குளிரில் குயில் ஒன்று
நம்ம சென்னையா இப்படிக் குளுருது !
நாக்கு மேல் பல்லும் தாளம் போடுது
கம்மல் காதுகளில் ஆடுது தொடர்ந்து
கழுத்தும் ஆடாது நிற்கவிலை நிமிர்ந்து
அம்புட்டு வேலையா ! ஆதவனைக் காணோம்
அடிக்கடி விடுப்பு கேட்டால் ஆளை மாத்தணும்
தும்மலாய் வானம் தூறிக் கொண்டிருக்குது
துவட்ட இயலாக் காகம் தலையை ஆட்டுது
கும்பகர்ணன் போலே தூங்கத் தோணுது
கோலங்கள் வாசலில் மாயமாய் மறையுது
சொம்பு நிறையத் தேநீர் மனமும் விரும்புது
"சூடாக கூட" எனச் சொல்ல வார்த்தை வருது
" அம்பு இலா வில் " லொன்று ஒலிக்க இருக்குது
அதிர்ந்த அணை ஏரியில் அலை எழப் போகுது
தெம்பு தரும் பாரதி தமிழ்ச் சங்கம் உழைக்குது
திரள்வோம் " புதுக் குயில் " இன்று மாலை இசைக்குது.
__. குத்தனூர் சேஷுதாஸ் 24/1/2026
No comments:
Post a Comment