Saturday, May 9, 2026

சிலம்பொடு ஒரு பயணம் {20} *அரங்கேற்ற காதை* *தலைக்கோல் சிறப்பு*

 *{20} சிலம்பொடு ஒரு பயணம்*


*அரங்கேற்ற காதை*


*தலைக்கோல் சிறப்பு*


ஆடரங்கம் தயாராய் இருக்கிறது. 

அரசன் முதல் அனைவரும் ஆட அரங்கில் வந்து அமர்ந்தும் விட்டனர். 

ஆட்டம் துவங்கும் முன், 

முக்கிய பொருள் பற்றி சிலம்பு கூறுகிறது.. 


அப்பொருள் யாது..! 

அதன் அருமை பெருமைகள் என்னென்ன..!! பார்த்திடலாமா! 


*பேர் இசை மன்னர் பெயர் புறத்து எடுத்த           சீர் இயல் வெண்குடைக் காம்பு நனிகொண்டு கண் இடை நவமணி ஒழுக்கி*


புகழ்பெற்ற பற்பல பேரரசர்களுடன் போரிட்டு அவர்களை புறமுதுகிட்டு ஓடச் செய்து,  அவர்களின் வெண் கொற்றக் கொடையின் பிடிகளில் உள்ள கணுக்களில் எல்லாம் நவமணிகளை பதித்தனராம். கணுக்களுக்கு இடையில் பொன் தகடுகளால் பூண் அமைத்தனராம்.


*வெண்குடை மன்னவன் கோவில் இந்திர சிறுவன் சயந்தன் ஆக என வந்தனை செய்து வழிபடு தலைக்கோல் புண்ணிய நன்னீர் போர்க் குடத்து ஏத்தி... மாலை அணிந்து.... பொலம்பூண் ஓடை*


நாடாளும் மன்னன் வெண்கொடை வீற்றிருக்கும் அரண்மனையில் இந்திரன் மகன் சயந்தனாக (இளங்கோவடிகளே சாபம் பெற்ற சயந்தனை குறிப்பிடுகிறார் பாருங்கள்) விளங்குக என தலைக்கோலுக்கு வந்தனையும் வழிபாடுகளும் செய்தனராம். புண்ணிய நதிகளில் இருந்து பொற் குடங்களில் எடுத்து வந்த புனித நீரால் நீராட்டினராம். பின்னர் அதற்கு நறுமண மலர் மாலைகள் சூட்டி, ஒரு நல்ல நாளில் பொற்பூணும் அழகிய நெற்றிப் பட்டமும் சூட்டப்பட்ட பட்டத்து யானையின் துதிக்கையில் தந்து வாழ்த்தொலி முழங்கினராம்


பின்னர்,


*அரைசொடு பட்ட ஐம்பெருங்குழுவும் தேர் வலம் செய்து கவிகைக் கொடுப்ப ஊர்வலம் செய்து புகுந்து முன்வைத்து ஆங்கு*


பற்பல வாத்தியங்கள் பண்ணிசைக்கும் முரசறையும் வீதிகளில் அரசரும் அவருக்குத் துணையாக ஐம்பெருங்குழுவினரும் உடன் வர  தேர்வலம் வரும் வீதிகளில் ஊர்வலம்

வந்து, அரங்க வாயிலில் பெரும் கவிஞன் கையில் தர கவிஞன் அத் தலைக்கோலை ஆடரங்கில் கூடியுள்ள அவையோருக்கு முன்பாக வைத்தானாம். 


அடுத்ததாக 


*குயிலுவ மக்கள் நெறிப்பட நிற்ப வலக்கால் முன்மிதித்து ஏறி அரங்கத்து வலத்தூண் சேர்தல்*


வாத்தியங்கள் இசைப்போர் வரிசையாய் நிற்க, மாதவி உள்ளே வந்து வலது காலை வைத்து ஏறி அரங்கத்தில் வலது தூண் பக்கம் வந்து நின்றாளாம். இதுதான் மரபு. (இக்காலத்தில் திரைப்படங்கள் நாடகங்கள் ஆகியவற்றில் வலது பக்கமே மக்கள் கவனம் அதிகம் செல்லும் என்பதால் அநேக கலைஞர்கள் அப்பக்கம் வந்து நிற்பதையே விரும்புவார்களாம். இதனை சம்பந்தப்பட்ட துறையை சேர்ந்தவர்கள் அறிவார்கள்)


