Monday, June 29, 2026

முதியோர் இல்ல வாசிகளை மகிழச் செய்த தமிழ்ச் சங்க இன்னிசை நிகழ்ச்சி

 *தமிழ்ச்சங்க உறுப்பினர்களின் மேலான கவனத்திற்கு*


ஒரு முக்கிய சமூகக் கடமையை நிறைவேற்றி விட்டு வந்த மன திருப்தியுடன் இன்று நடந்த ஒரு மிக முக்கிய நிகழ்வினைப் பற்றிய விவரணத்தை உங்களுடன் பகிர்வதில் மகாகவி பாரதி தமிழ்ச் சங்கம் பெரு மகிழ்வு கொள்கிறது.


*முதியோர் இல்ல வாசிகளை மகிழச் செய்த தமிழ்ச் சங்க இன்னிசை நிகழ்ச்சி*


வருடம் ஒருமுறை நாம் தொடர்ந்து தவறாமல் செய்து வரும் சமூகக் கடமையில் ஒன்று இன்று மாலை சிறப்பாக நடந்தேறியது. ஆம். சமூகக் கடமையாக நாம், உதவி தேவைப்படும் இல்லங்களுக்கு நிதி உதவி செய்வதோடு அவர்களை மகிழ்விக்கும் வண்ணம் பல்சுவை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம். அந்த வரிசையில் இந்த வருடத்திற்கான நிகழ்வினை தற்போது மன மகிழ்வோடு செய்து முடித்துவிட்டு இல்லம் திரும்பி உள்ளோம். 


இன்று, 28.6.26, ஞாயிறு அன்று மாலை 4:30 மணி முதல் 6.30 மணி வரை 2 மணி நேரம் அருமையான இசை நிகழ்ச்சி ஒன்றினை முடிச்சூர் பகுதியில் உள்ள *அக்ஷயா டிரஸ்ட்* முதியோர் இல்லத்தில் நமது மகாகவி பாரதி தமிழ்ச் சங்கம் சார்பில் செய்து முடித்து உள்ளோம்.


வழக்கம்போல், நமது நிதிச் செயலர் சாய்ராம் அண்ணா அவர்களின் மேற்பார்வையில் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்ட ஏழு பாடகர்கள் உடன் இன்று அவ்விடம் சென்றோம். பாடிய இன்னிசைக் குயில்கள்:


சாய்ராம், 

துர்கா சாய்ராம், 

விஜயலட்சுமி,

செங்கதிர்ச் செல்வன், 

கார்த்தி, 

ரிஜாவுதீன், மற்றும்

ஸ்ரீ நிகேதன். 


ஒலி அமைப்பிற்கு நமது ஆஸ்தான ஒலி அமைப்பாளர் சசி அவர்களை அழைத்துச் சென்று இருந்தோம்.


நிகழ்ச்சியைப் படம் பிடித்து, நமது சேனலிலும் - படவரிக் குழுவிலும் பகிர்வதற்காக உடன் வந்தவர் நமது நிர்வாகக் குழு உறுப்பினர் அமுதவல்லி. 


இவர்களுடன் அடியேனும், திரு மோகன் ஐயா அவர்களும்.


உற்சாகமாக நமது இன்னிசைக் குயில்கள் பாடல்களைப் பாட முதியோர் இல்ல வாசிகள் பலரும் ஆடிப் பாடி மகிழ்ந்தனர். அவர்களில் ஓரிருவரும் பாடல்களைப் பாடினர். 


அந்த இல்லத்தின் அமைப்பாளர்களில் ஒருவரும் ஆலோசகரமான திரு. தாசரதி அவர்கள் வந்திருந்து நமது சங்கத்தைப் பாராட்டி உரை நிகழ்த்தினார்கள். இவரது உரை நமது சங்க செயல் பாட்டிற்கு உரமூட்டுவதாக இருந்தது.  இவர் நமது சாய்ராம் ஐயாவின் ஆத்ம நண்பர் என்பது குறிப்பிடத் தக்கது. 


முதியோர் இல்ல வாசிகள் அனைவரும் இரண்டு மணி நேரம் மிக மகிழ்வோடு ரசித்து ஆடிப் பாடி கலகலப்பாய் இருந்தது நமக்கு மனநிறைவை தந்தது. அவர்களுக்கு இணையான மனமகிழ்ச்சி எங்கள் அனைவருக்கும் வந்தது. 


நமது சங்கத்தின் சார்பாக பத்தாயிரம், செங்கதிர் செல்வன் அவர்கள் மூவாயிரம், வழக்கம்போல் தன் பெயர் சொல்ல விழையாத ஒரு புரவலர் கொடுத்த ஐயாயிரம் ஆக மொத்தம் ௹.18,000/-க்கான காசோலை அந்த இல்லத்துக்கு இன்று வழங்கப்பட்டது. நமது பாடகர்களில் ஒருவரும் நிர்வாகக் குழு உறுப்பினருமான திருமதி. விஜயலட்சுமி 2000 ரூபாய் நேரடியாக நன்கொடை கொடுத்தார். இன்று அனைவரையும் பாடி மகிழ்வித்த கார்த்திக் (நமது நிர்வாகக் குழு உறுப்பினர் ரமணி அவர்களின் மைந்தன்) ௹.10,000/- நன்கொடை செய்தார். ஆக மொத்தம் ௹.30,000/- அந்த இல்லத்திற்கு இன்று அளிக்கப் பட்டுள்ளது. 


முத்தாய்ப்பாக ஒரு அருமையான கதம்பப் பாடலை (medley) சாய்ராம் ஐயா பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள். 


சங்கத் தலைவர் ஸ்ரீவி அவர்கள் நன்றியுரை கூற இந்த பொன்மாலைப் பொழுதினை மேலும் இனிதாக மாற்றிட நம் சங்கத்தால் வழங்கப்பட்ட இன்னிசைப் பாடல் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.


பிறகு இல்ல வாசிகளுடன் உணவு அருந்திவிட்டு மனநிறைவோடு கிளம்பினோம். 


*ஸ்ரீவி*

தலைவர் 

(நிர்வாகக் குழுவிற்காக)


28.06.2026 அன்று மாலை மகாகவி பாரதி தமிழ்ச்சங்கம் சார்பில் முடிச்சூர் பகுதி அக்க்ஷயா ட்ரஸ்ட் முதியோர் இல்லத்தில் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது

முதியோர் இல்லத்தில் இன்னிசை நிகழ்ச்சி



Saturday, June 27, 2026

சிலம்பொடு ஒரு பயணம்(27) *அந்தி மாலைச் சிறப்புச் செய்த காதை* *காம வேள் நடனமும் காதையின் வெண்பாவும்*

 ••••••••••••••••••••••••••••••••

*{27} சிலம்பொடு ஒரு பயணம்*


*அந்தி மாலைச் சிறப்புச் செய்த காதை*


*காம வேள் நடனமும் காதையின் வெண்பாவும்*

••••••••••••••••••••••••••••••••


மாலைப் பொழுதின் மயக்கத்திலே 

மாதவிப் பொன் மயிலாள் மகிழ்வுற்றிருக்க.. 

மனக்கலக்கத்தில் கண்ணகி ஆழ்ந்திருக்க 

இரவுப் பொழுதும் உருண்டோடிப் போகிறது. 

செங்கதிரோன் கீழ் வானில் 

மேல் எழும்ப பொழுதும் புலர்கிறது. 


இக் காட்சிகளை இளங்கோவடிகள் 

இனிதே வர்ணிக்கிறார்: 


*அன்னம் என்னடை நன்னீர் பொய்கை ஆம்பல் நாறும்*


அன்னப்பறவைகள் அழகு நடை பயிலும் பொய்கையில் பெண்களின் கண் போல் ஆம்பல் பூ மலர்ந்து மனம் வீசிக்கலாம். 


*தண் அறல் கூந்தல் பான் வாய் வண்டு நோதிறம் பாட*


பொய்கையில் காற்றில் அலையும் நேரலைகள் தலைவியின் வளைந்து நெளிந்து ஆடும் நீண்ட கூந்தலை நினைவூட்டின. இசை பாடும் வண்டுகள் வந்து காலைப் பண் பாடின.


*தண் அறல் கூந்தல்* குளிர்ந்த நீர்களை அசைவது போன்ற கூந்தல். என்ன அழகிய சிந்தனை. இதைத்தான் இந்நாளில் திரைப்படப் பாடலில் 

*நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ* என வாலிபக் கவி எழுதினாரோ!


*உரவு நீர்ப்பரப்பின் ஊர் துயில் எடுப்பி இரவு தலைப் பெயரும் வைகறை காரும்*


புள்ளிகள் பொருந்திய சிறகினை உடைய சேவல் கோழி தனது கூறிய வாயால் சங்கு முழங்குவது போல் ஒலித்து உறங்கிக் கிடந்த புகார் நகரை துயில் எழுப்பியது. இரவு கழிந்து வைகறைப்பொழுதும் வந்தது. 


அப்போது என்ன நடக்கிறது? 


*பகலும் துஞ்சான் விரை மலர் வாளியோடு கருப்பு வில் ஏந்தி*


இரவில் மட்டுமல்ல பகலிலும் உறங்காத மன்மதன் மலர் கணைகளோடும் கரும்பு வில்லோடும் மகரக் கொடியோடும் நகர்வலம் வருகிறான். அவனுக்கு மட்டும் ஓய்வும் உறக்கமும் இல்லை போலும். 


இதையே வல்லபன் எனும் பாடலாசிரியர், 

*மீன்கொடித் தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான்* என எழுதினார் போலும். 

(மகரம் எனில் மீன் என அறிக) 


இப்போது வெண்பாவை பார்ப்போம்: 


*கூடினார்பால் நிழல் ஆய், கூடார்பால் வெய்யது ஆய்,*

*காவலன் வெண்குடை போல் காட்டிற்றே - கூடிய*

*மாதவிக்கும், கண்ணகிக்கும், வான் ஊர் மதி விரிந்து*

*போது அவிழ்க்கும் கங்குல் - பொழுது.*


இதன் பொருளை மழலைக் கவி விளக்குவார்.



ஐயா ,

அந்திமாலையில் கண்ணகி உழன்றாள் - மாதவி மகிழ்ந்தாள் எனப்

பார்த்தோம். இந்த மாலை புகார் நகர் மகளிருக்கு, அவரவர் கூடலையும் ஊடலையும் பொறுத்து, இன்பத்தையும், துன்பத்தையும் அளித்தது .


காமதேவனின் ஆட்சி:

இரவு வந்துவிட்டது. காமதேவனின் ஆளுமை எங்கும்

அரசன் முதல் குடிமக்கள் யாவரையும் அவன் 

இப்போது ஆட்டிப்படைக்கும் நேரம் .

அடிகளின் நோக்கில் இந்த சூழ்நிலை எப்படிக்காணப்

படுகிறது?

காமதேவன் மகரக்கொடியோடு ( மீன் கொடி) நகரைச் சுற்றி வந்தான்,கையில்

கரும்பு வில்லும், மலரம்புகளும் ஏந்தி;(ஐந்து மலர்கள்-தாமரை, முல்லை , அசோகு,மா, நீலம் என ஐந்து மலர்கள் கொண்ட அம்பு. )

ஒரு முழம் மல்லிகைப்பூவுக்கே மயங்கும் மகளிர் ஐந்துமலர்க்கணை  மேனியில் பட்டால் காமதேவன் வசப்படுவதில் என்ன வியப்பு!

இரவு  முடிந்து வைகறைப் பொழுது ஆரம்பிக்கும் வேளை. ஆம்பல் மலர்ந்தது.நன்னீரப் பொய்கையில்(  நன்னீரா!அக்காலத்தில் சர்வ சாதாரணம்!) அன்னங்கள் நடை பயிலத்தொடங்கின. வண்டுகள் வந்து  பள்ளி எழுச்சி" நோதிறம்" (பிரிவுத்துயரில் பாடும் பண்- நொந்த திறம்) பாடத்தொடங்கின. 

யாரை எழுப்ப? 

ஆம்பல் மலர் போல் சிவந்த வாயும், குளிர்ந்த ஆற்று மணல் படிவுகள் போல சுருள் சுருளான கூந்தலையும் உடைய நன்மங்கையைப் போன்ற பொய்கையை எழுப்பவாம். இயற்கையாக அமைந்த சுருள் கூந்தல். உபகரணங்கள் உதவி இன்றி! உலகில்உயிர்களைத்தோற்றுவிக்கும் மகளிரோடு , அவ்வுயிர்கள் வாழ இன்றியமையாத நீர் கொண்ட பொய்கையோடு ஒப்பிட்டது எவ்வளவு நல்ல உவமை! இயற்கையோடு மானுடம் பின்னிப்பிணைந்த  காலம் அப்போது.


அக்காலத்தில் இயற்கைச்சூழலில் எழும் ஒலிகளே மக்களை எழுப்பும்.

பறவைகள் முரசொலி போல ஒலி எழுப்பும்.புள்ளிச்சிறகுடை

சேவல்கள் சங்கு போல முழங்கும். அதுவும் எப்படி?" முறை முறை ஆர்ப்ப"- அடுத்தடுத்து முறையிட்டுக் கூவும். கடிகாரத்தின் தலையில் அடித்துவிட்டுத்திரும்பிப் படுக்கும் வழக்கம்  கிடையாது.

 அப்போது.

மீன் கொடி வேந்தனான காமதேவன் இரவேல்லாம் ஆட்சி செலுத்துகையில் , இன்புற்றோர் துன்புற்றோர் யாவரும் உறங்கவில்லை. காமதேவன் பாரபட்சம் பார்ப்பதில்லை; யாவருக்கும் பொது( common!)

