சிதறல்கள்
கால் தொட்டு சிதறின
மணல் துகள்கள்
மணல் தொட்டு சிதறின
கடல் அலைகள்
அலை தொட்டு சிதறியது
வெள்ளி நிலவொளி
சிதறல்களில் ஒன்றிப்போனது
தறிகெட்ட மனதின் சிதறல்கள்
- அமுதவல்லி
சிதறல்கள்
கால் தொட்டு சிதறின
மணல் துகள்கள்
மணல் தொட்டு சிதறின
கடல் அலைகள்
அலை தொட்டு சிதறியது
வெள்ளி நிலவொளி
சிதறல்களில் ஒன்றிப்போனது
தறிகெட்ட மனதின் சிதறல்கள்
- அமுதவல்லி
*{23} சிலம்பொடு ஒரு பயணம்*
••••••••••••••••••••••••••••••
*அரங்கேற்ற காதை*
*காதை சுருக்கம் விளக்கும் வெண்பா*
••••••••••••••••••••••••••••••
அரங்கேற்றக் காதையின் நாயகியான மாதவி பற்றி காதையின் நிறைவாக எழுதப்பட்ட மிக சிறப்பானதொரு வெண்பா பற்றி இப்போது பார்க்கலாம்:
*எண்ணும் எழுத்தும் இயலைந்தும் பண்ணான்கும்*
*பண்ணின்ற கூத்துப் பதினொன்றும்-- மண்ணி ன்மேற்*
*போக்கினாள் பூம்புகார்ப் பொற்றொடி மாதவிதன்*
*வாக்கினால் ஆடரங்கின் வந்து.*
அதாவது, புகார் நகரிலே பொன்னாலாகிய வளை அணிந்த மாதவியானவள், தலை அரங்கிலே வந்து,
எண்ணும், எழுத்தும், இயல் ஐந்தும்,
பண் நான்கும், பண்ணுக்கிசைந்த பதினொரு வகையான கூத்தும் கலந்து தன் நாட்டிய திறமையை வெளிப் படுத்தி, உலகம் முழுதும் உள்ளோரெல்லாம் புகழ்ந்து பேசும் படியாக, ஆடியும் பாடியும் பார்ப்போர் மனம் கவர்ந்தாள். அதனால், உலகு போற்றும் சிறப்பும் பெற்றாள்.
மாதவியின் அறிமுகம், அகத்திய முனியால் இடப்பட்ட சாபம், ஊர்வசியே மாதவியாய் இந்திரன் மகன் சயந்தனே தலைக்கோலாய் பிறந்திட்ட நிகழ்வு,
தலைக் கோலின் சிறப்பு, ஆடற் கலையின் சிறப்புகள் - வகைகள், ஆடரங்கின் அமைப்பு மற்றும் அமைக்கும் விதங்கள், வாத்திய கருவிகளின் சிறப்புகள் மற்றும் வகைகள், மாதவியின் ஆடற் பெருமை, அரசன் கொடுத்த பரிசுகள்,
வினை விளை காலம் விளைந்தது, 1008 கழஞ்சு உள்ள மாலை விற்றது, அதனை கோவலன் பணம் கொடுத்து வாங்கி பெற்றது, விற்ற கூனியோடு மாதவி இல்லம் ஏகியது, கண்ணகியை அறவே மறந்தது என அடுத்தடுத்த நிகழ்வுகளை விளக்கிய அரங்கேற்றுக் காதையின் முத்தாய்ப்பாக மாதவியின் அழகை - நடன நளினத்தை விளக்கும் வெண்பாவோடு இக்காதை நிறைவுறுகிறது.
மழைக்கவி மோகன் ஐயா தொடர்கிறார்:
ஐயா,வணக்கம்.
அரங்கற்றக்காதையின் முடிவில், அடிகள் ஒரு வெண்பா மூலம் காதையின் சுருக்கத்தை விளக்குகிறார். நீரும் வெண்பாவின் கருத்தை , சிறப்பாக எடுத்துரைத்தீர்.
சிலப்பதிகாரம் முழுவதும் நிலைமண்டில ஆசிரியப்பா என்னும் பாவகையால் ஆனது. எனினும், இது உரைநடையும் பாடல்களும் கலந்து அமைந்த *'உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்'* ஆகும்.
சிலப்பதிகாரத்தில் வெண்பாக்களும் உள்ளன.
சிலப்பதிகாரத்தில் வெண்பாக்கள் ஏன் உள்ளன?
சிலப்பதிகாரத்தில் வெண்பாக்கள் இடம் பெறுவதற்கு முக்கிய காரணம், கதையின் காப்பியம் முழுவதும் ஆசிரியப்பாக்களால் அமைந்திருந்தாலும், உணர்ச்சிப் பெருக்கின் உச்சத்தில் அல்லது காதைகளின் இறுதியில் வெண்பாக்கள் பிரத்யேகமாகப் பயன்படுத்தப் பட்டுள்ளன.
சிலப்பதிகாரத்தில் வெண்பாக்கள் கையாளப் பட்டதற்கான மற்ற காரணங்கள் :
-ஒரு காதையின் முக்கிய நிகழ்வு முடிவடையும் தருணத்தில், அக்காதையின் சாராம்சத்தை வாசகர்களின் மனதில் ஆழமாகப் பதிய வைக்க வெண்பாக்கள் உதவுகின்றன.
-கதாபாத்திரங்களின் உணர்வுகளை நேரடியாக வெளிப்படுத்த வெண்பாக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
-சான்றோர் கூற்று கதை்கு நம்பகத் தன்மையை வழங்குகின்றன.
*இலக்கிய மரபு:* வெண்பா இலக்கணக் கட்டமைப்பானது ஓசை நயமும் பொருள் செறிவும் கொண்டது. எனவே, பழந்தமிழ் இலக்கிய மரபைப் பின்பற்றி இளங்கோவடிகள் இதைப் பயன்படுத்தியுள்ளார்.
*"எண்ணும் எழுத்தும்"* -
எண்ணிக் கணக்கிடும் எண், எழுதிக் கருத்தை வெளிப்படுத்தும் எழுத்து,
*"இயல் ஐந்தும்"-*
இயற்றமிழின் ஐந்து இலக்கணங்களைக் குறிக்கிறது (எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி).
*"பண் நான்கும்"-*
இசைத் தமிழுக்குரிய பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி ஆகிய நான்கு வகையான பண்கள் (இராகங்கள்).
பண் என்பது இசையின் அடிப்படை வடிவங்களில் ஒன்று.
தற்காலத்தில் தென்னிந்திய கருநாடக இசை மற்றும், இந்துஸ்தானி இசைகளில்வழங்கும் இராகங்கள் என்பது பண்ணிற்கு ஏறத்தாழ இணையான ஒரு வடிவம்
பிரிக்கப் படுகின்றன.
உதாரணம்- பண் கௌசிகம்- இராகம் பைரவி.
*"கூத்து பதினொன்றும்"*
பதினோரு கூத்து வகைகள்: -கொடுகொட்டி: சிவபெருமான் திரிபுரம் எரித்தது
-அல்லியம்: கண்ணன் - கம்சன்
-மல்லாடல் (மல்லியம்): கண்ணன் மல்லர்களோடு
-குடைக்கூத்து: முருகன் குடையுடன் ஆட்டம்
-குடக்கூத்து: திருமால் தண்ன் பெயரனை சிறை மீட்ட ஆட்டம்
-துடிக் கூத்து: முருகன் சூரபத்மனை வென்றபின் துடி என்ற இசைக் கருவியுடன் ஆடிய ஆட்டம்.
-பேடிக்கூத்து: மன்மதன் (காமன்) பேடி உருவம் கொண்டு ஆடிய ஆட்டம்.
-மரக்கால் கூத்து: துர்க்கை மரக்கால் (காலணி) கொண்டு ஆடிய ஆட்டம்.
-பாவைக் கூத்து: திருமகள் (இலக்குமி) பாவை (பொம்மை) போல வேடமிட்டு ஆடிய ஆட்டம்.
-கடையக் கூத்து: இந்திரனின் மனைவி இந்திராணி அசுரர்களை வென்று ஆடிய ஆட்டம்.
ம்ம்ம்- பார்ப்பவருக்கே மாற்றி மாற்றி வந்த ஆட்டங்கள் பிரமிப்பில் மூச்சு முட்ட வைத்திருக்குமே.!வெவ்வேறு தாள கதிகள், பின்பாட்டுகள், அலங்கார மாற்றங்கள். அப்பப்பா! உடனுக்குடன் செய்ய வேண்டிய மாற்றங்கள். ஆம் , அரசரைக் காக்க வைக்க முடியாதே.
பயணத்தின் அடுத்த கட்டமாக, *அந்திமாலை சிறப்பு செய் காதை* யில் பிரவேசிக்கிறோம்.
பாகம் 17
*பயணங்கள் முடிவதில்லை…*
லாஸ் வேகாஸிலிருந்து கலிபோர்னியா வரை* *பாலைவனத்திலிருந்து பசுமைக்குள் ஒரு மறக்க முடியாத பயணம்….*
சில பயணங்கள் வெறும் இடமாற்றமாக மட்டும் இருக்காது; அவை ஒரு நிலத்தின் ஆன்மாவையும், மனித வாழ்க்கையின் வேறுபட்ட பரிமாணங்களையும் நமக்குக் காட்டும் அனுபவமாக மாறிவிடும். அமெரிக்காவின் பளபளப்பான கனவுநகரமான லாஸ் வேகாஸிலிருந்து கலிபோர்னியா நோக்கி மேற்கொண்ட எங்கள் தரைவழிப் பயணம் அப்படிப்பட்ட ஒரு அனுபவமாகவே அமைந்தது.
காலையில் லாஸ் வேகாஸின் ஒளிவீசும் நகரக் காட்சிகளை பின்னால் விட்டுப் புறப்பட்டோம். மாநிலங்களுக்கு இடையேயான விரைவுச்சாலை வழியாக தெற்கே கலிபோர்னியா நோக்கிப் புறப்பட்டோம். லாஸ் வேகாஸிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் வரை சுமார் 435 கிலோமீட்டர் தூரம். போக்குவரத்து நெரிசல் இல்லாவிட்டாலும் 8 மணி நேர நீண்ட பயணம்.
ஆனால் அந்தச் சாலைப்பயணம், குழி, திருப்பம், நெரிசல் இல்லாதது. நான்கு வழி விரைவுச்சாலை, நேராக நீள்கிறது. நன்கு பராமரிக்கப்பட்ட (Smooth) சாலை. மணிக்கு 113 கிலோமீட்டர் வேகத்திலும், கார் அமைதியாக மிதந்து செல்லும் உணர்வு.
லாஸ் வேகாஸை விட்டு சிறிது தூரம் சென்றவுடன் மொஜாவே பாலைவனம் (Mojave Desert) தனது வறண்ட அழகுடன் எங்களை வரவேற்றது.
மணல் நிறைந்த மலைகள், கரடுமுரடான பாறைகள், தொலைவில் வெயிலால் மங்கும் நிலம்…
ஒரு கட்டத்தில், *இங்கு உயிரினங்கள் இருக்கிறதா?* என்ற எண்ணமே தோன்றும் அளவுக்கு வெறிச்சோடிய காட்சி.
ஆனால் இடையில் சில இடங்களில் பாலைவனத்தின் நடுவே திடீரென நீர் பளபளப்பாக ஓடுவது கண்களுக்கு வியப்பாகத் தோன்றியது. பசுமையான விவசாய உலகமாக மாறியுள்ள கலிபோர்னியாவின் அதிசய மாற்றத்துக்கு பின்னால் இருக்கும் *அமைதியான நதி* தான் கலிபோர்னியா செயற்கை நீர்வழி (California Aqueduct).
இது உலகின் மிகப்பெரிய செயற்கை நீர்வழித் திட்டங்களில் ஒன்று. அதாவது *மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு பிரம்மாண்ட நதி*.
வடபகுதியில் இருக்கும் நீர்வளத்தை தெற்கு மற்றும் வறண்ட பகுதிகளுக்கு கொண்டு செல்கிறது. இதன்மூலம் விவசாய நிலங்கள் பாசன வசதியும், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்கள் குடிநீர் வசதியும் பெறுகின்றன.
இந்த நீர்வழி சுமார் 700 கிலோமீட்டருக்கும் அதிகமாக நீள்கிறது. சில இடங்களில் திறந்த கால்வாயாகவும்; சில இடங்களில் கான்கிரீட் நீர்வழியாகவும் (Concrete Channel) அமைந்துள்ளது.
இயற்கை நதியைப் போலவே தோன்றுகிறது. ஆனால் உண்மையில் அது மிகப்பெரிய பொறியியல் திட்டம்.
இத்திட்டம் இல்லையென்றால்:
* மத்திய விவசாயப் பகுதி (Central Valley) விவசாயத்தின் ஒரு பெரிய பகுதி சாத்தியமாகாது
* ஆரஞ்சு, பாதாம், திராட்சை போன்ற பெரும் அளவிலான விவசாய உற்பத்தி குறைந்து போயிருக்கும்
* தெற்கு கலிபோர்னியாவின் நகர வளர்ச்சியும் இவ்வளவு வேகமாக இருக்காது.
