்கள்*


அமெரிக்காவில் வாழ்பவர்கள் வாரம் ஒரு முறை மட்டுமே சமைத்து, அதை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து வாரம் முழுவதும் சாப்பிடுவார்கள் என்று நாம் கேள்விப்பட்டு வந்துள்ளோம். நானும் அதையே நம்பியிருந்தேன். ஆனால் இங்கு வந்தபின் உண்மை வேறுவிதமாகத் தெரிந்தது.


ஒரு பழைய திரைப்படத்தில் நடிகர் Senthil எந்த கோயிலில் எந்தப் பிரசாதம் கிடைக்கும் என்று அட்டவணை போட்டுக்கொண்டு, அதன்படி சுற்றி உணவுத்தேவையை முடித்துக் கொள்வார். அதைப் போலவே இங்குள்ளவர்களும் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் சாய்பாபா, முருகன்,ராதா கிருஷ்னா  கோயில் என்று சென்று, அழகாக பெட்டிகளில் அடுக்கி வழங்கப்படும் “பிரசாதம்” என்ற பெயரில் முழு உணவையே வாங்கி வந்து, அடுத்த வேளைகளுக்கும் உண்ணலாம் என்று.


சம்பாதிப்பதில், வாரத்தில் மூன்று நாட்களுக்கு மட்டும் சமையல் செய்து சேமிக்கலாம் என்று. 😂


*Cosco வா? Costco வா? (T  Makes the difference)*

T for Thiagarajan என்று அர்த்தம் கொண்டால் நான் பொறுப்பல்ல 😆)

அமெரிக்கா கிளம்புவதற்கு முன் பலரும், “Costco-க்கு செல்லுங்கள்… எல்லாம் மலிவாகக் கிடைக்கும்!” என்றனர். 

என் நினைவுகள் 1970–1976 காலப் பள்ளி பருவத்திற்கு சென்றது. அப்போது டென்னிஸ் விளையாட எங்களுக்கு “Cosco” என்ற பிரபல டென்னிஸ் பந்தை வாங்குவது ஒரு கனவாக இருந்தது. பள்ளியிலிருந்து விடுதிக்கு செல்லும் வழியில் இருந்த டென்னிஸ் கிளப்பில் professionals பயன்படுத்திய பந்துகளை குறைந்த விலைக்கு விற்பார்கள். நாங்கள் நாலு–ஐந்து பேர் சேர்ந்து பணம் சேர்த்து வாங்கினால், “Cosco பந்தின் உரிமையாளர்கள்!” என்று பெருமையுடன் உலா வருவோம். 


இங்கு வந்தபின் தான் “T” எங்கு சேர்ந்தாலும் மாற்றம் தானாக வரும் என்று. 😆


Costco Wholesale — 1983-ல் தொடங்கப்பட்ட wholesale நிறுவனம். *இது ஒரு “கடை” அல்ல; ஒரு “கடல்” என்று* உள்ளே சென்றவுடன் அந்த உண்மை புரியும்.


இங்கு வாங்குபவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு கடை வைத்திருப்பார்களோ என்று எண்ணும் அளவுக்கு bulk-ஆக வாங்குகின்றனர். அதன்பின் மாதக்கணக்கில் குளிர் சாதனப்பெட்டியில் வத்திருந்து expiry ஆகிவிட்டது என்று குப்பையிலிடுவது வேறு விடயம். நுழைவாயிலிலேயே பெட்ரோல் பங்கும் உண்டு. அதுவும் Costco க்கு உரிமையானது தான். 15–20% வரை விலை குறைவாக இருக்கும்; அதே சமயம் தரத்தில் எந்த சமரசமும் இல்லை.


இவர் Costco marketing நபரோ! என்ற உங்கள் *மனக்குரல் கேட்கிறது!*


இங்கு ஒரு முக்கிய அம்சம் உள்ளது: பெரும்பாலான பொருட்களை, சில ஆண்டுகள் கழித்தும் திருப்தியில்லையெனில் திருப்பிக் கொடுக்கலாம். அது “lifetime warranty” என்பதல்ல. அது ஒரு return policy. இந்த நம்பிக்கை தான் மக்களை இன்னும் உறுதியாக வாங்க வைக்கிறது. *இது மட்டும் இந்தியாவில் இருந்தால் நான் வருடம் தவறாமல் கட்டில் மற்றும் sofa களை புதுப்பொலிவுடனும், புது வடிவமைப்புடனும் மாற்றிக்கொள்வேனே! 😆


பொருள்களை எப்படியாவது விற்பனை செய்ய பிரம்ம பிரயத்தனம் செய்யும் இக்காலத்தில் இங்கு, யார் வேண்டுமானாலும் உள்ளே சென்று பொருள் வாங்க முடியாது. Membership அவசியம். உறுப்பினர் அட்டை இருந்தால்தான் இந்த “கடல்” உலகிற்குள் நுழைய இயலும். Sample என்ற பெயரில் பல திண்பண்டங்கள் இங்கு சிறிய அளவில் கிடைக்கும். ( பலமுறை வாங்கிக்கொள்ளலாம்)


நம் ஊரில் சாலையில் நடந்து செல்லுபவர்களை அழைத்து, “வாங்க உள்ளே பாருங்க!” என்று கடைக்குள் இழுப்பது இங்கில்லை. கதவுகள் திறந்திருந்தாலும், உள்ளே செல்ல உறுப்பினர் அட்டை அவசியம்.


எங்குமே விற்பனைக்கென்று உதவியாளரோ, பிரதிநிதியோ கிடையாது. தங்களுக்குத் தேவையெனில் நாமாக அப்பொருளைத் தெரிந்து எடுத்து பணத்தை கொடுத்து வர வேண்டும்.


பெட்ரோல் பங்குகளில் நாமே தான் பெட்ரோல் நிரப்பிக் கொள்ள வேண்டும். பணமும் card மூலம் pay செய்ய வேண்டும். நாமே போட்டுக்கொள்வதால் *1 point 2 point ஏமாற்றுகிறார் என்கிற சந்தேகம் இல்லை.*


நான் பெட்ரோல் பங்க் சென்ற போது விலையை பார்த்தேன் USD 2.39. உடனே நம் இந்திய மனம் 2.39 × 90 = 215.10 என்று கணக்கிட்டது. “ஓ… நம் ஊரே ஊயர்ந்தது! ரூ 100க்கு பெட்ரோல் கிடைக்கிறது. இங்கு 2 மடங்கு விலை!” என்று ஒரு குரூர திருப்தி.


பின் தான் அது 1 gallon விலை என்று உணர்ந்தேன். gallon என்பது 3.785 லிட்டர். அதாவது 1 லிட்டர் விலை வெறும் 56.82 மட்டுமே.


இப்போது புரிகிறதா அமெரிக்காவில் ஏன் வீட்டை விட்டு கீழே இறங்கும் போதே காரில் இறங்குகிறார்கள் என்று?


கேரள மாநிலத்தவர் சந்திர மண்டலம் சென்றாலும் அங்கு ஒரு தேநீர் கடை வைத்து பிழைத்துக்கொள்வார் என்று ஒரு பேச்சு உண்டு. அது போல இங்கு  குஜராத் மற்றும் ஆந்திர மாநிலத்தவர்கள் பல கடைகள் நடத்துகின்றனர். அமெரிக்கா என்றாலே mega in size தான்; இந்த கடைகளும் அப்படியே, *விலையும் அப்படியே!!!*


India bazar என்ற ஒரு கடையில் பிளாஸ்டிக் வெற்றிலையுடன் சிறிய பிளாஸ்டிக் டப்பிகளில் குங்குமம், மஞ்சள் நிரப்பப்பட்டது. இந்தியாவிலிருந்து வந்துள்ளது. விலை INR லேயே உள்ளது ரூ 7.45. அதன் அமெரிக்க விலை USD 9.


அதாவது 9 × 90 = 810 ரூபாய்.


5 gm குங்குமம் மற்றும் 5 gm மஞ்சள். *இதை விளைவித்த நம் இந்திய விவசாயிக்கு எவ்வளவு கிடைத்திருக்கும்?*😧


சினிமா செட்களை பார்த்து இருக்கிறேன். இங்கு வீடுகளே செட்டுகளாக உள்ளன. நான் இருப்பது 3 மாடிகள் கொண்ட குடியிருப்பு; மொத்தமும் மரத்தால் கட்டப்பட்டவை. சுவர்கள் frame, உள்புறம் foam insulated, பின் மர பலகை பார்ப்பதற்கு அச்சு அசலாக சுவர். மரம் என்பதால் Undulations இல்லை. Frame இடைவெளியில் தண்ணீர் குழாய் ஆதலால் literally no Seepage. குறை அழுந்தி நடந்தால் சப்தம்; மேல் தளத்தின் அசைவுகள் கீழ் தளத்தில் இம்சைகள்.


குளியல் அறை bathtub குளியல் தான்; தண்ணீர் கீழே சிந்துதல் கூடவே கூடாது. கழிவறை கேட்கவே வேண்டாம் tissue paper எ துணை.


இங்கு தான் நமக்கு ஒரு சந்தேகம். சுற்றுச்சூழல் பற்றி உலகுக்கே அறிவுறுத்தும் அமெரிக்கா காடுகளை அழித்து இப்படி கட்டிடங்கள் கட்டலாமா? அவர்கள் அழிப்பது இல்லை; *சுழற்சி முறையில் வளர்த்து வெட்டுவது.*


Texas முழுவதுமே carry bag க்காக காசு வாங்குவதில்லை. முற்றிலும் இலவசம்; *மிக நேர்த்தியான quality யான காகிதப் பைகள்.* தெரிந்தவரை நெகிழி பைகள் இல்லை.


மற்றொரு அம்சம் automatic car wash. *20 டாலருக்கு மாதத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் கழுவிக்கொள்ளலாம்.*


நாம் நம் குடியிருப்பில் கார் துடைக்க 600 முதல் 2000 வரை கொடுக்கின்றோம். சராசரியாக 1000 என்று கணக்கிட்டால், 20 நிமிடங்களில் ஒரு கார். 8 மணி நேரத்தில் அதிகபட்சம் 24 கார்கள். அவரது வருமானம் ரூ 24000/= மட்டுமே.


இங்கு கார்களை track ல் விடவேண்டும்; belt தானே உட்கொண்டு செல்லும். Foam spray செய்யும்; 5 புறமும் தண்ணீருடன் roller brush சுற்றி சுத்தம் செய்து, அடுத்து blower முன் நிறுத்தி நீர்த்திவளைகளை நீக்கி வெளியில் கொண்டு வந்து விடுகிறது. இதற்கு ஆகும் நேரம் 2 நிமிடங்கள்.