இந்த மீன் கொடியான் மாதவி கோவலன் கூடலுக்கு அடிகோலினான். விளைவு, பின்னர் மற்றொரு மீன்கொடியானின்  ( பாண்டிய மன்னனின் செங்கோல் பிழைத்தது.


"மன்மத லீலையை வென்றார் உண்டோ?

என் மேல் உனக்கேனோ பாராமுகம்?

ஒருபிழை அறியா என்மனம் மலர்க்கணை பாய்ந்து அல்லல் படுமோ? 

என்று தியாகராஜ பாகவதர் பாடியது நினைவுக்கு வருகிறது.


 (காதைச்சுருக்க )வெண்பா :

மன்னின் வெண்கொற்றக்குடை எப்படி " கூடினார் பால் நிழலாய், 

கூடார்ப்பால் பால் வெய்யதாய்"

உள்ளதோ ,அது போல வெண்ணிலாவும் மாதவிக்கு நிழலாகவும், கண்ணகிக்கு வெய்யிலாகவும் தோன்றியதாம்.

இன்றைய திரை உலக கதாசிரியர்கள் போல் நான்கடி வெண்பாவில் காதைச்சுருக்கம்!


*அந்தி மாலை சிறப்பு செய் காதை இத்துடன் நிறைவுற்றது. நாமும் மயக்கம் மாலையிலிருந்து

*இந்திர விழா ஊர் எடுத்த காதை* எனும் அடுத்த காதையில் மீண்டும் இணைவோம்.

Friday, June 26, 2026

தன் சாவிற்கு தானே இரங்கற்பா எழுதிய கவிஞன்

 கவியரசுவின் பிறந்த தின பதிவாக முகநூலில் நான் இட்ட பதிவினை பார்த்து எனது நண்பர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். சிறிது நேரம் அளவளாவிய பின், ஒரு வினாவினைக் கேட்டார். அந்த வினா: 


*தன் சாவிற்கு தானே இரங்கற்பா எழுதிய கவிஞன் யார் என தெரியுமா!*


கவியரசுவை பற்றி பேசிக் கொண்டிருந்ததால் எளிதாக ஊகித்தேன். 


*கவியரசு* என பதில் சொல்லிவிட்டு, அடுத்த கேள்வி அவர் கேட்க முன்னரே, அந்தப் பாடலை நான் படித்ததில்லை என்று பதிலும் கூறிவிட்டேன். 


உடனே, 'கூகுளில் போய் தேடிப் படி' -என சொன்னார். 

அவ்வாறே செய்தேன். 


நீண்டதொரு கவிதை அது. படிக்கையில் ஆச்சரியம் வந்தது.  வியப்பைத் தந்தது.. 

இப்படியும் ஓர் கவியா என மலைப்பு வந்தது.. 


அதிலும் தான் மறைவதற்கு 12 ஆண்டுகளுக்கு முன்பே இரங்கற்பா எழுதி வைத்தான் அக்கவிஞன். 


நீண்ட நெடிய இரங்கற்பாவின் கடைசி நான்கு வரிகள் அவனது கவித்திறமை பற்றி அவனுக்கு இருந்த செருக்கினை பகரும். 


அவ்வரிகள் இதோ: 


*கூற்றவன் தன் அழைப்பிதழைக் கொடுத்தவுடன் படுத்தவனைக் குவித்துப் போட்டு ஏற்றிய செந் தீயே! நீ எரிவதிலும் அவன்பாட்டை எழுந்து பாடு!*


நிச்சயமாக அவன் உடலை எரித்த போது,  செந்தீ எரியும்போது அவன் பாட்டை எழுந்து பாடி இருக்கும்.


Thursday, June 25, 2026

மன அழுத்தம் குறைப்போம் மகிழ்வுடன் வாழ்வோம்

 ••••••••••••••••••••••••••••••••••••

மன அழுத்தம் குறைப்போம் 

மகிழ்வுடன் வாழ்வோம் 

••••••••••••••••••••••••••••••••••••


அடிப்படைத் தேவைகள் அவனியில் மூன்றாம் 

உயிரினைக் காக்க உணவு வேண்டும் 

மானம் காத்திட உடையும் வேண்டும் 

பாதுகாப்புக்கு உறையுள் வேண்டும் 


உலகில் இவற்றைப் பெற்றிடவே 

உழைப்பு ஒன்றே வழியாகும் 

உழைக்கும் இடத்தில் அழுத்தம் உண்டு 


டார்கெட் என்ற பெயரில் அழுத்தம் 

பணிச்சுமை மூலம் வந்திடும் அழுத்தம் 

வீடும் காரும் வாங்கிடும் அழுத்தம் 

வாழ்நாள் முழுதும் E.M.I. அழுத்தம் 


காலையும் மாலையும் கணினியே துணையாம் 

குடும்பம் முழுதும் கைபேசியே இணையாம் 

மனைவியுடன் பேச நேரம் இல்லை 

மழலையைக் கொஞ்ச காலம் இல்லை 


முப்பது வயதில் சுகரும் பிரஷரும்

நாற்பது வயதில் இதய நோயும் 

அழையாமல் வந்து அவனைச் சேரும் 

இதற்குக் காரணம் மனதில் அழுத்தம். 


வாழ்க்கை என்பது வாழ்வதற்கே

நலமுடன் வாழ்ந்து மகிழ்ந்திடவே 

கவலைக் குவியலை மனதினில் ஏற்றி 

டென்ஷன் ஆகி வாழ்வினைத் தொலைத்து 

இன்னலுறுதல் வாழ்க்கை இல்லை.


அழுத்தம் குறைக்க அமைதியாய் வாழ 

அருமை வழிகள் பற்பல உண்டு 

மனதை வருடும் இன்னிசை கேட்டல்

நல்ல நூலினை நலமாய் படித்தல் 


ஓய்வறியாது உழைத்து ஓயாமல் 

குடும்பத்தோடு பொழுதைப் போக்குதல் 

இன்பச் சுற்றுலா தவறாது போதல் 

இயற்கையோடு நேரம் கழித்தல் 

இவையெல்லாம் இந்த வழிகளாகும்! 


காலணி அணியா கால்களோடு 

வலப்புறத்தில் 

கடலின் அலைகள் 'ஹோஹோ'வென

ஆர்ப்பரிக்க 

இடப்புறத்தில் தென்னங்கீற்று

'சட சட'வென 

சலசலக்க 

இல்லாள் குழந்தை கைகள் பிடித்து 

கடற்கரை மணலில் பாதம் பதிய 

உற்சாகத்துடன்

காலாற நடந்தால் 

மன அழுத்தம் 

மறைந்தே போகும்! 

மனதில் மகிழ்ச்சி பொங்கிப் பெருகும்! 


அழுத்தம் தன்னை குறைப்போம் காணீர் 

அவனியில் மகிழ்வாய் வாழ்வோம் வாரீர்!


*உங்கள் தோழன் ஸ்ரீவி*

Wednesday, June 24, 2026

"குவாகுவா" என இந்நாள் (24/6/1927)

 "குவாகுவா" என இந்நாள் (24/6/1927)


எவராலும் எட்ட முடியாச் சிகரம் தொட்டது

   "ஏன் பிறந்தாய் மகனே?" எனவும் கேட்டது


அவா அதற்கோ "அழியாச் சிறப்பு "

   அழகிய "சிறுகூடல்பட்டி" யில் பிறப்பு 


சிவாஜி, எம்.ஜி. ஆரைச் சீராட்ட வைத்தது 

   "சிவகங்கைச் சீமை" சிலை செதுக்கியது


தெவிட்டாதத் திரைப் படப் பாடல் பல்லாயிரம் 

   தீந்தமிழ் மகுடம் அம்மணிகளால் ஒளிரும்  


"தவறான வாழ்வுக்கு நானே உதாரணம்" 

   தானே எழுதிய‌ அந் நூலோ "வனவாசம்"


"வதவத" என வித்திட்ட பிள்ளைகள் பதிமூன்று 

   வாங்கியது உயர் சாகித்திய அகாதமி விருது 


கவலைகள் கரைந்தோடப் பொழிந்த கவி மேகம் 

   கண்ணனே எல்லாமெனும் "கிருஷ்ண கானம்" 


"குவாகுவா" என இந்நாள் (24, ஜூன்) அக் குழவி பிறந்தது 

   * குவலயம் கண்ணதாசனை என்றும் மறவாது.


* குவலயம் -- உலகம் 


வாழ்க கவியரசு கண்ணதாசன் புகழ் ! 💐🙏


__. குத்தனூர் சேஷுதாஸ் 24/6/2026

Tuesday, June 23, 2026

உலகே உன்னை எதிர்த்தாலும் ...

 நல் விதை ஒன்று நிலத்தில் விழும் 

 

நிலத்தைக் கிழித்து மேலே எழும் 


முளையும் விட்டு இன்னும் உயரும் 


இலையும் தோன்றி கணுக்கள் விடும் 


செடியாய் உயர்ந்து கிளைகள் பரப்பும்


பாறையே வந்து தடுத்தாலும்


வளைந்து கொடுத்து மேலும் வளரும். 


மரமாய் வளர்ந்து மொட்டும் விடும் 


காய் கனியாகி பழுத்து நிற்கும் 


உலகே உன்னை எதிர்த்தாலும் 


தடைகள் பலவும் செய்தாலும் 


உடைத்தெறிந்து முன்னேற 


உறுதி கொள்க உழைப்பால் வெல்க

Sunday, June 21, 2026

**பிணியில்லாப் பெருவாழ்வு*

 **பிணியில்லாப் பெருவாழ்வு*


உடலின் நலமே உன்னத செல்வம்!

உயிரின் பிணியிலா நிலையே பேரானந்தம்! 


நாசி இரண்டிலும் நாடி சுத்திசெய்ய,

நாற்றங்கால் சுவாசமாய் நுரையீரலும் சிறக்கும்! 


சிந்தனை நீண்டு நினைவாற்றல் பெருகும்,

சீர்மிகு விடியலில் உற்சாகம் பிறக்கும்! 


பதற்றம் பறந்து மனவழுத்தம் தீரும்,

பரிவோடு அமைதி நெஞ்சினில் ஊறும்! 


சுடரொளிச் சூரிய நமஸ்காரம் செய்ய,

உடலொளி பெருகி உயிர் மலர்ந்துய்யும்! 


வளமிகு வஜ்ராசனம் செரிமானம் கூட்டும்,

வளைந்திடும் புஜங்காசனம் கூனினை மாற்றும்! 


பருத்த வயிறு பச்சிமோத்தாசனத்தில் கரையும்,

பட்ட துயரெல்லாம் பத்தகோணாசனத்தில் மறையும்! 


அருந்தலைக்கு ரத்தமேகும் அதோமுக ஆசனம்,

ஆரோக்கியம் சேர்க்கும் நரம்பினில் மோகனம்! 


சலனங்கள் தீர்த்திடும் சவாசன நிலை,

சகலமும் தந்திடும் சாந்தியாசனக் கலை! 


கைபேசி விடுத்து முன் தூங்கிமுன் எழுவோம்,

நாளும் யோகத்தால் நூறாண்டு வாழ்வோம்!


*சர்வதேச யோகா தினத்தைக் கருத்தில் கொண்டு -வே.திருஞானசம்பந்தம்*

Saturday, June 20, 2026

தந்தையர் தினம்

 முட்பாதைகளில்

பாதம் பதித்து

வலிகளை உள்வாங்கி

பிள்ளைகளுக்கு 

வழிகள் உருவாக்கும் 

தந்தைகளுக்கு

தந்தையர் தின வாழ்த்துகள்


- அமுதவல்லி

==========================


•••••••••••••••••••••••••

       ஜூன் 21 

 தந்தையர் தினம்              ••••••••••••••••••••••••••


கரடு முரடான பாதையிலே 

கஷ்ட நஷ்டம் ஏதுமின்றி 

குடும்பம் முழுதும் பயணிக்க 


மெழுகாய் உருகி ஒளி சிந்தும் 

கழுகாய் சுற்றி இன்னல் கொடுக்கும் 

துன்பங்களை துரத்தி அடித்து,


பொழுதெல்லாம் உழைத்து ஓயும் 

குடும்ப நலனை தன் நலமாக்கும்

தியாகச் செம்மல் தந்தையர் தாமே!


தனக்கு ஏதும் இல்லை எனினும் 

நமக்காக எல்லாம் செய்து 

உழைத்து ஓய்ந்த தந்தையர் வாழ்க!


குழந்தையின் காலில் பாட்டா ஷூக்கள் 

தந்தையின் காலில் தேய்ந்த செருப்பு 

அவர்தம் மனதில் பொங்கிடும் மகிழ்வு 


பிள்ளைகளுக்கோ பளபள சட்டை

தகப்பனுக்கோ சட்டையும் கந்தை

சுமைதாங்கியாய் உழைக்கும் நிகழ்வு


பசியறியாது பிள்ளைகள் வாழ 

கசியும் கண்ணுடன் உழைப்பான் தந்தை 

பாரம் சுமக்கையில் அடையான் தளர்வு


கல்வி கொடுக்க கரன்சி நோட்டுகள் 

வாழ்வில் வென்றிட அவையே ஓட்டுகள் 

கடனாளி ஆகி தருவான் உயர்வு


இத்தனை செய்தும் பெயர் இல்லை 

வாழ்த்தி மகிழ மனம் இல்லை

ஏன் இப்படி இருக்குது உலகு!