*இடத்தூண் சேர்ந்த தொழில்நெறி இயற்கைத் தோரிய மகளிரும் சீர் இயல் பொலிய*


வாத்தியம் இசைக்கும் பெண்களும் முறைப்படி 

இடத் தூண் அருகே வந்து வரிசையாக நின்றனாம் 


*வாரம் இரண்டும் வரிசையில் பாட பாடிய வாரத்து ஈற்றில் நின்று இசைக்கும் கூடிய குயிலுவக் கருவிகள் எல்லாம்*


அப்போது நல்லன சிறக்க தீயன அகல ஓர் ஒற்று  வாரம் ஈரொற்று வாரம் எனும் துதிப் பாடல்களை முறையாக பாடினராம். பாடும் பொழுது பக்கவாத்திய இசைக்கருவிகள் எல்லாம் பாடலோடு சேர்ந்து இன்னிசை மீட்டி அவ்வரங்கை நிறைத்தனவாம். 


நம் கண் முன்னே அக்காட்சியும் தெரிகிறது - செவிகளில் அப்பாடல்களும் இன்னிசையும் கேட்கிறது அல்லவா!


இப்போது மழலை கவி மோகன் ஐயா:


இவ்வாரப் பயணத்தில், தலைக்கோல் அமைதி, மாதவி அரங்கு ஏறல் என்ற இரண்டு நிகழ்வுகளை என் பார்வையில் காண அழைப்பு விடுக்கிறேன்.


தலைக்கோல் அமைதி:


எதிரி மன்னர்களை வென்று அவர்களின் வெண்கொற்றக் குடையின் காம்பினை, சிதைவில்லாமல் எடுத்து - "சீர் இயல் வெண்குடைக் காம்பு", அதன் கணுக்களை, தூய்மை செய்து நவமணிகளால் அலங்கரித்து, கணுக்களுக்கு இடைப்பட்ட பகுதிகளை "சாம்பூநதம்" எனும் பொன்னால்  பொற்கொல்லர் அலங்கரிப்பர்.


அது என்ன பொன் ஐயா? 


நமக்கு 18 காரட், 24 காரட் போன்ற வகைகளை அதுவும் சேதாரத்தோடு அறிவோம். 


இந்த சாம்புநதம்-நாவல் மரத்தின் சாறு ஒழுகிப் பெருகும் இடத்தில் கிடைக்கும் பொன் என விவரிக்கப்படுகிறது.

தமிழ் இலக்கியத்தில்.  இது சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம் ஆகியவற்றுடன் இதுவும் உயர்வகைப் பொன்னாக, கருதப்படுகிறது.

பெரும்பாலும் பொற்கொல்லர்கள்  அலங்கார வேலையே செய்வர்; ஆனால் பொற் கொல்லர்களில் ஒருவன், கதாநாயகனின்  "கொல்லர்"-  கொல்பவர்( என் பார்வையில் ... தமிழில் அல்ல!)


இந்த தலைக்கோலை இந்திரன் மகன் சயந்தனாக கருதி வழிபாடுகள் செய்வர். இதுவே தலைக்கோல் .


இதனை, தாங்கள் விவரித்தபடி , சிறப்பான ஊர்வலத்தில் எடுத்து வரப்பட்டு, கவிஞனும் அரங்கத்தில் சேர்த்துவிட்டான். 


எப்படிப்பட்ட ஊர்வலம்! 


அரசர்  ,அவர்கூட ஐந்து முக்கிய துறைகளில்   நிர்வாகம் செலுத்தும் ஐவர் குழாம்  என உயர்மட்டக்குழு மரியாதை செலுத்திய தலைக்கோல்.


தற்காலத்தில், உலக மட்டையடி 

பந்தய மைதானத்தில், கோப்பையை யாவரும் காணும்படி வைப்பது போல ஒரு நிகழ்வு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்!


மாதவிக்கு சிறப்பு செய்ய , காத்திருக்கிறது. என்ன தகைமை வாய்ந்த சிறப்பு! 