*என்று பலர் கூறுகிறார்கள்.*
பாலைவனத்தின் நடுவே பச்சை கலந்த நீர் ஓடிக் கொண்டிருப்பது, வறண்ட உலகில் உயிர்த் துளி போலத் தோன்றியது. அந்த நீரின் பளபளப்பு, அதன் அருகிலிருந்த பசுமை, பாலைவனத்துடன் உருவாக்கிய மாறுபட்ட தோற்றம் (Contrast) கண்களுக்கு விருந்தாக இருந்தது.
சில இடங்களில் காற்றாலை மின் உற்பத்திக்கான மிகப்பெரிய காற்றாலை விசைகள் (Giant Wind Turbines) வரிசையாகத் தெரிந்தன. மலைகள் நடுவே மெதுவாக சுழலும் அந்த வெள்ளை விசைகள், *இயற்கையுடனான மனித புத்திசாலித்தனத்தின் கூட்டணியை நினைவூட்டின.*
பயணத்தின் மிக அழகான பகுதி என்றால், பாலைவன உலகம் மெதுவாக விவசாய உலகமாக மாறும் அந்த மாற்றநிலை (Transition).
கேஜான் மலைவழிப் பாதையை (Cajon Pass) கடந்ததும், ரிவர்சைட் (Riverside), சான் பெர்னார்டினோ (San Bernardino) பகுதிகளை உள்ளடக்கிய உள் நிலப்பகுதி (Inland Empire) ஆரம்பித்தது. அங்கு காட்சியே மாறிவிட்டது.
வரிசை வரிசையாக நிற்கும் ஆரஞ்சு மரங்கள் (Citrus Trees)… அவற்றில் தொங்கும் மஞ்சள்-ஆரஞ்சு பழங்கள்…
தானியங்கி நீர்த் தெளிப்பான் (Sprinklers) மூலம் தெளிக்கப்படும் தண்ணீர்…
அறுவடை இயந்திரங்கள் (Harvesting Machines)…
பழங்கள் அடுக்கும் கிடங்குகள் (Packing Sheds)…
அமெரிக்காவின் மிகப்பெரிய உணவுத் தயாரிப்பு சக்தி கொண்ட மாநிலம் கலிபோர்னியா என்பதைக் கண்முன்னே உணர முடிந்தது.
*ஒரு பக்கம் பாலைவனம். மற்றொரு பக்கம் உலகின்மிகப்பெரிய பழத்தோட்டங்கள். இரண்டுக்கும் இடையில் வெறும் சில மணி நேர பயணம் மட்டுமே!*
மேலும் மத்திய விவசாயப் பகுதி (Central Valley) நோக்கிச் சென்றபோது மற்றொரு கண்கொள்ளாக் காட்சி காத்திருந்தது.-*பாதாம் தோட்டங்கள்.*
பிப்ரவரி – மார்ச் மாதமாதலால் இந்தப் பாதாம் தோட்டங்கள் முழுவதும் வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு மலர்களால் மூடப்பட்டிருந்தன. தொலைவில் பார்க்கும்போது பனி பொழிந்தது போலத் தோன்றியது.
கார் சாலையில் வேகமாகச் செல்லும்போது, இருபுறமும் அந்த வெள்ளை மரங்கள் அசைந்து நடனம் ஆடுவது போல இருந்தது. சில இடங்களில் தேனீ கூண்டுகள் (Bee Hives) வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. *உலகின் 80% பாதாம் உற்பத்தி கலிபோர்னியாவிலிருந்துதான் வருகிறது என்பதை அப்போது உணர்ந்தோம்.*
அமெரிக்க விவசாயம் என்பது வெறும் நிலம் மட்டுமல்ல, அது தொழில்நுட்பம், திட்டமிடல், நீர்மேலாண்மை, இயந்திரமயமாக்கல் ஆகியவற்றின் மிகப்பெரிய சங்கமம்.
திடீரென்று காற்றில் ஒரு துர்நாற்றம்… ஆம், மத்திய விவசாயப் பகுதியின் (Central Valley) இன்னொரு முகம் பால் பண்ணைகள் (Dairy Farms).
சினோ பள்ளத்தாக்கு (Chino Valley), டுலேர் மாவட்டம் (Tulare County) போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான மாடுகள் தீவனப் பகுதிகளில் (Feedlots) நிற்கும் காட்சியைப் பார்த்தோம். பெரிய கொட்டகைகள் (Sheds), தீவன லாரிகள் (Feed Trucks), நீண்ட மாட்டு மந்தைகள் அனைத்தும் அமெரிக்காவின் விவசாய சக்தியை வெளிப்படுத்தின.
பாலைவன அமைதி…
பழத்தோட்டங்களின் மணம்…
பசுமையான பாசன நிலங்கள்…
மாடுப் பண்ணைகளின் இயல்பான வாசனை…
ஒவ்வொரு மைலும் ஒரு புதிய உலகத்தை அறிமுகப்படுத்திக் கொண்டே சென்றது.
இந்த நீண்ட பயணத்தின் இறுதியில் நாங்கள் சென்றடைந்த இடம், *மவுண்டன் ஹவுஸ் உயர்நிலைப் பள்ளி* (Mountain House High School).
அந்தப் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த தருணமே, *இது பள்ளியா? பல்கலைக்கழக வளாகமா?* என்ற வியப்பு ஏற்பட்டது.
அகன்ற வளாகம், அழகாக வடிவமைக்கப்பட்ட கட்டிடங்கள், பசுமை சூழ்ந்த நடைபாதைகள், அமைதியான சூழ்நிலை…
அனைத்தும் ஒரு திரைப்படக் காட்சிபோல் இருந்தது.
2014-ல் தொடங்கப்பட்ட இந்த நவீன பொதுப் பள்ளி, லாமர்ஸ்வில் ஒருங்கிணைந்த கல்வி மாவட்டம் (Lammersville Joint Unified School District) கீழ் இயங்குகிறது.
இங்கு மாணவர்கள் ஒரே வகுப்பறையில் அமர்ந்து கொண்டு ஆசிரியர்கள் வருவது இல்லை. இங்கு ஆசிரியர்களுக்கே நிரந்தர அறைகள்.
கணித ஆசிரியருக்கு தனி அறை…
அறிவியல் ஆசிரியருக்கு ஆய்வக வசதி…
கணினி அறிவியலுக்கு தொழில்நுட்ப மையம்…
இசை மற்றும் கலைக்கென சிறப்பு அறைகள்…
மாணவர்கள்தான் ஒவ்வொரு பாடவேளைக்கும் (Period)வகுப்பு மாறிச்செல்லவேண்டும்.
இது மாணவர்களிடம்:
நேர மேலாண்மை,பொறுப்புணர்வு, சுய ஒழுக்கம், சுயசார்பு, கல்லூரி வாழ்க்கைக்கான தயாரிப்பு
ஆகியவற்றை இயல்பாக உருவாக்குவதாக கூறப்படுகிறது.
அறிவியல் ஆய்வகங்கள், நூலகம், கணினி மையங்கள், விளையாட்டு மைதானங்கள், நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம் (Gymnasium) அனைத்தும் மாணவர்களின் முழுமையான வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தன.
இந்தப் பயணத்தில் எங்களுக்கு மிகவும் பெருமை அளித்த விஷயம், இந்தப் பள்ளியின் *துணை முதல்வராக (Vice Principal) ஒரு தமிழ்ச்செல்வி, திருமதி நந்தினி நாதன் அவர்கள் பணியாற்றுவது.*
அமெரிக்காவின் முன்னேறிய கல்வி அமைப்பில் ஒரு தமிழ் பெண் உயர்ந்த நிர்வாகப் பொறுப்பில் இருந்து மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பது ஒவ்வொரு தமிழருக்கும் பெருமை தரும் விஷயம்.
இந்தப் பயணம் எங்களுக்கு ஒரு உண்மையை மீண்டும் உணர்த்தியது:
*கல்வி என்பது புத்தக அறிவை மட்டும் வழங்குவது அல்ல; வாழ்க்கையை உருவாக்கும் ஒரு முழுமையான அமைப்பு.*
லாஸ் வேகாஸின் பாலைவன ஒளிகளில் தொடங்கிய பயணம், கலிபோர்னியாவின் பசுமை வயல்கள் வழியாகச் சென்று, நவீன கல்வியின் உலகில் முடிந்தது.
ஒவ்வொரு மைலும் புதிய காட்சி…
புதிய வாசனை… புதிய உணர்வு…
அமெரிக்க மண்ணின் இயற்கை வளத்தையும், விவசாய வல்லமையையும், கல்வி முன்னேற்றத்தையும், அதில் தமிழர்கள் சாதித்து நிற்கும் பெருமையையும் ஒரே நேரத்தில் காண வைத்த மறக்க முடியாத அனுபவமாக நிலைத்து நிற்கிறது.
தமிழ் உறவுகளே வணக்கம்!
கடந்த இரு தினங்களாக *மாயூரம் வேதநாயகம் பிள்ளை* அவர்களுடன் பயணித்தேன். தமிழ் இலக்கிய உலகில் முதல் தமிழ்ப் புதினமாக 1857 ஆம் ஆண்டு இவரால் எழுதப்பட்டு 1879 ஆம் ஆண்டு அச்சில் ஏற்றப்பட்டு பதிப்பிக்கப்பட்ட நூல் *"பிரதாப முதலியார் சரித்திரம்".* தமிழ் இலக்கிய உலகில் அறியப்படுகிற முதல் தமிழ்ப் புதினம் என்ற பெருமைக்குரியது இந்த நூல்
*"இலக்கியம் காலத்தை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி"* - எனும் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் இந்த நூலில் ஒரு பக்கத்தில் 175 லிருந்து 190 வார்த்தைகள் இருந்தால் அதில் குறைந்தது 15 / 20 வார்த்தைகளாவது பிற மொழியாக - குறிப்பாக வடமொழியாக - இருப்பதைக் காணலாம்.
இதனால், நல்ல தூய தமிழில் பேசுவது அப்பொழுது அரிதாக இருந்திருக்கிறது.
பேச்சு வழக்கில் மணி பிராவளம் நடையே இருந்திருக்கிறது என்பது திண்ணம். பல சொற்களுக்கு பொருள் விளங்காமல் கதையைப் படிக்கும் போது அந்த கதையோட்டத்தோடு இயைவது சிறிது கடினமாக இருக்கிறது.
ஆனாலும், மிக நல்ல நடையில் எளிமையாக சுவையாக கதைகள் எழுதப் பட்டுள்ளன. தான் சொல்ல வேண்டிய கருத்துகளை உலகிற்கு கூறும் ஒரு நல்ல வாய்ப்பாக நூலாசிரியர் இந்நூலை பயன்படுத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
குறிப்பாக, அக்காலத்தில் (179 வருடங்களுக்கு முன்பு) தமிழில் உரையாடுவதும், உறவாடுவதும் கௌரவக் குறைச்சல் ஆக பார்க்கப் பட்டிருக்கிறது என்பதை ஆணித்தரமாக அவர் பதிவு செய்கிறார். நான்கு ஐந்து பக்கங்களுக்கு மேலாக அவரது வலிமையான கருத்துக்கள் தெள்ளத் தெளிவாக எழுதப்பட்டுள்ளன. இக்காலத்துக்கும் பொருந்தும் பல்வேறு ஆதங்கங்களை அவர் ஆணி அடித்தார் போல் எழுதியுள்ளார். ஓரிரு பக்கங்களை, இப்பதிவை படிப்போரின் கவனத்திற்காக படம் பிடித்து இப்பதிவோடு இணைத்துள்ளேன்.
அதேபோல வேறொரு இடத்தில் பல வழக்குரைஞர்கள் செய்யும் பல்வேறு தகிடுதத்தங்களை விலாவாரியாக எழுதியிருக்கிறார். இன்றைக்கும் அவை அப்படியே பொருந்துகின்றன என்பதை பார்க்கும் பொழுது ஆச்சரியம் மேலிடுகிறது.
*'வசன கவிதைகள் அதிகம் தமிழில் இல்லாதிருப்பது பெரும் குறை'* - என வருத்தப்படும் இவர் அக்குறையை நீக்க தன் முயற்சியாக இந்தப் புதினத்தை எழுதி இருப்பது குறை கூறுவதோடு இல்லாமல் அக்குறையை நீக்க வழியும் காண்பிக்கிறார். இவர் மறைவதற்கு (21 சூலை 1889) ஏழு ஆண்டுகளுக்கு முன் (1882) பிறந்த பாரதி இவரது இந்த மனக்குறையை பின்னாளில் முழுமையாக தீர்த்து வைத்ததை தமிழ் உலகம் அறியும்.
பாத்திரங்களுக்கு இடையே ஆன உரையாடல்களில் பக்கம் பக்கமாக வசனங்கள் போவது கதை ஓட்டத்தை சிறிது பாதிக்கிறது. ஆனால் அக்காலத்திற்கு அது தேவைப் பட்டிருக்கிறது என்பதை நாம் 1950-60 களில் வந்த பல்வேறு திரைப்படங்களில் பக்கம் பக்கமாக வசனம் இருந்திருக்கிறது என்பதன் மூலம் தெரிந்து கொள்கிறோம்.
