Saturday, July 4, 2026

சிலம்பொடு ஒரு பயணம் (28) *இந்திர விழவு ஊர் எடுத்த காதை* *காலை இளம் கதிரும் - மருவூர்ப் பா*

 ••••••••••••••••••••••••••••••••

*{28} சிலம்பொடு ஒரு பயணம்*


*இந்திர விழவு ஊர் எடுத்த காதை*


*காலை இளம் கதிரும் - மருவூர்ப் பா*

••••••••••••••••••••••••••••••••


இரவுப் பொழுதும் முடிந்தது 

விடியல் பொழுது புலர்ந்தது

செங்கதிரும் எழுந்தது 

இவ்வழகை அடிகள் வரிகளில் பார்ப்போம்: 


*ஆரப் பேரியாற்று மாரிக் கூந்தல்*

மலைமுகடை தழுவி ஓடும் கரிய மேகங்களே கருங்கூந்தல் ஆக


(எங்கே நமக்கு, *அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்..  சரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்க்கிறாள்* எனும் கவியரசின் வரிகள் நினைவுக்கு வருகிறது அல்லவா) 


*மண்ணக மடந்தை புதைஇருள் படாஅம் போக நீக்கி*


பூமகள் மேல் போர்த்தியிருந்த இருள் எனும் கரிய போர்வையை விலக்கிட


*உலகு விளங்கு அவிர்ஒளி மலர்கதிர் பரப்பி,*


மலையின் உச்சியிலே விரிகதிர் விரித்து செங்கதிரவன் கீழ் திசையில் உலகம் விழித்திட உதித்தான்.


காலையில் கதிரவன் எழும் நிகழ்வை கூறி பின் மருவூரப் பாக்கம் எனும் நகரை மிக அருமையாக வர்ணிக்கிறான்:


*வேயா மாடமும், வியன்கல இருக்கையும், மான்கண் காதலர் மாளிகை இடங்களும்,*


கூரைகள் மேயாத மாடங்களும், விலை உயர்ந்த ஆபரணங்கள் இருக்கும் அறையும்,

சிறிய மான் கண்களைப் போன்ற சாளரங்கள் கொண்ட விதானமும் கொண்ட வீடுகள் நிறைந்திருந்தன. 


*கலம்தரு திருவின் புலம்பெயர் மாக்கள் கலந்துஇருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்,*


திரை கடலோடி வணிகம் செய்து பெரும் செல்வம் திரட்டிய மீகாமர்கள் வசிக்கும் கடற்கரை குடியிருப்புகள் அதிகம் இருந்தன.


*வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்          பூவும் புகையும் மேவிய விரையும் பகர்வனர் திரிதரு நகர வீதியும்,*


வண்ணக் குழம்பு சுண்ணப் பொடி, வாசக் குளிர் சந்தனம், பல நிற பூக்கள், பூமாலைகள்  அகில் போன்ற நறுமண பொருட்களை விற்பவர்கள் சுற்றிக் கொண்டிருக்கிற நகர வீதியும்


*மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும் அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா*


விலைமதிக்க முடியாத முத்துக்களும், வைர வைடூரியங்களும், பொன்னும் இன்னும் பல விலை உயர்ந்த பொருட்களும் கொட்டிக் கிடக்கும் வணிக வீதிகளும் இருந்தன. 


ஊரின் சிறப்பைத் தொடர இதோ வருகிறார் மழலைக் கவி:


ஐயா,

இந்திர விழவைப் புகார் நகரம் கொண்டாடும் விதத்தை நாம் இருவர் பார்வையில் காண ஆரம்பிக்கிறோம்.


மழை வளம் , வேளாண் நலம்  போன்றவை வேண்டி இந்திரனைச் சிறப்பித்து சித்திரை மாத பௌர்ணமியில் தொடங்கி 28 நாட்கள் தொடரும் விழா இது.

தூங்கெயிலெறிந்த தொடித்தோள் செம்பியன்' என்ற சோழ மன்னன் ஆரம்பித்த விழா இது என்று அறியப்படுகிறது.

