Tuesday, October 28, 2025

செருப்பு

 காவிய புருஷனின் காலணி என்றால் 

அரியணை ஏறலாம் 

அரியணை ஏறி நாடாளலாம்.


பாவி மனிதரின் காலணி என்றால் 

வீட்டு வாயிலில் 

தவமிருந்து 

காத்திருக்கும். 


இணை பிரிந்தால் 

உயிர் வாழா

கவரிமா இனமோ!

துணையோடு இருத்தலே 

வாழ்வதன் பொருளோ? 


செருப்பு எறிதல்,

‘செருப்பால் அடிப்பேன்’ என குமுறுதல்,

பிடிக்காதோர் படங்களுக்கு

செருப்பு மாலை போடுதல்,

இவை எல்லாம் கோபத்தின் வெளிப்பாடாம்.


நாளெல்லாம் உமைச் சுமந்து 

மேனியெல்லாம் நாளும் தேய்ந்து 

உமக்காக உழைக்கின்ற எமை 

அவமானச் சின்னங்களாய்

ஆக்குதல் தகுமோ!

பதில் கூற இயலுமோ உலகத்தீரே!


- ஸ்ரீவி



செருப்பு பற்றிப் பல அடிகள்

 👍👍

செருப்பு பற்றிப் பல அடிகள்

-----

 செருப்புகள்

"இணைந்திருப்பதே பேரின்பமா?

தனிமைதான் பாதுகாப்பா?"


ஜோடியை விட்டுப்பிரிந்த " ஒத்த செருப்பு" காதல், காமம், அன்பு, வன்மம் என எவ்வளவு உணர்வுகளை வெளிப்படுத்தியது!! ஒத்த செருப்பைக் குறைத்தே மதிப்பிடமுடியாது!


அன்று ஹவாய் செருப்புகளில் நடந்தே எங்கும் செல்லலாம்

இன்று செருப்புகளிலும் மேட்டுக்குடிகள் உண்டு


ஆயிரக்கணக்கில் விலை, முத்திரையிடப்பட்ட செருப்புகளுக்கு; சமூகத்தில் தகுதிநிலைக் குறியீடுகளாக.


 ஆனால் ,வேலை தேடி அலைபவர், ஐந்து நட்சத்திர  ஓட்டலில்

நுழைபவர் எனப் பாரபட்சம் பார்க்காமல் உழைக்கும் செருப்புகள்!  


சர்க்கரை வியாதி கண்டவரின் கால்களுக்குத் தனிச்சிறப்பு கொண்ட செருப்புகள்!


அன்று வெளியில் செல்ல மட்டும் செருப்பு

இன்று வீட்டிலும்வெளியிலும்!


ஆடைகள்வைக்க அலமாரிகள் போல செருப்புகளுக்கும் உண்டு!


கால்களில் அணிவதை தலையில் வைத்துக் கொண்டாடாத குறை! 


செருப்புகளுக்கும் தேடலுக்கும் சம்பந்தம் உண்டோ- ஆங்கிலத்தில்  நடந்தே தேயும் செருப்பின் அடிபாகத்துக்கும், தன்னைத்தேடி அலையும் ஆன்மாவுக்கும் உரித்தான சொற்கள் ஒரே மாதிரி ஒலிக்கும்போது தோன்றுகிறதே( sole and soul)


வீட்டில் சமையல் செய்வதும் செருப்பு அணிந்தே; உப்புமா கிண்டுவது மட்டும் விதிவிலக்கா என்ன?!


-மோகன்

செருப்பு

 உப்புமா 16


செருப்பு


தேய்வதற்கே பிறந்தாயோ?

வளர்பிறையும் உனக்கில்லையோ?

பாதங்களுக்கு நீ அணி ஆனாய்

அணியாத நேரமெல்லாம்

வாசலே கதியானாய்


நவீன உலகில் 

வீட்டுக்குள்ளும் உனக்கு இடமுண்டு..

வீட்டுக்குள் வந்துவிட்டால்

வீடே உனக்கு சிறையாகும்..

அணிபவரின் மறதியே

கொஞ்ச நேர

விடுதலைக்கு வழியாகும்


உனக்கும் கல்யாணம் காட்சி உண்டு

வலது இடது என பிறந்து

ஒரு பெட்டிக்குள் இணைந்து

செருப்புக்கடையின் பளீர் விளக்குகளில் பலரும் காணும்

ரிசப்ஷனும் உண்டு


இணைப்பிரியா ஜோடி நீவிர்..

அணிபவர் பிரிக்கிறார் என்று புதிதில் கடிப்பீர் நீவிர்..

பழகப்பழக பிரிவும் பழகும்..

சேர்ந்து பிரிவதே வாடிக்கையாகும் ..

கோயில் வாசலில் திருடர்கள் ஜாக்கிரதை..

அணிபவரிடம் சொல்லலாமா

ஒன்றாக விட வேண்டாம் ஒரு ஜதை?!!!

காணாத நேரத்தில் மட்டுமே மதிக்கப்படுவீர்!

ஜோடியாய் இருந்தால் 

மிதிக்கப்படுவீர்!

இணையைப் பிரிந்தாலோ

தனித்தனியே தொலைக்கப்படுவீர்..

இணைந்திருப்பது முக்கியமா?

காலால் மிதி வாங்காமல் இருப்பது முக்கியமா?

முடிவு உங்கள் கையில்!






- சாய்கழல் சங்கீதா

Sunday, October 26, 2025

" மோந்தா " வருகிறது

 " மோந்தா " வருகிறது 


சாந்தமாய் வானமது தலைக்கு மேலே 

   சப்புமே கைவிரலை குழவி அது போலே 


ஏந்திழையின் கூந்தலாம் மேகங்கள் எங்கே?

   எங்காவது போட்டியோ? சென்றதோ அங்கே?


வேந்தனாய் பவனி வரும் கதிரோனும் காணோம் 

   "விரியவா? வேண்டாவா?" வினவும் தாமரையும் 


ஆந்தையின் கண்களாய்க் காற்றழுத்த மண்டலம் 

   அடிக்கடி தொலைக்காட்சியில் காட்டி மிரட்டலும் 


பேந்த பேந்த மரத்தில் பறவைகள் விழிக்குதாம் 

   பிள்ளை குட்டிகள் வயிற்றை பசியும் கிள்ளுதாம் 


"மோந்தா" புயலது புறப்பட்டு வருகிறது 

   முதுகை உரசி அது கடந்தால் நல்லது 


ஆந்திரா, ஒடிஸா மேல் அப்படி ஒரு மோகம் 

   ஆண்டு தோறும் அங்கு சென்றே தீரும் தாகம் 


தீந்தமிழாய்க் குளிருது உடலும், காதும் 

   தின்பண்டம் டப்பாக்களில் அதுவே போதும்.