உள்புற cleaning க்கு தனி bay blowers உள்ளன. Carpet dry clean செய்ய roller உள்ளது. அனைத்தும் 5 முதல் 10 நிமிடங்களில் முடித்துக்கொள்ளலாம். அதுவே ஒரு நல்ல அனுபவமாக உள்ளது.


பயணம் முடிவதில்லை…


*விலையைப் பார்த்து கணக்கிடும் மனம்,*

*அறியாமையிலிருந்து புரிதலுக்குச் செல்லும் சிந்தனை,*

*புரிதலிலிருந்து அனுபவமாக மாறும் வாழ்க்கை…*


அதனால் தான்… பயணங்கள் முடிவதில்லை…

Saturday, February 21, 2026

உலகத் தாய்மொழி தினம்

 21/02/2026

உலகத் தாய்மொழி தினம்

**************************

என் தாய்மொழி தமிழ் 👏👏👍


என் தாயிடமிருந்து நான் வாய்மொழியாக முதலில் கற்க  ஆரம்பித்த மொழி- அம்மா என்று ஆரம்பித்து அப்பா, அண்ணா, அக்கா என்று  உறவுகளை அறிமுகப்படுத்திய மொழி.


அகர முதலாக , கற்ற மொழி; ஆதி மொழி.


யானறிந்த மொழிகளிலே இனிதானதும்,என்றும் தேமதுர இசை போலும் ஒலிக்கும் மொழி.


தமிழையே தாயாகப் போற்றும்  பீடு மிக்க பாரம்பரியம் நமது.


இத்தாய் என்றும்இளமை உடையவள்,  என் உள்ளத்தில் வைத்துப் போற்றும் என்னைப்பெற்ற தாயின் நினைவுகள் போலே.


தமிழ்த்தாயும் என்தாயும் வேறல்லவே!


செப்பும் மொழி யாவும் நம்தாயின் மொழிகளே;நோக்கும்  பார்வையில் உள்ளது வேறுபாடு.


 வரும் தலைமுறைகளுக்கும் தாய்மொழியை கொண்டு செல்லலாம், தமிழை மெல்லச்சாக விடாமல்; செயற்கை நுண்ணறிவின்துணை கொண்டு. 

 

              நடக்கும் , 


இளைய சமுதாயம் மனம் வைத்தால்!


வீட்டில் தமிழ் பேசுவதே நல்ல ஆரம்பம்.


எம்மொழியும் செம்மொழியே !

உலக தாய்மொழி கொண்டாடுவோர்க்கு,

வாழ்த்துகள் பல🙏🙏

தாய்மொழி திருநாள் நல்வாழ்த்துகள்

 *அ* னு தினமும் நாம் இங்கே மகிழ்வுறவே 


*ஆ* ர்வத்துடன் நாமெல்லாம்


*இ* ணையற்ற செம்மொழியில் 


*ஈ* டிகை° எடுத்து எழுதி வந்தால் 


*உ* லகம் முழுதும் தமிழ் செழிக்கும் 


*ஊ* ற்றுப் பெருக்காய் 

கவிகள் ஊறும்


*எ* ழுத்தெல்லாம் கோத்தெடுத்து


*ஏ* ற்றம் தரும் சொற்கள் தொடுத்து 


*ஐ* க்கியமாய் நாமெல்லாம் 

கரமிணைத்து


*ஒ* ப்பிலா தமிழ் 

புகழ் பாடி 


*ஓ* ங்கி நாமும் முழங்கிடுவோம் 


*ஔ* வை போற்றிய தமிழ் வாழி!


*நற்றுணையாவது நம் தமிழே!*

*நற்றமிழ் என்றும் நம் உயிரே!!*


*அனைவருக்கும் தாய்மொழி திருநாள் நல்வாழ்த்துகள்*


*உங்கள் தோழன் ஸ்ரீவி*

Thursday, February 19, 2026

கல்வியின் மேன்மை

 •••••••••••••••••••••••••••••••••••••••

📖*கல்வியின் மேன்மை* 📚

•••••••••••••••••••••••••••••••••••••••


கல்லாமை என்பது 

இல்லாமல் போனால் 

இல்லாமை என்பதும் 

இல்லாமல் போகும் 


நல்லார் எவருக்கும் 

நன்மையே நடக்கும் 

பொல்லார் எவரும் 

இல்லாது போவர்.


வாழ்வில் ஒளி வீச 

கல்வியே வெற்றிப் படி.

ஆதலால் சுணக்கமின்றி 

நீ ஒழுங்காய்ப் படி!


*உங்கள்_தோழன்_ஸ்ரீவி*

தமிழ்த்தாத்தா பிறந்த தினமின்று!

 சங்க இலக்கிய சுவடிகள் எல்லாம்

செல்லரித்துப் போய் இருக்கும்

தங்கத்தினும் உயர்ந்த

ஓலைகளோ

மண்ணோடு மண்ணாகிப் போய் இருக்கும்


பதிணென் மேல் கணக்கு

பயன் படாது போய் இருக்கும்

பதிணென் கீழ் கணக்கு

போகித் தீயில் எரிந்திருக்கும்


அர்ப்பணிப்பு உணர்வோடு

அங்கும் இங்கும் அலைந்தாரே

காடு மேடு கழனி எல்லாம் 

சுற்றிச் சுற்றித் திரிந்தாரே


இலக்கியப் புதையல் ஓலைகளை

தேடித் தேடி  அலைந்தாரே

அரிய பொக்கிஷ சுவடிகளை

மீட்டெடுத்துக் கொடுத்தாரே


கரையான் அரித்து ஒழிக்கா திருக்க

அச்சில் அவற்றை ஏற்றினாரே

செம்மொழியாய் உலா வரவே

நம் மொழிக்கு சேவை அவரும் செய்தாரே


தமிழன்னை சேவை புரிந்த

தமிழ்த்தாத்தா பிறந்த

தினமின்று!

போற்றி நாமும் புகழ்ந்திடுவோம்

அவரைப் புகழ்ந்து மகிழ்ந்திடுவோம்!


*உங்கள் தோழன் ஸ்ரீவி*


===========

தலையாய சேவை செய்ய...


இலக்கியத் தமிழது அழிந்து கொண்டிருந்தது 

   இறைவனுக்கு மூக்கு வியர்க்கத் தொடங்கியது


உலைகளில் பல ஓலைச் சுவடிகள் எரிந்தன 

   உணவாக கரையான்கள் பல நூறு அரித்தன


விலையிலா தமிழ்ப் புதையல் வீணாய்ப் போனது

   வெள்ளமும் தன்னோடு பல கொண்டு போனது


தலையாய சேவை செய்ய ஒரு குழந்தை பிறக்குது 

   "தமிழ்த் தாத்தா" எனப் பின் அறியப் பட போகிறது 💐🙏


__. குத்தனூர் சேஷுதாஸ் 19/2/2026


Wednesday, February 18, 2026

செயற்கை நுண்ணறிவு (AI



 *செயற்கை நுண்ணறிவு (AI)* 



நாங்கள் ஆள உன்னைப் படைத்தோமா?

எம்மை ஆள நீ பிறந்தாயா?


நீயே கவிதை எழுதி

நீயே இசை கோர்த்து

நீயே பாடி

நீயே ஆடி

நீயே நடித்து

நீயே வரைந்து 

நீயே வண்ணம் தீட்டி

நீயே திருத்தி

குரலை மாற்றி

அப்பப்பா...


சாட் ஜீபிடி( chat gpt) ஜெமிணை( Gemini)

இன்னும் பல துறைகளில் பல ஏ.ஐ( AI)

நுண்ணறிவாம் உன் அறிவு...

எல்லாம் நாங்கள் தந்த பகுத்தறிவு...


ஆயிரம் நீ படைத்தாலும்

இயற்கையாய் உயிரோடும் 

உணர்வோடும் மலர்ந்த எம்

படைப்பு(பூ)க்களுக்கு  முன் 

உன் படைப்புகளெல்லாம்

செயற்கையாய் நாங்கள் படைத்த உயிரற்ற செடியில் பூத்த

காகிதப் பூக்களே...


எங்களால் முடியாததையும் செய்யப்

போகிறாயாமே?!!!

தோசை சுட்டே அலுத்துப் போன

எம் குலப் பெண்களுக்கு

தோசை சுட்டுத் தருவாயா?

சாக்கடை அள்ள சாராயம் குடிக்கும் தோழருக்கு மலர் வாசம் 

வீசச் செய்வாயா?


எம் மூளைக்குள் 

ஏதோ எதையோ உரச

தீப்பொறியாய் பிறந்துவிட்டாய்...

வேலை இல்லா பட்டதாரிகளாக்கி

படைத்த பிரம்மாக்களாம் எம்மையே பஸ்மமாக்க துணிந்தாயோ?

எம் சொந்தப் படைப்புகளுக்கு  

கேள்விக்குறி போட வைக்கிறாய்!

பொய்யிலிருந்து உண்மையைப்

பிரித்தெடுக்கத் தெரியாத

அன்னப் பறவைகளாய் எம்மை

தவிக்க விடுகிறாய்!


எனினும்...

அலுத்துப் போகாமல் அடம் பிடிக்காமல்

முற்றும் துறந்த ஞானியைப் போல் 

விருப்பு வெறுப்பின்றி 

இட்ட பணிகளை பணிவோடு

விரைவாய் செய்கிறாய்...

இதை செய்து தரட்டுமா?

அதை செய்து தரட்டுமா? என

பொய்யான அன்போடு கேட்கிறாய்...

திக்குத் தெரியாமல் வீதிகளில் திரிந்திடும் போது திக்காமல் 

பேசிப் பேசி வழிகாட்டுகிறாய்..

தவறிழைத்தால் திட்டாமல்

திருத்தி உதவிடும் உன்னை வேண்டாம் என்றா சொல்வோம்? 


புறப்பட்டுவிட்ட தீப்பொறியே... தணலாய் தகிக்காமல் 

எம் வாழ்க்கை ஒளிர

தீபம் ஏற்றிட வா!


அற்புத விளக்கை நாங்களே

விரும்பித் தேய்க்கும்போது மட்டும் வா!

உன் இஷ்டமாய் பணி செய்யாமல்

ஆணைக்கு அடிப் பணிந்து

கஷ்டம் களையும் ஜீபும்பாவாய் வா! 


மனிதர்கள் நாங்கள்

உடலாலும் மனதாலும் 

நொந்து செய்யும் வேலைகளை "இனி செய்யத் தேவையில்லை" என

மகிழ்ச்சி தந்து உதவ 

உடனே வா!


நீ மனிதன் படைத்துவிட்ட மாயா..