புகார் நகரம் இரு பிரிவுகளாக இருந்தது. மருவூர்பாக்கம்  நகரின் உட்பகுதியாக, வாணிபம், தொழில் செய்வோரைக்கொண்டது. பட்டினப்பாக்கம் கடலோரம் மேட்டுக்குடியினர் வசிக்கும் இடம், நம்சென்னையின் கிழக்கு கடற்கரை சாலை போல!

நாம் மருவூர்பாக்க வீதிகளில் சுற்றிப்பார்க்க நுழைந்து விட்டோம்.


" பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் கட்டும் நுண்வினைக்காருகர்"-நுட்பமாக ஆடைகளை உருவாக்கும் தையல் கலைஞர்கள்,

கூலம் (தானியங்கள்) குவித்த 

கூலவீதி( தானியங்கள விற்கும் அங்காடிகள்நிறைந்த தெரு)

பிட்டு விற்கும் காழியர் ,

அப்பம் விற்கும் கூவியர் ,

கள் விற்கும் பெண்டிர் -யாட்டியர்

மீன் விற்கும் பரதவர் 

உப்பு விற்பவர் -பகருனர்- (உமணர் )

வெற்றிலை விற்கும் பாசவர் , 

வாசவர்-

(சூடம், சாம்பிராணி போன்ற ) வாசனைப்பொருள்களை விற்பவர் ,

பலவகையான புலால் கறிகளை விற்கும் "பல்நிணவிலைஞர்,

எண்ணெய் வகைகள் விற்கும் ஓசுநர் ,

ஆகியோரின் இருப்பிடங்கள் இருந்தன. 

வெண்கலப் பொருள்கள் செய்வோர் - கஞ்சகாரர்(!),

செம்புப் பொருள்கள் செய்வோர் - செம்பு செய்குநர்,

மரப் பொருட்கள் செய்யும் தச்சர் - மரங்கொல் தச்சர்,

இரும்புக் கருவிகள் செய்யும் கொல்லர் -கருங்கைக் கொல்லர்,கண்ணுள்-வினைஞர் -ஓவியர்கள்,கைவினைக்

கலைஞர்கள்,

மண்ணில் பாண்டங்களும் பொம்மைகளும் செய்யும் மண்ணீட்டாளர் ,

பொற்கொல்லர்கள்- பொன் செய்கொல்லர்,

துணி தைப்போர் - 

துன்னகாரர்,தோல்-அணி தைப்போர் -தோலின் துன்னர்

( துன்னுதல் என்றால் தைப்பது. சென்னைத்தமிழில் வேறு பொருள்!)

கிழி -ஓவியம் வரையப்படும் துணி, கிடை-மரப்பலகை இவற்றை வைத்து, தொழில் பல பெருக்குவோர்,

ஏழு ஸ்வரங்களில் எத்தனை பண்கள் என வியக்க இசை பாடும் "பெரும்பாணர்கள்

சிறு குறுங்கை வினைஞர்(micro" நுண்ணிய தொழில் எனப்பாகுபாடு அக்காலத்திலேயே!)

பிற வினையாளர்-பிறர்க்கு ஏவல் செய்வோர்( நமக்குப் பழக்கப்பட்ட ஒன்றுதானே!)

இப்படிப் பலவகைப்பட்ட தொழிலாளர்கள் பகுதி பகுதியாக வாழ்ந்தனர்.  எத்தனை தூய தமிழ் பெயர்கள், ஒவ்வொரு தொழில் புரிபவர்களுக்கு! டாக்டர், இஞ்சினியர், டிரைவர் என்று ஆங்கிலத்திலேயே வளைய வரும் இக்கால இளைய சமுதாயம் அறிய வேண்டிய பெயர்கள்.

ஒன்றும் வாங்காமல்"அங்காடி நோட்டம்"விட்டதற்கே மூச்சு முட்டுதே சாமி!

இக்கால தி. நகர், பாண்டி பஜாரை நினைவூட்டும் அங்காடிகள் அமைப்புகள். 

