Friday, July 31, 2026

திறவுகோல் (1)

 திறவுகோல்


உணர்ச்சிகளையும், என்னுள் உழன்றவைகளையும் -

உள்ளத்தில் பூட்டினேன் ,

இறுகியது மனம் .


திறவுகோல் கண்ணில் பட ,

கையில் எடுத்து படித்தேன் ;


பூட்டிய கதவும் திறந்தது -

இறுகிய மனமும் இளகியது.

- பத்மாவதி

================================

வாசிப்பில்லா மனிதருக்கோ 

சிந்தனைகள் பூட்டப்பட்டு 

சிறையிருக்கும்


வாசித்தல் 

வந்து விட்டால்,

மனிதரின்

சிந்தனைகள் சிறகடிக்கும்.


- ஸ்ரீவி

=============================

பா இல்லை. எண்ண ஓட்டம்.

ஒரு மனிதரின், மூன்று நிலைகள்.


முதலில் எந்த சிந்தனையும் இன்றி  வாளா இருக்கிறார்.


இரண்டாவதாக அதிக  நாட்கள் வாளாயிருந்ததால் சலித்து விட்டவர்.


மூன்றாவதாக அதிகம் சலித்து, பின் சிலிர்த்து, வாசிப்பு திறவுகோல் கொண்டு சிந்தனை ஊற்றுக்கண் திறக்கப் பட்டவர். 


அன்னாரின் இல்லாள் , செயலாற்ற சென்று விட்டாள். அதனால் படத்தில் இடம் பெறவில்லை.


- கற்பகம்


====================


தெளிந்தது உயருது


உறவால் இணைந்தன ஒன்று, இரண்டு, மூன்று 

   ஒன்றாய் ஒரே குடும்பப் பின்னணி கொண்டு 


வரவேற்பு அறையில் வசதியான இருக்கை

   வாய் பிளக்கும் வண்ணத் தொலைக்காட்சித் திரை


சிறை பிடிக்கப் படுகின்றன முதல் இரண்டு 

   சிந்திக்க விடாமல் அங்கே சிரசில் பூட்டு 


திறவுகோல் நூலாம் தெளிந்தது மூன்று 

   திறமை வளருது திகைக்க வைக்குமது.


__. குத்தனூர் சேஷுதாஸ் 31/7/2026

==================================


கண் அறியாத பூட்டு 

கண் திறக்கவல்ல பூட்டு


கால்களுக்கு இல்லை பூட்டு 

காலம் வெல்ல உண்டு பூட்டு


கைகளுக்கு இல்லை பூட்டு

கற்றலுக்கு உண்டு பூட்டு


சிரசுக்கு இல்லை பூட்டு 

சிந்தனைக்கு உண்டு பூட்டு


யாரும் இடாத பூட்டு 

நாமே இட்ட பூட்டு 


மனம் திறக்கவல்ல பூட்டு

மனதைத் திறக்கவல்ல பூட்டு


வாசிப்பு வட்டத்துள் வந்துவிட்டால்

வானம் தொட ...

வழி திறக்கும் பூட்டு


- அமுதவல்லி


===================

தலை நிறைய பாரத்தோடும்,

முகம் நிறைய இறுக்கத்தோடும்,

மனம் நிறைய குழப்பத்தோடும்,

உடல் நிறைய‌‌ சலிப்போடும், 

இருக்கும் மனிதர்களுக்கு மாமருந்தாகவும், விருந்தாகவும் பரிமாறப்படுகிறது புத்தகம்.


================

அன்று:"சாவி ஒரு புத்தகம்"

இன்று:புத்தகமே "சாவி"

😊சாயி 😊


=================





Tuesday, July 28, 2026

அம‌ர‌ர் க‌வியரசர் திரு க‌ண்ண‌தாச‌ன் அவ‌ர்க‌ளுக்குச் ச‌ம‌ர்ப்ப‌ண‌ம்

 கலைந்தும் கலையாத காலைப் பனி போல

படர்ந்த இசைவண் ணமே- சங்கத்

தமிழில் நடைப ழகிஎளிய கவிபாடி

வளர்ந்த கவிவண் ணமே!

தமிழில் விளையாடி திரையில்கவி பாடி

வாழ்ந்த எழில்வண் ணமே! - சிறு

கூடல்நகர் தோன்றி சபைகள் பல கண்டு

விளைந்த கவிச் சிற் பமே!


(கலைந்தும்)


சந்தத் தமிழ்கொண்டு கவிதைபல வென்று

ஆளப் பிறந்தாயடா திரையாளப் பிறந்தாயடா

இசைத் தமிழின்சுவை கொண்டு கவிதைபல செய்து

வாழப்  பிறந்தாயடா வாழப் பிறந்தாயடா!

இசைத் தமிழின்சுவை கொண்டு கவிதை பல செய்து.........

இசைத் தமிழின்சுவை கொண்டு...........கவிதை பல செய்து.........

வாழப் பிறந்தாயடா!


வங்கக் கரையோரம் தங்கமணி மகுடம்

தந்து முடிசூட்டினார் கவி யரசர்பேர் சூட்டினார்!

தமிழ் அன்னை மகனான மன்னன் உனக்காக

சபையில் கதை பேசுவார் சபையில் கதை பேசுவார்!

தமிழ் அன்னை மகனான மன்னன் உனக்காக...........

தமிழ் அன்னை மகனான............... மன்னன் உனக்காக..............

சபையில் கதை பேசுவார்!


தமிழில் விளையாடி திரையில்கவி பாடி

வாழ்ந்த எழில்வண்ணமே! - சிறு

கூடல்நகர் தோன்றி சபைகள் பல கண்டு

விளைந்த கவிச் சிற்பமே!

தெரிந்தசொல் லெடுத்து அறிந்த ராகமதில்

வடித்த கவி சொல்லவா!

மனதில் மறவாத தமிழின் வழிகொண்டு

ரசித்த கவி சொல்லவா....ரசித்த கவி சொல்லவா!


மதியி னொளிபோல ஒளியின்பதம் போல

வாழ்ந்து மறைந்தாயடா -இந்த

மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும்

மறக்க  முடியாதடா புகழை மறைக்க முடியாதடா!


ம்ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்ம்

முன்பே ஓடிவா ராயோ ஓடிவா ராயோ   ஓடிவா ராயடா

இங்கே ஓடிவா ராயோ  ஓடிவா ராயோ கவிதைதாரா யடா!!



- திரு

அரச மரக் கேணி:

 அரச மரக் கேணி:


எங்கள் ஊரின் 

மேல் கோடியில்,

இரயில்வே கேட் 

அருகில் இருந்தது 

அந்தக் கிணறு.


மூன்று ஏக்கர் 

பாசனத்திற்காக 

வெட்டப் பட்ட கிணறு.

கோடையிலும் வற்றாது.

பதினைந்து அடிக்கு

குறையாத நீர்.


அதன் அருகே 

ஒரு அரச மரம் 

இருந்ததால் 

"அரச மரக் கேணி"

என்ற பெயர்.


கருங்கல்லால் ஆன

ஒரு பிள்ளையார் 

மேற்கூரையின்றி

அரச மரத்தடியே 

அமர்ந்திருப்பார்.

அவருக்கு முக்கால 

பூஜை கிடையாது. 

அவ்வப்போது 

குளிக்க வரும் சில 

பக்தர்களின் 

கைங்கரியம்.


அரச மரத்தை ஒட்டியே 

ஓர் அத்தி மரமும்

வளர்ந்திருந்தது.


பருவ காலங்களில், 

பிள்ளையாருக்கு 

மனிதர்கள் அளிக்கும் 

அபிஷேகமல்லாது 

அத்தி மரமும் தன் 

பங்கிற்கு அத்திப்

பழங்களை

அபிஷேகமிடும்.


கிணற்றின் உரிமையாளர் 

கிறித்துவர் ஆனபோதிலும் 

விநாயகர் அங்கே அமரத் 

தடையேதும் இல்லை.


அந்தக் கிணறுதான் 

எங்களின் நீச்சல் குளம்.


ஒரு பகுதியில் கவலை 

இறைக்க வசதியாக 

மாட்டுத் தடம்.


மறுபுறம் கிணற்றின் 

உள்ளே இறங்கப் 

படிக்கட்டுகள்.

படிக்கட்டுகள் என்றால் 

கட்டப்பட்ட படிக்கட்டுகள் 

இல்லை.

கிணறு வெட்டும்

போதே வாகாக 

அமைக்கப்பட்ட 

கரடுமுரடான 

படிக்கட்டுகள்.

கிணற்றைச் சுற்றி 

மண் சரியாமல் 

இருக்க அடுக்கப்பட்ட 

ஒழுங்கில்லா 

கருங்கற்கள்.

ஆங்காங்கே 

துருத்திக் 

கொண்டிருக்கும்.

இடையிடையே 

பாம்புகள் தங்கும்

துளைகள்.


இனிப்பான நன்னீர்.

ஆனால் விவசாயக் 

கிணறாதலால் யாரும் 

குடிநீராகப் பயன்

படுத்தவில்லை.


நண்பர்கள் பத்து பேர் 

சேர்ந்து போனால் 

கிணறே எங்களைக் 

கண்டு அஞ்சும்.


கிணறு மட்டுமல்ல 

நீச்சல் பழகிக் 

கொண்டிருக்கும்

கத்துக்குட்டிகளும் 

பயப்படுவர்.


நீர் இறைக்கும் 

கவலையிலிருந்து 

ஒருவர் பின் ஒருவராக 

"தொபீர் தொபீர்" எனக் 

கிணற்றில் குதிப்போம்.


உள்ளே முதுகில் 

தகர டின் கட்டி 

நீச்சல் பழகிக் 

கொண்டிருக்கும் 

சிறுவர்கள் ஆளுக்கொரு 

மூலையாகச் சென்று

பல்லியைப் போல்

கிணற்றுச் சுவரில்

ஒட்டிக் கொள்வர்.


இதுபோதாதென்று 

முங்கு நீச்சலில் சென்று 

அவர்களின் கால்களைப் 

பிடித்து நீரினுள்ளே 

இழுப்போம்.


