"ஈசி சேர்"
மரத்தால் செய்த
சொகுசு இருக்கை.
வானவில்லாய்
விரிக்கப்பட்ட
துணி.
அதைத் தாங்க
மேலும் கீழும்
மர உருளைகள்.
பாட்டனுக்குப்
பட்டயம் போட்ட
அரியாசனம்.
பாட்டன் அதில்
அமரும் போது
ஆட்சிக் கட்டிலில்
அமர்ந்த மாமன்னன்
இறுமாப்பு.
கையில் பனை
விசிறியுடன்
செங்கோல் ஏந்திய
அரசன் போலத்
தோற்றம்.
வெண்கொற்றக்
குடைதான் இல்லை.
எனக்கு அந்த
இருக்கையில்
பாட்டனைப்
பார்க்கக்
கொடுப்பினை
இல்லை.
என் மகனுக்கு
அவன் பாட்டனைப்
பார்க்க வாய்த்தது.
முன்னிருட்டு
வேளைகளில்
என் தந்தை
அமர்ந்திருக்க
மகன்களும்,
மகள்களும்,
பேரப்பிள்ளைகளும்
சுற்றித் தரையில்
இருக்க, அவரின்
வாழ்வில் நடந்த
வீரப்பிரதாபங்களை
அளக்க நாங்கள்
வாய் பிளந்து
கேட்ட காலம்.
இக்காலப்
பாட்டன்களுக்கு
அரியாசனமும்
இல்லை
அதிகாரமும்
இல்லை.
என்னதான்
புதிது புதிதாய்
"ரிக்ளைனர்கள்"
தோன்றினாலும்
அந்த "ஈசி சேருக்கு"
இணையாகுமா?
No comments:
Post a Comment