ஆனால், மருவூர் பாக்கம்" மறு இன்றி" விளங்கியது.ஆம் திட்டமிடப்பட்ட நகர அமைப்பு, விதிகள் மீறல் கிடையாது எனில்   குற்றமின்றி சிறப்புற்றதில் வியப்பென்ன!

Friday, July 3, 2026

நெகிழிப் பை தவிர்த்து (3, ஜூலை)...

 நெகிழிப் பை தவிர்த்து (3, ஜூலை)...


மகிழ்ச்சியாம் குருதியின் தடையிலா ஓட்டம் 

   மாநகராட்சியும் கதை கதையாய் *சொல்லும்


துகிலாய் நெகிழி அது புவியைச் சூழ்ந்தது

   தோழராம் தாவரம், மீன்,.. மூச்சு திணறுது


முகிலின் கொடையாம் நீரும் கெட்டது

   மூடியுடன் வண்ண நெகிழியில் இட்டது


நெகிழியைத்  தவிர்த்து சுற்றுச்சூழல் காப்போம் 

   நேற்றைய முன்னோராய் துணிப் பை எடுப்போம்.


* நெகிழியால் கழிவுநீர் தடைபடுதல்


__. குத்தனூர் சேஷுதாஸ் 3/7/2026

Wednesday, July 1, 2026

இதுவே அக் குலம்

 இதுவே அக் குலம்


பனியாய் நோய் விரட்டும் பகலவன் ஆகும் 

   பாயில் கிடப்போரை பாய்ந்தோடச் செய்யும்


முனியாமல் குறைகளை முழுவதும் கேட்கும் 

   மோட்சம், சொர்க்கம் என போகாமல் தடுக்கும் 


கனிவான தமிழ் பேசி காயங்கள் ஆற்றும் 

   கத்தியால் கீறியும் கருணையே ஊறும்


இனிய மாங்கனிகள் இலவசமாய்த் தரும் 

   இதுவே " மருத்துவர் " எனும் அக் குலம்.



மருத்துவர் குலம் வாழியவே! 💐🙏


__. குத்தனூர் சேஷுதாஸ் 1/7/2026


=====================

அரிது அரிது மானுடராய் பிறத்தல் அரிது 


மானுடராய் பிறப்பினும் 

கூன் குருடு செவிடு நீங்கி பிறத்தல் அரிது 


கூன் குருடு செவிடு இருப்பினும் 

அவற்றை நீக்கும் பேராற்றல் மிக மிக அரிது. 


பேராற்றல் கொண்ட

எங்கள் சங்க மருத்துவரோ

மருத்துவமும் பார்ப்பார்.

மனிதமும் வளர்ப்பார்.

மாங்கனியும் தந்திடுவார்!


பேராற்றல் மிக்க மருத்துவர்கள் அனைவருக்கும் 

நெஞ்சு நிறை நன்றிகளும் 

மருத்துவர் தின நல்வாழ்த்துகளும்


உங்கள் தோழன் ஸ்ரீவி


Monday, June 29, 2026

முதியோர் இல்ல வாசிகளை மகிழச் செய்த தமிழ்ச் சங்க இன்னிசை நிகழ்ச்சி

 *தமிழ்ச்சங்க உறுப்பினர்களின் மேலான கவனத்திற்கு*


ஒரு முக்கிய சமூகக் கடமையை நிறைவேற்றி விட்டு வந்த மன திருப்தியுடன் இன்று நடந்த ஒரு மிக முக்கிய நிகழ்வினைப் பற்றிய விவரணத்தை உங்களுடன் பகிர்வதில் மகாகவி பாரதி தமிழ்ச் சங்கம் பெரு மகிழ்வு கொள்கிறது.


