ஆயத்தம்
மழைக்குப் பின்
குடை விரித்த காளான்—
மறுமழைக்கான ஆயத்தமோ?
லதா கணேசன்
===============
*முடிந்த விருந்து*
விருந்து முடிந்ததும் நான் அழுக்காம்;
முதுமையில் மனிதரும்!!
—காலியான உணவுத்தட்டு
லதா கணேசன்
==================
ஆயத்தம்
மழைக்குப் பின்
குடை விரித்த காளான்—
மறுமழைக்கான ஆயத்தமோ?
லதா கணேசன்
===============
*முடிந்த விருந்து*
விருந்து முடிந்ததும் நான் அழுக்காம்;
முதுமையில் மனிதரும்!!
—காலியான உணவுத்தட்டு
லதா கணேசன்
==================
காத்திருப்பு
ரஞ்சனிக்கு வாழ்க்கையே வெறுப்பாக இருந்தது. இந்த காத்திருப்புக்கு ஒரு முடிவே கிடையாதா.! சே! என்று அலுத்துக் கொண்டாள். கண்களில் தண்ணீர் தளும்பி வந்தது. எல்லாம் என் தலையெழுத்து! எத்தனை நாளா நானும் காத்திருக்கிறது. கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா?. நடுவில் தொலைபேசியில் யாரோ அழைக்க, ஒருவேளை அவனாக இருக்குமோ? ஓடிச்சென்று எடுத்தால் மறுமுனையில் மேடம் லோன் தரோம், வாங்கி கிறீங்களா? என்ற குரல் கேட்டது. அட! வையம்மா போனை , நேரம் காலம் தெரியாம,என்று மிகவும் சலிப்புடன் கூறிவிட்டு போனை டப் என்று வைத்தாள். ஒருவேளை மெசேஜ் ஏதாவது வந்திருக்கிறதா என்று ஆவலுடன் பார்த்தாள் அதிலும் இல்லை. . ஐயோ கடவுளே என்னை ஏன் இந்த மாதிரி சோதனை பண்ற எனக்கு மட்டும் ஏன் இந்த மாதிரி நடக்குது. பக்கத்து வீட்ல பிரியா, ரம்யா எல்லாருக்கும் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்க ஏன் எனக்கு மட்டும் இப்படி சோதனை பண்ற என்று வாய் வட்டு கதறினாள். விளையாட்டு போல் ஒரு மாதம் ஆகிவிட்டது இதோ அதோ என்று அவளும் நாட்களை தள்ளி வந்தாள். இனி முடியாது.தினமும் எவ்வளவு சிரமமாக இருக்கிறது. வேறு யாரும் உதவி செய்யவும் முடியாது என்று கூறுகிறார்கள் என்னதான் பண்ணுவது? கொஞ்சமாவது கஷ்டம் தெரியுதா? அவளும் இந்த எண்ணத்தை மாற்ற தொலைக்காட்சியில் நிகழ்ச்சி பார்த்தாள். கொஞ்சம் வாக்கிங போயிட்டு வந்தாள். ஆனா மனசு என்னமோ இதையே சுத்தி சுத்தி வருது.
அவன் வருகைக்காக தினம் தினம் ஏங்கி ஏங்கி மனம் வேதனைப்பட்டது. என்னமோ குடிமுழுகி போன மாதிரி மூஞ்ச தூக்கி வச்சுட்டு உட்கார்ந்து இருக்கா பாரு, என்று மாமியார் இவளைப் பார்த்து சொன்னதும், உங்களுக்கு என்ன கஷ்டம் தெரியும் எனக்கு இல்ல அந்த கஷ்டம் தெரியும் நீங்க நல்லா சந்தோஷமா இருக்கீங்க எனக்கு அப்படியா? என்று பதிலுக்கு கத்தினாள். ஆமா நாங்க அந்த �
ஆமா நாங்க அந்த காலத்துல படாத கஷ்டம் தான் நீங்க பட்டுட்டீங்க எல்லாத்தையும் பெருசு பண்ணுவாங்க இந்த காலத்து பசங்க என்று மாமியார்க்காரி பதிலுக்கு வாய் அடித்து விட்டு சென்றாள்.
சரி சற்று கண்ணயறலாம் என்று அவள் உள்ளே சென்றபோதுதான் அந்த அழைப்பு மணி கேட்டது. ஏக்கமும் ஆவலும் பொங்க அவள் ஓடினாள். கதவை திறந்தவளுக்கு இன்ப அதிர்ச்சி. அங்கு நின்று கொண்டிருந்தவனை பார்த்ததும் கண்களில் நீர் வழிந்தது.ஏம்மா ராமநாதன் வீடு இதுதானே ? ஆமா வாங்க வாங்க உங்களை தான் எதிர்பார்த்துட்டு இருந்தேன் என்று ஆவலாக கதவை திறந்து விட்டாள். சரி எங்கம்மா வைக்கணும் இந்த கேஸ் சிலிண்டரை என்று கேட்டவனை காலில் விழுந்து வணங்க வேண்டும் போல இருந்தது அவளுக்கு. அப்பாடா ...ஒரு வழியா வந்து சேர்ந்தது என்ற நிம்மதி பெருமூச்சுடன் கேஸ் வாங்கி வைத்துவிட்டு உறக்கச் சென்றாள் ரஞ்சனி.
-சிறுகதை
-லதா கணேசன்
*தேவதை*
ப்ரீதா மிகவும் உற்சாகமாகவும் அதே நேரம் பதற்றத்துடனும் இருந்தாள். மாத பரிசோதனைக்கு (monthly check-up) இன்று வந்தபோது மகப்பேறு மருத்துவர் (gynecologist) பிரேமா அவளுக்கு நாட்கள் நெருங்கிவிட்டதையும் அவளை இன்று மாலைக்குள் மருத்துவமனையில் அட்மிட் ஆகிவிடுமாறும் கூறியதுதான் காரணம். ப்ரீதா தன் மனதிற்குள் கடந்த சில மாதங்ளாக நடந்தவற்றை நினைவு கூர்ந்தாள்.
ஏழு மாதத்திற்கு முன் தான் அவள் பரிசோதனைக்கு சென்று அவள் கருவின் முதல் வளர்ச்சியை கண்டது போல் இருந்தது. அதற்குள் நாட்கள் எவ்வாறு விரைந்துவிட்டன. முதல் ஸ்கேனில் அந்த கரு ஒரு சிறிய இலந்தைபழம் அளவிற்கு இருந்ததும் அவள் வயறு மெலிதாய் தெரிந்ததும், அதன் அசைவுகள் தெரிந்தபோதும் அவள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
பதினைந்து வாரங்களுக்கு பிறகு அவள் சற்று தெளிந்திருந்தாள். தன் உடல்நிலை மாறுபாட்டை ஓரளவிற்கு அவள் அறியத் தொடங்கிவிட்டாள். வாந்தி, மயக்கம் போன்றவை சற்று குறையத் தொடங்கியது. அவளுக்கு சத்தான ஆகாரங்கள் யாவும் கொடுக்கப்பட்டது. அவளுக்கு வேண்டப்பட்டவர்கள் அவள் உடல்நலம் பற்றி உடனுக்குடன் கேட்டறிந்து கொண்டனர்.
சில வாரங்கள் கடந்து...
குழந்தையின் அசைவும் , வளர்ச்சியும் நன்றாகவே இருந்தது. அவள் வயிற்றை கூர்ந்து கவனித்தால் சிலசமயம் சிறுபாதத்தின் தோற்றம் நன்றாகவே தெரியும். பல வேளையில் நன்றாக உதைப்பது தெரிந்தது. அந்த வலியும் இன்பமாகவே இருந்தது அவள் அதன் நல்ல வளர்ச்சியை எண்ணி ஆனந்தம் கொண்டாள். பல நேரங்களில் அவள் தனிமைக்கு துணையாக அந்த கருவே இருந்தது.