பெண்களுக்கு சமூகத்தில் தேவையான இடம் கொடுக்காமல் இருந்த காலத்தில் எழுதப்பட்ட புதினமாக இருந்தாலும், இந்நூலில் கதாநாயகனின் அன்னையும் தாரமும் நன்கு படித்த - அறிவாற்றல் மிக்க - சமயோசிதமாகவும் சாதுரியமாகவும் செயல்படும் முக்கிய கதாபாத்திரங்களாக சித்தரிக்கப் பட்டிருக்கின்றன என்பது சிறப்பானது. சமூக மாற்றத்தை, சீர்திருத்தத்தை, பெண்ணுரிமையை வலியுறுத்தும் விதமாக இந்தப் பாத்திரங்கள் வடிக்கப் பட்டிருக்கின்றன. ஆயினும் அக்காலத்தில் காணப்பட்ட பல சமூக அவலங்கள் இந்நாவலில் அங்கங்கே தலை தூக்குவதையும் நாம் பார்க்க இயலுகிறது. சாதிய குறியீடுகள் நூல் முழுதும் பார்த்திடலாம். இதுவும் அக்கால சமூகத்தின் பிரதிபலிப்பு.
எனது நீண்ட நாள் தேடல் தற்போது நிறைவு பெற்று விட்டது. எனது விருப்பப் பட்டியலில் (wish list) ஒன்று நிறைவேறி இருக்கிறது. மனம் மகிழ்வுற்றேன்.
*குறிப்பு*: இந்நூல் நமது நூலகத்தில் இருக்கிறது. விருப்பப் படுவோர் படித்து மகிழலாம்.
*உங்கள்_தோழன்_ஸ்ரீவி*
ஓநாய்கள் உஷார்!
சிறகடிக்கத் துடிப்பதே இளம் பிராயம்
சின்னச் சின்ன ஆசைகள் அது அடுக்கும்
சிறுமியரை வளர்ப்பது இல்லை சுலபம்
சீரழியும் சமுதாயம் செய்யும் கலகம்
வறுமையது சேர்ந்தால் இன்னும் மோசம்
வஞ்சகமோ வலையதை எளிதாய் வீசும்
வெறி பிடித்த ஓநாய்கள் திரியும் இந்நாளில்
விளையாடும் ஆட்டு குட்டி பாதுகாப்பு (நம்) தோளில்
அறியாச் சிறுமிகளே ஆட்டுக் குட்டிகள்
அணையாத காமத் தீயார் ஓநாய்கள்
குறி வைத்துச் சிறுமியரைக் கொண்டு போவார்
குலை நடுங்கும் பாதகம் பின் கொன்று போடுவார்
பறி கொடுத்த பெற்றோர் நிலை எத்தனை கொடுமை
பாதகமது ஒருபோதும் குறையவே இல்லை
முறிந்தால் போதாது அவன் கையும், காலும்
மூளையிலாத் தலையும் கொய்ய வேண்டும்.
__ குத்தனூர் சேஷுதாஸ் 24/5/2026
*நாம் செலவழிக்க தெரியாத முதியவர்கள்தாம்*
தற்போது மூத்த குடிகளாய் இருப்போர் மனநிலையை தெள்ளென தெளிவாக படம் பிடிக்கும் பதிவு.
மேலை நாடுகள் போல் இல்லாத குடும்ப சூழலில் குடும்ப பாரத்தை தாய் தந்தையரோடு தானும் அனுபவித்து வளர்ந்த ஒரு தலைமுறை நாம்.
*நாம் செலவழிக்க தெரியாத முதியவர்கள்தாம்*
நம்மில் அநேகர் இப்போது நாம் அனுபவிக்கும் பல்வேறு வசதிகள் இன்றி ஐந்தோடு ஒன்று ஆறாக ஏன் சில குடும்பங்களில் பத்தோடு ஒன்று பதினொன்றாக வளர்ந்த சூழலில் - இருப்பதை பங்கிட்டு உண்டு கழித்து மகிழ்ந்திருந்தோம். கால் சட்டியில் மட்டும் இருக்கும் கஞ்சியை பகிர்ந்துண்டு வாழ்ந்திருந்தோம். ஆசைப்பட்ட பொருட்கள் கிடைக்காமல் நமக்கு கிடைத்ததை ஆசைப்பட்டு வைத்துக் கொண்டோம்.
*நாம் செலவழிக்க தெரியாத முதியவர்கள்தாம்*
குடும்ப பொருளாதார நிலை எப்படி இருந்தாலும் நமக்கு நற்படிப்பு தர நம் தாய் தந்தையர் தயங்கியதே இல்லை. அரசாங்கம் எஸ் எஸ் எல் சி வரை கொடுத்த இலவச படிப்பும் ஒரு முக்கிய தூண்டுகோலாய் இருந்தது.
கையில் நாலணா கிடைத்தால் அதை வைத்துக் கொண்டு நாலு நாளைக்கு சந்தோஷமாக வாழ்க்கையை ஓட்டியவர்கள் நாம்.
ஒரே வேளையில் நாலணாவையும் செலவழித்து பழக்கப் படாதவர்கள் நாம்.
பல இல்லங்களில் தாய் தந்தையர் சொந்த வீட்டுக் கனவு நிறைவேறாமலே வானுலகம் ஏகினார்கள். அவர்களின் ஆசியாலும் அவர்கள் கொடுத்த படிப்பாலும் தகுதி வரப்பெற்று நம்மில் பலர் ஏதோ ஒரு நல்ல பணியில் அமர்ந்தோம். கடனை வாங்கி வீடும் கட்டிக் கொண்டோம். கல்வியின் அருமை தெரிந்ததனால், பல சமயங்களில் நம் சக்தியை மீறி குழந்தைகளை நன்கு படிக்க வைத்தோம். நாம் போட்ட விதை நன்றாக வளர்ந்து பலன் கொடுக்க ஆரம்பித்தது. அனேகமாக நம் குழந்தைகள் அனைவரும் மிக நல்ல வேலையில் அமர்ந்து கை நிறைய சம்பாதிக்கிறார்கள்.
நாமும் பணி ஓய்வு பெற்று வங்கிக் கணக்கில் நல்ல தொகையை வைப்பு நிதியில் வைத்துள்ளோம்.
வசதிகள் பல வந்தாலும், வாய்ப்புகள் நிறைய கிடைத்தாலும் *தொட்டில் பழக்கம்* நம்மை விட்டு போகாது என்பது போல நமது சிக்கனம் நம்மை விட்டுப் போகாது.
கஞ்சத்தனமாக இருப்பது அவலம். கட்டுக்குள் செலவழித்து சிக்கனமாக இருப்பது நல்ல ஜீவிதம்.
*நாம் செலவழிக்க தெரியாத முதியவர்கள்தாம்*
நமது வாழ்நாள் முழுதும் சிக்கனமாக இருந்து விட்டு கையில் பணம் இருப்பதால் மனம் போல் செலவழிக்க நம்மில் பலரால் முடியாது... இயலாது.. அது உளவியல் உண்மை.
*நாம் செலவழிக்க தெரியாத முதியவர்கள்தாம்*
இன்றும் பல இல்லங்களில் இளைய தலைமுறையினர் புதிய ஷூ வாங்குகையில் *ஜஸ்ட் 14,000 தான்* எனக் கூறுவதைக் கேட்கும் போது, நம் மனம் தத்தளிக்கிறது.
*நாம் செலவழிக்க தெரியாத முதியவர்கள்தாம்*
அக்காலத்தில் ஹோட்டல் போவது மிகவும் அரிது. தோசை 15 பைசா இருந்த காலத்தில், கிடைக்கும் அரையனாக்களை சேர்த்து வைத்து வாரத்திற்கு ஒரு முறை ஹோட்டல் போய் தோசை சாப்பிட்ட நாட்கள் பொன்னானவை.
இப்போது ஸ்டார்ட்டருக்கே 350 ரூபாயாம்.
முதலில் சூப்.. அடுத்து ஸ்டார்டர்.. பிறகு மெயின் கோர்ஸ்..
அப்புறம் பெவெரேஜஸ் அல்லது டெஸெர்ட்ஸ் எனும் பழக்கம் நமக்கு ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருக்கிறது... சாப்பிட்ட பின் வரும் பில்லை பார்க்கையில் நமக்கு அதிர்ச்சியாகவும் இருக்கிறது..
*நாம் செலவழிக்க தெரியாத முதியவர்கள்தாம்*
நமது பெற்றோர்கள் நமக்குச் சொல்லிக் கொடுத்த அடிச்சுவடி *நாம் வாங்கும் சம்பளத்தில் பத்து சதவிகிதமாவது சேமிப்பு செய்ய வேண்டும். அதுவே நம் முதல் செலவாக இருக்க வேண்டும்* என்பதுதானே. அதனை நாம் தாரக மந்திரமாக ஏற்று வாழ்க்கையை நடத்தினோம்.
நமது வாழ்க்கை நமக்கு சொல்லிக் கொடுத்த இன்னொரு முக்கிய விடயம் *தவிர்க்கப்படும் ஒவ்வொரு அனாவசிய செலவும் ஒரு வருமானமே* எனும் ஒரு பொருளாதாரத் தத்துவம்.
இப்படி வளர்ந்த நாம் பல்வேறு செலவுகளை அனாவசியமாக பார்ப்பதில் தவறேதும் இல்லை. ஏனெனில் அதுதான் நமது மனநிலை.
*நாம் செலவழிக்க தெரியாத முதியவர்கள்தாம்*
ஆனால் ஓர் உண்மையை இங்கு கூறியே ஆக வேண்டும். நமக்கு என்று வருகிறபோது யோசிக்கும் நாம், நம் குழந்தைகளுக்கும் - பேரக் குழந்தைகளுக்கும் செலவழிக்க நேர்கையில் நமது சிக்கனம் ஒதுங்கி வழி விடத்தான் செய்கிறது. அவர்களுக்கு செலவழிக்கையில் நம் கை தாராளமாகவே இருக்கிறது.
இங்குதான் நாம் தவறு செய்கிறோமோ என்கிற ஒரு குற்ற மனப்பான்மை வந்து நம் நெஞ்சை ஆக்கிரமிக்கிறது. நம் பெற்றோர்கள் சொல்லிக் கொடுத்த பொருளாதாரப் பாடங்களை - வாழ்க்கை நடத்தும் அடிப்படை அரிச்சுவடிகளை - நம் குழந்தைகளுக்கு நாம் சொல்லித் தர தவறி இருக்கிறோமோ என்கின்ற ஒரு கேள்வி எழுகிறது.
எது எப்படியோ..
*நாம் செலவழிக்க தெரியாத முதியவர்கள்தாம்*
நிறைவாக இப்படிச் சொல்லி முடிக்கிறேன்:
என் தந்தை என்னிடம் அடிக்கடி கூறுவது உண்டு *"ஒரு பொருளை வாங்கும் முன் இரண்டு அல்லது மூன்று முறை யோசித்து வாங்கு*". இந்த அறிவுரை என்னை வாழ்க்கையில் முன்னேற்றியது என்பதை சொல்லவும் வேண்டுமோ! இன்றளவும் நான் அப்படியே நடந்து வருகிறேன். என் இறுதி மூச்சு இருக்கும் வரையில் அப்படியே வாழ்ந்திடுவேன்.
ஆகையால்,
*நான் தாறுமாறாக/ நினைத்தபடி செலவழிக்கத் தெரியாத முதியவனே*
*இந்த விளக்கு இப்படியே இருந்து - ஒளி உமிழ்ந்து விட்டுப் போகட்டும். ஸ்விட்சை மாற்ற வேண்டாம்*
*{22} சிலம்பொடு ஒரு பயணம்*
*அரங்கேற்ற காதை*
*வினை விளை காலம்*
நடனத்திற்கு இலக்கணமாக மாதவிப் பொன்மயிலாள்
களி நடம் புரிந்தாள்.
தன்னிலை மறந்து அனைவரும் கண்டு களித்தனர்.
இரண்டே வரிகளில் இதனை அருமையாக கூறுகிறார் இளங்கோ:
*பொன்னியல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்துக் காட்டினள்*
இக்கால கவிஞர் *மாதவிப் பொன்மயிலாள்* என்று உரைத்ததை நாம் அறிவோம்.
இரண்டாம் நூற்றாண்டில் இளங்கோ அடிகளோ *பொன்னியல் பூங்கொடி* என்று வர்ணிக்கிறார்.
அதாவது ஓர் அழகிய பூங்கொடி பொன்னால் வடிவமைக்கப் பட்டிருந்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருந்தாளாம் மாதவி. அப்படி ஒளிர்ந்தால
லாம் மாதவி!
அவள் நடனம் *நாட்டிய நன்னூல்*
அதாவது நடன இலக்கணத்தை வகுத்தெறிந்து கூறும் நூல் கூறியது போல அமைந்திருந்ததாம்.
கண்டு களித்து அகமகிழ்ந்த *காவல் வேந்தன்* (அரசனும்)
*தலைக்கோல் எய்தித் தலை அரங்கு ஏறி, விதிமுறைக் கொள்கையின் ஆயிரத்து எண் கழஞ்சு ஒரு முறையாகப் பெற்றனள்...*
அந்த நடன மணிக்கு அந்நாட்டு வழக்கப்படி பச்சை மாலையும், தலைக்கோல் பட்டமும், ஆயிரத்து எட்டு கழஞ்சுப் பொன்னும் பரிசாகத் தர மாதவி பெற்றுக் கொண்டாள்.
