*இன்றைய கொடுமை*
மறுநாளைத் தழுவி
மகிழ வழியின்றி
ஏங்கித் தவிக்கிறது
தினசரி காலண்டரில்
இன்றைய தேதி!.
*இன்றைய கொடுமை*
மறுநாளைத் தழுவி
மகிழ வழியின்றி
ஏங்கித் தவிக்கிறது
தினசரி காலண்டரில்
இன்றைய தேதி!.
நம் தமிழக அரசு வழங்கும் சிறந்த சின்னத்திரை நடிகர்களுக்கான விருதுகள் வரிசையில் *சிறந்த குணசித்திர நடிகர்* எனும் விருது நமது மகாகவி பாரதி தமிழ் சங்கத்தின் நிதிச்செயலர் அன்பிற்கினிய *திரு. சாய்ராம்* (நீதானே என் பொன்வசந்தம்) அவர்களுக்கு கிடைத்திருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரிடம் நாம் சொல்ல விரும்புவது *நீர்தானே எம் வசந்தம்*
தகுதியான ஒரு நபருக்கு அந்த விருது வழங்கப்படுவதால் அந்த விருந்துக்கு மதிப்பு கிடைத்திருக்கிறது என நாம் கருதுகிறோம்.
நமது நிதிச் செயலர் கிரீடத்தில் இன்னும் ஒரு வைரக்கல் இது.
மேலும் பல உச்சங்களைத் தொட நமது சங்கம் மனதார வாழ்த்துகிறது.
நமது மகாகவி பாரதி தமிழ்ச் சங்கத்தின் நிதிச் செயலர் சாய்ராம் அண்ணாவிற்கு தமிழக அரசு *சிறந்த குணசித்திர நடிகர்* விருது கொடுத்து வழங்குவது நம் அனைவருக்கும் பெருமையே.
நாம் பெருமை கொள்வது மிகச் சரியே, என்றாலும் இந்த விருது முழுக்க முழுக்க சாய்ராம் ஐயா அவர்களின் 40-45 ஆண்டுகால பயணத்திற்கு கிடைத்த அங்கீகாரம் என்பதை நாம் உணர வேண்டும். மேடைப் பாடகராக, நகைச்சுவை திலகமாக, மேடை நாடக நடிகராக, சின்னத்திரை - பெரிய திரை கலைஞராக எத்தனை எத்தனை அவதாரங்கள்... எத்துணை எத்துணை மேடைகள்...
எவ்வளவு அனுபவங்கள்..
என அவரது கலை தாகத்தின் பயணத்தில் - தேடலில் கிடைத்த ஒரு விருதாக இதனை நாம் பார்த்தல் வேண்டும்.
இந்த விருதில் நாம் சொந்தம் கொண்டாட இயலாது என்றாலும், நமது சங்கத்தின் வழிகாட்டியாக சீரிய முறையில் செயல்படும் அவருக்கு கிடைத்த இந்த பெருமையில் நாமும் உடன் நின்று மகிழ்கிறோம்.
உதவித் தலைவர் சரியாக குறிப்பிட்டது போல் பன்முகத் திறமை கொண்ட தகைசால் நபரான இவருக்கு இன்னும் பற்பல விருதுகள் கொடுக்கப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசையும் நம்பிக்கையும் ஆகும்.
விரைவில் நமது ஆசைகள் நிறைவேறட்டும்.
சாய்ராம் ஐயாவிற்கு இன்னும் பற்பல பெருமைகள் வந்து சேரட்டும்.
மகாகவி பாரதி தமிழ்ச் சங்கம் தனது தலைமகனை பாராட்டி மகிழ்கிறது.
- ஸ்ரீவி
==================
*குணசித்திர நடிகர் மட்டுமா?*
அதுவும் அரசின் அங்கீகாரம்… பெருமைதான்!
ஆனால் மனம் கேட்கிறது,
அரசே! இதோ இன்னும் பல அங்கீகாரங்கள் வரிசையில் நின்றுக்கொண்டிருக்கிறதே… அவை எங்கே?
*சிறந்த பன்முகக் கலைஞர்*
ஒரே மேடையில் பல முகங்கள், ஒரே மனிதனில் பல திறமைகள்!
*சிறந்த ஹைக்கூ கவிதை மன்னர்*
மூன்று வரிகளில் முழு உலகை அடக்கும் மந்திரம் உங்களுக்கே உரியது!
*நாடக ஆசிரியர் & இயக்குநர்*
வார்த்தைகளால் காட்சியை உருவாக்கி, காட்சிகளால் மனதை ஆளும் வல்லமை!
*நிர்வாகத் திறனாளர்*
மேடைக்கு முன்பும் பின்னும் ஒழுங்கும் ஒற்றுமையும் உருவாக்கும் தலைமைச் சக்தி!
*பாடகர்*
குரலில் உணர்வு, உணர்வில் உயிர்!
