Tuesday, August 4, 2026

மேஜிக் கார்:

 சிறுகதை 

மேஜிக் கார்:


கால வளையம் ஆங்கிலத்தில் டைம் லூப் அல்லது டெம்போரல் லூப் என்று ஒரு கோட்பாடு உண்டு.

அதாவது உலகில் ஒரு நிகழ்வு மீண்டும் மீண்டும் அதே தருணத்தில் நிகழ்ந்தால் அதை   கால வளையம் (time loop) என்று கூறுவோம். அப்படி ஒரு நிகழ்வு அதன் முடிவை அதன் பாதையில் எட்டும் வரையில் அதே கால வளையத்தில் மீண்டும் மீண்டும் சிக்கி அதே நிகழ்வை அனுபவிக்கும் ஒரு கற்பனையே இந்த கதை.




கார்த்திக் மற்றும் தேவா இருவரும் ஹைடெக் கார் திருடர்கள். அவர்கள் கார் மற்றும் அதன் சம்பந்தமான எலக்ட்ரானிக்ஸ்  அனைத்து விஷயத்தையும் நேர்த்தியான முறையில் திருடுபவர்கள். அவை அனைத்தையும் இதுவரை மாட்டிக் கொள்ளாமல் திருடி விற்று பணம் செய்து உல்லாசமாக வாழ்ந்து வருபவர்கள். ஒருநாள் 


மணி: காலை 11:30.


ஒருநாள் ஒரு உணவு விடுதியின் அருகில் லாவகமாக ஒரு காரை திறந்து அந்த காரை திருடிக்கொண்டு வந்தனர் தேவா மற்றும் கார்த்திக் இருவரும். அந்த காரில் ஒரு பர்ஸ்ஸும் ஒரு மொபைல் ஃபோனும் இருந்தது.


தேவா: மச்சி!!! காஸ்ட்லி ஆண்ட்ராய்டு ஃபோன் டா. பர்ஸ்ல ஒரு பத்தாயிரம் தேறும். இந்த மியூசிக் சிஸ்டம் அது ஒரு நல்ல அமௌண்ட் தேறும்.

கார்த்திக்: கார நம்ம ஆள் சேகர் எப்போதும் போல எடுத்துப்போக வருவான். இது கொஞ்சம் ஹை எண்டு மாடல் கார். அதனால் இந்த தடவை ரேட் விஷயத்தில் கறாராக பேசி வாங்கிடனும்.

தேவா: ஆமா மச்சி கண்டிப்பா வாங்கிடலாம்.

கார் அவர்கள் வீட்டில் வந்து நின்றது.

கார்த்திக்: மச்சி நான் போய் சரக்கு வாங்கிட்டு வரேன். இன்னிக்கு கொண்டாடறோம்.


கார்த்திக் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான். முதலில் காரை ஒரு டீக்கடை வாசலில் நிறுத்தி ஒரு டீ குடித்தான். பின்னர் ஒரு ரோட்டோர கடையில் சூடாக ஒரு சிக்கன் பக்கோடா வாங்கினான்.

பின்னர் ஒரு சிறுமி ரோடு கிராஸ் செய்ய பார்த்து அவன் காரில் மோதுவது போல வர, கார்த்திக் சடன் பிரேக் அடித்து நிற்பாட்டினான். பின்னால் ஒரு அம்மா ஓடிவர,

கார்த்திக்: ஏம்மா சின்ன பொண்ண பாத்து கூட்டிட்டு வர மாட்டீங்களா? நான் மட்டும் பிரேக் போடாம இருந்தா இவ்ளோ நேரம் அடிச்சு தூக்கியிருப்பேன்.

அந்தபெண்: சாரி சார் கூடவே வந்தா பைய சரி பண்ணிட்டு வரதுக்குள்ள டக்னு ஓடி வந்துட்டா. என் தப்பு தான். ரொம்ப தேங்க்ஸ் சார்" என்று கூறி அந்த சிறுமியை தொடையில் இரண்டு அடி போட்டுவிட்டு இழுத்து சென்றாள்.


அவன் மீண்டும் காரை உயிர்ப்பித்து ஒட்டினான். அவன் காரின் முன்னால் ஒரு டெம்போ சென்று கொண்டிருந்தது.



மணி மதியம் 12.45.