நிறைய தண்ணீர் 

குடித்து, பயத்துடனும், 

இருமலுடனும் 

கிணற்றை விட்டு 

மேற்கரைக்கு 

ஓடி விடுவர்.


அடுத்து ஓடிப் பிடித்து

விளையாட்டு.

தரையைப் போலவே 

தண்ணீரின் உள்ளே.

கருங்கற்களைப் 

பிடித்துக் கொண்டு 

மேலேறி மீண்டும் 

கிணற்றில் குதிப்போம்.


யார் அதிக நேரம் 

நீரினுள் "தம்" 

கட்டுவதெனப் போட்டி.


சில சமயங்களில் 

கையில் துண்டைச்

சுற்றிக் கொண்டு 

தண்ணீர்ப் பாம்பைப் 

பிடித்து விளையாட்டு.

பாம்பு கடித்து விட்டால் 

கடித்த இடத்தில் 

சுண்ணாம்பைத் 

தடவி சிகிச்சை.


இரண்டு, மூன்று மணி

நேரம் செல்வதே 

தெரியாது. 


கிணற்றுக்காரர் வந்து 

விரட்டும் போதுதான் 

கரையேறுவோம்.


"அரச மரக் கேணி" 

என் நினைவில் 

ஆழமாகப் பதிந்த 

வசந்தகால நினைவு.


சொல்லத் தயங்கியது:


இனிய நினைவுகளைத் 

தந்த அந்த கேணிக்கு 

கருப்புப் பக்கங்களும் 

உண்டு.

ஆண்டிற்கு இரண்டு 

உயிர்களைக் காவு 

வாங்கி விடும்.

எங்கள் பள்ளியின் 

தமிழாசிரியர் 

திரு.கோபால் ஐயர்,

வீட்டிற்கு விடுமுறையில் 

வந்த மகள் வயிற்றுப்

பேரன்கள் இருவரைக் 

கேணியில் பலி 

கொடுத்து விட்டுக்

கரையில் பிரமை 

பிடித்து உட்கார்ந்திருந்த 

தோற்றம் எங்கள் 

இதயங்களைச் சுக்கு 

நூறாக உடைத்தது.😢😢



- முகம்மது சுலைமான்,

Sunday, July 26, 2026

மூன்றாம் ஆண்டு விழா நிகழ்ச்சிகளின் விவரணம்

 •וווווווווו

*மகாகவி பாரதி தமிழ்ச் சங்கத்தின் மகுடத்தில் மேலும் ஒரு மாணிக்கம்*


*மாபெரும் வெற்றி ஈட்டிய மூன்றாம் ஆண்டு விழா நிகழ்ச்சிகள்*


*ஆனந்த வெள்ளத்தில் மூழ்கிய மகாகவி பாரதி தமிழ்ச் சங்க உறுப்பினர்கள்*

•וווווווווו


*மூன்றாம் ஆண்டு விழா நிகழ்ச்சிகளின் விவரணம்*


26 ஜூலை 2026, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் நமது பல் பயன்பாட்டு பெருவரங்கம் உறுப்பினர்களின் வருகையால் களை கட்டத் துவங்கியது. அரங்கில் போடப்பட்டிருந்த 130 இருக்கைகளும் மள மளவென நிரம்பத் துவங்கின. நுழை வாயிலில் பன்னீர் தெளித்து, சந்தனம் கொடுத்து நமது வரவேற்புக் குழு முகமன் கூறி வந்த உறுப்பினர் அனைவரையும் இன்முகத்தோடு வரவேற்றது. 

153 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு இருக்கின்றனர். 


சரியாக ஒன்பதரை மணிக்கு ஆண்டு விழா துவங்கியது. மங்கலகரமான குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சியில், 


*திரு. விஜய் கணேஷ்,          திரு.  சிவகுமார்.       திருமதி. பிரேமா பத்ரி நாராயணன் திருமதி. ஜெயலக்ஷ்மி திருமதி. அமுதவல்லி*


ஆகியோர் குத்து விளக்கை ஏற்றினர். 


முதலில், நிகழ்ச்சிகளின் துவக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப் பட்டது. 


செல்வன். இர்மான் அழகு தமிழில் வரவேற்புரை நல்கினார். 


அதன் பிறகு, நமது சங்க பெருமைகளை விளக்கும் குத்தனூர் சேசுதாஸ் (கணேசன் ஐயா) அவர்கள் எழுதிய கவிதை ஒன்றினை திருமதி வித்யா சிவகுமார் அவர்கள் அழகாக வாசித்தார்.


அடுத்த நிகழ்ச்சியாக கண் கவரும் பரதம் ஆடி நமது நடன மணிகள் அரங்கத்தினரை மகிழ்வித்தனர். நடன ஆசிரியராக இருக்கும் நம் தமிழ்ச் சங்க உறுப்பினர் *திருமதி வித்யா லட்சுமி* அவர்கள் கொடுத்த பயிற்சியினால் மற்றும் தங்களது முயற்சியினால் நமது உறுப்பினர்கள் மிகச் சிறப்பாக ஆடி அனைவரையும் உற்சாகப் படுத்தினர். தமிழின் மேன்மையை பறைசாற்றும் பாடல்களுக்கு மிக அருமையாக அவர்கள் பரதம் ஆடி அனைவரின் கருத்தையும் கவர்ந்தார்கள். 


நல்லதொரு நாட்டியத்தை கண்டு மகிழ்ந்த கையோடு உறுப்பினர்களின் செவிகளுக்கு ஒரு நல் விருந்து காத்துக் கொண்டிருந்தது. ஆம் ... அதிரடியான சிறார்கள் ப(சு)ட்டிமன்றம் துவங்கியது. 


*பட்டிமன்ற தலைப்பு:*


*சிறார்களுக்கு அதிக மகிழ்ச்சி தருவது..  •உள்ளரங்க விளையாட்டுகளே! •வெளியரங்க விளையாட்டுகளே!*


நடுவராக *செல்வன் வருண்* மிகச் சிறப்பாக பட்டிமன்றத்தை வழிநடத்தினார். 


உள்ளரங்க  அணியில் 

*அகரன், சந்தோஷ், ஆராதனா* ஆகியோர் வலு சேர்த்தனர். 


வெளி அரங்க அணியில் 

*நிதர்ஷனா, லக்ஷித்,     சாதனா ஸ்ரீ* ஆகியோர் தடம் பதித்தனர்.


இந்த ஆறு சிறார்களின் வாத பிரதிவாதங்கள் அரங்கத்தை அதிர வைத்தன. வருணின் நகை உணர்வோடு கூடிய சொல்லாடல்கள் அரங்கத்தை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தின. மொத்தத்தில் இந்த பட்டிமன்றம் மாபெரும் வெற்றியை ஈட்டியது. பார்வையாளர்கள் அனைவரின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. எதிர்கால தமிழக பட்டிமன்ற மேடைகளில் இந்த சிறார்கள் நிச்சயம் தடம் பதித்து ஒளி வீசி முத்திரை பதிப்பார்கள் என்ற நம்பிக்கை மகாகவி பாரதி தமிழ்ச் சங்கத்திற்கு உண்டு. 


கர ஒலியால் அதிர்ந்த அரங்கத்தை மேலும் கலகலப்பாக மிக அருமையான கிராமிய நடனம் அரங்கேறியது. கண் கவர் கிராமிய நடனத்தால் பார்வையாளர்களின் உற்சாகம் அதிகரித்தது. பிரபு குமாரி அவர்களின் பயிற்சியில் நடனமணிகள் மிகச் சிறப்பாக ஆடினார்கள்.


அந்த உற்சாக வெள்ளத்தின் ஊடே, நமது இந்த மூன்று ஆண்டு பயணத்தின் *கடந்து வந்த பாதை* என்ற தலைப்பில் உதவித் தலைவர் திரு. தியாகராஜன் ஐயா அவர்கள் அருமையாக உரை நிகழ்த்தினார். தடம் பதித்த பயணம் என்று துவங்கி நாம் நடத்திய பல்வேறு நிகழ்ச்சிகளை பட்டியலிட்டதோடு, எதிர்கால நிகழ்ச்சிகள் பற்றி நமது திட்டங்களையும் குறிப்பிட்டுச் சொன்னார். இவற்றையெல்லாம் முன்னெடுக்க நிதியாதாரம் அவசியம் எனக்கூறி தனது உரையை நிறைவு செய்தார். 


அடுத்தடுத்து சிறப்பான நிகழ்ச்சிகளால் அரங்கத்தை மகிழ்வித்து வந்த தமிழ்ச் சங்க உறுப்பினர்களின் அடுத்த நிகழ்ச்சி இனிதே துவங்கியது. ஆம் *இன்னிசை நிகழ்ச்சி துவங்கியது.* காதுக்கு இனிமையான பாடல்களை மிக அருமையாக நமது உறுப்பினர்கள் பாடி அனைவரையும் மகிழ்வித்தனர். பாடியோர் விவரம்: 


1. புத்தம் புது காலை :. *திருமதி. பிரதிமா செளத்ரி*


2. கண்ணன் வந்து பாடுகிறான்: *திருமதி. லதா கணேஷ்*


3. செந்தூரப் பூவே: *திருமதி. சுவாதி*


4. தமிழுக்கு அமுதென்று பேர்: *திருமதி. பிரதிமா செளத்ரி*


    5.. நேற்று  இல்லாத மாற்றம்: *குமாரி. நிவேதிதா*


6. தமிழே தமிழே (மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் என்ற பாடல் ஒலி நயத்தில் தலைவர் ஸ்ரீவி அவர்கள் எழுதிய பாடல்): *திரு. சாய் ராம்*


பாடிய அனைவரும் மிக மிக சிறப்பாக பாடி தங்கள் திறமையை வெளிப்படுத்தியது அரங்கத்தை மகிழச் செய்தது. இதில், நம் மேடையில் பிரதிமா, லதா, நிவேதிதா ஆகியோர் முதன்முறை பாடுகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.