அவள் அதனிடம் "இன்னும் கொஞ்ச நாள்ல நீ வெளில வந்து இந்த உலகத்த பார்க்கபோற டா செல்லக்குட்டி. உன்ன கையில வெச்சு தாங்க போறோம்" என்று சொல்லும் போது அதை ஆமோதிப்பதைப் போல ஒரு உதை தெரியும். அதேபோல் அவள் நல்ல இசையைக் கேட்கும்போதும், இயற்கை எழிலை ரசித்து காற்று வாங்கும்போதும், அவள்" நீ நல்லா வருவ செல்லம்.. " என்று கூறும் போதும் நன்றி கூறுவது போல் ஒரு உதை உண்டு.
இவ்வாறு நாட்கள் கடந்து இன்று அரங்கேற்ற நாளாக அவள் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டாள். செவிலி அவ்வப்போது அவளை சரிபார்த்து விட்டு "எல்லாம் இயல்பாக (normal) இருக்கு. நீ அமைதியாவும் தைரியமாவும் இரு" என்று கூறிவிட்டு சென்றாள். வலி வர தொடங்கியது ப்ரீதா பிரசவ அறைக்கு அழைத்து செல்லப்பட்டாள்.
மருத்துவர் பிரேமா பலவருட அனுபவம் வாய்ந்தவர். இப்போது ப்ரீதாவிற்கு மிகவும் ஆறுதலாய், பொறுமையாய் அவளுக்கு தைரியம் கூறி அவள் மூச்சு மற்றும் இதர மருத்துவ விஷயங்களையும் மிக நேர்த்தியாக நிபுணத்துவத்துடன் (expertise) கையாண்டு ப்ரீதாவிற்கு சுகபிரசவத்தில் ஒரு அழகிய குட்டி தேவதை பிறந்தாள். ப்ரீதா எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தாள்.
ஒரு கணம் அவள் அதை பார்த்தபோது தனது அழுகையின் ஊடே அந்த தேவதையும் ஒரு நொடி இவள் கண்களை உற்று நோக்கியது அவளுக்கு ஆயிரம் அர்த்தங்களை தந்தது.
பின்னர் மூன்றாம் நாள் வீடு திரும்பிய ப்ரீதா சில நாட்கள் வெறுமையை உணர்ந்தாள். என்னதான் ஒத்துக்கொண்டு வாடகைத்தாயாக (surrogate mother) இருக்க சம்மதித்தாலும், இத்தனை நாட்கள் தன்னோடு இருந்த தன் உயிரை யாரோ பிரித்து சென்றார்போல் உணர்ந்தாள். அதனை பார்க்க எண்ணி ஏக்கத்திலும், பல வேளை கட்டு ஏற்பட்டும் வலியிலும் துடித்தாள், எரிச்சலும் கோவமும் கொண்டாள். ஆனால் அவளின் மனதில் தான் பெற்றெடுத்த குழந்தை எங்கோ ஒரு நல்ல தம்பதியரிடம் நன்றாக வளர போவதை எண்ணி, இதுவே நிதர்சனம் என்பதையும் உணர்ந்து அக்குழந்தையின் அந்த ஒரு நொடி பார்வை தந்த நினைவில் தன் வாழ்வின் அடுத்த பயணத்திற்கு தெளிவுடன் தன் முதல் அடியை எடுத்து வைத்தாள்.
தாய், வாடகைத்தாய் ஆயினும் அவளும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்க்கு அந்த வரத்தை தன் மூலம் தந்த தேவதையே.
நன்றி!!!
- பிரபு
சிறுகதை
மேஜிக் கார்:
கால வளையம் ஆங்கிலத்தில் டைம் லூப் அல்லது டெம்போரல் லூப் என்று ஒரு கோட்பாடு உண்டு.
அதாவது உலகில் ஒரு நிகழ்வு மீண்டும் மீண்டும் அதே தருணத்தில் நிகழ்ந்தால் அதை கால வளையம் (time loop) என்று கூறுவோம். அப்படி ஒரு நிகழ்வு அதன் முடிவை அதன் பாதையில் எட்டும் வரையில் அதே கால வளையத்தில் மீண்டும் மீண்டும் சிக்கி அதே நிகழ்வை அனுபவிக்கும் ஒரு கற்பனையே இந்த கதை.
கார்த்திக் மற்றும் தேவா இருவரும் ஹைடெக் கார் திருடர்கள். அவர்கள் கார் மற்றும் அதன் சம்பந்தமான எலக்ட்ரானிக்ஸ் அனைத்து விஷயத்தையும் நேர்த்தியான முறையில் திருடுபவர்கள். அவை அனைத்தையும் இதுவரை மாட்டிக் கொள்ளாமல் திருடி விற்று பணம் செய்து உல்லாசமாக வாழ்ந்து வருபவர்கள். ஒருநாள்
மணி: காலை 11:30.
ஒருநாள் ஒரு உணவு விடுதியின் அருகில் லாவகமாக ஒரு காரை திறந்து அந்த காரை திருடிக்கொண்டு வந்தனர் தேவா மற்றும் கார்த்திக் இருவரும். அந்த காரில் ஒரு பர்ஸ்ஸும் ஒரு மொபைல் ஃபோனும் இருந்தது.
தேவா: மச்சி!!! காஸ்ட்லி ஆண்ட்ராய்டு ஃபோன் டா. பர்ஸ்ல ஒரு பத்தாயிரம் தேறும். இந்த மியூசிக் சிஸ்டம் அது ஒரு நல்ல அமௌண்ட் தேறும்.
கார்த்திக்: கார நம்ம ஆள் சேகர் எப்போதும் போல எடுத்துப்போக வருவான். இது கொஞ்சம் ஹை எண்டு மாடல் கார். அதனால் இந்த தடவை ரேட் விஷயத்தில் கறாராக பேசி வாங்கிடனும்.
தேவா: ஆமா மச்சி கண்டிப்பா வாங்கிடலாம்.
கார் அவர்கள் வீட்டில் வந்து நின்றது.
கார்த்திக்: மச்சி நான் போய் சரக்கு வாங்கிட்டு வரேன். இன்னிக்கு கொண்டாடறோம்.
கார்த்திக் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான். முதலில் காரை ஒரு டீக்கடை வாசலில் நிறுத்தி ஒரு டீ குடித்தான். பின்னர் ஒரு ரோட்டோர கடையில் சூடாக ஒரு சிக்கன் பக்கோடா வாங்கினான்.
பின்னர் ஒரு சிறுமி ரோடு கிராஸ் செய்ய பார்த்து அவன் காரில் மோதுவது போல வர, கார்த்திக் சடன் பிரேக் அடித்து நிற்பாட்டினான். பின்னால் ஒரு அம்மா ஓடிவர,
கார்த்திக்: ஏம்மா சின்ன பொண்ண பாத்து கூட்டிட்டு வர மாட்டீங்களா? நான் மட்டும் பிரேக் போடாம இருந்தா இவ்ளோ நேரம் அடிச்சு தூக்கியிருப்பேன்.
அந்தபெண்: சாரி சார் கூடவே வந்தா பைய சரி பண்ணிட்டு வரதுக்குள்ள டக்னு ஓடி வந்துட்டா. என் தப்பு தான். ரொம்ப தேங்க்ஸ் சார்" என்று கூறி அந்த சிறுமியை தொடையில் இரண்டு அடி போட்டுவிட்டு இழுத்து சென்றாள்.
அவன் மீண்டும் காரை உயிர்ப்பித்து ஒட்டினான். அவன் காரின் முன்னால் ஒரு டெம்போ சென்று கொண்டிருந்தது.