அன்னையர் புகழை அவனியே பாடும் 

மகளிர் புகழை போற்றி ஆடும் 

தந்தையர் மட்டும் அந்தோ பாவம்! 


தந்தையர் தம்மை போற்றி மகிழ்வோம் 

சிந்தை குளிர வாழ்த்துச் சொல்வோம் 

தந்தையர் தின வாழ்த்துகள்!


*உங்கள்_தோழன்_ஸ்ரீவி*


==========================

புதிரான உறவே அப்பா


கதிரவனோடு அதிகாலை புறப்படுவார்

   கரும்புச் சக்கையாய் வீடு திரும்புவார் 


மதிய உணவு உண்டாரா அவருக்கே வெளிச்சம் 

   மனது அது சுமப்பதோ கழுதையும் விஞ்சும் 


புதிய பொருட்களால் கவரப் படார்

   போதும் உள்ளதெனக் கடந்து போவார் 


" *பதி " அவரே இல்லத்தின் எனப் படுவார்

   பால் காய்ச்சி முதல் காபி "*சதி"க்கு ஈவார்

   

அதிகமாய் பிள்ளைகளிடம் பேச மாட்டார்

   ஆண்பிள்ளை என்றால் அறவே மாட்டார் 


உதிரமாய் உள்ளிருந்து ஓடச் செய்வார் 

   உலகுக்கு தன் அன்பை வெளிக் காட்டார்


முதுமையில் மைந்தனின் உடையே போதும் 

   முணுமுணுப்பு மனைவியின் மூழ்கிப் போகும் 

   

புதிரான உறவு தான் "அப்பா " என்பார் 

   பூ அதைக் காக்கும் முள்ளை ஒப்பார்.

                

        " இவர் தான் அப்பா " 


* பதி -- தலைவர் 

*சதி -- மனைவி 

__. குத்தனூர் சேஷுதாஸ் (21/6/2026)

====================


Fathers Day 21.6.26

௭னது  சில வரிகள் :-


          ௮ப்பா:

இந்த ௨லகத்தை நோக்கி நான் ஒ௫ பெரிய குற்றத்தை சுட்டிக்காட்டுகிறேன்.


௮ம்மாவை கொண்டாடும் ௮ளவுக்கு ௮ப்பாவை கொண்டாடுவதில்லையே   ஏன்?


௮ன்பை வெளிக்காட்டத்தெரியாத ௮ப்பாவியான ௮ப்பாக்கள், பாசம் ௭ன்ற ஓட்டப்பந்தயத்தில் ௮ம்மாவுக்கு ௮டுத்தபடியாக ௭ப்போதும் இரண்டாம் இடத்தையே(runner up) பெறுகிறார்கள்.


௨ள்ளத்தில் கரடு முரடாக தோன்றும் ௮ப்பாக்கள் , பிள்ளைகளின் முன்னேற்றம் பற்றியே ௭ண்ணி ௭ண்ணி வாழ்க்கையை முழுமையாக (௮ம்மாக்கள் போல் ஜாலியாக இல்லாமல்)

வாழ மறந்து போய் விடுகிறார்களோ ௭ன்று ௭ண்ணத்தோன்று

கிறது.


௮ம்மாக்களை விட ௮ப்பாக்களுக்கே ௮திகமாக ஹார்ட் ௮ட்டாக் வ௫வது இதனால்தானோ.!!!


கடவுள் ௭ல்லா இடத்திலும் இ௫க்க முடியாது ௭ன்றே ௮ம்மாவை படைத்தான் ௭ன்று சொல்வார்கள்.

இதிலும் ௮ப்பாக்களுக்கு பின்னடைவே.!!


தாயிற்சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை ௭ன்பார்கள். 


ஆமாம்,

கடமை ௭ன்ற மந்திரத்தை ஜபித்துக்கொண்டே தன் வாழ்நாளை கழித்து விடுகிறார் ௮ப்பா.!


௮ப்பா, 

நான் benz காரில் சவாரி செய்யும்போது கிடைக்கும் சுகத்தை விட, சிறு வயதில் ௨ங்கள் முதுகில் செய்த யானை சவாரியின் சுகமே மிகப் பெரியது ௮ப்பா.!!


இன்றைக்கும் நான் ௭ங்கு சென்றாலும், ௭ந்த நாடு சென்றாலும், ௭ந்த ஊர் சென்றாலும்

௨ங்கள் முக சாயலில் யாரேனும் தென்படுகிறார்களா ௭ன்று தேடிக்கொண்டே இ௫க்கிறேன் ௮ப்பா.


மீண்டும் வ௫வீர்களா ௮ப்பா.!!!


Happy Fathers Day.🌹


          A. Ravi , BSNL

சிலம்பொடு ஒரு பயணம்(26) *அந்தி மாலைச் சிறப்புச் செய்த காதை* *தனிமைத் துயரில் உழலும் கண்ணகி*

 மதியை மயக்கி மோகத்தில் ஆழ்த்தும் மாலை நேர மயக்கத்தில் மாதவியும் கோவலனும் மகிழ்ந்திருக்க 


தத்தம் மணவாளர்களுடன்

மனதிற்கு இசையந்த தலைவர்களுடன் இளம் பெண்கள் களிப்பில் திளைத்திருக்க 


அதே புகாரில் வேறொரு இடத்தில் கண்ணகியின் நிலை என்ன? பார்க்கலாம் வாருங்கள்.. 


*சீறடி அணிசிலம்பு ஒழிய*


*மேகலை நீங்க*


*குங்குமம் எழுதாள்*


*மங்கல அணியின் பிறிதுஅணி மகிழாள்*


*கொடுங்குழை துறந்து*


*நெடுங்கண் அஞ்சனம் மறப்ப*


*வாள்நுதல் திலகம் இழப்ப*


*தவள வாள்நகை கோவலன் இழப்ப*


*கூந்தல் நெய்அணி மறப்ப*


*கையறு நெஞ்சத்துக் கண்ணகி*


 கோவலனைப் பிரிந்த கண்ணகி துயரிலும் காட்சி அடிகளின் வரிகளில் இதோ:


கண்ணகி தன் கால்களில் சிலம்பு அணிவதை மறந்து விட்டாள். 


மேகலை அணிவதை துறந்து விட்டாள். 


குங்குமம் எழுதிக் கொள்ளாமல் இருந்து விட்டாள்.


மங்கல அணிகலனாம் தாலி ஒன்றைத் தவிர வேறு அணிகலன் எதையும் அணிவதை மறுத்து விட்டாள்.


காதில் குழை (காதணி) இல்லாமல்  வெறும் துளை மட்டும் இருந்தது. 


கண்களில் மை (அஞ்சனம்) தீட்டப் படவில்லை. 


பவள நிற நெற்றியில் பொட்டு (திலகம்) இட்டுக் கொள்ளவில்லை. 


இவளது முத்துப் போன்ற சிரிப்பைக் கோவலன் இழந்துவிட்டான். (அதாவது, இவள் முகத்தில் புன்னகை இல்லை) 


தலையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை விட்டு விட்டாள். 


செய்வதறியாத நெஞ்சத்துடன், கையறு நிலையில் இருந்த கண்ணகி கலக்கத்துடன் மிகவும் துயருற்று இருந்தாள்.


அப்போது தங்கள் தலைவனை சேராத பிற மகளிர் நிலை பற்றி சிலம்பு என்ன சொல்கிறது பார்க்கலாமா: 


*காதலர்ப் பிரிந்த மாதர் நோதக  ஊதுஉலைக் குருகின் உயிர்த்தனர் ஒடுங்கி*


தங்கள் தலைவர்களைப் பிரிந்த பெண்கள் நெருப்பு உலகில் காற்றூதும் துரத்தியின் நுனியில் இருப்பும் நெருப்புச் சுடர் போல மனம் வெறுத்து - பெருமூச்சு விட்டு - துயரத்தில் உழன்றனர். 


*கலங்கா உள்ளம் கலங்கக் கடைசிவந்து*


*விலங்கிநிமிர் நெடுங்கண் புலம்புமுத்து உறைப்ப,*


அவர்கள் துயரத்தில் இருந்த நிலை கண்ட அவர்தான் தலைவர்கள், கலங்காத உள்ளம் பெற்றிருந்தவர்களாக இருந்தாலும் மிகவும் கலங்கிப் போகும் அளவு


கடைக்கண் சிவந்து, துடிதுடித்து, நிமிர்ந்து புலம்பும் கண்ணீர் முத்துக்களுடன் காணப்படுவர். 


*மாலை பொழுதின் மயக்கத்திலே* எனும் திரைப்படப் பாடலின் இந்த வரிகளுக்கு மூலம் இளங்கோவடிகள் எழுதிய இந்த வரிகளாக இருக்கலாம்: 


*மங்கையி்ன் கையில் குங்குமம் தந்தார் - மாலையிட்டார் தோழி.*

*வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில் சாய்ந்து விட்டேன் தோழி* - 

*அவர் மறவேன் மறவேன் என்றார் உடனே மறந்து விட்டார் தோழி*


என் ஊகம் சரிதானே!


இப்போது மழலை கவி மோகன் ஐயா: 


ஐயா, 

அந்தி மாலையில் மட்டும் பிரிவுத்துயர் வாட்டுவதேன்?

பிரிவுத்துயர் காவிய நாயகி கண்ணகியை மட்டும்அல்ல , தம் தலைவனைப் பிரிந்த  தலைவியர் யாவரையும் வாட்டுகிறது என இரு பகுதிகளாக, காணலாம், என் பார்வையில். 


தலைவியரைப் பொறுத்த வரை பிரிவு என்பது கையறு நிலையில் வைத்து விடும்.

"உறீஇ ஒழிந்தோர் புலம்பிய கையறுநிலையும்" என்பது, தொல்காப்பியம்.

தலைவனை இழந்தபோது மனைவியோ அல்லது சுற்றத்தாரோ வருந்துவதையும் குறிக்கும்.

பிரிவுத்துயர்தான் கையறுநிலை எனக்கொள்ளலாம்.


நம்பிக்"கை" யும் கை விட்ட மாதிரித் தோன்றும்நிலை.


கண்ணகியின் நிலைமை:

பிரிவுத்துயர் காரணமாக , கண்ணகி  என்ன என்ன அணிகலன்களை, அழகுச் சாதனங்களை விட்டு விட்டாள் என அடிகள் விவரிக்கிறார். ஏற்கெனவே துன்ப சூழலில் உள்ளோம். எனவே மங்கல மங்கை கண்ணகி  தலைவனோடு கூடிய காலத்தில் எப்படி  தன்னை அலங்கரித்துக் கொண்டாள் என்று உதறித் தள்ளிய ஒப்பனைகளிலிருந்து, கண்டு, சிறிது ஆறுதல் அடைவோம்.


கால்களில் சிலம்புகள், இடையில் மேகலை, மார்பினில் குங்குமக்குழம்புப்பூச்சு, காதுகளில் குண்டலங்கள், கூட்டு மகிழ்வின் விளைவான  நெற்றியில் குறு வியர்வை,மை இட்ட கயல்விழிகள்,மணக்கும் நெய் அணிந்த கூந்தல் என்று" புகழ் உடை வடிவு"(மங்கல வாழ்த்து வர்ணனை)  உடையவளாகத்

திகழ்ந்தவள்இன்று " கையறு நிலை" யில்.  பின்பு நீதிக்கே வழி வகுக்கும் சிலம்பையே இப்போதைக்கு , கால் விட்டாள், கையறு நிலையில்.

அச்சோ! அச்சோ!

"தவள வாள்நகை கோவலன் இழப்ப" என்கிறார் அடிகள். கண்ணகியின் ஒளிநகையை( சிரிப்பை), கோவலன் இழந்தான் என்று கொள்ளலாம்.நாம் கண்ணகி எவ்வாறு பல மங்கல விடயங்களைக் கோவலனுக்காக இழந்தாளென்று கண்டோம்.அவனோ அவளின் முத்து நகையை இழந்தான். 


காதலரைப் பிரிந்த மாதர்:

இவர்கள் ஊது உலைத்துருத்தி (தோல்பை)  போல், தொடர்ச்சியாக ஆழமாகவும், வெப்பமாகவும் பெருமூச்சு விட்டனராம்- 

"ஊது உலைக் குருகின் உயிர்த்தனர்" .

அடிகள் கொல்லர் ஊது உலையை ஒப்பிட்டார். ஆம்  சோழப் பேரரசில்எப்போதும் வாள், வேல் 

போன்ற படைக்கலங்கள், படைக்கப்பட,

ஊது உலைகள் எப்போதும் ஊதப்பட்டே, இருக்குமன்றோ! அதனால் அந்த உவமையோ!


இவர்கள்  இப்போது ,இளவேனில் காலம்எனினும்

குளிர் காலத்தில் தங்கும் இடைப்பள்ளியில், சாளரங்களை அடைத்து , தங்கினர்-"கூதிர்ப் பள்ளி குறுங்கண்அடைத்து" ஏனெனில் இள வேனில் தென்றல் இவர்களைத் துன்புறுத்தாமலிருக்க வேண்டி, அடைக்கப்பட்ட அறையின் வெப்பத்தையும் தாங்கினர்.

அவர்கள் சந்தனப்பூச்சு, மணிமுத்தாரம் அணியவில்லை. குவளை, செங்கழுநீர் மலர்கள் தூவிய மஞ்சமோ அன்னப்பறவைகளின் சிறகுகள் பரப்பிய படுக்கையோ  " திருந்து துயில்"( ஆழ்ந்த உறக்கம்) தர இயலவில்லை. இத்தனைக்கும் இந்த " அன்னத்தூவிகள்"( அன்ன சிறகுகள்), தலைவன்அன்னமும், தலைவி அன்னமும் கூடியபோது உதிர்ந்த இறகுகளாம்!மென்மையோ மென்மை!