பின்னர், தலைவர் ஸ்ரீவி அவர்கள் உரை நிகழ்த்தினார். மூவர் முயற்சியால் சிறு விதையாக விழுந்த தமிழ்ச் சங்கம் இன்று ஆலமரமாக கிளைப்பரப்பி வளர்ந்திருப்பதை குறிப்பிட்டு, இதனை மேலும் பிரபலப்படுத்த நம் உறுப்பினர்கள் அனைவரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைத்தார். நமது youtube சேனலை பிரபலப்படுத்த அனைவரும் தவறாது சப்ஸ்கிரைப் செய்து கருத்துகளை பகிர்ந்து உதவ வேண்டும் என்று வேண்டுகோளையும் வைத்தார். நாம் தயாரித்திருக்கும் கலாட்டா காலனி திரைப்படத்தொடர் தொடர வேண்டுமானால் உறுப்பினர் அனைவரும் முழுமையான ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுச் சொன்னார்.

மேலும் நமது நிதி செயலர் சாய்ராம் ஐயா அவர்களுக்கு தமிழக அரசு விருது வழங்கியதை ஒட்டி நாம் எடுத்த பாராட்டு விழாவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மதிய உணவை அவர் அன்பளிக்கிறார் என்கின்ற தகவலை கூறி அவருக்கு நன்றி பாராட்டினார். உதவித்தலைவர் கூறியதை வழிமொழிந்து நிதி ஆதாரத்தை பலப்படுத்த உறுப்பினர்கள் உதவிட வேண்டும் என்று விண்ணப்பித்து உரையை நிறைவு செய்தார். 


அதன் பின் இன்னொரு சிறப்பான நடன நிகழ்ச்சி அரங்கேறியது. ஆடிய நடன மணிகள் அனைவரும் மிகச் சிறப்பாக ஆடி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்கள். 


மூன்று நடனங்களிலும் பங்கேற்ற நடன மாமணிகள்: 


*நடனம் 1 – பரதம்*


 திருமதி. வித்யாலட்சுமி

 திருமதி. துர்கா சாய்ராம்

 திருமதி. சிந்து 

திருமதி.பிரபு குமாரி

திருமதி.சுஜாதா ஜெகன்


*நடனம் 2 – கிராமிய நடனம்*

திருமதி .மல்லிகா மணி

திருமதி.மல்லிகா

திருமதி.பத்மாவதி நரசிம்மா

திருமதி.விஜயகுமாரி சுகுமார்

திருமதி.ரமா வெங்கட்ராமன்


*நடனம் 3 –  இந்தக் கால நடனம்*


 திருமதி வித்யாலட்சுமி

திருமதி.துர்கா சாய்ராம்

திருமதி.சிந்து 

திருமதி.பிரபு குமாரி

திருமதி.கிருத்திகா

திருமதி.பிருந்தா

திருமதி.சுஜாதா ஜெகன்


நடந்த நிகழ்ச்சிக்குப் பின் நமது சங்கத்தில் புதிதாக இணைந்துள்ள பிரபு அவர்கள் பல குரல்களில் பேசி அனைவரையும் அசத்தினார். பல திரை பிரபலங்கள் நமது சங்க நிகழ்ச்சிக்கு வருவதைப் பற்றி பேசுவது போல அமைந்திருந்த அந்த பல குரல் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக இருந்தது. இவரது திறமை நமது பாராட்டுதலுக்கு உரியது. அவருக்கு நமது வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும்.


இதன் பின் ஆண்டு விழா நிகழ்ச்சியின் முக்கிய கட்டம் வந்தது. நமது சிறப்பு விருந்தினர் *திரு தாசரதி ஐயா*  மேடைக்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப் பட்டார். அவருக்கு நம் பாரதி தமிழ்ச் சங்க எழுத்தாளர்கள்/ கவிஞர்கள் எழுதிய எட்டு புத்தகங்கள் அடங்கிய புத்தகக் கட்டு அன்பளிக்கப் பட்டது, தலைவர் ஸ்ரீவி அவர்களால். நமது சிறப்பு விருந்தினர் திரு. வே. தாசரதி அவர்கள் பற்றிய அருமையான அறிமுக உரையை மலர்விழி ஆற்றிய பின் மிகச் சிறப்பானதொரு சிறப்பு உரையை திரு தாசரதி அவர்கள் வழங்கினார்கள். 


அதுவரை ஆரவாரமாக கைதட்டி மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்திருந்த அரங்கமே நிசப்தத்தில் ஆழ்ந்தது. ஆங்கிலக் கலப்பு சிறிதும் இல்லாமல், ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லாமல், தேன்மதுர குரலிலே, தெளிந்த நீரோடை ஓட்டம் போல, தெளிவான கருத்துக்களை மிக இயல்பாக அவர் எடுத்து வைத்த விதம் நம்மை வியப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. இவர் பேச்சைக் கேட்கையில் பாரதியின் *இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே* என்கின்ற வரிகளே நம் அனைவரின் மனதிலும் ஓடியது. தமிழின் பெருமையை, பாரதியின் பெருமையை, நம் சங்கத்தின் அருமையை, பாராட்டி பேசி நமது சங்கத்தின் செயல்பாட்டிற்கு உரமூட்டினார். அந்த 20 நிமிடங்களும் அரங்கம் மெய் மறந்து உட்கார்ந்திருந்தது. வளரும் மேடைப் பேச்சாளர்களுக்கு இவரது உரை ஒரு பாடமாக அமைந்திருந்தது. 


பிறகு அவர் கையால் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் அன்புப் பரிசாக நூல்கள் வழங்கப் பட்டன.


நிறைவு நிகழ்ச்சியாக, நிதிச் செயலர் சாய்ராம் ஐயா அவர்கள் நமது சங்கம் தயாரித்துள்ள *காமு சோமுவின் கலாட்டா காலனி* திரை நாடகத் தொடர் பற்றி விளக்க உரை நிகழ்த்தினார். தலைவர் ஸ்ரீவி அவர்கள் எழுதிய காமு சோமு எனும் நகைச்சுவை நாவலை ஒட்டி இந்த தொடர் எடுக்கப்படுவதை விளக்கினார். இந்த தயாரிப்பில் உதவிய

தயாரிப்புக் குழுவில் உள்ள, மலர்விழி,

தேவி அருண், அமுதவல்லி, சுல்தானா, ஸ்ரீவித்யா, 

லட்சுமி நாராயணன், கார்த்திக் ஆகியோரின் பங்களிப்பை பெருமிதத்துடன் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் இதைப் போன்ற திரை நாடகங்கள் தொடர உறுப்பினர்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் கோரினார். இந்தத் திரைத் தொடரில் விளம்பரம் செய்வதற்கான திட்டத்தை விவரித்தார். ஏற்கனவே இரண்டு விளம்பரங்கள் வந்திருக்கின்ற விஷயத்தையும் பகிர்ந்து கொண்டார். இவர் இதை விளக்கும் போதே, நமது சிறப்பு விருந்தினர் திரு தாசரதி ஐயா அவர்கள் தங்கள் நிறுவனத்தின் சார்பாக ஒரு விளம்பரம் தருவதாக கூறி நம்மை மேலும் உற்சாகப் படுத்தினார்.


அதன் பின்னர் சாய்ராம் அவர்கள் மேற்பார்வையில் நமது தயாரிப்புக் குழு தயாரித்த திரை நாடக தொடரின் டைட்டில் சாங் திரையிடப் பட்டது. மிகச் சிறப்பாக தயாரிக்கப் பட்டிருந்த காணொளி உறுப்பினர்களின் மகிழ்ச்சியை பல மடங்கு அதிகரித்தது. அவர்களின் உற்சாக கைத்தட்டல்களால் அரங்கம் நிறைந்தது.


சிறப்பான இந்த நிகழ்ச்சியின் நிறைவாக செல்வி யாழினி அவர்கள் நல்ல தமிழில் நன்றி உரை.  கூறினார்கள். 


பின்னர் தேசியப்பண் இசைக்கப்பட்டு, நிகழ்ச்சி இனிதே முடிந்தது.


இந்த நிகழ்ச்சி ஓர் இமாலய வெற்றி அடைந்ததற்கு பங்கேற்பார்கள் ஏன் உற்சாக பயிற்சி மேற்கொண்ட விதமும், பொறுப்பாளர்கள் மிகுந்த பொறுப்புடன் செயல்பட்டு வழி நடத்திய விதமும் பாராட்டுக்குரியன. சிறார்களுக்கு பொறுப்பாளர்கள் கொடுத்த பயிற்சியினை ஒட்டி தங்கள் இல்லங்களில் பயிற்சி கொடுக்க உதவிய அவர்தான் குடும்பத்தாரும், கருத்தாலும் கரத்தாலும் உழைக்கின்ற நமது தமிழ் சங்க நிர்வாகிகளுக்கும் தன்னார்வலர்களுக்கும்,  அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஆதரவளித்து ஊக்கம் தரும் உறுப்பினர்களுக்கும் நமது இதயம் கனிந்த நன்றிகள். 


இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு அடித்தளமிட்ட தொகுப்பாளினிகள் மலர்விழி மற்றும் பத்மாவதி இருவருக்கும் உளம் நிறை நன்றிகள். மிகச் சிறப்பாக இவர்கள் இருவரும் தொகுத்து வழங்கியது நம் அனைவரின் பாராட்டிற்கு உரியது. இருவருக்கும் மீண்டும் நமது நன்றிகள்🙏


இந்த நிகழ்ச்சியின் தரத்தை பார்த்து மகிழ்ந்த உறுப்பினர்கள் பலர் உடனடியாக நன்கொடை வழங்கி இருக்கிறார்கள். அவர்கள்:

ஸ்ரீகுமார், காமாட்சி, ஐயாசாமி - லதா தம்பதியினர், சதீஷ் - பத்மாவதி தம்பதியினர் திரு என்கின்ற திருமலை குமார் ஆகியோருக்கும் நமது நன்றிகள். 