மணி மதியம் 12.45.
அப்போது அவன் கைபேசியில் ஒரு அழைப்பு வர, அதை எடுத்து "ஹலோ" என்றான். இமைக்கும் நேரத்தில் வலது புறத்திலிருந்து ஒரு கார் அந்த டெம்போவில் மோத, அந்த டெம்போ அதற்கு முன்னால் சென்ற ஆட்டோ மற்றும் டூவீலரில் மோத, கார்த்திக்கின் காரும் சற்று நிலை இழந்து அந்த டெம்போவில் மோதி அவன் தலை கார் ஸ்டியரிங்கில் மோதி அவன் கண்கள் இருண்டு மயங்கி விழுந்தான். டூ வீலரில் இருந்தவர்கள் இரத்த வெள்ளத்தில் வீழ்ந்தனர்.
கார்த்திக் மீண்டும் கண் விழிக்க, அவன் தேவாவுடன் மீண்டும் உணவு விடுதி அருகிலிருந்து அந்த காரை திருடிக் கொண்டு வந்து கொண்டிருந்தனர்.
மணி: காலை 11:30.
தேவா: மச்சி!!! காஸ்ட்லி ஆண்ட்ராய்டு ஃபோன் டா. பர்ஸ்ல ஒரு பத்தாயிரம் தேறும். இந்த மியூசிக் சிஸ்டம் அது ஒரு நல்ல அமௌண்ட் தேறும்.
கார்த்திக்குக்கு இதெல்லாம் ஏற்கனவே நடந்தது மீண்டும் நடப்பது போல் இருந்தது
கார்த்திக்: டேய் இந்த காரை நாம ஏற்கனவே தூக்கினோம்ல. இதெல்லாம் ஏற்கனவே பேசினோம்ல?
தேவா: மச்சி இந்த கார் மாதிரி பல காலை நாம தூக்கி இருக்கோம். நிறைய பேசி இருக்கோம். அதெல்லாம் ஞாபகம் வெச்சுக்க முடியுமா?
கார்த்திக்: இல்லடா. இதே விஷயம், இதே கார் இதெல்லாம் அப்படியே நடந்தது இப்போ திரும்ப நடக்குது.
தேவா: "என்னடா சரக்கு அடிக்காமயே உளர்ற. ஒரு சரக்கு போடு தெளிவாகிடுவ" என்றான்.
கார் வீட்டிற்கு வந்தது. கார்த்திக் காரை எடுத்தான். டீ கடையில் டீ குடித்தான். பக்கோடா வாங்கினான், அந்த சிறுமியை அந்தப் பெண்ணிடம் தந்து, அதே இடத்தில் மீண்டும் கைப்பேசி அலற, மணி 12.45. அதே போல் டெம்போவில் மோதி விபத்து ஏற்பட்டு மயங்கினான். மீண்டும் கண் விழித்தபோது அவர்கள் காரை திருடி வந்து கொண்டிருந்தனர்.
மணி அதே காலை 11.30
கார்த்திக் தனக்கு மட்டும் இது மீண்டும் மீண்டும் நடப்பதை உணர்ந்தான். இம்முறை அவன் டீ கடையிலும், ரோட்டோர கடையிலும் நிறுத்தாமல் சென்றான். அதனால் அந்த சிறுமியை அவன் இம்முறை காணவில்லை. டிராஃபிக் நெருக்கடியால் சற்று மெதுவாக வாகனங்கள் நகர்ந்தது. அந்த விபத்து நடக்க இருக்கும் பகுதியை அடைந்தான்.
மணி 12.42
இம்முறை அந்த டெம்போவை கடந்து ஓவர்டேக் செய்து ஓட்டிச்சென்றான். அவனுக்கு ஒன்றும் ஆகவில்லை.
மணி 12.45. அவன் வலது கண்ணாடியில் அது தெரிந்தது. டெம்போவில் அந்த கார் மோத, பைக்கும் ஆட்டோவும் விபத்துக்குள்ளாகி அந்த பைக்கில் வந்த இருவரும் இரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அவன் கண்கள் மீண்டும் மயங்கின.
கண் விழித்தபோது அவர்கள் மீண்டும் காரை திருடி வந்து கொண்டிருந்தனர்.
மணி மீண்டும் அதே காலை 11.30.
இந்த முறை கார்த்திக் தேவாவிடம், "டேய் நான் இறங்கிக்கறேன். ஒரு முக்கியமான வேலை இருக்கு. நீ காரை எடுத்துட்டு போ"
தேவா: டேய் என்ன டா ஆச்சு???
கார்த்திக்: "டேய் நீ போடா. நான் ஒரு வேலைய முடிச்சிட்டு வரேன்"
என்று சொல்லி இறங்கி ஓடினான்.
கார்த்திக் மீண்டும் அவர்கள் திருடிய இடத்திற்கு சென்று அங்கே அருகில் மறைந்து கொண்டு பார்த்தான்.
அந்த காரை தவரவிட்டவன் அதை காணாமல் பதைபதைத்து தேடி கொண்டிருந்தான். உணவு விடுதிக்கு அருகில் இருந்த மெடிக்கல் லேபில் இருந்து கையில் ரிப்போர்ட்டுடன் இருந்தான். பின்னர் அங்கு வந்த ஒருவனிடம் ஏதோ பேசி, அவன் கைப்பேசியிலிருந்து யாரோ ஒருவருக்கு கால் செய்தான். அடுத்த பதினைந்திலிருந்து இருபது நிமிடத்தில் ஒருவன் பைக்கில் வந்தான். வந்தவன் சில மருந்துகளை கார் தொலைத்தவனுக்கு வாங்கி கொடுத்து, அவனுடன் பைக்கில் ஏற்றிக்கொண்டு இருவரும் புறப்பட்டனர்.
கார்த்திக்கும் ஒரு ஆட்டோ பிடித்து அவர்களை பின் தொடர்ந்தான்.
மணி மதியம் 12.45.
அதே இடத்தில் விபத்து ஏற்பட, இந்த முறை தேவா காரில் பின்னால் வந்து டெம்போவில் மோதி மயக்கம் அடைந்தான்.
அவர்கள் மீண்டும் காரை திருடி வந்த அதே தருணத்தில் இருந்தனர்.
மணி காலை 11.30.
தேவா: டேய் எனக்கு என்னவோ நடப்பது எல்லாம் ஏற்கனவே நடந்து பார்த்த மாதிரி இருக்கு. நான் இப்போ தான் கார இடிச்ச மாதிரி இருந்தது. ஆனா இப்போ உன் கூட இருக்கேன்.
கார்த்திக்: நானும் அத தான் டா சொல்றேன். இப்போ வரைக்கும் எனக்கு இதே சம்பவம் நாலு தடவை நடந்துடுச்சு. இப்போ திரும்பவும் நடக்குது.
தேவா: ஆமா மச்சி. எனக்கும் இப்போ உன்ன மாதிரி தான் தோணுது. என்னடா சுத்தி சுத்தி இதே டைம்ல நிக்கறோம்.
கார்த்திக்: டேய் போன முறை எதுக்குடா கார எடுத்துட்டு வந்த?
தேவா: உன்ன தேடிதான்டா. உன்ன கூட்டிட்டு போக வந்தா நீ ஆட்டோல போன. அதான் உன்ன ஃபாலோ பண்ணிட்டு வந்தேன்.
கார்த்திக்: மச்சி நல்லா யோசி. நாம இந்த கார திருடி வந்த இதே டைம்ல தான் திரும்ப திரும்ப வரோம். அதாவது காலை 11.30. ஒரு நிகழ்வு நடக்கணும். ஆனா அது அப்படி நடக்காம நேர்மாறா நடக்குது. அதான் அப்படி நடக்கற வரைக்கும் திரும்ப திரும்ப இதே தருணத்துல வந்துட்டு இருக்கோம்.