__. குத்தனூர் சேஷுதாஸ் 27/10/2025

வாசிப்பு வட்டம் மற்றும் இலக்கண வகுப்பு மூன்றாவது அமர்வு விவரணம்

 ••••••••••••••••••••••••••••••••

*வாசிப்பு வட்டம் மற்றும் இலக்கண வகுப்பு மூன்றாவது அமர்வு விவரணம்*

••••••••••••••••••••••••••••••••


நமது மகாகவி பாரதி தமிழ் சங்கம் நடத்தும் பெரியவர்கள் மற்றும் சிறார்களுக்கான வாசிப்பு வட்டம் மற்றும் இலக்கண வகுப்புகளின் மூன்றாவது அமர்வு 25.10.25 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு ஜாமிங் ரூமில் துவங்கியது.


சிறுவர்கள் பங்கேற்கும் குறும்பட படப்பிடிப்பு மறுநாள் இருந்த காரணத்தினால் சிறார்களுக்கான வாசிப்பு வட்ட அமர்வு முதலில் துவங்கியது. அதில் கலந்து கொண்டோர்: 


ஸ்ரீ யாழினி, 

ஜனனி, அ.

சாய் பிரணவ், செ. 

லக்ஷித், ல.

பா. ஆதவ் 

சு.வ. அவினாஷ், 

பு. நா. ஸ்ரீ நிகேதன்,

அர்மான்,

அர்ஃபா, 

வருண், 

ஆயிஷா, 

சாய் மகிழன், 

ஷிவ் யுக்ரா.


வழக்கம்போல் குழந்தைகளுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டு அவர்கள் படித்து முடித்த பின் அதன் மீது வினாக்கள் கேட்கப்பட்டன அனைத்து குழந்தைகளும் கதையைப் படித்ததோடு அதை உள்வாங்கி பதிலளித்த விதம் மிகச் சிறப்பாக இருந்தது. பிறகு திருமதி மகாலட்சுமி அவர்கள் *சுழல் நாக்கு பயிற்சி* (toungue twister) பாக்கியம் ஒன்று சொன்னதும் அதனை பல குழந்தைகள் தவறு ஏதுமின்றி மிகச் சிறப்பாக சொன்ன விதம் அனைவரையும் மகிழ்ச்சி கொள்ள வைத்தது. நாடக பயிற்சி இருந்ததால் குழந்தைகள் கிளம்பினர். 


பிறகு பெரியவர்களுக்கான வாசிப்பு வட்ட அமர்ந்து துவங்கியது. அதில் கலந்து கொண்டோர்: 


ஸ்ரீவி, 

மகாலட்சுமி, 

காமாட்சி, 

சிவகாமி, 

அமுதவல்லி, 

லட்சுமி நாராயணன், 

மீ. முகமது சுலைமான், 

இரா. சண்முக சுந்தரம், 

ஸ்ரீவித்யா, 

வி. கோமதி, 

பிரேமலதா


இந்த அமர்வில் திருமதி. பிரேமலதா அவர்கள் *கடுகு வாங்கி வந்தவள்* என்ற கன்னட எழுத்தாளர் பாரதி அவர்கள் எழுதிய புற்றுநோய் நோயாளி ஒருவர் சந்தித்த கடினமான தருணங்கள் – அதனை எதிர்கொண்டு வெற்றியோடு மீண்டும் இயல்பான வாழ்க்கையை துவங்கிய சந்தோஷமான தருணங்கள் என உண்மை சம்பவத்தை விவரிக்கும் நூலினை அறிமுகப் படுத்தினார்கள். நோயாளிகளை சந்திக்கப் போகையில் அவர்களுக்கு உற்சாகம் தருவதற்கு பதிலாக எதிர்மறை செய்திகளை கூறும் நண்பர்கள், உறவினர்கள் பற்றியும் – நோயாளிகளை சரியாக கையாளாத மற்றும் நன்றாக கவனிக்கும் இரு விதமான மருத்துவர்கள் பற்றியும், நோய் வந்தவர்கள் தங்களை எப்படி தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றியும் அந்த நூல் பேசுகிறது. இந்த நூல் அறிமுகத்தோடு, அந்த நூலில் இருந்து ஒரு சில முக்கிய பகுதிகளை வாசித்த திருமதி பிரேமலதா அவர்கள் ஒரு நல்ல மருத்துவ ஆலோசனையை கூறக் கூடிய அளவிலே புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு உரை ஒன்றையும் ஆற்றினார்கள். அவர்களுக்கு நமது சங்கத்தின் நன்றிகள் பற்பல. அதன் பின் வாசகர்கள் பலர் அவர்களது கருத்துக்களையும் சொந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டது உயிரோட்டமாக அந்த அமர்வு நடந்ததற்கு அத்தாட்சியாக இருந்தது. 


ஆறு மணி அளவில் ஜாமிங் ரூமில் அடுத்த நிகழ்வு நடைபெற இருந்த காரணத்தினாலும், பலர் குறும்பட தயாரிப்புக் குழுவில் இருந்த காரணத்தினாலும், அதற்கான தயாரிப்பு பணிகளில் ஈடுபட வேண்டிய நிலை இருந்ததாலும், ஆசிரியர் திரு சண்முகசுந்தரம் அவர்களுடன் கலந்து ஆலோசித்த பின், இந்த அமர்வில் இலக்கண வகுப்பு எடுக்க வேண்டாம் என முடிவு எடுக்கப் பட்டது.


அடுத்த அமர்வு 9 நவம்பர் மாலை 5 மணிக்கு ஜாமிங் ரூமில் நடைபெறும். இதில் ஏதேனும் மாற்றம் இருந்தால், குழுவில் தெரிவிக்கப் படும்.


*நம்மிடையே – குறிப்பாக குழந்தைகளிடையே வாசிப்பு மீதான ஆர்வத்தை தூண்டுவதற்காக நடைபெறும் இந்த அமர்வுகளில் பெருமளவில் நமது பூர்வாகுடி வாசிகள் கலந்து கொள்வது இந்நிகழ்வை நடத்துபவர்களுக்கும் கலந்து கொள்பவர்களுக்கும் பயனளிக்கும் என்று மகாகவி பாரதி தமிழ்ச்சங்கம் சுட்டிக்காட்டு விழைகிறது.*


*ஶ்ரீவி*

தலைவர்

Saturday, October 25, 2025

சந்திப்பு

 நற்சுனை 20


சந்திப்பு


மற்றவர்களின் பயணங்களை நம் பயணம் தீண்டிய போது...

காபியின் நறுமணம் சில மனங்களை

ஆழ்த்தியபோது..

வாழ்க்கையின் நெடுங்கணங்கள் நொடிக் கணங்களில் பகிரும்போது...