ஒலி ஒளி அமைப்பிற்கு உதவிய சசிக்குமார் மற்றும் விஜய் கணேஷ் ஆகியோர்களுக்கும் நமது மனமார்ந்த நன்றிகள். 


நம் தமிழ்ப் பயணம் இனிதே தொடரட்டும் உங்கள் அனைவரின் ஆதரவோடும் உதவியோடும்.


நன்றி 


*ஶ்ரீவி*

*தலைவர்*

Saturday, July 25, 2026

சிலம்பொடு ஒரு பயணம் {31}* *இந்திர விழவு ஊர் எடுத்த காதை* *ஐவகை மன்றத்தில் அரும் பலி*

 ••••••••••••••••••••••••••••••••

*{31} சிலம்பொடு ஒரு பயணம்*


*இந்திர விழவு ஊர் எடுத்த காதை*


*ஐவகை மன்றத்தில் அரும் பலி*

••••••••••••••••••••••••••••••••


நகரங்களின் பொலிவையும் மக்களின் வளமையையும் சிறப்புற குறிப்பிட்ட அடிகள் ஐவகை மன்றத்தை அழகாக குறிப்பிடுகிறார். 


*பல் பொதிக் கடைமுக வாயிலும்,   கருந் தாழ்க் காவலும், உடையோர் காவலும் ஒரீஇய ஆகி,*


புதிதாக ஊருக்குள் வருபவர் தன் பெயரை ஒவ்வொரு எழுத்தாகப் பதிவு செய்யும் கண்ணெழுத்துப் பதிவுகள் எண்ணிக்கையில் பலவாக இருக்கும் பண்டப் பொதிகள் நிறைந்திருக்கும் கடைமுக வாயில்,


தாழிட்டு அரக்கு முத்திரை இடப்பட்ட கருந்தாழ் வாயில் 

இரண்டும் இருந்ததாம்.


*கட்போர் உளர் எனின், கடுப்பத் தலை ஏற்றி,கொட்பின் அல்லது கொடுத்தலீயாது,உள்ளுநர்ப் பனிக்கும் வெள் இடை மன்றமும்*


இங்கெல்லாம் காவல் காப்போரின் காவலை மீறி அந்தப் பண்டப் பொதிகளை திருடுபவர் உள்ளார் எனின், 


அவர்களின் தலையில் கடுமையான சுமையினை ஏற்றிச் சுற்றி அலைய விட்டு சுற்றி வரச் செய்வராம்.  

வேறேதும் தண்டனைகள் கிடையாதாம். ஆனால் அந்த சுமை சுமந்த கயவர் கூட்டம் கழுத்தொடிவதால் அச்சமுற்று களவாடுதலை கைவிடுவராம். களவாடிய பொருளை அவர்கள் எடுத்துச் செல்ல விடாத, திருட நினைப்போரை நடுங்க வைக்கும் *வெள்ளிடை மன்றம்* அங்கே இருந்ததாம்.


திரு மோகன் ஐயா தொடர்கிறார்:


ஐவகை மன்றங்களும் அரும்பலியும்.

இந்திர விழவு ஊர் எடுத்த காதையில் நம் பயணம் தொடர்கிறது.

ஐவகை மன்றங்கள் பற்றி காண்போம்.


மன்றங்கள் என்றால் பொது மக்கள்ஏதோ ஒரு நோக்கத்துக்காக, கூடும் பொது  இடம் எனக்கொள்ளலாம்.


வெள்ளிடை மன்றம் பற்றி அழகாக விவரித்தீர்.

என்பார்வையில் மற்ற மன்றங்கள்.


அடுத்தது இலஞ்சி மன்றம்:

இலஞ்சி என்றால் தடாகம் அல்லது குளம் . இங்குள்ள குளத்தில்,கூன், குருடு, ஊமை, செவிடு, அழுகும் குட்டம் முதலான உடல் குறைபாடு உள்ளவர்கள் , நீராடி 

"பழுது இல் காட்சி நல் நிறம் பெற்று,"- நல்ல உடல்நலம்பெற்று  வணங்கிச்செல்வர்.பிரான்சில் உள்ள லூர்து நீரூற்று, திருநள்ளாறில உள்ள நள தீர்த்தம் போல அக்காலத்தில்,

உடல் ஊனமுற்ற மக்கள் நம்பிக்கையுடன் நீராடிய தடாகம்!


அடுத்தது நெடுங்கல்மன்றம்:

வஞ்சனையால் மருந்தூட்டப்பட்டுப் பித்தேறியவரும்,விடப்பாம்பு கடித்தோரும்,பேயினால்  துன்புற்றோரும் ஒரு முறை சுற்றி வந்தாலே, அத்துணைத்துயர்களையும் நீக்கும் ஒளி பொருந்திய *"நெடுங்கல்" மன்றமாம்* இது ஒளிக் கதிர் சிகிச்சை  போல எனக்கொள்ளலாம்.

 பிறகு நம்பார்வைக்கு வருவது பூத சதுக்கமும் பாவை மன்றமும்.

*பூத சதுக்கம்:*

சதுக்கம்என்பது பொதுவாக நான்கு வீதிகள் கூடுமிடம். ஊர்

நடுவே அமைந்த  பொதுத் திடல்

எனக்கொள்ளலாம்.

இங்கு சதுக்க பூதம் இருப்பதால் பூத சதுக்க மன்றமாயிற்று . இது கொடியோரைத் தண்டிக்கும் மன்றம். எப்படிப்பட்ட கொடியோர்?இக்காலத்தில் சர்வ சாதாரணமாக சமூகத்தில்  உலா வரும் இவர்கள் அக்காலத்தில் இனம்கண்டறியப்பட்டு , பூத சதுக்கத்தில் தண்டிக்கப்பட்டவர்கள். 

யார் யார் என்று பார்ப்போம்.

*"தவம் மறைந்து   ஒழுகும் தன்மை இலாளர்"* -தவ வேடம் புனைந்து தீய செயல்கள் புரியும் 'மான் தோல் போர்த்திய குள்ளநரிகள்' !

*"அவம் மறைந்து ஒழுகும் அலவல் பெண்டிர்"* - மறைவாகத் தீய ஒழுக்கத்தில் ஈடுபடும்" அலவல்"( கூடா ஒழுக்கம்) மகளிர்.

*"அறை போகு அமைச்சர்"* - மன்னருக்கு " உள்குத்து " வேலை செய்யும் துரோக மந்திரிகள்!

*"பிறர்மனை நயப்போர்"*- பிறர்மனைவியை விரும்புவோர். இலக்கியங்களிலோ அல்லது சமூக வழக்கங்களிலோ," பஞ்ச மகா பாதகங்கள்( ஐந்து பெரிய குற்றங்கள்) பற்றிக் கருத்து வேறுபட்டாலும் , பிறன்மனை நயப்பது  என்பது மகாபாதகங்களில் ஒன்று என்பதில் கருத்து வேறுபாடு கிடையாது. "*பிறனில் விழையாமை* பற்றி வள்ளுவர் ஓர் அதிகாரமே இயற்றி உள்ளார்.

அது பேராண்மை எனப் போற்றப்படுகிறது.

"பொய்க்கரியாளர்"- பொய்சாட்சிகூறுவோர்.இதையே தொழிலாக, கொண்டவர்கள் இருக்கிறார்கள் இன்றும் , என்று படித்திருக்கிறோம்.

" புறங்கூற்றாளர்"- " "உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்" என்றார் வள்ளலார், அவர்தம் உறவு கலவாமை வேண்டும் என்ற அறிவுறுத்தலோடு.

இப்பாதகர்கள்யாவரையும் தன்கைப்பாசம் வசப்படுத்துவேன் என்று நான்கு காத தூரம் கேட்கும்படி முழங்கி, அவ்வாறே செய்து அவர்களை அறைந்து கொன்று உண்ணும் சதுக்க பூதம்! உடனடி நீதி; தண்டனை.வாய்தாவுக்கு (விசாரணை தள்ளி வைப்புக்கு) வாய்ப்பே இல்லை!

பாவை மன்றம்:

இந்த மன்றத்தில்  ஒரு பாவைப்பதுமை இருந்தது.

" அரசியல் பிழைத்தோர்" மற்றும் நியாய சபையில் உள்ள நியாயம் வழங்குவோர் ஒரு தலைப்பட்சமாக நடப்பின் ,இந்த பதுமை வாய்பேசாது, கண்ணீர் வடிக்குமாம் -" நவை நீர் உகுத்து......அழுஊம் பாவை!

உள்ளத்தில்துக்கம்பொங்க வாய் ஊமையானதோ?! 

"மெய்வகை உணர்ந்த விழுமியோர்" போற்றும்இந்த ஐந்து மன்றங்களிலும் மக்கள்

வழிபட்டு வந்தனர்.

Monday, July 20, 2026

மீண்டு(ம்) வருக

 மருத்துவமனை *தீவிர சிகிச்சைப் பிரிவில் அம்மா.*

நான் உதவியாக தங்குவதற்கு

கொண்டு வந்திருந்க கட்டைப்

பையில் எழுதியிருந்தது..

*தங்கள் வருகைக்கு நன்றி!மீண்டும் வருக!*


- தியாகராஜன்


===========================


மருத்துவமனையில் 

கொடுக்கும் பையில் 

தங்கள் வருகைக்கு நன்றி!

"மீண்டு" வருக!!

என்று எழுதியிருக்குமோ?