"பாலும் கசந்ததடி - சகியே

படுக்கை நொந்ததடீ

கோலக் கிளிமொழியும் - செவியில்

குத்தல் எடுத்ததடீ"

என்ற பாரதியின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.


"இடைக்குமிழ்  எறிந்து கடைக்குழை ஓட்டி"- மூக்கு சிந்தி , காதுக்குண்டலங்களை அகற்றி- தலைவனோடு கூடிய காலங்களை நினைத்து, கண்ணீர்முத்துக்களை உதிர்த்த வண்ணம் இருந்தனர்.


இத்தனை அவலச்சுவைகளுக்கு நடுவே அக்கால வாழ்க்கை முறையையும் அறிய வைத்த அடிகளின் அடிகள், சிறப்போ சிறப்பு.

Thursday, June 18, 2026

பயணங்கள் முடிவதில்லை…பயணக் கட்டுரை(20)

 பாகம் 20

பயணங்கள் முடிவதில்லை…


சான் பிரான்சிஸ்கோ மலைகள், பனிமூட்டம், வரலாறு மற்றும் தொழில்நுட்பம் சந்திக்கும் அற்புத நகரம்.*

அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ள சான் பிரான்சிஸ்கோவை நேரில் கண்டபோது, புத்தகங்களிலும் திரைப்படங்களிலும் பார்த்ததைவிட முற்றிலும் வேறொரு உயிருள்ள அருங்காட்சியகமாகத் தெரிந்தது.


1848-ல் தங்க வேட்டைக்குப் பின் ஆயிரக்கணக்கானோர் வந்து சிறிய குடியேற்றத்தை பரபரப்பான நகரமாக மாற்றினர். 1906-ல் பெரும் நிலநடுக்கமும் தீயும் அழித்தபோதும், சாம்பலிலிருந்து மீண்டெழுந்து பழமையையும் புதுமையையும் சமநிலையில் பாதுகாத்து நிற்கிறது.


சென்னை போன்ற சமதள நகரங்களில் பழகிய நமக்கு மலைமேடுகளில் கட்டப்பட்ட இந்நகரம் புதிய அனுபவம். செங்குத்தான தெருக்கள், திடீர் இறக்கங்கள் வியப்பூட்டின.

கடந்த 40 நாட்களாக அமெரிக்காவைச் சுற்றிப் பார்த்த எனக்கு, இந்திய வாகன ஓட்டுநர்களே மிகத் திறமையானவர்கள் என்று கர்வம் இருந்தது. ஆனால் சான் பிரான்சிஸ்கோவின் மலைச்சரிவு சாலைகளில் வாகனம் ஓட்டுவதைப் பார்த்த பிறகு, அவர்களின் திறமையை உணர்ந்தேன். பேருந்துகள் மற்றும் பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்காக சிவப்பு நிறப் பாதைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பொதுப் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் துல்லியமான நேரத்தில் பேருந்துகள் பயணிகளைச் சென்றடைகிறது.


பேருந்துகளுக்கான தனிப்பாதை, நடைபயணிகளுக்கான பாதுகாப்பான நடைபாதை, மிதிவண்டிகளுக்கான வசதிகள் என ஒவ்வொரு பயணிக்கும் உரிய மரியாதை அளிக்கும் வகையில் நகரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சான் பிரான்சிஸ்கோவின் சாலைகளில் பயணிக்கும் ஒவ்வொரு நொடியும், நகர வளர்ச்சி என்பது உயரமான கட்டிடங்களால் மட்டுமல்ல, மக்களின் வசதியையும் சுற்றுச்சூழலையும் சமமாக மதிக்கும் திட்டமிடலால் உருவாகிறது என்பதை உணர்த்தியது.

இந்தியாவில் வாகனத்தை parking செய்யும்போது சக்கரங்கள் நேராக இருக்கும் வகையில் நிறுத்துபவர்களையே நல்ல ஓட்டுநர்கள் என்று நாம் கருதுகிறோம். ஆனால் இங்கு சரிவான தெருக்களில் சக்கரங்களை நடைபாதை நோக்கி அல்லது எதிர்திசையில் திருப்பி நிறுத்துவதே சிறந்த பாதுகாப்பு முறை. பிரேக் செயலிழந்தாலும் வண்டி உருண்டு செல்லாமல் இருக்க இது கட்டாயம்.


மலைச்சரிவுகளில் கட்டப்பட்ட பல வீடுகளுக்கு நீண்ட படிக்கட்டுகள் ஏற வேண்டியிருக்கிறது. இந்தப் படிக்கட்டுகள் பழங்கால நம் நாட்டு கிராமங்களில் இருந்த படிக்கட்டுகளை நினைவூட்டின. கார்த்திகை தீபம் அன்று இந்தப் படிக்கட்டுகளில் அகல் விளக்குகள் ஏற்றினால் எத்தனை அழகாக இருக்கும் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை. சிறிய இடங்களிலும் மலர்ச்செடிகள், பூந்தொட்டிகள் நிறைந்திருக்கிறது.

பழைய கட்டிடங்களின் வெளிப்புறம் இரும்புப் படிக்கட்டுகள் உள்ளன. கட்டிடங்கள் இன்றைய தீ பாதுகாப்பு விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்பே உருவாக்கப்பட்டவை. எனவே கட்டிடத்தின் உள்ளகப் படிக்கட்டுகளை தீ மறித்துவிட்டால், ஜன்னல் வழியாக வெளியே வந்து இந்த இரும்புப் படிக்கட்டுகள் மூலம் தரைத்தளத்தை அடையும்படி அவை வடிவமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு தளத்திலும் சிறிய பால்கனிகளைப் போன்ற மேடைகள், அவற்றை இணைக்கும் இரும்புப் படிக்கட்டுகள், கீழ்தளத்தில் தேவைப்படும் போது மட்டுமே இறக்கக்கூடிய மடக்குப் படிகள் ஆகியவை அவற்றின் சிறப்பம்சங்களாகும். வண்ணமயமான விக்டோரியன் வீடுகளும், நவீன கண்ணாடிக் கட்டிடங்களும் இணைந்த காட்சி இந்நகரின் தனித்துவம்.


காலை வெயிலும், சில மணி நேரத்தில் பனிமூட்டமும் இங்கு சாதாரணம். பல இனம், மொழி, கலாசாரங்கள் இணைந்து வாழ்வது, நடைபயணிகளுக்கு முன்னுரிமை, ஒழுங்கு முறை ஆகியவை இங்குள்ள வாழ்க்கை முறையின் அடையாளங்கள்.

தொழில்நுட்பத் தலைநகரம்

அருகில் உள்ள சிலிக்கான் பள்ளத்தாக்கு (ஆப்பிள், கூகுள், மெட்டா, என்விடியா உள்ளிட்ட நிறுவனங்களின் தாயகம்) இந்நகரின் உலகளாவிய புகழுக்கு முக்கியக் காரணம். தங்க வேட்டை காலத்தில் செல்வத்தைத் தேடி வந்த மக்கள், இன்று அறிவு மற்றும் தொழில்நுட்பத்தைத் தேடி உலகெங்கிலும் இருந்து வருகின்றனர்.

Sunday, June 14, 2026

கர்ணன் ஆவோம்!

 கர்ணன் ஆவோம்!


உருவம் தாம் மனிதரில் எத்தனை வகை !

   உள்ளே ஒரே செந்நீர் வைத்த இயற்கை !


விருந்தாம் புவியின் மிசை நாம் வந்தது 

   விட்டுப் போவதெப்போ? தெரியாது அது


அருந்தும் நீர்ச் சுனையாய் நம் உள்ளும் 

   அன்றாடம் இரத்தம் அது சுரந்து ஓடும் 


வருந்தும் உயிர்களுக்கு வழங்கத் தானே 

   வாய்ப்பாம் குருதி ஈந்து ஆவோம் கர்ணனே


எரிந்து சாம்பலாக ஏனது போக வேண்டும்?

   எவரேனும் பெறட்டும், நன்றி சொல்லட்டும் 


சருகாய் ஒரு நாள் சரியுமாம் இம் மேனி

   சட்டென உறவுகள் வழியனுப்பும் "போ நீ!"


இருக்கும் போதே இயன்ற வரை தரலாம் 

   இதனால் வங்கியில் ஏதும் குறையாதாம்


கொசுறு :


மருந்து, மாத்திரை ஒரு புறம் இருக்கட்டும்

   மாங்கனிகள் சீராக்கும் குருதியோட்டம்


" குருதிக் கொடை" செய்வோம் 


__. குத்தனூர் சேஷுதாஸ் 14/6/2026



==================

உயிரெழும்பின் புறமுளைத்த இருதனல்கள்!

உதிரம் காக்கும் உயிரின் நிழல்கள்!


சதுரங்க உடலெனும் சாக்கடைக்குள்  தினம்-

சலிப்பின்றி செய்யும்  தூய்மைப் பணிகள்!


சிறுநீரக தேன்கூட்டின் நுண்குழலாம் நெஃப்ரான்கள்!

கோடிக் கண்கொண்டு குருதியை வடிகட்டும் தேனீக்கள்!


ரெனின் எனும் அமுதம் சுரக்குமது-

குருதியின் அழுத்தம் சீர் காக்கும்!


எரித்ரோபொய்டின் எனும் நீர் சுரக்கும்!

எலும்பு மஜ்ஜையை  தூண்டி சிவப்பணு சேர்க்கும்!

 


நீரின் அளவை  சீராய் நிறுத்தும்,

நித்தம் உயிரை உச்சி முகரும்!


மதியிழந்து உப்பைக் கூட்டினால்  இந்த

மதிப்புறு உறுப்பும் செயல் இழக்கும்!


விதியென்று நொந்து வலிமாத்திரை தின்றால் - அது

வேரோடு வாழ்வை அறுத்தெறியும்!


அமிர்தமாம் நீரை அள்ளிப் பருகுங்கள்!

அரிதாம் சிறுநீரகம் காத்துப் வாழுங்கள்!


இணையற்ற உறுப்பிது பழுதடையும் நேரம்-

இதயங்கள் சுருங்கி இருள்மடி சேரும்!


உயிரோடு வாழவொரு சிறுநீரகம் போதும்! 

உறவொன்றின் ஆயுளை மற்றொன்று உயிர்க்கும்!


கொடுப்பதே மனிதத்தின் உச்சக்கட்ட அறம் !

கொடையினால் மீளுமொரு சீவனின் தவம்!


சிறுநீரகத் தானத்தின் விழிப்புணர்வு ஏற்றிடுவோம்!

சுகமான வாழ்வை பிறருக்கும் ஈந்திடுவோம்!

- திருஞானசம்பந்தம்

Friday, June 12, 2026

சிலம்பொடு ஒரு பயணம்* (25) *அந்தி மாலைச் சிறப்புச் செய் காதை* *மயக்கும் மாலைப் பொழுது*

 ••••••••••••••••••••••••••••••••

*{25} சிலம்பொடு ஒரு பயணம்*


*அந்தி மாலைச் சிறப்புச் செய் காதை*


*மயக்கும் மாலைப் பொழுது*

••••••••••••••••••••••••••••••••


பொன்னந்தி மாலைப்பொழுதின் அருமை பெருமைகளை அற்புதமாக படம் பிடித்த இளங்கோவடிகள்,

அந்த மயக்கும் மாலைப் பொழுதிலே காதல் எனும் இன்பக் கடலிலே மூழ்கி - மதிமயங்கி - மயக்கமுற்று இன்பத்தில் திளைத்திருக்கும் மக்கள் பற்றி எழுதுகிறார்: 


*அந்தி வானத்து வெண்பிறை தோன்றிப் புன்கண் மாலைக் குறும்புஎறிந்து ஓட்டிப் பான்மையில் திரியாது பால்கதிர் பரப்பி*


பொன்னந்தி மாலைப் பொழுதான நேரத்தில் வானத்தில் பிறை நிலவாக தோன்றுகின்ற சந்திரன், மாலைப் பொழுது தரும் மையல் துன்பங்களை எல்லாம் துரத்தி, எங்கும் தன் பால் போன்ற வெண்ணிற ஒளியைப் பாய விட்டான். நட்சத்திரங்களின் தலைவனாகிய சந்திரனின் நிலவு ஒளி அந்தி மாலைப் பொழுதோடு புகாரில் புகுந்தது.


இவ்விடத்தில் ஒன்றினை கவனிக்க. இக்காதையின் துவக்கத்தில் சூரியனைக் குறிப்பிடுகையில், *விரிகதிர் ஞாயிறு* என்கிறார் புலவர். 


அதே காதையில் இப்பாடலில் தண்ணொளி  வீசும் சந்திரனைப் பார்த்து *பால் கதிர் பரப்பி* என விவரிக்கிறார். 


உலகத்திற்கே ஒளி தரும் கதிரவன் தன் கதிர்களை விரித்து பூ மகளை ஆரத் தழுவுகிறான். ஆதலால் அது *விரிகதிர்* ஆகிறது. 


வெண்ணிலவோ பால் போன்ற தனது வெண்ணிற ஒளியைப் பரப்பி பூவுலகிற்கு குளிர்ச்சி தருகிறது. அதனால் அது *பால் கதிர்* ஆகிறது. என்ன ஒரு சிந்தனை! என்ன நயமான சொல்லாட்சியுடன் கூடிய வர்ணனை!