ஒற்றுமைகள் ஒட்டி வைக்க..

வேற்றுமைகள் வியக்க வைக்க...

பயணங்களின் ஒவ்வொரு துளியும்

காபியின் துளிகளாய் இரசிக்க வைக்க..

சிந்திக்கத் தூண்டும் சில சந்திப்புகள்

சிரிக்க வைக்கும்  சில தித்திப்புச் சந்திப்புகள்

சிலாகிக்க வைக்கும் சில திகைப்புச்

சந்திப்புகள்

அழுவதற்கு தோள் கொடுக்கும் சில ஆறுதல் சந்திப்புகள் 

காயம்பட்ட மனதிற்கு மயிலிறகாய்   சில சந்திப்புகள்

உண்மைகளை உணர வைக்கும் சில சந்திப்புகள்

உறவையும் நட்பையும் பேணும் சில சந்திப்புகள்

நட்பை உறவாக்கும் சல சந்திப்புகள்

பகையும் புகையும் சில சந்திப்புகள்

வேண்டாவெறுப்பாய் சில சந்திப்புகள்

இரும்பு  மனக்கதவுகளைத் திறந்திடும் சில சந்திப்புகள்  

தவிர்க்க எண்ணும் சில சந்திப்புகள்




சந்திப்புகள் பல..

எனினும்..

பிரிந்து பிரிந்து சந்திப்பதில் சின்னதாய் ஒரு சிலிர்ப்பு..

உள்ளங்களின் சந்தித்தால்  மட்டுமே சந்திப்புக்கே உயிர்ப்பு!

மீண்டும் சந்திப்போமா என எதிர்ப்பார்ப்பு

இனி சந்திக்கவே மாட்டோமா என பரிதவிப்பு   


- சாய்கழல் சங்கீதா

Tuesday, October 21, 2025

எங்கே... எங்கே...

 *எங்கே... எங்கே...*


எங்கே அந்தப் பாட்டி..?

எங்கே அந்த ஆயா..!


ஒவ்வொரு பள்ளியின் வாசலிலும்

கோணி ஒன்றை விரித்து 


செக்கச் சிவந்த

எலந்தப் பழமும் 

ஸ்ப்ரிங் போல் 

சுருண்டிருக்கும் 

பச்சை நிற கொடுக்காப்புளியும்


அழகழகாய் வெட்டி வைத்த 

மாங்காய் கீத்தும் (சென்னையில் மாங்கா பத்தை)

பிஞ்சு பிஞ்சாய் வெள்ளரிக் காயும் 


மாங்காய்க் கீத்துக்கும், வெள்ளரி காய்க்கும் 

தொட்டுக்கொள்ள மிளகாய்ப் பொடி 

தூவிய உப்பும் 


கூறு கூறாய் அடுக்கி வைத்து 

கடை பரப்பி, 

கையில் காசு இல்லாத ஏழைச் சிறுவர்களுக்கும் 

ஆசையாய் பதார்த்தம் கொடுத்து 

பள்ளிச் சிறுவர்களின் 

வாழ்க்கையோடு 

ஒன்றிப்போன 


பாட்டிமார்கள் 

இப்போது எங்கே?

காற்றில் கரைந்து போனார்களோ! 

மாயமாய் மறைந்து போனார்களோ!!


அவர்கள் விற்ற கமர்கட்டுக்கும் 

தேன் மிட்டாய்க்கும் முன்னே இப்போது பால் பாசந்தியும் 

பாதாம் அல்வாவும் 

நிற்கத்தான் முடியுமா! 

நின்று தான் ஜெயிக்குமா!!


காலச் சுழற்சியில் 

காணாமல் போன 

சாலையோரக் கடைகளின் 

பாட்டிகளும் ஆயாக்களும் 

எங்கேதான் உள்ளனரோ! 


விண்ணை முட்டும் சூப்பர் மார்க்கெட்டுகளும், 

பளபளக்கும் மால்களும் 

உருவாக்கிய சுனாமியில் 

அடித்துச் செல்லப் பட்டனரோ..!?


எங்கே.. எங்கே...?

பள்ளிகளின் வாசலிலே 

கடை போட்ட பாட்டிகள் எங்கே.. எங்கே..!?


- ஸ்ரீவி

Monday, October 20, 2025

தீப ஒளி திருநாள் நல் வாழ்த்துகள்!

 தீப ஒளி திருநாள் நல் வாழ்த்துகள்!

அறியாமை இருள் நீங்கி அறிவின் ஒளி பரவட்டும்! 


வேற்றுமைகள் மறந்திங்கே

ஒற்றுமை தான் ஓங்கட்டும்! 


மனமாச்சரியங்கள் மறைந்து தான் போகட்டும் 

மனிதமும் நேயமும் தழைத்திங்கே ஓங்கட்டும்! 


மனித மனங்களைப் பிடித்தாட்டும் 

மாயப் பிசாசு மறைந்தே போகட்டும்.


தீப ஒளியின் ஜோதி எங்கெங்கிலும் பரவட்டும். 

மகிழ்ச்சியும் ஆனந்தமும் பல்கிப் பெருகட்டும்.


தீப ஒளி திருநாள் நல் வாழ்த்துகள்!


ஶ்ரீவி

==========================================================

எத்திசையும் தீபாவளி 


குத்துவிளக்குகள் பல ஏற்றப் படட்டும் எங்கும் 

   கோலங்கள் வண்ணங்கள் பூசிக் கொள்ளட்டும் 


சத்தம் குறைவான வெடிகள் வெடிக்கட்டும் 

   சமையல் இன்றாவது வீட்டில் நடக்கட்டும் 


சித்திரங்கள் வானில் தீட்டப் படட்டும் 

   சிவகாசி தொழிலும் சீராக நடக்கட்டும் 


புத்தாடையில் மாந்தர் பவனி வரட்டும் 

   புள்ள குட்டி சூழ புதுப் படம் காணட்டும்


மத்தாப்பில் பட்டாம்பூச்சிகள் பறந்து திரியட்டும் 

   மறுநாள் பள்ளி உண்டு மறந்தே போகட்டும் 


முத்தமிடும் இதழில் நெய்வாசம் வரட்டும் 

   முறுக்கு, அதிரசம் மூச்சு முட்டட்டும் 


தித்திக்கும் தமிழோடு இனிப்புகள் போட்டியாம் 

   தேனும் " கூட்டணியில் சேரவா?"கேட்குமாம் 


எத்திசையும் தீபாவளி கொண்டாட்டம் கொண்டாட்டம் 

   இனிய உறவுகள் இன்று போல் இறுகட்டும்.


தீபாவளி நல்வாழ்த்துகள் 💐🍌🍇🙏


__. குத்தனூர் சேஷுதாஸ் 20/10/2025


==========================


Sunday, October 19, 2025

தீபாவளி

 தீபாவளி

------

தீய சக்திகளை ஒழித்து

நற்சக்திகள் வெற்றிபெற்ற நாள். 