*முதியோர் இல்ல வாசிகளை மகிழச் செய்த தமிழ்ச் சங்க இன்னிசை நிகழ்ச்சி*


வருடம் ஒருமுறை நாம் தொடர்ந்து தவறாமல் செய்து வரும் சமூகக் கடமையில் ஒன்று இன்று மாலை சிறப்பாக நடந்தேறியது. ஆம். சமூகக் கடமையாக நாம், உதவி தேவைப்படும் இல்லங்களுக்கு நிதி உதவி செய்வதோடு அவர்களை மகிழ்விக்கும் வண்ணம் பல்சுவை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம். அந்த வரிசையில் இந்த வருடத்திற்கான நிகழ்வினை தற்போது மன மகிழ்வோடு செய்து முடித்துவிட்டு இல்லம் திரும்பி உள்ளோம். 


இன்று, 28.6.26, ஞாயிறு அன்று மாலை 4:30 மணி முதல் 6.30 மணி வரை 2 மணி நேரம் அருமையான இசை நிகழ்ச்சி ஒன்றினை முடிச்சூர் பகுதியில் உள்ள *அக்ஷயா டிரஸ்ட்* முதியோர் இல்லத்தில் நமது மகாகவி பாரதி தமிழ்ச் சங்கம் சார்பில் செய்து முடித்து உள்ளோம்.


வழக்கம்போல், நமது நிதிச் செயலர் சாய்ராம் அண்ணா அவர்களின் மேற்பார்வையில் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்ட ஏழு பாடகர்கள் உடன் இன்று அவ்விடம் சென்றோம். பாடிய இன்னிசைக் குயில்கள்:


சாய்ராம், 

துர்கா சாய்ராம், 

விஜயலட்சுமி,

செங்கதிர்ச் செல்வன், 

கார்த்தி, 

ரிஜாவுதீன், மற்றும்

ஸ்ரீ நிகேதன். 


ஒலி அமைப்பிற்கு நமது ஆஸ்தான ஒலி அமைப்பாளர் சசி அவர்களை அழைத்துச் சென்று இருந்தோம்.


நிகழ்ச்சியைப் படம் பிடித்து, நமது சேனலிலும் - படவரிக் குழுவிலும் பகிர்வதற்காக உடன் வந்தவர் நமது நிர்வாகக் குழு உறுப்பினர் அமுதவல்லி. 


இவர்களுடன் அடியேனும், திரு மோகன் ஐயா அவர்களும்.


உற்சாகமாக நமது இன்னிசைக் குயில்கள் பாடல்களைப் பாட முதியோர் இல்ல வாசிகள் பலரும் ஆடிப் பாடி மகிழ்ந்தனர். அவர்களில் ஓரிருவரும் பாடல்களைப் பாடினர். 


அந்த இல்லத்தின் அமைப்பாளர்களில் ஒருவரும் ஆலோசகரமான திரு. தாசரதி அவர்கள் வந்திருந்து நமது சங்கத்தைப் பாராட்டி உரை நிகழ்த்தினார்கள். இவரது உரை நமது சங்க செயல் பாட்டிற்கு உரமூட்டுவதாக இருந்தது.  இவர் நமது சாய்ராம் ஐயாவின் ஆத்ம நண்பர் என்பது குறிப்பிடத் தக்கது. 


முதியோர் இல்ல வாசிகள் அனைவரும் இரண்டு மணி நேரம் மிக மகிழ்வோடு ரசித்து ஆடிப் பாடி கலகலப்பாய் இருந்தது நமக்கு மனநிறைவை தந்தது. அவர்களுக்கு இணையான மனமகிழ்ச்சி எங்கள் அனைவருக்கும் வந்தது. 


நமது சங்கத்தின் சார்பாக பத்தாயிரம், செங்கதிர் செல்வன் அவர்கள் மூவாயிரம், வழக்கம்போல் தன் பெயர் சொல்ல விழையாத ஒரு புரவலர் கொடுத்த ஐயாயிரம் ஆக மொத்தம் ௹.18,000/-க்கான காசோலை அந்த இல்லத்துக்கு இன்று வழங்கப்பட்டது. நமது பாடகர்களில் ஒருவரும் நிர்வாகக் குழு உறுப்பினருமான திருமதி. விஜயலட்சுமி 2000 ரூபாய் நேரடியாக நன்கொடை கொடுத்தார். இன்று அனைவரையும் பாடி மகிழ்வித்த கார்த்திக் (நமது நிர்வாகக் குழு உறுப்பினர் ரமணி அவர்களின் மைந்தன்) ௹.10,000/- நன்கொடை செய்தார். ஆக மொத்தம் ௹.30,000/- அந்த இல்லத்திற்கு இன்று அளிக்கப் பட்டுள்ளது. 


