*சீயக்காயும் அப்பமும்*
வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்து சாயங்காலம் பாகி மாமி வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.
சன்னமான குரலில் மாமி ,
"கோந்தே, கொஞ்சம் கடைத் தெருக்கு போயிட்டு வரியா, பட்சணம் தரேன்"
விளையாட இன்னும் யாரும் வரவில்லை ஆதலால், வேடிக்கை பார்த்துக் கொண்டே போய் வரலாம் என்று எண்ணி,
"சரி மாமி"
"2006 சீயக்காய் 2 பாக்கெட் வாங்கிட்டு வா"
"2006 இல்லன்னா புலி மார்க் வாங்கவா?"
"இல்லன்னா பக்கத்து கடையில கேளு"
எங்கேயுமே இல்லன்னா, வீட்டுக்கு வந்துரணுமோ என்று எண்ணி, அடுத்த கேள்வியைக் கேட்கலாமா,வேண்டாமா என்ற குழப்பத்திலேயே நின்றேன். கடைசியில், 2006 கிடைக்கும் என்று சமாதானப்படுத்திக் கொண்டேன்.
காசு வாங்கிக் கிளம்பும் போது, கோபியும் வந்து சேர்ந்து கொண்டான்.
வாங்கிக் கொண்டு வந்து, மீதி சில்லறை யை சரியாக கொடுத்துக் கிளம்பும் போது,
"சித்த இருங்கோ, தோ வர்றேன்"
ஆளுக்கொரு அப்பம் கிடைத்தது.
"இங்க உக்காண்டு சாப்பிடுங்கோ" என்று ஒரு செம்பில் தண்ணீரும் வைத்தார்.
அப்பத்தின் மணம் என்னமோ செய்தது.
கோபி, ஒரு கடியில் மயங்கினான்.நானோ அதன் மணத்திலேயே கிறங்கினேன்.
கோபி, ஒரு நாற்காலியில் தலைகீழாக படுத்துக் கொண்டே காலை சுவற்றின் மீது வைத்தவாறு வியாபித்திருந்தான், அப்பத்தில் ஒரு பிறையளவு காணாமல் போயிருந்தது.
நானோ, குளிர்ந்த தரையில் கன்னம் பதித்து அப்பத்தை மூக்கினருகே வைத்தவாறு அதன் மணத்தில் கண் சொக்கிப் படுத்திருந்தேன்.
அப்போது வாசலில் நிழலாடியது; கைவிரலால் கம்பியிடுக்கின் வழி தாழ்ப்பாள் திறந்து, வெள்ளை உடையில், ஒருவர் உள்ளே வந்தார்.
நான் தலைதூக்கி ஏறிட்டுப் பார்த்தேன்.
கச்சிதமான உடை, சாந்தமான முகம், லேசான புன்முறுவலுடன் கடந்தார்.
அவருக்கு வழிவிடும் விதமாக, காலால் ஒரு அரைவட்டம் போட்டு ஒரு சுற்று சுற்றினேன்.
க்ஷணப் பொழுதில் தண்ணீர் செம்பு குடை சாய்ந்தது.
அப்போது அவர் "மெதுவாப்பா" என்று மெதுவாகவே சொன்னாலும், கோபியும் நானும் நிஷ்டை கலைந்து அட்ரீனலின் "ஓடுங்கடா" என்று உசுப்பேற்ற பயந்து, தெறித்து வீட்டிற்கு ஓடினோம்.
ஹ்ம்ம்…! தார்மீக பயம்.. அது ஒரு காலம்!!!
ஒரு இம்மிக் கடியில்லாத முழு அப்பத்தைப் பார்த்ததுமே,
"யாரு தந்தா?" என வினவினாள் என் அக்கா.
"நான் கடைக்குப் போயிட்டு வந்தேன், பாகிமாமி தந்தாங்க. யார்ட்டயும் சொல்லாத, நான் அவங்க வீட்ல தண்ணி கொட்டி செம்பு ... " பயத்தில் உளறிக் கொட்டினேன்.