இந்த நிகழ்வை அவரவர் பார்வைக்கு ஏற்ப புராண அல்லது ஆன்மீக நிகழ்வாகவும் உருவகிக்கலாம்.


எது எப்படி இருந்தாலும், ஆட்டம், பாட்டம் என கொண்டாட்டம்தான்.


நம் பண்டிகைகள் இயற்கையோடு ஒன்றிப்பிணைந்தவை.


மண்அகல், பசுமை வித்துக்களின் எண்ணெய் மற்றும் பஞ்சுத்திரிகள் என இயற்கைப் பொருள்களின் கூட்டணியில் உருவாகும் ஒளிக்கூட்டம்.


வெல்லத்தில் செய்த இனிப்புகள். செரிக்க தீபாவளி இலேகியம். 


இவை யாவும் நம் பாரம்பரியங்கள். 


வெள்ளையன் வெள்ளை சர்க்கரையை அறிமுகப்படுத்தி நம்மவர் ஆரோக்கியத்தை அடித்தான் கொள்ளை.


இன்று வண்ண வண்ண இனிப்புகள்; உடலை சர்க்கரைக்கிடங்காக மாற்றி, உடனிருந்தே கொல்லும் நோய்களாக உருவெடுத்து விட்டன.


பருத்திப் புத்தாடைகளை விட நவீன இழைகளில உருவான பகட்டு ஆடைகளுக்கு மவுசு.


இந்த நாளில் நம்வீட்டு குழாய் நீரிலேயே அன்னை கங்கை இருப்பாளாம். ஆனால் மிகவும் விடியற்காலையில் குளித்தால் மட்டுமே " கங்கா ஸ்னானம். மற்றபடி சென்னை" காக்காய் குளியல்தான்!"


வட நாட்டவர் போல் நம்தமிழர்களும் இப்போதெல்லாம் மாலையில் கொண்டாடுகிறார்கள். பட்டாசு சத்தமே சாட்சி.


இந்த மகிழ்வுக் கோலகலத்துக்கு இரண்டு  பக்கங்கள் உண்டு.


 ஒரு பக்கம் கடன் அட்டையைத்  தேய்த்து, தேய்த்து பொருள்களை வாங்கிக்குவிக்கும் கொண்டாட்டங்கள்.


மறு பக்கம் பெரிய அங்காடிகளின் வாசலில் பசியால் மங்கிய பார் வை கொண்ட கூட்டங்கள்.


வருடம் முழுவதும் பெரியோர் சிறார்கள் என உழைத்து உருவான பட்டாசுகளை விற்கும் சமயத்தில் போடப்படும் தடைகள்,

அவர்கள் வாழ்வாதாரத்துக்கே வெடி வைக்காதா?!


பசுமைப்பட்டாசு தயாரிக்கும் தொழில்நுட்பம் கற்க உதவலாமே!


இனிப்புகளை  , 

நமக்காக உழைக்கும் தூய்மைப் பணியாளர்கள், பாதுகாவலர்கள், வண்டியோட்டிகள் எனப்பலரும்  இனிமை காண பகிரலாம்.நம்மால் முடிந்தது.


75-80 களில் தொலைக்காட்சியில் வாரம் ஒருமுறை வரும் ஒளியும் ஒலியும் மிகப்பிரசித்தம். இன்று ஒளியும் ஒலியும் நிகழ்ச்சிகள் பலப்பல. பார்க் க , கூட ஆர்வமில்லை.

ஆனால் வருடத்துக்கு ஒரு முறை வரும் இந்த ஒளியும் ஒலியும் பண்டிகையின்  கவர்ச்சி சிறிதும் குறையவில்லை. பெரியவர்களையும் குழந்தைகளாக்கும் விழா.


கூட்டுக்குடும்பம் இல்லை எனில் என்ன, நமது நுழைவாயில் சமூகமே ஒரு கூட்டுக்குடும்பம்தான்;

வாழ்த்துகள், இனிப்புகள் எனப்பலப்பல பரிமாற்றங்கள், இந்த நாளில். 

நல்ல சக்தியின் வெற்றி கொண்டாடத்தான் படுகிறது!


- மோகன்




Friday, October 17, 2025

பறவை நேயம்

 பறவை நேயம்

சிட்டுக்குருவிகளைக் காப்போம்

-----------

குருவி நயம் பற்றிய பதிவுகள் என் சிந்தனையைத் தூண்டி விட்டன....


என்னுடைய இளமைக்காலத்தில்-   ம்ம்ம்ம்- போன நூற்றாண்டில், (!) சென்னை எக்மோரிலும், கீழ்ப்பாக்கத்திலும், பெரிய தோட்ட வீடுகளில் வசித்த நாட்களில், நிறைய சிட்டுக்குருவிகளைப் பார்த்ததுண்டு. , கூட்டம் கூட்டமாகப் பறக்கையில், மகிழ்ச்சிக் கூச்சலிட்டுக்கொண்டு, செல்கையில்.


பின்பு....


சென்னை  மாநகரம்( நரகம்?) வானுயர் கட்டிடங்களின் கானகமாக மாறி வர, சிட்டுக்குருவிகள் மூச்சு விட 

சிரம ப்பட்டதோ என்னவோ,அதிகம் காணக்கிடைக்கவில்லை.  


பூர்வாவில் குடி வந்த பின் சாளர விளிம்புகளில் வந்து நம்மை அழைக்கும் குருவிகளைக் காண முடிகிறது. "ஊர்க குருவியே" இங்கதானே வசிக்கிறது!


பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில்( ( மிச்சம் மீதி உள்ளதில்) அபூர்வ பறவைக்கூட்டங்கள் காணப்படுவதாக, பறவையியல் அறிஞர்கள் கூறுவதும் ஒரு நம்பிக்கையை ஊட்டுகிறது, பறவை இனங்களோடு உள்ள மானுடத்தொடர்பு முழுவதும் அறுபடாது என்று.


நம்பிக்கை- ஆம் நம் கையில்!


ஆனால் ஒரு பறவை இனமே முழுவதும் அழிந்த வரலாறும் உண்டு.


இந்து மா கடலில் மொரிஷஸ் தீவு உள்ளது.

இங்கு முதல் மனித நடமாட்டமே 1498ல் டச்சுக்காரர்கள் வந்த பின்பே,ஆரம்பித்தது. அங்கு டோடோ என்ற பறவை இருந்தது. மனித வரவுக்கு முன் அமைதியான தீவாக இருந்தது. டோடோவுக்கு, பகைவர்கள்கிடையாது. நன்கு உண்டு கொழுத்து " பறக்க முடியாத" ( flightless)பறவையாக மாறியது.வந்த மனிதர்களுக்கு, கொழுத்த உணவாக மாறியது. ஆனால்  அதற்குப் பெரிய எதிரிகள், டச்சுக்கப்பல்களில்  வந்த எலிகளும், பன்றிகளும்தான். 

