Monday, April 13, 2026

12.4.26 ஞாயிறு மாலை நடந்த பொதுக்குழுவின் விவரணம்

 *12.4.26 ஞாயிறு மாலை நடந்த பொதுக்குழுவின் விவரணம்*


12 ஏப்ரல் ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 மணிக்கு நமது பொதுக்குழு ஜாமிங் ரூமில் நடந்தேறியது. தமிழ்ப் பண்ணுடன் துவங்கிய பொதுக்குழுவில் கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரலை வைத்து கலந்தாலோசனைகள் நடத்தப் பட்டன.:


• தமிழ்த் தாய் வாழ்த்து 

• வரவேற்புரை 

• தலைமையுரை   

• உறுப்பினர் நேரம் 

• தொகுப்புரை 

• நன்றியுரை 

• நாட்டுப் பண் 


தமிழ்ச் சங்க செயலர் திருமதி. மலர்விழி வரவேற்புரை நல்கினார். 


பின்னர் தலைவர் ஸ்ரீவி அவர்கள் கடந்த ஓராண்டில் நாம் நடத்திய நிகழ்ச்சிகள் பற்றியும் நிர்வாகிகள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்களின் அயராத உழைப்பினால் நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக அமைந்ததையும் மேலும் நமது நிகழ்ச்சிகள் செழுமையுட உறுப்பினர்களின் ஆலோசனைகளையும் கேட்டு உரையாற்றினார். 


நமது தமிழ்ச் சங்கத்தின் முன்னெடுப்புகளில் முக்கியமான வாசிப்பு அரங்கில் அதிகமான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் வருவதில்லை என்கின்ற கருத்துக்கு பற்பல ஆலோசனைகள் வழங்கப்பட்டன: 


• *வாசிப்பு வட்டம்* என்பது இலக்கிய ரீதியான விடயம் என்று கருதி அதிக நபர்கள் வருவதில்லை என்ற கருத்தின் அடிப்படையில் *கதை படிக்கலாம் - கலந்துரையாடலாம்* என்கின்ற தலைப்பில் அவற்றை நடத்தலாம் என்கின்ற ஆலோசனை கூறப் பட்டது. அது ஏற்கப் பட்டது. 


• வாசிப்பு வட்ட அமர்வுகளில் ஒலி வாங்கி (மைக்) பயன்படுத்தினால் பலருக்கும் உதவிகரமாக இருக்கும் என்கின்ற ஆலோசனை ஏற்கப் பட்டது.


• வாசிப்பு அரங்கு அமர்வுகளில் வருவோர் எண்ணிக்கை அதிகரிக்க அதனை இன்னும் சுவை மிக்கதாக மாற்றிட நாம் திட்டங்கள் வகுக்க வேண்டும் என்கின்ற கருத்தும் வலியுறுத்தப் பட்டது.


• ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் குழந்தைகளுக்காகவும் கலந்து கொள்ளும் அனைவருக்காகவும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டால் கலந்து கொள்வோர் எண்ணிக்கை அதிகமாகும் என்ற ஆலோசனையில் வருடம் ஒருமுறை ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் நாம் அப்படித்தான் நடத்தி வருகிறோம் எனவும் அது தொடரும் எனவும் விளக்கம் அளிக்கப் பட்டது


• நமது பூர்வாவில் நிறைய கர்நாடக இசை ரசிகர்கள் இருப்பதால் அதற்காகவென தனியே ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்கின்ற ஆலோசனை திரு பிச்சைமணி அவர்களால் முன்வைக்கப் பட்டது. நமது சங்க சட்ட விதிகள் வழிகாட்டுதல் படி ஆன்மீகம் அரசியல் கலப்பு இருக்கக் கூடாது என்பதாலும் கர்நாடக இசையில் அநேகமாக ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விடயங்கள் மட்டுமே இருப்பதாலும் சிக்கல்கள் எழலாம். அதனைத் தவிர்க்க நாம் கர்நாடக இசை நடத்துவதற்காக முயற்சி எடுக்கும் பொழுது பாரதியார் பாடல்களையோ அல்லது நமது குழுவில் வருகின்ற பல்வேறு படைப்புகளையோ மட்டுமே கர்நாடக இசை நிகழ்ச்சி ஒன்றில் நடத்தலாம். அதற்கு திருமதி விஜயலட்சுமி பாலாஜி முன் கை எடுக்கலாம் என்கின்ற விளக்கம் நமது நிதிச் செயலரால் அளிக்கப்பட்டது. 


