Sunday, December 29, 2024

பல்லுயிர் ஓம்பும் பவித்திரமான பாசம்

 ★०★०★०★०★०★०★०★०★

பல்லுயிர் ஓம்பும்

பவித்திரமான பாசம்

★०★०★०★०★०★०★०★०★


இருவர் படுக்கும் பழைய படுக்கை

வறுமை நிலையால் கிழிந்த உடுக்கை

பெருமை க்குரிய பல்லுயிர் நேசம்

செம்மையாய்த் தெரியும் இவர்களின் பாசம்.


பாட்டனுக்கும் பாட்டிக்கும் இடையிலே

இரண்டு குழந்தைகள் உறங்கிடுவரே

பாட்டனின் அப்பக்கம் இன்னொரு

குழந்தை

காலடியில் இருப்பதோ மூன்று சிறுவர்.


மேற்கூரையோ மழையில் ஒழுகும்

பாட்டன் கையில் விரிந்த குடையாம்

அனைவரோடு பூனையும் நாயும்

கட்டில் மேலே உறங்கிடுமாம்.


ஜன்னலின் மேலே இரண்டு குருவிகள்

கட்டிலின் கீழே நிற்கும் சேவல்

உடைந்த கட்டிலை நிமிர்த்தி வைக்க

செங்கல் இரண்டு முட்டுக் கொடுக்கும்


பல்லுயிர் போற்றி பாசம் பொழியும்

இவர்களின் அன்போ பொங்கி வழியும்

கல்லும் கனியும் நேசம் பெருகும்

இதனைப் பார்க்கும் உலகம் உருகும்


பூவுல கெங்கும் இப்படி இருந்தால்

பாசமும் நேயமும் ஆட்சி செய்யும்

ஈவும் இரக்கமும்  மேலோங்கி வந்தால்

பாசமிகு உலகம் நிச்சயம் உய்யும்!


உங்கள்_தோழன்_ஸ்ரீவி

Monday, December 23, 2024

கண்ணாடி

 கண்ணாடி

--------

கண்ணாடி என்பது பிரதிபலிப்பின் உருவகம்.


நாம்அதன்எதிரே நிற்கையில் நம் "பிரதிபிம்பத்தை"

உள்ளது உள்ளபடி காட்டும்; நரை , திரை, 

மூப்புகளுக்கு மேல்போச்சு போடாமல். சமநிலை காட்டும், எதிர்பார்ப்புகள்இன்றி. அதனுடன் மனம் விட்டுப்பேசலாம்.


கண்ணாடியை நாசூக்காக , கையாளவேண்டும. இல்லை எனில் உடையும் , பல துண்டுகளாக.


"எல்லா உறவுகளும் 

கண்ணாடி 

போலத்தான் ."


நம்நடத்தையின்பிரதிபலிப்பாக, நல்லுறவுகள் உறவுகள்

உருவாகின்றன.


எதிர்பார்ப்புகள் இன்றி,"நாசூக்காக' கையாண்டால் உறவுகள்  நன்கு வளரும். 'அழுத்தம்' கொடுத்தால், உடையும்

அல்லது விலகிச்செல்லும்.


கண்ணாடியை சரியான இடத்தில் , சரியான கோணத்தில் அமைத்தால் அறை முழுவதையும் நன்கு காட்டுவது போல, உறவுகளையும் வைக்கும் இடத்தில் 

வைத்து, சரியான கோணத்தில் கையாண்டால், சண்டை சச்சரவுகளோ,

நச்சரிப்பகளோ வாரா.


- கண்டாடி பற்றிய என் பிரதிபலிப்பு( Reflections!)

- மோகன்

Wednesday, December 18, 2024

மழை தரும் நினைவில்...

 மழை தரும் நினைவில்... 


நின்று நிதானமாய் மழையது பொழியுது

   நீளுரை கேட்ட மரங்கள் தூங்கி வழியுது


சென்று விடுவோம் எனப் பறவைகள் பேசுது

   சிறகடித்து காகங்கள் கிளைகளில் தாவுது



கன்றும் வால் தூக்கித் தாயுடன்  திரும்புது

   காற்று காணவில்லை கவி வாங்கப் போனது


ஒன்றும் வேண்டாம் வறுத்த வேர்க்கடலை போதும்

   உறவாம் மைத்துனர் வர உருண்ட போண்டா பொரியும்


மென்று தின்ன வாய் மெதுவடை கேட்குது

   மேகங்கள் ஒட்டுக் கேட்டு இங்கேயே சுற்றுது


அன்று பிள்ளைப் பருவ நினைவுகள் நுழையுது

   அந்த வாழ்வது அறுந்து போகா இழையது


தென்னை வரப்புகளில் நடந்து பள்ளி போனது

   தெப்பமாக நனைந்த படி வீடு திரும்பி வந்தது


அன்னை பதைபதைத்து தலை துவட்டி விட்டது

   அக்கால நினைவு வர தேன் மேலே கொட்டுது. 


__  குத்தனூர் சேஷுதாஸ்

Monday, December 16, 2024

பாரதியும் கண்ணதாசனும்* சிறப்புரை

 *°*°*°*°*°*°*°*°*°*°*°*°*°*°*

*மகாகவி பாரதி பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சி*

*பாரதியும் கண்ணதாசனும்* சிறப்புரை

°*°*°*°*°*°*°*°*°*°*°*°*°*°*°*


    நமது தமிழ்ச்சங்க செயல்பாட்டில் மேலும் ஒரு மைல்கல். தமிழன்னையின் மகுடத்தில் நாம் பதித்த இன்னுமொரு வைரக்கல். துவக்க விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த இயக்குநர் திரு.பத்ரி அவர்களால் மகா கவி பாரதிக்கும் கவியரசு கண்ணதாசனுக்கும் செலுத்தப் பட்ட சிறப்பான புகழஞ்சலி.


15-12-24 மாலை ஆறரை மணிக்கு திருவாளர்கள். இ.ச.மோகன், மருத்துவர் செல்வன், இல்லத்தரசிகள் பவானி, சுல்தானா, பானுமதி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியினைத் துவக்கி வைத்தனர்.