- முகம்மது சுலைமான்


===============

" மீண்டால் வருக "

இப்படியும் இருக்கலாம் 😄


- குத்தனூர் சேஷுதாஸ்






Saturday, July 18, 2026

* சிலம்பொடு ஒரு பயணம் {30}* *இந்திர விழவு ஊர் எடுத்த காதை* *விழாக்கோலம் பூண்ட நகரம்*

 ••••••••••••••••••••••••••••••••

*{30} சிலம்பொடு ஒரு பயணம்*


*இந்திர விழவு ஊர் எடுத்த காதை*


*விழாக்கோலம் பூண்ட நகரம்*

••••••••••••••••••••••••••••••••


மறு ஒரு பக்கம் பட்டினப்பாக்கம் இடத்தின் சிறப்பையும் நாளங்காடி பூதம் பற்றிய விவரத்தையும் அழகுற சொன்ன அடிகள் 


நகர மக்கள் சிறப்புற எடுத்த விழாக்கள் பற்றி விளக்குகிறார் செம்மையாக: 


*மருவூர் மருங்கின் மறம் கொள் வீரரும்,*


*பட்டின மருங்கின் படை கெழு மாக்களும்,*


மருவூர்ப் பகுதியில் வாழும் மறம் கொண்ட வீரர்களும் 


பட்டினப் பகுதியில் வாழும் படைவீரர்களும் 


நான் முந்தி நீ முந்தி என்று போட்டிப் போட்டுக்கொண்டு சென்று நாளங்காடிப் பூதத்துக்குப் பலி கொடுப்பார்கள். 


*பலிக் கொடை புரிந்தோர் வலிக்கு வரம்பு ஆக’*

*கல் உமிழ் கவணினர், கழிப் பிணிக் கறைத் தோல்,*

*பல் வேல் பரப்பினர் மெய் உறத் தீண்டி,*

*ஆர்த்து, களம் கொண்டோர் ஆர் அமர் அழுவத்து*


பலி கொடுத்ததோடு நில்லாது, மும்முரமாக போர் பயிற்சியும் மேற் கொள்வார்கள்.


பலிக்கொடை புரிந்தவர்களின் வலிமைக்கு வரம்பாக வேறு சிலர் கல்லைக் கவணில் வைத்து எறிந்து பயிற்சி பெறுவர்.   


சிலர் தோலாலான கவசம் அணிந்துகொண்டு மற்றவர் மீது வேல் வீசும் போரில் பயிற்சி பெறுவர். 


சிலர் ஒருவரை ஒருவர் கையால் குத்தித் தாக்கிப் பயிற்சி பெறுவர். 


*வெற்றி வேந்தன் கொற்றம் கொள்க’ என,*

*நல் பலி-பீடிகை நலம் கொள வைத்து,* 

*ஆங்கு, உயிர்ப் பலி உண்ணும் உருமுக் குரல் முழக்கத்து மயிர்க் கண் முரசொடு வான் பலி ஊட்டி-*


ஒரு சிலர் தம்மையே பலியிட்டுக் கொள்வார்களாம்


எப்படி என்றால், சிலர் அச்சம் தரும் வகையில் சுட்டெரிக்கும் வகையில் சிவந்த கண்கள் கொண்ட தன் கருந்தலையை பலி பீடத்தில் வைத்து, "வெற்றி வேந்தன் மேலும் பல வெற்றிகளைக் குவிக்க வேண்டும்" என்று சொல்லிக் கொண்டு தன்னைத் தானே பலியிட்டுக் கொள்ளும் முழக்கத்தைச் செய்வர். 


அப்போது அங்கு உள்ள மயிர்த்தோல் போர்த்திய முரசம் முழக்கப்படும். 


இதற்கு *வான்பலி* என்று பெயர்.

     °•°•°•°•°•°

தொடர்வது மோகன் ஐயா:

...........


நாம் காண இருப்பது திருமாவளவனின் (ஆம்!) வெற்றியும், வடபுலத்தார் தந்ததும்.


திருமாவளவனின் வெற்றி:

இவர் கரிகால் பெருவளத்தான்  என்னும் சோழப் பேரரசர்;எல்லா செல்வங்களும்  வளங்களும் நிறைந்த சோழப்பேரரசை, ஆளும் " வளவன்" ( சோழ மன்னர்களின் பாரம்பரியப் பட்டம்).

சுற்றுப்புறங்களில் எதிர்ப்பவர் இல்லாது, "புண்ணிய திசை முகம்" என்று கருதப்படும் வடதிசை  நோக்கி

"வாளும், குடையும், மயிர்க்கண் முரசும்" புடை சூழ படையெடுத்தார்.

எப்படி?

"நண்ணார்ப் பெறுக-இம்

மண்ணக மருங்கின், என் வலி கெழு தோள்"  என

"இந்த மண்ணுலகில் என்னுடைய வலிமை பொருந்திய தோள்கள் போர் செய்வதற்குரிய பகைவர்களைப் பெறுவார்களாக!" என்று முழக்கமிட்டு.


 ஆனால் பகை விலக்கியது இப் பயம் கெழு மலை"- பகைவர்களைத் தடுத்து நிறுத்தும் அச்சம் ஊட்டும் மலையான இமயமலை. இதைத் தாண்டாமல், அதன்மேல் தன் புலிக்கொடியை 

("கொடிவரி")

நாட்டித் திரும்பினான். 

என்ன தகைமை! 

போர்வெறி  கொண்டு அலையாமல் கொள்ளாமல் சென்ற நோக்கை அடைந்து வெற்றியுடன் திரும்பிய சோழவளவன்!


வடபுலத்தார் தந்தவை:

இவரது திக்விஜயத்தால் வடக்கு தேய்ந்தது, தெற்கு வாழ்ந்தது.

வெற்றி வாகை சூடிய சோழ மன்னருக்கு வடக்கு வாழ் வேந்தர்கள் பரிசாக அளித்தவை என்ன என்ன?

நீர் வேலி போல்  சூழ் வச்சிர நாட்டு மன்னன் (இன்றைய குஜராத் என்பர்)  முத்துப் பந்தரும், வாட்போரில் வல்ல "வாள்வாய் வேந்தனான   மகத ( இன்றைய கிழக்கு கங்கை சமவெளி- பீஹார்) அரசன் 

பட்டி மண்டபமும், அவந்தி( இன்றைய மத்திய பிரதேசத்தின் மால்வா பகுதி) மன்னன் உயர்ந்த வேலைப்பாடுகள் நிறைந்த தோரண வாயிலும் அளித்தனர்.

பட்டி மன்றம் வேறு,பட்டி மண்டபம் வேறா?

பட்டி மண்டபம் என்பது ஆன்றோரும், சான்றோரும் கூடி, பல விடயங்களைப் பற்றி  ஆரோக்யமான விவாதங்கள் செய்யவோ அல்லது கருத்துகளைப் பறிமாறிக்கொள்ளவோ,கூடும் இடம்.காலப்போக்கில் பட்டி மண்டபமும் பட்டி மன்றமாக மாறி  இன்று விழா நாட்களில காணொளி முன்பு நம்மை உட்கார வைக்கும் அளவுக்கு வளர்ச்சி! (எப்போதும் வெற்றி பெறுவது பட்டிமன்ற நடுவரே, அவர்  அவ்வப்போது உதிர்க்கும் நகைச்சுவை முத்துக்களால்!)

இந்த மூன்று பரிசுகளும் சேர்ந்து உருவாக்கப்பட்ட சித்திர மண்டபம். 

முத்துப்பந்தர், பட்டி மண்டபம், தோரண வாயில் இவை யாவும், தேவ சிற்பி மயன் செய்தவை  போல மிளிர்கின்றனவாம். ஆச்சரியமில்லை. ஏனெனில் இவற்றை உருவாக்கிய "நுண்வினைக் கம்மியரின்"

 முன்னோர்கள் மயனோடு இணைந்து வேலை செய்து தொழில் கற்றவர்கள்.-

தொல்லோர் உதவிக்கு மயன் விதித்துக் கொடுத்த மரபின்” என்கிறார் அடிகள்.

அவர்களின்  சந்ததியரின் கை வேலைப்பாடுக்ள சிறந்து விளங்குவதில் வியப்பென்ன.

காதையில் மேலும் பயணிப்போம்.



*பின்குறிப்பு:*

தேவ சிற்பி மயனுக்கும் தென் அமெரிக்க நாடுகளில் இருந்த மாயன்( Mayan) நாகரிகத்துக்கும் தொடர்பு இருந்ததாக கருத்துகள்/ஆராய்ச்சிகள் உள்ளன. அவற்றில் இப்போது உள்நுழைய

குறியிலக்கில்லை.

Friday, July 17, 2026

*தந்தை தன் மகளைப் பற்றி எழுதிய ஒரு கவிதை*

 *தந்தை தன் மகளைப் பற்றி எழுதிய ஒரு கவிதை*


என்னை ஈன்ற 

முதல் பெண்ணும் 

என்னை அடைந்த 

முதல் பெண்ணும் 

தராத அன்பையும் 

எனக்கு தந்த

நான் ஈன்ற 

முதல் பெண்ணே 

உன் கன்னம் கிள்ளி 

உன் செல்லம் கொஞ்சிய 

தருணம் என்னுள் 

ஒரு தாயையும் 

இளைய வயதில் 

ஒரு தாயின் அன்பையும் 

தந்த நான் வித்திட்ட 

விதையே 

என்ன தவம் செய்தேன் 

உன் அன்பில் நனைய 

என் அழகிய 

அன்பு மகளே !!!


- பிரபு


காகத்தின் புலம்பல்

 •∆•∆•∆•∆•∆•∆•∆•∆•∆•∆•∆•∆

     காகத்தின் புலம்பல்

•∆•∆•∆•∆•∆•∆•∆•∆•∆•∆•∆•∆


உணவு வேண்டி நாங்கள் கரை(கூவு)கையில், 


வீட்டில் 

திதி நாள் என்றால், 

நாங்களே மூதாதையராம். 

இலையில் பரிமாறிய உணவும் 

வகை வகையாய் கிடைக்குமாம். 

எமைப் பார்த்து கும்பிடும் 

போடுவாராம்.


அதுவே 

வேறு நாட்கள் எனில், 

விருந்தினர் வருவதை 

முன்கூட்டியே சொல்லும் 

நிமித்தக்காரன் 

ஆகிடுவோமாம். 

ஓர் உருண்டை 

சோறும் கிடைக்காதாம்.


'சனியனே.. தூரப்போ...'

என வசவு மட்டும் தான் 

மிஞ்சுமாம். 

இதனால் எங்கள்

பசி தீருமோ கூறீர்! 


மனிதர்களே! 

