Tuesday, January 20, 2026

பூர்வா குடியிருப்பு நலச் சங்கம் நடத்திய பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சிகளில் நமது மகாகவி பாரதி தமிழ் சங்கம் பங்கேற்று நடத்திய பட்டிமன்ற விவரணம்

 *பூர்வா குடியிருப்பு நலச் சங்கம் 18.1.26 ஞாயிறு அன்று நடத்திய பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சிகளில் நமது மகாகவி பாரதி தமிழ் சங்கம் பங்கேற்று நடத்திய பட்டிமன்ற விவரணம்*


நமது உதவித்தலைவர் தியாகராஜன் ஐயா அவர்களிடம் நலச் சங்க நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், 

18 ஜனவரி 26 அன்று நடந்த பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சிகளில் நமது மகாகவி பாரதி தமிழ்ச் சங்கம் சார்பில் பட்டிமன்றம் நடத்தப்பட்டது. 


தலைப்பு: *திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகளில் தற்போது குடும்பங்களில் உண்டாவது சந்தோஷமே / சங்கடமே*


*சந்தோஷமே* அணியில் 

ஸ்ரீவித்யா, 

சுல்தானா மற்றும் மஞ்சுளா அணிவகுத்தனர். 


*சங்கடமே* அணியில் வெங்கட்ராமன், நாகராஜன் மற்றும் அனிதா பங்கேற்றனர். 


நடுவராக சங்கத் தலைவர் ஸ்ரீவி அவர்கள் இருந்தார். 


வெளி மேடை ஒன்றில் நமது பட்டிமன்ற குழு பங்கேற்கும் முதல் நிகழ்வு இதுதான். நமது கோரிக்கையை ஏற்று மேடை அமைத்து தந்த நலச்சங்கம் நல்ல ஏற்பாடுகளை செய்திருந்தது. வெளி அரங்கில் பட்டிமன்றம் நடக்கையில் குறிப்பாக உணவுப் பதார்த்தங்கள் விற்கும் தற்காலிக அங்காடிகள் இருக்கும் போது சலசலப்பு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்ப்போடு தான் நமது பட்டிமன்றக் குழு களம் இறங்கியது. ஆனால், நமக்கு ஆச்சரியம் தரும் வகையில் நானூறுக்கும் அதிகமான நமது பூர்வாகுடி வாசிகள் உன்னிப்பாகவும் மிகவும் கவனத்துடனும் பட்டிமன்ற நிகழ்வை கவனித்தது நமக்கு பெரும் மகிழ்வை தந்தது.

அதிலும் மகிழ்ச்சியோடு பெருத்த கர ஒலி எழுப்பி உற்சாகம் தந்தது குறிப்பிடத்தக்கது. 


இரண்டு அணியினரும் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் நல்ல சூடான, சுவையான, சுவாரசியமான வாதங்களை முன் வைத்தனர். ஒருவர் தீவிரமாக வாதங்களை அடுக்கினார். இன்னொருவர் நகைச்சுவை ததும்பத் ததும்ப பேசினார்.

 

அனைத்து பங்கேற்பாளர்களும் அவரது பாணிக்கு ஏற்றவாறு மிகச்சிறப்பாக உரையாற்றி அரங்கத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தனர். 


சற்றேறக்குறைய ஒரு மணி நேரம் நடந்த அந்த நிகழ்வில் ஒட்டுமொத்த அரங்கமும் ரசித்து மகிழ்ந்து, ஒருவர் கூட இருக்கையை விட்டு எழுந்திடாத அளவு ஈடுபாட்டுடன் ரசித்தது நமது பூர்வா குடிவாசிகளின் ரசிப்புத்தன்மையை – நல்ல நிகழ்ச்சியை பாராட்டும் நல்ல குணத்தை வெளிக் காட்டியது.


சங்கடங்கள் அணியினர் அடுக்கடுக்காக குறிப்பிட்ட அந்த சங்கடங்களை உணர்ந்து எதிர்கால விழாக்களில் சங்கடங்களைக் குறைத்து, விழாக்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து சந்தோஷத்தை அதிகப்படுத்தி விழாக்கள் நடத்தப் பட வேண்டும் – அத்திசைவழி மக்கள் தங்கள் சமூகப் பொறுப்பு உணர்ந்து செயல்பட வேண்டும் என்கின்ற தீர்ப்போடு பட்டிமன்றம் நிறைவுற்றது.


நிகழ்ச்சி நிறைவுற்றதும் நமது தமிழ் சங்கத்தின் சார்பில் தலைவர் ஸ்ரீவி தான் எழுதிய ஐந்து நூல்களோடு நமது சங்க கவிஞர்கள் அரங்கேற்றிய கவிதைத் தொகுப்பையும் இணைத்து ஆறு நூல்களாக வரவிருக்கும் நூலகத்திற்கு நலச்சங்க தலைவரிடம் அன்பளித்தார்.


குறிப்பு: 


நமது பார்வை:


1) நமது பட்டிமன்ற குழுவிற்கு முதன்முறையாக ஒரு வெளிமேடை கிடைத்தது.

அந்த வாய்ப்பினை நமது குழு மிகச் சிறப்பாக பயன்படுத்தியும் கொண்டது.


2) நமது மகாகவி பாரதி தமிழ் சங்கத்தின் பதாகையை மேடையில் நிறுத்தி அந்த நிகழ்ச்சியை நடத்தியது. இதனால் நமது சங்கம் பற்றி அறிந்திடாத பல பூர்வா குடிவாசிகளுக்கும் இந்த செய்தி சென்றடைந்தது. 


3) தீர்ப்பு வழங்கும் முன் ஒரு வேண்டுகோளாக நமது சங்கத்தின் கரங்களை பலப்படுத்த பூர்வாகுடி வாசிகள் பலரும் சங்கத்தில் இணைய வேண்டும் என்கின்ற வேண்டுகோளை நாம் முன் வைத்தது.


4) போட்டி போட்டுக் கொண்டு நமது பங்கேற்பாளர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றமை, நமது பூர்வாகுடி வாசிகளிடம் நமது சங்கத்தின் பெருமையை உயர்த்தி இருப்பது.


4) பற்பலரும் வந்து நமது அணியினரை நிகழ்ச்சி முடிந்ததும் பாராட்டிச் சென்றது.

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...