முதலில், அனைவரும் தமிழ்ப்பண்ணை சேர்ந்திசைத்தனர்.


சிறுமி ரோஷ்ணா வரவேற்புரை வழங்கினார். பிறகு தலைவர் ஸ்ரீவி அவர்கள் தனது தலைமை உரையில் துவக்க விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த திரு பத்ரி மீண்டும் நம் அழைப்பின் பேரில் சிறப்பு விருந்தினராய் வந்த பின்னணி, பாரதியின் பிறந்த தின சிறப்பு நிகழ்வில் *பாரதியும்  கண்ணதாசனும்* எனும் சிறப்புரை ஆற்ற உள்ள திருவாளர் பத்ரியின் மேடைப் பேச்சு குறித்தும் இரு பெரும் கவிஞர்கள் குறித்தும் பெருமையுடன் கூறி திரு. பத்ரி அவர்களை உரையாற்ற அழைத்தார்.


அடுத்த 90 நிமிடங்கள் திரு. பத்ரி அவர்களின் சீரிய சிறப்புரையில் அவை மகுடி கேட்ட நாகம் போல மயங்கிக் கிடந்தது. பாரதியின் பாடல் வரிகளோடு கண்ணதாசனின் பாடல் வரிகளை

மிக அற்புதமாக ஒப்பிட்டு, கம்பரின் தாக்கம் பாரதியிடமும், இருவரின் தாக்கமும் கண்ணதாசனிடமும் இருக்கிறதென பல்வேறு எடுத்துக் காட்டுகளுடன் விளக்கியதும் ஆண்டாள், ஷெல்லி ஆகியோர் பற்றி மிகச் சிறப்பாகக் குறிப்பிட்டு அதனை 143-வது பாரதியின் பிறந்த தினத்தோடு இணைத்து பேசியதும் கேட்பாரின் கருத்தைக் கவர்ந்தது. மிக அருமையான அந்த உரைக்கு உரம் சேர்க்கும் விதமாக பத்ரி அவர்கள் குறிப்பிட்ட சில பாடல் வரிகளை மேடைப்பாடகரும் நமது நிதிச் செயலருமான திரு. சாய்ராம் ஐயாவும், பூர்வாவின் பி.பி.எஸ். திரு. பாலகிருஷ்ணன் ஐயாவும் பாடியது கேட்பார் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நமது நிகழ்ச்சிகளில் இந்நிகழ்ச்சி முத்தாய்ப்பாக இருந்தது எனில் அது மிகையில்லை.  பாரதி கூறிய *தெளிவுற அறிந்திடுதல் ... தெளிவு தர மொழிந்திடுதல்* எனும் கூற்றுக்கிணங்க திரு. பத்ரியின் உரை அமைந்திருந்தது என்பது குறிப்பிடத் தகுந்தது. தம் வாழ்வின் மிகச் சிறந்த 90 நிமிடங்களை உரை கேட்டோர் அனைவரும் பெற்றனர் என்பதில் இரண்டாம் கருத்து எவருக்கும் இருந்திட இயலாது. இந்நிகழ்ச்சியைத் தவற விட்டோர் தமது வாழ்வின் முக்கிய தருணம் ஒன்றை இழந்தவர்கள் என அறுதியிட்டுக் கூறிட முடியும். மிகச் சிறப்பான உரை ஆற்றி அனைவரையும் மகிழ்வின் உச்சம் எடுத்துச் சென்ற திரு. பத்ரி அவர்களுக்கு நம் உளம்நிறை நன்றிகள். தவறாது இந்த சிறப்புரையை நமது யூட்யூப் சானலில் கண்டு கேட்டு மகிழத் தவறாதீர்கள்!


அவரைத் தொடர்ந்து அவரது உரை தந்த ஊக்கத்தினால் தமக்குப் பிடித்த பாரதி மற்றும் கண்ணதாசன் பாடல் வரிகளைப் பற்றி மூத்த உறுப்பினர்கள் ஆர். பிச்சைமணி மற்றும் இ.ச. மோகன் ஆகியோரும், நமது சங்கத்தின் வருங்கால நட்சத்திரங்கள் சிறார்கள் கௌசலேஷ் மற்றும் சாதனாஸ்ரீ ஆகியோர் உரையாற்றினர். 


நமது சிறப்புமிகு சிறப்பு விருந்தினருக்கு திரு. ஆர். பிச்சைமணி ஐயா மூலம் நம் தலைவரின் புதிய ஆத்திசூடிக் கதைகளின் இரண்டு பாகங்களும் அன்பளிப்பாக வழங்கப் பட்டது.


இந்நிகழ்வில் திரு. பத்ரி அவர்களுடன் வந்திருந்த திருவாளர்கள்.சுரேஷ் பாலா (சுபா), எழுத்தாளர்/கதாசிரியர், ரமேஷ் வைத்யா (தினமலர் உதவி ஆசிரியர்) கிருஷ்ணன் (பேச்சாளர்) ஆகியோரும் நம் பகுதியில் உள்ள விவேகானந்தா பயிலகம் உரிமையாளர் திரு. ஜவஹர் அவர்களும் வந்திருந்து சிறப்பித்தனர். அவர்களுக்கு நமது நெஞ்சுநிறை நன்றிகள்.


நிறைவாக நமது உதவித் தலைவர் திரு. கோ. தியாகராஜன் அவர்கள் நன்றியுரை நவில, தேசியப் பண் இசைத்தலுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.


நன்றி.


*ஸ்ரீவி*

தலைவர்

பாரதி பிறந்தநாள் விழா _ கருத்து

பாரதி பிறந்தநாள் விழா _ கருத்து


மார் தட்டும் பெருமை தமிழால் நமக்காம்

   மண்ணில் இனிமை இது போல் எதிலாம்?