*இதன் பிறகு தான் கதையில் ஒரு முக்கிய திருப்பம் நிகழ்கிறது. அதனால் அதனைக் கூறும் பாடல் "வினை விளை காலம்" எனும் தலைப்பில் வருகிறது. அதையும் பார்க்கலாம்:*
பரிசில் பெற்ற மாதவியோ நம் மாலையை தனக்கென வைத்துக் கொள்ளாமல் அவள் செய்த செயலே சிலப்பதிகாரத்தின் முக்கிய திருப்பம் ஆகும்.
*நூறு பத்து அடுக்கி எட்டுக் கடை (1008 என்பதன் விளக்கம்) நிறுத்த வீறு உயர் பசும்பொன் பெறுவது இம்மாலை*
*மாலை வாங்குநர் சாலும் நம் கொடிக்கென மான் அமர் நோக்கி ஓர் கூனி கைக் கொடுத்து*
ஆயிரத்து எட்டு பொன் கலைஞ்சு கொண்ட அம்மாலையை ஒரு கூனியின் கையில் கொடுத்து இதனை அதே விலை கொடுத்து நகரில் யார் வாங்குகிறாரோ அவரை என் இல்லம் அழைத்து வா என்று கூறிச் செல்கிறாள் மாதவி.
கூனியும் இம்மாலை வாங்குவோரே மாதவியின் மணாளன் எனக் கூறி கடை வீதியில் விற்க அதனை யார் வாங்குகிறார்கள் என நாம் அனைவரும் அறிவோம். சிலம்பின் வரிகளில் அதனைப் பார்ப்போம்:
*கோவலன் வாங்கிக் கூனி தன்னோடு மணமனை புக்கு மாதவி தன்னோடு ... அயர்ந்தினன் மயங்கி*
அம் மாலையை 1008 பொற்காசுகள் கொடுத்து வாங்கிய கோவலன் அக்கூனியோடு மாதவி இல்லம் செல்கிறான். அந்த இல்லத்தில் நுழைகிறான். மாதவியோடு இன்பம் துய்க்கிறான்.
*வடு நீங்கு சிறப்பின் தன் மனை அகம் மறந்து*
அதாவது மாதவியுடன் கூடி மகிழ்ந்த கோவலன் அவள் மீது வைத்த மையலால் குற்றமற்ற குலக்கொடி மனைவி கண்ணகியையும் தனது வீட்டையும் அறவே மறந்து போனான். மதி மயங்கி தன் வயம் இழந்த நிலை அடைகிறான்.
அரங்கேற்ற காதையின் நிறைவு பாடலாக ஒரு வெண்பா வருகிறது அவ் வெண்பாவின் விளக்கத்தில் எண்ணற்ற விளக்கங்கள் காணப் படுகின்றன. அவற்றை அடுத்த பதிவில் காண்பதே நன்று.
இப்போது மழலைக் கவி மோகன் ஐயா:
மாதவியின் வாழ்வில் பொன் வசந்தமாக , புகுந்த கோவலன் நிகழ்வு, என் கோணத்தில்;
சிறந்த ஒளி, ஒலி அமைப்புகளோடு ஆடலுக்கென்றே அளவிடப்பட்டு அமைந்த அரங்கில் பொன்னால் செய்த பூங்கொடி போல் மாந்தர் போற்றும் மாதவியின் நடனம். மாதவி என்றால் வடமொழியில் வசந்த காலத்தில் பூத்த முல்லைக்கொடி என்று பொருளாம்.
என்ன பொருத்தம்! இந்த பொருத்தம்!!
ஆடலரங்கு அளவோடு அமைந்தது போல இவளும் கொடி போன்ற உடல் அளவுகளோடு பொன் ஆபரணங்கள் பளபளக்க, சுழன்று சுழன்று ஆடுவது பொற்கொடியின் நாட்டியம் போல என வர்ணிக்கிறார் அடிகள்.
எனக்கு ஆடி அசைந்து வரும் அலங்காரத் தேர் நினைவுக்கு வருகிறது.
அதுவும் மேல் சிறுத்து, கீழ் பெருத்து அலங்காரங்கள் காற்றில் அசைய மெல்ல மெல்ல ஆடி வரும்தானே!
நாட்டிய நன்னூல். என்கிறார்.
இந்நூல் நாட்டியத்தை வேத்தியல் (அரசவை ஆடல்) மற்றும் பொதுவியல் (நாடக ஆடல்) என இரு வகைகளாகப் பிரிக்கிறது.
இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடும் 'நாட்டிய நன்னூல்' என்பது சங்க காலத் தமிழ் மரபுகளை அடிப்படையாகக் கொண்ட பரதநாட்டிய சாஸ்திரம் போன்ற ஒரு தமிழ் இலக்கண நூலாகும் என்று ஒரு குறிப்பு, கிடைக்கிறது.
எப்படி ஆடினாள் அவள்?
ஆறும் நாலும் அம்முறை போக்கி" -
ஆறு வகையான கூத்துக்களையும், நான்கு வகையான நாடக மரபுகளையும் முறைப்படி பின்பற்றி ஆடினாளாம்.
"கூறிய ஐந்தின் கொள்கை" என்பது நாட்டியத்தில் கை, கால், முகம், உடல் அசைவு, மற்றும் கண் ஆகிய ஐந்து உறுப்புகளும் ஒருங்கிணைந்து ஆடும் முறை.
ஆடல்மகளுக்கு நாடாளும் கோன் , கோல்- நம்ம தலைக்கோல்தான் (!), கூட "இலைப்பூங்கோதை-(இலையும் பூவும் தொடுத்த மாலை) ஒன்றையும் பரிசாக அளித்தான்.
அது மட்டுமா?
ஆயிரத்தெட்டு கழஞ்சு பொன்னும் கொடுத்தான்.
கழஞ்சு? ழகரக்கவி எழுதலாமா இதைப்பற்றி?!
கழஞ்சு என்பது தற்கால அளவில் 5 கிராம்பொன். 1008 கழஞ்சு என்பது 5.04 கிலோகிராம். இன்றைய நிலவரம் ஒரு கிலோ தங்கம்- 24 காரட்- விலை 1 60, 91, 000 ரூபாய்கள்.
மாலையின விலை
8,10,98,640 ரூபாய்கள்!
கணக்குப்போடுவதற்கே மூச்சு வாங்குகிறதே!
இதைக் கொடுத்து, கோவலன் கடைத்தெருவில் கூவி விற்ற கூனி ஒருவளிடம் மாலையை, அலட்சியமாக வாங்கினான் என்றால் அவன் அக்கால அம்பானி குடும்பத்தவன்தான்!
பொற்கொடி போன்றவளுக்கு மேலும் பொன் தேவையோ?
அதனால்தான் விற்க அனுப்பினாளோ?!
மாலை மாற்றி மணம் செய்த மனையாளை மறந்து மாலை விற்றவள் "மனையேறினான்" மாசாத்துவான் மகன்.
அந்தோ!
மாதவிக் கொடியோடு பிணைந்து இளைப்பாற அல்லவோ செய்கிறான். கலங்கிய கண்ணினாள் கண்ணகி "வடு நீங்கிய சிறப்புடை மனையாள்"
தனியாள் ஆனாள்.
இக்காலத் தொலைக்காட்சித்தொடராக இருந்தால், திரை மூன்று பிரிவுகளாக- இடது பக்கம் மகிழ்வுக்கண்ணினாள் மாதவி நடுவில் " அலையும் கண்களோடு" கோவலன் , வலது பக்கம் கண்கள் கலங்கிய கண்ணகி; வலது கோடியில் கீழே- தொடரும், என்று முத்தாய்ப்பு வைத்திருப்பார்கள்.
நாமும் பயணத்தைத்
தொடருவோம்.
அறுகோண வடிவில் அழகு மெழுகு வீடு
ஆயிரம் அதுபோல் சேர்ந்தால் தேன்கூடு
சிறுசிறு மலர்களைத் தேடிச் செல்லும் தேனீ
செந்தமிழ் நேர் தேனைக் கண்டிடும் ஞானி
உறிஞ்சிக் கொண்டு வந்து ஓயாமல் சேகரிக்கும்
ஊரார் கண்படாமல் இருக்க வேண்டும் பாவம்
" நறை " என்பார் நற்றேனை இலக்கியத்தில்
" *ஞமலி " க்கு பிடிக்காது. உண்மை உண்டா இதில் ?
சிறந்தவன் தானெனக் கூறிக் கொள்ளும் மனிதன்
செயற்கையானதைத் தேனென விற்பவன்
இறந்த உடலைப் பாதுகாக்கவும் அன்று
இனிய தேனில் உடல் ஊறியதும் உண்டு
மறுக்க முடியா மருத்துவப் பயன் பலவாம்
மாந்தர் தம் நோய் எதிர்ப்புச் சக்தி கூடுமாம்
குறிஞ்சி நிலத் தேனே (மலைத் தேன்) சிறந்ததென்பார்
குத்தனூர் தாமரைக் குள நீர் அருந்தாதார்.
__. குத்தனூர் சேஷுதாஸ் 20/5/2026
••••••••••••••••••••••••••••••••
*{21} சிலம்பொடு ஒரு பயணம்*
*அரங்கேற்ற காதை*
*இசை வெள்ளத்தில் அழகிய நடனம்*
••••••••••••••••••••••••••••••••
ஆட அரங்கம் தயார்.. ஆடப்போகும் நாயகியும் இன்னிசை முழக்கத்தோடு மேடை ஏறி, நடனமாடத் தயார்..
நடனத்தைக் கண்டு களிக்க அரசன் உள்ளிட்ட அவையோர் தயார்..
அடுத்து நடக்கப் போவதை பார்க்க நாமும் தயார் தானே!
எல்லாம் ஆயத்த நிலையில் இருந்தவுடன், நடனத்திற்கான இசை ஒலிக்கத் துவங்கியது.
*குழல் வழி நின்றது யாழே;* *யாழ் வழித் தண்ணுமை நின்றதுதகவே;* *தண்ணுமைப் பின் வழி நின்றது முழவே;*
*முழவொடு கூடி நின்று இசைத்தது ஆமந்திரிகை*
முதலில் குழல் இசைத்தது.
அதன் வழியில் யாழ் உடன் சேர்ந்து இசைத்தது.
யாழ் வழியில் தண்ணுமை (மத்தளம்) இணைந்தது.
தண்ணுமை வழியில் முழவும் சேர்ந்து கொண்டது.
முழவு வழியில் ஆமந்திரிகை (இடக்கை தோல் வாத்தியம்) இணைந்து ஒலித்தது.
அனைத்து இசைக் கருவிகளும் ஒத்திசையோடு நல்லிசை எழுப்பின.
இசை வெள்ளம் பொங்கிப் பெருகியது
*கட்டிய மண்டிலம் பதினொன்று போக்கி*
*வந்த முறையின் வழிமுறை வழாமல்,*
*அந்தரக் கொட்டுடன் அடங்கிய பின்னர்,*
ஆமந்திரிகை இசைக்குப் பின்னர் இருமுறைக் கொட்டல் நிகழ்ந்தது.
இப்படிப் பதினொரு சுழற்சி முழக்கிக் காட்டப்பட்டது.
இறுதியில் அந்தரக்கொட்டு என்னும் தன்னிசை முழக்க நிறைவு நடந்தேறியது.
ஒரு தாளத்திற்கு இரண்டு பற்றாக பஞ்ச தாளத்திற்காக பத்தும், அதோடு தீர்மானம் ஒன்றும் ஆக பதினொரு பற்றிலே ஒரு கூத்தினை கூத்து நூல் கூறியுள்ள விதிமுறைப் படி தவறாது மாதவி ஆடினாள். அந்தரக் கொட்டு என்றும் முகம் என்றும் கூறப்படும் கூத்தை அவள் நிகழ்த்தினாள்.
*மீத்திறம் படாமை வக்காணம் வகுத்து,*
*பாற்பட நின்ற பாலைப்பண் மேல் நான்கின் ஒரீஇய நன்கனம் அறிந்து,*
*மூன்று அளந்து, ஒன்று கொட்டி,* *அதனை ஐந்து மண்டிலத்தால் கூடை போக்கி,*
*வந்த வாரம் வழி மயங்கிய பின்றை,*
மாதவிப் பொன் மயிலாள் எப்படி ஆடினாள் தெரியுமா!
கால அளவுக்கு மிஞ்சாமல் ஆடினாள் -
பல்வேறு கோணங்களில் சுழலும் வக்காணம் வகுத்து ஆடினாள். -
வகைவகையான பாலைப்பண் இசைக்கேற்ப ஆடினாள். -
நான்காம் நரம்பின் இசையை ஒதுக்கிவிட்டு ஆடினாள். -
ஒவ்வொன்றையும் மூன்று முறை ஆடினாள். -
ஒரு இசைக் கொட்டுக்கு ஐந்து வகையான கூடைப் பாவனைகளைக் காட்டி ஆடினாள். -
இப்படியாக நடன இலக்கணம் வழுவாது சிறப்பாக ஆடினாள்.
மழலைக் கவி மோகன் ஐயா எழுதுகிறார்:
ஐயா,
முதல் வரிசையில் தங்களுடன் அமர்ந்து , சிரக்கம்பம் செய்தவாறு நான்
"பெருந்தோள் மடந்தை தாது அவிழ் புரிகுழல் மாதவி" யின் நடனத்தை , ரசித்த விதத்தைப் பகிர்கிறேன்.
