இத்தாலியிலே பிறந்து
இந்தியாவிலே வளர்ந்தேன்!
முதுகெல்லாம் தத்துவம் பேசும்-
குறளகமான நூலகம்தான்!
ஊக்கு நுழையாத சந்திலும்
மூக்கை நுழைப்பேன்!
சந்து பொந்துகளே நகர்வலம் -அதிலும்
குன்றும் குழியும் எனக்கு குதூகலம்!
பிரசவத்துக்கு இலவசம்தான்-
அதிசியமாய் சுகபிரவசமும் ஆவதுண்டு!
அன்பு என்றால் குறுக்கு வழி-அதுவே
வம்பு வந்தால் சுற்று வழி!
மணமூட்டி, குளீரூட்டியுடன் ஒய்யாரமாக
நாலு சக்கர மேனாமினிக்கி - மகிழுந்து!🚗
குறுக்கே புகுந்து குலை நடுக்கும்
இரண்டு சக்கர மினுமினிக்கி- விசையுந்து!🏍️
பச்சை மூக்குத்தி மஞ்சள் பல்லக்கு -நான்
ஏழை பங்காளியின் நல்மருந்து !
நடிகரெல்லாம் நாட்டை ஆள
புகைப்படத்தை முகத்தில் சுமந்து-நான்
ஏற்றிவிட்ட எத்தனைபேர் அரசியலில்
எனக்கோ ஓட்டளிக்க அங்கீகாரம் தரலை?
மூன்று சக்கரத்தில் ஆறை(ளை) சுமந்து—
ஒவ்வொரு பயணமும் சிறிய யுத்தம்
கஞ்ச பயணிகள் தஞ்சம் கேட்டால்
ஒற்றை அங்குலமே ஓட்ட மிஞ்சும்!
திரும்பி வர சவாரிக்குதான் பஞ்சம்!
அதனால் அத்துவான காடே மஞ்சம் !
வீட்டின் கவலைகள் காற்றோடு பறக்க…
முன்னே அமர்ந்து முறுக்கிப் பிடி—
ஒலிகொம்பால் வீதியை அழைப்பேன்!
வலி வியர்வையால் சாதியை துடைப்பேன்!
முச்சக்கரத்தில் உலகளக்கும்-
வாமனன் நான்!
பயணிக்கு தேவை என்றால் -ரத்தம்
கொடுக்கும் சிபி சக்கரவர்த்தி நான்!
🛺
No comments:
Post a Comment