இப்படி நிலா ஒளி சிந்தும் வேளையிலே, 


*நிலவுப் பயன் கொள்ளும் நெடு நிலாமுற்றத்துகக்  கலவியும் புலவியும் காதலற்கு அளித்து ஆங்கு*


வெண்ணிலவு ஒளி சிந்தி குளிர்வித்த வேளையிலே, தன் அகத்தே (இல்லத்தில்) நிலா முற்றத்தில் மாதவி சிவந்த ஆடையும் ஆடை மேல் பவள வட மேகலையும் அணிந்து அழகுற விளங்கினாள். இளமை எழில் பூத்த மாதவி  கோவலன் உடன் ஊடியும், கூடியும், அன்புடன் தழுவியும் இன்புற்று இருந்திட்டாள்.


புகார் நகரில், பிற மாந்தரோ


*வடமலைப் பிறந்த வான்கேழ் வட்டத்துத் தென்மலைப் பிறந்த சந்தனம் மறுகத் தாமரைக் கொழுமுறித் தாதுபடு செழுமலர்க் காமரு குவளைக் கழுநீர் மாமலர்*



வடக்கே இமயமலையில் இருந்து கொண்டு வரப்பட்ட வட்ட வடிவக் கல்லிலே, தென் பொதிகை மலையில் விளைந்த சந்தனக் கட்டையை அரைத்து வந்த சந்தனத்தை பூசிக் கொண்டனர். தாமரையின் இளந் துளிர்களையும், மகரந்தம் சிந்தும் பெரிய தாமரைப் பூக்களையும், கண் கவர் குவளைப் பூக்களையும், பெரிய செழுங்கழுநீர் பூக்களையும் இளந்தளிர் இலைகள் சேர்த்துக் கட்டிய படலை மாலையும், பெரிய முத்து மாலையும் அணிந்து கொண்ட மகளிர், 


*ஆவி அம் கொழுநர் அகலத்து ஒடுங்கி காவி அம் கண்ணார் களித்துயில் எய்த*


வண்ண வாசனைப் பொடிகளும், மலர்களும் சிந்திக் கிடக்கும் பஞ்சணை மெத்தையில் - வீசும் மாலைத் தென்றலில் மயங்கி - காதல் வேட்கை மிக, தம் உயிரணைய துணைவர்கள் மார்பில் முகம் புதைத்து, கருங்குவளை மலர் ஒத்த தம் கண்கள் மூடி இன்பத்தில் துயின்றனராம். 


இப்பாடல் வரிகளே இந்நாளில் வந்திட்ட திரைப்பட பாடல் வரிகள் சிலவற்றிற்கு அடித்தளம் இட்டதோ:

 

*மயக்கும் மாலை பொழுதே நீ போ போ..."*   


*இது மாலை நேரத்து மயக்கம்.. பூ மாலை போல் உடல் மணக்கும்*


எனும் வரிகளுக்கு வித்திட்டதோ!


(மயக்கும் மாலைப் பொழுது மழலைக் கவி சொல்லாடலில் தொடர்கிறது):


*திங்களின் வருகை:*

செக்கர் வானில் பால் நிலவு தோன்றுகிறது. இந்த நிலவு பாண்டிய மன்னர்களின் முன்னோடி. இளைய பாண்டிய மன்னர்கள் ("செருமாண் தென்னர்") " கொடிய  பகை அரசு கடியும்" திறன் கொண்டவர். இளைய நிலாவும் கொடிய இருளைத்தன் " பால் கதிர்" வீசிப் போக்குகிறதாம். 

உவக்கத்தக்க உவமை!


இள வயதில் தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை நினைவூட்டுகிறது.


குல முன்னோடியான  சந்திரன் ஒளியை நிலை நாட்டுவது போலப் பின்னால் குல வழித்தோன்றலான ஆரியப்படை கடந்த நெடுஞ்சேரலாதன் நீதியை நிலை நாட்டத் தன் இன்னுயிரையே ஈந்ததை நாம் காண உள்ளோம்.


மேலும் இந்த நிலவன் (இருபத்தேழு மனைவியரைக் கொண்டவன், ). "மாலைக்குறும்பு எறிந்து" ஓட்ட வல்லவன். அதாவது தலைவன்-தலைவி இடை ஏற்படும் பிரிவுத் துயரைப் போக்க வல்லவன்.


*மாதவியும் கோவலனும்:*

இவர்கள் "பல் பூஞ்சேக்கைப் பள்ளி"யில் கூடி இருந்தனர். படிப்பதும் பள்ளி. படுத்து உறங்குவதும் பள்ளிதான்! சமண முனிவர்கள்  முழைகளில் ( குகைகளில்) படுக்கை போன்ற அமைப்பில்( சமணப் பள்ளிகள் என்பர்) அமர மாணவரும் கூட அமர்ந்து கல்விப்பாடம் நடக்குமாம். அது கல்விப்பள்ளி. இங்கு நாம் காணும் பள்ளி "இல்வளர்"

முல்லை, மல்லிகை மலர்கள் பரப்பப்பட்ட படுக்கை. வீட்டில் , நன்கு உரமிட்டு, நேரத்தே நீர்வார்த்து வளர்க்கப்பட்ட செடிகள் ஈந்த பூக்கள். செழுமைக்கும், மணத்துக்கும் கேட்பானேன்!


மங்கையரில் மணி போன்ற மாதவி அணிகலன்கள் அணிந்து அழகுப்பெட்டமாக காணுற்றதை விவரித்தீர். 


இவள் கோவலனோடு கூடியும், ஊடியும் மகிழ்கிறாள்- "கலவியும் புலவியும் காதலர்க்கு அளித்து". 

எங்கு? "நிலவுப் பயன் கொள்ளும் நெடுநிலா முற்றத்" திலே.


*"வெள்ளி நிலா முற்றத்திலே விளக்கெரிய"* என்று கவியரசர் பாடியது நினைவுக்கு வருகிறது.


இவ்வாறு மாறி மாறி நடந்த நிகழ்வுகளால் கலைந்த ஒப்பனையை மீண்டும் சீர் செய்கிறாள்" கோவலற்கு எதிரிக் கோலம் கொண்ட மாதவி" என்கிறார் அடிகள்.


கூடி இருந்த பிற மகளிர்:

புகார் நகரம் தரை வாணிபம் , கடல் வாணிபம் இரண்டும் நன்கு வளர்ந்த நகரம் அன்றோ! மகளிர்

மேற்கு நாடுகளிலருந்து வந்த " அயிர்" என்னும் வெண்ணிற சர்க்கரைத்தூளோடு கிழக்கிலிருந்து வந்த கருமை நிற அகிலோடு , கூட்டிப் புகைப்பதை விடுத்தனர். இது சூட்டை உண்டாக்கும். எனவே குளிர் காலத்தில் மட்டுமே பயனபடுத்துவர். வடக்கிலிருந்து வந்த  ஒளிமிகு சந்தனகல்லில் பொதியமலை சந்தனத்தை அரைத்துப் பூசிக்கொண்டனாராம் , இளவேனில் காலம் என்பதால்.


இயற்கையோடு ஒட்டிய  வாசனைப் பொருட்கள்!-சருமத்துக்கு ஊறு விளைக்காது; சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தாது.

நல்ல இளவேனில் காலத்தில் அவர்கள் அணிந்த படலை மாலை மற்றும் பெரிய("பரிய")

முத்தாரம் பற்றியும், வண்ணப்பொடிகளும், நறுமண மலர்களும் பரப்பிய பஞ்சணைகள் பற்றியும் எடுத்துக்கூறினீர்கள்.

இதமான தென்றல்( " மந்த மாருதம்")

இவர்களை வருடுகிறது. 


"ஆவியங் கொழுந"ர்கள் மார்பில் பொருந்திய இவர்களின் கண்கள்  நீலோத்பல மலர்களை ("காவி அம் கண்ணார்") ஒத்தனவாம்.


சந்தனக்கலவை, நறுமணப் பொடிகள், நன்கு பயிரிடப்பட்ட வாச மலர்கள் என்று இந்த மாலை- அந்திமாலை, மயக்கும் மாலையா அல்லது மணக்கும் மாலையா என்று வியக்க வைக்கிறது.



*பயணம் தொடரும்*

Wednesday, June 10, 2026

பயணங்கள் முடிவதில்லை…பயணக் கட்டுரை(19)

 பாகம் 19

பயணங்கள் முடிவதில்லை…


*ஜப்பானிய தேநீர் தோட்டம் அமைதிக்குள் ஒலிக்கும் வரலாறு*


Golden Gate Park-இன் பசுமை வளாகத்திற்குள் அமைந்துள்ளது Japanese Tea Garden. நான் ஒரு அழகான தோட்டத்தைப் பார்க்கப் போகிறேன் என்றே நினத்திருந்தேன். ஆனால் அங்கிருந்து வெளியே வந்தபோது, ஒரு தோட்டத்தை மட்டுமல்ல, ஒரு நூற்றாண்டுக்கும் மேலான வரலாற்றையும், ஒரு மனிதனின் கனவையும், ஒரு சமூகத்தின் வேதனையையும், இயற்கையின் பொறுமையையும் பார்த்துவிட்டு வருகிறேன் என்ற உணர்வுடன் திரும்பினேன்.


1894-ஆம் ஆண்டு நடைபெற்ற California Midwinter Exposition என்ற உலகக் கண்காட்சிக்காக உருவாக்கப்பட்ட ஒரு சிறிய ஜப்பானியக் கிராமத்தின் எஞ்சிய பகுதியே இன்று புகழ்பெற்ற Japanese Tea Garden ஆக விளங்குகிறது. கண்காட்சி முடிந்தவுடன் அகற்றப்பட வேண்டியிருந்த இடம், Makoto Hagiwara என்ற ஜப்பானியரின் அர்ப்பணிப்பால் நிரந்தர வாழ்வு பெற்றுள்ளது. 


தோட்டத்தின் நுழைவாயிலைக் கடந்தவுடன் நகரத்தின் இரைச்சல் மறைந்து, குளங்களில் மெதுவாக நீந்தும் வண்ணமயமான கோய் மீன்கள், நிழல் பரப்பிய மரங்கள், கவனமாக வடிவமைக்கப்பட்ட நடைபாதைகள், கல் விளக்குகள், சிறிய நீர்வீழ்ச்சிகள் என அனைத்தும் இணைந்து அமைதியியான ஓர் இசையை உருவாக்கியிருந்தன. அங்கே யாரும் உரக்கப் பேசவில்லை. பேசினாலும் தன்னிச்சையாக குரலைத் தாழ்த்திக் கொண்டனர். அந்த இடத்தின் அமைதியே அதற்கு காரணமாக இருந்தது.


தோட்டத்தின் புகழ்பெற்ற Drum Bridge-ஐ நோக்கி நடந்தோம். கடுமையாக வளைந்த அந்த மரப்பாலம் முதலில் ஒரு கலைப்பொருள் போலத் தோன்றியது. பின்னர் அதன் பின்னணியை அறிந்தபோது! ஜப்பானிய மரபில் இந்தப் பாலம் வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளைக் குறிக்கிறது. கீழிருந்து பார்க்கும்போது அது ஒரு முழு வட்டத்தின் பாதி போலத் தோன்றுவதால் அதற்கு Drum Bridge என்ற பெயர் ஏற்பட்டது.


குளங்களில் நீந்தும் கோய் மீன்கள் வெறும் அலங்கார மீன்கள் அல்ல. அவை பொறுமை, உறுதி, நீண்ட ஆயுள் ஆகியவற்றின் அடையாளங்களாகக் கருதப்படுகின்றன. அதுபோல பாதைகளின் ஓரங்களில் காணப்படும் கல் விளக்குகள் ஒளி, ஞானம் மற்றும் ஆன்மீக வழிகாட்டுதலின் குறியீடுகளாகப் பார்க்கப்படுகின்றன.


எங்களுடன் வந்த அதிகாரப்பூர்வ வழிகாட்டியான Patty (ஆம் அவரது அடையாள அட்டையில் அப்படித்தான் உள்ளது) பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்தார். அவற்றில் ஒன்று, கொரோனா காலத்தில் தோட்டம் முழுவதும் மூடப்பட்டிருந்த நாட்களில், அங்குள்ள மணிகள் தானாக ஒலித்ததாக தோட்டப் பணியாளர் கூறியது தான். அதை அவர் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் அந்த அமைதியான சூழலில் நின்றபோது, வெறிச்சோடிய தோட்டத்தின் நடுவே காற்றில் ஒலிக்கும் மணிச் சத்தத்தை மனக்கண்களில் கற்பனை செய்ய முடிந்தது. உண்மையா, கற்பனையா என்பதைவிட அந்தக் கதை அந்த இடத்தின் மர்மத்தை அதிகரித்தது. மேலும் அதனால் தான் நாமும் கொரோனா காலத்தில் மணி அடிக்கும் படி அறிவுறுத்தப்பட்டோமா என்ற கேள்வியும் எழுந்தது. 


தோட்டத்தின் மற்றொரு முக்கிய அடையாளம் Pagoda. முதலில் அதை ஒரு அலங்காரக் கட்டிடம் என்று தான் நினைக்கத் தோன்றியது, பின்னர்தான் அதன் முக்கியத்துவத்தை அறிந்த்தோம். பல அடுக்குகளுடன் உயர்ந்து நிற்கும் அந்தக் கோபுரம், புத்த மத மரபின் அடையாளமாகும். நாம் கோபுரத்தைப் பார்த்தால் கோவிலை நினைப்பது போல, ஜப்பானியர்கள் Pagoda-வைப் பார்த்தால் தங்கள் ஆன்மீக பாரம்பரியத்தை நினைப்பார்கள். சுவாரஸ்யம் என்னவெனில் “Pagoda” என்பது ஜப்பானியச் சொல் அல்ல, ஆசியக் கோபுரங்களை விவரிக்க ஐரோப்பியர்கள் பயன்படுத்தத் தொடங்கிய பெயராகும்.