முத்தாய்ப்பாக ஒரு அருமையான கதம்பப் பாடலை (medley) சாய்ராம் ஐயா பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள். 


சங்கத் தலைவர் ஸ்ரீவி அவர்கள் நன்றியுரை கூற இந்த பொன்மாலைப் பொழுதினை மேலும் இனிதாக மாற்றிட நம் சங்கத்தால் வழங்கப்பட்ட இன்னிசைப் பாடல் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.


பிறகு இல்ல வாசிகளுடன் உணவு அருந்திவிட்டு மனநிறைவோடு கிளம்பினோம். 


*ஸ்ரீவி*

தலைவர் 

(நிர்வாகக் குழுவிற்காக)


28.06.2026 அன்று மாலை மகாகவி பாரதி தமிழ்ச்சங்கம் சார்பில் முடிச்சூர் பகுதி அக்க்ஷயா ட்ரஸ்ட் முதியோர் இல்லத்தில் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது

முதியோர் இல்லத்தில் இன்னிசை நிகழ்ச்சி



Saturday, June 27, 2026

சிலம்பொடு ஒரு பயணம்(27) *அந்தி மாலைச் சிறப்புச் செய்த காதை* *காம வேள் நடனமும் காதையின் வெண்பாவும்*

 ••••••••••••••••••••••••••••••••

*{27} சிலம்பொடு ஒரு பயணம்*


*அந்தி மாலைச் சிறப்புச் செய்த காதை*


*காம வேள் நடனமும் காதையின் வெண்பாவும்*

••••••••••••••••••••••••••••••••


மாலைப் பொழுதின் மயக்கத்திலே 

மாதவிப் பொன் மயிலாள் மகிழ்வுற்றிருக்க.. 

மனக்கலக்கத்தில் கண்ணகி ஆழ்ந்திருக்க 

இரவுப் பொழுதும் உருண்டோடிப் போகிறது. 

செங்கதிரோன் கீழ் வானில் 

மேல் எழும்ப பொழுதும் புலர்கிறது. 


இக் காட்சிகளை இளங்கோவடிகள் 

இனிதே வர்ணிக்கிறார்: 


*அன்னம் என்னடை நன்னீர் பொய்கை ஆம்பல் நாறும்*


அன்னப்பறவைகள் அழகு நடை பயிலும் பொய்கையில் பெண்களின் கண் போல் ஆம்பல் பூ மலர்ந்து மனம் வீசிக்கலாம். 


*தண் அறல் கூந்தல் பான் வாய் வண்டு நோதிறம் பாட*


பொய்கையில் காற்றில் அலையும் நேரலைகள் தலைவியின் வளைந்து நெளிந்து ஆடும் நீண்ட கூந்தலை நினைவூட்டின. இசை பாடும் வண்டுகள் வந்து காலைப் பண் பாடின.


*தண் அறல் கூந்தல்* குளிர்ந்த நீர்களை அசைவது போன்ற கூந்தல். என்ன அழகிய சிந்தனை. இதைத்தான் இந்நாளில் திரைப்படப் பாடலில் 

*நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ* என வாலிபக் கவி எழுதினாரோ!


*உரவு நீர்ப்பரப்பின் ஊர் துயில் எடுப்பி இரவு தலைப் பெயரும் வைகறை காரும்*


புள்ளிகள் பொருந்திய சிறகினை உடைய சேவல் கோழி தனது கூறிய வாயால் சங்கு முழங்குவது போல் ஒலித்து உறங்கிக் கிடந்த புகார் நகரை துயில் எழுப்பியது. இரவு கழிந்து வைகறைப்பொழுதும் வந்தது. 