திதி நாள் அன்று மட்டும்தான் 

உங்கள் இல்லங்களில் 

மூதாதையருக்கு மரியாதையோ..! 


பிற நாட்களில் 

வேண்டாதவர்கள் ஆகிடுவரோ..? 


பதில் உண்டோ 

உம்மிடம்! 

இருந்தால் பகிர்க எம்மிடம்!!


*உங்கள்_தோழன்_ஸ்ரீவி*

Saturday, July 11, 2026

எங்களூர் டூரிங் டாக்கீஸ்

 எங்களூர் டூரிங் டாக்கீஸ்


ஊரின் கடைக் கோடியில் 

அநாதையாய் நின்றிருந்தது 

"ஸ்ரீனிவாசா டாக்கீஸ்".


கூரை வேய்ந்த 

"பெரிய்ய்ய" கொட்டகை.

சுற்றிலும் மூங்கில் 

பட்டைகளால் 

அமைக்கப்பட்ட வேலி.


எங்களால் செல்லமாக 

அழைக்கப்பட்ட 

"டூரிங் டாக்கீஸ்".


டூரிங் டாக்கீஸ் என்று 

அழைக்கப் பட்டாலும் 

அந்தக் கால சர்க்கஸ்

போல ஊர் விட்டு ஊர் 

செல்வதில்லை.

ஒரே இடத்தில் 

நங்கூரம் போட்டிருக்கும்.

இரண்டு வருடங்களுக்கு 

ஒரு முறை புதிப்பித்தலின் 

போது மட்டும் கொட்டகை

தென்வடல், கிழமேலாக 

மாறும்.அப்போது மட்டும் 

இரண்டு மாதம் விடுமுறை.

பேரும் "ஸ்ரீனிவாசா"விலிருந்து 

"நாராயணா"வாக மாறும்.


எளியவர்களின் 

பொழுது போக்கு மன்றம்.


உள்ளே மூன்றே மூன்று 

வகுப்புகள்தான்.


தரை டிக்கெட் விலை 

இருபத்து ஐந்து காசுகள்.

இரண்டாம் வகுப்பு பெஞ்ச்.

விலை ஐம்பது காசுகள்.

முதல் வகுப்பு பேக்பெஞ்ச்.

விலை எழுபத்தைந்து காசுகள்.


தினமும் இரண்டே இரண்டு 

காட்சிகள்தான்.

மாலைக் காட்சி 6.30 மணிக்கும்,

இரவுக் காட்சி 10.30 மணிக்கும்.


மாலை 6.15 மணிக்கு 

சீர்காழி கோவிந்தராஜன் 

தனது வெங்கலக் குரலில்

"வினாயகனே வினை 

தீர்த்தவனே" என கூம்பு 

ஒலி பெருக்கியில் பாடி

ஊரையே அழைப்பார்.


மக்களும் சாரை சாரையாய் 

நடையிலும், மிதி வண்டியிலும் 

குதிரை வண்டியிலும் 

வரத் துவங்குவர்.


டவுனில் வந்து மூன்று மாதங்கள் 

ஓடிய "புதுப் படங்கள்" எல்லாம் 

நகரின் மத்தியில் உள்ள 

இந்திரா திரையரங்கில் 

போடப்பட,  

"மதுரைவீரன், அரசிளங்குமரி, ஆலயமணி,பார்த்தால் பசி தீரும்,

வீரத்திருமகன் போன்ற 

கருப்பு, வெள்ளைத் திரைப்படங்களெல்லாம் 

ஸ்ரீனிவாசாவில் 

திரையிடப்படும்.


சின்னக் குடில் போல் 

டிக்கெட் கௌண்டர்.

சிறிய மேசையில் 

மஞ்சள், நீலம், சிவப்பு

வண்ணங்களில் 

அலுமினியப் பெட்டியில் 

அடுக்கப் பட்ட நுழைவுச் 

சீட்டுகள். அதை நாவில் 

எச்சில் தொட்டுக் கிழித்துத் 

தரும் டிக்கெட் கொடுப்பவர்.


டிக்கெட் கௌண்டர் 

அருகிலேயே உள் செல்லும் 

வழி. பாதி டிக்கெட்டைக் 

கிழித்துக் கொண்டு உள்ளே 

அனுப்புவார்.


அப்பா எங்களை எப்போதும் 

பெஞ்ச் டிக்கெட்டில்தான் 

அழைத்துச் செல்வார் 

சிக்கனம் கருதி.


பெரிய வெள்ளை மல் துணி திரையாய் அகன்றிருக்கும்.

திரையை ஒட்டி மண் நிரப்பப் 

பட்ட "தீ" என எழுதப்பட்ட, 

பெரிய பெரிய சிவப்பு 

வாளிகள் பயமுறுத்தும்.


விளக்கை அணைத்து 

படம் போடப் படுகையில் 

விசில் சத்தம் விண்ணைப் 

பிளக்கும்.


ரீல் மாற்றுவதற்காக 

மொத்தம் மூன்று 

இடைவேளைகள்.


இடைவேளைகளில் 

மூங்கில் தட்டில்  வரும்

கடலை மிட்டாய், நீள்கூம்பாய் 

மடிக்கப்பட்ட காகிதத்தில் 

காராக் கடலை, ஐந்து பைசா 

விலையில். 

கடலைப் பருப்பை

(நிலக்கடலை இல்லை), எண்ணையில் வறுத்து,  மிளகாய்த்தூளும், உப்பும் 

கலந்து, அதன் சுவையே தனி. 


குண்டு பாட்டிலில் 

அடைக்கப்பட்ட, ஆரஞ்சு, 

கோலா,சோடா, பன்னீர் 

சோடா பானங்கள்.

எங்கள் பகுதியில்

"மாப்பிள்ளை விநாயகர்" 

பானங்கள் சிறப்பு.

மூடி போட்ட

"வின்சென்ட்" கலர் 

விலை சற்று அதிகம்.


படம் முடிந்தவுடன் அரைத் தூக்கத்தில் இருக்கும் எங்களை 

குதிரை வண்டியில் ஏற்றி வீடு 

கொண்டு சேர்ப்பார் எங்கள் 

அப்பா.


விடப்பட்ட விடயங்கள்

நிறைய.

நீட்சி கருதி இத்துடன் 

முடிக்கிறேன்.


என் வயதொத்தோர் 

அவரவர் "டூரிங் டாக்கீஸ்" அனுபவத்தைப் பதிவிடலாம்.


பல இடங்களில் ஆங்கிலச் 

சொற்களின் பிரயோகம், 

மண்வாசனை கருதி.

மன்னிக்கவும்.


மீண்டும் சொல்கிறேன் 

மூத்த குழந்தைகளே

அவ்வப்போது 

பால்யத்திற்குத் 

திரும்புங்கள்.

இளமைப் பூங்காற்றை

சுவாசியுங்கள்.


- முகம்மது சுலைமான்

* சிலம்பொடு ஒரு பயணம் {29}* *இந்திர விழவு ஊர் எடுத்த காதை* *பெருமைமிகு பட்டினப்பாக்கம்*

 ••••••••••••••••••••••••••••••••

*{29} சிலம்பொடு ஒரு பயணம்*


*இந்திர விழவு ஊர் எடுத்த காதை*


*பெருமைமிகு பட்டினப்பாக்கம்*

••••••••••••••••••••••••••••••••


மருவூர்ப் பாக்கத்தின் மதிப்பினையும் 

பரபரப்பான அங்காடித் தெருவின் அழகினையும் 

அருமையாக வருணித்த அடிகள் 


இன்னொரு நகரான பட்டினப் பாக்கத்தின்

பாங்கினையும், பலதரப்பட்ட மக்கள் வசித்த 

பல்வேறு வீதிகளையும் 

படம் பிடித்துக் காட்டுகிறார். 


சிலவற்றைப் பார்ப்போம்:


*கோவியன் வீதியும், கொடித்தேர் வீதியும்,       பீடிகைத் தெருவும்*


அகன்ற அரச வீதியும், கொடிகள் பறக்கின்ற தேரோடும் வீதியும், 

பெருந்தன வணிகர் வசித்த வீதியும்,


*மறையோர் இருக்கையும்,*

வேதம் போதும் அந்தணர்கள் வாழ்ந்த இடங்களும்,


*அணிவளை போழுநர் அகன்பெரு வீதியும்,*


சங்கு அறுத்து அழகிய வளையல் செய்யும் வளைஞர்கள் வசிக்கும் அகன்ற பெரிய வீதியும்


என வீதிகளின் பெருமையைப் பேசியவர், அவ் வீதிகளில் வசித்தோரின் பட்டியலை அடுக்குகிறார் அழகாக: 


*உழவரொடு விளங்கிய கொள்கை ஆயுள் வேதரும் காலக் கணிதரும்*


உழவர் பெருமக்கள், ஆயுளைக் காக்கும் மருத்துவர்கள், காலத்தை கணிக்கும் கணியர்கள் (நிமித்திகர்கள்)


*சூதர் மாகதர் வேதா ளிகரொடு*

*நாழிகைக் கணக்கர் நலம்பெறு கண்ணுளர்*

*காவல் கணிகையர் ஆடல் கூத்தியர்  பூவிலை மடந்தையர்* 

*ஏவல் சிலதியர் பயில்தொழில் குயிலுவர்* *பன்முறைக்கருவியர்நகைவே ழம்பரொடு*


நின்றுகொண்டு அரசனை வாழ்த்தும் சூதர்,

அமர்ந்து கொண்டு அரசனை வாழ்த்தும் மாகதர்,

செல்லும்போது அரசனை வாழ்த்தும் வேதாளிகர்,

நல்ல நேரம் பார்த்துச் சொல்லும் நாழிகைக் கணக்கர்,

ஆடி மகிழ்விக்கும் மகளிர், 

பூ விற்கும் பெண்கள், 

குற்றேவல் செய்யும் மகளிர்,

அரச குடும்பம் பயிலும் தொழில்களைக் கற்பிக்கும் கலைஞர்கள்,

ஆயுதமேந்தி நின்று இவர்களைப் பாதுகாப்போர், 

சிரிப்பு மூட்டி அரசனை மகிழ்விக்கும் நகை-வேழம்பர். 


