சூரியனைக் காணோமுங்க; கண்டு பிடிச்சித் தாங்க!!
**********
(ஒரு கற்பனை நிகழ்வுதான்; ரொம்ப ஸீரியஸா எடுத்துக்கிட்டுச் சங்கடப்படாதீங்க!)
கற்பனை உலகில் உலவும் ஒரு தமிழ் கவிஞர், பொங்கலுக்கு இரு தினங்களுக்கு முன் வானம் மேக மூட்டமாய் இருந்ததால், சூரியன் கண்ணுக்குத்தென்படாத நிலையில், காவல் நிலையத்தில் , சூரியனைத் தேடித் தருமாறு, ஒரு புகாரைத் தருவதாக ஒரு கவி படைத்தார்.
அது என் கற்பனைக்குதிரையை உந்தி விட்டது.
விளைவு.....
கீழே காணுங்கள்:
பாத்திரங்கள்:
கவிஞர்- க
காவல் நிலைய துணை ஆய்வாளர்- து ஆ
க- ஐயா வணக்கம். காணாம போன ஒத்தர தேடி கண்டு பிடிக்கணுங்க; புகார் குடுக்க வந்தேங்க.
து ஆ- ஒக்காருங்க. மேட்ருக்கு வாங்க
க- ஐயா, சூரியன ரெண்டு நாளா காணோமுங்க
து ஆ- யாரு அவரு? உங்களுக்கு என்ன ஒறவு?
க- ஒறவனு இல்லீங்க, ஆனா காலேல அவர் மொகத்தை கண்டுகினு கும்பிட்டு நாளை ஆரம்பிப்பேங்க.
து ஆ- மைண்ட் வாய்சில்- என்ன கொடுமையா இது? காலங்காலேல, காமெடி பீசா ஒரு கிராக்கி. இன்னிக்கு விடிஞ்சா மாதிரிதான்!
க- இன்னிக்கு விடிஞ்சா மாதிரியே இல்லீங்க!
து ஆ- (மனதுக்குள்- ஆஹா! அப்படியே மைண்டைப் படிக்கிறானே!)
சரி, ரெண்டு நாளா என்ன கிழிச்ச? இப்ப புகார் குடுக்கற?
க- (உணர்ச்சி வசப்பட்டு, நல்ல தமிழில்)
ஐயா ,அவர் மறைவார்; திரும்ப வருவார்; ஒரு நாளில் பல தடவை இப்படி நிகழ்வதுண்டு . ஆனால், இரண்டு நாட்களாக நாளாக தலையே காட்டவில்லை என்றதும் மனதில் வியாகூலம்; சிந்தாகுலம்.
து ஆ- என்ன குப்ப கூளமா?நல்ல பேசிக்கினு இருந்த. தீடீல்னு சொதப்பறியே! தமிழ்ல பேசக்கூடாதா! பேஜாரா போச்சுய்யா உன்னோட!
து ஆ- சரி, சரி,அங்க அடையாளம் சொல்லு
க- வட்டமா இருப்பாருங்க!
து ஆக்கு, தூக்கி வாரிப்போடுகிறது.
து ஆ-என்னய்யா? வட்டமா, வட சென்னைக்கா? தென் சென்னைக்கா?
க- அவர் பொதுங்க .
து ஆ- என்னய்யா குழப்பிக்கினே கீறியே!
அட்ரஸ் என்ன?
க-காலைல அடிவானம், மதியம் நடுவானம்,சாய ரட்சை சமயம், மேல்வானம்
து ஆ - ரொம்ப ஊர்சுத்தியா இருப்பாரு போல. நம்ப ஏரியா கீழ வருமா? டவுட்டுதான்!சரி புகார குடுத்துட்டுப்போ; கவனிக்குறேன்.தனிப்படை அமச்சுத் தேட வேண்டி இருக்கும் போல. செலவாகும்; சொல்லி அனுப்புறேன்.
யோவ் 101, டீ சொல்லுயா. சமூக சேவை செஞ்சே நெஞ்சு வறண்டு போச்சுயா!
கவிஞர் வெளியே வருகிறார். மேக்கூட்டங்களிடையே, கண்ணாமூச்சி ஆடியபடி சூரியன் தலை காட்டுகிறான்.
கவிஞருக்கு ஒரே மகிழ்ச்சி.
"ஞாயிறு போற்றுதும்; ஞாயிறு போற்றுதும்" என்று முணுமுணுத்தபடி வேகமாக நடக்கிறார்.
- ,இ.ச.மோகன்,
No comments:
Post a Comment