அது தவிர மனிதர்கள் கொணர்ந்த நோய்கள், வேறு. அக்கால " கோவிட்" கள்!


விளைவு?


இந்த பறவை இனம் முழுவதுமாக உலகை விட்டு மறைந்தது.


இயற்கைச்சுற்றுச்சூழலை மானிட மாசு தடுமாறச்செய்த நிகழ்வு 1498லிருந்தே ஆரம்பித்து விட்டது; இன்றும் தொடர்கிறது; இதில் தலைமுறை இடைவெளி என்பதே கிடையாது!


இந்தப் பறவை  லூயிஸ் கரோலின் "ஆலிஸ் இன் ஒண்டர்லாண்ட்"  ஆங்கிலப் புதினத்தில், ஒரு முட்டாளாக சித்தரிக்கப்படுகிறது. 


மனித இயல்பைப் பாருங்கள். இது முழுவதுமாகஅழிக்கப்பட்டது பற்றி பேசப்படுவதில்லை.ஆனால் முட்டாளைக் குறிக்கும் அறிகுறியாக மொரிஷியஸில் பயன் படுத்தப்படுகிறது!


இன்று உலகில் சில அருங்காட்சி அகங்களில் பாடம் செய்யப்பட்ட  பறவையாக  காணப்படுகிறது. 

மனிதனுக்கு சுற்றுச்சூழலை மாசுபடுத்தாதே என்ற பாடத்தைக்

கற்பிக்கிறதோ!


மகாகவி பாரதி, பாப்பா பாட்டில்

"சின்னஞ் சிறுகுருவி போலே - நீ

திரிந்து பறந்துவா பாப்பா!

வண்ணப்பறவைகளைக் கண்டு - நீ

மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா! "

என்று பாடினார். 


இயற்கையையும் அதன்பரிவாரங்களையும் பாதுகாப்பதில் மனிதன் இன்னும்" பாப்பா" ஆகவே உள்ளான்; இன்னும் முதிர்ச்சி அடைய வேண்டும் என்று சூசகமாக, குறிப்பிடுகிறாரோ!

- மோகன்



Thursday, October 16, 2025

குடி

 பெண் பறவை: 


பாழாப்போன  மனுஷன் 

பண்ணி வச்ச விஷத்த

குடிச்சு புட்டு நேத்து எல்லாம் 

மதி மயங்கி கிடந்தீங்க 

மயக்கமா ஆனீங்க..


காலைல எழுந்ததும் 

தலைவலின்னு சொன்னீங்க 

மனுஷன் பாஷையில 

ஹாங் ஓவர் ஆனதுங்க..


கொஞ்சம் தெளிஞ்சதுமே 

பானை பக்கம் வந்தீக.

இந்த விஷத்த குடிக்காதீக..

மீண்டும் கஷ்டப் படாதீக..


மூள கெட்ட மனசன் மட்டும் 

குடிச்சு குடிச்சு சாகட்டும் 

நமக்கு இந்த எழவெல்லாம் 

வேண்டாம் வேண்டாம் விட்டுடுங்க..


ஆண் பறவை: !?


•ஶ்ரீவி•

Wednesday, October 15, 2025

ஏமாளி தம்பிகள்:

ஏமாளி தம்பிகள்:


"தம்பி உடையான் 

படைக்கஞ்சான்"

என இறுமாப்புடன் 

அண்ணன்கள்.


தம்பிகள் பாடோ 

என்றும் பரிதாபம்.


முதல் பிள்ளை 

என வீட்டில்

அண்ணன்களுக்கே 

என்றும்

பட்டாபிஷேகங்கள்.


தான் ........யில்லை

என நிரூபித்த 

முதல் மகன்தான் 

அன்னைக்கு 

செல்லப்பிள்ளை.


தந்தைக்கோ 

தலைச்சன்

ஆண் பிள்ளை 

என வரட்டு 

கவுரவம்.


நல்ல 

உடையிலிருந்து 

புது சைக்கிள் 

வரை 

அண்ணனுக்கே 

முன்னுரிமை.


அண்ணன் 

கேட்டால் 

உடன் கிட்டும் 

எப்பொருளும்.


தம்பிக்கோ 

அண்ணன் 

பாவித்த அனைத்துப் 

பொருட்களும் 

இரண்டாம் தரமாக.


ஆனாலும் ஓர் ஆறுதல்.

உடன் பிறந்த 

சகோதரிகள் இருந்தால், 

அவர்களெல்லாம்

அன்பு மழை பொழியும்

இளவரசர்கள் 

இந்தத் தம்பிகள்தான்.


பின்குறிப்பு:

நானும் என் வீட்டில் 

தம்பிதான்.

ஆனால் முன்னால் 

மூன்று அக்காக்களும் 

பின்னால் ஒரு தங்கையும்

கிடைக்கப் பெற்ற 

"இளவரசன்".


- முகம்மது சுலைமான்,

Tuesday, October 14, 2025

குறுங்கவிதைகள்

 ஆறுகள்

மணல் கொள்ளையை தடுக்கத்தான்

அந்த ஓட்டம் ஓடுகின்றனவோ!!!


---------

பூனைக் குட்டிகளை

    ஈரத் தரையிலிருந்து

    தான் விரித்தக்

    கோணிச் சாக்கில்

    இடம்பெயரச் செய்தவள்,

    ஞாபகப் படுத்துகிறாள் *நடுங்கிய மயிலுக்கு போர்த்திய மன்னனை!*

---------------

கடுங்கோடைக்கும்

பனை ஓலை விசிறியே

போதுமென்றிருந்த அப்பா

ஒரு பின்பனிக் காலத்தில் 

பனி உறைந்த பேழைக்குள்

இரண்டு நாட்கள் காத்திருந்தார்

*அயல் நாட்டிலிருந்து மகன் வந்து சேரும்வரை!*


-------------

*இளமைக்கே மவுசு!*

இளநீர் ஐம்பது  ரூபாய் 

தேங்காய் இருபது ரூபாய் 

இளமைக்கே மவுசு!

---------------------

*கெமிஸ்ரியில் வெற்றி பெற!*

காம்பஸ் கைவசம் இருந்தும்

வட்டம் போட வாங்கினான்

 அவளது வளையலை; 

 கணக்கு வகுப்பில்....

 *கெமிஸ்ட்ரி வளர்க்க!*

 

 --------------------

 என்ன கவிதை எழுதினாலும் மொக்கை என்கிறாயே 

உன்னையே கவிதை என்றால் என்ன சொல்வாய்?

