பாகம் 7
பயணங்கள் முடிவதில்லை
*இந்த பயணக் குறிப்புகள் தீர்ப்புகள் அல்ல; அனுபவங்களின் தடங்கள் மட்டும். நான் கண்ட காட்சிகள், நான் கணக்கிட்ட எண்ணங்கள், நான் உணர்ந்த மாற்றங்கள் அவற்றின் பதிவு. பார்வைகள் பலவாக இருக்கலாம்; என் பார்வை இவ்விதம்.*
*அலாமோ – ஒரு வரலாற்றுப் பயணம்*
San Antonio நகரின் மையத்தில் அமைந்துள்ளது Alamo. இன்று இது ஒரு சுற்றுலா இடமாக இருந்தாலும், அதன் பின்னால் மறைந்து கிடப்பது மிகப் பெரிய வரலாறும் இரத்தத்தால் எழுதப்பட்ட போர்கதையும் ஆகும்.
அலாமோ கட்டிடத்தை பார்க்கும் போது அது என்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை என்பதே உண்மை. வெளியே பார்த்தால் அது ஒரு சிறிய *பழமையான தேவாலயக் கட்டிடம் போலவே தெரிகிறது.*
அங்கு நுழைவதற்கு நுழைவுச்சீட்டு இலவசம். உள்ளே செல்லும் முன்பே மிகவும் தெளிவாகவும் ஒழுங்காகவும் வழிநடத்துகிறார்கள். பார்வையாளர்கள் குழப்பமடையாமல் எங்கு செல்ல வேண்டும், என்ன பார்க்க வேண்டும் என்று மிக நுட்பமாக வழிகாட்டுகிறார்கள்.
அங்கு உள்ள ஒரு அதிகாரப்பூர்வ வழிகாட்டி மிகுந்த உணர்ச்சி பூர்வமாக அலாமோவின் வரலாற்றை விளக்கத் தொடங்கினார். அப்போது தான் அந்த இடத்தின் உண்மையான மகிமை மெதுவாக புரிய ஆரம்பித்தது.
1836 ஆம் ஆண்டு நடைபெற்ற Alamo போர் பற்றி அவர் விளக்கினார். மெக்சிகோவின் அதிபரும் படைத்தலைவருமான Santa Anna தலைமையிலான பெரிய படை San Antonio நகரை முற்றுகையிட்டது.
அந்த நேரத்தில் அலாமோ கோட்டைக்குள் இருந்தவர்கள் சுமார் 200 டெக்சாஸ் போராளிகள் மட்டுமே.அந்த நேரத்தில் அலாமோ கோட்டைக்குள் இருந்தவர்கள் சுமார் 200 டெக்சாஸ் போராளிகள் மட்டுமே. அவர்களில் முக்கியமானவர்கள்:
William B. Travis
James Bowie
Davy Crockett
ஆயிரக்கணக்கான மெக்சிகோ படைகளை எதிர்த்து அவர்கள் பல நாட்கள் வீரமாக போராடினர்.
1836 மார்ச் 6 அன்று நடந்த இறுதி தாக்குதலில் அந்த 200 போராளிகளும் கிட்டத்தட்ட அனைவரும் உயிரிழந்தனர்.
அந்த சம்பவத்தை கூறும் போது அந்த அதிகாரியின் குரல் இன்றும் உடைகிறது. இத்தனை ஆண்டுகள் கடந்தும் அந்த நிகழ்வு அவர்களுக்கு எவ்வளவு ஆழமான உணர்ச்சியை ஏற்படுத்துகிறது என்பதை அப்போது உணர முடிந்தது.
அங்கிருந்து வெளியே வரும் போது என்னுள் ஒரு விசித்திரமான உணர்வு ஏற்பட்டது. ஏனோ தெரியவில்லை, என் நினைவில் ஜாலியன்வாலாபாக் வந்தது.
அலாமோவில் உயிரிழந்தவர்கள் எல்லாம் ஒரு வீரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். தங்கள் நிலத்தை காக்க போராடியவர்கள்.
ஆனால் ஜாலியன்வாலாபாக்?
அங்கு *ஆயுதமே இல்லாத பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்.* நிராயுதபாணி மக்கள் சிக்குண்டு உயிரிழந்த அந்த சம்பவம் இந்திய வரலாற்றின் வேதனையான பக்கங்களில் ஒன்று.
அலாமோவில் பார்வையாளர்களுக்கு அந்த வரலாற்றை தெளிவாக விளக்கும் அலுவலகமும் வழிகாட்டிகளும் உள்ளனர். அவர்கள் அந்த நிகழ்வின் பின்னணியை உணர்ச்சியோடு விளக்குகிறார்கள். அதனால் அந்த இடத்தின் முக்கியத்துவம் மனதில் ஆழமாக பதிகிறது.
அப்படியிருக்கையில்,
நம் ஜாலியன்வாலாபாக் போன்ற வரலாற்று இடங்களில் ஏன் அதேபோல் ஒரு மையம் அமைத்து பார்வையாளர்களுக்கு அந்த நிகழ்வின் பின்னணியை முழுமையாக விளக்குவதில்லை?
வரலாற்றை நினைவில் வைத்திருக்க வேண்டும் என்றால்,
அதை பார்க்க மட்டும் அல்ல, புரிந்து கொள்ளவும் செய்ய வேண்டும்.
சில இடங்கள் கற்களாலும் சுவர்களாலும் கட்டப்படுவதில்லை.
அவை வீரமும் தியாகமும் நினைவுகளும் சேர்ந்தே கட்டப்படுகின்றன.
No comments:
Post a Comment