தேவா: அப்போ ஒரு வேளை அந்த விபத்தை நடக்காம பண்ணிட்டா இது ரிப்பீட் ஆகாம இருக்குமோ?
கார்த்திக்: நீ சொல்ற மாதிரியும் இருக்கலாம். முயற்சி பண்ணுவோம். அந்த கார் டெம்போவில் மோதி தான் விபத்து நடக்குது. இப்போ டைம் 11.30. நாம வீட்டுக்கு போக 12.00. அந்த accident ஸ்பாட அடைய தோராயமா நாற்பது நிமிடம் ஆகுது. 12.40லேருந்து 12.45குள்ள விபத்து நடக்குது. அந்த நேரத்துல நாம அந்த கார மோதாம செஞ்சிட்டா இதே டைம்ல நாம திரும்ப வராம இருக்க வாய்ப்பு இருக்கு.
தேவா: மே பி. அந்த இடிச்ச காரை உனக்கு நியாபகம் இருக்கா?
கார்த்திக் இதுவரை நடந்ததை நினைவுகூர்ந்து, "அது ஒரு ஒயிட் கலர் ஸ்கார்பியோ" என்றான்.
தேவா: சரி வா. அந்த ஸ்பாட்டுக்கு போகலாம்.
மணி மதியம் 12.10.
அவர்கள் வண்டியை அங்கே ஓரமாக நிறுத்திவிட்டு காத்துக் கொண்டிருந்தனர். அந்த கார் வருவதை பார்த்த இவர்கள் அதன் முன்னால் சென்று மெதுவாக ஓட்டினார்கள். அவன் ஹார்ன் அடித்தான். ஆனால் இவர்கள் வழி விடாமல் ஒரு கணத்தில் ஸ்கார்பியோவின் முன்னால் வண்டியை நிறுத்தி விட்டனர்.
மணி மதியம் 12.43
அவன் பொறுமை இழந்து இறங்கி வந்து இவர்களை கண்டபடி திட்ட, இவர்கள் வண்டி சரி செய்வது போல் ஏதோ செய்து அடுத்த 3 நிமிடத்தை கடத்தினர்.
மணி மதியம் 12.46. எந்த விபத்தும் நடக்காமல் அந்த டூவீலர் கடந்து சென்றது. இவர்கள் உடனே வண்டியை உயிர்ப்பித்து அதை பின் தொடர்ந்தனர். அந்த வண்டி ஒரு மருத்துவமனையை நோக்கி செல்ல, திடீரென்று அங்கு ஒரு தெருவிலிருந்து வேறு ஒரு ஸ்கார்பியோ இவர்கள் பைக்கை மோத, அவர்கள் இருவரும் தூக்கி எறியப்பட்டனர். இவர்கள் காரில் மோதி இரத்த வெள்ளத்தில் கீழே வீழ்ந்து கிடந்தனர்.
மீண்டும் அதே காலை 11.30.
தேவா: டேய் என்னடா இவ்ளோ முயற்சி பண்ணியும் திரும்ப இங்கயே வந்துட்டோம்?
கார்த்திக்: மச்சி பிரச்சனை ஆரம்பிக்கிறது, நாம கார தூக்கிய உடனே அவன் வெளிய வரான். பரபரப்பு ஆகிறான். யார் கிட்டயோ ஃபோன் வாங்கி பேசி ஒருத்தர வர வெக்கறான். அப்புறம் 2 பேரும் பைக்ல ஒண்ணா போறாங்க. இது எல்லாம் நடக்க சுமாரா ஒரு முப்பது நிமிடம் ஆகுது. விபத்து நடக்குற இடம் நாம காரை தூக்கின இடத்துல இருந்து சுமார் பத்து நிமிஷம்.
இவங்க பதட்டமா போறதுகூட விபத்துக்கு ஒரு காரணம். மே பி அவனுக்கு மெடிக்கல் எமர்ஜென்ஸி இருக்கலாம். கைல ரிப்போர்ட், மெடிசின்ஸ் இருக்கு. அவனுக்கு அந்த மாத்திரைகள் இங்க தான் கிடைத்து இருக்கும். அதான் ஹாஸ்பிடல தாண்டி இவ்ளோ தூரம் வந்து இருக்கான்.
நாம காரை இங்க தூக்காம அவன் டெஸ்டிநேஷன் அடைந்ததும் அதாவது ஹாஸ்பிடல அடைந்ததும் தூக்கினா நாம இந்த டைம்ல திரும்ப வராம இருக்க வாய்ப்பு இருக்கு. அவன் இந்த காரோட அங்க போகணும் அது தான் நியதி (ப்ரீடெஸ்டிநேஷன்). அப்படி நடக்காம போனதால் தான் திரும்ப திரும்ப இந்த டைம்ல இருக்கோம்னு நினைக்கறேன்.
தேவா: அப்போ நாம இந்த கார தூக்க போறதில்லையா?
கார்த்திக்: இங்க இப்போ தூக்க போவதில்லை. ஆனா ஹாஸ்பிடல்ல வெச்சு தூக்க போறோம்.
கார் திருடப்படாமல் இருந்ததால், காரின் உரிமையாளன் அதை எடுத்து உடனே கிளப்பினான். அவர்கள் இருவரும் அந்த காரை ஒரு ஆட்டோவில் பின்தொடர்ந்து சென்றனர். பத்து நிமிடத்தில் அந்த விபத்து நடக்கும் பகுதியை எந்த விபத்தும் நேராமல் கடந்து சென்றனர். அப்போது மணி காலை 11.45. அவன் மருத்துவமனையை அடைந்தான்.
மணி மதியம் 12.00.
ரிப்போர்ட் மற்றும் மருந்துகளை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றான். இவர்களும் பின் தொடர்ந்தனர். கார் உரிமையாளனின் மகளுக்கு வைத்தியம் நடந்துக் கொண்டிருந்தது.
மணி மதியம் 12.05
அந்த மருந்தை வாங்கி அந்த சிறுமிக்கு செலுத்தினர். அந்த சிறுமி சற்று சீரடைந்தாள்.
டாக்டர்: "டோண்ட் ஒரி. ஷீ இஸ் ரெக்கவரிங்க். ஷு வில் பீ ஆல்ரைட். இந்த ஐவி (இன்ட்ராவீனல் - நரம்பு மூலம் செலுத்துதல்) முடிந்ததும் நர்ஸ் கிட்ட சொல்லுங்க" என்று கூறி விடைபெற்றார்.
கார்த்திக்கும், தேவாவும் வெளியே கார் அருகே வந்தனர்.
தேவா: மச்சி, நம்ம திரும்ப 11.30 க்கு போகல. அப்போ இது தான் நடக்க வேண்டியதா? இது மாறியதால் தான் நாம டைம் லூப்ல சிக்கினோமா?
கார்த்திக்: ஆமாம். இந்த கார்ல இந்த கார் ஓனர் மூலமா அந்த பொண்ணுக்கு மருந்து கிடைக்கணும். அது தான் நியதி அல்லது ப்ரீடெஸ்டிநேஷன். அத நடக்காம நாம காரை தூக்கினது இந்த நியதிய மாத்தி அமைச்சுடுச்சு. அதான் இந்த கார் மூலமா அதே டைம் லைன்ல திரும்ப திரும்ப வந்தோம்.
தேவா: அப்போ இது மேஜிக் காரா மச்சி. இது மூலமா நடக்க வேண்டிய நியதி நடந்துடுச்சு அதான் மருந்து அந்த பொண்ணுக்கு கிடைச்சு போச்சே.