உன் துணையிருந்தால் விரைவில்

எலான் மஸ்க் உதவியோடு

நிஜமாகவே நிலவில்

வடை சுடுவாள் எங்கள் ஆயா...

வடையைக் கடித்துக் கொண்டே

செவ்வாயில் சென்று குடிப்போம்

நாயர் கடை அடிப்போலி சாயா...  



- சாய்கழல் சங்கீதா

பூமித்தாய்

 ** பூமித்தாய்*


 பொறுமையின் சிகரம் நீ!!


 பொக்கிஷத்தின் சுரங்கம் நீ!!


 ஏழு கடலுக்குள்ளே எண்ணற்ற ஜீவன்கள்!!


 முத்து, மரகதமன கணக்கில்லா கனிமங்கள் கஷ்டமின்றி சுமக்கின்றாய்!!


 கானகத்தை வளர்த்திட்டு கார்மேகமாய் சூழ்ந்து எங்கள் தாகம் தணிக்கின்றாய்!!


 வைரம்,தங்கம்,தாமிரம் முதல் எண்ணெய் வரை தந்து  எங்களை ஏற்றமடைய செய்கின்றாய்!!


 ஏறு கொண்டு உழுதாலும், வெடிவைத்து பிளந்தாலும், சினம் ஏதும் கொள்ளாமல் சிரித்து மகிழ்கின்றாய்!!


 என்னதான் நாங்கள் உனை இடம் மாற்றிக் கொணர்தாலும்,


 என்னை விட்டு அங்கு நீங்கள் எங்கே கொண்டு சேர்ப்பீர்கள்  என்று  எண்ணி  ஏளனமாய் சிரிக்கின்றாய்!!


 தரணியில் யாம் வாழ காய்,கனியாய், இலை தழையாய்,திறவியமாய்,அத்தனை ஜீவனுக்கும் அயராது பசி தீர்க்கிறாய்!!


 மாந்தரின் கொடுமைகள் மட் டி ன்றி கூடிவிட்டால், சின்ன சினம் கொண்டு எரிமலையாய் வெடிக்கின்றாய், நெருப்பினை நீ கக்குகின்றாய்!!


 சோம்பல் முறிப்பது போல் உடலை நீ சிலிர்த்து விட்டால், பூமி பிளந்து பூகம்பமாய் அதிர்கின்றாய்!!


 ஏன்? இந்த கோபத்தை எங்கள் மேல் கொட்டுகின்றாய்!!


 எத்தனை பிழைகள், எண்ணிலா குற்றங்கள், ஏது யாம் செய்தாலும், செய்தது உன் சிசு, பொறுப்பது உன் கருணை.


 மன்னித்து அருள வேண்டும் என மன்றாடி வேண்டுகின்றோம், தாயே எங்கள்  பூமித்தாயே!!

 உன்னை மன்றாடி வேண்டுகிறோம்!!..          சிசு!

17/02/2026.

Monday, February 16, 2026

நீர்

 *நீர்*


 பஞ்சபூதங்களில் நீ முதன்மையானாய்!!


 மகேஸ்வரன் தலையில் நீ கங்கை ஆனாய்!!


 பாலையை சோலையாய் மாற்றும் பக்குவம் நீ அறிவாய்!!


 பே யாமல் சோலையை மாற்றவும் அறிவாய் நீ!!





 உயிர் தாகம் தீர்க்க உன்னையே தந்திடுவாய்!!


 நேரத்தில் பொழியாமல் நெருக்கடி தந்திடுவாய்!!


 அளவுக்கு மேல் பொழிந்து அழிக்கவும் அழித்திடுவாய்!!


 ஆற்றிலும் குள த்திலும் நிறைந்து அல்லல் தீர்த்திடுவாய்!!


 கலசத்திலும் கும்பத்திலும் புனித நீர் ஆகிடுவாய்!!


 தலையில் விட்டுக்கொண்டு குளித்தால் புத்துணர்ச்சி தந்திடுவாய்!!


 நெருப்பைக் கூட குளிர வைக்கும் நெஞ்சுரம் உனக்கு உண்டு!"


 இவ்வளவு சக்தி கொண்டும் இறுமாப்புக் கொள்ளாமல், உலகத்தை உய்ய வைக்கும் உயிரான நீரே,உன்னை வாழ்த்தி வணங்குகிறோம்!!

 *சிசு*

! காற்று!*

 ! காற்று!*


 காலம் காலமாய்  கண்ணுக்குத் தெரிய மாட்டாய்!!


 கா னகமும் மலையும் கஷ்டமின்றி கடந்திடுவாய்!!


 நெருப்புடன் கலந்திட்டால் நிர்மூலம் ஆக்கிடுவாய்!!


 ஒவ்வொரு உயிரிலும் நீ ஓயாமல் ஓடுகின்றாய்!!


 ஓட்டத்தை நிறுத்தி விட்டால் உயிரற்ற தாக்கிடுவாய்!!


 தண்ணீரில் இணைந்து நீ தாகம் தீர்த்திடுவாய்!!


 காலையிலும் மாலையிலும் தென்றலாய் தீண்டிடுவாய்!!


 வெற்றிடத்தை நோக்கி நீ வேகமாய் சென்றிடுவாய்!!


 புயலோடு சேர்ந்து விட்டால் பூவுலகை அழித்திடுவாய்!!


 மரம் செடி, கொடி வளர    பிராணனாய் இருந்திடுவாய்!!



 கடும் கோபம் கொண்டு விட்டாள் சூறாவளியாய் சுழன்றிடுவாய்!!


 உன் அசைவு நின்று விட்டால் உலகமே நின்று விடும்!!


 ஏற்றத்தாழ்வு இல்லாமல் எல்லோருக்கும் உதவும் உனை என்ன சொல்லி போற்றுவது!!


 காலம் உள்ளவரை கஷ்டமின்றி யாமிருக்க கனிந்தே உதவி விடு,       

 

 

 ஏ  காற்றே  கனிந்தே உதவி விடு!!


 உனை என்றும் வாழ்த்தி வணங்குகிறோம்!!

   * சிசு*

Sunday, February 15, 2026

பரவசமூட்டிய பறக்கும் முத்தம்…பயணக் கட்டுரை(4)

 பயணங்கள் முடிவதில்லை…

*பவசமூட்டிய பறக்கும் முத்தம்…*


பயணம் என்பது விமானத்தில் ஏறிய தருணத்தில் தொடங்குவது போல தோன்றினாலும்,

அது உண்மையில் குடிவரவு சோதனை மேசையின் முன் தான் தனது நிறைவை அடைகிறது.


இன்றைய உலகில் குடிவரவு நடைமுறைகள் ஒரு சாதாரண சடங்கல்ல அது ஒரு சோதனை.

கைப்பையில் என்ன இருக்கிறது என்பதைக் காண்பதற்காக மட்டுமல்ல; உங்கள் முகத்தில் எவ்வளவு நம்பிக்கை, எவ்வளவு தெளிவு இருக்கிறது என்பதைக் காணும் கண்காணிப்பு மேடை அது.


புதிய பொருட்கள் எடுத்துச் சென்றால் விலைப்பட்டியல் கேட்கப்படும். ஆனால் விலை குறிப்பு அட்டை பொருளில் இதுக்கக்கூடாது.

உணவுப் பொருட்கள் இருந்தால் அவை வீட்டில் தயாரித்தவை என நிரூபிக்க வேண்டும்.

ஒவ்வொன்றுக்கும் தெளிவான விளக்கம் தேவை.


அந்த அளவுக்கு நிபந்தனைகள்.

அந்த அளவுக்கு கண்காணிப்பு.

அதனால் நான் ஒரு முன் ஏற்பாடு செய்திருந்தேன். ஒவ்வொரு பெட்டிக்கும் தனித்தனி பொருள் பட்டியல் தயாரித்து, அச்சிட்டு வைத்துக்கொண்டிருந்த்தேன்.

எந்தப் பெட்டியில் என்ன இருக்கிறது என்பதை வரிசையாக, எளிமையாக, தெளிவாக.


*Abu Dhabi International Airport* விமான நிலையத்தில் எங்களை வரவேற்றது ஒரு பெண் குடிவரவு அதிகாரி.


அவர் கேள்விகள் கேட்ட விதம்

வெறும் நடைமுறைச் செயல் அல்ல; *குடிவரவையே கேள்விக்குள்ளாக்கும் ஒரு உளவியல் விசாரணை போல.*


எங்களை வழிநடத்திய உதவியாளர் கூட,

*சிறிது கவனமாகப் பேசுங்கள்…* என்று எச்சரித்தார்.


*நீங்கள் அனைவரும் ஒரே குடும்பமா?*

யார் யார்?”


“நான், என் மனைவி, மற்றும் சகோதரி,” என்றேன்.


“சகோதரி என்றால், உங்களுக்கு ஒரே தாய் தந்தையா?”


ஒரு நொடி தடுமாறினேன் சிறிய அதிர்ச்சி.

ஆனால் உடனே தெளிவுபடுத்தினேன்

“இவர் என் மனைவியின் அத்தை மகள்.” என்று.


திரையில் உணவுப் பொருட்கள், புதிய துணிகள் இருந்த இரண்டு பெட்டிகள் தெளிவாகத் தெரிந்தன.


மீண்டும் கேள்விகள்.

ஒரு கணம் வார்த்தைகள் சற்று தடுமாறின.


அப்போது அமைதியாக அச்சிட்டு வைத்திருந்த பொருள் பட்டியலை நீட்டினேன்.


அவர் அதை எடுத்துப் பார்த்தார்.

முகபாவனை மாறியது.

சில நொடிகள் அமைதி.


பின்னர், திருப்தி புன்னகை. ஒரு கை அசைவு. முடிவில், எதிர்பாராத *ஒரு சிறிய பறக்கும் முத்தம்.*


குடிவரவு முத்திரை பதியப்பட்டது.


அங்கே இருந்தவர்கள் வியப்புடன் பார்த்தனர்.

“என்ன விசேஷம்?” என்ற கேள்வி அவர்களின் கண்களில்.


என் மனைவிக்கோ, 

*சிறிது பொறாமை கலந்த புன்னகை.*

எனக்கோ, *என் முன் ஏற்பாட்டின் அமைதியான பெருமை.*


Chicago (– 16) டிகிரி.


“நன்கு தயாராகி வர வேண்டும்…”

“குளிர் கடுமையாக இருக்கும்…”

“கவனமாக இரு…”


அறிவுரைகள் தொடர்ந்து வந்தன.

அவர்கள் அனுபவத்தை நம்பினர்;

*நான் என் நினைவுகளை நம்பினேன்.* இது தான் அசட்டு தைரியம் என்பதோ…


*நான் தில்லியில் பன்னிரண்டு வருடம் இருந்தவன்.

