Saturday, March 14, 2026

சிலம்பொடு ஒரு பயணம்-{12}திருமண விழாவும் வாழ்த்துரைகளும்

 °`°`°`°`°`°`°`°`°`°`°`°`°`°`°`°

*{12} சிலம்பொடு ஒரு பயணம்*

திருமண விழாவும் வாழ்த்துரைகளும்

°`°`°`°`°`°`°`°`°`°`°`°`°`°`°`°


நாயகியையும் நாயகனையும் அறிமுகப் படுத்திய அடிகள் 


நலம் பல அவர்கள் பெற 

நானிலம் போற்றும் வகையில் 

திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வை 

நயம் பட விவரிக்கிறார் *திருமணக் காட்சி* எனும் பாடலில் 


மாநாயக்கனும் மாசாத்துவானும் தமது செல்வங்களை தம்பதியராக்க நல்ல நாள் ஒன்றில் நிச்சயித்தனர். யானை மேல் மணமகளை அமர வைத்து 

நகர்வலம் வந்து அறிவித்தனர். 


இப்பாடலில் சில வைர வரிகள் 

நம் கருத்தைக் கவருகின்றன. 

அவையாவன:


*முரசு இயம்பின முருகு அதிர்ந்தன முறை எழுந்தன*


அதாவது திருமணம் நிச்சயிக்கப் பட்ட அந்நாளில், முரசுகள் முழங்கினவாம். மத்தளங்கள் ஆர்த்தனவாம். சங்கொலி நகரெங்கும் ஒலித்ததாம்.


திருமண நாளில் திகழ்ந்த காட்சியை இப்படிக் கூறுகிறார் நம் அடிகளார்: 


*நீல விதானத்து நித்திலம் பூம் பந்தற் கீழ்*


நீலப் பட்டாடையை மேல் விதனமாக அமைந்திருந்த முத்துப் பந்தலின் கீழே திருமணம் நடந்ததாம். கோவலன் முதுமறையான் கூறிய விதிப்படி தீவலம் வந்து கண்ணகியை மணம் புரிந்தானாம். இப்படி எழுதிய அடிகள் அக்காட்சியை கண்ட கண்கள் செய்த புண்ணியத்தை சிலாகிக்கிறார். 


*காண்பார் கண் நோன்பு என்னை* 


என பதிவு செய்கிறார்.  இக்காட்சியை கூறும் இவ்வரிகளைப் படிக்கும் கண்களும் அதே புண்ணியத்தை செய்துள்ளனவோ! 


திருமணம் முடிந்ததும் அடுத்தது என்ன வாழ்த்துகள் தானே!


*வாழ்த்துரைகள்* எனும் தலைப்பில் அடுத்த பாடலை எழுதுகிறார். 


*விரையினர் மலரினர் விளங்கு மேனியர்*


 *உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர்*


*சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர்*


திருமணத்திற்கு வந்த மகளிர் வாசனை நறுமணம் சுமந்து வந்தனராம். சிலர் மலர் கொண்டு வந்தனராம். வேறு சிலர் பெண்மைக்கு விளக்கமாக அணிமணி புனைந்து அழகாக வந்தனராம்.


இவர்கள் அனைவரும் கூறிய வாழ்த்துரையில் விண்ணும் மண்ணும்  நிறைந்ததாம்.

அப்பகுதியில் வரும் வைர வரிகள்:


*காதலர் பிரியாமல் கலவுக்கை நெகிழாமல்*


*தீது அறுக என ஏத்திச் சின்மலர் கொடு தூவி*


அதாவது, 'கட்டிய கணவனைப் பிரியாமல், ஒட்டிய கைகளை விலக்காமல், ஒரு குறையுமின்றி நலமாக வாழ்க' என வாழ்த்தினராம்.


மணமக்களை மக்கள் வாழ்த்தினர். 

அந்நிகழ்வை நம் கண் முன்னே தீந்தமிழில் ஓவியமாய் தீட்டிய அடிகளாரை நாம் வாழ்த்துவோம்.


*உங்கள் தோழன் ஸ்ரீவி*


இப்போது நம் மழலைக் கவி என்ன சொல்கிறார் பார்ப்போம்.


*திருமண விழாவும் வாழ்த்துரைகளும்.*

--------------------


ஐயா, 

மணவிழாவுக்கு, புகாரே எப்போதும் கூறாத எளியவன் எனக்கும் அழைப்பு  வந்தது. நான்கண்டு களித்த காட்சி:


சம்பந்திகள் - சம ( செம) செல்வந்தர்கள்:

மாசாத்துவான் பெரும் உள்நாட்டு வணிகன் (சாத்து  என்பது உள்நாட்டு வாணிபத்தைக் குறிக்கிறதாம்)

மாநாய்கன் பெரும் கடல்  ஒடி திரவியம் கைப்பட்டவன் (நாய்கன் என்றால் நாவாயோடு தொடர்புடையவன்).

பணம் பணத்தோடு சம்பந்தம் வைத்தால், அங்கே மங்கல இலக்குமியின் ஆட்சிதான்! நம்ம அம்பானி அடானி சம்பந்தம் வைத்தால் போல்!