இசை முழக்கம்:
அரசர் அவர் குழாமோடு ஆடலைக்காண வந்திருக்கின்றார் என்றால் வலப்புறம் நிற்கும் மாதவி சட்டென்றா ஆடத் துவங்குவாள்?
தாங்கள் விவரித்த இசைக்கருவிகளின் ஒருங்கிணைந்த இசை முழக்கம், அவள்ஆடப்போகும் நடனத்தின் சிறப்புக்கு, கட்டியம் (screen raiser) கூறுவது போல அமைந்தது. குழல், யாழ் இவற்றின்
இசை இனிதாக ஒலித்து,மத்தளம்( தண்ணுமை), முழவு( பறை எனலாம்) ஆமந்திரிகை( இடக்கையால் வாசிக்கப்படும் தோற்கருவி)
போன்ற தாள வாத்தியங்களோடு இணைந்து. ஒருங்கிணைந்த
இசை விருந்து அவையோருக்கு அளிக்கப்பட்டது.
இதில் கவனிக்க க் கூடிய சிறப்புகள்-
"அந்தரம் இன்றி"- இடைவெளி இல்லாமல். பல்வேறு இசைக்கருவிகள் ஒருங்கணிந்து சுருதிபேதம்இன்றி , வாசித்த முறை.
"மண்டிலம் "என்பது சுழற்சி.இது பதினோறு முறை நிகழ்ந்தது.
" வக்காணம்" - ஆலாபனை அல்லது இராக விஸ்தாரம்" எனக் கொள்ளலாம்.
"அந்தரக்கொட்டு "என்பது ஆடல்மகள் வெவ்வேறு நடனங்களை ஆடுவதற்கு முன் ஆடும் கூத்து வகை எனக்கொள்ளலாம்.
இந்த இசைக்கருவிகளின் கலவையைப் பார்த்தால் குழல், யாழ் போன்ற மெல்லிசையில் தொடங்கி, தாள வாத்தியங்களின் கம்பீர ஒலிகளோடு இணைந்து , உச்ச ஸ்தாயில் சென்று ( ஆங்கிலத்தில் crescendo) பின் படிப்படியாக , குறைந்து அந்தரக்கொட்டில் முடித்திருக்கலாம் எனத்தோன்றுகிறது.
தேசிக்கூத்து:
மாதவி பதமாக , நடன இலக்கணங்கள் வகுத்த அளவுகளை மீறாமல் ஆடிய கூத்து இது. தமிழ் பாரம்பரியத்தில் கூறப்படும் பல வகை கூத்துகளில் இது ஒன்று.
நாட்டுப்புற மக்களின் வாழ்வு மற்றும் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் பழங்கலை. நாடக வடிவின் ஆரம்பமே கூத்துகள் எனலாம். கூத்தை சாதாரணமாக மதிப்பிடக் கூடாது. நாட்டியக் கலையை எளிய முறையில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் அரிய கலை இது.
“ஐந்து மண்டிலத்தால் கூடை போக்கி" என்பது ,மாதவி ஆடும்போது, ஐந்து வகையான மண்டில நிலைகளை அமைத்து, அதற்கு ஏற்றவாறு ஐந்து வகையான கூடை ஆடல் வகைகளைச் சுழன்று ஆடினாள். இது நாட்டிய நூல்களில் கூறப்பட்ட விதிமுறைகளின் படி, மிகவும் நேர்த்தியாக, பொன்னால் செய்யப்பட்ட கொடி சுழல்வது போலச் சுழன்று ஆடிய கலைத் திறனை விவரிக்கிறது.
"பாற்பட நின்ற பாலைப்பண் மேல் நான்கின் ஒரீஇய"
இது ஏழு நரம்புகளைக் கொண்ட பேரியாழில் இருந்து, நான்கு நரம்புகளை நீக்கி, குறிப்பிட்ட பண்ணை இசைக்கும் முறையைக் குறிக்கிறது.
இங்கு இசைக்கப்படும் பண் ( இராகம்) , பாலைப்பண் ஆகும்
இது மகிழ்ச்சியைத் தரும் மங்கலப் பண் மற்றும் நண்பகலுக்குரிய பண் என அறியப்படுகிறது. தலைவனைப்பிரிந்த தலைவி பிரிவுத்துயரில் வாடுகையில பாடும் பண் , வழிப்பறிக் கொள்ளையரிடம் தப்பிக்க , பொருநர்கள் யாழில் இசைத்த பண் என்றும் காணப் படுகிறது!
இங்கு மங்கலம் போற்றுவதாகவே , கொள்ளலாம். துன்பியல் தொடங்க இன்னும் நாம்சற்று மேலே பயணிக்க வேண்டும்.
"நான்கின் ஒரீஇய நன்கனம் அறிந்து"
அரங்கேற்றப்படும் கூத்து வகைகளில் நால்வகை உறுப்புகள் (பாடல், தாளம், பண்ணு, வாரம்) என்று கூறப்படுகிறது. அல்லது, மங்கலப் பாடலில் குறைபாடான உறுப்புகளை நீக்கி, குற்றமற்ற நான்கு உறுப்புகளைக் கொள்ளுதல் எனப் பொருள் கொள்ளலாம்.
"வந்த வாரம் வழி மயங்கிய பின்றை"
மாதவி ஆடும்போது, இசை மற்றும் நரம்புக்கருவிகளின் (யாழ், முழவு) முறையான வழியைப் பின்பற்றி, பாட்டுக்கும் கூத்துக்கும் இடையிலான மயக்கம் (ஒருங்கிணைப்பு) ஏற்பட்ட பிறகு என்று பொருள்படும்.
இப்படி மாதவி ஆடும்ஆடலை இன்றைய கவிஞர் பார்த்தால்,
"அவள் ஒரு நவரச நாடகம்
ஆடும் நடையே நாட்டியம்" எனப் போற்றி இருப்பார். நாமும்தானே!
*பயணம் தொடரும்*
*லாஸ் வேகாஸ் பாலைவனத்தில் பூத்த ஒளிக் கனவு*
இயற்கையை இரசித்த நாங்கள், மனிதனின் படைப்பாற்றலை ருசித்துப் பார்க்கும் ஆவலுடன் புறப்பட்டோம். அமெரிக்காவின் நெவாடா (Nevada) மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா நகரம் லாஸ் வேகாஸ் (Las Vegas) நோக்கி சாலைப் பயணம்.
இந்தியாவில் இருந்து தினசரி அழைப்புகளில், அடுத்த பயணத் திட்டங்களை அறிந்துகொள்ளும் என் குடும்பத்தினர், “லாஸ் வேகாஸ் (Las Vegas)” என்ற பெயரைக் கேட்டதும் உடனடியாக ஒரு எதிர்வினையை வெளிப்படுத்தினர். “அங்கு எதற்கு? என்ன இருக்கிறது? சூதாட்டம் தானே!” என்ற கேள்விகள் சரமாரியாக வந்தன. பலருக்கும் லாஸ் வேகாஸ் (Las Vegas) பற்றிய புரிதல் இன்னும் அந்த அளவில்தான் இருக்கிறது.
*பாலைவனத்தின் நடுவே ஒளியை விதைத்து மனிதன் உருவாக்கிய அதிசய நகரம்* லாஸ் வேகாஸ் (Las Vegas).
*இவ்வளவு வெறிச்சோடிய, பாலைவன நிலத்தின் நடுவில் இப்படி ஒரு கனவு நகரத்தை உருவாக்க முடியுமா?* நகரத்தின் எல்லையைத் தொட்டவுடன், அதன் ஒளிமயமான வானம் கண்முன் விரிந்தபோது, அந்தக் கேள்வி தானாகவே பதிலாக மாறியது.
வெறும் நகரம் அல்ல. அது *மனித கற்பனையின் எல்லையைச் சோதித்துப் பார்க்கும் ஒரு பிரம்மாண்டமான மேடை.* நாம் மதுரையை *தூங்கா நகரம்* என்கிறோம். *அமெரிக்காவின் தூங்கா நகரம் லாஸ் வேகாஸ் (Las Vegas).* தூங்க மறுக்கும் நகரம்.
*உலகின் பல்வேறு நாடுகளையும் ஒரே தெருவில் கொண்டு வந்து நிறுத்திய மாய உலகம்.*
ஒளியால் உயிர் பெறும் தெரு, *தி ஸ்ட்ரிப் (The Strip)*
என்று உலகம் அறிந்த அந்த சாலையில் நடக்கும் போது, உண்மையிலேயே வேறொரு உலகுக்குள் நுழையும் உணர்வு ஏற்படுகிறது. *சூரியன் மறையத் தொடங்கும் நேரத்தில் கட்டிடங்கள் ஒளியால் உயிர் பெறுகின்றன.* ஒரு பக்கம் பாரிஸ் லாஸ் வேகாஸ் (Paris Las Vegas) இன் உயரமான ஈபிள் டவர் (Eiffel Tower) நகல். அதன் மேல் ஏறி நகரத்தைப் பார்க்கும் போது, *பிரான்ஸுக்குப் போகாவிட்டாலும் அதன் நிழலைத் தொட்டுவிட்ட மகிழ்ச்சி* மறுபக்கம் தி வெனிஷியன் ரிசார்ட் (The Venetian Resort). உள்ளே நுழைந்தவுடன் முழு மேற்கூரையும் நீல வானம் போல வரையப்பட்டிருக்கிறது. கீழே வெனிஸ் கால்வாய் போல நீர் ஓடுகிறது. கோண்டோலா (Gondola) படகில் அமர்ந்து செல்லும் போது, சில நொடிகளுக்கு *நான் அமெரிக்காவில் இருக்கிறேனா, இத்தாலியில் இருக்கிறேனா?* என்ற குழப்பம் வருகிறது.
அடுத்து லக்ஸர் ஹோட்டல் & கேசினோ . *பிரமிட் வடிவிலான கட்டிடம்,* அருகில் ஸ்பிங்க்ஸ் (Sphinx) சிலை. இரவில் அதன் மேலிருந்து விண்ணைத் துளைக்கும் ஒளிக்கற்றை *எகிப்தின் பண்டைய மர்மத்தை அமெரிக்கப் பாலைவனத்தில் நிறுத்தி வைக்கிறது.*
அடுத்து, நியூயார்க் ஹோட்டல் நியூயார்க் இன் நகரக் காட்சி, ரோலர் கோஸ்டர், பரபரப்பான தெருக்கள் ஒரே இடத்தில் பல உலகங்கள் கண்முன் திறக்கின்றன.
இந்தியாவில் ரிசார்ட் என்றால் ஓய்வுக்கான தங்கும் இடம். ஆனால் *இங்கு ரிசார்ட் என்பது ஒரு முழுமையான மினி சிட்டி (Mini City)!* ஒரே கூரையின் கீழ் சூதாட்ட விடுதி (Casino), நட்சத்திர ஹோட்டல்,செலிபிரிட்டி செஃப் உணவகங்கள் (celebrity chef restaurants), இசை அரங்கம், ஷாப்பிங் மால்,ஸ்பா அனைத்தும். ஒரு *ரிசார்ட்டுக்குள் நுழைந்தால் வெளியே வரத் தேவையே இல்லை. முழுமையான உலகம் உள்ளே உருவாக்கப்பட்டிருக்கிறது.*
*உலகம் முழுவதும் சுற்றிப் பார்க்க முடியாவிட்டாலும், சில நகரங்கள் உலகத்தையே நம்மிடம் கொண்டு வந்து நிறுத்திவிடுகின்றன.* என்று ஒரு நிம்மதி.
என்னை மிகவும் கவர்ந்த அனுபவம் பெல்லாஜியோ நீரூற்றுகள் (Bellagio Fountains). இசைக்கு ஏற்ப ஆயிரக்கணக்கான நீரூற்றுகள் ஒருங்கிணைந்து உயர்ந்து, வளைந்து, விழும் அந்தக் காட்சி *ஒரு நீரூற்றுக்காட்சி அல்ல அது ஒரு திரைப்பட நடன நிகழ்ச்சி.* “விவா லாஸ் வேகாஸ் (Viva Las Vegas)” பாடலின் இசையோடு தண்ணீர் வானை நோக்கி எழும்பும் போது, ஒளி, இசை, நீர் மூன்றும் சேர்ந்து ஒரு கவிதையாக மாறுகின்றன. அந்தக் காட்சியைப் பார்க்கும் *ஒவ்வொரு முகத்திலும் பிரமிப்பும், மகிழ்ச்சியும் ஒன்றாகத் தெரிகின்றன.*
அருகிலேயே உள்ள பெல்லாஜியோ கன்சர்வேட்டரி & பாட்டானிக்கல் கார்டன்ஸ் மலர் தோட்டம் இன்னொரு அதிசயம். இயற்கையையே கலை வடிவில் மாற்றி, ஒவ்வொரு பருவத்துக்கும் புதிய அலங்காரத்துடன் வைக்கிறார்கள்.