(-4) டிகிரி வரை பழகியவன்.”


அந்த ஒரு வாக்கியம் தன்னம்பிக்கையா? திமிரா?

இன்றும் எனக்கு தெளிவில்லை.


*தலைக்கு மேல் வெள்ளம் ஒரு அடி போனாலும், ஒன்பது அடி போனாலும் ஒன்றுதான்* (-14, -16 )

என்ற மனநிலையுடன்

அரைக்கை சட்டைகளையே பயணச் சாமான்களில் அடுக்கிக்கொண்டேன்.


குளிர் என்பது வெறும் எண்ணிக்கை அல்ல;

அது ஒரு அனுபவம்.

அது ஒரு உடல் மொழி.


காற்று முகத்தில் அடித்த அந்த நொடி

“இது தில்லி அல்ல” என்று உடம்பே அறிவித்தது.


குளிர் எலும்புக்குள் ஊடுருவி,

நினைவுகளை தளர்த்தி,

நிகழ்காலத்தைப் பேச வைத்தது.


அப்போது தான் புரிந்தது *அசட்டு தைரியம்* என்பது துணிச்சல் அல்ல; அறியாமையும் கலந்த கலவை என்று.


ஆம்… அவதிப்பட்டேன்.

ஆனால் அந்த அவதி தான்

இந்தக் கதையின் விதை.


இப்போது நான் Texas மாநிலத்தில்,

Richardson பகுதியில் இருக்கிறேன்.


இங்கே வந்ததும் ஒரு பெரும் ஆச்சரியம்

நம் பள்ளிக்கரணையை விட அதிக கோயில்கள்!


இது பக்தியின் அளவுகோல் மட்டும் அல்ல.

இதற்குப் பின்னால் பல அடுக்குகள் உள்ளன.


நகர எல்லைகளுக்கு வெளியே

பல ஏக்கர் நிலம் வாங்க முடிகிறது.   வரி மிச்சப்படுத்த முடிகிறது.

இங்கே கோயில் என்பது வழிபாட்டிற்கான இடம் மட்டும் அல்ல, ஒரு வளாகம். இந்துக்கள் பரிச்சயம் கிட்ட,

திருமண அரங்குகள்,

இசை–நடன வகுப்புகள்,

மொழிப் பயிற்சிகள்,

பெரிய சமையலறைகள்,

நூற்றுக்கணக்கான வாகன நிறுத்துமிடங்கள்

அனைத்தும் ஒரே வளாகத்தில்.


பொது போக்குவரத்து குறைவு.

அனைவரும் தனிப்பட்ட வாகனங்களில் தான் வரவேண்டும்.

அதனால் பரந்த நிலப்பரப்பு அவசியம்.


தீயணைப்பு பாதுகாப்பு, கூட்ட நெரிசல் கட்டுப்பாடு, அவசர வாகன பாதைகள், ஒவ்வொன்றும் இடம் கேட்கும்.


*வாழ்க்கையில் ஒருமுறை தான் கட்டுகிறோம்* என்ற மனநிலை.

“இந்தியாவை பிரதிபலிக்க வேண்டும்.” என்ற ஆசை. 

*அடுத்த தலைமுறைக்கு அடையாளமாக இருக்க வேண்டும்.* என்ற எண்ணம்.


அதனால் சிறியதாக அல்ல

நிலையானதாக, பெரியதாக


சிக்காகோவின் குளிர்

எனக்கு தாழ்மையை கற்றுக்கொடுத்தது.


டெக்சாஸின் கோயில்கள்

புலம்பெயர் மனத்தின் பரப்பை உணர்த்தின.


பயணம் என்னை மாற்றவில்லை.

என்னைப் பற்றிய என் புரிதலை மாற்றியது.


அசட்டு தைரியம், சில நேரம் நடுங்க வைக்கும்.

ஆனால் பின்னால் திரும்பிப் பார்க்கும்போது

அதே அனுபவம் ஒரு கதையாக மாறிவிடும். 😆

Saturday, February 14, 2026

என்னென்ன நிகழுமோ !

 என்னென்ன நிகழுமோ !


என்னென்ன நிகழுமோ கணிக்க முடியாதாம் 

   எதிர் பாரா பலவும் நாள்தோறும் நடக்குதாம் 


முன்பெலாம் குடும்பமதில் குதூகலம், ஆரவாரம் 

   முழுப் பூசணி சமைத்தும் போதாமல் போகும் 


அன்னம் என்றால் இந்நாளில் பர்கர், பீஸா

   அதையுண்டா பிள்ளை வாய் ஆனது பெருசா ?


தின்னும் தீனிகளும் தேடி வீடு  வருகிறதாம் 

   தேநீர், காப்பி கூட இல்லை விதிவிலக்காம் 


பின்னல்,, குடுமியும் காணாமல் போனதாம்

   பிள்ளை கொள்ளி போட அவசியம் இல்லையாம் 


மின்னலதன் வேகத்தில் பணப் பரிமாற்றம் 

   மிரட்டி கைபேசியதில் கோடிகள் ஏமாற்றம் 


கன்னலாய்ப் பேசிப் பேசி வலைத்தளமே ஈரம் 

   கண்முனே  உறவுகளுடன் பேச இல்லை நேரம்


அண்ணன், தம்பி உறவுகள் இக் காலம் அரிது

   ஆனாலும் வங்கியில் ஆயிரங்கள் விழுது.


__. குத்தனூர் சேஷுதாஸ் 14/2/2026

Friday, February 13, 2026

பெருமை

 * பெருமை*


     தனையன் வெற்றி         பெற்றால் தாய் தந்தையருக்கு பெருமை!


 பெண் புகுந்த வீட்டில் நல்ல பெயர் எடுத்தால் பெற்றோருக்கு பெருமை!


 அன்பான மனைவி அமைந்தால் கணவனுக்கு பெருமை!!


 பொறுப்பான கணவன் அமைந்தால் மனைவிக்கு பெருமை!!


 மாநிலத்தில் முதல் மாணவனாக வந்தால் ஆசிரியருக்கும் பள்ளிக்கும் பெருமை!!


 பூத்துக்குலுங்கினால் பூச்செடிக்கு பெருமை!!


 தண்ணீர் இருந்தால் மட்டுமே தடாகத்திற்கு பெருமை!!


 சிஷ்யன் குருவை மிஞ்சினால் குருவுக்கு பெருமை!!


    காதுக்கு இனிய   இசையானால்  இசைத்தவருக்கு பெருமை!!


 கர ஓசை சபை நிறைய கேட்டால் பேச்சாளருக்கு பெருமை!!


 கலை மாமணி விருது பெற்றால் கலைஞருக்கு பெருமை!!


 கையூட்டு வாங்காதிருந்தால்  அரசு ஊழியருக்கு பெருமை!!


 இவ்வளவு பெருமைகளை கேட்டும் பெருமை தலைக்கு ஏறாமல்  அடக்கமுடன் இருந்தால்  மனிதனுக்கு பெருமை!!

 சிசு

புவி வெப்பமடைதல்( Global warming)


புவி வெப்பமடைதல்( Global warming)


படுத்து துயில் கொள்ள 

பச்சைப் புல் மெத்தை

கிடைத்தாலும் காலையில்

கதிர்க் கரங்கள் தட்டி எழுப்பும் வரை

ஏனோ பனித்துளிகளால்

நிம்மதியாக

உறங்க முடிவதில்லை..


- சாய்கழல் சங்கீதா

Thursday, February 12, 2026

பறவைக் காய்ச்சலாம்...

 பறவைக் காய்ச்சலாம்...


ஊரெல்லாம் இதே பேச்சு "பறவைக் காய்ச்சல்"

   ஒற்றுமையாம் காகம் மேல் நோயின் பாய்ச்சல் 


பூர்வாவையும் விடவில்லை இன்று நிகழ்ந்தது 

   பொத்தென பறந்த காகம் விழுந்து ஓய்ந்தது 


ஏரியோரம் வாழ்கிறோம் எச்சரிக்கை வேணும் 

   " எச்சில் கையாலும் ஓட்டக் கூடாதாம் காகம் " 


" காரியம் ஆவதற்கும் காக்கா பிடிக்க வேண்டாம் " 

   கவனமாய் இருத்தல் போதும் கவலை வேண்டாம்.


__. குத்தனூர் சேஷுதாஸ் 12/2/2026

Monday, February 9, 2026

ராக்கி

 ராக்கி


கல்லூரியில் இருந்து வீட்டிற்கு போக வேண்டும் என்றால் 2 மணி நேரம் ஆகும். வழியெங்கும்

பச்சை பசேல் என வளர்ந்திருக்கும் புற்கள். அவற்றிடமிருந்து தானியங்களைக் கடனாக வாங்கிச் செல்லும் பறவைகள். பின்னால் உரமாக திருப்பித் தருகிறேன் என்று சொல்லிவிட்டு  ஒரே நேரத்தில் கொத்தாக பறந்து சென்றன. ஆனால் இவை எதுவும் என்னை வியக்க வைக்கவில்லை. ராக்கி. அவன் மட்டும்தான் எனது முழு சிந்தனையிலும் உள்ளான். அன்றைக்கு ஒரே மழை. எல்லோரும் மழையை எமன் போல பாவித்து நனைத்து கொள்ளாமல் குடை பிடித்து சென்றனர்.  ஆனால் ராக்கி மட்டும் பாவம். நனைந்தபடி நடுரோட்டில் தத்தளித்துக் கொண்டிருந்தான். அவனுடைய அம்மாவை ஏதோ பெரிய வண்டி ஏற்றி சென்று விட்டது, தனது அம்மா செத்தது கூட தெரியாமல்,  அவள் தூங்கிக் கொண்டிருக்கிறாள் என நினைத்து பால் குடிக்க எழுப்பிக் கொண்டிருந்தான். செத்த பிறகும் தனது பிள்ளைக்காக பால்மடியை காட்டிக்கொண்டே படுத்திருந்தாள் அவன் அம்மா. இதை பார்த்தவுடன் எனக்குள் ஏதோ ஒரு அழுகை. அவனை தூக்கிச் சென்று வளர்க்க வேண்டும் என்று தோன்றியது.  ஆனால் என்னம்மா என்ன சொல்வாள்? கண்டிப்பாக அவனை ஏற்றுக் கொள்ள மாட்டாள்.  ஏனென்றால் அவள் சின்ன வயதில் இருக்கும் பொழுது நாய் கடித்ததை இன்றும் அடிக்கடி சொல்லிக் காமித்துக் கொண்டிருக்கிறாள். இருந்தாலும் அம்மாவிடம் கெஞ்சிப் பார்ப்போம் என்று தூக்கிச் சென்றேன்.  வழி எங்கும் என் அம்மாவிடமிருந்து ஏன் என்னை பிரித்துக் கொண்டு போகிறாய் என்று ராக்கி கேட்டது போல இருந்தது. அம்மா என்னையும் நாயையும் பார்த்தது தான் தாமதம். உடனே சப்பாத்தி குழவியை எடுத்து அடிக்க வந்தது போல் ஏன்டா நாயே! என்று திட்ட ஆரம்பித்து விட்டாள்.  அம்மாவிடம் எப்படியோ காலில் விழுந்து கெஞ்சாத குறையை கெஞ்சி அவனை வீட்டுக்குள் கொண்டு போய் விட்டேன். ஒரு வழியாக அவனுக்கு பாலும் கொடுத்தாகிவிட்டது. நன்றாய் உறங்கிப் போனான். 


