நண்பன் என்பான்
தூளியினின்று வெளி வந்ததும் கிடைப்பான்
தொடர்ந்து வாழ்நாள் முழுதும் வருவான்
தோளில் கை போடும் முதல் உறவும் இவன்
"தோப்பில் மாங்காய் திருடுவோம்" என்பவன்
ஆளில்லா இடம் வர அழைப்பு அது விடுப்பான்
அத்தனை தீயவையும் சொல்லிக் கொடுப்பான்
*வாளியாய் துயர் கேட்டு வருவான் விரைந்து
வாய்ப்பு வர விளிப்பான் காகமாய் கரைந்து
மீள முடியாக் காதல் *ஆழியில் தள்ளுவான்
மிதந்து வரும் என் முத்தையும் அள்ளுவான்
காளியாய் தன் மனைவி கண்டித்த போதும்
காணாமல் இரான் என்னை ஒரு நாளும்
கேளிக்கை அவனின்றி களை கட்டாது ஏதும்
கிட்டத்தட்ட அவனும் என் மனைவியே ஆகும்
தாளிப்பாம் நம் வாழ்வில் தோழன் என்பான்
தவிர்க்க முடியாது குகன், கர்ணன் அன்னான்.
* வாளி -- அம்பு
* ஆழி -- கடல்
__. குத்தனூர் சேஷுதாஸ் 2/8/2026
No comments:
Post a Comment