அப்போது என்ன நடக்கிறது? 


*பகலும் துஞ்சான் விரை மலர் வாளியோடு கருப்பு வில் ஏந்தி*


இரவில் மட்டுமல்ல பகலிலும் உறங்காத மன்மதன் மலர் கணைகளோடும் கரும்பு வில்லோடும் மகரக் கொடியோடும் நகர்வலம் வருகிறான். அவனுக்கு மட்டும் ஓய்வும் உறக்கமும் இல்லை போலும். 


இதையே வல்லபன் எனும் பாடலாசிரியர், 

*மீன்கொடித் தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான்* என எழுதினார் போலும். 

(மகரம் எனில் மீன் என அறிக) 


இப்போது வெண்பாவை பார்ப்போம்: 


*கூடினார்பால் நிழல் ஆய், கூடார்பால் வெய்யது ஆய்,*

*காவலன் வெண்குடை போல் காட்டிற்றே - கூடிய*

*மாதவிக்கும், கண்ணகிக்கும், வான் ஊர் மதி விரிந்து*

*போது அவிழ்க்கும் கங்குல் - பொழுது.*


இதன் பொருளை மழலைக் கவி விளக்குவார்.



ஐயா ,

அந்திமாலையில் கண்ணகி உழன்றாள் - மாதவி மகிழ்ந்தாள் எனப்

பார்த்தோம். இந்த மாலை புகார் நகர் மகளிருக்கு, அவரவர் கூடலையும் ஊடலையும் பொறுத்து, இன்பத்தையும், துன்பத்தையும் அளித்தது .


காமதேவனின் ஆட்சி:

இரவு வந்துவிட்டது. காமதேவனின் ஆளுமை எங்கும்

அரசன் முதல் குடிமக்கள் யாவரையும் அவன் 

இப்போது ஆட்டிப்படைக்கும் நேரம் .

அடிகளின் நோக்கில் இந்த சூழ்நிலை எப்படிக்காணப்

படுகிறது?

காமதேவன் மகரக்கொடியோடு ( மீன் கொடி) நகரைச் சுற்றி வந்தான்,கையில்

கரும்பு வில்லும், மலரம்புகளும் ஏந்தி;(ஐந்து மலர்கள்-தாமரை, முல்லை , அசோகு,மா, நீலம் என ஐந்து மலர்கள் கொண்ட அம்பு. )

ஒரு முழம் மல்லிகைப்பூவுக்கே மயங்கும் மகளிர் ஐந்துமலர்க்கணை  மேனியில் பட்டால் காமதேவன் வசப்படுவதில் என்ன வியப்பு!

இரவு  முடிந்து வைகறைப் பொழுது ஆரம்பிக்கும் வேளை. ஆம்பல் மலர்ந்தது.நன்னீரப் பொய்கையில்(  நன்னீரா!அக்காலத்தில் சர்வ சாதாரணம்!) அன்னங்கள் நடை பயிலத்தொடங்கின. வண்டுகள் வந்து  பள்ளி எழுச்சி" நோதிறம்" (பிரிவுத்துயரில் பாடும் பண்- நொந்த திறம்) பாடத்தொடங்கின. 

யாரை எழுப்ப? 

ஆம்பல் மலர் போல் சிவந்த வாயும், குளிர்ந்த ஆற்று மணல் படிவுகள் போல சுருள் சுருளான கூந்தலையும் உடைய நன்மங்கையைப் போன்ற பொய்கையை எழுப்பவாம். இயற்கையாக அமைந்த சுருள் கூந்தல். உபகரணங்கள் உதவி இன்றி! உலகில்உயிர்களைத்தோற்றுவிக்கும் மகளிரோடு , அவ்வுயிர்கள் வாழ இன்றியமையாத நீர் கொண்ட பொய்கையோடு ஒப்பிட்டது எவ்வளவு நல்ல உவமை! இயற்கையோடு மானுடம் பின்னிப்பிணைந்த  காலம் அப்போது.