ஊரறியும் பாரதி, கண்ணதாசன் தமிழ்க் கடல்கள்

   உப்பாம், முத்தாம் அவர் தம் கவிதைகள்


பாராட்டியும், ஒப்பிட்டும் திரு. பத்ரியின் உரையாம்

   பக்கங்கள் பலவாம் திகட்டவே இல்லையாம்


கார் முகிலாய் அவரோ ஓயாமல் கொட்டினார்

   கவிதை பாடி இருவர் மின்னலாய் வெட்டினர்


ஏரித் தென்றலாய் உரையாற்றும் சங்கத் தலைவர்

   ஏனோ நத்தையாய்ச் சுருக்கிக் கொண்டார்


சீராகச் செயலரும் தொகுத்து வழங்கினார்

   சிறாரும் தம் பங்காய்ச் சிறக்க முழங்கினர்


கேரட் அல்வா விரைவில் தீர்ந்ததன் காரணம்

   கேட்டார் மறப்பாரோ நம்மில் யாரேனும்? 


வாரி வாரி வழங்க விழா இனிதே முடிந்தது

   வட்டத் தட்டில் போண்டா, சட்னியும் இருந்தது. 


__  குத்தனூர் சேஷுதாஸ்


------------

கவிதைகளைக் கொட்டி

சுதந்திர முரசு கொட்டிய  தமிழ் முரசுக்கும் 

தமிழ்க் கோப்பையில்

குடியிருந்து 

மயில் தோகை போல்

கவிதைகளால் வருடி 

நம்மை மயக்கிய

கவியரசுக்கும்

திரு.பத்ரி அவர்கள்

சேர்த்தாரே பெருமை!

என்னே இவரது திறமை!

இரு கவிகளும் தன்னவர்கள் என்ற உரிமை!

இவரிடம் கருத்துக்கும்

கற்பனைக்கும் இல்லை வறுமை!

இவரின் நீண்ட பேச்சில் இல்லை வெறுமை!

கேட்கத் தேவையில்லை பொறுமை!

சொல்லியதெல்லாம் மிக அருமை!


இயக்குநரை இயக்கிய

ஷெல்லிதாசனையும் 

கண்ணதாசனையும் 

கம்பனையும் துணைக்கழைத்து

தயக்கம் அறவே இன்றி

வியக்கும் வண்ணம்

வியந்து விரிவுரை ஆற்றிய இவர்

பாரதிகண்ணதாசனோ!


தமிழ்த்தேனுக்கு மேலும் சுவைக்கூட்டிய 

இசைத்தேன்!

கேட்டு இரசித்து

மலைத்தேன்!

திறம்பட தலைமையுரை!

நயம்பட நன்றியுரை!

அனுபவமிக்க பெரியோரோடு

புலிக்குட்டிகளின் வாசகர் உரை!

இசைக்கருவி வாசித்து

தமிழ்த்தொண்டாற்றிய

இசை உரை!

ஒருங்கிணைத்த செயலர் முறை!

தன்னார்வாளர்களின் தொண்டில் இல்லை குறை!    

எல்லாம் நிறை!

வளரட்டும்  நம் தமிழ்ச்சங்கப் பிறை!


- சாய்கழல் சங்கீதா

Wednesday, December 11, 2024

மகாகவி பாரதி

 சுதந்திர பாரதம் என்ற

இலட்சியத்தோடு இலட்சங்களில்

ஒருவனாய்

இலக்கியம் செய்தாய்!

உரிமை காக்க

உரக்கச் சொன்னாய்!

சிதையா நெஞ்சுடன்

சிந்திக்க வைத்தாய்!

அச்சம் தந்தோரை

மிச்சம் வைக்காமல்

துச்சமாய்த் துரத்தத்

துணிவு தந்தாய்!


கவிதைளையும் சிந்துகளையும் 

சிறப்பாய்ச் சிதறி 

களிக்கச் செய்தாய்!

நிலைகெட்ட மானுடரை

நினைத்து கவலையுற்று

எம்மையும் களங்கச் செய்தாய்! 

துன்பம் நேர்ந்தால் 

யாழ் மீட்டி இன்பம்

சேர்த்துக்கொள் என்று

உபாயமும் தந்தாய்! 


ஆடச் சொன்னாய்!

பள்ளு பாடச் சொன்னாய்!

கும்மியடித்துக் கொண்டாடச்

சொன்னாய்!

ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டதாய் 

கனவு காணச் சொன்னாய்!

எண்ணங்களுக்கு சக்தி 

உண்டாமே!..

அறிந்தே சொன்னாய்!

அன்றே  சொன்னாய்!


விண் போற்றினாய்!

பெண் போற்றினாய்!

மண் போற்றினாய்!

மழலைப் போற்றினாய்! இறைக்கழலைப் போற்றினாய்!

துஷ்டர்களைத் தூற்றினாய்! 


எங்கோ என்றோ பிறந்த நீ..

எங்கோ என்றோ உயிர்த் துறந்த நீ..

மீண்டும் மீண்டும் மிக அருகில் பிறக்கிறாய்!

உன்னை வாசிக்கும் போதெல்லாம்!

உன்னை வாசிப்போரின்

வழியே சுவாசிக்கிறாய்!


- சாய்கழல் சங்கீதா


------------------

தமிழ் வானில்... 


எட்டயபுரம் இந்நாள் குட்டி ஞாயிறு உதித்தது

   எவரோ நமை ஆள்வதா, ஏனென வெகுண்டது


சிட்டாய்ச் சிறகடிக்க விடுதலை வான் தேடியது

   சிறுவனாயது கிடைக்கு முனே பாடி ஆடியது


கட்டிய மனைவியின் கரங்கோத்துத் திரிந்தது

   கண்களைச் சூரியரோ? சந்திரரோ? வியந்தது


பட்டினி ஒருவர் எனினும் பாரை எரிக்க முனிந்தது

   பாரில் நம் பாரதமே சிறந்ததென சிலாகித்தது


எட்டுத் திசை மொழிகளில் தமிழே இனிதென்றது

   ஏக வசனத்தில் அக் காலனையும் காய்த்தது 


பட்டியில் பாவையர் தாம் கிடப்பதை வெறுத்தது

   பட்டங்களோடு அவரைச் சட்டம் செயச் சொன்னது


கட்டுக் கட்டாய்த் தமிழ்க் கவிதைகள் ஈந்தது

   கரு மீசை முறுக்கினால் கண் முன்னே நிற்பது


வட்ட நிலவாய்த் தமிழ் வானில் என்றும் உலவும்

   வாழும் நம் மகாகவி பாரதியின் பெயரும். 