மணமகள் ஊர்வலம்:

நாம் மாப்பிள்ளை அழைப்பில் மணமகன் ஊர்வலங்கள் பார்த்திருக்கிறோம். இங்கு மணமகள் கண்ணகி யானை மீதமர்த்தப்பட்டு ஊர்வலமாக வருகிறாள். 12 வயது சிறுமிக்குக் கொண்டாட்டம்தான்!

பல  இசைக் கருவிகள் மங்கல இசை கூட்ட,  பல வண்ண அழகு மலர்க் கூட்டங்கள்  ஒன்று திரண்டு வந்தாற் போல மகளிர் கூட்டம் புடை சூழ மணமகள் ஊர்வலம்.  தமிழ்ப்பெண்ணுக்குப் பெருமை சேர்க்கும் நிகழ்வு, பல நூறு ஆண்டுகளுக்கு முன்னமே,அரசன் பவனி வருவது போல!

ஆனால் சோழன் செம்பியன் விழாவில் பங்கேற்றதாக, தகவல் இல்லை. பக்கத்து நாட்டுக்குப் படையெடுத்துச்சென்று விட்டாரா?!

இந்த காட்சியை அடிகள் எழுத்தோவியமாகத் தீட்டியது, பிரமாண்டத் திரையில் பாகுபலி படம்  பார்த்த உணர்வை ஊட்டுகிறது.


மண மண்டபம்:

மண மண்டப அலங்காரம் பற்றி, ஐயா, தாங்கள் சிலாகித்துக் குறிப்பிட்டீர்கள். கடற்கரையில் பெரிய விதானங்கள்  கொண்ட அமைப்பு: ஊரே  திரண்டு விழாவுக்கு  வரும்நேரம் அனைவருக்கும் இடம்தரும் அமைப்பு.இன்று" தனித்துவமான " இடங்களை, கடற்கரை உள்ள இடங்களை,  (destination wedding) வெளிநாடுகளில் தேடி அங்கு மணம் புரிவது மேட்டுக்குடியினரின்  படாடோபச்செயல். இங்கோ, அழகான கடற்கரையில் தமிழ்சூழலில்  மண்டபம் அமைந்து விட்டது  புகார் தந்த சிறப்பு.


மண நிகழ்வுகள்:

மணவிழாவில், கோவலன் கண்ணகி இணையல் "சகடு அணைய" என்கிறார். சந்திரன் பிரிய துணைவி ரோகிணியோடு கூடியது போன்றதாம். கற்புக்கு உதாரணமாம் அருந்ததியோடு கற்புக்கனலாக விளங்கப் போகும் நம் கண்ணகியை ஒப்பிடுகிறார்.


வாழ்த்துகள்:

இவ்விழாவில் பங்கேற்று  வாழ்த்துகள் கூறி மங்கலத்துக்கு மங்கலம் கூட்டியதாக பல்வகை மகளிரைக் குறிப்பிடுகிறார். ஓரக்கண்ணால் பார்ப்பவர் "ஒசிந்த நோக்கு", தயங்கித்தயங்கி பார்ப்பவர்( " தயங்கு கோதையர்) , இடித்த சுண்ணத்தர் ( இக்கால "முகப் பவுடர்" போல வண்ணப்பூச்சு பூசியவர்கள்!) எனப்பலரை இத்துறவி விவரிக்கிறார்.


வாழ்த்துரை:

"காதலர் பிரியாமல் கலவுக்கை நெகிழாமல்","தீது அறுக என ஏத்திச் சின்மலர் கொடு தூவி"

என்பார்அடிகள்.

ஐயா, இதற்கு விளக்கம் தாங்கள் அளித்து விட்டீர்கள்.


ஏன், பிரியாமல், நெகிழாமல்,தீது அறுக போன்ற " அறம் " விளைக்கும் சொற்கள்?

"இன்று போல்என்றும் வாழ்க, பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க" என்பது போல வாழ்த்தியிருக்கலாமோ,எனத் தோன்றலாம். அடிகள் வருங்காலத்தில் வரும் பிரிவுத் துயரை, சூசகமாக உணர்த்துகிறாரா? அவரவர் பார்வைக்குத் தக்கபடி உணரலாம்.


நல்அமளி என்கிறார் , கண்ணகியும் கோவலனும் சேர்ந்த கட்டிலை. அமளி என்றால் கட்டிலாம் .இன்று நாம் கொள்ளும் பொருள்வேறு.


சில சொல்லாடல்கள்: 

அதிசயிக்க வைக்கின்றன, அவற்றின்நயம்;

முரசு இயம்பின- இனிமை ஒலி தந்தன.

முருடுஅதிர்ந்தன - மத்தளங்களின்ஆவர்த்தனங்கள்

முறை எழுந்தன பணியம்- வரிச்சங்கங்களின் வரிசை முழக்கம். 

ஒவ்வொரு கருவி எழுப்பும் இசைக்கும் தனித்தமிழ் சொற்கள். செம்மொழி நம்மொழி ஐயா!


முரசு, முருடு, முறை- " மு"னாக்கு " மு" னா!

நீல விதானம், நித்திலப்பூம்பந்தர்- " நீ" க்கு நீ"

எழுத்துகளின் அபிநயம் அற்புதம்.


விருந்துண்ணும் அறையை நோக்கி நடக்கின்றன கால்கள், நாக்கும்,மூக்கும்வழி காட்ட!!


*பயணம் தொடரும்*

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...