அக்காலத்தில் இயற்கைச்சூழலில் எழும் ஒலிகளே மக்களை எழுப்பும்.

பறவைகள் முரசொலி போல ஒலி எழுப்பும்.புள்ளிச்சிறகுடை

சேவல்கள் சங்கு போல முழங்கும். அதுவும் எப்படி?" முறை முறை ஆர்ப்ப"- அடுத்தடுத்து முறையிட்டுக் கூவும். கடிகாரத்தின் தலையில் அடித்துவிட்டுத்திரும்பிப் படுக்கும் வழக்கம்  கிடையாது.

 அப்போது.

மீன் கொடி வேந்தனான காமதேவன் இரவேல்லாம் ஆட்சி செலுத்துகையில் , இன்புற்றோர் துன்புற்றோர் யாவரும் உறங்கவில்லை. காமதேவன் பாரபட்சம் பார்ப்பதில்லை; யாவருக்கும் பொது( common!)

இந்த மீன் கொடியான் மாதவி கோவலன் கூடலுக்கு அடிகோலினான். விளைவு, பின்னர் மற்றொரு மீன்கொடியானின்  ( பாண்டிய மன்னனின் செங்கோல் பிழைத்தது.


"மன்மத லீலையை வென்றார் உண்டோ?

என் மேல் உனக்கேனோ பாராமுகம்?

ஒருபிழை அறியா என்மனம் மலர்க்கணை பாய்ந்து அல்லல் படுமோ? 

என்று தியாகராஜ பாகவதர் பாடியது நினைவுக்கு வருகிறது.


 (காதைச்சுருக்க )வெண்பா :

மன்னின் வெண்கொற்றக்குடை எப்படி " கூடினார் பால் நிழலாய், 

கூடார்ப்பால் பால் வெய்யதாய்"

உள்ளதோ ,அது போல வெண்ணிலாவும் மாதவிக்கு நிழலாகவும், கண்ணகிக்கு வெய்யிலாகவும் தோன்றியதாம்.

இன்றைய திரை உலக கதாசிரியர்கள் போல் நான்கடி வெண்பாவில் காதைச்சுருக்கம்!


*அந்தி மாலை சிறப்பு செய் காதை இத்துடன் நிறைவுற்றது. நாமும் மயக்கம் மாலையிலிருந்து

*இந்திர விழா ஊர் எடுத்த காதை* எனும் அடுத்த காதையில் மீண்டும் இணைவோம்.

Friday, June 26, 2026

தன் சாவிற்கு தானே இரங்கற்பா எழுதிய கவிஞன்

 கவியரசுவின் பிறந்த தின பதிவாக முகநூலில் நான் இட்ட பதிவினை பார்த்து எனது நண்பர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். சிறிது நேரம் அளவளாவிய பின், ஒரு வினாவினைக் கேட்டார். அந்த வினா: 


*தன் சாவிற்கு தானே இரங்கற்பா எழுதிய கவிஞன் யார் என தெரியுமா!*


கவியரசுவை பற்றி பேசிக் கொண்டிருந்ததால் எளிதாக ஊகித்தேன். 


*கவியரசு* என பதில் சொல்லிவிட்டு, அடுத்த கேள்வி அவர் கேட்க முன்னரே, அந்தப் பாடலை நான் படித்ததில்லை என்று பதிலும் கூறிவிட்டேன். 


உடனே, 'கூகுளில் போய் தேடிப் படி' -என சொன்னார். 

அவ்வாறே செய்தேன். 


நீண்டதொரு கவிதை அது. படிக்கையில் ஆச்சரியம் வந்தது.  வியப்பைத் தந்தது.. 

இப்படியும் ஓர் கவியா என மலைப்பு வந்தது.. 


அதிலும் தான் மறைவதற்கு 12 ஆண்டுகளுக்கு முன்பே இரங்கற்பா எழுதி வைத்தான் அக்கவிஞன். 