அப்பப்பா... மக்களில் எத்தனை விதம். அதை பட்டியலிடுவதில் எத்தனை நலம். 

அதனைப் படிப்பதில் எத்தனை சுகம். 


இவ்வாறு பலதரப்பட்ட மக்கள் வாழ்ந்த பற்பல அகன்ற வீதிகளை கொண்ட பட்டினப்பாக்கம் எப்படிப்பட்டதாம்: 


*பீடுகெழு சிறப்பின் பெரியோர் மல்கிய*

*பாடல்சால் சிறப்பின் பட்டினப் பாக்கமும்* 


ஆன்றோர்களும் சான்றோர்களும் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியாய் வாழ்கின்ற பெருமை உடையதாம் பட்டினப்பாக்கம். 


தொடர்வது மழலைக் கவி:


 "நாளங்காடி பூத வழிபாடு" பற்றி பார்த்திட முற்படுவோம்.


அங்காடி என்பது பல கடைகள் நிறைந்த இடம் . கூவி விற்போரும் அங்காடிகளில் இருப்பர். நாளங்காடி- நாள் அங்காடி  என்பது பெயருக்குத்தக்கபடி , பகலில் செயல்படும் வணிக வளாகம். அல்லங்காடி என்பது இரவில் செயல்படும் கடைத்தெருவு.


இங்கு நாம் காணும் அங்காடியான நாளங்காடி, பட்டினப்பாக்கத்துக்கும், மருவூர்பாக்கத்துக்கும் இடைப்பட்ட, நெருங்கிய சோலை மரங்களை தூண்களாக, கொண்டு அமைக்கப்பட்ட கடைகளைக்கொண்டது.நிழல் தரும்மரங்கள் வெம்மை தடுக்க, செயற்கையாக குளிரூட்டப்படாத 

கடைகள் !

இங்கு, " கொடுப்போர் ஓதையும்( ஓதை-ஓசை அல லது ஆரவாரம்),கொள்வோர் ஓதையும் நடுக்கு இன்றி" வாணிபம் செய்ய முடிந்தது- அதாவது வாங்குவோரும் விற்போரும் ஆரவாரத்தோடு  அச்சமின்றி . 

ஆம் அச்சமின்றி!சோழப்பேரரசில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையோ, கழுத்து நகையைப்பறிப்பது போன்ற குற்றங்களோ  அடியோடு இல்லை என அடிகள் சுட்டுகிறார்.


இன்றைய நாள் சித்திரை   மாதத்தில் , சித்திரை நட்சத்திரத்தில் வரும் சித்திரா பௌர்ணமி.ஒரு பூத வழிபாடு நடை பெறுகிறது . 

அது என்னய்யா பூதம்? கிணறு வெட்டக் கிளம்பியதா என்ன ?! 

இல்லை .

சோழ மன்னன்  முசுகுந்தன் தேவர்களுக்குப் போரில் உதவியதால், "வெற்றி வேல் "மன்னன் " ஆனவனுக்குத், 

துயர் நீங்க இந்திரனால் அனுப்பப்பட்ட காவல் பூதம். ( முசுகுந்த சக்கர வர்த்தி  பற்றிமுழு வரலாறை இங்கு பதிவிட முடியாது)

இந்த பூதம் , விளக்கைத்தேய்த்து வந்தது அல்ல;தேவலோகத்திலிருந்து வந்தது!


இத்தெய்வத்துக்குப்படையல்-  புழுங்கலரிச்சோறு, எள்ளுருண்டை, நிணச்சோறு, பொங்கல்  என்பதோடு மலர்கள், நறுமணப் புகைகளும் பூசையில் சேர்க்கப்பட்டன.

மறக்குடி மகளிர் - " மூதிர் பெண்டிர்" , "துணங்கைக்கூத்தும்   குரவைக்கூத்தும் "ஆடி பெரு மன்னன் ஆளும் இரு நிலத்திலும்" பசியும், பிணியும், பகையும் நீங்கி வசி ( மழை) யும், வளனும்"(நற்செல்வங்கள்) பெற வேண்டும் என 

வாழ்த்தி ஆரவாரத்துடன் விழா கொண்டாடினர்.

இரண்டு பாக்கங்கள்  ஊடே,அமைதி சூழ் சோலைகள் நடுவே ஆரவார கடைவீதி,வழிபாட்டுக்குரிய பெரிய பூத  மூர்த்தி, வண்ணக்கோலங்கள் அள்ளித் தெளித்தது போல மங்கையரின் கூத்துகள் என 

 ஒரு சிசில் பி டெமிலி  ( ஆங்கிலப்பட இயக்குனர்)போல 

பிரம்மாண்டக் காட்சிகளைக் கண்முன்  நிறுத்துகிறார்  நம் அடிகள்.


பின்குறிப்பு:

துணங்கைக்கூத்து:

துணங்கை என்பது பண்டைத் தமிழ்நாட்டில் மகளிர் மற்றும் வீரர்கள் ஆடிய ஒரு வகையான கூத்து அல்லது நடனமாகும். கைகளை முழங்கையில் மடக்கி, அவற்றால் தங்கள் பக்கவாட்டில் (விலாப்பகுதியில்) தட்டிக்கொண்டு ஆடும் ஆட்டமாகும்.

குரவைக்கூத்து:

பழந்தமிழரின் மரபில் குரவை என்பது பெண்கள் கை கோர்த்து வட்டமாக நின்று பாடிக்கொண்டு ஆடும் ஒரு வகையான கூத்து (நடனம்) ஆகும். இதுவே பேச்சு வழக்கில் குலவை என மருவி, கோவில் திருவிழாக்கள் மற்றும் மங்கல நிகழ்வுகளின் போது பெண்களால் நாவினை அசைத்து எழுப்பப்படும் மங்கல ஒலியாகவும் இன்றும் தொடர்கிறது.

Thursday, July 9, 2026

நம் மனித குலம்

 நம் மனித குலம் 


பாரீர் ! இப் புவிதான் எத்துணை அழகு!

   படுது மனிதன் கையில் படாதபாடு 


ஊரின் கழிவெல்லாம் நதியில் கலக்குது

   உள்ள கனிமங்கள் அள்ளலே இலக்கு


கார் முகிலாய் தொழிற்சாலை புகை விடுது

   காற்றதில் விரவுது *ககனமும் கெடுது


மாரி நீர் போகும் வழி எல்லாம் தடைகளாம் 

   மனிதன் சொல்வது " மழையால் இடையூறாம் "


நீர் நிலைகள் அவை நெகிழியால் நிரம்புது

   நிலத்தில் நஞ்சு சேர்த்து "விவசாயப் புரட்சி" அது 


வேருடன் தருக்கள் பல பிடுங்கப் படுது

   விளைநிலம் வீட்டு மனைகள் ஆகுது


ஏருழும் காளைகள் இடத்தில் இன்று எந்திரம்

   எவ்வாறு வயல் செழிக்க கிடைக்கும் சாணம் 


போர் எனும் போர்வையில் தம்மையே கொல்லும்

   புத்திசாலி இப் புவியில் தாமெனத் துள்ளும் .


    இதுவே நம் " மனித குலம்"


__. குத்தனூர் சேஷுதாஸ் 9/7/2026

*வெயிலே....*

 *வெயிலே....*


மனிதரில் பெரும்பான்மை 

அரைவேக்காடு என்றெண்ணி 

முழுதாய் வேகவைக்கும் 

*முற்பகல் சமையல்காரரா நீ!*


------------------

*வெயில்…*

போட்ட சட்டையை இரண்டாம்  நாள் போடுவோம் என்ற எண்ணத்தில் அன்றாடம் நனைத்துப் போடும் 

*சலவைகைகாரனா நீ!*


- தியாகராஜன்


===================================

'பரிதி" எனப்

பாங்கான தமிழ்ப்

பெயர் உனக்கு!


இள வயதிலே

நீயும் எங்கள் 

விளையாட்டுத்

தோழன்தான்!


வெளிர் தோலுடன் 

வரும் தோழர்களை 

மாநிறம் ஆக்கி 

அனுப்புவாய்!


நிறம் குறைவான 

என்னை விட்டு 

விடுவாயா?


அன்னைக்கே 

அடையாளம் 

தெரியாமல் 

அனுப்புவாய்!


முதுமை என்னை 

மாற்றி விட்டதா?

இல்லை நீதான் 

மாறி விட்டாயா?


பகலில் 

அனலாய்க்

கொதிக்கிறாய்.

இரவிலோ 

உன்னாலே

உறக்கம் வரா 

இரவுகள்!


மரங்களை வெட்டி 

மனிதர் நாங்கள் 

இயற்கைக்குச் 

செய்த மாறை 

நன்கே உணரச் 

செய்கிறாய்!


ஊழிக் காலத்தே

நீ பனை மர 

உயரம் வருவாயாம்!

அக்காலம்தான் 

நெருங்கி விட்டதோ!


மாந்தரின் பிழை 

பொறுத்து 

உன் உக்கிரம் 

தணிப்பாயோ!

எங்களைக்

காப்பாயோ !!!


- முகம்மது சுலைமான்

==================================


Saturday, July 4, 2026

சிலம்பொடு ஒரு பயணம் (28) *இந்திர விழவு ஊர் எடுத்த காதை* *காலை இளம் கதிரும் - மருவூர்ப் பா*

 ••••••••••••••••••••••••••••••••

*{28} சிலம்பொடு ஒரு பயணம்*


*இந்திர விழவு ஊர் எடுத்த காதை*


*காலை இளம் கதிரும் - மருவூர்ப் பா*

••••••••••••••••••••••••••••••••


இரவுப் பொழுதும் முடிந்தது 

விடியல் பொழுது புலர்ந்தது

செங்கதிரும் எழுந்தது 

இவ்வழகை அடிகள் வரிகளில் பார்ப்போம்: 


*ஆரப் பேரியாற்று மாரிக் கூந்தல்*

மலைமுகடை தழுவி ஓடும் கரிய மேகங்களே கருங்கூந்தல் ஆக


(எங்கே நமக்கு, *அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்..  சரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்க்கிறாள்* எனும் கவியரசின் வரிகள் நினைவுக்கு வருகிறது அல்லவா) 


*மண்ணக மடந்தை புதைஇருள் படாஅம் போக நீக்கி*


பூமகள் மேல் போர்த்தியிருந்த இருள் எனும் கரிய போர்வையை விலக்கிட


*உலகு விளங்கு அவிர்ஒளி மலர்கதிர் பரப்பி,*


மலையின் உச்சியிலே விரிகதிர் விரித்து செங்கதிரவன் கீழ் திசையில் உலகம் விழித்திட உதித்தான்.