----------------------

*மனித நேயம்*

பால்கனி மூலையில் உள்ள

குருவிக்கூட்டை கலைக்காமல்

ஒட்டடை அடித்தாள்

சண்டை போட்டு 

தனிக்குடித்தனம் வந்த 

மனைவி!

------------------


12 அக்டோபர் 25 அன்று நடந்த வாசிப்பு வட்டம் மற்றும் இலக்கண வகுப்பு விவரணம்

 *12 அக்டோபர் 25 அன்று நடந்த வாசிப்பு வட்டம் மற்றும் இலக்கண வகுப்பு விவரணம்*


கலந்து கொண்டவர்கள்: 


ஸ்ரீவி, 

லட்சுமி நாராயணன், 

அமுதவல்லி, 

முகமது சுலைமான், 

தேவி அருண், 

லதா, 

இரா. சண்முக சுந்தரம்,

இரா. பிச்சை மணி,

வெ. நாகராஜன்,

சி . ஹரிஷ்,

இரா. சுப்பிரமணியம்,

லட்சுமி, 

அ. சுல்தானா, 

சங்கீதா, 

மலர்விழி, 

காமாட்சி, 

கோ, தியாகராஜன், 

விஜயலட்சுமி பாலாஜி, 

ஆர். வைத்தியநாதன், 


சிறார்கள்: 

கௌசலேஸ், 

அவினாஷ், 

ஸ்ரீ நிகேதன்,

ஆதிரா சரவணன், 

அர்ஃபா,

அர்மான்,

கௌசிகா, 

ஜனனி. 


நேற்றைய வாசிப்பு வட்டத்தில் நமது சங்க உறுப்பினர் திரு முஹம்மது சுலைமான் அவர்கள் *சாயல்* எனும் கதை தொகுப்பிலிருந்து ஒற்றைச் செருப்பு எனும் கதையை வாசித்தார்கள். கதாசிரியர் பெயர் நிஷாந்தன். இயற்பெயர் மு. மு. அஷ்ரஃப் அலி. கதாசிரியர் நமது சுலைமான் ஐயாவிற்கு உறவினர் என்பது குறிப்பிடத் தக்கது.


தேனூர் எனும் சிறுநகரம் எப்படி மத நல்லிணக்கத்தோடு இருந்து வருகிறது என துவங்கும் கதை, சமய சந்தர்ப்ப வசத்தால் - வதந்திகள் பரவிய காரணத்தினால் - ஏற்பட்ட சமூக பதற்றத்தின் காரணமாக எப்படி கலவரம் உருவானது என விவரிக்கிறது. கதையின் நிறைவுப் பகுதியில் எப்படி இரண்டு நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பு மறைந்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதோடு மீண்டும்  தேனூருக்கு அமைதியும், மத நல்லிணக்கமும் திரும்ப, ஒளி தெரிகிறது என நிறைவுறுகிறது. 


இந்தக் கதை வாசித்தலுக்காக மூன்று நான்கு முறை தனது இல்லத்தில் வாசித்து வாசித்து பழகியதையும், மூச்சு வாங்குதல் இருக்கும் எனக் கூறி அதனை பொறுத்தருளுமாறும் கேட்டுக் கொண்டு முகமது சுலைமான் அவர்கள் வாசிக்க துவங்கினார். அவருக்கு மூச்சிரைக்கவும் இல்லை.  பிறர் மூச்சு விடவும் இல்லை. ஆம் மூச்சு விட மறந்து ஆர்வத்தோடு கதையைக் கேட்டார்கள். 


அதன் பின் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் நாங்கள் சந்தித்த சமூகப் பதற்ற சூழல் பற்றிக் கூறினார்கள். அனைவரின் ஏகோபித்த பாராட்டையும் திரு. நிஷாந்தன் அவர்களும் கதையை வாசித்த முகமது சுலைமான் ஐயா அவர்களும் பெற்றார்கள். முகமது சுலைமான் ஐயா அவர்களுக்கு நன்றி.


கதை வாசிப்பு முடிந்ததும் இலக்கண வகுப்பு தொடர்ந்தது. இலக்கண ஆசிரியர் திரு. சண்முகசுந்தரம் ஐயா அவர்கள் யாப்பிலக்கணம் வகுப்பு எடுத்தார். சென்ற வகுப்பின் தொடர்ச்சியாக, இந்த வகுப்பும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நேர், நிரை எனத் துவங்கி,

சீர்கள் பற்றி கூறி, அதாவது 

ஓரசைச் சீர், 

ஈரசைச் சீர்,

மூவசைச் சீர்,

நான்கு அசைச் சீர்

எனத் தொடர்ந்து, 

முத்தாய்ப்பாக சில திருக்குறளில் சிறப்புகளையும் தொட்டுக் காட்டி

வகுப்பு சிறப்பாக நடந்தது. 


கரும்பலகையில் ஆசிரியர் எழுதி கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு நமது உறுப்பினர்கள் பலர் ஆர்வத்துடன் பதில் சொன்னதும் மிக மிக ஆர்வமாக வகுப்பை கவனித்ததும் மன நிறைவாக இருந்தது.


வகுப்பில் சொல்லப்பட்ட சிறப்புமிகு திருக்குறள் நான்கை பற்றி தனியே பதிவிடப் படும்.


அதன் பின்னர் சிறார்களுக்கான வாசிப்பு வட்டம் இனிதே துவங்கியது. பொறுப்பாளர் மகாலட்சுமி அவர்கள் வந்திருந்த குழந்தைகளுக்கு தனித்தனியே கதைகளை கொடுத்ததோடு ஒரு சுவாரசியமான முன்னெடுப்பையும் செய்தார். அதாவது கதையை வாசித்த பிறகு அந்த சிறுவர்கள் கதையின் முடிவை தங்கள் கற்பனைக்கேற்றவாறு மாற்றி கூற வேண்டும் என்பதே அந்த முன்னெடுப்பு. சிறுவர்களுக்கு அது கடினமான ஒரு விஷயமாக இருக்கும் என்று பலர் நினைத்தாலும், அவர்களைப் பொறுத்த அளவிலே அது மிக எளிதான ஒரு விளையாட்டு போல இருந்திருக்கிறது போல. தாங்கள் படித்த கதையை கூறியவர்கள் தங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு கதையின் முடிவை மாற்றி புதிய ஒரு முடிவை கூறியது எல்லாரையும் ஆச்சரியப்பட வைத்தது பெருமைப் பட வைத்தது. கதையைச் சொன்ன குழந்தைகளில் அனேகர் தூய தமிழில் கூறியது எல்லாரையும் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. 

கலந்து கொண்ட சிறுவர்களுக்கும் பொறுப்பாளர் மகாலட்சுமிக்கு நமது நன்றிகளும் வாழ்த்துகளும்.


