Thursday, August 6, 2026

தேவதை

*தேவதை*


ப்ரீதா மிகவும் உற்சாகமாகவும் அதே நேரம் பதற்றத்துடனும் இருந்தாள். மாத பரிசோதனைக்கு (monthly check-up) இன்று வந்தபோது மகப்பேறு மருத்துவர் (gynecologist) பிரேமா அவளுக்கு நாட்கள் நெருங்கிவிட்டதையும் அவளை இன்று மாலைக்குள் மருத்துவமனையில் அட்மிட் ஆகிவிடுமாறும் கூறியதுதான் காரணம். ப்ரீதா தன் மனதிற்குள் கடந்த சில மாதங்ளாக நடந்தவற்றை நினைவு கூர்ந்தாள்.


ஏழு மாதத்திற்கு முன் தான் அவள் பரிசோதனைக்கு சென்று அவள் கருவின் முதல் வளர்ச்சியை கண்டது போல் இருந்தது. அதற்குள் நாட்கள் எவ்வாறு விரைந்துவிட்டன. முதல் ஸ்கேனி‌ல் அந்த கரு ஒரு சிறிய இலந்தைபழம் அளவிற்கு இருந்ததும் அவள் வயறு மெலிதாய் தெரிந்ததும், அதன் அசைவுகள் தெரிந்தபோதும் அவள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. 


பதினைந்து வாரங்களுக்கு பிறகு அவள் சற்று தெளிந்திருந்தாள். தன் உடல்நிலை மாறுபாட்டை ஓரளவிற்கு அவள் அறியத் தொடங்கிவிட்டாள். வாந்தி, மயக்கம் போன்றவை சற்று குறையத் தொடங்கியது. அவளுக்கு சத்தான ஆகாரங்கள் யாவும் கொடுக்கப்பட்டது. அவளுக்கு வேண்டப்பட்டவர்கள் அவள் உடல்நலம் பற்றி உடனுக்குடன் கேட்டறிந்து கொண்டனர். 


சில வாரங்கள் கடந்து... 


குழந்தையின் அசைவும் , வளர்ச்சியும் நன்றாகவே இருந்தது. அவள் வயிற்றை கூர்ந்து கவனித்தால் சிலசமயம் சிறுபாதத்தின் தோற்றம் நன்றாகவே தெரியும். பல வேளையில் நன்றாக உதைப்பது தெரிந்தது. அந்த வலியும் இன்பமாகவே  இருந்தது அவள் அதன் நல்ல வளர்ச்சியை எண்ணி ஆனந்தம் கொண்டாள். பல நேரங்களில் அவள் தனிமைக்கு துணையாக அந்த கருவே இருந்தது. 


அவள் அதனிடம் "இன்னும் கொஞ்ச நாள்ல நீ வெளில வந்து இந்த உலகத்த பார்க்கபோற டா செல்லக்குட்டி. உன்ன கையில வெச்சு தாங்க போறோம்" என்று சொல்லும் போது அதை ஆமோதிப்பதைப் போல ஒரு உதை தெரியும். அதேபோல் அவள் நல்ல இசையைக் கேட்கும்போதும், இயற்கை எழிலை ரசித்து காற்று வாங்கும்போதும், அவள்" நீ நல்லா வருவ செல்லம்.. " என்று கூறும் போதும் நன்றி கூறுவது போல் ஒரு உதை உண்டு. 


இவ்வாறு நாட்கள் கடந்து இன்று அரங்கேற்ற நாளாக அவள் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டாள். செவிலி அவ்வப்போது அவளை சரிபார்த்து விட்டு "எல்லாம் இயல்பாக (normal) இருக்கு. நீ அமைதியாவும் தைரியமாவும் இரு" என்று கூறிவிட்டு சென்றாள். வலி வர தொடங்கியது ப்ரீதா பிரசவ அறைக்கு அழைத்து செல்லப்பட்டாள். 


மருத்துவர் பிரேமா பலவருட அனுபவம் வாய்ந்தவர். இப்போது ப்ரீதாவிற்கு மிகவும் ஆறுதலாய், பொறுமையாய் அவளுக்கு தைரியம் கூறி அவள் மூச்சு மற்றும் இதர மருத்துவ விஷயங்களையும் மிக நேர்த்தியாக நிபுணத்துவத்துடன் (expertise) கையாண்டு ப்ரீதாவிற்கு சுகபிரசவத்தில் ஒரு அழகிய குட்டி தேவதை பிறந்தாள். ப்ரீதா எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தாள். 


ஒரு கணம் அவள் அதை பார்த்தபோது தனது அழுகையின் ஊடே அந்த தேவதையும் ஒரு நொடி இவள் கண்களை உற்று நோக்கியது அவளுக்கு ஆயிரம் அர்த்தங்களை தந்தது. 


பின்னர் மூன்றாம் நாள் வீடு திரும்பிய ப்ரீதா சில நாட்கள் வெறுமையை உணர்ந்தாள். என்னதான் ஒத்துக்கொண்டு வாடகைத்தாயாக (surrogate mother) இருக்க சம்மதித்தாலும், இத்தனை நாட்கள் தன்னோடு இருந்த தன் உயிரை யாரோ பிரித்து சென்றார்போல் உணர்ந்தாள். அதனை பார்க்க எண்ணி ஏக்கத்திலும், பல வேளை கட்டு ஏற்பட்டும் வலியிலும் துடித்தாள், எரிச்சலும் கோவமும் கொண்டாள். ஆனால் அவளின் மனதில் தான் பெற்றெடுத்த குழந்தை எங்கோ ஒரு நல்ல தம்பதியரிடம் நன்றாக வளர போவதை எண்ணி, இதுவே நிதர்சனம் என்பதையும் உணர்ந்து அக்குழந்தையின் அந்த ஒரு நொடி பார்வை தந்த நினைவில் தன் வாழ்வின் அடுத்த பயணத்திற்கு தெளிவுடன் தன் முதல் அடியை எடுத்து வைத்தாள். 


தாய், வாடகைத்தாய் ஆயினும் அவளும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்க்கு அந்த வரத்தை தன் மூலம் தந்த தேவதையே. 


ந‌ன்றி!!!



- பிரபு

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...