மற்றொரு மிகப் பெரிய ஆச்சரியம், ஸூக்ஸ் (Zoox) ரோபோ டாக்சி. அமேசான் (Amazon) நிறுவனத்தின் சொந்த நிறுவனம் உருவாக்கிய *முழு டிரைவரில்லா கார். திசைத் திருப்பி இல்லை, டிரைவர் இல்லை. முழுக்க முழுக்க புதிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட வாகனம்.*
*லேன் கோடுகள் (lane lines), போக்குவரத்து சிக்னல்கள் (traffic signals), பாதசாரிகள் (pedestrians), அருகிலுள்ள வாகனங்கள் (nearby vehicles), வேக வரம்புகள் (speed limits) என எல்லாவற்றையும் துல்லியமாகக் கண்காணித்து, சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்துச் சென்றது.*
*ஒரு மனிதன் கண்களால் பார்க்கும் வேலையை, AI + சென்சார்கள் (sensors) சேர்ந்து செய்கின்றன என்பதை நேரில் உணர்ந்தேன். *எதிர்காலம் ஏற்கனவே வந்துவிட்டது* என்பதை தெளிவாக உணர முடிகிறது.
பலருக்கு லாஸ் வேகாஸ் என்றால் தி ஸ்ட்ரிப் (The Strip) மட்டுமே. ஆனால் டவுன்டவுன் (Downtown) பகுதியைப் பார்க்கும் போதுதான் நகரத்தின் இன்னொரு முகம் தெரிய வருகிறது. ஃப்ரீமாண்ட் ஸ்ட்ரீட் எக்ஸ்பீரியன்ஸ் இல் பழைய வேகாஸ் (Vegas) இன்னும் உயிருடன் இருக்கிறது. *தெரு இசைக்கலைஞர்கள், பிரம்மாண்ட எல்இடி (LED) மேற்கூரை, சிரிப்பொலி, சுதந்திரமான இரவு வாழ்க்கை இவை நகரத்தின் பழைய ஆன்மாவை இன்னும் காத்து வருகின்றன.*
*தி ஸ்ட்ரிப் உலகை ஆச்சரியப்படுத்தும் வேகாஸ் (Vegas).*
*டவுன்டவுன் (Downtown) வேகாஸ் (Vegas) இன் உண்மையான இதயம்.*
சூதாட்ட விடுதிகளுக்குள் கடிகாரங்களும், ஜன்னல்களும் இல்லை. இரவு, பகல் தெரியாது. வெளிச்சம் எப்போதும் ஒரே மாதிரி. தொடர் இசை. *இது தற்செயல் அல்ல.* *மனித மனதை நுணுக்கமாகப் புரிந்து வடிவமைக்கப்பட்ட உளவியல்.* *நேரத்தை மறக்கச் செய்து, நீண்ட நேரம் தங்க வைப்பதே நோக்கம்.* இது ஒருபுறம் கவர்ந்தாலும், எச்சரிக்கையும் தேவைப்படுகிறது.
நகரத்தை விட்டு சற்று வெளியே சென்றபோது இயற்கையின் அற்புதமான முகங்கள் காத்திருந்தன.
ரெட் ராக் கேன்யான் தேசிய பாதுகாப்பு பகுதி (Red Rock Canyon National Conservation Area) சிவப்பு பாறைகள், அமைதி நிறைந்த பள்ளத்தாக்குகள், வானைத் தொடும் மலைச் சரிவுகள்.
வேலி ஆஃப் ஃபயர் ஸ்டேட் பார்க் (Valley of Fire State Park) செவ்வாய் கிரகத்தில் நடப்பது போன்ற பிரமிப்பான சிவப்பு மணல் பாறை உருவாக்கங்கள்.
இந்தப் பாலைவனமும் லாஸ் வேகாஸ் இன் அழகின் ஒரு முக்கிய பகுதி என்பதை உணரமுடிகிறது.
இது எனக்கு வெறும் பயண நினைவுகளை மட்டும் தரவில்லை.
*மனித கற்பனை எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதை உணர்த்தியது.*
*ஒளி, இசை, தொழில்நுட்பம், ஆடம்பரம், இயற்கை இவை அனைத்தும் ஒன்றாகக் கலந்தால் எப்படி ஒரு கனவு நகரம் உருவாகும் என்பதை காட்டியது.*
தனியாகவோ, குடும்பத்துடனோ, நண்பர்களுடனோ எப்படிச்சென்றாலும் லாஸ் வேகாஸ் (Las Vegas) ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவமான கதையையும், . நினைவையும் பரிசளிக்கும். திரும்பி வர வேண்டும் என்ற ஆசையை மனதில் விதைக்கும்.
*இங்கு எந்த Resort Casino விற்குள்ளும் செல்ல நுழைவுக் கட்டணம் இல்லை என்பதும், எதிர்கால தொழில்நுட்பத்தை உணர்த்தும் Zoox தானியங்கி பயணமும் இலவசமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.*
உலக செவிலியர் தின வாழ்த்து!
வெள்ளுடை போர்த்திய விண்மகளீர்!
விடியலை வார்க்கும் தேவதையீர்!
வேதனை விரட்ட புன்னகைப்பீர்!
விண்ணின் கருணையாய் பொழிந்திடுவீர்!
நோயாளியை நாடி, நாடி பிடிக்கும்
மருத்துவ உலகின் நாடித் துடிப்பு!
வலியில் துடிக்கும் உயிர்க்கு எல்லாம்
வழிகாட்டி நிற்கும் கை காட்டி !
உள்ளங்கையின் மென்மை தீண்டிடவே
ஊசியின் கூர்மையும் மழுங்கிடுமே!
உவகை மொழியின் இனிமை கேட்டு
உயிரின் உளைச்சல் குறைந்திடுமே!
உறவுகள் உள்வர மறுக்கும்
உயிர்ப்போர் அவசர அறைகளிலே
உலுக்கும் அச்சம் உறையும் வேளையிலே
உறுதியாய் தொட்டது உன் கரங்கள்!
பிறக்கும் பிஞ்சின் முதல் துடிப்பும்
பிரியும் உயிரின் கடைசி துடிப்பும்
இரவும் பகலுமென இணை பிரியா!
இரண்டிலும் உந்தன் இறை கரங்கள்!
நள்ளிரவு முழுதும் சேவை தரும்
நடையே அடைக்கா நல் தெய்வம்!
வலியில் அழுது வார்த்தை வறண்டாலும்
விழிகள் பனிக்கும் உன் பணிவிடையால்!
- திருஞானசம்பந்தம்
=======================================
அகிலமெங்கும் அனைவரும்......
கண்ணால் பார்க்க கூடிய.......
வெள்ளை உடை தேவதைகள்......
செவிலியர்கள் மட்டுமே 🙏💐🙏🩷😊🙏
- சாய் ராம்
-----------------------------------
வாழ்க்கை என்றும்
ஒரு
விளக்கக் கையேட்டுடன்
(Manual)
வருவதில்லை.
மாறாக
ஒரு
அன்னையுடன்
ஆரம்பம் ஆகிறது.
- முகம்மது சுலைமான்
==================================
அன்னையர் நள்..
தாத்தாவாகி போனாலும் உன்
தாயிக்கு நீயொரு குழந்தை தான்.
ஆத்தா பட்ட கஷ்டங்களை நினைத்தால்
ஆயிரம் வருஷமானாலும் நீ அடிமை தான்.
அன்னையை போற்றுவோம்.
அன்பால் அவளை வெல்வோம்
அன்பை பொழியும் அனைவருக்கும்.
அன்னையர் நாள் வாழ்த்துகள்
-அக்ரி சா.இராஜா முகமது 💐
================================
தொலைந்து போகும் வரை...
மட்டைப்பந்தில் தமிழ்ச் சங்கம் தோய்ந்திருக்க
மண்ணில் நமை ஈன்ற " தாய்மை " உமை ஈர்க்க
பட்ட அவள் வேதனைகளைப் பட்டியலிட்டீர்
பாவம் அதரம் கடித்து ஈன்றதைச் சொன்னீர்
வட்ட நிலா காட்டிச் சோறூட்டிய உறவு
வள்ளலாய் பால் தந்த வான் காமதேனு
தொட்டிலில், தூளியில் தூங்க நமை வைத்தவள்
*தொலைந்து போகும் வரை கண்ணீர் துடைத்தவள்.
* தொலைந்து -- இறந்து
__. குத்தனூர் சேஷுதாஸ் 10/5/2026
*{20} சிலம்பொடு ஒரு பயணம்*
*அரங்கேற்ற காதை*
*தலைக்கோல் சிறப்பு*
ஆடரங்கம் தயாராய் இருக்கிறது.
அரசன் முதல் அனைவரும் ஆட அரங்கில் வந்து அமர்ந்தும் விட்டனர்.
ஆட்டம் துவங்கும் முன்,
முக்கிய பொருள் பற்றி சிலம்பு கூறுகிறது..
அப்பொருள் யாது..!
அதன் அருமை பெருமைகள் என்னென்ன..!! பார்த்திடலாமா!
*பேர் இசை மன்னர் பெயர் புறத்து எடுத்த சீர் இயல் வெண்குடைக் காம்பு நனிகொண்டு கண் இடை நவமணி ஒழுக்கி*
புகழ்பெற்ற பற்பல பேரரசர்களுடன் போரிட்டு அவர்களை புறமுதுகிட்டு ஓடச் செய்து, அவர்களின் வெண் கொற்றக் கொடையின் பிடிகளில் உள்ள கணுக்களில் எல்லாம் நவமணிகளை பதித்தனராம். கணுக்களுக்கு இடையில் பொன் தகடுகளால் பூண் அமைத்தனராம்.
*வெண்குடை மன்னவன் கோவில் இந்திர சிறுவன் சயந்தன் ஆக என வந்தனை செய்து வழிபடு தலைக்கோல் புண்ணிய நன்னீர் போர்க் குடத்து ஏத்தி... மாலை அணிந்து.... பொலம்பூண் ஓடை*
நாடாளும் மன்னன் வெண்கொடை வீற்றிருக்கும் அரண்மனையில் இந்திரன் மகன் சயந்தனாக (இளங்கோவடிகளே சாபம் பெற்ற சயந்தனை குறிப்பிடுகிறார் பாருங்கள்) விளங்குக என தலைக்கோலுக்கு வந்தனையும் வழிபாடுகளும் செய்தனராம். புண்ணிய நதிகளில் இருந்து பொற் குடங்களில் எடுத்து வந்த புனித நீரால் நீராட்டினராம். பின்னர் அதற்கு நறுமண மலர் மாலைகள் சூட்டி, ஒரு நல்ல நாளில் பொற்பூணும் அழகிய நெற்றிப் பட்டமும் சூட்டப்பட்ட பட்டத்து யானையின் துதிக்கையில் தந்து வாழ்த்தொலி முழங்கினராம்
பின்னர்,
*அரைசொடு பட்ட ஐம்பெருங்குழுவும் தேர் வலம் செய்து கவிகைக் கொடுப்ப ஊர்வலம் செய்து புகுந்து முன்வைத்து ஆங்கு*
பற்பல வாத்தியங்கள் பண்ணிசைக்கும் முரசறையும் வீதிகளில் அரசரும் அவருக்குத் துணையாக ஐம்பெருங்குழுவினரும் உடன் வர தேர்வலம் வரும் வீதிகளில் ஊர்வலம்
வந்து, அரங்க வாயிலில் பெரும் கவிஞன் கையில் தர கவிஞன் அத் தலைக்கோலை ஆடரங்கில் கூடியுள்ள அவையோருக்கு முன்பாக வைத்தானாம்.
அடுத்ததாக
*குயிலுவ மக்கள் நெறிப்பட நிற்ப வலக்கால் முன்மிதித்து ஏறி அரங்கத்து வலத்தூண் சேர்தல்*
வாத்தியங்கள் இசைப்போர் வரிசையாய் நிற்க, மாதவி உள்ளே வந்து வலது காலை வைத்து ஏறி அரங்கத்தில் வலது தூண் பக்கம் வந்து நின்றாளாம். இதுதான் மரபு. (இக்காலத்தில் திரைப்படங்கள் நாடகங்கள் ஆகியவற்றில் வலது பக்கமே மக்கள் கவனம் அதிகம் செல்லும் என்பதால் அநேக கலைஞர்கள் அப்பக்கம் வந்து நிற்பதையே விரும்புவார்களாம். இதனை சம்பந்தப்பட்ட துறையை சேர்ந்தவர்கள் அறிவார்கள்)
*இடத்தூண் சேர்ந்த தொழில்நெறி இயற்கைத் தோரிய மகளிரும் சீர் இயல் பொலிய*
வாத்தியம் இசைக்கும் பெண்களும் முறைப்படி
இடத் தூண் அருகே வந்து வரிசையாக நின்றனாம்
*வாரம் இரண்டும் வரிசையில் பாட பாடிய வாரத்து ஈற்றில் நின்று இசைக்கும் கூடிய குயிலுவக் கருவிகள் எல்லாம்*
அப்போது நல்லன சிறக்க தீயன அகல ஓர் ஒற்று வாரம் ஈரொற்று வாரம் எனும் துதிப் பாடல்களை முறையாக பாடினராம். பாடும் பொழுது பக்கவாத்திய இசைக்கருவிகள் எல்லாம் பாடலோடு சேர்ந்து இன்னிசை மீட்டி அவ்வரங்கை நிறைத்தனவாம்.
நம் கண் முன்னே அக்காட்சியும் தெரிகிறது - செவிகளில் அப்பாடல்களும் இன்னிசையும் கேட்கிறது அல்லவா!