அடுத்த அமர்வு பற்றிய விவரம் விரைவில் பகிரப்படும். 


*ஸ்ரீவி*

தலைவர்.

பசியது வருத்த...

 பசியது வருத்த...


உசுரா வளர்த்த பிள்ளைகள் ஓடிப் போனார்

   உடன் வருவேன் என்றாள் உடைந்து போனாள் 


அசதியின்றி அந்நாள் உழைத்த உடலிது 

   "ஆளை விடு" என கையை உயர்த்தியது


பசியது வருத்த படுத்திருக்க முடியாது 

   பாழும் வயிறோ நாளை வரை பொறாது


நசுங்கிய பாத்திரம் பெற்று தருகிறார் நல்லது 

   நாள் ஒவ்வொன்றையும் நகர்த்துவார் இவ்வாறு.


__. குத்தனூர் சேஷுதாஸ் 14/10/2025

Saturday, October 11, 2025

அப்பா டக்கரா?

 அப்பா டக்கரா?

அப்புடீன்னா இன்னா?


இது ( வட) சென்னைத்தமிழ் சொல்லாடல்.

பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தில் சந்தானம் பேசிய நீ என்ன அவ்ளோ அப்பாடக்கரா என்ற வசனம் இளைஞர்கள் மத்தியில் வைரலானது. 


எப்போதும் யாரோடும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, அவர் ஒரு அறிவாளியாக இருந்தால், அவர் பெரிய அப்பாடக்கர் என்று அவரைப் பற்றி கூறுவது வழக்கம். இது நகைச்சுவைக்காக சொல்லும் வார்த்தை அல்ல .


உண்மையில் அப்படி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பெயர் அமிர்தலல் விதல்தாஸ் தக்கர். அவர் மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதி. 


குஜராத்தில் பிறந்தவர். பழங்குடி இன மக்களுக்காக பல போராட்டங்களை நடத்தி வந்தவர்.


மகான் தக்கர்பாபா சென்னையில் சில காலம் இருந்தபோது, சென்னை மாகாணத்தில் பல போராட்டங்களை நடத்தி உள்ளார்.சென்னை வாழ் மக்கள் அவரை அன்புடன் அப்பா தக்கர் பாபா என்று அன்போடு அழைத்து வந்தனர்.குஜராத்திமொழியில் பாபா என்றால் அப்பா என்பது பொருள்.


வேதங்களிலும், ஞானங்களிலும் கரை கண்ட அவர் சிறந்த அறிவாளி.அவரிடம் எந்தத் துறைத் தொடர்பாக, எந்த கேள்வி கேட்டாலும் தெளிவான பதில் கிடைக்கும். அதே போல ஒருவர் அறிவில் சிறந்தவராக இருந்தால், அவர் பெரிய அப்பா தக்கர் என்று சொல்லப்பட்டார். பிறகு சென்னை உச்சரிப்பில் இது அப்பாடக்கர் ஆகிவிட்டது.



1969 ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்காக தபால் தலையை வெளியிட்டது.


தக்கர் பாபா வித்யாலயா என்று சென்னை தி.நகரில் ஒரு பள்ளி உள்ளது.


அப்பாடக்கருக்கு பொருள் புரியாமலேயே நாம், அமிர்தலல் விதல்தாஸ் தக்கருக்கு பெருமைசேர்த்துவருகிறோம்.

Friday, October 10, 2025

மறதி

 நற்சுனை 19


மறதி


கடந்து போன நாள்களெல்லாம்

கைக்கொட்டிச் சிரித்தன

என் கைகளில்.. 


சிரிப்பு,அழுகை

சிந்தனை வாதம்

வெற்றி தோல்வி 

வழிபாடு பயணம்

கொண்டாட்டம் துக்கம் 

பிறப்பு இறப்பு

தொலைந்துவிட்ட நட்பு

புதிதாய் அலர்ந்த ரோஜா

ஜன்னலோர மழை  

நடைபயிற்சியில் பகிர்ந்த புன்சிரிப்பு

பண்டிகைப் பலகாரம்


என அனைத்தையும் 

சரித்திரமாக்கிவிட்ட வெற்றுக் காகிதங்களாய்...


தினசரி நாள்காட்டியில் கிழிக்க மறந்த தேதிகளை கிழித்த பின்..


- சாய்கழல் சங்கீதா

Tuesday, October 7, 2025

மாய யோகி

 நற்சுனை 18 


மாய யோகி


யாருக்காகவும் புன்னகைக்க மறப்பதில்லை

யாருக்காகவோ அழுவதில்லை


யாருக்கும் அடிப் பணிவதில்லை

யாரையும் வெறுப்பதுமில்லை


கள்ளம் கபடமில்லை

கண் அயர்ந்து தியானிப்பதில் கடினமில்லை


எதிலும் பொய்மையில்லை

தூய்மையில் களங்கமில்லை 


படைத்தவள் அரவணைப்பைத் தாண்டி 

பற்றுதல் வேறு இல்லை


பசியைத் தாண்டி புசிப்பதில்லை

உடை துறந்தாலும் கூச்சமில்லை


தன் இருப்பில் சுற்றமெல்லாம் 

அன்பு மயமாய்

மாற்றுமே மாயமாய்...

அகந்தை இல்லா குழந்தையே

மாய யோகியாய்!


- சாய்கழல் சங்கீதா

Friday, October 3, 2025

நம்பிக்கை

 நற்சுனை 17


நம்பிக்கை


எப்படியும் வேண்டாம் என்று 

சொல்லிவிடுவாள் 

பெரும் நம்பிக்கையோடு

அக்கறையாய் கேட்டான்

"மூக்குக் கண்ணாடியை மாற்றிக் கொள்கிறாயா அம்மா?"

மாதக் கடைசியில் வெறும்

கையைப் பிசைந்துக் கொண்டிருந்த மகன்..


- சாய்கழல் சங்கீதா

Wednesday, October 1, 2025

27.9.25 சனிக்கிழமை மாலை நடந்த வாசிப்பு வட்ட அமர்வுகள் மற்றும் இலக்கண வகுப்பு விவரணம்

 *27.9.25 சனிக்கிழமை மாலை நடந்த வாசிப்பு வட்ட அமர்வுகள் மற்றும் இலக்கண வகுப்பு விவரணம்:*


27 செப்டம்பர் அன்று மாலை 5 மணிக்கு பெரியோருக்கான *வாசிப்பு வட்ட அமர்வு* துவங்கியது.