வெறுமனே சால்வை போர்த்தி, 

புகைப்படம் எடுக்கும் சிறப்பு அல்ல!


மாதவி அரங்கு ஏறல்:


தற்காலத் திரைப் படங்களில் முக்கிய நாயகி வருகைக்கு , கட்டியம் கூறுவதை போல பல வாத்தியங்கள் முழங்குமே, அது போல் ஒருங்கிணைந்த

வாத்திய குழுவின் வரவேற்பு. முரசு, யாழ், முழவு எனப் பலப்பல இசைக் கருவிகள் மூலம் சப்த ஸ்வரங்களின் அஞ்சலி நாட்டியாஞ்சலி நங்கைக்கு, அதுவும் பேரரசர் முன்.


மாதவி மேடையின்  மேல் வலது காலை வைத்து, வலது பக்கமாக ஏறினாளாம். இது ஒரு மங்கலத்தின் அறிகுறி. ஆட வல்லாள் மேடை முழுவதும்  மட்டும் அல்ல காப்பியத்திலும்

வலம் வரப் போகிறாளே!


" தோரிய" மகளிர் பின்பாட்டு பாடுபவர்கள்;" வாரம்" எனும் தெய்வப்பாடல்கள இசைப்பவர். ( தே வாரம்- தெய்வங்களைப் போற்றும் பாடல்).இவர்கள் ஓரொற்று வாரம், ஈரொற்றுவாரம்  ஆகிய பாடல் முறைகளை, வாத்திய கோஷ்டி இசை கூட்ட சபையோரை, தெய்வப்பரவசத்தில் ஆழ்த்தினர்.

அகில இந்திய வானொலியின் அக்கால கோஷ்டி கானம் நினைவுக்கு வருகிறது.


ஓரொற்று வாரம்: ஒரு ஒற்று (மெய் எழுத்து) தொடர்ந்து வரும்படியாக அமைந்த பாடல் வகை.

ஈரொற்று வாரம்: இரண்டு ஒற்றுகள் (மெய் எழுத்துக்கள்) தொடர்ந்து வரும்படியாக அமைந்த பாடல் வகை. 


மாதவி மங்கை ஆடத் தயாராக விட்டாள். எதிர்பார்ப்பில் நம் கால்களும் தாளமிடத் தொடங்கி விட்டன!


*பயணம் தொடரும்*

Friday, May 8, 2026

பயணங்கள் முடிவதில்லை…பயணக் கட்டுரை(15)

 


பயணங்கள் முடிவதில்லை…


இது உங்களுள் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை எனில், அதற்கு அந்த இயற்கையின் அழகோ அதிசயமோ காரணமல்ல, அதன் மகத்துவத்தை உரிய முறையில் சொல்ல என்னால் இயலவில்லை என்பதே காரணம்


பாறைகள் பேசும் இடம் -Zion National Park

பயணம் என்பது இலக்கை மட்டும் நோக்கி செல்வதல்ல, வாழ்க்கையைக் கண்டுகொள்வதும் தான். 

Las Vegas செல்ல வேண்டும். ஆனால் எந்த வழியில் செல்வது என்ற கேள்வி எழுந்தது. Grand Canyon போகலாமா, Zion National Park போகலாமா என்று விவாதம் நடந்தது. ஜனநாயகம் வென்றது, பெரும்பான்மை குரல், Zion-க்கே சாய்ந்தது. காரணம், பாறைகளை தூரத்தில் இருந்து பார்ப்பதைவிட, அவற்றுக்கு நடுவே நடந்து, தொட்டு, உணர்ந்து அனுபவிப்பது அதுவே உண்மையான பயணம்.


சாலையே ஒரு கவிதை

புதிய நாள், புதிய உற்சாகம். வாகனம் புறப்பட்டது. பாதை சாதாரணமானதல்ல, Utah மாநிலத்தின் நெஞ்சை கிழிக்கும் நிலப்பரப்பு வழியாக செல்லும் அந்த சாலை, வார்த்தைகளில் சொல்ல முடியாத ஒன்று. ஒவ்வொரு திருப்பத்திலும் ஒரு புதிய உலகம் திறக்கிறது. மலைகளும் பள்ளத்தாக்குகளும் அலை அலையாக கடந்து வருகிறது. Zion-இல் நுழைந்தவுடன், காட்சி முற்றிலும் மாறுகிறது. 