அப்போது அவன் கைபேசியில் ஒரு அழைப்பு வர, அதை எடுத்து "ஹலோ" என்றான். இமைக்கும் நேரத்தில் வலது புறத்திலிருந்து ஒரு கார் அந்த டெம்போவில் மோத, அந்த டெம்போ அதற்கு முன்னால் சென்ற ஆட்டோ மற்றும் டூவீலரில் மோத, கார்த்திக்கின் காரும் சற்று நிலை இழந்து அந்த டெம்போவில் மோதி அவன் தலை கார் ஸ்டியரிங்கில் மோதி அவன் கண்கள் இருண்டு மயங்கி விழுந்தான். டூ வீலரில் இருந்தவர்கள் இரத்த வெள்ளத்தில் வீழ்ந்தனர்.


கார்த்திக் மீண்டும் கண் விழிக்க, அவன் தேவாவுடன் மீண்டும் உணவு விடுதி அருகிலிருந்து அந்த காரை திருடிக் கொண்டு வந்து கொண்டிருந்தனர்.


மணி: காலை 11:30.


தேவா: மச்சி!!! காஸ்ட்லி ஆண்ட்ராய்டு ஃபோன் டா. பர்ஸ்ல ஒரு பத்தாயிரம் தேறும். இந்த மியூசிக் சிஸ்டம் அது ஒரு நல்ல அமௌண்ட் தேறும்.

கார்த்திக்குக்கு இதெல்லாம் ஏற்கனவே நடந்தது மீண்டும் நடப்பது போல் இருந்தது

கார்த்திக்: டேய் இந்த காரை நாம ஏற்கனவே தூக்கினோம்ல. இதெல்லாம் ஏற்கனவே பேசினோம்ல?

தேவா: மச்சி இந்த கார் மாதிரி பல காலை நாம தூக்கி இருக்கோம். நிறைய பேசி இருக்கோம். அதெல்லாம் ஞாபகம் வெச்சுக்க முடியுமா?

கார்த்திக்: இல்லடா. இதே விஷயம், இதே கார் இதெல்லாம் அப்படியே நடந்தது இப்போ திரும்ப நடக்குது.

தேவா: "என்னடா சரக்கு அடிக்காமயே உளர்ற. ஒரு சரக்கு போடு தெளிவாகிடுவ" என்றான்.


கார் வீட்டிற்கு வந்தது. கார்த்திக் காரை எடுத்தான். டீ கடையில் டீ குடித்தான். பக்கோடா வாங்கினான், அந்த சிறுமியை அந்தப் பெண்ணிடம் தந்து, அதே இடத்தில் மீண்டும் கைப்பேசி அலற, மணி 12.45. அதே போல் டெம்போவில் மோதி விபத்து ஏற்பட்டு மயங்கினான். மீண்டும் கண் விழித்தபோது அவர்கள் காரை திருடி வந்து கொண்டிருந்தனர்.


மணி அதே காலை 11.30


கார்த்திக் தனக்கு மட்டும் இது மீண்டும் மீண்டும் நடப்பதை உணர்ந்தான். இம்முறை அவன் டீ கடையிலும், ரோட்டோர கடையிலும் நிறுத்தாமல் சென்றான். அதனால் அந்த சிறுமியை அவன் இம்முறை காணவில்லை. டிராஃபிக் நெருக்கடியால் சற்று மெதுவாக வாகனங்கள் நகர்ந்தது. அந்த விபத்து நடக்க இருக்கும் பகுதியை அடைந்தான்.

மணி 12.42

இம்முறை அந்த டெம்போவை கடந்து ஓவர்டேக் செய்து ஓட்டிச்சென்றான். அவனுக்கு ஒன்றும் ஆகவில்லை.

மணி 12.45. அவன் வலது கண்ணாடியில் அது தெரிந்தது. டெம்போவில் அந்த கார் மோத, பைக்கும் ஆட்டோவும் விபத்துக்குள்ளாகி அந்த பைக்கில் வந்த இருவரும் இரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அவன் கண்கள் மீண்டும் மயங்கின.


கண் விழித்தபோது அவர்கள் மீண்டும் காரை திருடி வந்து கொண்டிருந்தனர்.

மணி மீண்டும் அதே காலை 11.30.