__  குத்தனூர் சேஷுதாஸ்

------------------------------------

மகா கவி பாரதி நினைவு தினம்

--------

தமிழ்த்தாய் பெற்றெடுத்த

காவியத்தலைவன்.


வலவனிலா வானூர்தி

( drone) உதவியின்றி

பல்நோக்கு கொண்ட

படைப்பாளி.


காக்கைச்சிறகின்

நிறத்திலே இறைவனைக்கண்டு

இயற்கையிலே ஆன்மிகம் படைத்த

இரசவாதி.

பாலம், நீர்வழி இணைப்புகள், பண்டமாற்றுகள், தொலைத்தொடர்புகள

எனப்பல துறைகளிலும்

தொலை நோக்கு வழி

காட்டிய கவிப்பொறியாளர்!


ஆணுக்கிங்கே பெண்

இளைப்பில்லை என்று

கும்மி அடித்த சமத்துவன்!


ஓயுதலும் தலை சாயுதலும் இன்றி

என்றும் அவர்தம்

நினவை நெஞ்சில்

இருத்தி நற்றமிழ்

நம் நாவில் என்றும்

நிலைக்க அவர் தாள்

பணிவோம்.🙏🙏


சமூக அவலங்களைக்

கொன்றொழிக்கும்

கொற்றவை ஆவேசம்

கொண்ட கவிக்காளி!


--மோகன்

Monday, December 9, 2024

கத்திரிக்காயும் கந்தவேலும்

 ०●०●०●०●०●०●०●०●०●०●०●०●०●

    கத்திரிக்காயும் கந்தவேலும்

०●०●०●०●०●०●०●०●०●०●०●०●०●


நல்ல அசந்த தூக்கத்தில் வேலு என்கிற ௧ந்தவேல் இருந்தான். மணி காலை ஆறரை. அவனது செல் ஃபோன் சிணுங்கியது. "டுடே இஸ் ஸாடர்டே. குட் மார்னிங். ப்ளீஸ் வேக் அப்" என்று கைபேசி பெண் குரலில் இனிமையாக வந்தனம் சொன்னது. மனதினுள் 'எவன்டா இந்த செல் ஃபோனக் கண்டு பிடிச்சான். சனிக்கிழமை கூட நிம்மதியா தூங்க விட மாட்டேங்குது..' -என முனகியவாறே கைபேசியை எடுத்து அலாரத்தை ஆஃப் செய்து விட்டு போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு மீண்டும் உறங்க ஆரம்பித்தான். 


"ஐயாவுக்கு அலாரம் அடிச்சா போதாதோ.. நாங்க வந்து திருப்பள்ளி எழுச்சி பாடி எழுப்பணுமோ.. இப்படி ஒரு சோம்பேறிய புள்ளயா பெத்து என் தலைல கட்டிட்டு ஒங்க அம்மா -புண்ணியவதி போய் சேர்ந்தாச்சு' - அவன் மனைவி சுலோ என்கிற சுலோச்சனா


"ஐயய்யோ.. அம்மாவ இழுத்துட்டா.. அடுத்து என்ன உரிச்சு தொங்க விட்டுடுவா.."- என எண்ணியவாறே படபடப்போடு வாரி சுருட்டி எழுந்தான் வேலு. சுலோ ஏதும் பேசும் முன்னே வேகமாக பாத்ரூமுக்குள் சென்று தாளிட்டுக் கொண்டான். வெளியே அவள் பேசினாலும் காதில் விழாதவாறு குழாயைத் திருகி பக்கெட்டில் தண்ணீர் பிடித்தான். சில சமயங்களில் அதையும் மீறி சுலோவின் குரல் கேட்கும். இன்று ஏனோ கேட்கவில்லை. நிம்மதி பெருமூச்சு விட்டவாறே, காலைக் கடன்களை முடித்து விட்டு வெளியே வந்தான்.


ஹாலில் வந்து சேரில் அமர்ந்து கையில் ரிமோட்டை எடுத்தான். டிவியை ஆன் செய்யும் முன், சுலோ பற்றி ஞாபகம் வந்ததால் அம்முயற்சியைக் கைவிட்டான். கையிலிருந்த ரிமோட்டைக் கீழே வைத்து விட்டு, எகனாமிக் டைம்ஸ் பத்திரிக்கையை எடுத்து நோட்டம் விட ஆரம்பித்தான். இரு நாட்கள் முன் அவன் வாங்கிய கம்பெனி ஷேர்கள் எல்லாம் தாறுமாறாய் இறங்கியிருந்தன. அவனை அறியாமல் அவனது வயிறை அச்செய்தி கலக்கியது. 'நாம ஷேர் வாங்கும் போதுதானா டவுன்ஃபால் வரணும்.. நம்ம போதாத காலம்' -என மனம் புழுங்கினான். இனிமேல்தான் போதாத காலம் ஆரம்பிக்கப் போகிறது என தெரியாமல். அவன் ஷேர்கள் விழுந்த கவலையில் இருந்த போது 'டங்' என்ற சத்தத்தோடு காஃபி டம்ளர் டைனிங் டேபிள் மேல் வைக்கப் பட்டது. திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தான் வேலு.


"என்ன.. திரும்பவும் தூக்கமா.. இல்ல ஃப்ரென்ட்ஸ்களோட வீக் என்ட் செலிப்ரேஷன் பத்தி தீவிர யோசனையா" -சுலோ


"இல்லே.. சும்மா பேப்பரை பாத்துட்டு இருந்தேன்" -வேலு


"அப்புறம் ஏன் மூஞ்சி பேயடிச்ச மாதிரி இருக்கு"


மனதினுள் புழுங்கியவாறே, "அதான் நீ இருக்கியே" -என்று வேலு உளறினான்


"என்ன சொல்றீங்க"


"இல்ல... இல்லே.. பேய் வந்தாலும்.. உம்ம்..  என்னக் காப்பாத்த... அதான் .. நீ இருக்கியே" -என மேலும் உளறிக் கொட்டி சமாளித்தான்.


