Sunday, March 22, 2026

உலக தண்ணீர் நாள் (22, மார்ச்)

 உலக தண்ணீர் நாள் (22, மார்ச்)


ஆராரோ வருவதும், போவதும் இவ் வையம் 

   அனைவர்க்கும் நீர் தேவை உண்டோ ஐயம்?


நீரின்றி அமையாது இவ்வுலகு என்றான் 

   நெஞ்சை தமிழரின் நிமிரச் செய்தான் 


பாரில் நீர் இல்லை என்றால் நினைத்துப் பாரும் 

   பச்சை வண்ணம் அஃது இல்லாமலே போகும் 


போர் அதால் நேரும் அத்தனை அழிவும் 

   *புனல் இன்றி புவி ஆகும் ஒரே மயானம் 


கார் மேகம் கருக்கொண்டு மேலே எழும் 

   கானமயில் மட்டுமா உலகே மகிழும் 


தேரில் பவனி அது எத்தனை சுற்றும்? 

   தெண்ணீர் இலாமல் தொண்டை வற்றும் 


வேர் நேராம் நீரும் பூமியின் அடியில் 

   விவசாயம் நிகழ்வது அவளின் மடியில் 


சீரான நீர்த் தேக்கம் உயிர்கள் இங்கே உய்யும் 

   செய்யாவிடிலோ வரும் தலைமுறை வையும்.


* புனல் - நீர் 


__. குத்தனூர் சேஷுதாஸ் 22/3/2026


======================

நீர்

உயிர் இயக்கத்தின் ஆதாரம்

நிலத்தின் அடியிலும்

கிடைக்கும் மூலாதாரம்


நன்னீரைத் தொலைத்து

கண்ணீரில் கரையும்

மாந்த இனம்


இயற்கையின் போக்கை மாற்றி

இரண்டகம் செய்யும் மனிதர்

வன்முறை


வெள்ளமும் வறட்சியும்

விரட்டிடும் தேசம்

இந்தியா


நீருக்காய் போர்

நீண்ட நாட்களில்லை

விரைவில்


தண்ணீரைக் காத்திட

தேசம் கடந்து

கை கோர்ப்போம்🙏

- ஷங்கர்

===============

உலக தண்ணீர் தினம்

        இன்று 22/03/2026)


" நீரின்றி அமையாது. உலகு" என்றார் வள்ளுவர். அன்றைய மயிலை நீர்வளம் மிக்கதாக இருந்திருக்குமோ!


இன்று நீரின்றி , குமையும் உலகு எனப்புலம்புவாரா?


நீர் மேலாண்மை  என்பது

 நீர் மேல் ஆளுமை( ஆக்ரமிப்பு?) என்றாகிவிட்டது. 


இந்த நீரின் மகத்துவம்

 நம்செம்மொழியில் ஆறு என்பதால் அறியப்படுகிறது. 

ஆறு என்றால் நதி  என்றும் வழி என்றும் பொருள் கொள்ளலாம் . 

இந்த  வழி என்பது நீர் செல்லும்வழி. 

 போரினால்,எங்கோ நீர் வழியை அடைத்தால், நாம் நம் வீட்டில் கட்டை அடுப்பு 

மூட்ட ,கற்றுக்கொள்ள வேண்டிய நிலை, இன்று!


என்ன தீர்கதரிசனம்!

நீரின்றி உலகோ  உலையோ அமையாதுதான்!


- இ.ச.மோகன்,

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...