இந்த முறை கார்த்திக் தேவாவிடம், "டேய் நான் இறங்கிக்கறேன். ஒரு முக்கியமான வேலை இருக்கு. நீ காரை எடுத்துட்டு போ"

தேவா: டேய் என்ன டா ஆச்சு???

கார்த்திக்: "டேய் நீ போடா. நான் ஒரு வேலைய முடிச்சிட்டு வரேன்"

என்று சொல்லி இறங்கி ஓடினான்.


கார்த்திக் மீண்டும் அவர்கள் திருடிய இடத்திற்கு சென்று அங்கே அருகில் மறைந்து கொண்டு பார்த்தான்.

அந்த காரை தவரவிட்டவன் அதை காணாமல் பதைபதைத்து தேடி கொண்டிருந்தான். உணவு விடுதிக்கு அருகில் இருந்த மெடிக்கல் லேபில் இருந்து கையில் ரிப்போர்ட்டுடன் இருந்தான். பின்னர் அங்கு வந்த ஒருவனிடம் ஏதோ பேசி, அவன் கைப்பேசியிலிருந்து யாரோ ஒருவருக்கு கால் செய்தான். அடுத்த பதினைந்திலிருந்து இருபது நிமிடத்தில் ஒருவன் பைக்கில் வந்தான். வந்தவன் சில மருந்துகளை கார் தொலைத்தவனுக்கு வாங்கி கொடுத்து, அவனுடன் பைக்கில் ஏற்றிக்கொண்டு இருவரும் புறப்பட்டனர்.

கார்த்திக்கும் ஒரு ஆட்டோ பிடித்து அவர்களை பின் தொடர்ந்தான்.

மணி மதியம் 12.45.

அதே இடத்தில் விபத்து ஏற்பட, இந்த முறை தேவா காரில் பின்னால் வந்து டெம்போவில் மோதி மயக்கம் அடைந்தான்.


அவர்கள் மீண்டும் காரை திருடி வந்த அதே தருணத்தில் இருந்தனர்.

மணி காலை 11.30.


தேவா: டேய் எனக்கு என்னவோ நடப்பது எல்லாம் ஏற்கனவே நடந்து பார்த்த மாதிரி இருக்கு. நான் இப்போ தான் கார இடிச்ச மாதிரி இருந்தது. ஆனா இப்போ உன் கூட இருக்கேன்.

கார்த்திக்: நானும் அத தான் டா சொல்றேன். இப்போ வரைக்கும் எனக்கு இதே சம்பவம் நாலு தடவை நடந்துடுச்சு. இப்போ திரும்பவும் நடக்குது.

தேவா: ஆமா மச்சி. எனக்கும் இப்போ உன்ன மாதிரி தான் தோணுது. என்னடா சுத்தி சுத்தி இதே டைம்ல நிக்கறோம்.

கார்த்திக்: டேய் போன முறை எதுக்குடா கார எடுத்துட்டு வந்த?

தேவா: உன்ன தேடிதான்டா. உன்ன கூட்டிட்டு போக வந்தா நீ ஆட்டோல போன. அதான் உன்ன ஃபாலோ பண்ணிட்டு வந்தேன்.

கார்த்திக்: மச்சி நல்லா யோசி. நாம இந்த கார திருடி வந்த இதே டைம்ல தான் திரும்ப திரும்ப வரோம். அதாவது காலை 11.30. ஒரு நிகழ்வு நடக்கணும். ஆனா அது அப்படி நடக்காம நேர்மாறா நடக்குது. அதான் அப்படி நடக்கற வரைக்கும் திரும்ப திரும்ப இதே தருணத்துல வந்துட்டு இருக்கோம்.

தேவா: அப்போ ஒரு வேளை அந்த விபத்தை நடக்காம பண்ணிட்டா இது ரிப்பீட் ஆகாம இருக்குமோ?

கார்த்திக்: நீ சொல்ற மாதிரியும் இருக்கலாம். முயற்சி பண்ணுவோம். அந்த கார் டெம்போவில் மோதி தான் விபத்து நடக்குது. இப்போ டைம் 11.30. நாம வீட்டுக்கு போக 12.00. அந்த accident ஸ்பாட அடைய தோராயமா  நாற்பது நிமிடம் ஆகுது. 12.40லேருந்து 12.45குள்ள விபத்து நடக்குது. அந்த நேரத்துல நாம அந்த கார மோதாம செஞ்சிட்டா இதே டைம்ல நாம திரும்ப வராம இருக்க வாய்ப்பு இருக்கு.