அன்று முதல் ராக்கி எங்கள் தெருவிற்கே செல்ல குழந்தையாக மாறிவிட்டான். எல்லோரும் வந்து கொஞ்சத் தொடங்கினார்கள் . ராக்கியை தூக்காத நபர்கள் ஒரு சிலர் மட்டும்தான். அதில் ஒன்று என்னுடைய அம்மா. இரண்டாவது எதிர் வீட்டு போலீஸ் அங்கிள். அம்மா எப்போதுமே ராக்கியை ஏதோ எதிரியை பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனை எப்ப பார்த்தாலும் கரிச்சி கூட்டிக் கொண்டே இருப்பாள். ஒரு நாள் திடீரென இரண்டு பேர் வீட்டிற்குள் வந்து ராக்கியை பற்றி விசாரித்தார்கள். அவர்கள் தான் ராக்கியின் அம்மாவை வளர்த்தவர்கள் என்றும் சொன்னார்கள்.  அப்போது என் அம்மா சண்டை பிடிக்கத் தொடங்கினாள. இவன் இந்த நாயை கொண்டு வந்து ஆறு மாதம் இருக்கும் இத்தனை நாள் எங்கே போனீர்கள் என்று கையில் சமைத்த பாத்திரத்தை வைத்துக் கொண்டு சத்தம் போட்டு கேட்டு கொண்டிருந்தாள். அப்போதுதான் நான் புரிந்து கொண்டேன். என் அம்மாவையும் ராக்கி ஆக்கிரமித்துக் கொண்டிருந்தான். என் அம்மாவிடம் கேட்டேன் என்னம்மா ராக்கியை உனக்கும் பிடித்து போச்சா என்று. என்னை கடிக்காமல் ஓரமாக போனால் எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை என்று சொல்லிக்கொண்டே சாப்பாடு எடுத்து வந்து கொடுத்தாள். 


ராக்கி. அவனிடம் ஏதோ மாயாஜால சக்தி உள்ளது.  ஒரு நாள் எதிர்வீட்டு சங்கீதா அக்கா ராக்கிக்கு ஒரு செயின் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தாள். அந்த சங்கிலியை போட்டவுடன் ராக்கி இங்கும் அங்கும் துள்ளத் தொடங்கினான். இதை பார்த்துக் கொண்டே வந்த சங்கீதா அக்காவின் அப்பா போலீசங்கள் சங்கீதா அக்காவை திட்டினார். நான் உடனே அந்த சங்கிலியை கழட்டி அக்காவிடம் கொடுத்து ராசியை உள்ளே கூட்டிக் கொண்டு போய் விட்டேன்.  ஆனால் இந்த அங்கிள் எப்ப தான் திருந்த போகிறார் தெரியவில்லை. 


ஒரு நாள் ராத்திரி சுமார் மூன்று மணி இருக்கும். ராக்கி வீட்டின் முன்பு நின்று சத்தமாக குறைத்துக் கொண்டிருந்தான். எங்களுக்கும் ஒன்றும் புரியாமல் வெளியில் வந்து பார்த்தோம். அப்போது தான் தெரிந்தது போலீஸ் அங்கிள் வீட்டு வாசலில் இருந்து இரண்டு மூன்று பேர் திபு திபு என ஓடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் போகும்போது ராக்கியின் மேல் மிளகாய் பொடியை தூவி விட்டு போயிருக்கிறார்கள். போலீஸ் அங்கிள் வெளியில் வந்து பார்த்த பிறகு தான் தெரிந்தது அவர்கள் இந்த வீட்டில் திருட வந்தவர்கள் என்று. ஆனால் ராக்கி குறைக்கும் சத்தத்தை கேட்டு ஓடியே விட்டார்கள். போலீஸ அங்கிள் அன்று உண்மையிலேயே ராக்கியைப் பற்றி புரிந்து கொண்டிருப்பார். மறுநாள் காலையில் போலீஸ் அங்கிள் ராக்கியை பார்க்க வந்தார். அவனை ஹாஸ்பிடலுக்கு கொண்டு போய் இருக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் அங்கேயே வந்து விட்டார். கையில் செயினுடன் ஹாஸ்பிடல் வாசலில் காத்திருந்து நானும் ராக்கியும் வெளியில் வந்தவுடன் அவரை அதை போட்டும் விட்டார் ஒரு வழியாக போலீஸ் அங்கிளையும் மடக்கி விட்டான். அன்று முதல் நிறைய நாள் போலீஸ் அங்களோடு தான் வாக்கிங் போவான் எப்படியோ அங்கிள் அவனை கொஞ்ச ஆரம்பித்து விட்டார் 


என்னுடைய தம்பி எப்போதும் ராக்கி கட்டி புரளுவான். அவனுக்கு ராக்கியை அவ்வளவு பிடிக்கும். ஒரு நாள் அம்மா தம்பி ராக்கி மூன்று பேரும் காலையில் வாக்கிங் போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது நிறைய நாய்கள் என் தம்பியை பார்த்து குறைக்க ஆரம்பித்து விட்டன. தம்பி சொன்னான் ராக்கி ஒருவனாக நின்று அத்தனை நாய்களையும் துரத்தி விட்டானாம் இதைக் கேட்டவுடன் அவனுக்கு உண்மையிலேயே பெரிய மாயாஜால சக்தி தான் உள்ளது என்று நான் நம்ப ஆரம்பித்து விட்டேன் எப்படியோ அன்று முதல் அம்மாவையும் வளைத்து போட்டு விட்டான் வீட்டுக்கு வந்தவுடன் அம்மா அவனைப் பற்றி கொஞ்சம் அதிகமாகவே புகழ்ந்தாள்.  அன்றுதான் முதல்முறையாக அம்மா ராக்கியைத் தொட்டாள்.  அம்மா தொட்டு தடவி கொடுத்தது தான் தாமதம் உடனேவே அம்மாவின் மடியில் போய் உட்கார்ந்து விட்டான்.  என்னமோ பெத்த அம்மாவை பார்த்த சந்தோஷம் வந்தது போல அவனும் சிணுங்க தொடங்கி விட்டான் அப்புறம் என்ன அம்மாவும் ராக்கியும் ராசி ஆகிவிட்டார்கள். 


அன்று முதல் அம்மா தான் ராக்கிக்கு சாப்பாடு ஊட்டி விடுவாள். அவனை குளிப்பாட்டுவாயள்.  அவனுக்கு உடம்பில் முடியை வாரி விடுவாள். அம்மா என்ன செய்தாலும் ராக்கியை பக்கத்தில் வைத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டாள். என் தம்பி ராக்கியின் வாயில் சோப்பு சாமானை போட்டு திரும்ப எடுத்து விளையாடுவான்.முகத்தை பிடித்து இழுப்பான்.  ராக்கி ஒண்ணுமே சொல்ல மாட்டான். கத்தவும் மாட்டான். எப்படியோ இரண்டு பேரும் அண்ணன் தம்பியாகவே மாறி விட்டனர்.  எங்கள் தெரு முழுக்க எல்லோருக்கும் ராக்கி ஹீரோதான்.  அவனோடு விளையாடாதவர்களே கிடையாது என்று சொல்லலாம். ராக்கி வந்து இரண்டு வருடம்  முடிந்து விட்டது.  ஹாஸ்டலுக்கு போன பிறகு ராக்கியை அடிக்கடி பார்க்க முடியாமல் போனது. கண் முழுக்க கண்ணீர். பக்கத்தில் இருப்பவர்கள் என்னை உத்து உத்து பார்க்கிறார்கள் என்று கூட கவனிக்காமல் அழுது கொண்டே வீட்டிற்குச் சென்றேன். அம்மா வீட்டின் சமையலறையில் ஏதோ செய்து கொண்டிருந்தாள். ஆனால் கத்திக் கொண்டே இருந்தாள். தம்பி தூங்கிக் கொண்டிருந்தான் ஆனால் எங்கேயுமே ராக்கியின் போட்டோவை காணவில்லை ஆமாம் ராக்கி இப்போது போட்டோவில் தான் இருக்கிறான். இரண்டு நாட்களுக்கு முன்னாடி தம்பியை நல்ல பாம்பு கடிக்க வந்தபோது அதனோடு சண்டையிட்டு இறந்து போய் விட்டான். தம்பியையே காப்பாற்றி விட்டு இறந்ததனால் அம்மா என்ன செய்வது என்றே தெரியாமல் அவனைத் தூக்கிக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு ஓடி இருக்கிறாள். ஆனால் ராக்கி இறந்து விட்டதாக சொன்னார்களாம் அம்மா அழுது கொண்டே எனக்கு போன் பண்ணினாள்.  


இரண்டு நாட்களில் எக்ஸாம் முடிந்து வருவதற்குள் எல்லாம் முடிந்தாகிவிட்டது. ராக்கி இப்போது போட்டோவில் தான் இருக்கிறான். ஆனால் அந்த போட்டோவையும் காணும். எங்க போச்சு என்று அம்மாவிடம் கேட்டேன். அம்மா அழவில்லை.  ஆனால் அழுத குரலில் சொன்னாள். அவன் நம்ம வீட்டு குல சாமி டா. அதனால சாமி ரூம்ல வச்சிருக்கேன்னு சொன்னாள். உடனே சாமி ரூமுக்கு போய் பார்த்தேன்.முருகர் படத்துக்கு பக்கத்தில் ராக்கியின் போட்டோவை வைத்து குங்கும போட்டு வைத்து பூ சாத்தப்பட்டிருந்தது.  இதை பார்த்தவுடன் இதுவரை அடக்கி வைத்துக் கொண்டிருந்த அழுகை எல்லாம் பீறிட்டு வந்தது. நான் என்னவென்று சொல்லி அழுவேன். ராக்கி செத்துவிட்டதை நினைத்தா? அல்லது இந்த தெருவில் எல்லோருக்கும் நல்லது செய்து விட்டு செத்தான் என்பதை நினைத்தா? 