சிவப்பு. ஆம், கண்ணை மூடினாலும் தெரியும் அந்த சிவப்பு. கோடிக்கணக்கான ஆண்டுகளாக காற்றும் நீரும் செதுக்கிய சிவப்பு மணற்கல் மலைகள். இருபுறமும் 2,000 முதல் 3,000 அடி உயரத்தில் வானை முட்டும் மலைகள். நடுவே அமைதியாக, கலங்காமல் ஓடும் Virgin River. அந்தக் காட்சியைப் பார்த்தபோது, வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை, மனசு ஆஹா! என்றது.


Virgin River-இன் வழியே… (பார்த்தது மட்டுமே, பயணப்படவில்லை)

Zion-இன் உண்மையான ஆத்மா இருப்பது அதன் பள்ளத்தாக்கில். Virgin River ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பாறைகளை அரித்து உருவாக்கிய அந்த பள்ளம், கண்களால் பார்க்க முடியாத ஆழம். நதியின் நடுவே நடந்து செல்லும்போது, இருபுறமும் நேராக எழும்பும் மலைச்சுவர்கள் வானத்தை ஒரு கீற்றாக காட்டுகின்றன. சில இடங்களில் நீர் இடுப்பு வரை வருகிறது, ( நான் இந்த விளையாட்டில் இல்லை 🤩) கால்கள் நனைகின்றன, மனசு விழிப்படைகிறது, உடல் இப்போது இருக்கும் இந்த கணத்தில் மட்டுமே இருக்கிறது.

அந்த நடையில் ஒரு விசித்திரமான அமைதி உண்டு. நகர வாழ்க்கையின் சத்தம், அவசரம், தொலைபேசி அறிவிப்புகள் எல்லாம் மறைந்துபோகின்றன. மலைகள் பேசவில்லை, ஆனால் அவற்றின் மவுனம் ஒரு தெளிவான செய்தி சொன்னது. அவசரமில்லை… வாழ்க்கையை ரசிக்கவும்.


Angels Landing தைரியமுள்ளவர்களுக்கு

Zion-இல் ஒரு சவால் காத்திருக்கிறது. Angels Landing. உலகின் மிகவும் துணிச்சலான hiking trails-இல் ஒன்று என்று புகழ் பெற்றது. இப்போது இதற்கு முன்கூட்டியே permit வாங்க வேண்டும். ஏன் என்று சென்றால் தான்  புரியும் ( நாங்கள் யாருமே செல்லவில்லை 😂) கடைசிப் பகுதியில் இருபுறமும் ஆழமான பள்ளம், நடுவே குறுகிய பாதை. மன உறுதியும் உடல் சமநிலையும் இல்லாமல் அந்த இடம் உங்களை மன்னிக்காது. ஆனால் மேலே சென்று நிற்கும்போது தெரியும் அந்த உச்சியிலிருந்து பார்க்கும் காட்சி, ஒவ்வொரு அஞ்சிய நிமிடத்திற்கும் பரிசு தருகிறதாம்.!!!


இயற்கை ஆலயம்

பூங்காவுக்குள் தனியார் வாகனங்கள் எல்லா இடங்களுக்கும் போக முடியாது. Shuttle bus மட்டுமே நம்மை உள்ளே அழைத்துச் செல்கிறது குறிப்பாக Peak Season-இல். இது ஒரு புத்திசாலித்தனமான விதி. இயற்கையை பாதுகாக்க, மனிதன் கொஞ்சம் வசதியை தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது. அந்த அனுமதி கொண்டே நாம் உள்ளே செல்கிறோம்.

Zion-இல் நடந்த அந்த மணி நேரங்கள் மனசில் பதிந்தது வேறு எதுவுமில்லை.  இயற்கையின் பிரமாண்டம், பிரமாண்டம், பிரமாண்டம் மட்டுமே. ஆனால் ஒரு நிம்மதி, விடுதலை. 


பயணம் தொடர்ந்தது Las Vegas நோக்கி. ஒளி மின்னும் நகரம் காத்திருந்தது. ஆனால் Zion கொடுத்த அந்த அமைதி, இன்னும் மனசில் தங்கியிருந்தது.