இந்தத் தோட்டத்தின் இதயமும் ஆன்மாவும் Makoto Hagiwara தான். அவர் ஒரு தோட்டக்காரர் மட்டுமல்ல, ஒரு கனவாளர். தனது சொந்தப் பணத்தையும் செலவிட்டு ஜப்பானிலிருந்து அரிய தாவரங்கள், கல் விளக்குகள், கலைப்பொருட்கள், அலங்காரக் கூறுகள் ஆகியவற்றைக் கொண்டு வந்து இந்த இடத்தை மாற்றியமைத்தார். ஆனால் வரலாறு அவரிடம் நியாயமாக நடந்து கொள்ளவில்லை.


ஒரு கட்டத்தில் இனவெறி காரணமாக அவரை நிர்வாகத்திலிருந்து நீக்கினர். அவருடைய பங்களிப்பு மறக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு தோட்டத்தின் தரம் குறைந்ததால். நிர்வாகம் தவறை உணர்ந்து மீண்டும் ஹகிவாராவை வருமாறு கேட்டுக்கொண்டனர். அவர் திரும்பி வந்தார். தோட்டத்திற்குள்ளேயே தனது குடும்பத்துடன் வாழ்ந்தார். இன்று பார்வையாளர்களை மயக்கும் தோட்டத்தின் பெரும்பாலான அழகு அவரது இரண்டாவது வருகைக்குப் பிறகு உருவானது. திறமைக்கும் அர்ப்பணிப்பிற்கும் மாற்று இல்லை என்பதை இந்த நிகழ்வு நிரூபிக்கிறது.


தோட்டத்தின் மற்றொரு சுவாரஸ்யமான வரலாறு Fortune Cookie. இன்று உலகம் முழுவதும் சீன உணவகங்களுடன் தொடர்புபடுத்தப்படும் Fortune Cookie, உண்மையில் இந்த Japanese Tea Garden-இல்தான் முதன்முதலில் பிரபலமடைந்ததாக பலர் கருதுகின்றனர். ஒரு சிறிய தேநீர் தோட்டம் உலக உணவுக் கலாச்சாரத்திலும் தனது தடத்தைப் பதித்திருப்பது ஆச்சரியமளிக்கிறது.


தோட்டத்தில் மேலும் ஒரு தகவல் என்னை நெகிழச் செய்தது. அங்கு வளர்க்கப்படும் சில Ginkgo மரங்கள், ஹிரோஷிமா அணுகுண்டுத் தாக்குதலிலிருந்து உயிர் பிழைத்த மரங்களின் சந்ததிகளாம். மனித வரலாற்றின் மிகப் பெரிய அழிவுகளில் ஒன்றைத் தாண்டி உயிர் வாழ்ந்த மரங்களின் வாரிசுகள் இன்று அமைதியாக அங்கே வளர்கின்றன. *மனிதர்கள் போர்களை உருவாக்குகிறார்கள், மரங்கள் வாழ்க்கையைத் தொடர்கின்றன* என்ற உண்மை மனதில் தோன்றியது.


இந்தத் தோட்டத்தின் வரலாற்றில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தும் அத்தியாயம் இரண்டாம் உலகப்போரின் காலத்தில் எழுதப்பட்டது. Pearl Harbor தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவில் ஜப்பானியர்களுக்கு எதிரான மனநிலை அதிகரித்தது. பல ஆண்டுகள் பெருமையுடன் அழைக்கப்பட்ட *Japanese Tea Garden* என்ற பெயரே மாற்றப்பட்டது. *Japanese* என்ற வார்த்தை நீக்கப்பட்டு, *Oriental Tea Garden* என்ற பெயர் சூட்டப்பட்டது. அது வெறும் பெயர் மாற்றம் அல்ல, ஒரு கலாச்சார அடையாளத்தை மறைக்க முயன்ற ஒரு காலத்தின் பிரதிபலிப்பு.


அதே காலத்தில், இந்தத் தோட்டத்திற்காக வாழ்க்கையை *அர்ப்பணித்த ஹகிவாரா குடும்பமும் வெளியேற்றப்பட்டது.* அவர்கள் வாழ்ந்த வீடு, அவர்கள் உருவாக்கிய நினைவுகள், அவர்கள் பராமரித்த தோட்டம் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டன. அவர்களால் மீண்டும் தங்கள் பழைய வாழ்க்கைக்கு திரும்ப முடியவில்லை.


காலம் மாறியது. போர் முடிந்தது. சமூகத்தின் மனநிலையும் மாறியது. ஒருகாலத்தில் மறைக்கப்பட்ட *Japanese* என்ற பெயர் மீண்டும் மீட்டெடுக்கப்பட்டது. *Oriental Tea Garden* என்ற பெயர் நீக்கப்பட்டு, மீண்டும் *Japanese Tea Garden* என்ற வரலாற்றுப் பெயர் வழங்கப்பட்டது. *ஹகிவாராவின் பங்களிப்பு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.* தோட்டத்தின் முன்புறச் சாலைக்கு *Hagiwara Tea Garden Drive என்று பெயரிடப்பட்டது.* வெளியேற்றப்பட்ட குடும்பம் திரும்பவில்லை, ஆனால் அவர்கள் உருவாக்கிய கனவு திரும்பி வந்தது.


தோட்டத்தை விட்டு வெளியேறியபோது, பயணத்தின் மற்றொரு காட்சி நினைவுக்கு வந்தது. கடற்கரையை ஒட்டிய சாலையில் நான் கண்டிருந்த *Tsunami Evacuation Route* என்ற பலகை. *ஒருபுறம் அமைதியைக் கற்றுத்தரும் ஜப்பானியத் தோட்டம், மறுபுறம் இயற்கையின் சக்தியை நினைவூட்டும் சுனாமி எச்சரிக்கை.* வாழ்க்கையும் அப்படித்தானோ? அழகும் அபாயமும், அமைதியும் அச்சமும், நினைவுகளும் நம்பிக்கைகளும் ஒன்றோடொன்று இணைந்தே இருக்கின்றன.


காற்றில் அசையும் ஒவ்வொரு இலைக்கும், குளத்தில் நீந்தும் ஒவ்வொரு கோய் மீனுக்கும், வளைந்த பாலத்தின் ஒவ்வொரு மரத்தட்டைக்கும் பின்னால் ஒரு வரலாறு மறைந்திருக்கிறது. அந்த வரலாறுதான் இந்தத் தோட்டத்தின் உண்மையான அழகு.


அது  ஒரு தோட்டம் அல்ல. ஒரு உயிருள்ள வரலாற்றுப் புத்தகம்.

Sunday, June 7, 2026

*ஜூன் 7 நடந்த குழந்தைகளுக்கான சொல் வேந்தர் மன்றத்தின் விவரணம்*

 *ஜூன் 7 நடந்த குழந்தைகளுக்கான சொல் வேந்தர் மன்றத்தின் விவரணம்*


நல்ல துவக்கம். 

வந்திருந்த குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்றது *சொல்வேந்தர் மன்றம்* பெரும் வெற்றி பெறும் என்பதற்கு கட்டியம் கூறுகிறது. 


இடம்: ஜாமிங் ரூம், பன் பயன்பாட்டு பெருவரங்கம் (MPH)

நேரம்:  மாலை 6 to 7


நிகழ்ச்சியின் தொடக்கமாக  திருமதி. மகாலட்சுமி அவர்கள், குழந்தைகளிடம் எப்படி பேச வேண்டும், பேசும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன, பேச்சுக்கான தகவல்களை எவ்வாறு சேகரிக்க வேண்டும் போன்ற கேள்விகளை எழுப்பி நிகழ்ச்சியைத் தொடங்கினார். மேடைப் பேச்சு இருக்கானா சில வழிமுறைகளையும் கூறி வழிகாட்டினார். குழந்தைகள் மிகுந்த ஆர்வத்துடன் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.


அதனைத் தொடர்ந்து திருமதி. தேவி அவர்கள், பேச்சின் அடிப்படை அம்சங்கள் மற்றும் ஒரு பேச்சை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பதை விளக்கமாக எடுத்துரைத்தார். பின்னர் நமது தமிழ் சங்கத் தலைவர்  திரு. ஸ்ரீவி   ஐயா அவர்கள் உரையாற்றினார்.

பள்ளியில் பேசும்போதும்,  நம் சங்கத்தில் பேசும்போதும் எப்படி இருந்தது போன்ற கேள்விகளை கேட்டு அதற்கான பதில்களை குழந்தைகளிடம் இருந்து பெற்றார், பேச்சின் வகைகள் குறித்தும் உரை ஆற்றினார். 


குழந்தைகள் அனைவரும் தங்களைப் பற்றிய ஒரு எளிய அறிமுகத்தை அனைவரின் முன்னிலையிலும் தன்னம்பிக்கை உடன் தெளிவாக வழங்கினர்.


எதிர்கால நிகழ்வுகள் குறித்து குழந்தைகளுக்கு தகவல்கள் வழங்கப்பட்டன. மேலும், 15 நாட்களுக்கு ஒருமுறை “சொல்வேந்தர் மன்றம்” நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.


 திரு. சாய் ராம் ஐயா மற்றும்  திரு.தியாகராஜன் ஐயா  அவர்கள் ஆகியோர் பேசும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய அழகான கருத்துகளை ரத்தின சுருக்கமாக பகிர்ந்து கொண்டனர்.


நிறைவாக, நித்தின் அவர்கள் தானே முன்வந்து நன்றியுரை வழங்கினார்.


சிறார்களுக்கு மட்டுமல்ல நம் தமிழ்ச் சங்கத்திற்கும் ஒளிமயமான எதிர்காலம் இவர்கள் மூலம் உருவாகப் போகிறது என்பது உறுதியாகிறது. 


பெற்றோர்களில் சிலர் வந்திருந்து, கூட்டம் நிறைவுறும் வரை இருந்து ஆலோசனை நல்கியதும் குறிப்பிடத் தக்கது. 


நமது மகாகவி பாரதி தமிழ்ச் சங்கத்தின் மணிமகுடத்தில் ஒளி வீசும் வைரமாக இந்த சொல்வேந்தர் மன்றம் நிச்சயம் திகழும். 


பொறுப்பாளர்களுக்கும், பெற்றோர்களுக்கும்,  கலந்து கொண்ட சிறார்கள் அனைவருக்கும் நமது சங்கம் வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கிறது.


 (7/6/26) சொல்வேந்தர் மன்றத்தில் பங்குபெற்ற குழந்தைகள்:


   1. நிவர்ஷனா

2. பிரதிகா

3. மஹாலக்ஷ்மி 

4. சந்தோஷ்

5. திருவிக்ரம் 

6. ஜனனி 

7. சாதனா 

   8. நிதின் 

9. அர்மான் 

10. ஹர்ஷிதா

  11.  அகரன்

12. அர்ஃபா 

13. ஆதவன் 

14. ஆராதனா 

15. சைந்தவி 

16. ரித்தின்

17. யாழினி 

18. தனிஷ்கா


Saturday, June 6, 2026

சிலம்பொடு ஒரு பயணம் (24) *அந்தி மாலைச் சிறப்புச் செய் காதை* *பொன் அந்தி மாலைப் பொழுது தரும் மயக்கம்*

 ••••••••••••••••••••••••••••••••

*{24} சிலம்பொடு ஒரு பயணம்*


*அந்தி மாலைச் சிறப்புச் செய் காதை*


*பொன் அந்தி மாலைப் பொழுது தரும் மயக்கம்*

••••••••••••••••••••••••••••••••



இந்தக் காதையில் மாலை நேரத்தை ஏன் *மயக்கும் மாலை* எனக் கூறுகிறார்கள் என்பதை விளக்குவதோடு, அப்படிப்பட்ட மாலைப் பொழுதில் மாதவி மகிழ்ந்திருக்க, கண்ணகியோ கண்ணீர் உகுத்து கவலையோடு இருக்கிறாள் என்பதை விளக்கும் பகுதி.


*விரி கதிர் பரப்பி, உலகம் முழுது ஆண்ட  ஒரு தனித் திகிரி உரவோன் காணேன்;*


*அம் கண் வானத்து, அணி நிலா விரிக்கும் திங்கள் அம் செல்வன் யாண்டு உளன்கொல்*


விரிந்த ஒளிக் கதிர்களைப் பரப்பி உலகம் முழுவதையும் ஆண்ட உரவோனாகிய (வலிமை மிக்கவனாகிய) ஞாயிற்றைக் காண முடியவில்லை. 

(*உரவோன்* எனும் சொல் *வலிமை மிக்கவன்* என்ற  பொருளில் வரும். *உறவோன்* எனும் சொல்லோ உறவினர் எனும் பொருள் தரும் என்பதறிக)


நிலவொளி வீசி  வானத்தில் உலாவரும் திங்கள்-அம்-செல்வன் எங்கே இருக்கிறானோ?


*திசை முகம் பசந்து, செம் மலர்க் கண்கள் முழு நீர் வார,* 


*திரை நீர் ஆடை இரு நில மடந்தை அரைசு கெடுத்து, அலம்வரும் அல்லல்காலை-*


திசையின் முகங்கள் இருள் என்னும் பசப்பு நோயில் வாடுகின்றன. 