"சரி.. சரி.. சீக்கிரமா காஃபியைக் குடிங்க"


அடுத்த நொடி காஃபி குடிக்கலானான். அன்று என்னவோ காஃபி அவ்வளவு பிரமாதமாக இருந்தது. சுவைத்துக் குடித்தான். காஃபி தீர்ந்து விட்டது. அதன் சுவையும் மணமும் நன்றாக இருந்ததால்


"சுலோ..." -என அழைத்தான்.


"என்ன.." -ஓங்கி உரத்த குரலில் பதில் வந்தது. 


"இல்ல... வந்து... ம்ம்.. இன்னொரு கப் காஃபி கிடைக்குமா?"


"அதெல்லாம் கிடையாது. இன்னிக்கு பொங்கல்-வடை பண்ணப் போறேன்.. கத்திரிக்கா கொத்சு சூப்பரா இருக்கும். சட்டைய மாட்டிட்டுப் போயி கத்திரிக்கா ... நல்ல எளசா பாத்து வாங்கிட்டு வாங்க..

நம்ம கந்தசாமி அண்ணாச்சி கடைலயே வாங்கிட்டு வாங்க. சட்னி அரைக்க நல்ல முத்துன தேங்காயா பாத்து ஒண்ணு வாங்கிட்டு வாங்க.. மசமசன்னு நிக்காம சட்புட்டுனு சட்டையப் போட்டுகிட்டு கிளம்புங்க"


இதுக்கு மேல நிக்க வேலுவுக்கு பைத்தியமா பிடிச்சிருக்கு.. சட்டையை மாட்டி பட்டன்களை போட்டவாறே கிளம்பினான்


"கத்திரிக்கா எப்படி வாங்கணும்னு சொல்லிருக்கேன்ல.. நாமக் கத்திரிக்கா வேணாம். கல்லு மாதிரி இருக்கக் கூடாது.. காம்பு காஞ்சு போனதா இருந்தா காய் பழசுன்னு அர்த்தம். அமுக்கிப் பாத்து பஞ்சு மாதிரி இருக்கறதா வாங்கணும்.. குறிப்பா பூச்சி அரிக்காததா பாத்து எடுக்கணும். என்ன தெரியுதா... அந்தத் தேங்கா.  அத மறந்துறாதீங்க.." -சுலோ.


சரியாக செருப்பு மாட்டி கிளம்பும் வரை அவளது குரல் தொடர்ந்து கொண்டே இருந்தது. ஷேர்களின் வீழ்ச்சி அவன் மனதை விட்டு ஓடிப் போய் விட்டது. இப்போது கத்திரிக்காய் நல்லதாக வாங்கி வர வேண்டும் என்ற கவலை ஆக்கிரமித்துக் கொண்டது. தெரு முக்கில் உள்ள கந்தசாமி அண்ணாச்சிக் கடைக்கு குழப்பத்துடனே வந்து சேர்ந்தான். கடையில் எதிர் வீட்டு சுந்தரம் நின்றிருந்தார்.


"என்ன வேலு ... காலைலே டோஸ் விழுந்துச்சா... குழப்பத்துல சட்டை பட்டன மாத்தி மாத்தி போட்டு வந்துருக்கே பாரு" -நக்கலாகக் குசலம் விசாரித்தார். கந்தசாமி அண்ணாச்சி நமட்டு சிரிப்புடன்,


"சார்.. சட்டையப் போட்டுகிட்டு வந்தார்ல.. அத பாருங்க... அதயும் மறந்துட்டு வரலேல.." -நமுட்டு சிரிப்பைத் தொடர்ந்தார்.


"அண்ணாச்சி பாகக்காய் வேணும்"-என பதற்றத்தோடு சொன்னான். 


"அதோ.. இருக்கு போய் எடுத்துக்குங்க தம்பி" - என காய்கறிகள் அடுக்கி வைத்திருந்த அலமாரியைக் காட்டினார்.


"ஏம்பா.. வேலு... இன்னிக்கு சுலோச்சனா பொங்கல் பண்ணப் போறதா சொல்லிட்டு கத்திரிக்கா கொத்சு செய்ய ரெசிப்பி கேட்டு என் வீட்டுக்காரிகிட்டே குறிப்பு எடுத்துட்டு இருந்தாளே காலைல.. நீ எதுக்கு பாகக்காய் கேக்குறே?" -இந்த முறை சுந்தரத்தின் குரலில் அக்கறை தெரிந்தது.


ஷாக் அடித்தாற் போல் துள்ளிய வேலு, பரிதாபமாக அண்ணாச்சியைப் பார்த்தான். அவரும் சிரித்தவாறே,


"தம்பி.. ஒண்ணும் பதட்டப் படாதீங்க.. அதோ அந்த மூலைல இருக்குதே அது கம்போடியா கத்திரிக்காய்.. தேனா இருக்கும். ஊட்டச் சத்து அதிகமாம்.. சூப்பர் மார்க்கெட்ல கிலோ இருநூறு ரூபா.. நம்மகிட்ட நூத்தம்பதுதான்.. சும்மா அள்ளுங்க" -என்றார்.


அவன் கண்ணுக்கு அது சாதாரணக் கத்திரிக்காய் ஆகத்தான் தெரிந்தது. ஏதோ தட்டுத் தடுமாறி அமுக்கிப் பாத்து பொறுக்க ஆரம்பித்தான்.


"தம்பி.. பாத்து.. நீங்க அமுக்குற அமுக்குல கத்திரிக்கா இங்கேயே கொத்சாகிடப் போகுது" -அண்ணாச்சி..


ஒரு வழியாக கத்திரிக்காயும் தேங்காயும் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தான். சுலோ சொல்லிய படி, தேங்காயை உடைத்துத் தர முனைந்தான். தேங்காய் அழுகலாய் இருந்தது. பரிதாபமாக சுலோவிடம் அதைக் கொண்டு வந்தான். 


"என்ன... தேங்கா அழுகலா... நினச்சேன்.. ஒங்க முகத்துலேயே ஏமாளின்னு எழுதி ஒட்டிருக்கே.. அதான் அண்ணாச்சி ஏமாத்திட்டாரு.. இதோ பாருங்க நீங்க வாங்கி வந்த கத்திரிக்கா லட்சணத்த.. பாதிக்கு மேல வேஸ்ட்.. முத்தினது பூச்சி அரிச்சதுன்னு பாத்து பாத்து வாங்கிட்டு வந்துருக்கீங்க"- என பொரிந்தாள்.