Grand Canyon-ஐ தூரத்திலிருந்து பார்த்திருந்தால் கண் நிறைந்திருக்கும். Zion-ல் நடந்ததால் நெஞ்சு நிறைந்தது. அதுவே வித்தியாசம்.

பார்ப்பது பயணமில்லை, உணர்வதே பயணம்.

Sunday, May 3, 2026

*ஞாயிறும் திங்களும்*

 *ஞாயிறும் திங்களும்*


வாரம் ஓடும் கடிகார முட்களுக்கு

நேரம் தரும் வார விடுமுறை !


அலாரம் விடுத்து விழிக்கும் விடுப்பு!

அவசரம் விடுத்த சுவாசத்தின் துடிப்பு!


வேளை தவறிய வேளையில் சிற்றுண்டி!

வேலை இல்லாமல் உணவு இடைவேளை! 


நேரம் ஒரு பறவையெனில்,

நினைவுகள் அதன் இறகுகள் —


பிடிக்க நினைத்தால் பறந்து விடும்

பறக்க நினைத்தால் மறைந்து விடும்!


காலை ஒளி கண்களில் விலக,

மாலை நிழல் மடியில விழும்!


புத்தக குழந்தை தோளில் தவழ 

பழைய பாடல்களால் தூக்கம் தழுவும்!


கனவு தலையணையில் ஞாயிறு தூங்கும்!

அக்னி நட்சத்திரத்தில் திங்கள் பிறக்கும் !


ஞாயிறு நினைவுகள் நெஞ்சில் அகன்று,

திங்கள் நடைகள் மீண்டும் தொடங்கும்!


போக்குவரத்து நெரிசல்  வழியை மறிக்கும்!

வியர்வை துளியால் உடம்பு குளிக்கும்!


ஒலிபெருக்கி சத்தம்  காதை குடையும்!

ஒளியின் வெப்பம் குடையை தேடும்!


பணிச்சுமை தோளில்- உணவோ பையில்!

அலுவலுக மூச்சில் அவலும் பொரியும்!


மின்னஞ்சல் மழையில் கணிப்பொறி நனையும்!

தோழமை மேகம் நெஞ்சை குளிர்க்கும்!

சிலம்பொடு ஒரு பயணம் (19) *அரங்கேற்ற காதை* *ஆடல் அரங்கம்*

 •••••••••••••••••••••••••••••••


*{19} சிலம்பொடு ஒரு பயணம்*


*அரங்கேற்ற காதை*


*ஆடல் அரங்கம்*


•••••••••••••••••••••••••••••••


அன்பு நிறை வாசகர்களே!

அரங்கேற்று காதை துவங்கிய பதிவில் 

அகத்திய முனியின் சாபத்திற்க்காளான 

ஊர்வசி சயந்தன் பற்றி பகிர்ந்தது 

நினைவிருக்கும். 


ஊர்வசி மாதவியாக பிறந்தாள். 

சயந்தன் (தேவேந்திரன் மகன்) 

வேணுவாக, அதாவது மூங்கில் ஆகப் பிறந்தான். 


இளங்கோ அடிகள் மாதவியின் அரங்கேற்றக் காதையில் 

முக்கிய நிகழ்வாக ஆடரங்கத்தைப் பற்றி விரிவாக விளக்குகிறார். 


மாதவியாய் பிறந்த ஊர்வசியின் 

நடன அரங்கேற்றத்திற்கு 

அரங்கம் அமைக்க மூங்கிலே பிரதானமாகிறது. 


அதாவது இந்திரன் மகனே மூங்கிலாய் பிறந்து நடன அரங்கத்தின் கட்டமைப்புக்கு உதவுகிறான். 

சாபம் பெற்ற பிறகும் அவளைப் பிரியவில்லை அவன் என்பது போன்ற சித்தரிப்பு இது.


*மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு புண்ணிய நெடுவரைப் போகிய நெடுங்கழைக்கண்ணிடை ஒருசாண் வளர்ந்தது கொண்டு*


அதாவது, முதற்கண் 

நாட்டிய மேடை அமைப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப் பட்ட நிலத்தை அளந்து வகுத்தனர். 