• *உறுப்பினர் சேர்க்கை:* நமது சங்கத்தில் அதிக உறுப்பினர் இணையும் வகையில் தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 துவங்கி ஒரு வாரம் *உறுப்பினர் சேர்க்கை வாரம்* நடத்தலாம் என்கின்ற ஆலோசனை திரு பிச்சைமணி அவர்களால் முன்மொழியப் பட்டது.  அது ஏற்கப்பட்டது. மேலும், அதற்காக படவரிக் குழுவில் ஒரு சிறு காணொளியை நமது தொழில்நுட்பக் குழு உருவாக்க வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது.


• நம் உறுப்பினர்கள் பலரும் உறுப்பினர் சேர்க்கைக்கு உதவும் வகையில் அவரவர்கள் இருக்கும் புலனக் குழுக்களில் அதனை பிரபலப்படுத்தலாம் என்கின்ற ஆலோசனையும் இப்பொழுது இருக்கும் உறுப்பினர்கள் சந்தா செலுத்தாமல் இருப்பின் அவர்களுடன் உரையாடி உடனே சந்தா செலுத்த வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் முடிவு எடுக்கப் பட்டது 


• அதிக நபர்களை சென்றடையும் வகையில் ஒரு சிறு சுற்றறிக்கை ஒன்றைத் தயார் செய்யலாம் என்கின்ற ஆலோசனை திரு. சண்முகசுந்தரம் அவர்களால் முன் வைக்கப்பட்டது. 


• பூர்வா குடி வாசிகளுடன் தொடர்பில் இருக்க *காலாண்டு மின்னிதழ் ( digital quarterly journal)* ஒன்றை நாம் நடத்த வேண்டும் என்கின்ற ஆலோசனையும் அவரால் முன்வைக்கப் பட்டது. அந்த ஆலோசனை ஏற்கப் பட்டு, அதற்கு பொறுப்பாளர்களாக திரு. சண்முகசுந்தரம் மற்றும் திருமதி. தேவி அருண் இருப்பார்கள் எனவும் அவர்களுக்கு உதவியாக நமது தொழில்நுட்பக் குழு செயல்படும் என்றும் முடிவெடுக்கப் பட்டது. 


• பலரை சென்று அடையும் வகையில் நமது விளம்பரம் ஒன்றினை மை கேட் செயலியில் நாம் வெளியிடலாம் என்கின்ற ஆலோசனை திரு. சீனிவாசன் அவர்களால் முன்மொழியப் பட்டது. நமது ஆண்டு விழாவை ஒட்டி அதனை அமல் படுத்துவோம் என்று உறுதி அளிக்கப்பட்டது. 


இவற்றோடு கலந்துரையாடல் ஆலோசனைகள் முடிவுற்றன.


திரு. லட்சுமி நாராயணன் நன்றியுரை கூறினார். 


பின், நாட்டுப்பண் இசைக்கப்பட்டு கூட்டம் இனிதே நிறைவுற்றது. 


*நன்றி*:

• ஞாயிற்றுக்கிழமை ஆன போதும் சங்கத்தின்பால் உள்ள ஈடுபாட்டின் காரணமாக கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி🙏


• கலந்து கொண்ட அனைவருக்கும் சுவையான சுண்டல் வழங்கிட தன் உழைப்பை செலுத்தி உதவி செய்த திருமதி மல்லிகாமணி அவர்களுக்கும் நம் நன்றி🙏


• கடைசி நிமிட முடிவு என்றாலும் உடனே வேகமாக சென்று அனைவருக்கும் தேநீர் வழங்க ஏற்பாடு செய்த திரு. வெ. நாகராஜன் ஐயா அவர்களுக்கும் நம் நன்றி🙏


• 'ஒரு போன் செய்தால் போதும் உடனே வரும்' என்கிற ரீதியில் சுண்டல் வழங்க தொன்னையை போன் செய்து உடனே வரவழைத்த திரு பாலகிருஷ்ணன் அவர்களுக்கும் நம் நன்றி🙏


• பல்வேறு ஆலோசனைகளை வழங்கி நம் சங்க செயல்பாடு மேலும் செழுமை அடைய உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் உளமார்ந்த நன்றிகள்🙏


• தாம் வர இயலாத காரணத்தை குழுவிலும் தனிப்பட்ட செய்தியாகவும் அனுப்பிய அத்தனை தமிழ் உறவுகளுக்கும் நன்றிகள்🙏

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...