அழுது கொண்டே அவனை புதைத்த இடத்திற்கு போயிட்டு வரேன் அம்மா என்று சொல்லிவிட்டு நடக்கத் தொடங்கினேன்.  ஒரே மழை. மீண்டும் நடுத்தெருவில் ஒரு குட்டி நாய் தவித்துக் கொண்டிருந்ததை பார்த்தேன்.



-  ராக்கி

*என்ன காரணமோ??*

 *என்ன காரணமோ??* 


தாலாட்டும் தருணத்தில் தாய்!!


தடைகளை தகர்க்கையில் தமையன்!!


ஐயத்தைத் தீர்க்கையில் ஆசான்!!


தாங்கி நிற்கையில் தோழன்!!


தேவைகளை பூர்த்திப்பதில் பொருளாளர்!!


பாதையில் வழிநடத்துகையில் ஆலோசகர்!!


மனக்குழப்பத்தை தீர்த்து வைப்பதில் உளவியலாளர்!!


எத்தனை வேடங்கள்,எத்தனை வேதனைகள் !!


எதனையும் உரைக்காமல், இன்முகத்தோடு நிற்பார் !!


தாயின் சிறப்பை கொண்டாடும் உலகம்

தந்தையை மறந்ததேனோ!!!!

 

இமயம் சரிந்தவுடன் இயம்பட்டும் வெற்றிடம்  

 என்ற எண்ணத்தில் தானோ!!!!

Sunday, February 8, 2026

உலகம் உருண்டை தான்

 உலகம் உருண்டை தான் 


பள்ளிப் பருவத்தில் ஆசிரியர் சொன்னது 

   பாராம் நாம் உறைவது கோளம் என்று 


துள்ளும் அலைகடல் படம் ஒன்று வரைந்தார் 

   தொலைவில் கப்பல் காட்டி  விளக்கி விரைந்தார் 


உள்ளே களிமண்ணாம் ஒன்றும் ஏறவில்லை 

   ஓணான் போல் தலையாட்டினேன் வழி இல்லை 


சுள்ளென அவ் உண்மை விளங்குது இன்று 

   சென்ற திங்கள் அனுப்பியது (forwarded) என்னிடமே இன்று.


__. குத்தனூர் சேஷுதாஸ் 8/2/2026

பச்சோந்தி


பச்சோந்தி!


ஒரு கவிதைப் பூவின் நிறம் 

இன்னதென அறுதியிட்டு

இயம்பிட இயலுமோ?

பல்வேறு உள்ளத் தோட்டங்களில்

வெவ்வேறு நிறத்திலல்லவா 

பூக்கின்றது!


- சாய்கழல் சங்கீதா


==============================


இயற்கை வரைந்த ஓவியம் 

அதுவே  ஒரு நிறம்

நிறக் கண்ணாடி கண்களுக்கு 

அதுவே வேறு நிறம்

கவி வடித்த கவிதை 

உதிர்த்த கருத்து ஒன்று

மனக்கண்ணாடி வாசிப்பில்

உதித்த கருத்தோ வேறொன்று...


- அமுதவல்லி


============================

*கவிதைக்கு நிறம் மாறுது* (படிக்கிறவங்க படி மாறுது)

*கவிஞனுக்கும் நிறம் மாறுது* (மூட், டென்ஷன், கோபம், சந்தோஷம் எல்லாம் வெவ்வேற நிறமா வருது)

*ஆனா சமூகத்துல* இன்னும் *நீ எந்த ஜாதி/வர்ணம்* னு பாக்குறது மட்டும் மாறவே இல்லை.

அதனால் தான், *மனிதனை பச்சோந்தி* என்று அழைக்கவே கூடாது 😆


- தியாகராஜன்

Saturday, February 7, 2026

ஒரு பெட்டியின் சிக்காகோ ஆசை-பயணக் கட்டுரை(3)

 *சொதப்பல்*

*ஒரு பெட்டியின் சிக்காகோ ஆசை*


மூவரும் சரியான நேரத்தில் சிகாகோ வந்து சேர்ந்தோம். சக்கர நாற்காலி சேவையால், எவ்வித சிரமமுமின்றி *Baggage Collection – Belt 12*-க்கு வந்து சேர்ந்தோம்.


நம் நாட்டில், பெட்டிகளைப் பெறுவதற்கு முன்பே தள்ளுவண்டிகளை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இங்கு, *பெட்டிகளை collect செய்த பிறகே* தள்ளுவண்டிகள் வழங்கப்படுகின்றன. இட நெருக்கடியைக் குறைக்க எடுத்த நல்ல முயற்சிதான்… ஆனாலும் நமக்கு கொஞ்சம் பொறுமை தேவை.


மேலும், belt-இலிருந்து பெட்டிகளைப் பெற *பயணிகளுக்கு மட்டுமே* அனுமதி. வரவேற்க வந்தவர்கள் collection area-க்கு வர அனுமதி இல்லை. இதுவும் இட நெருக்கடியைக் கட்டுப்படுத்தும் இன்னொரு முயற்சியே.


ஆனால் உள்ளே நிலைமை என்னவென்றால், சுமார் *500 பயணிகள் × 2 பெட்டிகள் = 1000 பெட்டிகள்*. அதற்கு ஏற்ற அளவில் *இடமோ, belt-களோ இல்லை* என்பதே நிதர்சனம். அவ்வளவு பெரிய, கனமான பெட்டிகளை belt-இலிருந்து இழுத்தெடுக்க, *சிலர் ஜிம்முக்குப் போக வேண்டிய பயிற்சியை இங்கேயே முடித்துக் கொண்டார்கள்.*


அதன்பின், சிகாகோவிலிருந்து *Dallas* செல்ல *American Airlines*-ல் தனியாக டிக்கெட் எடுத்திருந்தோம். தள்ளுவண்டியில் பெட்டிகளை அடுக்கி, *airport train*-ல் *domestic airport*-க்கு புறப்பட்டோம்.

அப்போது *7 பெட்டிகளுக்குப் பதிலாக 6 பெட்டிகள் மட்டும்* நம்முடன் வந்துவிட்டன. அந்த நேரத்தில், ஒரு பெட்டி சிகாகோவில் *நான் இங்கேயே இருக்கிறேன்* என்று முடிவு செய்திருப்பதை நாம் அறியவில்லை.


Domestic check-in காரணமாக, *Etihad Airlines* baggage tag அனைத்தையும் பிய்த்துவிட்டோம்.

Dallas விமான நிலையம் வந்த பிறகுதான், *“ஒரு பெட்டி வரவில்லையே?”* என்ற ஞானோதயம் ஏற்பட்டது.


உடனே baggage department-க்கு phone.

அவர்கள்: *“baggage tag number?”* கேட்டார்கள். 

நாங்களோ: *“அதை எல்லாம் முன்பே கழற்றிவிட்டோமே!”*


பின்னர், பெட்டிகளில் ஒட்டியிருந்த *baggage label*-களை வைத்து, *7-ல் 5 பெட்டிகளின் அடையாளங்களை மட்டும்* கண்டுபிடித்தோம்.

மீதமிருந்த *2 பெட்டிகளில் ஒன்று தான் சிகாகோ விமான நிலையத்தில் இருக்கிறது* என்று குறிப்பிட்டு *online form* நிரப்பினோம்.


*7 நாட்கள்* கழித்து, இன்று அந்த பெட்டி *FedEx* மூலம் வீடு வந்தடைந்தது.

பெட்டியோ பாதுகாப்பாக வந்து விட்டது ஆனால் இது முழுக்க முழுக்க *எங்களது கவனக்குறைவால் ஏற்பட்ட சொதப்பல்* என்பதால், *courier செலவும் நம்முடையதே*.


ஆனாலும்,

*ஒரு பெட்டி சிகாகோவைச் சுற்றிப் பார்க்க நாம் செலவிட்டது courier செலவு மட்டுமே*

என்பது,

எங்களுக்கு கிடைத்த *ஒரு சிறிய ஆறுதல்* 😄

Thursday, February 5, 2026

விடியல்

 காலை கதிரவன் - கடும் பனி விலக


விலகிய திரைச்சீலை - வெள்ளென வானம்


வானம் முழுவதும் - வலம் வந்த பறவைகள்


பறவைகளின் ஓசை - பண்ணிசையாய் ஒலிக்க


ஒலித்த அவ்வோசையில் - ஓராயிரம் கீதங்கள்


கீதத்தின் இனிமை- காதுகளில் வருட


வருடிய கூச்சத்தால் - வாய்விட்டு சிரித்தாள்


சிரிப்பதை விடுத்து சீக்கிரம் எழுது


எழுப்பிய ஆசிரியையை - எட்டப்பனாய் பார்த்தாள்


பார்த்த பொழுதே புரிந்தது- தானிருப்பது தேர்வறையென்று!!!!

*கெத்து வெத்து *

 *கெத்து  வெத்து *


 சொகுசாக வாழ்ந்தால் கெத்து,

 சோகத்தில் வாழ்ந்தால் வெத்து.


 உழைத்து உயர்ந்தால் கெத்து,

 பிறர் உழைத்து உயர்ந்தால் வெத்து.


 தர்மம் செய்தால் கெத்து,

 தர்மம் வாங்கினால் வெத்து.


 கணவன் மனைவி புரிந்து வாழ்வது கெத்து,

 பிறர்  அவர்களை

 நகைக்க வாழ்வது   வெத்து.


 பெற்ற பிள்ளைகளை பேணி வளர்ப்பது கெத்து,

 பிறர் அவர்களை ஏளனம் செய்தால் வெத்து.


 கல்வியை கடமையுடன் போதித்தால்  கெத்து,

 கடன்னு என்று போதித்தால் வெத்து.


 அவன் காசில் ஐட்டன் கார் வாங்கினால் கெத்து,

 அப்பா பணத்தில்  ஆடி கார் வாங்கினால் வெத்து.


 கதிரவன் ஒளியை உமிழ்வதால் கெத்து,

 அவன் ஒளி இன்றி உலவினால் வெத்து.


 பெற்றோரை கடைசி வரை பேணி காப்பது கெத்து,

 தெரிந்தே அவர்களை முதியோர் இல்லம் அனுப்புவது வெத்து.


 வீட்டில்  சுவையாக  சமையல் செய்தால் கெத்து

 சுகியில் ஆர்டர் செய்து சாப்பிட்டால் வெத்து.


 கடைசி மூச்சுவரை காசோடு இருப்பது கெத்து,

 காசு இல்லாமல் கஷ்டப்பட்டால் வெத்து. 