"அண்ணாச்சிதான் அமுக்கக் கூடாதுன்னு..."-என இழுத்தான்.


"அந்தாளு அப்படித்தான் சொல்லுவாரு.. ஒங்களுக்கு புத்தி எங்கே போச்சு.."


பாதிக்கு மேல் கத்திரிக்காய் தேறவில்லை. உடனே அவளே கடைக்கு வேகவேகமாக கிளம்பினாள். கால்மணி நேரத்தில் திரும்பி வந்தாள்


"நம்ம டே ஒன் சூப்பர் மார்க்கெட்ல கலிஃபோர்னியா கத்திரிக்கான்னு கொட்டி வச்சிருக்கான். இருநூத்தம்பது ரூபாதானா.. கால்சியம், விட்டமின், ப்ரோடீன் எல்லாம் இருக்காம். டி20 வேர்ல்ட் கப் ஜெயிக்குறதுக்கு முன்னாடி இந்தியன் டீம் இந்தக் கத்திரிக்கா சூப்தான் சாப்பிட்டாங்களாம். அஸ்வின் யூட்யூப்ல சொன்னாராம்மா.. "-சுலோ


வேலுவுக்கு இந்தக் கத்திரிக்காயும் தான் வாங்கி வந்ததைப் போலத்தான் தெரிந்தது. அது எப்போ நமக்குத் தெரியாம அஸ்வின் யூட்யூப்ல சொன்னாரு என நினைத்தாலும் அதைத் தொடராமல் அப்படியே விட்டு விட்டான். அவள் நறுக்கத் துவங்கினாள். இவன் சிந்தனை வயப் பட்டான். கத்திரிக்காய் கம்போடியாவில் இருந்து வருகிறதா.. இல்லை கலிஃபோர்னியாவில் இருந்து வருகிறதா.. அதை முதலில் தெரிந்து  கொள்ள ஆவல் மேலிட்டது. சட்டென அவனது அலுவலக நண்பன் அன்புநாதன் தாவரவியல் நிபுணன் என்பதால் அவனைக் கேட்கலாம் எனத் தோன்றியது.

உடனே ஃபோன் செய்தான்.


அவனோ, (Solanum melongena) சொலானம் மெலோஞ்சினா, சொலானேசியே (Solanaceae) என்ற குடும்பம், இக்குடும்பத்தில் தக்காளி, உருளை எல்லாம் வரும், ஆங்கிலத்தில் இது எக் ப்ளான்ட் (egg plant) என அவனுக்குத் தெரிந்த எல்லா விஷயத்தையும் சொன்னானே தவிர கம்போடியா, கலிஃபோர்னியா பற்றி ஏதும் கூறவே இல்லை.


"அன்பு நான் கேட்டதுக்கு பதிலே சொல்லல. நீ பாட்டுக்கு ஏதேதோ சொல்ற"


"ப்ரோ... கத்திரிக்காய் பத்தி டீடைல்டா சொல்லணாம்னு பாத்தேன்.. அது எங்கேந்து இம்போர்ட் ஆகுதுன்னு எல்லாம் தெரியாது.. சாரி." -என்றான்.


கடுப்போடு ஃபோனைக் கட் செய்து விட்டு சமையலறைக்குத் தண்ணீர் குடிக்கச் சென்றவன் கண்ணில் எதேச்சையாக சுலோ கழித்து ஒதுக்கி வைத்திருந்த வீணான கத்திரிக்காய் குப்பலைப் பார்த்தான். முக்கால்வாசி வீணாகிப் போயிருந்தது. சிவந்து போயிருந்த முகத்தோடு சுலோ


"என்ன வேவு பாக்குறீங்க.. இவ வாங்கிட்டு வந்த கத்திரி நல்லா இருக்குதான்னு பாக்க நோட்டம் விடத்தானே வந்தீங்க. அயோக்கியப் பசங்க.. இம்போர்டட் வெரைட்டினு நல்லா ஏமாத்துறாங்க" 


வேறு வழியில்லாமல் ஸ்விக்கியில் ஆர்டர் செய்து பொங்கல் வடை சாப்பிட்டார்கள். வேலுவிற்கு சனி, ஞாயிறு இரண்டு நாளும் கத்திரிக்காய், கம்போடியா, கலிஃபோர்னியா என்பதே மனதில் சுழன்று கொண்டிருந்து.


திங்கள் கிழமை காலை எழுந்து, காலைக் கடன்களை முடித்து விட்டு உணவருந்தி அலுவலகம் கிளம்பினான். பல்ஸர் வண்டியில் சுலோவை அவள் ஆஃபிஸில் இறக்கி விட்டு தனது அலுவலகம் சென்றான். பதினோரு மணிக்கு சி.ஈ.ஓ. உடன் கான்ஃபரன்ஸ் கால் இருந்தது. அதற்கு தயாராகிக் கொண்டிருந்தான். அவன் கேபினுக்கு வந்த அன்புநாதன் 


"என்ன ப்ரோ.. கத்திரிக்கா எங்கேந்து வந்ததுன்னு தெரிஞ்சுதா.. ஒரு முக்கிய விஷயம் சொல்ல விட்டுட்டேன்.. ஹைப்ரிட் வெரைட்டி நிறைய வருது. அது எப்படின்னா.."-எனத் துவங்கியதும் கையெடுத்துக் கும்பிட்டு விட்டு கான்பரன்ஸ் அறையை நோக்கி விரைந்தான். மீண்டும் மனதை கத்திரிக்காய் ஆக்கிரமித்தது. தான் தயாரித்து வைத்திருந்த விஷயங்கள் எல்லாம் அவனுக்கு மறந்து போயின. மனசெல்லாம் கத்திரிக்காயே வியாபித்தது.


கூட்டத்தில் சி.இ.ஓ. ஒரு பெரிய லெக்சர் கொடுத்து விட்டு, 


"இந்தப் புதிய ப்ராஜக்டுக்கு ப்ரான்ஞ் ஆஃபிஸ் எங்கே வரப் போகுது தெரியுமா" -எனகேட்டார்


"கத்திரிக்காய்..." -வேலு


"மிஸ்டர் கந்த்வேல்.. வாட்.."- சி.ஈ.ஓ.