அதனால் தான் கேட்கிறோம்…
*எங்கே… எங்கே… எங்கே…?*
இந்த அங்கீகாரங்கள் எல்லாம் இன்னும் வரிசையில் தானோ?
இன்று சிறந்த குணசித்திர நடிகர்
நாளை பல்திறன் கலைஞரின் முழுமையான அரசு அங்கீகாரம்!
இந்த விருது
*ஒரு தனி மனிதருக்கானது அல்ல…*
*நம் மகாகவி பாரதி தமிழ் சங்கத்தின் பெருமை* 😂
நம் அனைவரின் மகிழ்ச்சி!
மேலும் மேலும் உயரங்களைத் தொட வாழ்த்துகள்…
இது தொடக்கம் மட்டுமே! 🌸
- தியாகராஜன்
---------------
தமிழ்ச் சங்க சொத்தே !
வணக்கம் வணக்கம் போட்டு வாய்ப்பு தேடாதவர்
வந்த எதையும் மிளிர வைக்காமல் விடாதவர்
இணையான குயில் ஒன்று தேர்வு செய்தவர்
இசை, இசை, இசை என்றே சுவாசிப்பவர்
கணக்காகத் தமிழ்ச் சங்கச் செலவுகள் செய்வீர்
கைகளையும் சுத்தமாக வைத்துக் கொள்வீர்
" குணசித்திர நடிகர் " விருதோ இன்னொரு முத்தே
கொடுத்து வைத்தோம் சாய்ராம் ஐயா! சங்க சொத்தே!
மேலும் ம் பல சிகரங்கள் காத்திருக்கின்றன ஐயா! 💐🙏
__. குத்தனூர் சேஷுதாஸ் 30/1/2026
வரூம் .....ஆனா வராது......
--------------
இது ஒரு நகைச்சுவை சொற்றடராக, திரைப்படங்களில் பார்த்து இருப்பீர்கள்.
கேட்டவுடனேயோ, பார்த்தவுடனேயோ நகைப்பை ஊட்டும் விதத்தில் காட்சி அமைந்திருக்கும்.
முதலில் வாழ்க்கை நடைமுறையில் பார்ப்போம்.
பின்பு, எனக்குத் தெரிந்த அளவில் இதன்தத்துவம் பற்றி பதிவிடுகிறேன்
வரூம் ஆனா வராது- நம் வாழ்வில்-
பேருந்து நிறுத்தத்தில், பேருந்து வரூம், ஆனாக்க , நமக்கு ஏற வராது; ஏன்னா,தள்ளியே நின்னு,எறங்க வேண்டியவங்களை,வெளியே, துப்பிட்டு, பொறப்ட்ரும்!
பரீட்சை முடிவுகள் வரூம். ஆனா நம்ம பேரு வராது!
தமிழு- தத்தி, தத்தி பேச வரூம் , ஆனா படிக்க வராது!
எல்லா நல்ல விஷயங்களும், வரூம் பக்கத்து ஊடுங்களுக்கு; ஆனா வராது நமுக்கு!
இப்படிப்பலப்பல!!
கருத்து( வட சென்னையில் கூறுவது போல!):
எது நமக்கு உரியதோ, அல்லது நமக்கு"கொடுத்து வைத்திருக்கிறதோ" அதுதான் நமக்கு வரூம்; நமக்கு உரியன அல்லாதவைக்கு ஆசைப்பட்டா வராது!
- இ.ச.மோகன்
வரகரிசி பொங்கலோ பொங்கல்!
******************
முன்னோட்டம்:
பொங்கல் கொண்டாடும் சமயத்தில் இந்த பதிவு பற்றிய யோசனை தோன்றியது.
நம் பாரம்பரிய தானியங்களின், சிறப்பு, நம் தாய்மொழியின் செம்மை, நமது கிராமிய செயல்பாடுகள் எப்படி இயற்கையோடு இணைந்தவை போன்ற விடயங்களை இணைத்து, ஒரு பதிவு.
( ஆங்கிலக் கலப்பு ஊடே ஊடே. மன்னிக்கவும். இந்த காலம்அப்படி ஆயிடிச்சு!)
பாத்திரங்கள் அறிமுகம்:
பங்கஜம் பாட்டி :
சமையல் கலையில் வல்லவர். அந்த கால SSLC பாஸ் செய்தவர். ஆங்கில அறிவு ,சரளமாக, பேச , எழுத ,படிக்கும்அளவுக்கு உண்டு. ஆனால் நமது பாரம்பரியத்தில் மிக்க நம்பிக்கையும் , பேரார்வமும்கொண்டவர். அதுவும் பாரம்பரிய தானியங்கள், அவற்றை சமைக்கும்விதம், சுவை சேர்க்கும் விதம் பற்றி செய்முறைகளை விளக்கும் யூ ட்யூப் சானல் வைத்துள்ளார். "பங்கஜ பக்குவம் "என்று பெயர்.லைக்குகள் மிக அதிகம்!