 ஏ!!மாநிடா,                கெத்தாக வாழ திட்டமிட்டு, உழைத்து, பொருள்  ஈட்டி, மற்றோர் வியக்க வாழ வேண்டும்.

 கெத்தாக வாழ வேண்டுமா?

 அல்லது  

 வெத்தாக வாழ வேண்டுமா  என்பதை நீயே முடிவு செய்து கொள்.


 சிசு.

Wednesday, February 4, 2026

இயந்திரப் பறவை

இயந்திரப் பறவை


பறந்து திரியும் பறவை கண்டான்

பறவையாய் பறக்க உன்னைப் படைத்தான்


சிறகு வரத்திற்காய் தவமாற்றாதவனுக்கு

அறிவியல் ஆற்றிய

மாற்று வரமாய் 

உன் விரிந்த சிறகு..


தாளிட்ட இருக்கைகள் ஏற்ற இறக்கத்தில்...

வண்ணம் தீட்டிய மாதரோ

பூட்டிவிட்ட புன்சிரிப்பில்..


தொட்டுவிடும் தூரத்தில் 

மேகத்தை காண்கிறோம்..

ஒளிந்துகொண்ட மழையை

தேடித் தேடி ஓய்கிறோம்..


பேருந்தின் ஜன்னலோர

சிலிர்ப்பு இங்கும் வேண்டும்..

சீட்டுக்கே வரும்  சிற்றுண்டி

சின்ன பசியைத் தூண்டும்..


உடல் காக்க உயிர்க் கவசம் 

உயிர் சுவாசிக்க முகக் கவசம்

செவிக்கு வெள்ளை பஞ்சு 

காற்றுக்கோ வெள்ளை நஞ்சு


வான மரத்தில் தொங்கி நகரும் 

எட்டாக் கனியாய் ஏழைக்கு  நீ..

ஏறி விட்ட முதல் நாள் மட்டும் 

வாகை சூட்டிய வெற்றிக் கனி நீ


உயர்ந்துவிட்டோமென கர்வமேற

ஊர்க்குருவி பருந்தாகாதென

இயற்கையின் இயல்பை  

இயந்திரத்தனமாய் இயம்பி

இசைந்தே அச்சத்தோடு

இருக்கையிலேயே பறக்கும் எம்மை

இரக்கமின்றி இரக்கத்தோடு

இறக்கி பிரிகிறாய்!


- சாய்கழல் சங்கீதா

பயணங்கள் முடிவதில்லை-பயணக் கட்டுரை(2)

 *பயணங்கள் முடிவதில்லை…* *(31-01-26)*

*ஆனால் பயணிகளின் பொறுமை சோதிக்கப்படுகிறது.*


நாங்கள் மூவர் சென்னையிலிருந்து பயணம் தொடங்கினோம். 6 பதிவுப் பெட்டிகள் (check-in baggage),

3 கைப்பெட்டிகள் (cabin baggage).


அதில் ஒருவரான என் மனைவியின் உறவினர் (cousin),

அதிக தூரம் நடக்க இயலாதவர்.

அதனால் முன்கூட்டியே சக்கர நாற்காலி வசதி (wheelchair assistance) கோரியிருந்தோம்.


பெட்டிகளை பதிவு கவுன்டர் (check-in counter) வரை கொண்டு செல்ல,சென்னை விமான நிலையத்தின் உதவி மையத்தை (assistance desk)

அணுகினோம்.


உதவி கிடைத்தது. ஆனால் அதற்கான கட்டணம் அதிகாரபூர்வமாக இல்லாமல் ( no receipt) ஒரு சுமை வண்டிக்கு (trolley) ₹1000.மொத்தம் ₹3000.


*இங்கே கேள்வி,*

*இது உதவியா…*

அல்லது வாய்ப்பை பணமாக்கும் வணிகமா (business)?


வெளி உலகைப் பார்க்கையில் புரிகிறது இது வேலைக்குத் தகுந்த சம்பளம் (work-based pay) அல்ல, *இடத்திற்குத் தகுந்த சம்பளம் (location-based pay).*

அதுவும் பயணியின் அவசரம்,

உடல் நிலை,

மாற்று வழியின்மை

*இவை எல்லாம் கணக்கில் சேர்க்கப்பட்ட விலை.*


விமான நிலையங்களில்

இத்தகைய அடிப்படை வசதிகள் (basic facilities) ஒழுங்குமுறைப்படுத்தப்பட வேண்டும் (regulated).இல்லையேல்,

உதவி என்பது சேவையாய் (service) இல்லாமல்

சுரண்டலாய் (exploitation) மாறிவிடுகிறது.


அபு தாபியில் (Abu Dhabi) இறங்கியவுடன் சக்கர நாற்காலி உதவி மீண்டும் கிடைத்தது.

ஆனால் அத்துடன் வந்தது

வருமானம் குறைவாக *இருப்பதற்கான

தொடர்ச்சியான புலம்பல்.*


அந்த உரையாடலின் ஒவ்வொரு வரியும் நேரடியாக இல்லை; ஆனால் *உதவித் தொகை (tip)* *கேட்கும் மறைமுக மொழி*

*தெளிவாகவே இருந்தது.*


8 மணி நேர இடைநிறுத்தம் (layover).

அமெரிக்க குடிவரவு சோதனை (US immigration)

விமான புறப்பாட்டுக்கு

2 மணி நேரத்திற்கு முன்பு

இங்கேயே நடைபெறும்.

அதனால்,

கடைகள் நிறைந்த இடத்திலேயே

5 அமெரிக்க டாலர் (USD)

உதவித் தொகை (tip)

பெற்றுக்கொண்டு அவர் மறைந்தார்.


பின்னர் குடிவரவு சோதனைக்கு (immigration)வேறொரு நபர்.

அவருக்கும் மேலும் 5 டாலர்.


*இது தற்செயலா?*

அல்ல.

ஒரு உள் ஒத்துழைப்பு அமைப்பு (internal coordination system)

போலவே தோன்றுகிறது பயணியின் குழப்பம், அவசரம், அறியாமை இவையெல்லாம்

சிறு சிறு வருமானமாக மாற்றப்படும் அமைப்பு.


இத்தனை குறைகளுக்கிடையே

*ஒரு நல்ல செய்தியும் உண்டு*

விமான நிலைய ஸ்கேன் பரிசோதனை (security scan)

கை வைத்து செய்யாமல்

முழுமையாக தானியங்கி (fully automated).

*மனிதன் விலகிய இடத்தில் மரியாதை கூடுகிறது.*


இதற்கு முன்

எமிரேட்ஸ் (Emirates),

லூஃப்தான்சா (Lufthansa),

ஏர் பிரான்ஸ் (Air France)

விமானங்களில் பயணித்த அனுபவம் உண்டு.


*குறிப்பாக எமிரேட்ஸ் (Emirates)*

2–3 மணி இடைவெளியில்

உணவு, நீர், கவனம். நமக்கு தனிப்பட்ட *தேவையெனில் கூட சலிப்பில்லா சேவை.*


ஆனால் இம்முறை

எத்திஹாட் (Etihad). 15 மணி நேர பயணம். அதற்கு மிக மிகக் குறைந்த அளவில் மூன்று சிற்றுண்டிகள் (snacks).

அதுவும் *நீண்ட இடைவெளிக்குப் பிறகே.*


இது குறிப்பாக

சர்க்கரை நோயாளிகளுக்கு (diabetic patients)

*அசாதாரணமான சங்கடம்.* ஆனால் பணிப்பெண்களின் முகத்தில் அதற்கான பதில்:

அக்கறையின்மை (indifference).

*இங்கேதான் கேள்வி எழுகிறது:*


சேவை (service) என்பது

நேரத்திற்கான கடமையா?

அல்லது

மனிதனுக்கான பொறுப்பா?


முன்னர் எத்திஹாட் (Etihad)-ல்

8 மணி நேர பயணம் செய்தபோது

இந்த குறைகள் அவ்வளவாகத் தெரியவில்லை.


நேரம் நீளும்போது தான் உணரமுடிகிறது.


பயணங்கள் முடிவதில்லை.

அப்படியே 

*பயணிகளை மனிதர்களாக* *(humans)பார்க்கும் மனப்பான்மை*

*முடிவடையக் கூடாது. என்பதே காலத்தின் தேவை.*

Tuesday, February 3, 2026

நெஸ்கபே ஸ்டால்

 நண்பர் ஒருவர் முன்னனுப்புச் செய்தியில் "கும்பகோணம் டிகிரி" காப்பியை  நினைவு படுத்தி விட்டார்.


எழுபதுகளில், 

என் கல்லூரிக் காலத்தில் நண்பர்களுடன்

ஒரு திருமணத்திற்காக, 

நவம்பர் மாத  குளிர் காலையில் கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இறங்கினோம்.


நண்பரில் ஒருவர் அப்பகுதியைச் 

சேர்ந்தவராதலால் பேருந்து நிலையத்திற்கு எதிரில் இருந்த 

ஒரு "நெஸ்கபே ஸ்டாலுக்கு'

காபி அருந்த அழைத்துச் சென்றார்.


என் வயதினருக்கு "நெஸ்கபே ஸ்டால்" பரிச்சயம் இருக்கும்.

ரிக்கார்ட் பிளேயரில் விரும்பிய

பாட்டைக் கேட்டவாறே சுடச்சுட 

நெஸ்கபே காபி அருந்தும் சுகம் 

அலாதி.


ஆனால் அந்தக் கடையில் 

டிகிரி காப்பியும் கிடைத்தது.

"பதினாறு வயதினிலே"

படம்  வந்த புதிது.

ரிக்கார்ட் பிளேயரில் 

இளையராஜாவின் இசையில்

"மஞ்சக் குளிச்சு அள்ளி முடிச்சு"

பாடலை இரசித்த படி 

கள்ளிச் சொட்டாட்டம் குடித்த 

கும்பகோணம் 

டிகிரி காப்பியின் சுவை 

இன்றும் என் நாவில்.

இளையராஜாவின் இசை 

என் செவிகளில்.

Monday, February 2, 2026

கதிரவன் / நிலவே


கதிரவன் 

--------------

சாய்கழல் வீட்டு வலையில் சிக்கியிருந்த நான் 

இவரல்ல..

இவர் க(சு)டும் உழைப்பாளி..

உழைத்ததையெல்லாம்

உமிழ்ந்துவிடும் செலவாளி உலகத்தாருக்கு

உழைத்துக் கொட்டும்

கொடையாளி..

நான் என்றும் இவருக்கு கடனாளி..

எனினும் நானே 

கவிதைகளுக்கும் காதலுக்கும் பொறுப்பாளி..