பின்னர், புனிதமான மலைகளில் (சாபமிட்ட அகத்தியர் உறைந்த பொதிய மலை) வளர்ந்த நீண்ட மூங்கில் குச்சிகள் கொணர்ந்து, 

மூங்கிலின் கணுக்களுக்கு இடையே ஒரு சாண் அளவு இடைவெளி கொண்ட சரியான மூங்கிலைத் தேர்வு செய்து,  நாட்டிய நூல் சொல்லும் மரபுப் படி, அந்த மூங்கில்களைக் கொண்டு மேடையை அளந்தனர்.


இதற்கு மேல் தான் நீள, அகல, உயர விவரங்களை தெளிவாக விளக்குகிறார் ஆசிரியர்.


*நூல் நெறி மரபின் அரங்கம் அளக்கும்கோல் அளவு இருபத்து நால் விரல் ஆக,* 


*எழு கோல் அகலத்து, எண் கோல் நீளத்து,ஒரு கோல் உயரத்து, உறுப்பினது ஆகி,* 


*உத்தரப் பலகையோடு அரங்கின் பலகைவைத்த இடை நிலம் நால் கோல் ஆக,*


*ஏற்ற வாயில் இரண்டுடன் பொலிய,*


எவ்வளவு நுணுக்கமாக மேடையின் அளவினை விளக்குகிறார் பாருங்கள். 


பொதிய மலையிலிருந்து கொண்டு வரப்பட்ட மூங்கிலை குறிப்பிட்ட அளவில் வெட்டினர். அதாவது, நன்கு வளர்ந்த சராசரி மனிதனின் கை பெருவிரலில் இருபத்தி நான்கு வரும்படி அளந்து ஒரு கோல் நறுக்கினர்.


ஏழு கோல் அகலமும், எட்டுக்கோல் நீளமும், ஒரு கோல் உயரமுமாக நடன அரங்கம் அமைக்கப்பட்டது.


மேலும் கூறுகிறார்: 


*பூதரை எழுதி, மேல் நிலை வைத்து;*


*தூண் நிழல் புறப்பட, மாண் விளக்கு எடுத்து; ஆங்கு,*


*ஒரு முக எழினியும், பொரு முக எழினியும்,*


*கரந்து வரல் எழினியும், புரிந்துடன் வகுத்து -*


அதாவது, நாற்புறமும் தூண்களை நிறுத்தி, அவற்றின் மேல் உத்தரப் பலகைகளைப் பொருத்தினராம். உத்தரப் பலகைகளுக்கும் நடனமேடைக்கும் இடையே நான்கு கோல் அகல இடைவெளி இருந்தது என்பது அறிக. அரங்கத்தின் உள்ளே போவதற்கும் வருவதற்குமாக இரண்டு வாயில்கள் அமைக்கப் பட்டனவாம். இக்கால என்ட்ரி (entry) மற்றும் எக்ஸிட் (exit) வாயில்களைப் போல.


அரங்கின் 

மேல்நிலை மாடத்தில், யாவரும் தொழுது போற்றுமாறு, தேவர் உருவங்கள் எழுதப் பட்டிருந்தவாம். தூண்களின் நிழல் அரங்கில் விழாத வண்ணம் விளக்குகள் வைக்கப் பட்டிருந்தனவாம். (இது எவ்வளவு முக்கியமான, மிக நுணுக்கமான விடயம் பாருங்கள்) 


ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கத்துக்கு நகரும் திரையாகிய *ஒருமுக எழினி*,  இரண்டு பக்கங்களிலிருந்தும் நகர்ந்து வந்து நடுவில் பொருந்துமாறு அமைக்கப்பட்டிருந்த திரையாகிய *பொருமுக எழினி*, மேலே மறைந்திருந்து திடீரென இறங்கி மூடும் திரையாகிய *கரந்துவரல் எழினி* ஆகியவை சுருண்டு நின்று அழகு சேர்த்தன. நடன அரங்கில் அமைக்கப்பட்ட திரைகளுக்கு எவ்வளவு விளக்கம் பாருங்கள். 