தேவா: மே பி. அந்த இடிச்ச காரை உனக்கு நியாபகம் இருக்கா?

கார்த்திக் இதுவரை நடந்ததை நினைவுகூர்ந்து, "அது ஒரு ஒயிட் கலர் ஸ்கார்பியோ" என்றான்.

தேவா: சரி வா. அந்த ஸ்பாட்டுக்கு போகலாம்.


மணி மதியம் 12.10.

அவர்கள் வண்டியை அங்கே ஓரமாக நிறுத்திவிட்டு காத்துக் கொண்டிருந்தனர். அந்த கார் வருவதை பார்த்த இவர்கள் அதன் முன்னால் சென்று மெதுவாக ஓட்டினார்கள். அவன் ஹார்ன் அடித்தான். ஆனால் இவர்கள் வழி விடாமல் ஒரு கணத்தில் ஸ்கார்பியோவின் முன்னால் வண்டியை நிறுத்தி விட்டனர்.



ம‌ணி மதியம் 12.43

அவன் பொறுமை இழந்து இறங்கி வந்து இவர்களை கண்டபடி திட்ட, இவர்கள் வண்டி சரி செய்வது போல் ஏதோ செய்து அடுத்த 3 நிமிடத்தை கடத்தினர்.


மணி மதியம் 12.46. எந்த விபத்தும் நடக்காமல் அந்த டூவீலர் கடந்து சென்றது. இவர்கள் உடனே வண்டியை உயிர்ப்பித்து அதை பின் தொடர்ந்தனர். அந்த வண்டி ஒரு மருத்துவமனையை நோக்கி செல்ல, திடீரென்று அங்கு ஒரு தெருவிலிருந்து வேறு ஒரு ஸ்கார்பியோ இவர்கள் பைக்கை மோத, அவர்கள் இருவரும் தூக்கி எறியப்பட்டனர். இவர்கள் காரில் மோதி இரத்த வெள்ளத்தில் கீழே வீழ்ந்து கிடந்தனர்.


மீண்டும் அதே காலை 11.30.


தேவா: டேய் என்னடா இவ்ளோ முயற்சி பண்ணியும் திரும்ப இங்கயே வந்துட்டோம்? 


கார்த்திக்: மச்சி பிரச்சனை ஆரம்பிக்கிறது, நாம கார தூக்கிய உடனே அவன் வெளிய வரான். பரபரப்பு ஆகிறான். யார் கிட்டயோ ஃபோன் வாங்கி பேசி ஒருத்தர வர வெக்கறான். அப்புறம் 2 பேரும் பைக்ல ஒண்ணா போறாங்க. இது எல்லாம் நடக்க சுமாரா ஒரு முப்பது நிமிடம் ஆகுது. விபத்து நடக்குற இடம் நாம காரை தூக்கின இடத்துல இருந்து சுமார் பத்து நிமிஷம். 


இவங்க பதட்டமா போறதுகூட விபத்துக்கு ஒரு காரணம். மே பி அவனுக்கு மெடிக்கல் எமர்ஜென்ஸி இருக்கலாம். கைல ரிப்போர்ட், மெடிசின்ஸ் இருக்கு. அவனுக்கு அந்த மாத்திரைகள் இங்க தான் கிடைத்து இருக்கும். அதான் ஹாஸ்பிடல தாண்டி இவ்ளோ தூரம் வந்து இருக்கான். 


நாம காரை இங்க தூக்காம அவன் டெஸ்டிநேஷன் அடைந்ததும் அதாவது ஹாஸ்பிடல அடைந்ததும் தூக்கினா நாம இந்த டைம்ல திரும்ப வராம இருக்க வாய்ப்பு இருக்கு. அவன் இந்த காரோட அங்க போகணும் அது தான் நியதி (ப்ரீடெஸ்டிநேஷன்). அப்படி நடக்காம போனதால் தான் திரும்ப திரும்ப இந்த டைம்ல இருக்கோம்னு நினைக்கறேன். 


தேவா: அப்போ நாம இந்த கார தூக்க போறதில்லையா? 


கார்த்திக்: இங்க இப்போ தூக்க போவதில்லை. ஆனா ஹாஸ்பிடல்ல வெச்சு தூக்க போறோம். 


