Friday, March 27, 2026

அந்த கால காபி ஹோட்டல்:/கிளப் (II)

இன்றும் தோசை மாஸ்டரின் தோழன் விளக்குமாறும் ஒரு எவர்சில்வர் கப்பும் !!

கைமுறையில் செய்யும் தோசையே மேலும் உண்ண ஆசையைத் தூண்டும். ஐசிஐசிஐயில், வங்கியும் அதுவும் இணையும் முன்,  ஒரு தொழில் முனைவர் தோசை செய்யும் இயந்திரம்  உருவாக்கிப் பல தடவை செயல் முறை விளக்கம் அளித்தார். அது இயந்திர தோசைதான். இன்று செயற்கை நுண்ணறிவு மூலம் கூட தோசை சுடலாம். ஆனா நம்ப ஊர் மாஸ்டருங்களை, அடிச்சிக்க முடியாது, அடிச்சிக்க முடியாது!!

- நாகராஜ்


==========================

அத்தனை உணவகங்கள் பற்றி பதிவுகள் போட்டாலும் எங்கள் ஊர் காளியாகுடி பற்றி யாரும் போடாதது ஒரு குறை என்பதால் நானே போடுகிறேன்.

அங்கு அதிகாலையில் அதிகாலை என்றால் ஆறு மணிக்கு  முன்னால் மட்டுமே கிடைக்கும் பொங்கல்!

உங்கள் இலையில் சுடச் சுட கொண்டு வந்து வைப்பார்கள். அது வழுக்கி கொண்டு ஓடும். அவ்வளவு நெய். அந்த சூட்டில் இலை லேசாக கருக ஆரம்பிக்கும். அதற்கு அற்புதமான ஒரு சட்டினி மற்றும் சாம்பார். 6 மணிக்கு மேல் போனால் கிடைப்பது அரிது. அதே போல காபி. ஆனால் எங்களுக்குப் பிடித்தது அங்கு காலை 11 மணிக்கு மேல் கிடைக்கும் ஒரு முறுகலான ஊத்தப்பம், வேறு வகையான சட்னி.

எங்கள் பள்ளி தேசிய உயர் நிலைப்பள்ளி அதன் அருகில் இருப்பதால் மதிய உணவு சமயங்களில் அங்கு செல்வோம்.


ஒரு முறை அங்கு சென்றபோது நடந்தது இன்றும் மனதில் நிற்கிறது. அன்று வகுப்பில் நாங்கள் நிறைய சத்தம் போட்டு பேசிக் கொண்டிருந்ததால் வந்த தலைமை ஆசிரியர் மதிய உணவு இடைவெளி விடாமல் இரண்டு வகுப்பு நீட்டித்து விட்டார். எங்களுக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. எங்களுக்கு என்றால் எனக்கும் என் தம்பிக்கும். என் தம்பி வேறு வகுப்பில் இருந்தாலும் எனக்காக சேர்ந்து சாப்பிட வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தான். இருவரும் காளியாகுடி போவதாக திட்டம். ஆனால் போகும்போது மதியம் இரண்டு மணிக்கு மேல் ஆகிவிட்டது. மதிய சாப்பாடு எல்லாம் முடிந்து மேஜை மேல் நாற்காலிகள் கவிழ்ந்து இருந்தன. நாங்கள் அடிக்கடி அங்கு செல்வோம் என்பதால் எங்களுக்கு அங்குள்ள பரிமாறுபவர்கள் மற்றும் முதலாளி அனைவரையும் நன்கு தெரியும். எங்கள் பசி முகத்தை பார்த்தவுடன் உள்ளே போய் சாப்பிடுங்கள் என்று சொன்னார். அப்போது காளியாக்குடியில் இரண்டு பகுதிகள் இருக்கும். முன் பகுதியில் மேசை நாற்காலி. உள்ளே தரையில் பலகைகள் போட்டிருப்பார்கள். அங்கு ஆசாரம் பார்ப்பவர்கள் சாப்பிடுவார்கள். அங்கு சென்று அமர்ந்தோம். ஒரே ஒரு பரிமாறுபவர் மட்டும் இருந்தார். அப்போது அவர்  சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். எங்களைப் பார்த்தவுடன் இருங்கள், ஐந்து நிமிடத்தில் வந்து விடுகிறேன் சாப்பிட்டு முடித்து என்று சாப்பாட்டைத் தொடர்ந்தார். கொடூர பசியுடன் அமர்ந்திருந்தோம். அவர் சாப்பிடுவதை பார்த்துக் கொண்டிருந்தோம். அவர் தயிர் சாதத்துக்கு வந்து விட்டார். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. தயிர் சாதத்தை ஒரு யானைக்கு போடும் கவளம் போல உருட்டினார். இலையில் வைத்தார் ஊறுகாய் மூன்று விரல்களால் எடுத்து நெற்றியில் திருநீறு இடுவது போல அந்தக் கவளத்தின் மீது இட்டார். தயிர் சாத உருண்டை மேல் அந்தச் சிவப்பு அற்புதமாக காட்சியளித்தது. கையால் எடுத்து வாயை நன்றாகத் திறந்து போட்டுக் கொண்டார்.


பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்கு வயிறு நிறைந்து விட்டது!

- சண்முகசுந்தரம்


===========================


-அனைவரும் தங்கள் இளமைக்காலத்தில் உணவகங்கள் சென்று உண்ட நினைவுகளைப் பதிவிட்டதும் பெண்கள் ஏன் பகிரவில்லை என்ற கேள்வி தோன்றியது. பண்டமாற்று பதிவு ஒன்று தான் வந்திருந்தது. சரி நாம் பதிவிட சிந்திப்போம் என்றால் காலணாவுக்கு மாம்மை(தாய்வழிப்பாட்டி) வாசலுக்கு வரும் வயதான பாட்டியிடம் அவித்த மொச்சையை வாங்கித் தந்தது மட்டுமே நினைவில் உள்ளது. அந்த பயறின் சுவையும் மணமும் தனித்தன்மையானது. அதன் பிறகு நினைவில் வருவது சம்பள நாள் மட்டும் அப்பா அருகில் கடையில் வாங்கித் தரும் மசாலா தோசை. அதன் பிறகு கல்லூரி காலத்தில் பக்கத்தில் பேக்கரி உண்டு. புகை சூழ்ந்த அவ்விடத்தில் பெண்கள் இருக்க மாட்டார்கள்.‌என்றாலும் ஒரு முறை 4 பெண்கள்  சேர்ந்து தேநீர் அருந்த நுழைந்தோம். ஈக்களைவிட அதிகமாக மொய்த்தன கண்கள்.  சமீபத்தில் அலுவலகம் அருகில் இது போல் ஒரு தேநீர் கடை. புகை மற்றும் ஆண்கள் நிறைந்த அவ்விடத்தில் பெண்கள் சென்றோம். அவ்வளவு கண்கள் மொய்க்க வில்லை...என்பதே பெரிதாக இருந்தது.  சிறப்பாக கவனிக்கப்பட்டோம். முன்னேற்றம் ...நான் இந்த புத்தகத்தைப் படித்ததில்லை. ஆனால் இந்த நிகழ்வுகள் நான் படிக்க வேண்டும் என எண்ணிக் கொண்டு இருக்கும் புத்தகத் தலைப்பை நினைவுறுத்தும் (இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவது இல்லை).


உண்ட மயக்கத்தில் 

சாய்வு நாற்காலியில் 

டீக்கடை நினைவுகளை 

இதமாக அசைபோடும்...

தாத்தாவின் மனம்.


தேநீர் போடும் நேரம்

கணக்கில் கொண்டு 

சற்றே கண்ணயர்வாள்

டீக்கடை கடந்து செல்வதே

போராட்டமாகக் கடந்த பாட்டி



- அமுதவல்லி

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...