"நோ சார்.. சாரி.. " எனத் தடுமாறி... "கம்போடியா.."- என்றான்


"வாவ்... ப்ரில்லியன்ட்.. இன்னிக்குக் காலைலேதான் இந்த முடிவு எடுத்தோம். எப்படி இவ்ளோ கரெக்டா கண்டு பிடிச்சீங்க.." -சி.ஈ.ஓ.


"ஹி... ஹிஈஈ.. ரெண்டு நாளா அதான் சார் யோசனயா இருந்துச்சு.." -வேலு. அவன் சொன்னது கத்திரிக்காயைப் பற்றி.


"சூப்பர். வீக் எண்ட்லே கூட ஆஃபிஸ் ப்ராஜக்ட் பத்தி யோசிச்சுட்டே இருந்தீங்களா.. வாட் எ டெடிகேசன்... சரி .. இந்த ப்ராஜக்ட்டோட ஹெட் க்வார்டர்ஸ் எங்கே இருக்கப் போகுதுன்னு தெரியுமா... சொல்ல முடியுமா..." -சி.ஈ.ஓ.


கத்திரிக்காயின் பிடியில் இருந்த வேலு, 


"கலிஃபோர்னியா.."-என்றான்.


"வொண்டர்ஃபுல்.. அமேசிங்... அன்பிலீவபிள்.. எப்படி இது சாத்தியம்.. இவ்வளவு திறமை சாலியான உங்களேயே இந்தப் ப்ராஜக்டோட ஏசியன் இன்-சார்ஜ்-ஆ போட்றேன். ஒங்க திறமையைக் காட்டி இந்தப் ப்ராஜக்ட சக்ஸஸ்ஃபுல்லா

ஆக்குங்க.. ஆல் தி பெஸ்ட்.. இப்பவே உங்க ஆஃபிஸூக்கு மெயில் அனுப்புறோம்.. " -சி.ஈ.ஓ.


அலுவலகமே ஸ்தம்பித்தது. ஏசியன் இன் சார்ஜ் என்பது மிகப் பெரிய பதவி. பல சீனியர்ஸ் இருக்கையில் எப்படி வேலுவிற்கு இது கிடைத்தது.  ப்ராஜக்ட் பற்றி எப்படித் துல்லிய தகவல்கள் அவனுக்குத் தெரிய வந்தது என குழப்பத்தில் மூழ்கினர். இச்செய்தி வேலுவிற்கு சந்தோஷத்தை ஒரு புறம் தந்தாலும், கத்திரிக்காய் குழப்பம் நீங்கவேயில்லை. மீட்டிங் முடிந்து வெளியே வந்த கையோடு சுலோவுக்கு ஃபோன் செய்து நடந்ததை அப்படியே கூறினான். 


"சுலோ.. ரொம்ப ஹேப்பியா இருக்கு.. என் குழப்பமே நல்லத செஞ்சுருக்கு' - வேலு


"என்னவோங்க.. நம்ம நல்ல மனசுக்கு நல்லதுதான் நடக்கும்" - சுலோ


திட்டும் போது உங்களுக்கு எதுவுமே தெரியாது என்று சொல்பவள் இப்போது 'நம்ம நல்ல மனசு' ன்னு சொல்றா பாரு.. என மனதிற்குள் நினைத்தபடி,


"அது சரி.. கத்திரிக்காய் வந்தது கம்போடியாவா இல்ல கலிஃபோர்னியாவா?" -எனக் கேட்டான்.


"அது காட்டாங் குளத்தூராகவே இருக்கட்டுங்க.. நமக்கு நல்லதுதானே.. ஒங்க ப்ராஜக்ட்ல நாமளும் அங்க போக வாய்ப்பு வந்தா.. (பார்ரா... ஆசைய...) அங்கேயே போய் விசாருச்சுப்போம் (இவளும் வருவாளாமே... நம்மள நிம்மதியாவே விட மாட்டாளா)"


"யா... டார்லிங்.. சூப்பர் ஐடியா.. அப்படியே செஞ்சுடுவோம்..


கந்த வேலு அண்ணாச்சி செய்தது போல சூப்பர் மார்க்கெட் செய்தது போல பில்ட் அப் செய்தே ப்ராடக்ட்ஸ் விற்பனையில் தனியிடம் பெற்று மேலும் மேலும் உயர்ந்து அந்தக் கம்பெனியில் பிரதான நபராக ஆகிப் போனான். உலகத்தின் பல நாடுகளுக்குப் போய் வருகிறான். ஆனால் அவனுக்கு இன்று வரை அவனது குழப்பம் தீரவில்லை. உங்களில் யாருக்காவது விடை தெரிந்தால் கூறுங்கள் கம்போடியாவா?

கலிஃபோர்னியாவா?


*உங்கள்_தோழன்_ஸ்ரீவி*

Saturday, December 7, 2024

கொள்ளை போகின்றன

 கொள்ளை போகின்றன


வானூர்தியில் இந்நாள் எங்கும் போகிறோம்

   வடக்குப் பட்டு போகவும் வாகனம் ஏறுவோம்


ஆன்லைனில் எதையதையோ வாங்கிக் குவிக்கிறோம்

   அடுத்த நாளே அதைத் திருப்பி விடுவோம்


தேன் எனினும் என்ன சுவை (flavour) உடன் கேட்கிறோம்

   தென்றல் வீச, நிலவு காய்ந்தும் திரையில் தொலைகிறோம்


தான் பேசும் தாய்மொழியைத் தலையில் தட்டினோம் 

   தஸ்ஸு, புஸ்ஸு ஒன்றைத் தலை மேல் வைத்தோம்


மீன்களைத் தொட்டியிலிட்டு அழகு பார்க்கிறோம்

   மீண்ட தாயை ஈன்று நமை வேண்டாம் என்கிறோம்


நான், எனது என்றே நாளும் நினைக்கிறோம்

   நம்மவர், உறவுகளை நாடாமல் போனோம்


ஏன் எனும் வினாக்கள் கூகுளிடம் கேட்போம்

   எதிரே அறிந்தவரிடம் ஏனோ யோசிக்கிறோம்


கூன் விழ, விழி பாழாக கைபேசி உண்டாம்

   கொள்ளை எலாம் போகுமுன் விழித்தல் நன்றாம். 