இப்போது மழலை கவி மோகன் ஐயா:
இவ்வாரப் பயணத்தில், தலைக்கோல் அமைதி, மாதவி அரங்கு ஏறல் என்ற இரண்டு நிகழ்வுகளை என் பார்வையில் காண அழைப்பு விடுக்கிறேன்.
தலைக்கோல் அமைதி:
எதிரி மன்னர்களை வென்று அவர்களின் வெண்கொற்றக் குடையின் காம்பினை, சிதைவில்லாமல் எடுத்து - "சீர் இயல் வெண்குடைக் காம்பு", அதன் கணுக்களை, தூய்மை செய்து நவமணிகளால் அலங்கரித்து, கணுக்களுக்கு இடைப்பட்ட பகுதிகளை "சாம்பூநதம்" எனும் பொன்னால் பொற்கொல்லர் அலங்கரிப்பர்.
அது என்ன பொன் ஐயா?
நமக்கு 18 காரட், 24 காரட் போன்ற வகைகளை அதுவும் சேதாரத்தோடு அறிவோம்.
இந்த சாம்புநதம்-நாவல் மரத்தின் சாறு ஒழுகிப் பெருகும் இடத்தில் கிடைக்கும் பொன் என விவரிக்கப்படுகிறது.
தமிழ் இலக்கியத்தில். இது சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம் ஆகியவற்றுடன் இதுவும் உயர்வகைப் பொன்னாக, கருதப்படுகிறது.
பெரும்பாலும் பொற்கொல்லர்கள் அலங்கார வேலையே செய்வர்; ஆனால் பொற் கொல்லர்களில் ஒருவன், கதாநாயகனின் "கொல்லர்"- கொல்பவர்( என் பார்வையில் ... தமிழில் அல்ல!)
இந்த தலைக்கோலை இந்திரன் மகன் சயந்தனாக கருதி வழிபாடுகள் செய்வர். இதுவே தலைக்கோல் .
இதனை, தாங்கள் விவரித்தபடி , சிறப்பான ஊர்வலத்தில் எடுத்து வரப்பட்டு, கவிஞனும் அரங்கத்தில் சேர்த்துவிட்டான்.
எப்படிப்பட்ட ஊர்வலம்!
அரசர் ,அவர்கூட ஐந்து முக்கிய துறைகளில் நிர்வாகம் செலுத்தும் ஐவர் குழாம் என உயர்மட்டக்குழு மரியாதை செலுத்திய தலைக்கோல்.
தற்காலத்தில், உலக மட்டையடி
பந்தய மைதானத்தில், கோப்பையை யாவரும் காணும்படி வைப்பது போல ஒரு நிகழ்வு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்!
மாதவிக்கு சிறப்பு செய்ய , காத்திருக்கிறது. என்ன தகைமை வாய்ந்த சிறப்பு!
வெறுமனே சால்வை போர்த்தி,
புகைப்படம் எடுக்கும் சிறப்பு அல்ல!
மாதவி அரங்கு ஏறல்:
தற்காலத் திரைப் படங்களில் முக்கிய நாயகி வருகைக்கு , கட்டியம் கூறுவதை போல பல வாத்தியங்கள் முழங்குமே, அது போல் ஒருங்கிணைந்த
வாத்திய குழுவின் வரவேற்பு. முரசு, யாழ், முழவு எனப் பலப்பல இசைக் கருவிகள் மூலம் சப்த ஸ்வரங்களின் அஞ்சலி நாட்டியாஞ்சலி நங்கைக்கு, அதுவும் பேரரசர் முன்.
மாதவி மேடையின் மேல் வலது காலை வைத்து, வலது பக்கமாக ஏறினாளாம். இது ஒரு மங்கலத்தின் அறிகுறி. ஆட வல்லாள் மேடை முழுவதும் மட்டும் அல்ல காப்பியத்திலும்
வலம் வரப் போகிறாளே!
" தோரிய" மகளிர் பின்பாட்டு பாடுபவர்கள்;" வாரம்" எனும் தெய்வப்பாடல்கள இசைப்பவர். ( தே வாரம்- தெய்வங்களைப் போற்றும் பாடல்).இவர்கள் ஓரொற்று வாரம், ஈரொற்றுவாரம் ஆகிய பாடல் முறைகளை, வாத்திய கோஷ்டி இசை கூட்ட சபையோரை, தெய்வப்பரவசத்தில் ஆழ்த்தினர்.
அகில இந்திய வானொலியின் அக்கால கோஷ்டி கானம் நினைவுக்கு வருகிறது.
ஓரொற்று வாரம்: ஒரு ஒற்று (மெய் எழுத்து) தொடர்ந்து வரும்படியாக அமைந்த பாடல் வகை.
ஈரொற்று வாரம்: இரண்டு ஒற்றுகள் (மெய் எழுத்துக்கள்) தொடர்ந்து வரும்படியாக அமைந்த பாடல் வகை.
மாதவி மங்கை ஆடத் தயாராக விட்டாள். எதிர்பார்ப்பில் நம் கால்களும் தாளமிடத் தொடங்கி விட்டன!
*பயணம் தொடரும்*
பயணங்கள் முடிவதில்லை…
இது உங்களுள் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை எனில், அதற்கு அந்த இயற்கையின் அழகோ அதிசயமோ காரணமல்ல, அதன் மகத்துவத்தை உரிய முறையில் சொல்ல என்னால் இயலவில்லை என்பதே காரணம்
பாறைகள் பேசும் இடம் -Zion National Park
பயணம் என்பது இலக்கை மட்டும் நோக்கி செல்வதல்ல, வாழ்க்கையைக் கண்டுகொள்வதும் தான்.
Las Vegas செல்ல வேண்டும். ஆனால் எந்த வழியில் செல்வது என்ற கேள்வி எழுந்தது. Grand Canyon போகலாமா, Zion National Park போகலாமா என்று விவாதம் நடந்தது. ஜனநாயகம் வென்றது, பெரும்பான்மை குரல், Zion-க்கே சாய்ந்தது. காரணம், பாறைகளை தூரத்தில் இருந்து பார்ப்பதைவிட, அவற்றுக்கு நடுவே நடந்து, தொட்டு, உணர்ந்து அனுபவிப்பது அதுவே உண்மையான பயணம்.
சாலையே ஒரு கவிதை
புதிய நாள், புதிய உற்சாகம். வாகனம் புறப்பட்டது. பாதை சாதாரணமானதல்ல, Utah மாநிலத்தின் நெஞ்சை கிழிக்கும் நிலப்பரப்பு வழியாக செல்லும் அந்த சாலை, வார்த்தைகளில் சொல்ல முடியாத ஒன்று. ஒவ்வொரு திருப்பத்திலும் ஒரு புதிய உலகம் திறக்கிறது. மலைகளும் பள்ளத்தாக்குகளும் அலை அலையாக கடந்து வருகிறது. Zion-இல் நுழைந்தவுடன், காட்சி முற்றிலும் மாறுகிறது.
சிவப்பு. ஆம், கண்ணை மூடினாலும் தெரியும் அந்த சிவப்பு. கோடிக்கணக்கான ஆண்டுகளாக காற்றும் நீரும் செதுக்கிய சிவப்பு மணற்கல் மலைகள். இருபுறமும் 2,000 முதல் 3,000 அடி உயரத்தில் வானை முட்டும் மலைகள். நடுவே அமைதியாக, கலங்காமல் ஓடும் Virgin River. அந்தக் காட்சியைப் பார்த்தபோது, வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை, மனசு ஆஹா! என்றது.
Virgin River-இன் வழியே… (பார்த்தது மட்டுமே, பயணப்படவில்லை)
Zion-இன் உண்மையான ஆத்மா இருப்பது அதன் பள்ளத்தாக்கில். Virgin River ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பாறைகளை அரித்து உருவாக்கிய அந்த பள்ளம், கண்களால் பார்க்க முடியாத ஆழம். நதியின் நடுவே நடந்து செல்லும்போது, இருபுறமும் நேராக எழும்பும் மலைச்சுவர்கள் வானத்தை ஒரு கீற்றாக காட்டுகின்றன. சில இடங்களில் நீர் இடுப்பு வரை வருகிறது, ( நான் இந்த விளையாட்டில் இல்லை 🤩) கால்கள் நனைகின்றன, மனசு விழிப்படைகிறது, உடல் இப்போது இருக்கும் இந்த கணத்தில் மட்டுமே இருக்கிறது.
அந்த நடையில் ஒரு விசித்திரமான அமைதி உண்டு. நகர வாழ்க்கையின் சத்தம், அவசரம், தொலைபேசி அறிவிப்புகள் எல்லாம் மறைந்துபோகின்றன. மலைகள் பேசவில்லை, ஆனால் அவற்றின் மவுனம் ஒரு தெளிவான செய்தி சொன்னது. அவசரமில்லை… வாழ்க்கையை ரசிக்கவும்.
Angels Landing தைரியமுள்ளவர்களுக்கு
Zion-இல் ஒரு சவால் காத்திருக்கிறது. Angels Landing. உலகின் மிகவும் துணிச்சலான hiking trails-இல் ஒன்று என்று புகழ் பெற்றது. இப்போது இதற்கு முன்கூட்டியே permit வாங்க வேண்டும். ஏன் என்று சென்றால் தான் புரியும் ( நாங்கள் யாருமே செல்லவில்லை 😂) கடைசிப் பகுதியில் இருபுறமும் ஆழமான பள்ளம், நடுவே குறுகிய பாதை. மன உறுதியும் உடல் சமநிலையும் இல்லாமல் அந்த இடம் உங்களை மன்னிக்காது. ஆனால் மேலே சென்று நிற்கும்போது தெரியும் அந்த உச்சியிலிருந்து பார்க்கும் காட்சி, ஒவ்வொரு அஞ்சிய நிமிடத்திற்கும் பரிசு தருகிறதாம்.!!!
இயற்கை ஆலயம்
பூங்காவுக்குள் தனியார் வாகனங்கள் எல்லா இடங்களுக்கும் போக முடியாது. Shuttle bus மட்டுமே நம்மை உள்ளே அழைத்துச் செல்கிறது குறிப்பாக Peak Season-இல். இது ஒரு புத்திசாலித்தனமான விதி. இயற்கையை பாதுகாக்க, மனிதன் கொஞ்சம் வசதியை தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது. அந்த அனுமதி கொண்டே நாம் உள்ளே செல்கிறோம்.
Zion-இல் நடந்த அந்த மணி நேரங்கள் மனசில் பதிந்தது வேறு எதுவுமில்லை. இயற்கையின் பிரமாண்டம், பிரமாண்டம், பிரமாண்டம் மட்டுமே. ஆனால் ஒரு நிம்மதி, விடுதலை.
பயணம் தொடர்ந்தது Las Vegas நோக்கி. ஒளி மின்னும் நகரம் காத்திருந்தது. ஆனால் Zion கொடுத்த அந்த அமைதி, இன்னும் மனசில் தங்கியிருந்தது.
Grand Canyon-ஐ தூரத்திலிருந்து பார்த்திருந்தால் கண் நிறைந்திருக்கும். Zion-ல் நடந்ததால் நெஞ்சு நிறைந்தது. அதுவே வித்தியாசம்.
பார்ப்பது பயணமில்லை, உணர்வதே பயணம்.
*ஞாயிறும் திங்களும்*
வாரம் ஓடும் கடிகார முட்களுக்கு
நேரம் தரும் வார விடுமுறை !
அலாரம் விடுத்து விழிக்கும் விடுப்பு!
அவசரம் விடுத்த சுவாசத்தின் துடிப்பு!
வேளை தவறிய வேளையில் சிற்றுண்டி!
வேலை இல்லாமல் உணவு இடைவேளை!
நேரம் ஒரு பறவையெனில்,
நினைவுகள் அதன் இறகுகள் —
பிடிக்க நினைத்தால் பறந்து விடும்
பறக்க நினைத்தால் மறைந்து விடும்!
காலை ஒளி கண்களில் விலக,
மாலை நிழல் மடியில விழும்!
புத்தக குழந்தை தோளில் தவழ
பழைய பாடல்களால் தூக்கம் தழுவும்!
கனவு தலையணையில் ஞாயிறு தூங்கும்!
அக்னி நட்சத்திரத்தில் திங்கள் பிறக்கும் !
ஞாயிறு நினைவுகள் நெஞ்சில் அகன்று,
திங்கள் நடைகள் மீண்டும் தொடங்கும்!
போக்குவரத்து நெரிசல் வழியை மறிக்கும்!
வியர்வை துளியால் உடம்பு குளிக்கும்!
ஒலிபெருக்கி சத்தம் காதை குடையும்!
ஒளியின் வெப்பம் குடையை தேடும்!
பணிச்சுமை தோளில்- உணவோ பையில்!
அலுவலுக மூச்சில் அவலும் பொரியும்!
மின்னஞ்சல் மழையில் கணிப்பொறி நனையும்!
தோழமை மேகம் நெஞ்சை குளிர்க்கும்!
•••••••••••••••••••••••••••••••
*{19} சிலம்பொடு ஒரு பயணம்*
*அரங்கேற்ற காதை*
*ஆடல் அரங்கம்*
•••••••••••••••••••••••••••••••
அன்பு நிறை வாசகர்களே!
அரங்கேற்று காதை துவங்கிய பதிவில்
அகத்திய முனியின் சாபத்திற்க்காளான
ஊர்வசி சயந்தன் பற்றி பகிர்ந்தது
நினைவிருக்கும்.
