Sunday, January 25, 2026

*பொங்கல் பெரு விழா விவரணம்*

 •••••••••••••••••••••••••••••

*பொங்கல் பெரு விழா விவரணம்*

•••••••••••••••••••••••••••••


*முத்திரை பதித்த கோலாகல பொங்கல் பெருவிழா*


24 ஜனவரி 2026, சனி மாலை 5:30 மணிக்கு பன் பயன்பாட்டு பெருவரங்கில் நமது மகாகவி பாரதி தமிழ்ச் சங்கத்தின் கோலாகல பொங்கல் பெருவிழா சிறப்பாகத் துவங்கியது. 


பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக எனும் முழக்கத்துடன் கொண்டாடப்படும் பொங்கல் நிகழ்ச்சியின் முதல் நிகழ்ச்சியாக மங்கலகரமாக குத்துவிளக்கினை திருமதிகள் சுமதி, சுகன்யா மற்றும் அடக்கம்மை ஆகியோரிடம் திருவாளர்கள் கே. எஸ். சுந்தரம் மற்றும் சுந்தர் ராஜன் ஆகியோர்

ஏற்றி வைத்தனர். 


பிறகு முதலில் செல்வி. தீப்தி அவர்களுடன் இணைந்து அரங்கமே தமிழ்த் தாய் வாழ்த்து பாடியது.


நிர்வாகச் செயலர் திருமதி. சிவகாமி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.


முதல் நிகழ்ச்சியாக டாக்டர். விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் அவர்கள் பாடிய பிரபலமான பாடலின் தாள நயத்தினை ஒத்து தலைவர் ஸ்ரீவி அவர்கள் எழுதிய சங்ககால இலக்கியம் மற்றும் தமிழ்ச் சங்கத்தின் பெருமையை விளக்கும் பாடலை துர்கா சாய்ராம், ஸ்ரீவித்யா, பிரியா ஆரத்தி ஆகியோருடன் ஸ்ரீவி இணைந்து பாடினார். பாடலின் தாள நயத்தால் வசீகரிக்கப்பட்ட அரங்கமே கரவொலி எழுப்பிக் கொண்டாடியது.


பிறகு 20 நாட்களாக பொறுப்பாளர்களின் மேற்பார்வையில் அவர்களின் வழிகாட்டுதலில் கடினமான பயிற்சி செய்து தயார் நிலையில் இருந்த 21 குழந்தைகள் கலந்து கொண்ட வில்லுப்பாட்டு நிகழ்ச்சி அரங்கேறியது. வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மட்டுமில்லாமல் உழவினைப் பற்றியும், உழவர்கள் பற்றியும் பயிர் வளர்ந்து வரும் ஒவ்வொரு நிலை பற்றியும் அனைவரும் அறிந்து கொள்ளும் முகத்தான்  பல்வேறு சமூக செய்திகளைச் சொல்லி சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் பழுதினையும் சரி செய்யக்கூடிய - பல்வேறு கருத்துக்களை கூறுகின்ற ஒரு மிகச்சிறந்த நிகழ்ச்சியாக அது அமைந்திருந்தது. வில்லுப்பாட்டுக்குள்ளேயே பல்வேறு சமூக செய்திகளை வெளிப்படுத்தும் பட்டிமன்றம், திருவிளையாடல் சிவன்–தருமி வசனம், நடனம், குடும்ப கொண்டாட்டம், சிலம்பம் என ஒரு கலக்கு கலக்கியது வில்லுப்பாட்டு குழுவினுடைய கடுமையான உழைப்பும் நல்ல தயாரிப்பும். 


அதன் பொறுப்பாளர்களான மகாலட்சுமி, தேவி அருண், சுல்தானா, மற்றும் சிவகாமி ஆகியோரை பாரதி தமிழ்ச் சங்கம் உளமார பாராட்டி மகிழ்கிறது. 


அதன் பிறகு கார்த்திக் ரமணி அவர்களும் வெங்கடேஸ்வரன் அவர்களும் இணைந்து பாடிய *காட்டுக் குயிலு* பாடல் இன்னிசைக்கப் பட்டது.


இதனைத் தொடர்ந்து தலைவர் ஸ்ரீவி அவர்களும் உதவி தலைவர் தியாகராஜன் ஐயா அவர்களும் பொங்கல் நிகழ்ச்சிகளின் ஆயத்தப் பணிகளில் எடுக்கப்பட்ட முயற்சிகள் பற்றியும் குழந்தைகள் வளர்த்த முளைப்பாரி அவர்கள் வரைந்த ஓவியங்கள் பற்றியும் பெருமையுடன் விளக்கினர். 


தலைவர் ஸ்ரீவி அவர்கள் நமது குடியிருப்பின் அருகில் உள்ள அணை ஏரியை ஒட்டி உள்ள நடைபாதையில் 260 மரக்கன்றுகளை நட முன் கை எடுத்த நமது உறுப்பினர் ராஜா முகமது அவர்களுக்கும் அதனைத் தொடர்ந்து தினமும் அதற்கு நீர் ஊற்றுவதற்காக இருக்கும் பலரில் முதலில் நிற்கும் திரு சீனிவாசன் (நிர்வாக குழு உறுப்பினர் காமாட்சி அவர்களின் தந்தை) அவர்களுக்கும், தான் எழுதிய *குட்டிக் குட்டிக் கதைகள் சொல்லவா* நூலினை அன்பளித்து கௌரவப் படுத்தினார். அந்த நல்லதொரு மரக்கன்று வளர்க்கும் நிகழ்ச்சியில் உடன் இருந்த நமது தமிழ் சங்க உறுப்பினர்கள் தியாகராஜன், தேவி அருண், பாலன், கணேசன் போன்றோரையம் பாராட்டினார்.


