நூல் : புதிய ஆத்திசூடி கதைகள் - பாகம் 1
ஆசிரியர்: ஸ்ரீவி
அலுவலகத்தில் ஆரோக்கியம் குறித்த சவால் ஒன்று... 4 மணிநேரம் மின்னணுப் பொருட்கள் பயன்படுத்தாது இருக்க வேண்டும். இன்று சவாலை ஏற்க முடிவு செய்தேன்...இரு காரணங்கள் துணைபுரியும் என்ற நம்பிக்கை... நெடுஞ்சாலை பயணம், ஸ்ரீவி ஐயாவின் புதிய ஆத்திசூடிக் கதைகள் -பாகம் இரண்டு... பாகம் ஒன்று ஆண்டு துவக்கத்தில் முனைப்புடன் வாசித்து அனுபவிக்கப்பட்டது...
படிப்பதற்கு எளிமையான நடையில் அச்சந் தவிர் என துவங்கி வௌவுதல் நீக்கு என்று முடியும் 110 முத்தான சத்தான கதைகள். வரலாறு, புனைவு, நிகழ்வு, புராணம், இலக்கியம் என பல்வேறு கதைக்களம். பக்கங்கள் புரள புரள கதை சொல்லும் பாங்கில் நல்ல தேர்ச்சி. கதை என்று ஒன்றை சுவைபட கூறுவதே தனித்திறமை. பாரதியின் ஆத்திசூடியைக் கருப்பொருளாகக் கொண்டு கதைக் களமாக அமைத்து சுவையாக சொல்வது எத்தனை பெரிய சவால்? ஆசிரியர் அதில் வெற்றி வாகை சூடி உள்ளார்.
சோதிடம் தனை இகழ் என முதல் பாகத்தில் சொன்னவர்... ரேகையில் கனிகொள் எனும்போது பாரதியின் கருப்பொருளில் உறுதியாக இருப்பது பாரதியுடன் ஆசிரியர் கொண்டுள்ள மனநெருக்கத்தை உணர்த்துகிறது. பிணத்தினைப் போற்றேல் என்றால்...என குழம்பும் மனதைத் தெளிவு செய்கிறது ஆசிரியரின் தெளிவான எழுத்து. பல சுதந்திரப்போராட்ட வீரர்களின் கதையே பாரதியின் ஆத்திசூடி விளக்கமானது மிகப் பொருத்தமன்றோ? "பீழைக்கு இடங்கொடேல்" என நம் சாய் ஐயாவின் அனுபவமொன்றை ராதா பாண்டேயின் கதையாக படிக்கும் பொழுது உணர்வோம்... பூமி புனிதமாக இருப்பது இது போன்ற மனிதர்களால் என...வேதம் புதிது செய்த தமிழ்த் தாத்தாவின் தமிழன்னைக்கான முயற்சிகள் மெய் சிலிர்க்க வைத்தன. அறிந்துகொள்ள பல செய்திகள் கற்றுக் கொள்ள பல தமிழ் சொற்கள் என இனிய வாசிப்பு அனுபவம் இந்நூல்கள்.
- அமுதவல்லி
*****************************************************
இன்று படித்தது:
ஸ்ரீவி ஐயாவின் புதிய ஆத்திசூடிக் கதைகள்
பகுதி 1
பக்கம் 265 - 270
மகாகவியின் புதிய ஆத்திசூடி 55
நாளெல்லாம் வினை செய்
எடுத்துக் கொண்ட நேரம்: சுமார் 15 நிமிடங்கள்.
வாசகியின் குரல்:
சாமிக்குப் பொங்கல் வைப்போம்.
தேனி மக்கள் ஏன்
ஜான் பென்னிகுயிக் அவர்களுக்குப் பொங்கல் வைக்கின்றனர்?
குழந்தைகளுக்குத் தாத்தா பாட்டி பெயரை வைப்பது வழக்கம். தேனி மக்கள் ஏன்
ஜான் பென்னிகுயிக்கின் பெயரை தம் கண்மணிகளுக்கு வைக்கின்றனர்?
தெரிந்து கொள்ள ஆவலா?
கூகுள் செய்யாதீர்கள்.
புத்தகம் படித்து அறிந்து கொள்ளுங்கள். ஏனெனில்
ஆசிரியரின் கதை நடை போல் சிறப்பாக கூகுள் ஆசான் சொல்லமாட்டார். மொத்த வரலாற்றையும் கூடுதல் செய்திகளையும் ஒரே கதையில் அடக்கமாட்டார். தேடி ஓய்வதை விட புத்தகத்தின் பக்கங்களைத் தேடி படியுங்கள்! யான் பெற்ற அறிவுச் செல்வம் பெறுக இந்த வையகத்தில் சிறந்து விளங்கும் நம் தமிழ் குழு!!!
- சாய்கழல் சங்கீதா
***************************************************
No comments:
Post a Comment