காலையில் கதிரவன் எழும் நிகழ்வை கூறி பின் மருவூரப் பாக்கம் எனும் நகரை மிக அருமையாக வர்ணிக்கிறான்:


*வேயா மாடமும், வியன்கல இருக்கையும், மான்கண் காதலர் மாளிகை இடங்களும்,*


கூரைகள் மேயாத மாடங்களும், விலை உயர்ந்த ஆபரணங்கள் இருக்கும் அறையும்,

சிறிய மான் கண்களைப் போன்ற சாளரங்கள் கொண்ட விதானமும் கொண்ட வீடுகள் நிறைந்திருந்தன. 


*கலம்தரு திருவின் புலம்பெயர் மாக்கள் கலந்துஇருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்,*


திரை கடலோடி வணிகம் செய்து பெரும் செல்வம் திரட்டிய மீகாமர்கள் வசிக்கும் கடற்கரை குடியிருப்புகள் அதிகம் இருந்தன.


*வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்          பூவும் புகையும் மேவிய விரையும் பகர்வனர் திரிதரு நகர வீதியும்,*


வண்ணக் குழம்பு சுண்ணப் பொடி, வாசக் குளிர் சந்தனம், பல நிற பூக்கள், பூமாலைகள்  அகில் போன்ற நறுமண பொருட்களை விற்பவர்கள் சுற்றிக் கொண்டிருக்கிற நகர வீதியும்


*மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும் அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா*


விலைமதிக்க முடியாத முத்துக்களும், வைர வைடூரியங்களும், பொன்னும் இன்னும் பல விலை உயர்ந்த பொருட்களும் கொட்டிக் கிடக்கும் வணிக வீதிகளும் இருந்தன. 


ஊரின் சிறப்பைத் தொடர இதோ வருகிறார் மழலைக் கவி:


ஐயா,

இந்திர விழவைப் புகார் நகரம் கொண்டாடும் விதத்தை நாம் இருவர் பார்வையில் காண ஆரம்பிக்கிறோம்.


மழை வளம் , வேளாண் நலம்  போன்றவை வேண்டி இந்திரனைச் சிறப்பித்து சித்திரை மாத பௌர்ணமியில் தொடங்கி 28 நாட்கள் தொடரும் விழா இது.

தூங்கெயிலெறிந்த தொடித்தோள் செம்பியன்' என்ற சோழ மன்னன் ஆரம்பித்த விழா இது என்று அறியப்படுகிறது.

புகார் நகரம் இரு பிரிவுகளாக இருந்தது. மருவூர்பாக்கம்  நகரின் உட்பகுதியாக, வாணிபம், தொழில் செய்வோரைக்கொண்டது. பட்டினப்பாக்கம் கடலோரம் மேட்டுக்குடியினர் வசிக்கும் இடம், நம்சென்னையின் கிழக்கு கடற்கரை சாலை போல!

நாம் மருவூர்பாக்க வீதிகளில் சுற்றிப்பார்க்க நுழைந்து விட்டோம்.


" பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் கட்டும் நுண்வினைக்காருகர்"-நுட்பமாக ஆடைகளை உருவாக்கும் தையல் கலைஞர்கள்,

கூலம் (தானியங்கள்) குவித்த 

கூலவீதி( தானியங்கள விற்கும் அங்காடிகள்நிறைந்த தெரு)

பிட்டு விற்கும் காழியர் ,

அப்பம் விற்கும் கூவியர் ,

கள் விற்கும் பெண்டிர் -யாட்டியர்

மீன் விற்கும் பரதவர் 

உப்பு விற்பவர் -பகருனர்- (உமணர் )

வெற்றிலை விற்கும் பாசவர் , 

வாசவர்-

(சூடம், சாம்பிராணி போன்ற ) வாசனைப்பொருள்களை விற்பவர் ,

பலவகையான புலால் கறிகளை விற்கும் "பல்நிணவிலைஞர்,

எண்ணெய் வகைகள் விற்கும் ஓசுநர் ,

ஆகியோரின் இருப்பிடங்கள் இருந்தன. 

வெண்கலப் பொருள்கள் செய்வோர் - கஞ்சகாரர்(!),

செம்புப் பொருள்கள் செய்வோர் - செம்பு செய்குநர்,

மரப் பொருட்கள் செய்யும் தச்சர் - மரங்கொல் தச்சர்,

இரும்புக் கருவிகள் செய்யும் கொல்லர் -கருங்கைக் கொல்லர்,கண்ணுள்-வினைஞர் -ஓவியர்கள்,கைவினைக்

கலைஞர்கள்,

மண்ணில் பாண்டங்களும் பொம்மைகளும் செய்யும் மண்ணீட்டாளர் ,

பொற்கொல்லர்கள்- பொன் செய்கொல்லர்,

துணி தைப்போர் - 

துன்னகாரர்,தோல்-அணி தைப்போர் -தோலின் துன்னர்

( துன்னுதல் என்றால் தைப்பது. சென்னைத்தமிழில் வேறு பொருள்!)

கிழி -ஓவியம் வரையப்படும் துணி, கிடை-மரப்பலகை இவற்றை வைத்து, தொழில் பல பெருக்குவோர்,

ஏழு ஸ்வரங்களில் எத்தனை பண்கள் என வியக்க இசை பாடும் "பெரும்பாணர்கள்

சிறு குறுங்கை வினைஞர்(micro" நுண்ணிய தொழில் எனப்பாகுபாடு அக்காலத்திலேயே!)

பிற வினையாளர்-பிறர்க்கு ஏவல் செய்வோர்( நமக்குப் பழக்கப்பட்ட ஒன்றுதானே!)

இப்படிப் பலவகைப்பட்ட தொழிலாளர்கள் பகுதி பகுதியாக வாழ்ந்தனர்.  எத்தனை தூய தமிழ் பெயர்கள், ஒவ்வொரு தொழில் புரிபவர்களுக்கு! டாக்டர், இஞ்சினியர், டிரைவர் என்று ஆங்கிலத்திலேயே வளைய வரும் இக்கால இளைய சமுதாயம் அறிய வேண்டிய பெயர்கள்.

ஒன்றும் வாங்காமல்"அங்காடி நோட்டம்"விட்டதற்கே மூச்சு முட்டுதே சாமி!

இக்கால தி. நகர், பாண்டி பஜாரை நினைவூட்டும் அங்காடிகள் அமைப்புகள். 

ஆனால், மருவூர் பாக்கம்" மறு இன்றி" விளங்கியது.ஆம் திட்டமிடப்பட்ட நகர அமைப்பு, விதிகள் மீறல் கிடையாது எனில்   குற்றமின்றி சிறப்புற்றதில் வியப்பென்ன!

Friday, July 3, 2026

நெகிழிப் பை தவிர்த்து (3, ஜூலை)...

 நெகிழிப் பை தவிர்த்து (3, ஜூலை)...


மகிழ்ச்சியாம் குருதியின் தடையிலா ஓட்டம் 

   மாநகராட்சியும் கதை கதையாய் *சொல்லும்


துகிலாய் நெகிழி அது புவியைச் சூழ்ந்தது

   தோழராம் தாவரம், மீன்,.. மூச்சு திணறுது


முகிலின் கொடையாம் நீரும் கெட்டது

   மூடியுடன் வண்ண நெகிழியில் இட்டது


நெகிழியைத்  தவிர்த்து சுற்றுச்சூழல் காப்போம் 

   நேற்றைய முன்னோராய் துணிப் பை எடுப்போம்.


* நெகிழியால் கழிவுநீர் தடைபடுதல்


__. குத்தனூர் சேஷுதாஸ் 3/7/2026

Wednesday, July 1, 2026

இதுவே அக் குலம்

 இதுவே அக் குலம்


பனியாய் நோய் விரட்டும் பகலவன் ஆகும் 

   பாயில் கிடப்போரை பாய்ந்தோடச் செய்யும்


முனியாமல் குறைகளை முழுவதும் கேட்கும் 

   மோட்சம், சொர்க்கம் என போகாமல் தடுக்கும் 


கனிவான தமிழ் பேசி காயங்கள் ஆற்றும் 

   கத்தியால் கீறியும் கருணையே ஊறும்


இனிய மாங்கனிகள் இலவசமாய்த் தரும் 

   இதுவே " மருத்துவர் " எனும் அக் குலம்.



மருத்துவர் குலம் வாழியவே! 💐🙏


__. குத்தனூர் சேஷுதாஸ் 1/7/2026


=====================

அரிது அரிது மானுடராய் பிறத்தல் அரிது 


மானுடராய் பிறப்பினும் 

கூன் குருடு செவிடு நீங்கி பிறத்தல் அரிது 


கூன் குருடு செவிடு இருப்பினும் 

அவற்றை நீக்கும் பேராற்றல் மிக மிக அரிது. 


பேராற்றல் கொண்ட

எங்கள் சங்க மருத்துவரோ

மருத்துவமும் பார்ப்பார்.

மனிதமும் வளர்ப்பார்.

மாங்கனியும் தந்திடுவார்!


பேராற்றல் மிக்க மருத்துவர்கள் அனைவருக்கும் 

நெஞ்சு நிறை நன்றிகளும் 

மருத்துவர் தின நல்வாழ்த்துகளும்


உங்கள் தோழன் ஸ்ரீவி


மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...