கார்த்திக்: இன்னும் ஒரு நியதி நடக்கணும். நாம இந்த கார தூக்கணும். அதுவும் இப்போ நடந்துடும்.
தேவா: இப்பவே இங்கயேவா?
கார்த்திக்: "ஆமாம். அந்த பொண்ணு பிழைக்க தான் டைம் லூப் நடந்தது. இப்போ லூப் முடிஞ்சுது. இனிமே இந்த காருக்கு நாம தான் ஆதரவு. இந்த ஓனர் வெளிய வர இன்னும் இருபது நிமிடம் ஆகும். வா வேலைய முடிக்கலாம்" என்று சொல்லி விரைவில் அதை மீண்டும் திருடிக்கொண்டு சென்றனர்.
இப்போது மணி மதியம் 12.20
தேவா: மச்சி சரக்கு வாங்கிட்டு போகணும். மறந்துடாதே.
கார்த்திக்: ஓகே டா ஓகே. ஏன் டிராஃபிக் மெதுவா மூவ் ஆகுது?
என்று அவர்கள் செல்லும் போது சிகப்பு சிக்னல் விழுந்தது. அறுவது நொடிகள் முடிந்ததும் பச்சை சிக்னல் மாறியது. அவர்கள் காரை நகர்த்த, நொடிப்பொழுதில் இடதுபுறத்தில் இருந்து வேகமாக ஒரு ஸ்கார்பியோ இவர்கள் காரை இடித்து இருவரும் காரில் சரிந்தனர். இப்போது மணி மதியம் 12.45.
இவர்கள் இந்த காரில் மோதி விபத்துக்குள்ளாக வேண்டியதும் ஒரு நியதி (ப்ரீடெஸ்டிநேஷன்).
நன்றி....
- பிரபு
நண்பன் என்பான்
தூளியினின்று வெளி வந்ததும் கிடைப்பான்
தொடர்ந்து வாழ்நாள் முழுதும் வருவான்
தோளில் கை போடும் முதல் உறவும் இவன்
"தோப்பில் மாங்காய் திருடுவோம்" என்பவன்
ஆளில்லா இடம் வர அழைப்பு அது விடுப்பான்
அத்தனை தீயவையும் சொல்லிக் கொடுப்பான்
*வாளியாய் துயர் கேட்டு வருவான் விரைந்து
வாய்ப்பு வர விளிப்பான் காகமாய் கரைந்து
மீள முடியாக் காதல் *ஆழியில் தள்ளுவான்
மிதந்து வரும் என் முத்தையும் அள்ளுவான்
காளியாய் தன் மனைவி கண்டித்த போதும்
காணாமல் இரான் என்னை ஒரு நாளும்
கேளிக்கை அவனின்றி களை கட்டாது ஏதும்
கிட்டத்தட்ட அவனும் என் மனைவியே ஆகும்
தாளிப்பாம் நம் வாழ்வில் தோழன் என்பான்
தவிர்க்க முடியாது குகன், கர்ணன் அன்னான்.
* வாளி -- அம்பு
* ஆழி -- கடல்
__. குத்தனூர் சேஷுதாஸ் 2/8/2026
🌹ஆடி 18 ஆம் நாளில்
" ஆடிப் பெருக்கு " நிகழவே
நடந்து வரும் காவிரியில்
கடந்து வந்தது " நீர்ப் பெருக்கு "
ஆடிப்பாடி மகிழ்ந்த
ஆடவரும் பெண்டிரும்
ஆர்வம் மிகு சிறுவர்களும்
ஆற்றுப் புதிய புனல் தொட்டு,
ஆரத்தி எடுத்து வணங்கி,
ஆனந்தமாய்க் கூடி மகிழ்ந்து கொண்டாடும்
ஆடிப்பெருக்கு விழாவை
ஆவலுடன் வரவேற்போமாக 🌹
நன்மை செய் நன்செயும்
புன்மை செய் புன்செயும்
கொஞ்சி விளையாடும்
தஞ்சை சூழ் பசுமை -- அன்று 👌
நம்மைக் காக்க, நலம் தரும் வருணன்
நம்பொருட்டு, அங்கு பொழிய......
கள்ளத்தனம் புரிந்த கருநாடகா
வெள்ளத்திற்குப் பயந்து அணையைத்
திறந்து விட்டதையா..... பாரீர் !
மறந்தும் மாறிடாதீர், இயற்கைக்கு மாறாக !
ஆகையால்,
🌴 நடுவோம்! ☔️ பெறுவோம்!!
- ராஜா முஹம்மது
*சீயக்காயும் அப்பமும்*
வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்து சாயங்காலம் பாகி மாமி வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.
சன்னமான குரலில் மாமி ,
"கோந்தே, கொஞ்சம் கடைத் தெருக்கு போயிட்டு வரியா, பட்சணம் தரேன்"
விளையாட இன்னும் யாரும் வரவில்லை ஆதலால், வேடிக்கை பார்த்துக் கொண்டே போய் வரலாம் என்று எண்ணி,
"சரி மாமி"
"2006 சீயக்காய் 2 பாக்கெட் வாங்கிட்டு வா"
"2006 இல்லன்னா புலி மார்க் வாங்கவா?"
"இல்லன்னா பக்கத்து கடையில கேளு"
எங்கேயுமே இல்லன்னா, வீட்டுக்கு வந்துரணுமோ என்று எண்ணி, அடுத்த கேள்வியைக் கேட்கலாமா,வேண்டாமா என்ற குழப்பத்திலேயே நின்றேன். கடைசியில், 2006 கிடைக்கும் என்று சமாதானப்படுத்திக் கொண்டேன்.
காசு வாங்கிக் கிளம்பும் போது, கோபியும் வந்து சேர்ந்து கொண்டான்.
வாங்கிக் கொண்டு வந்து, மீதி சில்லறை யை சரியாக கொடுத்துக் கிளம்பும் போது,
"சித்த இருங்கோ, தோ வர்றேன்"
ஆளுக்கொரு அப்பம் கிடைத்தது.
"இங்க உக்காண்டு சாப்பிடுங்கோ" என்று ஒரு செம்பில் தண்ணீரும் வைத்தார்.
அப்பத்தின் மணம் என்னமோ செய்தது.
கோபி, ஒரு கடியில் மயங்கினான்.நானோ அதன் மணத்திலேயே கிறங்கினேன்.
கோபி, ஒரு நாற்காலியில் தலைகீழாக படுத்துக் கொண்டே காலை சுவற்றின் மீது வைத்தவாறு வியாபித்திருந்தான், அப்பத்தில் ஒரு பிறையளவு காணாமல் போயிருந்தது.
நானோ, குளிர்ந்த தரையில் கன்னம் பதித்து அப்பத்தை மூக்கினருகே வைத்தவாறு அதன் மணத்தில் கண் சொக்கிப் படுத்திருந்தேன்.
அப்போது வாசலில் நிழலாடியது; கைவிரலால் கம்பியிடுக்கின் வழி தாழ்ப்பாள் திறந்து, வெள்ளை உடையில், ஒருவர் உள்ளே வந்தார்.
நான் தலைதூக்கி ஏறிட்டுப் பார்த்தேன்.
கச்சிதமான உடை, சாந்தமான முகம், லேசான புன்முறுவலுடன் கடந்தார்.
அவருக்கு வழிவிடும் விதமாக, காலால் ஒரு அரைவட்டம் போட்டு ஒரு சுற்று சுற்றினேன்.
க்ஷணப் பொழுதில் தண்ணீர் செம்பு குடை சாய்ந்தது.
அப்போது அவர் "மெதுவாப்பா" என்று மெதுவாகவே சொன்னாலும், கோபியும் நானும் நிஷ்டை கலைந்து அட்ரீனலின் "ஓடுங்கடா" என்று உசுப்பேற்ற பயந்து, தெறித்து வீட்டிற்கு ஓடினோம்.
