Friday, October 17, 2025

பறவை நேயம்

 பறவை நேயம்

சிட்டுக்குருவிகளைக் காப்போம்

-----------

குருவி நயம் பற்றிய பதிவுகள் என் சிந்தனையைத் தூண்டி விட்டன....


என்னுடைய இளமைக்காலத்தில்-   ம்ம்ம்ம்- போன நூற்றாண்டில், (!) சென்னை எக்மோரிலும், கீழ்ப்பாக்கத்திலும், பெரிய தோட்ட வீடுகளில் வசித்த நாட்களில், நிறைய சிட்டுக்குருவிகளைப் பார்த்ததுண்டு. , கூட்டம் கூட்டமாகப் பறக்கையில், மகிழ்ச்சிக் கூச்சலிட்டுக்கொண்டு, செல்கையில்.


பின்பு....


சென்னை  மாநகரம்( நரகம்?) வானுயர் கட்டிடங்களின் கானகமாக மாறி வர, சிட்டுக்குருவிகள் மூச்சு விட 

சிரம ப்பட்டதோ என்னவோ,அதிகம் காணக்கிடைக்கவில்லை.  


பூர்வாவில் குடி வந்த பின் சாளர விளிம்புகளில் வந்து நம்மை அழைக்கும் குருவிகளைக் காண முடிகிறது. "ஊர்க குருவியே" இங்கதானே வசிக்கிறது!


பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில்( ( மிச்சம் மீதி உள்ளதில்) அபூர்வ பறவைக்கூட்டங்கள் காணப்படுவதாக, பறவையியல் அறிஞர்கள் கூறுவதும் ஒரு நம்பிக்கையை ஊட்டுகிறது, பறவை இனங்களோடு உள்ள மானுடத்தொடர்பு முழுவதும் அறுபடாது என்று.


நம்பிக்கை- ஆம் நம் கையில்!


ஆனால் ஒரு பறவை இனமே முழுவதும் அழிந்த வரலாறும் உண்டு.


இந்து மா கடலில் மொரிஷஸ் தீவு உள்ளது.

இங்கு முதல் மனித நடமாட்டமே 1498ல் டச்சுக்காரர்கள் வந்த பின்பே,ஆரம்பித்தது. அங்கு டோடோ என்ற பறவை இருந்தது. மனித வரவுக்கு முன் அமைதியான தீவாக இருந்தது. டோடோவுக்கு, பகைவர்கள்கிடையாது. நன்கு உண்டு கொழுத்து " பறக்க முடியாத" ( flightless)பறவையாக மாறியது.வந்த மனிதர்களுக்கு, கொழுத்த உணவாக மாறியது. ஆனால்  அதற்குப் பெரிய எதிரிகள், டச்சுக்கப்பல்களில்  வந்த எலிகளும், பன்றிகளும்தான். 

அது தவிர மனிதர்கள் கொணர்ந்த நோய்கள், வேறு. அக்கால " கோவிட்" கள்!


விளைவு?


இந்த பறவை இனம் முழுவதுமாக உலகை விட்டு மறைந்தது.


இயற்கைச்சுற்றுச்சூழலை மானிட மாசு தடுமாறச்செய்த நிகழ்வு 1498லிருந்தே ஆரம்பித்து விட்டது; இன்றும் தொடர்கிறது; இதில் தலைமுறை இடைவெளி என்பதே கிடையாது!


இந்தப் பறவை  லூயிஸ் கரோலின் "ஆலிஸ் இன் ஒண்டர்லாண்ட்"  ஆங்கிலப் புதினத்தில், ஒரு முட்டாளாக சித்தரிக்கப்படுகிறது. 


மனித இயல்பைப் பாருங்கள். இது முழுவதுமாகஅழிக்கப்பட்டது பற்றி பேசப்படுவதில்லை.ஆனால் முட்டாளைக் குறிக்கும் அறிகுறியாக மொரிஷியஸில் பயன் படுத்தப்படுகிறது!


இன்று உலகில் சில அருங்காட்சி அகங்களில் பாடம் செய்யப்பட்ட  பறவையாக  காணப்படுகிறது. 

மனிதனுக்கு சுற்றுச்சூழலை மாசுபடுத்தாதே என்ற பாடத்தைக்

கற்பிக்கிறதோ!


மகாகவி பாரதி, பாப்பா பாட்டில்

"சின்னஞ் சிறுகுருவி போலே - நீ

திரிந்து பறந்துவா பாப்பா!

வண்ணப்பறவைகளைக் கண்டு - நீ

மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா! "

என்று பாடினார். 


இயற்கையையும் அதன்பரிவாரங்களையும் பாதுகாப்பதில் மனிதன் இன்னும்" பாப்பா" ஆகவே உள்ளான்; இன்னும் முதிர்ச்சி அடைய வேண்டும் என்று சூசகமாக, குறிப்பிடுகிறாரோ!

- மோகன்



No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...