அமர்வில் கலந்து கொண்டோர்:

 

1. சாய் ராம் 

2. தியாகராஜன்

3. ஶ்ரீவி 

4. அமுதவல்லி 

5. லக்ஷ்மி நாராயணன் 

6. ஹரிஷ்

7. முஹம்மது சுலைமான்

8. சரஸ்வதி 

9. ராம மூர்த்தி 

10. லக்ஷ்மி 

11. ஶ்ரீவித்யா 

12. கணேசன்

13. வே. நாகராஜன் 

14. சண்முக சுந்தரம் 

15. சுப்பிரமணியன் 

16. நாகராஜன் (அமுதவல்லி)

17. சுல்தானா 

18. காமாட்சி


திரு. லட்சுமி நாராயணன் அவர்கள் *கி. ராஜ் நாராயணன் அவர்களின் கதவு* என்கின்ற சிறுகதையை வாசித்தார். சென்ற அமர்வில் *சுஜாதாவின் பேப்பரில் பேர்* என்னும் கதை வாசிக்கப்பட்ட போது, அரங்கத்தில் மகிழ்ச்சி இருந்ததைக் கண்டோம். கேட்ட அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர் என்பதோடு, உற்சாகமாகவும் அதன் மீது விவாதம் நடத்தினர். இந்த முறை வாசிக்கப்பட்ட அந்தக் கதை கேட்போர் அனைவரின் மனங்களையும் உருக்கியது என்று சொன்னால் மிகையாகாது.  பலரின் கண்கள் கசிந்தன. சோகம் அனைவரையும் ஆட்கொண்டது. சாதாரண அஃறினை பொருளான கதவினைக் கதாநாயகனாக்கி விளிம்பு நிலை குடும்பங்கள் வறுமையில் தத்தளிக்கும் நிலையையும், கரிசல் மண்ணின் பல்வேறு விஷயங்களையும் லாவகமாக திரு. கி. ரா. அவர்கள் தனது எழுத்தாற்றலால் வடித்திருக்கிறார். அனேகர் உணர்ச்சி வசப்பட்டு பேசியதை பார்க்க முடிந்தது. மிக அருமையான ஒரு கதை வாசிப்பு அது. திரு. லட்சுமி நாராயணனுக்கு நன்றி.


கதை வாசிப்பு முடிந்ததும் *திரு சண்முகசுந்தரம் ஐயா*  *இலக்கண வகுப்பினை* நடத்தினார். *யாப்பிலக்கணம்*  துவங்கப் பட்டது. கணித முறையிலான யாப்பிலக்கணத்தில் *அசை* பற்றி அவர் விளக்கியது எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய அளவிலே மிகச் சிறப்பாக இருந்தது. வகுப்பில் விளக்கிய கையோடு சில உதாரணங்களை கரும்பலகையில் எழுதி அதனை நம்மை அசை பிரிக்க சொன்ன விதம் அனைவரின் மனங்களையும் கவர்ந்தது. இலக்கணம் என்றாலே ஒவ்வாமை என்ற நிலையை மாற்றக்கூடிய அளவில் அனைவரும் ஆர்வத்துடன் பதில் அளித்த விதம் குறிப்பிடத் தகுந்தது. *நேர் அசை – நிரை அசை* இரண்டும் அனைவரின் மனங்களையும் ஆக்கிரமித்தன. ஒரு கடினமான பணியை இலகுவாக மாற்றி அனைவருக்கும் இலக்கணத்தின் மீது பிடிப்பு வரச் செய்த திரு சண்முகசுந்தரம் ஐயா அவர்களுக்கு நன்றி.


அதன் பின்னர்  சிறார்களுக்கான வாசிப்பு வட்ட அமர்வு–2 சரியாக 6.30 மணிக்கு துவங்கியது.

பங்கேற்றவர்கள் விவரம்

1. செல்வன். ஸ்ரீநிகிதன்,

2. செல்வி. ஜனனி,

3. செல்வன். சாய்பிரணவ்,

4. செல்வன். அர்மான்,

5. செல்வி. அர்ஃபா,

6. செல்வன். ஆதவ்,

7. செல்வன். அவினாஷ்,

8. செல்வன். மதுசந்த்,

9. திரு. சாய்ராம்

10. திருமதி. மகாலட்சுமி

11. திரு. ஸ்ரீவெங்கடேஷ்

12. திருமதி. ராஜேஸ்வரி

13. திருமதி. ஷியாமளா

14. திருமதி. சுல்தானா


இம்முறை சிறுவர்களுக்கு சிறிய பட அட்டைக் கதைகள் வாசிக்க கொடுக்கப்பட்டன, வாசிப்பின் இறுதியில் நிகழ்ந்த வினாடி வினாவில், அனைவரும் சரியான விடையைக் கூறி, கரவொலி பெற்றனர். பின் *செல்வி ஜனனி,*  தான் படித்த *கிச்சா பச்சா* கதையைத் தன் பாணியில் சுவைபட பகிர்ந்து கொண்டது, இந்த வாசிப்பு வட்டத்தின் குறிக்கோளை எட்டும் முதல் படியாக அமைந்தது. அவரைத் தொடர்ந்து திருமதி. இராஜேஸ்வரி அவர்கள் சிறுவர்களுக்கான *தேன் சிட்டு மற்றும் ஊஞ்சல் நாளிதழ்களையும்,* சில கதைப் புத்தகங்களையும் பகிர்ந்து கொண்டார். குழந்தைகள் தாங்கள் செல்லும் போது, தங்களுக்கு வேண்டிய புத்தகங்களை வாசிக்க எடுத்து சென்றது மகிழ்வான தருணமாக அமைந்து.

அடுத்த அமர்வு வருகின்ற அக்டோபர் 12ம் தேதி அன்று மாலை 6.30மணிக்கு இன்னும் சில புதிய விஷயங்களுடன் அரங்கேறவுள்ளது. தொடர் வாசிப்பே சிறந்த கற்றலுக்கான வழி, குழந்தைகள் தொடர்ந்து இந்த முயற்சியில் பங்குகொள்ள பெற்றொர்களின் துணை நின்று உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். 


திறம்பட இந்த அமர்வினை வழி நடத்திய திருமதி. மகாலட்சுமி அவர்களுக்கு நம் நன்றி.


இந்த வாசிப்பு வட்ட அமர்வும் இலக்கண வகுப்பு 2 மணி நேர மகிழ்வு தரும் அனுபவத்தை அள்ளிக் கொடுத்தன. கலந்து கொண்ட பலரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து சென்றது உற்சாகம் தருவதாக இருந்தது. ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைவருக்கும் நமது மகாகவி பாரதி தமிழ் சங்கத்தின் நெஞ்சு நிறை நன்றிகள். 


பொழுது போக்க மட்டுமல்ல நமது பார்வையை விசாலமாக்க அறிவாற்றலை அதிகப்படுத்திக் கொள்ள நடக்கின்ற இந்த அமர்வுகளில் மேலும் பலர் கலந்து கொள்ள வேண்டும் என நமது சங்கம் விழைகிறது.

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...