ஹ்ம்ம்…! தார்மீக பயம்.. அது ஒரு காலம்!!!
ஒரு இம்மிக் கடியில்லாத முழு அப்பத்தைப் பார்த்ததுமே,
"யாரு தந்தா?" என வினவினாள் என் அக்கா.
"நான் கடைக்குப் போயிட்டு வந்தேன், பாகிமாமி தந்தாங்க. யார்ட்டயும் சொல்லாத, நான் அவங்க வீட்ல தண்ணி கொட்டி செம்பு ... " பயத்தில் உளறிக் கொட்டினேன்.
"அம்மாடி!! அவர் தான் ராமையா சார், கணக்கு வாத்தியார்,அப்பண்ணா ஒரு துண்டு தா"!! என்று பயங்காட்டினாள்.
கனத்த மனதுடன், ஓரத்தில் இருந்த ஒரு பொறுக்கைப் பிய்த்துக் கொடுத்து,
"ம் பொறுக்கு தான் நல்லா இருக்கும்" சலித்துக் கொண்டேன்.
"இன்னும் கொஞ்சம் தா"
ராமையா சார் ரொம்ப அன்பாகத் தானே பேசினாங்க, என்று ஒரு தைரியம் வந்தது. பொறுத்தது போதும் பொங்கி எழு என்று, ஒரே வேகத்தில் அப்பத்தை அமுக்கினேன்.
"எம்மா, *திருவை* எங்கியோ வாங்கித் தின்னுட்டு வந்திருக்கான்" என்று போட்டு விட்டாள்.
திருவை என்பது, ஒரு கைஅரவை இயந்திரம் . என் வாய் எந்த பண்டத்தையும் அரைத்துத் தள்ளும் திறன் கொண்டது என்று நம்பினாள், என் அக்கா. எனது பெயரும் பொருத்தமாயிற்று.
அம்மா வந்து என்ன ஏது என்று விசாரித்து விட்டு, "உதவி செய், ஆனா
இனிமேல் இப்படி வாங்கக் கூடாது" என்று கண்டித்தார்.
"சரி" மண்டையை ஆட்டினேன்.
அப்பத்தின் கைமணம் கரையாமல் இருக்க, எதையுமே தொடாமல், அக்குள் புண் ஆறாமல் இருப்பவன் போல், கையைத் தள்ளியே வைத்திருந்தேன். அவ்வப்போது, நுகர்ந்து மகிழ்ந்தேன்.
இரவு தூங்கும் போதும் கையைப் போர்வைக்கு வெளியே தள்ளியே வைத்திருந்தேன்.
"எம்மா! நெய் வாசனைக்கு எலி வருமா?"
அக்கா சிரித்தாள்.
திடுக்கிட்டுப் பதறி எழுந்தேன்; பின்னர், கையை நன்றாகக் கழுவிவிட்டு வந்து படுத்தேன்.
மறுநாளே சோதனை வந்தது.
காலையில் பாகிமாமி வீட்டு வாசலில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தோம்.
"கோந்தே" மாமி கூப்பிட்டார்.
அங்கு ஏழெட்டு பொடியர்கள் இருந்தாலும், நான் தான் கொஞ்சம் பெரிய பொடியன்!
"விளையாடிட்டு கடைக்குப் போயிட்டு வர்றியா !!"
பக்கத்தில் ஐயா நாற்காலியில் அமர்ந்து செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்தார்.
"சரி மாமி, ஆனா பட்சணம் ஏதும் வேண்டாம்", என்றேன் தலையை ஒருபக்கமாக சாய்த்து.
மாமி சிரித்தார்.
"இன்னிக்கு இல்லடா கண்ணா" .
"குறும்புடா" என்று ஐயாவும் சிரித்தார்.
பக்கத்தில் நின்று கொண்டிருந்த கண்ணனும் க்ளுக்கென்று சிரித்துவிட்டான்.
டேய் உனக்கென்னடா புரிஞ்சது?? அய்யய்யோ!! எனது தியாகம் இப்படி பல்பு ஆகிவிட்டதே. நான் ஏதோ, பட்சணம் வேண்டும் என்று ஞாபகப் படுத்திக் கேட்பது போல அல்லவா ஆகிவிட்டது!!!
- திரு
--------------------------++++ ----------------------------
சும்மா கிடந்த ரிமோட்டெடுத்து
விடியும்முன்னே டீவியப் போட்டு
தட்டு நிறைய குமிச்சு வச்சு
சோத்து மலைமேல பாத்தி கட்டி
சாம்பார் தயிரைப் பிரிச்சு விட்டு
தகுந்த முறையில் தண்ணீர் விட்டு
வயிறு வளர்ந்திருக்கு நல்லா வீடு வெளங்கிருக்கு
வயிறு வளர்ந்திருக்கு நல்லா வீடு வெளங்கிருக்கு!!
அட! வீடு வெளங்கியென்ன மச்சான்
நமக்கு வாயும் வயிறுந்தானே பக்கம்
வாயும் வயிறுந்தானே பக்கம்!
வீடு வெளங்கியென்ன மச்சான்
நமக்கு வாயும் வயிறுந்தானே பக்கம்
வாயும் வயிறுந்தானே பக்கம்!
வீடு வெளங்கட்டும் பொண்ணே- நமக்கு
புள்ள இருக்குது கண்ணே
புள்ள இருக்குது கண்ணே!
வீடு வெளங்கட்டும் பொண்ணே- நமக்கு
புள்ள இருக்குது கண்ணே
புள்ள இருக்குது கண்ணே!!
வாழப் பழகி கூடிக் குலாவி
ஆரத் தழுவி அன்பு பெருகி
வாழப் பழகி கூடிக் குலாவி
ஆரத் தழுவி அன்பு பெருகி
சீராடும் சீமாட்டிகள் வாழ்வினில்
பட்ட கடன் இனி மாறும் - அந்த
இல்லம் மலருமே நாளும்
இல்லம் மலருமே நாளும்
அவர் பட்ட கடன் இனி மாறும் -அந்த
இல்லம் மலருமே நாளும்
இல்லம் மலருமே நாளும்!
அட! வீடு வெளங்கியென்ன மச்சான்
நமக்கு வாயும் வயிறுந்தானே பக்கம்
வாயும் வயிறுந்தானே பக்கம்!
வீடு வெளங்கட்டும் பொண்ணே- நமக்கு
புள்ள இருக்குது கண்ணே
புள்ள இருக்குது கண்ணே!
ஆளப் பிறந்தவர் வாழ்க்கையிலே
தள் ளாடிவந்திடக் காரணம் என்ன மச்சான்?
அவர் ஓடிய பாதைகள் எங்கேயுமே
சேராததால் வந்த தொல்லையடி!
கொஞ்சும் குழந்தைகள் வாழ்வதற்கு
இனி பண்ண வேண்டியது என்ன மச்சான்?
தினம் கொஞ்சிக் கொஞ்சிக் கொண்டு
கஞ்சி கொடுக்காமல்
சிந்திக்கச் சொல்லவேணுமடி!
வேடிக்கை தரும் இன்பங்களை
இன்னும் தட்டிப் பறிப்பது
மோசமன்றோ?
புதர் மூடிக் கிடந்த மனை சிறக்குது
வைபோகம் வீட்டிலே ஆகுமடி- இனி
வைபோகம் வீட்டிலே ஆகுமடி!!
அட! வீடு வெளங்கியென்ன மச்சான்
நமக்கு வாயும் வயிறுந்தானே பக்கம்
வாயும் வயிறுந்தானே பக்கம்!
நாளை போடப் போறேன் சட்டம்
உனக்கு உண்மை விளங்கிடும் திட்டம்
வீடு நலம்பெறும் திட்டம்!!