கார் திருடப்படாமல் இருந்ததால், காரின் உரிமையாளன் அதை எடுத்து உடனே கிளப்பினான். அவர்கள் இருவரும் அந்த காரை ஒரு ஆட்டோவில் பின்தொடர்ந்து சென்றனர். பத்து நிமிடத்தில் அந்த விபத்து நடக்கும் பகுதியை எந்த விபத்தும் நேராமல் கடந்து சென்றனர். அப்போது மணி காலை 11.45. அவன் மருத்துவமனையை அடைந்தான்.


மணி மதியம் 12.00. 


ரிப்போர்ட் மற்றும் மருந்துகளை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றான். இவர்களும் பின் தொடர்ந்தனர். கார் உரிமையாளனின் மகளுக்கு வைத்தியம் நடந்துக் கொண்டிருந்தது.


மணி மதியம் 12.05


அந்த மருந்தை வாங்கி அந்த சிறுமிக்கு செலுத்தினர். அந்த சிறுமி சற்று சீரடைந்தாள். 


டாக்டர்: "டோண்ட் ஒரி. ஷீ இஸ் ரெக்கவரிங்க். ஷு வில் பீ ஆல்ரைட். இந்த ஐவி (இன்ட்ராவீனல் - நரம்பு மூலம் செலுத்துதல்) முடிந்ததும் நர்ஸ் கிட்ட சொல்லுங்க" என்று கூறி விடைபெற்றார். 


கார்த்திக்கும், தேவாவும் வெளியே கார் அருகே வந்தனர். 


தேவா: மச்சி, நம்ம திரும்ப 11.30 க்கு போகல. அப்போ இது தான் நடக்க வேண்டியதா? இது மாறியதால் தான் நாம டைம் லூப்ல சிக்கினோமா? 


கார்த்திக்: ஆமாம். இந்த கார்ல இந்த கார் ஓனர் மூலமா அந்த பொண்ணுக்கு மருந்து கிடைக்கணும். அது தான் நியதி அல்லது ப்ரீடெஸ்டிநேஷன். அத நடக்காம நாம காரை தூக்கினது இந்த நியதிய மாத்தி அமைச்சுடுச்சு. அதான் இந்த கார் மூலமா அதே டைம் லைன்ல திரும்ப திரும்ப வந்தோம். 


தேவா: அப்போ இது மேஜிக் காரா மச்சி. இது மூலமா நடக்க வேண்டிய நியதி நடந்துடுச்சு அதான் மருந்து அந்த பொண்ணுக்கு கிடைச்சு போச்சே. 


கார்த்திக்: இன்னும் ஒரு நியதி நடக்கணும். நாம இந்த கார தூக்கணும். அதுவும் இப்போ நடந்துடும். 


தேவா: இப்பவே இங்கயேவா? 


கார்த்திக்: "ஆமாம். அந்த பொண்ணு பிழைக்க தான் டைம் லூப் நடந்தது. இப்போ லூப் முடிஞ்சுது. இனிமே இந்த காருக்கு நாம தான் ஆதரவு. இந்த ஓனர் வெளிய வர இன்னும் இருபது நிமிடம் ஆகும். வா வேலைய முடிக்கலாம்" என்று சொல்லி விரைவில் அதை மீண்டும் திருடிக்கொண்டு சென்றனர்.


 இப்போது மணி மதியம் 12.20


தேவா: மச்சி சரக்கு வாங்கிட்டு போகணும். மறந்துடாதே. 


கார்த்திக்: ஓகே டா ஓகே. ஏன் டிராஃபிக் மெதுவா மூவ் ஆகுது? 


என்று அவர்கள் செல்லும் போது சிகப்பு சிக்னல் விழுந்தது. அறுவது நொடிகள் முடிந்ததும் பச்சை சிக்னல் மாறியது. அவர்கள் காரை நகர்த்த, நொடிப்பொழுதில் இடதுபுறத்தில் இருந்து வேகமாக ஒரு ஸ்கார்பியோ இவர்கள் காரை இடித்து இருவரும் காரில் சரிந்தனர். இப்போது மணி மதியம் 12.45.


இவ‌ர்க‌ள் இந்த காரில் மோதி விபத்துக்குள்ளாக வேண்டியதும் ஒரு நியதி (ப்ரீடெஸ்டிநேஷன்). 


நன்றி....



- பிரபு

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...