நிலம் என்னும் பெண் தன் கருநீலக் கடல் எனும் ஆடை போர்த்தியிருக்கும் தன் உடம்பு முழுவதும் நடுங்கிக் (அதாவது கடலில் அலைகள் நிலமகள் உடல் நடுங்குவதற்கான உவமை எனக் கொள்க) கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறாள். 


அதாவது தன் காதலன் கதிரவன் மறைந்து விட அவன் பற்றி தகவல் சொல்லும் அவன் தோழன் வராத நிலையில் நில மகள் கலங்கி நிற்கிறாளாம். இந்நிலையில் கண்ணகி இருக்கிறாள்.


அந்த பொன் அந்தி மாலைப் பொழுதை மேலும் இவ்வாறு விளக்குகிறார் அடிகள்:


*தாழ் துணை துறந்தோர் தனித் துயர் எய்த;*


*காதலர்ப் புணர்ந்தோர் களி மகிழ்வு எய்த;*


காதலனின் துணையைப் பிரிந்தவர் தனிமைத் துயலில் வாடி நின்றனர். 


காதலனைத் தழுவிக் கொண்டிருப்பவர்கள் களிப்பு மிகுந்து மகிழ்வில் திளைக்கின்றனர். 


*குழல் வளர் முல்லையில் கோவலர் தம்மொடு மழலைத் தும்பி வாய் வைத்து ஊத;*


*அறுகால் குறும்பு எறிந்து, அரும்பு பொதி வாசம் சிறுகால் செல்வன் மறுகில் தூற்ற;*


*எல் வளை மகளிர் மணி விளக்கு எடுப்ப,*


*மல்லல் மூதூர் மாலை வந்து இறுத்தென*


முல்லை நிலத்தில் குழல் போல் நீண்ட காம்புடன் பூக்கும் முல்லைப் பூவில் வண்டுகள் வாயை வைத்து ஊதுகின்றனவாம். 


அதுபோலவே கோவலர் (ஆயர்கள்), தம் புல்லாங் குழலில் இன்னிசைக்கின்றனர். 


தென்றல் தனது மிருதுவான காற்றால் மலர்களின் மணத்தை சுமந்து வந்து தெருவெங்கும் பரப்பிக் கொண்டிருக்கிறது. 


ஒளிரும் வளையலுடன் மகளிர் விளக்கை ஏற்றிக் கொண்டிருக்கின்றனர். 


வளம் மிக்க பழமையான இந்த ஊரில் இப்படி மாலைக்காலம் வந்திருக்கிறது. இதையெல்லாம் அனுபவித்து மாதவி மகிழ்வோடு இருக்கிறாள். 


இப்போது மழலைக் கவி தொடர்கிறார்:


அரங்கேற்ற காதையில் இருந்து அந்திமாலைச் சிறப்புக்காதையில் நுழைகிறோம்.


தன்மனை தனையும்,

மனையாளையும் விட்டு 

விட்டு ஆடல்மகள் வயப்பட்டு அவள்அகம் புகுந்தான் கோவலன்.


ஒரு " இல்" லில் இன்பம்; மற்றொரு " இல்" லில் இன்பம்  "இல்" லை.


இக்காவியமே *"ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்"* என்று ஒரு கருத்தை வலியுறுத்தும் என்பர்.

இந்த ஊழ் 

ஆகூழ் - நெருங்கின பொருள் கைப்படத் தேவையான முயற்சி,

போகூழ் அப்பொருள் கைவிட்டுப்போகச்செய்யும் சோர்வு என இருவகைப்படும் என்று கொள்ளலாம். ஒன்று கைப்படச் செய்யும்; மற்றொன்று கை விடச்செய்யும்.

கோவலன் என்னும் கைப்பொருள் கைமாறியதும் இரு மகளிரின் அவரவர் ஊழ்வினை 

வசத்தாலோ!


இந்த நிலையைப் பிரதிபலிப்பதே, அந்திமாலை சிறப்புச்செய்காதை.


அந்தி மாலை என்பது பகலும் இரவும் சந்திக்கும் நேரம் எனக் கொள்ளலாம்.

இந்நேரம் கூடியவர்க்கு இன்பமும், ஊடியவர்க்கு துன்பமும்  உணர்த்தும் காலமாக இலக்கியங்கள் விவரிக்கின்றன.


அடிகள் மட்டும் விலக்கா என்ன? 


அவர்அடிகளை 

ஒட்டிச்செல்வோம்.


திசைகள் பசந்து:

இந்த அந்திமாலையில் நில மடந்தை வருந்துகிறாளாம்.

எப்படிப்பட்டவள்?

திரை நீர் ஆடை இருநில  மடந்தை "

-*"அலைகளையுடைய கடலைத் தன் ஆடையாகக் கொண்ட பூமிதேவி"*

"நீராருங் கடலுடுத்த நிலமடந்தை" நமக்குப் பழக்கமானவள்தானே. 


இவள் கணவனான ஆதவன் மறைந்த துக்கத்தோடு , மகன் நிலவன் இன்னும் வரவில்லை என்னும் கவலையும் சேர்ந்து கொள்ள, அவளின்திசைமுகங்கள்" பசந்து" காணப்பட்டனவாம்.

அந்திமாலை " அல்லல் காலை- துன்ப வேளை ஆயிற்று.

பசந்து என்பது பசலை நோய்-தலைவனைப்பிரிந்து வருந்தும்தலைவியின் உடலில் தோன்றும் நிறமாற்றங்கள். அகநானூறு விவரமாகப் பேசும் நோய்.


மாலயும் வந்ததே:

"மல்லல் மூதூர்" பூம்புகாரில் மாலை வந்தது . 

எப்படி?

நாட்டைப் பகைவரிடம் காட்டிக் கொடுத்த துரோகிகளால் கவலையுறும் குடிமக்கள் போல   காதலனைப் பிரிந்தவர் வாடுகின்றனர்.வெற்றி பெற்ற வேந்தன் மகிழ்வது போல், தலைவனோடு கூடிய தலைவியர் காதல் களிப்பில் மகிழ்வுறுகின்றனர்.எளிய மக்களின் வாழ்க்கை நாட்டு நடப்புகளோடுப் பின்னிப் பிணைந்திருப்பதைக் கவி நயத்தோடு உரைக்கிறார் அடிகள்.

ஆநிரை மேய்ப்பர்கள் முல்லைப் பண்ணில்( மோகன இராகம் அல்லது அதன் தாய் இராகம் அரி காம்போதி )குழலிசைத்து வர,  குழல் போல் நீண்ட காம்புகளை உடைய முல்லைப்பூக்களில் வண்டுகள் ஊத , மெல்லிய தென்றல் பூக்களின் நறுமணத்தை எங்கும் பரவச்செய்ய, ஒளிரும் வளைக்கர மகளிர் வீடுகளில் விளக்கேற்ற , அந்தி மாலை வரவேற்கப்பட்டது.


மாலைப் பொழுது ஒன்றுதான். பிரிவோ கூடலோ  அவரவர் சூழலுக்கு ஏற்ப மாறுபடும் என்று உணருகிறோம்.

Friday, June 5, 2026

பயணங்கள் முடிவதில்லை…பயணக் கட்டுரை(18)

 *பாகம் 18*

பயணங்கள் முடிவதில்லை…

*தங்கக் கனவுகளின் வாயிலும், சுதந்திரத்தின் சாட்சியும்*

அமெரிக்காவின் மேற்குக் கரையில் அமைந்துள்ள சான் பிரான்சிஸ்கோ நகரம். உயரமும் தாழ்வும் கொண்ட சாலைகள், குளிர் காற்றோடு கலந்து வரும் கடலின் உப்பு வாசனை, எப்போது வேண்டுமானாலும் நகரத்தை விழுங்கிவிடும் போல மிதக்கும் வெண்பனி இவைற்றின்  நடுவே நம்மை  ஈர்த்தபடி நின்றது *Golden Gate Bridge.*


Golden Gate Bridge என்ற பெயரை முதலில் கேட்டவுடன், நான் நினைத்தது நம் ஊர்களில் *தங்கக்கூரை வேயப்பபட்ட கோயில்கள் இருப்பது போல  இங்கு *தங்கப் பாலம்* என்றே எண்ணியிருந்தேன்.ஆனால் அந்தப் பாலத்தில் தங்கமோ தங்க நிறமோ கூட இல்லை. சான் பிரான்சிஸ்கோ *வளைகுடாவுக்கும் பசிபிக் பெருங்கடலுக்கும் இடையிலான கடல் நுழைவாயிலையே Golden Gate” என்று அழைக்கிறார்கள்.* அதன்மேல் கட்டப்பட்ட பாலத்திற்கும் அதே பெயர் வைக்கப்பட்டுள்ளது. 


அந்தப் பெயருக்குள் மறைந்து கிடப்பது அமெரிக்க வரலாற்றின் ஒரு பெரிய அத்தியாயம். 1848 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டபோது, உலகம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் தங்க வேட்டைக்காக அங்கு விரைந்தனராம். *Gold Rush* என்று அழைக்கப்பட்ட அந்தக் காலத்தில், கடல் மார்க்கமாக வந்தவர்கள் சான் பிரான்சிஸ்கோவுக்குள் நுழைய வேண்டிய முக்கிய வாயில் இதுவே. *தங்கக் கனவுகளோடு வந்த கப்பல்கள் இந்தக் கடல்வாசலை கடந்து சென்றதால், “Golden Gate” என்ற பெயர் மக்களின் மனதில் “தங்கத்தின் நுழைவாயில்”என்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது. 


இந்தப்பாலம் 1933 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1937 ஆம் ஆண்டு திறக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் உலகின் மிகப் பெரிய தொங்கு பாலங்களில் ஒன்றாக இது கருதப்பட்டது. கடுமையான காற்று, ஆழமான கடல், வேகமான நீரோட்டம், அடிக்கடி மூடும் பனிமூட்டம் இத்துனை சவால்களையும் மீறி  மனித முயற்சி அதை வென்றது.


பனிமூட்டத்திலும் தெளிவாகத் தெரியும் வகையில் பாலத்திற்கு *சிவப்பு கலந்த ஆரஞ்சு நிறம்* “International Orange” என்று அழைக்கப்படும் அந்த நிறம், தேர்ந்தெடுக்கப்பட்டது. இன்று அந்த நிறமே பாலத்தின் அடையாளமாக உள்ளது.


Golden Gate Bridge மீது நின்று பார்த்தபோது, ஒரு புறம் நகரத்தின் உயரமான கட்டிடங்கள், மறுபுறம் எல்லையற்ற கடல், கீழே அலைகளை வென்று செல்லும் கப்பல்கள் இவை அனைத்தும் சேர்ந்து ஒரு திரைப்படக் காட்சியைப் போல தோன்றின. குறிப்பாக மாலை நேரத்தில் சூரிய ஒளி பாலத்தின் மேல் விழும் போது, அது உண்மையிலேயே பொன்னால் ஆன பாலம் போல ஒளிர்ந்தது.  *Pizza சாப்பிட எத்தனிக்கும் போது  நம் ஊத்தப்பம் நினைவிற்கு வருவது போல்* எனக்கு நம் Howrah bridge நினைவிற்கு வந்ததின் பலன்:

Golden Gate நவீன suspension தொழில்நுட்பத்தின் சிறப்பு. நீண்ட தூரம், உயரமான தூண்கள், கடல் மற்றும் மலைகளுக்கு இடையே அமைந்திருப்பது அதன் அழகைப் பெருக்குகிறது. மூடுபனி, கடல் அலைகள், சான் பிரான்சிஸ்கோ நகரக் காட்சி இவை இதை உலக அதிசயமாக்குகின்றன.

*Howrah Bridge cantilever* வகை ஆற்றின் நடுவில் எந்த தூணும் இல்லாமல் கட்டப்பட்டது (அப்போது பெரும் சாதனை). கொல்கத்தாவின் பரபரப்பான வாழ்க்கையுடன் இணைந்து, தினசரி மக்கள் நடமாட்டத்தின் சின்னம். இரவில் விளக்குகள் பளிச்சிடும் போது அழகு, ஆனால் இயற்கைச் சூழல் Golden Gate அளவுக்கு இல்லை.

Golden Gate பல மடங்கு நீளமானது மற்றும் உயரமானது. Howrah Bridge பிஸியான போக்குவரத்து மற்றும் வரலாற்றுப் புகழில் முன்னிலையில் உள்ளது. 

இரண்டும் தங்கள் நகரங்களின் அடையாளம். Golden Gate க்கு சுற்றுலாப் புகழ் அதிகம் (அமெரிக்கா என்பதாலா! ) Howrah Bridge அன்றாட வாழ்வின் ஒரு பகுதி.


அந்த அழகின் அருகே, கடலின் நடுவே தனிமையாக நின்றுகொண்டிருந்த இன்னொரு தீவு எங்கள் கவனத்தை ஈர்த்தது *அல்காட்ராஸ்.*


சான் பிரான்சிஸ்கோ நடுவே அமைந்துள்ள அந்தக் கல் தீவு, ஒரு காலத்தில் அமெரிக்காவின் மிகவும் பாதுகாப்பான சிறைச்சாலையாகப் புகழ்பெற்றது. 1934 முதல் 1963 வரை இயங்கிய அந்தச் சிறையில் ஆபத்தான குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருந்தனர். சுற்றிலும் உறையவைக்கும் குளிர்கடல், வேகமான நீரோட்டம், கடுமையான அலைகள் ஆகவே அங்கிருந்து தப்பிப்பது இயலாத காரியம் என்று கருதப்பட்டது. அதனால் அந்தச் சிறைக்கு *The Rock* என்ற பெயரும் இருந்தது.