உண்மை விளங்கிடும் திட்டம்
வீடு நலம்பெறும் திட்டம்!!
உண்மை விளங்கிடும் திட்டம்....
வீடு நலம்பெறும் திட்டம்!!!!!!
- திரு
வீடு!
திண்ணையும் தென்னையும் பேசும்!
தெருவில் தேன் சிட்டு விளையாடும்!
தெற்கு தெரு வடக்கு தெரு என்று திசை பேசும்!
தெரிந்தவர் தெரியாதவரும்
தாகம் என்றால் வற்றாத இளநீரும் மோரும்!
வற்றிப்போன வத்தல்களும்! ஊரிப்போன ஊறுகாய் ஜாடிகளும்!
வக்கனையா சாப்பிட்டு வளர்ந்த வயிற்றை தாலாட்ட கையிற்று கட்டிலும் !
மழையில், செந்நிற ஓட்டின் வாசமும்!
வெயிலிலும் மணம் வீசும் வெங்காய வடகமும்!
காற்றுப்புகாத அறைவீடும்!
அதில் சேர்ந்த முறுக்குக்களும், நொறுக்குகளும்!
மங்கி போன நேரத்தில் மங்களமான பாட்டும்!
ஜோடி போட்டு நடக்கும் டபரா செட் காபிகளும்!
மாடகுழிகளில் மணி மணியாக எரியும் விளக்கும்!
வாடைப்பொழுதில் நந்தியாவின் புன் முறுவலும்,
விளக்கின் உச்சி முதல் பாதம் வரை மாலையாக மாறினதும்!
மீந்து போன மதிய சோறு நிலா சோறு ஆனதும்!
கையிலே உருண்டைகளும் காதிலே கதைகளும்!
30 40 நட்சத்திரங்கள் எண்ணுவதும்!
வானொலியின் இரவின் மடியிலும்!
சின்ன சின்ன தலைகள் உறவின் மடியிலும்!
சிறு மொட்டும் தொட்டிலில்,தாலாட்டு மெட்டில் அழகாக கண்ணுரங்கும்!!
ஆனால் இன்றோ, வீடு தனிமை பட்டது! வெவ்வேறு பட்டினப் பிரதேசத்தால் வறுமை பட்டது!
உறவுகள் கட்டின கூடும் பழமை பட்டது!
துரிதமாக செல்லும் உயிரே உறவே கொஞ்சம் திரும்பி பாராய்!
துயில் கொண்டாயோ! கொஞ்சம் எழுந்து வாராய்!
இது நிழல் அல்ல நிஜம்!
- ,தேவி அருண்
_கவிதை எழுதியவர்
தேவி அருண்_
உலக "தாய்ப்பால் வாரம்" (ஆகஸ்ட் 1 முதல் 7வரை)
வாய் திறந்து அழுதவாறே குழவியது பிறக்கும்
வள்ளலாம் பெண்மையில் பாலும் சுரக்கும்
ஆய்ந்து பலமுறை பின்னர் தந்ததோ இயற்கை !
ஆடவரைத் தவிர்த்து பெண்மைக்கு இப் பொறுப்பை
சேயது அருந்தும் முதல் அமுதம் அது
செயற்கையே மற்றவை நாம் தருவது
நோய் எதிர்ப்புச் சக்தி அதில் நிறைய உண்டாம்
நுண் கிருமிகள் தோற்று மண்ணைக் கவ்வுமாம்
ஓயாமல் பால் சுரக்க பெண்ணில் ஊற்றுக்கண்
ஓரவஞ்சனையே ஆணின் மார்பில் இரு புண்
தேய்ந்து போம் இளமை என எண்ணுமோ தாய்மை ?
தெய்வம் குழவிக்குத் தரச் சொன்ன அக் கொடை
பாய்ந்து வரும் வெள்ளம் நேரே தாயன்பு
பல பிறவி எடுத்தும் "பால் கடன்" தீராது
தாய்ப்பால் தருவதால் பெண்ணுக்கும் நன்மை
தழைக்கும் ஆரோக்ய மனித குலம் உண்மை.
__. குத்தனூர் சேஷுதாஸ் 1/8/2026
••••••••••••••••••••••••••••••••
*{32} சிலம்பொடு ஒரு பயணம்*
*இந்திர விழவு ஊர் எடுத்த காதை*
*இந்திர விழா துவங்கியது*
••••••••••••••••••••••••••••••••
ஐம்பெரும் மன்றங்கள் பற்றி அழகாக கூறி வந்த அடிகள் கால்கோள் விழா நடந்த நிகழ்வை நாம் கண்முன்னே கொண்டு வந்த நிறுத்துகிறார் அருமையாக.
மங்கல முரசு அறைந்து இந்திர விழா துவங்குதல் பற்றிய பாடல்களை பார்ப்போம்
*வச்சிரக் கோட்டத்து மணம் கெழு முரசம் கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி,*
*வால் வெண் களிற்று-அரசு வயங்கிய கோட்டத்து, கால்கோள், விழவின், கடைநிலை, சாற்றி*
இந்திரனின் வச்சிரப்படை இருக்கும் கோயில் வச்சிரக் கோட்டம். அதில் இருக்கும் முரசம் கச்ச ஒப்பனை செய்யப்பட்ட - அழகாக அலங்கரிக்கப்பட்டஅக் கோயில் யானையின் பிடரியில் ஏற்றி முரசு அறைந்து விழா பற்றி அறிவிப்பு செய்யப்பட்டது.
வெள்ளை யானை அரசன் இந்திரன், அவனுக்கு விழா. அவனுக்கு விழா தொடங்கும் நாள் இது. விழா முடியும் நாள் இன்ன நாள் - என்று சொல்லி முரசு அறையப் பட்டது.
அதன்பின் என நடந்தது!
*தங்கிய கொள்கைத் தரு நிலைக் கோட்டத்து, மங்கல நெடுங் கொடி வான் உற எடுத்து*
தரும் தகைமை கொண்ட கற்பக மரம் காவல் மரமாக நின்றிருக்கும் இந்திரன் கோயிலில் மங்கலக் கொடி விண்ணை உரசும் படி பறக்க விடப்பட்டது.
*அசையும் கொடிகள் உயரும் உயரும் நிலவின் முதுகை உரசும்* என்கின்ற இக்காலத் திரைப்படப் பாடல் வரிகளை நினைவு படுத்துகின்றன அல்லவா இவ் வரிகள்!
இந்திர விழா துவங்குவதை இவ் வரிகளில் குறிப்பிட்ட அடிகள் அந்நகரத்து வீடுகளும் வீடுகள் இருந்த வீதிகளும் எவ்வாறு அலங்கரிக்கப்பட்டிருந்தன என்பதையும் அருமையாக விவரிக்கிறார்:
*மரகதமணியொடு வயிரம் குயிற்றி, பவளத் திரள் கால், பைம் பொன் வேதிகை, நெடு நிலை மாளிகைக் கடைமுகத்து யாங்கணும்,*
*கிம்புரிப் பகுவாய்க் கிளர் முத்து ஒழுக்கத்து, மங்கலம் பொறித்த மகரவாசிகைத்தோரணம் நிலைஇய,தோம்*
*அறு பசும் பொன் பூரண கும்பத்து, பொலிந்த பாலிகை,*
*பாவை விளக்கு, பசும் பொன் படாகை, தூ மயிர்க் கவரி, சுந்தரச் சுண்ணத்து, மேவிய கொள்கை வீதியில் செறிந்து-ஆங்கு*
மரகத மணி, வைரம், பவளம் முதலானவை பதிக்கப்பட்ட வேலைப் பாட்டுடன் கூடிய தூண்கள் இருக்கும் திண்ணைகளைக் கொண்ட மாளிகை வீடுகளின் வாயிலில் ஒப்பனைகள் செய்யப் பட்டிருந்தன. (மாளிகை வீடுகளின் வாயில் திண்ணையிலே இப்படி வைர வைடூரியங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்ததை கேட்கவே மலைப்பாக உள்ளதே!)