__  குத்தனூர் சேஸுதாஸ்

Wednesday, December 4, 2024

எல்லாரும் பங்காளிகளே (வனவிலங்கு பாதுகாப்பு)

 எல்லாரும் பங்காளிகளே


எனக்கு, உமக்கு மட்டுமா இவ்வுலகு சொந்தம் ? 

   எல்லா உரிமை உண்டு எவ்வுயிர்க்கும்


பனையும், வாழையும் நம் பங்காளிகள்

   பட்டாம்பூச்சி, தேனீ, பச்சைக் கிளிகள்


கனைக்கும் குதிரை, காண்டாமிருகமும் சேரும்

   கரப்பான் பூச்சி, தேளும் கணக்கிலே வரும்


அனைவரும் சேர்ந்து வாழ எல்லார்க்கும் நன்று

   அதனாலே வனவிலங்கு பாதுகாப்பு இன்று (4, டிசம்பர்). 


__  குத்தனூர் சேஷுதாஸ்

தேசிய கடற்படை நாளில்...

 தேசிய கடற்படை நாளில்... 


வடக்கே இமயத் தொடர்  இயற்கை மதிலாம்

   வாலாட்டும் பகைக்கு நம் இராணுவ பதிலாம்


விடாமல் நம் எல்லையின் ஒர் அங்குலமும்

   விண்ணிலிருந்து கண்காணிக்கும் வீரரும் உண்டாம்


துடிப்பானப் படைவீரர் அலைகடல் மேலாம்

   துஞ்சாமல் விழித்திருப்பார் இரவு பகலாம்


" கடற்படை தினம் " (4, டிசம்பர்) இன்று கொண்டாட்டமாம்

   கரங்குவித்து அன்னாரை வணங்குவோமாம். 💐🙏🇮🇳


__  குத்தனூர் சேஷுதாஸ்


-----------------------------

உவர் காற்றில் காலங் கழித்து

உவகையுடனே

காவல் காப்பதை

உன்னதக் கடமையாய்

கருதி வாழும்

கப்பற் படைக்கு

வணக்கஞ் சொல்வோம்!


அவர்தம் தியாகத்திற்கு

வந்தனம் சொல்வோம்!

-ஸ்ரீவி

--------------------

தேசிய கடற்படை நாள்

----------------------

இராசேந்திரன் நாவாய் அன்று ஒரு கடல் காத்தது

இன்று மூவர்ணக்கொடி பட்டொளி வீச, முக்கடலையும் 

காப்பது நமது'நேவி'!


அலை கடல் ஓய்ந்தாலும்

ஓயாது இவர்தம்,

இமைப்பொழுதும்

சோராது செய்யும்

நாடு காக்கும் பணி.


மெய்வருத்தம் பாராது

கண்துஞ்சாது கடமை ஆற்றும் இவர்களால்

நாம் நிம்மதியாக,

கண் துஞ்ச முடிகிறது.


அங்கங்கள்யாவும்

தரையில் பட வணங்கினாலும்

நாம் செலுத்தும்

அஞ்சலி, பெருங்கடலில்

ஒரு துளி நீர் சேர்த்தமைக்கு ஒப்பாகும்.


-மோகன்

Tuesday, December 3, 2024

கடந்து வந்த விளக்குகள்

 கடந்து வந்த விளக்குகள்


தெருவிளக்கில்லாத காலம் அன்றாம்

   தினம் வரும் திங்களும் ஓடி ஒளியுமாம்


திரியிட்ட தீபங்கள் அந்தியில் உயிர்ப் பெறும்

   திண்ணையில் படுக்கும் வரை நின்று எரியும்


விருந்தினர் வருவதும் அடிக்கடி நிகழும்

   விளக்கைச் சுற்றி உண்போம் உணவும் 


இருளில் மிதிவண்டியில் தனியே போவோம்

   எம்ஜிஆர் பாடல்களே துணையாய்த் தொடரும்


துருப் பிடித்த அவ் வண்டியின் சத்தமே போதும்

   தொலைவில் வருவோர்க்கு சமிக்ஞை செய்யும்


வரப் பிரசாதம் பின்னர் டைனமோ வந்தது

   வண்டியின் வேகம் கூட ஒளியும் கூடியது


அரிக்கேன் விளக்கு அடுத்து உதவ வந்தது

   அதில் படித்தே வேலை, பெண்ணும் கிடைத்தது


கரும்பாம் அக்காலம் திரும்ப தான் வருமா?

   கண்ணாடி இலாச் சிறாரைக் காண முடியுமா? 


__  குத்தனூர் சேஷுதாஸ்

Sunday, December 1, 2024

 கோரிக்கை ஏற்று...


கோர தாண்டவமாடும் எனக் கூறப் பட்டது

   குளிரூட்டச் சென்னை, ஊட்டி ஆனது


போருக்கு ஆயத்தமென அரசு அறிவித்தது

   புள்ள குட்டிகள் நினைத்து மனம் பதைத்தது


கோரிக்கை வைத்தேன் ஏற்று விலகிச் சென்றது 

   கோலம் போடச் சொல்லி வீதிகள் கழுவியது


ஏரி, குளங்கள் எல்லாம் நீரால் நிரம்பியது

   எம் பூர்வா குடியிருப்பின் எழிலும் கூடியது


தேராய் நின்ற மரமல்லி வேரோடு சாய்ந்தது

   திரு. ராஜா முகமதுவைத் திடுக்கிடச் செய்தது


சூரியன் தலை காட்ட யோசிக்க வைத்தது

   சொர்க்க வாசல் திறந்தது, ஈ ஓட்டுது


ஓராயிரம் பட்டாம்பூச்சி எங்கே போனது? 

   ஒருவரும் அறியவில்லை, கண்ணீர் வருது


" சாரே! மீண்டும் வருவேன் வேறு பேரில் " இது புயல்

   " சகோதரி மழை நீரைத் தடுக்காதீர் வழியில் "


__  குத்தனூர் சேஷுதாஸ்

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...