அதன் பின் திரு. சண்முகசுந்தரம் அவர்களுடன் உதவித் தலைவர் தியாகராஜன் இணைந்து *பேச்சு தமிழ்ப் பேச்சா தான் இருக்கணும்* எனும் ஒரு அருமையான நிகழ்ச்சிதன்னை நடத்தினர். ஆங்கிலக் கலப்பு இல்லாத - கொடுக்கப்பட்ட தலைப்பில் உரையாட வேண்டும் என்கின்ற அந்த நிகழ்ச்சியில் எதிர்பார்த்ததற்கும் அதிகமான உறுப்பினர்கள் / பூர்வா குடிவாசிகள் கலந்து கொண்டதோடு, சில வினாடிகளில் ஆங்கிலத்தில் பேசி விடுவார்கள் என்ற  நமது எதிர்பார்ப்பை முறியடிக்கும் வகையில் பலரும் நல்ல தமிழில் ஒரு நிமிடம் பேசியது அனைவரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது. இந்த நிகழ்ச்சியும் அனைவரின் கருத்தையும் கவர்ந்தது. பலருக்கும் உற்சாகமாக பங்கேற்கும் வாய்ப்பினையும் தந்தது. இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்:

அனிதா,

லட்சுமி, 

மைதிலி நீலகண்டன், 

பாலன், 

சிவகாமி, 

I.B. ஸ்ரீனிவாசன், சரஸ்வதி, நாகராஜன், பத்மாவதி, திருஞானசம்பந்தம், நாகராஜன்,

வித்யா மற்றும் ஹேமாவதி


இதில் கலந்துகொண்டோரில், வெற்றியாளர்களைத் தீர்மானிக்க திரு. நா. கணேசன் ஐயா அவர்களும் அசோக் அவர்களும் நடுவர்களாக இருந்தனர். அவர்கள் வழங்கிய மதிப்பெண்கள் அடிப்படையில் கீழ்க்கண்டோர் வெற்றியாளர்களாக அறிவிக்கப் பட்டனர்:


சரஸ்வதி, நாகராஜன், பத்மாவதி, திருஞானசம்பந்தம், பாலன் 


யாருமே பதில் சொல்ல விருப்பமில்லாத ஒரு கேள்விக்கு மிக அருமையாக தெளிவான தமிழில் எந்த ஆங்கில மொழி கலப்பும் இல்லாமல் தீர்க்கமான கருத்துக்களை முன்வைத்த வித்யா சிவக்குமார் அவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப் பட்டது.


அடுத்து துர்கா சாய்ராம் மற்றும் சுவாதி அவர்கள் திருமதி சுமதி அவர்களுடன் இணைந்து *பூ பூக்கும் மாதம்* பாடலை இன்னிசைத்தனர். 


பிறகு ஐந்து முதல் எட்டு வயது வரையிலான பிறகு 10 முதல் 15 வயதிலான சிறுவர் சிறுமிகளுக்காக வினாடி வினா நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது அனைத்து குழந்தைகளும் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டது குறிப்பிடத் தக்கது. அனேகமாக அனைத்து குழந்தைகளும் சரியான விடையினை நல்கியது நமது தமிழ்ச்சங்கு குடும்பங்களின் குழந்தைகள் தமிழில் நன்றாக எழுத படிக்க கற்று இருக்கிறார்கள் என்பதோடு, பொது அறிவையும் நன்கு வளர்த்திருக்கின்றனர் என்பதை உணர முடிந்தது. அனைத்து குழந்தைகளுக்கும் நமது வாழ்த்துகள்!

கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் நமது தமிழ்ச் சங்கத்தின் இலச்சினை பொறித்த ஓர் எழுது கோலும் ஓர் இனிப்பும் வழங்கப் பட்டன. குழந்தைகளின் மகிழ்ச்சி தெள்ளென தெரிந்தது. இந்த வினாடி வினா நிகழ்ச்சியின் பொறுப்பாளர்களாக இருந்து மிக சிறப்பாக செயல்பட்ட அமுதவல்லி, மலர்விழி மற்றும் இமான் சுல்தானா அவர்களை தமிழ்ச் சங்கம் மனதார பாராட்டி மகிழ்கிறது.


அதன் பின்னர் துர்கா, கார்த்திக் ரமணி, ஸ்வாதி ஆகியோர் பாடிய *மார்கழி தான் ஓடிப் போச்சு* பாடலுடன் நிகழ்ச்சிகள் இனிதே நிறைவுற்றன. 


நிகழ்ச்சியை மிக அருமையாக கிருத்திகா அவர்கள் தொகுத்து வழங்கினார். முதன்முறையாக அவர் தொகுப்பாளினியாக தனது சேவையை செய்கிறார். அவருக்கு நமது பாராட்டுதல்கள்.


பிறகு அமைப்பாளர்களுக்கும், பங்கேற்பாளர்களுக்கும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது. 


நிறைவாக மல்லிகாமணி அவர்கள் நன்றியுரை வழங்கியதும், நாட்டுப்பண் இசைக்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது.


*நன்றி நவிலல்*


நமது நிகழ்ச்சிக்கு சிற்றுண்டியும் தேநீரும் இலவசமாக வழங்கியது குவாலிட்டி பைட்ஸ் நிறுவனம். அதற்கு நமது நன்றிகள்.


இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்காக பல நாட்களாக தொடர்ந்து உழைத்திட்ட நிகழ்ச்சியின் பொறுப்பாளர்களுக்கு நமது உளம் நிறை நன்றிகள். 


பங்கேற்பாளர்களுக்கும் கலந்து கொண்டு சிறப்பித்த பூர்வா குடிவாசிகளுக்கும் இதயம் கனிந்த நன்றிகள்.


ஶ்ரீவி 

தலைவர்.

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...