அமெரிக்காவின் பிரபல கும்பல் தலைவன் Al Capone கூட அங்கு அடைக்கப்பட்டிருந்தானாம். ஆனால் அல்காட்ராஸை உலக வரலாற்றில் மர்மத்தின் அடையாளமாக மாற்றியது 1962 ல் நடந்த தப்பிப்புச் சம்பவம். மூன்று கைதிகள் சிறைச் சுவரை உடைத்து இரவில் தப்பிச் சென்றனர். அவர்கள் கடலைக் கடந்து உயிருடன் தப்பினார்களா, அல்லது அலைகளில் மூழ்கினார்களா என்பது இன்று வரை தெரியாத புதிராகவே உள்ளது.


அல்காட்ராஸ் வரலாறு சிறையுடன் முடிவடைந்து விடவில்லை. 1963-ல் சிறை மூடப்பட்ட பிறகு, 1969-ஆம் ஆண்டு அமெரிக்க பூர்வகுடி மக்களான Native Americans அந்தத் தீவை ஆக்கிரமித்து உரிமை கோரினர். “Indians of All Tribes” என்ற அமைப்பின் கீழ் அவர்கள் அங்கு குடியேறி, *இந்த நிலம் எங்களுடைய முன்னோர்களின் நிலம்* என்று உலகிற்கு அறிவித்தனர். கல்வி, கலாசார மையம், அருங்காட்சியகம் ஆகியவை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.


*ஒருகாலத்தில் சுதந்திரத்தை பறித்த சிறைச்சாலையாக இருந்த அல்காட்ராஸ், பின்னாளில் உரிமையும் அடையாளமும் கோரி எழுந்த போராட்டத்தின் சின்னமாக மாறியது என்பது வரலாற்றின் மிகப் பெரிய வியப்புகளில் ஒன்று.*


இன்று அல்காட்ராஸ் ஒரு முக்கிய சுற்றுலா தலமாக மாறியுள்ளது. படகில் அந்தத் தீவுக்குச் செல்லும்போது, பின்னணியில் Golden Gate Bridge சிவப்பு கோடாகத் தெரியும் காட்சி மனதை மயக்குகிறது. *வெளியுலகின் சுதந்திரம் கண்முன் தெரிந்தும் அதை அடைய முடியாமல் வாழ்ந்த கைதிகளின் ஏக்கத்தை அந்தச் சுவர்கள் இன்னும் சுமந்து கொண்டிருப்பது போல் தோன்றியது.*


சான் பிரான்சிஸ்கோ வெறும் நகரமல்ல, அது கனவுகளும் போராட்டங்களும் கலந்த ஒரு வரலாற்று உலகம். Golden Gate Bridge மனிதனின் சாதனையை நினைவூட்டுகிறது. அல்காட்ராஸ் மனித வாழ்க்கையின் இருண்ட பக்கத்தையும் சுதந்திரத்தின் அருமையையும் நினைவூட்டுகிறது. ஒரு பக்கம் தங்கக் கனவுகளின் வாசல், மறுபக்கம் சுதந்திரத்திற்காக ஏங்கிய மனிதர்களின் தனிமைக் கல்.


அந்த மாலை, பனிமூட்டத்திற்குள் மெதுவாக மறைந்து கொண்டிருந்த Golden Gate Bridge-ஐ கடைசியாக பார்த்தபோது, “சில இடங்கள் வெறும் சுற்றுலாத் தலங்களல்ல, அவை *மனித வரலாற்றின் உயிருள்ள நினைவுச் சின்னங்கள்* என்ற உணர்வே ஏற்பட்டது.

உலக சுற்றுச் சூழல் நாளில் (5, ஜூன்)....

 உலக சுற்றுச் சூழல் நாளில் (5, ஜூன்)....


கற்கும் கல்வியது செல்வம் சேர்க்க மட்டுமா ?

   கடல், மலை, மரம் அவை பாதுகாக்க வேண்டாமா ?


பெற்ற பிள்ளையும் பிரிந்து நம்மை வாழலாம் 

   பேசா இறையே இயற்கை, நாளும் தொழலாம் 


* பெற்றமும் நம் சுற்றமே, பால் பெறுகிறோமே

   பெரிய நீர் நிலை தணிக்கும் உறு பசியுமே


விற்று ஆற்று மணலை பாலையாக்கலாமா?

   விலங்கு, பறவை உறவே விரட்டியடிக்கலாமா?


வற்றா நதிகளையும் மாசு படுத்தலாமா ?

   *வாரிதியில் மீன்கள் மூச்சு திணறலாமா?


குற்றால அருவியும் நம் சிற்றப்பா தானே

   குடகுக் காவிரியும் இன்னொரு தாயே 


சுற்றுச்சூழல் தினம் ஒரு நாள் போதுமா?

   சொர்க்கம் இப் புவியே ஏதும் ஐயமா?


சற்றேனும் இவை எல்லாம் நினைவில் கொள்வோம் 

   சாரை சாரையாய் வரும் தலைமுறை காப்போம் .

* பெற்றம் -- பசு

* வாரிதி -- கடல் 

__. குத்தனூர் சேஷுதாஸ் 5/6/2026

==============================


★◆★◆★◆★◆★◆★◆★◆★

*சுற்றுச்சூழலை சீர்குலைத்தால்*

*சுனாமி தானே வரும்!*

★◆★◆★◆★◆★◆★◆★◆★


நம் வீட்டின் கூரையில்

சின்னஞ்சிறு பறவையின்

ஒரே ஒரு கூடு இருந்தாலும்

அதனையும் கலைத்திடுவான்.

பல்லுயிர் ஓம்புதல் அறியா மனிதன்

கருணையைத் தொலைத்திடுவான்.


பல்லுயிர்களின் வாழ்விடங்களை

வளைத்துப் போட்டு

அடுக்குமாடியும் கட்டுவான் -

ஆசிரமும் கட்டுவான்.


நீர்நிலைகளைச் சீரழித்து

வானுயர்

குடியிருப்புகளை 

வரிசையாகக் கட்டிடுவான்.


இயற்கையன்னையின்

சமநிலைக் கோட்பாட்டை அப்பட்டமாய் மீறிடுவான்.


சுனாமியாய், எரிமலையாய், பெரும்புயலாய்

இயற்கைச் சீற்றம் வந்திட்டால்

கருணையில்லையா

என கோவில் சென்று

முறையிடுவான்.


விதைத்தது சுரையென்றால்

அவரையா முளைக்கும்!

முற்பகல் செய்ததுதானே

பிற்பகலில் விளையும்?


பல்லுயிரும் ஓம்பிடுவோம்!

சுற்றுச்சூழலை காத்திடுவோம்!

பூவுலகைப் பேணிடுவோம்!!


*உங்கள்_தோழன்_ஸ்ரீவி*



Thursday, June 4, 2026

"ஈசி சேர்"

 "ஈசி சேர்"


மரத்தால் செய்த 

சொகுசு இருக்கை.


வானவில்லாய் 

விரிக்கப்பட்ட 

துணி.


அதைத் தாங்க 

மேலும் கீழும் 

மர உருளைகள்.


பாட்டனுக்குப்

பட்டயம் போட்ட

அரியாசனம்.


பாட்டன் அதில் 

அமரும் போது 

ஆட்சிக் கட்டிலில் 

அமர்ந்த மாமன்னன்

இறுமாப்பு.


கையில் பனை 

விசிறியுடன் 

செங்கோல் ஏந்திய 

அரசன் போலத் 

தோற்றம்.


வெண்கொற்றக் 

குடைதான் இல்லை.


எனக்கு அந்த 

இருக்கையில் 

பாட்டனைப்

பார்க்கக் 

கொடுப்பினை

இல்லை.


என் மகனுக்கு 

அவன் பாட்டனைப் 

பார்க்க வாய்த்தது.


முன்னிருட்டு

வேளைகளில் 

என் தந்தை 

அமர்ந்திருக்க 

மகன்களும்,

மகள்களும்,

பேரப்பிள்ளைகளும்

சுற்றித் தரையில் 

இருக்க, அவரின் 

வாழ்வில் நடந்த

வீரப்பிரதாபங்களை

அளக்க நாங்கள் 

வாய் பிளந்து 

கேட்ட காலம்.


இக்காலப் 

பாட்டன்களுக்கு

அரியாசனமும் 

இல்லை

அதிகாரமும் 

இல்லை.


என்னதான் 

புதிது புதிதாய் 

"ரிக்ளைனர்கள்" 

தோன்றினாலும்

அந்த "ஈசி சேருக்கு"

இணையாகுமா?

Wednesday, June 3, 2026

கம்பு ஊன்றும் வயதில்...

 கம்பு ஊன்றும் வயதில்...


நம்பிக்கை கை நீட்டி " வா போவோம் ! " என்றது 

    * நான்கு புண்ணியத் தலம் (Char Dham) தரிசனமாமது


* கம்பி நீட்டினோம் சென்னை  வெயில் கண்டு 

   காசு செலவானதோ இலட்சங்களில் உண்டு 


* தும்பியில் பயணித்த அனுபவமும் இது 

   தொடர் மலைகளால்  மனம் மலைத்தது


தம்பியாய் நெடிய மலை நினைக்க வைத்தது 

   தகுதி, அந்தஸ்து... எல்லாம் தரை மட்டமானது


கும்பிட்டு  தெய்வம் அதை ஏதும் கேட்கவில்லை 

    " கொடுத்தது போதும் போதும் இனி தேவையிலை "


தும்பைப் பூ கொட்டியதாய் வெண் பனி சூழ்ந்தது

   துயரெலாம் அக்கணம் எங்கோ போய் வீழ்ந்தது 


அம்பாக, ஊசியாகக் குளிரதுவும் தைத்தது

   அணையாத் தீ நேர் அணைப்பை நினைத்தது 


கம்பூன்றும் வயதில் நீள் கனவு நிறைவேறியது 

   கதிரவன் அருமை கன மண்டையில் ஏறியது. 


__. குத்தனூர் சேஷுதாஸ் (3/6/2026)


 

* நான்கு புண்ணியத் தலம் -- யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் 

* கம்பி நீட்டி -- தப்பித்து 

* தும்பி  -  Thumby Helicopter

பால்யத்திற்குத் திரும்பாதே

 பால்யத்திற்குத் 

திரும்பாதே என்றார் 

நா. முத்துக்குமார்.


பால்ய நினைவுகளை 

அசை போடாத 'பெருசு'

இங்கு யார் உண்டு?


"அந்தக் காலத்திலே 

நாங்க"

என ஆரம்பித்து 

எதிரில் உள்ள 

இளசுகளை 

அதிர விடாத 

மூத்த குடிமகன்கள் 

இல்லாத வீடா,

ஊரா அல்லது நாடா.


நானும் சிறிது 

பின்னோக்கிப்

பயணித்துப் 

பார்க்கிறேன்.


முள் குத்தும் 

நினைவுகள்

முன் வரவில்லை.

எல்லாமே 

இனிமைதான்.


பள்ளித்

தோழர்களுடன் 

ஆடிய நாட்கள்.


வீட்டுப் பாடம்

எழுதாமல் 

ஆசிரியரிடம் 

அடி வாங்கிய 

சுகம்.


கல்லூரிக் காலமோ 

கலகலப்பானது.


வங்கிப் பணியிலோ 

வித்தியாசமான 

மனிதர்கள், 

அனுபவங்கள்.


சற்றே திரும்பிப் 

பார்க்கிறேன்.

இன்றுதான் 

பிறந்தது போல் 

இருக்கிறது.

எழுபதாண்டுகள் 

பறந்து விட்டன.

இன்னும் 

சில காலம்தான்.


மூத்தோரே 

அவ்வப்போது  

நாம்

வந்த பாதையை 

திரும்பிப் பார்த்து 

சற்று ரசிப்போம்.

மாற்றி யோசி…

 *மாற்றி யோசி…*

கருவறைக்குள்தான் 

கடவுள் இருக்க வேண்டுமா..

*கடவுளுக்குள் கருவறை இருக்க கூடாதா?*

மாற்றி யோசித்த கடவுளின் 

*மகத்தான படைப்பு அம்மா!!*


=======================

ஆசிரியரின் அருமையை

பெற்றோருக்கு உணர்த்திய 

பொற்காலம் 

*கோடை விடுமுறை!*


===========================

*வெயிலே....*


பன்னிரண்டு மணிக்கு

பணியை தொடங்க வேண்டிய நீ

அதிகாலை ஐந்தரைக்கே

அடித்து வெளுப்பது

*விசுவாச ஊழியன் என்ற விருது வாங்கவா!*

எவன் மனிதன் ... எவன் புனிதன் ...

 •••••••••••••••••••••••••••••••••

      எவன் மனிதன் ...

      எவன் புனிதன் ...

•••••••••••••••••••••••••••••••••


மனங்களில் எல்லாம் 

மனிதம் பூக்கவும் 

தினமும் அநீதியை 

எதிர்த்துக் கேட்கவும் 

சினமதை அகற்றி

சிறப்போடு வாழவும் 

உன்னால் முடிந்தால் 

நீயே மனிதன்!


இதயம் திறந்து 

அன்பை விதைத்து 

உதயம் தோறும் 

நல்வழி நடந்து 

உலகம் போற்ற 

நீயும் நடந்தால்

மனித குலத்தில் 

நீயே புனிதன்!


உங்கள்_தோழன்_ஸ்ரீவி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...