*ஓவிய விதானத்து, உரை பெறு நித்திலத்து*


*மாலைத் தாமம் வளையுடன் நாற்றி;*


*விருந்துபடக் கிடந்த அரும் தொழில் அரங்கத்து*


இதனால் அவர் கூறுவது: மேல் திரையில் (விதானத்தில்) அழகிய வண்ண ஓவியம் தீட்டப் பட்டிருந்தது. முத்து மாலைகள் வளைந்திருக்கும் படித் அழகுற தொங்க விடப் பட்டிருந்தன. புதுமையான வேலைப்பாடுகள் ஆடரங்கினுள் அமைக்கப் பட்டிருந்தன.


மொத்தத்தில் மாதவி அரங்கேறும் மேடை அழகும், பொலிவும், அருமையும், அரிய கலைநயமும் வாய்ந்ததாக அமைந்திருந்தது. பார்ப்போரின் கண்களைக் கவர்ந்ததோடு கருத்தையும் நிறைத்தது. 


இவ்வளவு நுணுக்கமான விவரங்களை எழுதி முடிக்கையில் நமக்கே மலைப்பாக இருக்கிறது. கலைகளில் எவ்வளவு சிறந்து விளங்கி இருக்கிறது நமது தமிழ்ச் சமூகம். நம் தலைகள் பெருமையோடு தானாக நிமிர்ந்து நிற்கின்றன.


(அரங்கத்தின் சிறப்பை தன் பார்வையில் விளக்க இதோ வருகிறார் நம் மழலைக் கவி மோகன் ஐயா):


ஆடல் சிறப்புற அமைய அடிவாரமாக அமையும் ஆசான், குழலோன் எனப் பல சிறப்புகளை அனுபவித்தோம்.

ஆடும் அரங்கு? 

இக்காலத்தவருக்குப் புரியும்படி

கூற  விழைகிறேன்.

*களம் அமை* (ஆங்கிலத்தில் set the stage) என்பார்கள். 

ஆடும் களம், என்பது, அமைப்பது  பற்றி மட்டும்அல்ல. 

இந்தக் களம் காப்பியத்தில் புதிய திருப்பம் ஒன்றை ,

அமர்க்களமாக  ஏற்படுத்தப்போகும் ,  ஓர் ஆண்மகனின் வாழ்வை இரண்டு படுத்தும் இரண்டாம் கதாநாயகியை அரங்கேற்றும் களம்.

சரி . 

களம் எப்படிப் பட்டது ?

மட்டைப்பந்து விளையாட்டில் வல்லுனர்கள் ஆட்டம் ஆரம்பிக்கும் முன்பு  களத்தை ஆய்வது போல நீர் விவரமாக களத்தை ஆய்ந்து விட்டீர், எனக்கு ஒரு கணு மூங்கில் அளவு இடம் விடாமல்!

தங்களின் ஆட்ட விவரணம் மிகச்சிறப்பு.


இருப்பினும் நானும் முயற்சிக்கிறேன்.


முதலில் அரங்க அளவுகள் எடுக்க உதவும் மூங்கில்கள். " புண்ணிய நெடுவரைப்போகிய நெடுங்கழை" கள் அவை. 

என்ன பொருத்தம்! 

தமிழ் மகள் மாதவி ஆடும் அரங்கம் அளவிட, தமிழ்முனி அகத்தியர் உறையும் 

பொதியமலை மூங்கில்கள்!


மேடை நீள , அகல, உயர அளவுகள்   யாவும் " கோல் " அடிப்படையில்.

பொதுவாக 1 கோல் என்பது 24 அங்குலம். (2 அடி)


அரங்க  மேடை நீள அகல உயர அளவுகள்

நீளம்- 8 கோல்  அகலம் 7  கோல்  உயரம்1 கோல்

எனவே 16x14x2 அடிகள்.

மேல் கூரைக்கும் மேடைக்கும் உள்ள இடைவெளி 8 அடி.


அடுத்து திரைச்சீலைகள்:

மூன்று  வித திரைகளை விவரித்தீர்கள். 

மேடையை முழுவதும் மூடும் திரை,  பக்க வாட்டில் நகரும் பின்புலம், மேலிருந்து கீழ் இறங்கும் பின்புலம் என மூன்று  வகை.