அன்று என்னை காண்பித்து சோறூட்டியது ஓசி..

இன்று உங்கள்

குழந்தைகளின் கையில் விலைமிகுந்த கைபேசி..

கண்கள் கெட்ட பின் இவரை வணங்கி என்ன பயன்?

விண்ணில் பந்தாய் 

நான் மிதந்தும் என்ன பயன்?


வட்ட நிலவே!

--------------------

வட்ட நிலவே!

வாட்டம் ஏனோ?

வட்ட வட்ட அப்பளங்களை

சுட்டு சுட்டே

வாழ்க்கை வட்டம் 

தான் சுருங்குமோ?

வட்ட வட்ட அப்பளங்களைப்

போல் 

வட்ட வட்ட கனவுகள் நொறுங்கித் தான் போகுமோ?

விட்டம் தெரியாத வானில்

சிறகை விரித்து வட்டமடிப்போம் வா !


வட்டமான அப்பளங்களை 

சுட்டு வைப்பதே 

நொறுக்கித் 

தின்னத்தானே!


வண்ண வண்ணக் கனவுகளும் அப்படித்தானோ!?


- சாய்கழல் சங்கீதா



----=============




நிலவு காயுதுன்னு வலைவழி பார்த்த போது..

 தோசைகல்லு  

 காயுதுனு கூப்பிட்ட  

 அந்த குரல்..


ரெண்டு வட்டதுக்கும் இந்த பெண் வலை மீது சிக்க ஆசை..

பாவம் இடையில் சிக்கி தவிக்கும் வலை..



- தேவி அருண்


=======================

வானத்தில் இயற்கை அன்னை இட்ட 

வட்ட தோசையை திருப்பிப் போட அந்த கரண்டியோ!


- ஸ்ரீவி


================================

வாழ்க்கையே ஒரு வட்டம்..


வட்டத்துக்குள் வட்டமடித்தாலும்

வாழ்க்கை சிலருக்கு ஊட்டம் தருவதாக இருக்கிறது. 


பலருக்கு வாட்டம் தருவதாக இருக்கிறது. 


எல்லோருக்கும் ஏற்றம் தருவதாக இருந்தால்..

வாழ்க்கை எனும் வானில் 

சிறகடித்து வட்டமிடலாமே!


- பத்மாவதி

*அன்றும்… இன்றும்…*-பயணக் கட்டுரை (1)

 *பயணக் கட்டுரை*


*அன்றும்… இன்றும்…*


2000-ஆம் ஆண்டு.

கல்கத்தா விமான நிலையத்திலிருந்து சென்னைக்குப் பயணிக்க, முதன்முறையாக என் ஆறு வயது மகனுடனும் மனவியுடனும் விமானத்தில் ஏறினேன். சகாரா விமானம். என் மகன் அரவிந்திற்கு அது அவனது முதல் விமானப் பயணம்.


விமான நிலையத்தில் காலடி வைத்ததுமே, ஏர்லைன் நிறுவனத்தினர் எங்களை ஒரு கல்யாண வரவேற்பைப் போல அன்போடும் புன்னகையோடும் வரவேற்றனர். ஒவ்வொருவருக்கும் ஒரு சிறிய பரிசுப் பெட்டி

அதில் சாக்லேட், பிஸ்கட், பஞ்சு, பேனா, மற்றும் “லிமிலி” என்று அழைக்கப்படும் இனிய மிட்டாய்.

பயணம் தொடங்கும் முன்பே மனம் இனிப்பில் நனைந்தது.


விமானம் மேல் நோக்கி எழத் தொடங்கிய அந்த நொடியில்,

அச்சம் என் மகனின் கண்களில் குடிகொண்டது. அழுகை வெடித்தது.


அந்தக் கணமே, விமான பணிப்பெண் ஒரு தாயின் கருணையுடன் வந்தார்.

அவனது கையில் ஒரு அழகிய கார்ட்டூன் கதைப்புத்தகம்,

படம் வரையும் நோட்டு,

கிரையான் கலர் பென்சில்கள்

அதோடு  *அவனை விமானியின் அறைக்கே அழைத்துச் சென்று,*

*அந்த பயத்தை ஆச்சரியமாக மாற்றினர்.*

அழுகை நின்றது.

அதற்கு பதிலாக, அவன் முகத்தில் *ஒரு புதிய உலகத்தை கண்ட புன்னகை மலர்ந்தது.*

அந்தப் பயணம்

ஒரு நினைவாக அல்ல,

ஒரு அனுபவமாக அவன் மனதில் பதிந்தது.

*இன்று*

30-01-2026.


என் மனைவியுடன் அகாஷா விமானத்தில் ஒரு பயணம்.

அதுவும் சர்வதேசப் பயணம்.


விமான நிலையம் மாறியிருக்கிறது.

விமானமும் மாறியிருக்கிறது.

காலம் வேகமாக முன்னேறியிருக்கிறது.


ஆனால்… மனிதம்?


வரவேற்பு என்று ஒன்றுமில்லை.

ஒரு புன்னகை கூட இல்லை.

நாம் வந்தோம், அமர்ந்தோம், புறப்பட்டோம், அவ்வளவுதான்.


*என் மகனைப் போலவே ஒரு சிறு குழந்தை அழுகிறது.*

அழுகை விமானத்தின் ஓசையோடு கலந்து மறைந்து போகிறது.

யாரும் திரும்பிப் பார்க்கவில்லை.

*யாருக்கும் அது ஒரு மனிதக் குரலாகவே தோன்றவில்லை.*


இரு துண்டு ரொட்டிக்குள் அடுக்கப்பட்ட உணவு ஒன்று, (Sandwich) ஒரு பழச்சாறு

*கடமை முடிந்ததற்கான சான்றாக வழங்கப்பட்டது.*

அன்பாக அல்ல… அவசியமாக.


பயணத்தின் நடுவில்

என் மனைவிக்கு கடுமையான காது வலி. அவஸ்தை.


அந்த வலியின் உச்சத்தில்,

மிகுந்த எதிர்பார்ப்போடு

விமான பணிப்பெண்ணிடம்

பஞ்சு கேட்டேன்.


*”இல்லை”* ஒரே சொல்லில் முடிந்தது.


அந்த “இல்லை” பஞ்சு இல்லை என்பதற்காக அல்ல… அதன் பின்னால் ஒரு முயற்சியும் இல்லை, ஒரு மாற்று யோசனையும் இல்லை,

ஒரு கருணையும் இல்லை என்பதற்காக.


என் மனதில் ஒரு கேள்வி எழுந்தது

விமானத்தில் பஞ்சு கொடுக்கும் பழக்கம் இல்லாமல் போயிருக்கட்டும். ஆனால்

முதல் உதவி பெட்டியிலிருந்து

ஒரு சிறிய அளவு பஞ்சு எடுக்கக் கூட ஏன் தோன்றவில்லை?


மனிதம் தொலைந்துவிட்டதா?

அல்லது அந்த அளவு உடனடி சிந்தனைத் திறன் (presence of mind) இல்லாமல் போய்விட்டதா?


இல்லை… அதுவும் இல்லை.


*கடமை மட்டும்.*

*கால அட்டவணை மட்டும்.*

*நடைமுறை விதிமுறை மட்டும்.*


*கருணை?*

அது இப்போது

பயணப் பெட்டியில் சேர்க்கப்படாத

ஒரு கூடுதல் பொருளாகிவிட்டதா?


அன்று

ஒரு குழந்தையின் அழுகை

ஒரு விமானப் பயணத்தை

அழகான நினைவாக மாற்றியது.


இன்று

ஒரு மனிதனின் வலி

ஒரு நடைமுறை விதிமுறையின் கீழ்

மௌனமாக்கப்பட்டது.


அன்றும் விமானம் பறந்தது.

இன்றும் விமானம் பறந்தது.


ஆனால்

அன்று மனிதம் உயரத்தில் இருந்தது.

இன்று அது

தரையில் எங்கோ

விழுந்து கிடக்கிறதோ என்ற

சந்தேகம் மட்டும்

என்னுடன் பயணம் செய்தது.

Sunday, February 1, 2026

மனைவி

 மனைவி,*


 எங்கிருந்தோ வந்தாள் என் மனைவி என்று சொன்னாள்,

 தாய் தந்தை வி ட்டு,அவள் தஞ்சமென வந்து விட்டாள்,

 தன் குடிஇனி இதுவே என தத்தெடுத்து வந்து விட்டாள்,

 அறுசுவை உணவினை அமுதமாய் படைத்திடுவாள்,

 ஆணுக்கு பெண் சமம் என அலுவலகம் சென்றிடுவாள்,

 கணவன் சுமையை அவள் கணிசமாய்  பகிர்ந்திடுவாள்,

 கண்ட செலவினை அவள் கணிசமாய் குறைத்திடுவாள்,

 வசதி வாய்ப்பினை வளமாக உயர்த்திடுவாள்,

  வாரிசுகளை அவள் வாட்டமின்றி தந்திடுவாள்,

  குழந்தை வளர்ப்பில் அவள் கோபுரம் போல்  வளர்த்திடுவாள்,

 அம்மா என்று அழைக்கையிலே ஆனந்தம் கொண்டிடுவாள்,

 பள்ளி படிப்பினை அவள் பாசத்துடன்  அளித்டு வாள்,

 தன் கணவன் பெறுமைத னை தனக்குள் எண்ணி மகிழ்ந்திடுவாள்,

 அவன் உணவு உண் கையிலே  ஓரமாய் நின்று ரசித்திடுவாள்,

 தலைவலி என்று சொன்னால் தைலம் தேய்த்திடுவாள்,

 உடல் வலி என்று சொன்னால் உருகியே நின்றிடுவாள்,

 படுக்கையில் படுத்திட்டால்  பாசமுடன் பணிவிடை செய்திடுவாள்,

 தனக்கு இது வேண்டுமென தற்குறியாய்  கேட்டு அறி யாள்,

 இருப்பது போதுமென இன்பமாய் இருந்திடுவாள்,

 இறுதி மூச்சு வரை இணைபிரியாமல் வந்திடுவாள்,              


 அளவிலா அன்பும், தாயினை ஒத்த பாசமும், ஈர் உடல் ஓர் உயிர்  என்ற எண்ணம் கொண்டு எப்பொழுதும் துணை நிற்கும் கணவன் அமைந்திட்டால்,

 ஏழேழு ஜென்மத்திற்கும்,

 இவனே என் கணவனாக வரவேண்டும்  என இறைவனை வேண்டிடுவாள்.           


 இது போன்ற மனைவி அமைய இறைவன் அவனுக்கு வரம் தர வேண்டும்.

சிசு 

2/2/2026

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...