ஊர்வசி மாதவியாக பிறந்தாள்.
சயந்தன் (தேவேந்திரன் மகன்)
வேணுவாக, அதாவது மூங்கில் ஆகப் பிறந்தான்.
இளங்கோ அடிகள் மாதவியின் அரங்கேற்றக் காதையில்
முக்கிய நிகழ்வாக ஆடரங்கத்தைப் பற்றி விரிவாக விளக்குகிறார்.
மாதவியாய் பிறந்த ஊர்வசியின்
நடன அரங்கேற்றத்திற்கு
அரங்கம் அமைக்க மூங்கிலே பிரதானமாகிறது.
அதாவது இந்திரன் மகனே மூங்கிலாய் பிறந்து நடன அரங்கத்தின் கட்டமைப்புக்கு உதவுகிறான்.
சாபம் பெற்ற பிறகும் அவளைப் பிரியவில்லை அவன் என்பது போன்ற சித்தரிப்பு இது.
*மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு புண்ணிய நெடுவரைப் போகிய நெடுங்கழைக்கண்ணிடை ஒருசாண் வளர்ந்தது கொண்டு*
அதாவது, முதற்கண்
நாட்டிய மேடை அமைப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப் பட்ட நிலத்தை அளந்து வகுத்தனர்.
பின்னர், புனிதமான மலைகளில் (சாபமிட்ட அகத்தியர் உறைந்த பொதிய மலை) வளர்ந்த நீண்ட மூங்கில் குச்சிகள் கொணர்ந்து,
மூங்கிலின் கணுக்களுக்கு இடையே ஒரு சாண் அளவு இடைவெளி கொண்ட சரியான மூங்கிலைத் தேர்வு செய்து, நாட்டிய நூல் சொல்லும் மரபுப் படி, அந்த மூங்கில்களைக் கொண்டு மேடையை அளந்தனர்.
இதற்கு மேல் தான் நீள, அகல, உயர விவரங்களை தெளிவாக விளக்குகிறார் ஆசிரியர்.
*நூல் நெறி மரபின் அரங்கம் அளக்கும்கோல் அளவு இருபத்து நால் விரல் ஆக,*
*எழு கோல் அகலத்து, எண் கோல் நீளத்து,ஒரு கோல் உயரத்து, உறுப்பினது ஆகி,*
*உத்தரப் பலகையோடு அரங்கின் பலகைவைத்த இடை நிலம் நால் கோல் ஆக,*
*ஏற்ற வாயில் இரண்டுடன் பொலிய,*
எவ்வளவு நுணுக்கமாக மேடையின் அளவினை விளக்குகிறார் பாருங்கள்.
பொதிய மலையிலிருந்து கொண்டு வரப்பட்ட மூங்கிலை குறிப்பிட்ட அளவில் வெட்டினர். அதாவது, நன்கு வளர்ந்த சராசரி மனிதனின் கை பெருவிரலில் இருபத்தி நான்கு வரும்படி அளந்து ஒரு கோல் நறுக்கினர்.
ஏழு கோல் அகலமும், எட்டுக்கோல் நீளமும், ஒரு கோல் உயரமுமாக நடன அரங்கம் அமைக்கப்பட்டது.
மேலும் கூறுகிறார்:
*பூதரை எழுதி, மேல் நிலை வைத்து;*
*தூண் நிழல் புறப்பட, மாண் விளக்கு எடுத்து; ஆங்கு,*
*ஒரு முக எழினியும், பொரு முக எழினியும்,*
*கரந்து வரல் எழினியும், புரிந்துடன் வகுத்து -*
அதாவது, நாற்புறமும் தூண்களை நிறுத்தி, அவற்றின் மேல் உத்தரப் பலகைகளைப் பொருத்தினராம். உத்தரப் பலகைகளுக்கும் நடனமேடைக்கும் இடையே நான்கு கோல் அகல இடைவெளி இருந்தது என்பது அறிக. அரங்கத்தின் உள்ளே போவதற்கும் வருவதற்குமாக இரண்டு வாயில்கள் அமைக்கப் பட்டனவாம். இக்கால என்ட்ரி (entry) மற்றும் எக்ஸிட் (exit) வாயில்களைப் போல.
அரங்கின்
மேல்நிலை மாடத்தில், யாவரும் தொழுது போற்றுமாறு, தேவர் உருவங்கள் எழுதப் பட்டிருந்தவாம். தூண்களின் நிழல் அரங்கில் விழாத வண்ணம் விளக்குகள் வைக்கப் பட்டிருந்தனவாம். (இது எவ்வளவு முக்கியமான, மிக நுணுக்கமான விடயம் பாருங்கள்)
ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கத்துக்கு நகரும் திரையாகிய *ஒருமுக எழினி*, இரண்டு பக்கங்களிலிருந்தும் நகர்ந்து வந்து நடுவில் பொருந்துமாறு அமைக்கப்பட்டிருந்த திரையாகிய *பொருமுக எழினி*, மேலே மறைந்திருந்து திடீரென இறங்கி மூடும் திரையாகிய *கரந்துவரல் எழினி* ஆகியவை சுருண்டு நின்று அழகு சேர்த்தன. நடன அரங்கில் அமைக்கப்பட்ட திரைகளுக்கு எவ்வளவு விளக்கம் பாருங்கள்.
*ஓவிய விதானத்து, உரை பெறு நித்திலத்து*
*மாலைத் தாமம் வளையுடன் நாற்றி;*
*விருந்துபடக் கிடந்த அரும் தொழில் அரங்கத்து*
இதனால் அவர் கூறுவது: மேல் திரையில் (விதானத்தில்) அழகிய வண்ண ஓவியம் தீட்டப் பட்டிருந்தது. முத்து மாலைகள் வளைந்திருக்கும் படித் அழகுற தொங்க விடப் பட்டிருந்தன. புதுமையான வேலைப்பாடுகள் ஆடரங்கினுள் அமைக்கப் பட்டிருந்தன.
மொத்தத்தில் மாதவி அரங்கேறும் மேடை அழகும், பொலிவும், அருமையும், அரிய கலைநயமும் வாய்ந்ததாக அமைந்திருந்தது. பார்ப்போரின் கண்களைக் கவர்ந்ததோடு கருத்தையும் நிறைத்தது.
இவ்வளவு நுணுக்கமான விவரங்களை எழுதி முடிக்கையில் நமக்கே மலைப்பாக இருக்கிறது. கலைகளில் எவ்வளவு சிறந்து விளங்கி இருக்கிறது நமது தமிழ்ச் சமூகம். நம் தலைகள் பெருமையோடு தானாக நிமிர்ந்து நிற்கின்றன.
(அரங்கத்தின் சிறப்பை தன் பார்வையில் விளக்க இதோ வருகிறார் நம் மழலைக் கவி மோகன் ஐயா):
ஆடல் சிறப்புற அமைய அடிவாரமாக அமையும் ஆசான், குழலோன் எனப் பல சிறப்புகளை அனுபவித்தோம்.
ஆடும் அரங்கு?
இக்காலத்தவருக்குப் புரியும்படி
கூற விழைகிறேன்.
*களம் அமை* (ஆங்கிலத்தில் set the stage) என்பார்கள்.
ஆடும் களம், என்பது, அமைப்பது பற்றி மட்டும்அல்ல.
இந்தக் களம் காப்பியத்தில் புதிய திருப்பம் ஒன்றை ,
அமர்க்களமாக ஏற்படுத்தப்போகும் , ஓர் ஆண்மகனின் வாழ்வை இரண்டு படுத்தும் இரண்டாம் கதாநாயகியை அரங்கேற்றும் களம்.
சரி .
களம் எப்படிப் பட்டது ?
மட்டைப்பந்து விளையாட்டில் வல்லுனர்கள் ஆட்டம் ஆரம்பிக்கும் முன்பு களத்தை ஆய்வது போல நீர் விவரமாக களத்தை ஆய்ந்து விட்டீர், எனக்கு ஒரு கணு மூங்கில் அளவு இடம் விடாமல்!
தங்களின் ஆட்ட விவரணம் மிகச்சிறப்பு.
இருப்பினும் நானும் முயற்சிக்கிறேன்.
முதலில் அரங்க அளவுகள் எடுக்க உதவும் மூங்கில்கள். " புண்ணிய நெடுவரைப்போகிய நெடுங்கழை" கள் அவை.
என்ன பொருத்தம்!
தமிழ் மகள் மாதவி ஆடும் அரங்கம் அளவிட, தமிழ்முனி அகத்தியர் உறையும்
பொதியமலை மூங்கில்கள்!
மேடை நீள , அகல, உயர அளவுகள் யாவும் " கோல் " அடிப்படையில்.
பொதுவாக 1 கோல் என்பது 24 அங்குலம். (2 அடி)
அரங்க மேடை நீள அகல உயர அளவுகள்
நீளம்- 8 கோல் அகலம் 7 கோல் உயரம்1 கோல்
எனவே 16x14x2 அடிகள்.
மேல் கூரைக்கும் மேடைக்கும் உள்ள இடைவெளி 8 அடி.
அடுத்து திரைச்சீலைகள்:
மூன்று வித திரைகளை விவரித்தீர்கள்.
மேடையை முழுவதும் மூடும் திரை, பக்க வாட்டில் நகரும் பின்புலம், மேலிருந்து கீழ் இறங்கும் பின்புலம் என மூன்று வகை.
ஒரே பின்புலம் இருந்தால் சலிப்பை உண்டாக்கும் என்பதால் பல பின்புலங்களை, காண வழி செய்யும் திரைகள்.
இரண்டு வாயில்கள் அரங்கத்துக்கு, ஒரே வாயில் வெளியே போவதற்கும், உள்ளே நுழைவதற்கும் என்றில்லாமல். (தீயணைக்கும் படையின் உத்தரவு போலும்!)
மேல் விதானத்தில் பல சித்திரங்கள் வரையப் பட்டிருக்கும். தொங்கும் முத்து மாலைகள் பல அழகு வேலைப்பாடுகள் எனத் தற்கால நவீன திரையரங்கை நினைவூட்டும் அரங்கம்.
நிழல் விழாத ஒளிஅமைப்பு என்பது அக்கால தொழில் நுட்ப அறிவின் உச்சகட்டம், அதுவும், பி. சி. ஶ்ரீராம் போன்றவர்கள், பிறப்பதற்கு பல நூறாண்டுகள் முன்பே!🙏🙏
மிகச்சிறந்த ஆசானால் பயிற்றுவிக்கப் பட்ட அழகு சுந்தரி மாதவியின் அரங்கேற்றம், இக்கால ஆடல் அரங்குகளை விட பல மடங்கு
சிறந்த அமைப்புகளை , கொண்ட அரங்கம் என முன்னோட்டங்களைக் கண்டோம்.
அரசர் அழைப்பில் வந்துள்ளோம். முன் வரிசையில் அமர்ந்து இனி வரும் நிகழ்வுகளை இரசிக்க , தயார் ஆவோம்.
*பயணம் தொடரும்*
•••••••••••••••••••••••••••••••
மேதினி போற்றும்
மே தினம் வாழ்க
•••••••••••••••••••••••••••••••
கதிரவன் எழும் முன் கருக்கலில்
எழுந்து
கலப்பை பிடித்து கருவிகள் ஏந்தி
கரங்கள் சிந்தும் குருதியினாலே
காட்டை மேட்டை கழனிகள் ஆக்கி
நாட்டைத் திருத்தி ஆலைகள் செய்து
நலமுடன் மக்கள் நன்றாய் வாழ
நாளும் பொழுதும் வியர்வை சிந்தி
நரம்பும் சதையும் நொந்து போக
உழைக்கும் மக்கள் இருப்பதினாலே
உலகோர் எல்லாம் சுகமாய் வாழ்வர்
உன்னத உழைப்பால் உலகை உயர்த்தும்
உழைப்பவர் தினமாம் இந்த நாளே!
உழைக்கும் கரங்கள் இணையட்டும்!
உழைப்போர் நிலையும் உயரட்டும்!
உலகம் அவர்களை மதிக்கட்டும்!
அவர்கள் வாழ்வும் சிறக்கட்டும்!!
மே தினம் வாழ்க! மே தினம் வாழ்க!!
மேதினி போற்றும் மே தினம் வாழ்க!!
உழைப்போர் வாழ்க! உழைப்போர் வாழ்க!
உலகம் அவர்களை போற்றி மகிழ்க!!
மே_தின_நல்வாழ்த்துகள்
உங்கள்_தோழன்_ஸ்ரீவி
அறிவோம் மே தினத்தில்...
" ஆக்கம் " அதன் பொருள் செல்வம், முன்னேற்றம்
அதற்குத் தேவை அறிவோம் முதலும், உழைப்பும்
தூக்கம் அதை இழப்பார் மூதலீடு செய்தார்
தொழில் நட்டமெனில் தூக்கில் தொங்குவார்
பாக்கு, வெற்றிலை, சுண்ணாம்பு இதழைச் சிவக்கும்
" பலன் " முழுதும் ஓரிடம் போக சிவக்கும் விழியும்
" நோக்குக் கூலி " கேட்ட கேரளமும் தெரியும்
நோகச் செயும் சூடு வைத்த ஆட்டோ மீட்டரும்.
__. குத்தனூர் சேஷுதாஸ் 1/5/2026
மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel சுட்டி : youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...