ஒரே பின்புலம் இருந்தால் சலிப்பை உண்டாக்கும் என்பதால் பல பின்புலங்களை, காண வழி செய்யும் திரைகள்.


இரண்டு வாயில்கள் அரங்கத்துக்கு, ஒரே வாயில்  வெளியே போவதற்கும், உள்ளே நுழைவதற்கும் என்றில்லாமல். (தீயணைக்கும் படையின் உத்தரவு போலும்!)


மேல் விதானத்தில் பல சித்திரங்கள் வரையப் பட்டிருக்கும். தொங்கும் முத்து மாலைகள்  பல அழகு வேலைப்பாடுகள் எனத் தற்கால நவீன திரையரங்கை நினைவூட்டும் அரங்கம். 


நிழல் விழாத ஒளிஅமைப்பு  என்பது   அக்கால  தொழில் நுட்ப அறிவின் உச்சகட்டம், அதுவும், பி. சி. ஶ்ரீராம் போன்றவர்கள், பிறப்பதற்கு  பல நூறாண்டுகள் முன்பே!🙏🙏


மிகச்சிறந்த ஆசானால் பயிற்றுவிக்கப் பட்ட அழகு சுந்தரி மாதவியின் அரங்கேற்றம், இக்கால ஆடல் அரங்குகளை விட பல மடங்கு 

சிறந்த அமைப்புகளை  , கொண்ட அரங்கம் என முன்னோட்டங்களைக் கண்டோம். 

அரசர் அழைப்பில் வந்துள்ளோம். முன் வரிசையில்  அமர்ந்து இனி வரும் நிகழ்வுகளை இரசிக்க , தயார் ஆவோம்.


*பயணம் தொடரும்*

Friday, May 1, 2026

மேதினி போற்றும் மே தினம் வாழ்க

 •••••••••••••••••••••••••••••••

மேதினி போற்றும் 

மே தினம் வாழ்க

•••••••••••••••••••••••••••••••


கதிரவன் எழும் முன் கருக்கலில் 

எழுந்து 

கலப்பை பிடித்து கருவிகள் ஏந்தி 

கரங்கள் சிந்தும் குருதியினாலே

காட்டை மேட்டை கழனிகள் ஆக்கி


நாட்டைத் திருத்தி ஆலைகள் செய்து 

நலமுடன் மக்கள் நன்றாய் வாழ 

நாளும் பொழுதும் வியர்வை சிந்தி 

நரம்பும் சதையும் நொந்து போக 


உழைக்கும் மக்கள் இருப்பதினாலே

உலகோர் எல்லாம் சுகமாய் வாழ்வர் 

உன்னத உழைப்பால் உலகை உயர்த்தும் 

உழைப்பவர் தினமாம் இந்த நாளே! 


உழைக்கும் கரங்கள் இணையட்டும்! 

உழைப்போர் நிலையும் உயரட்டும்! 

உலகம் அவர்களை மதிக்கட்டும்! 

அவர்கள் வாழ்வும் சிறக்கட்டும்!!


மே தினம் வாழ்க! மே தினம் வாழ்க!!

மேதினி போற்றும் மே தினம் வாழ்க!!

உழைப்போர் வாழ்க! உழைப்போர் வாழ்க! 

உலகம் அவர்களை போற்றி மகிழ்க!!


மே_தின_நல்வாழ்த்துகள்


உங்கள்_தோழன்_ஸ்ரீவி

அறிவோம் மே தினத்தில்...

 அறிவோம் மே தினத்தில்...


" ஆக்கம் " அதன் பொருள் செல்வம், முன்னேற்றம் 

   அதற்குத் தேவை அறிவோம் முதலும், உழைப்பும் 


தூக்கம் அதை இழப்பார் மூதலீடு செய்தார் 

   தொழில் நட்டமெனில் தூக்கில் தொங்குவார்


பாக்கு, வெற்றிலை, சுண்ணாம்பு இதழைச் சிவக்கும் 

   " பலன் " முழுதும் ஓரிடம் போக சிவக்கும் விழியும்


" நோக்குக் கூலி " கேட்ட கேரளமும் தெரியும்

   நோகச் செயும் சூடு வைத்த ஆட்டோ மீட்டரும்.


__. குத்தனூர் சேஷுதாஸ் 1/5/2026

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...