ஆடி ஒலி எழுப்பும் கிம்புரிப் பகுவாய்
ஒளி வீசும் முத்து மாலைகள்
மங்கலச் சின்னம் பொறித்து மீன் வாய் போலத் தோன்றும் மகர வாசிகைத் தோரணம் கட்டப் பட்டிருந்தனவாம்.
அங்கெல்லாம் நீர் நிறைந்த பொற் குடங்கள்
முளைப் பாலிகை
பாவை விளக்கு
பசும்பொன்னால் ஆன கொடி (பட்டுத்துணிக் கொடி)
மயிரால் செய்யப்பட்ட கவரி-விசிறி,
மணம் பரப்ப தூவும் அழகிய சுண்ணாம்பு பொடிகள்
முதலானவை வீட்டுக்கு வெளியில் தெருவில் வைக்கப் பட்டிருந்தனவாம்.
இவ் வரிகளை படிக்கையிலேயே நம் கண் முன்னே கோலாகல கொண்டாட்ட வீதிகள் தெரிகின்றன அல்லவா!
*ஶ்ரீவி*
(இனி தொடர்வது மோகன் ஐயா)
ஐயா, நீங்கள் ,
மங்கல நெடுங்கொடி பற்றியும், வீதியின் பொலிவு பற்றியும் அழகாக சொற்சித்திரங்கள் தீட்டினீர்.
இனி இந்திரனை நீராட்டிய பாங்கைக் காண்போம்.
*ஐம்பெருங்குழுவும் எண்பேர் ஆயமும்அரசகுமரரும் பரத குமரரும் கவர்ப்பரிப் புரவியர் களிற்றின் தொகுதியர் இவர்ப் பரித்தேரினர் இயைந்து ஒருங்கு ஈண்டி"*
ஐம்பெருங்குழுவும், எண்பேராயமும் அரசனுக்கு நல்லாட்சி புரிய அருந்துணை புரியும் அமைப்புகள். இவைகளில் பணி புரிவோரும்,
அரச குமாரர்களும்வணிகப் பெருமக்களும், அலங்கரிக்கப்பட்ட குதிரைகள் மேலும் , யானைகள் மேலும், விரைந்து செல்லும் குதிரைகள் பூட்டிய தேர்கள் மீதும் அமர்ந்து ஒன்று திரண்டு வந்தனர். சமூக வேறுபாடுகளோ " முக்கிய பிரமுகர்"( VIP) கலாசாரமோ இல்லாத சமத்துவக் கொண்டாட்டம்! அவ்விழா நாட்களில் எல்லோரும் அந்நாட்டு மன்னர்கள்தாம்! மன்னராட்சியில் பின்னிப் பிணைந்த ஐனநாயகம்!
நம்அரசர் மேலும் மேன்மை அடைய வேண்டும் என ,புகார் நகரின் அப்பக்கத்தில்கூடி"உரைசால் மன்னன்
கொற்றம்கொள்க" -பெரும்புகழ் கொண்ட கொற்றவன் சிறப்பாக ஆட்சி செய்க , என வாழ்த்தினர்.
இந்திர உருவை நீராட்ட நீர் எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது!
ஆயிரத்தெட்டுத் தலை கொண்ட ஆதிசேடன் உலகைத் தாங்கிக் காப்பது போல
தன் வளத்தால் நாட்டை ஊட்டிக் காக்கும் காவிரித் தாயின் நீர் . எப்படிப்பட்ட நீர்?
*"தண்நறுங் காவிரித் தாதுமலி பெருந்துறைப் புண்ணிய நல்நீர்"-* குளிர்ந்த பூக்களின் நறுமணம் வீசும் நல்ல நீர். சுத்திகரிப்பு நிலையங்கள் தேவைப்படாத " புண்ணிய" நீர்.
பொற் குடங்களில் இந்நீரை நிரப்பி மண்ணுலகம் மருள, விண்ணுலகம் வியக்க விண்ணவர் தலைவனை நீராட்டினர்.
*மோகன்*
(பயணம் தொடரும்..)
காத்திருப்பு!
எவ்வளவு நேரம் தான் புத்தகச்சாவியை வைத்திருப்பாய்!
கொஞ்சம் சத்தமாக படிக்கலாமே! எங்கள் அககதவும் திறந்து காற்று வரும் பொழுது தூற்றி கொண்டு, எங்கள் அறிவும் நீரூற்றாய் பெருகுவதை நாங்கள் எப்பொழுது பறைசற்றுவது?
- தேவி அருண்
===================
*என் புரிதல்*
பூட்டு என்பது அடைப்பதற்கானது. ஆனால் திறந்து கிடக்கும் புத்தகம்தான் மனதைத் திறக்கும் திறவுகோல்.
மூவரில் இருவர் தங்களைத் தாங்களே மனக்கதவுக்குள் பூட்டிக்கொண்டு அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள்முன் திறந்து கிடக்கும் அறிவுலகை அவர்கள் பார்க்கவே விரும்பவில்லை.
மூன்றாவது நபர் மட்டும் புத்தகத்தைத் திறந்து வாசிக்கிறார். அதனால் அவருடைய அறிவும் விரிகிறது.
வாழ்க்கையில் பல வாய்ப்புகள் இப்படித்தான். அவை நம்மைத் தேடி வந்தாலும், நாம் முன்வந்து அதை ஏற்றுக்கொண்டால்தான் அதன் பயன் கிடைக்கும்.
வாசிப்பு வட்டம்,
தமிழ்ச்சங்கம்,
நூலகம்,
பயிற்சி வகுப்புகள்
போன்றவை அனைத்தும் *திறந்து கிடக்கும் புத்தகங்களைப் போன்றவை.* அவற்றில் இணைய மறுப்பது, யாரோ பூட்டியதால் அல்ல, *நாமே நமக்குள் போட்டுக் கொண்ட மனப்பூட்டால்தான்.*
- தியாகராஜன்
===================
புத்தகங்கள்
புத்தகங்கள்...
மனங்களைத் திறக்கும்
மாயத் திறவுகோல்கள்.
மூடநம்பிக்கையின்
பூட்டுகளை உடைக்கும் திறவுகோல்கள்.
குறுகிய சிந்தனையின்
கதவுகளைத் தகர்க்கும் திறவுகோல்கள்.
அறியாமை என்ற
இருளறையின் பூட்டை
திறந்து வெளிச்சம் காட்டும்
அற்புதத் திறவுகோல்கள்.
ஜாதி, மதம், மொழி, இனம்
என மனிதன் கட்டிய
சுவர்களைக் கூட
சிதறடிக்கும் திறவுகோல்கள்.
காலத்தை வென்ற
ஐம்பெரும் காப்பியங்களையும்,
அறிவியலின் அற்புதப் படைப்புகளையும்
தலைமுறை தலைமுறையாக
மனிதகுலத்திடம்
சேர்த்துவைத்த
அழியாத திறவுகோல்கள்.
இந்த ஓவியத்தைப் பார்த்தபோது...
திடீரென
என் பார்வை
என் வீட்டின் புத்தக அலமாரியைத் தேடியது.
அது...
இன்னும் பூட்டியே இருந்தது.
அந்தக் கணத்தில்
தேட ஆரம்பித்தேன்...
அலமாரியின் திறவுகோலை மட்டும் அல்ல...
என் மனதை
இன்னும் அதிகம் திறக்கும்
புத்தகங்களையும்.
- லதா
===========
மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel சுட்டி : youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...