"அம்மாடி!! அவர் தான் ராமையா சார், கணக்கு வாத்தியார்,அப்பண்ணா ஒரு துண்டு தா"!! என்று பயங்காட்டினாள்.
கனத்த மனதுடன், ஓரத்தில் இருந்த ஒரு பொறுக்கைப் பிய்த்துக் கொடுத்து,
"ம் பொறுக்கு தான் நல்லா இருக்கும்" சலித்துக் கொண்டேன்.
"இன்னும் கொஞ்சம் தா"
ராமையா சார் ரொம்ப அன்பாகத் தானே பேசினாங்க, என்று ஒரு தைரியம் வந்தது. பொறுத்தது போதும் பொங்கி எழு என்று, ஒரே வேகத்தில் அப்பத்தை அமுக்கினேன்.
"எம்மா, *திருவை* எங்கியோ வாங்கித் தின்னுட்டு வந்திருக்கான்" என்று போட்டு விட்டாள்.
திருவை என்பது, ஒரு கைஅரவை இயந்திரம் . என் வாய் எந்த பண்டத்தையும் அரைத்துத் தள்ளும் திறன் கொண்டது என்று நம்பினாள், என் அக்கா. எனது பெயரும் பொருத்தமாயிற்று.
அம்மா வந்து என்ன ஏது என்று விசாரித்து விட்டு, "உதவி செய், ஆனா
இனிமேல் இப்படி வாங்கக் கூடாது" என்று கண்டித்தார்.
"சரி" மண்டையை ஆட்டினேன்.
அப்பத்தின் கைமணம் கரையாமல் இருக்க, எதையுமே தொடாமல், அக்குள் புண் ஆறாமல் இருப்பவன் போல், கையைத் தள்ளியே வைத்திருந்தேன். அவ்வப்போது, நுகர்ந்து மகிழ்ந்தேன்.
இரவு தூங்கும் போதும் கையைப் போர்வைக்கு வெளியே தள்ளியே வைத்திருந்தேன்.
"எம்மா! நெய் வாசனைக்கு எலி வருமா?"
அக்கா சிரித்தாள்.
திடுக்கிட்டுப் பதறி எழுந்தேன்; பின்னர், கையை நன்றாகக் கழுவிவிட்டு வந்து படுத்தேன்.
மறுநாளே சோதனை வந்தது.
காலையில் பாகிமாமி வீட்டு வாசலில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தோம்.
"கோந்தே" மாமி கூப்பிட்டார்.
அங்கு ஏழெட்டு பொடியர்கள் இருந்தாலும், நான் தான் கொஞ்சம் பெரிய பொடியன்!
"விளையாடிட்டு கடைக்குப் போயிட்டு வர்றியா !!"
பக்கத்தில் ஐயா நாற்காலியில் அமர்ந்து செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்தார்.
"சரி மாமி, ஆனா பட்சணம் ஏதும் வேண்டாம்", என்றேன் தலையை ஒருபக்கமாக சாய்த்து.
மாமி சிரித்தார்.
"இன்னிக்கு இல்லடா கண்ணா" .
"குறும்புடா" என்று ஐயாவும் சிரித்தார்.
பக்கத்தில் நின்று கொண்டிருந்த கண்ணனும் க்ளுக்கென்று சிரித்துவிட்டான்.
டேய் உனக்கென்னடா புரிஞ்சது?? அய்யய்யோ!! எனது தியாகம் இப்படி பல்பு ஆகிவிட்டதே. நான் ஏதோ, பட்சணம் வேண்டும் என்று ஞாபகப் படுத்திக் கேட்பது போல அல்லவா ஆகிவிட்டது!!!
- திரு
--------------------------++++ ----------------------------
No comments:
Post a Comment