நீண்ட நெடிய இரங்கற்பாவின் கடைசி நான்கு வரிகள் அவனது கவித்திறமை பற்றி அவனுக்கு இருந்த செருக்கினை பகரும். 


அவ்வரிகள் இதோ: 


*கூற்றவன் தன் அழைப்பிதழைக் கொடுத்தவுடன் படுத்தவனைக் குவித்துப் போட்டு ஏற்றிய செந் தீயே! நீ எரிவதிலும் அவன்பாட்டை எழுந்து பாடு!*


நிச்சயமாக அவன் உடலை எரித்த போது,  செந்தீ எரியும்போது அவன் பாட்டை எழுந்து பாடி இருக்கும்.


Thursday, June 25, 2026

மன அழுத்தம் குறைப்போம் மகிழ்வுடன் வாழ்வோம்

 ••••••••••••••••••••••••••••••••••••

மன அழுத்தம் குறைப்போம் 

மகிழ்வுடன் வாழ்வோம் 

••••••••••••••••••••••••••••••••••••


அடிப்படைத் தேவைகள் அவனியில் மூன்றாம் 

உயிரினைக் காக்க உணவு வேண்டும் 

மானம் காத்திட உடையும் வேண்டும் 

பாதுகாப்புக்கு உறையுள் வேண்டும் 


உலகில் இவற்றைப் பெற்றிடவே 

உழைப்பு ஒன்றே வழியாகும் 

உழைக்கும் இடத்தில் அழுத்தம் உண்டு 


டார்கெட் என்ற பெயரில் அழுத்தம் 

பணிச்சுமை மூலம் வந்திடும் அழுத்தம் 

வீடும் காரும் வாங்கிடும் அழுத்தம் 

வாழ்நாள் முழுதும் E.M.I. அழுத்தம் 


காலையும் மாலையும் கணினியே துணையாம் 

குடும்பம் முழுதும் கைபேசியே இணையாம் 

மனைவியுடன் பேச நேரம் இல்லை 

மழலையைக் கொஞ்ச காலம் இல்லை 


முப்பது வயதில் சுகரும் பிரஷரும்

நாற்பது வயதில் இதய நோயும் 

அழையாமல் வந்து அவனைச் சேரும் 

இதற்குக் காரணம் மனதில் அழுத்தம். 


வாழ்க்கை என்பது வாழ்வதற்கே

நலமுடன் வாழ்ந்து மகிழ்ந்திடவே 

கவலைக் குவியலை மனதினில் ஏற்றி 

டென்ஷன் ஆகி வாழ்வினைத் தொலைத்து 

இன்னலுறுதல் வாழ்க்கை இல்லை.


அழுத்தம் குறைக்க அமைதியாய் வாழ 

அருமை வழிகள் பற்பல உண்டு 

மனதை வருடும் இன்னிசை கேட்டல்

நல்ல நூலினை நலமாய் படித்தல் 


ஓய்வறியாது உழைத்து ஓயாமல் 

குடும்பத்தோடு பொழுதைப் போக்குதல் 

இன்பச் சுற்றுலா தவறாது போதல் 

இயற்கையோடு நேரம் கழித்தல் 

இவையெல்லாம் இந்த வழிகளாகும்! 


காலணி அணியா கால்களோடு 

வலப்புறத்தில் 

கடலின் அலைகள் 'ஹோஹோ'வென

ஆர்ப்பரிக்க 

இடப்புறத்தில் தென்னங்கீற்று

'சட சட'வென 

சலசலக்க 

இல்லாள் குழந்தை கைகள் பிடித்து 

கடற்கரை மணலில் பாதம் பதிய 

உற்சாகத்துடன்

காலாற நடந்தால் 

மன அழுத்தம் 

மறைந்தே போகும்! 

மனதில் மகிழ்ச்சி பொங்கிப் பெருகும்! 


அழுத்தம் தன்னை குறைப்போம் காணீர் 

அவனியில் மகிழ்வாய் வாழ்வோம் வாரீர்!


*உங்கள் தோழன் ஸ்ரீவி*

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...