அவரது மகள் வயிற்றுப்பெயர்த்தி மோகனப்பிரியா :
வெளிநாட்டில் கணவனுடன் வாழ்கிறாள் .
பாட்டிக்கு கர்நாடக இசையில் மிகுந்த ஈடுபாடு ; அதிலும் மோகன ராகம் என்றால் மிகுந்த மோகம். கண்ணுக்குக் கண்ணான பெயர்த்திக்கு அந்த பெயர் வைத்தார். மோகனப்பிரியா நுனி நாக்கு ஆங்கிலம் பேசி, மேலை நாட்டு மோகம் மிக்கவளாக உள்ளாள் .
ஆனால் பாட்டிக்கும் பெயர்த்திக்கும் உள்ள " அன்பிணைப்பு" வியக்கத்தக்கது!
பெயர்த்தி,நாக்கில் நுழையாத மேற்கத்திய உணவு வகைகளை தயாரித்துக்காட்டும் யூட்யூப் சேனல் வைத்து இருக்கிறார். Priya cooks என்று பெயர். பொங்கல் பண்டிகையை, கொண்டாட விடுமுறையில் வந்திருக்கிறார்.
இவர்களின் உரையாடலைக் கேளுங்களேன்; இரண்டு தலைமுறைகளின் கருத்துப்பரிமாறல்!
(பா- பாட்டி; பெ- பெயர்த்தி)
பெ- Grandma,பொங்கலுக்கு என்ன ஸ்பெஷல் டிஷ்?
பா- பாட்டினு, வாய்நிறைய நீ கூப்பிட்டா, என்மனசு நிறையும் கண்ணா!
நான் வெண்பொங்கல், சர்க்கரை பொங்கலோடு , வரகரசிப் பொங்கலும் சமைக்கப்போகிறேன். உன்
தாத்தாவுக்கு வரகரிசி பொங்கல் , தேங்காய் சட்னியோடு , சாப்பிட ரொம்ப பிடிக்கும்.
பெ- வரகரிசி? What is that?
பா- பாரம்பரிய தானியம் கோடோ மில்லட் னு ( kodo millet) இங்கிலீஷ்ல சொல்லுவா.
பெ- மில்லட்டா? மில்லட் வெரைட்டீஸ் நாங்க பிரேக்பாஸ்ட் டிஷ்ஷஸ் செய்ய யூஸ் பண்றோம்.
பா- milletனா சிறு தானியங்கள்.
நம்ப கிராமங்கள்ள,பாரம்பரிய தானியங்களை பயன்படுத்துவது மிக சாதாரணம். அங்க , ஏழை மக்கள் சாப்பாட்டில், தினமும் கம்பு( pearl millet,) கூழாக, சோளம்( sorghum) , தினை ( ( foxtail millet) மாவாக,குதிரைவாலி( barnyard millet)சாமை( little millet) , அரிசிக்கு மாற்றாக என தினமும் உபயோகிப்பா. இப்போ நம்ப cities , onlineல இதே தானியங்கள, பாமர மக்களும் சாதாரணமா தினமும் பயன்படுத்தினதை,ஆரோக்கிய உணவுனு, அதிக விலை கொடுத்து வாங்கி சாப்பிடறோம். ஏன்னா, வெள்ளகாரன் சொல்லிட்டான், இல்லையா? கலி காலம்டி!
பெ- சூபர் பாட்டி! ஆனா வெள்ளக்காரன் பொய் சொல்லமாட்டான்னு, netflixல ஒரு tamil movieல பாத்தேனே!
பா- அதுவே பெரிய பொய்டி.
பாட்டினா கூப்டயா! இன்பத்தேன் பாஞ்சுது காதுலே!
அப்புறம் வரகு பொங்கல்னு சொன்னேனா ?! இந்த வரகரிசி ஒடம்புக்கு ரொம்ப நல்லது.
வரகரிசி (Kodo Millet) நார்ச்சத்து, புரதம் நிறைந்த ஒரு சிறுதானியம்; நீரிழிவு, உடல் எடை குறைப்பு, இதய ஆரோக்கியம், செரிமானம் போன்றவற்றுக்கு மிகவும் நல்லது, நிணநீர் சுரப்பிகளை சீராக்கி, பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகளை நீக்கி, கோடையில் தாகத்தைக் குறைக்கும் சக்தி கொண்டது.
பெ- பாட்டி, very intersting!
பா- ஏண்டி, வாய தொறந்தாலே இங்கிலீஷா கொட்டறியே! நானும் அந்த கால SSLC டி!
ஆனா எங்க இங்கிலீஷ்ல பேசணமோ அங்க மட்டும் ,இலக்கண சுத்தமா பேசுவேன். LOL,OMG எல்லாம் இல்லாம!
பெ- உங்கூடதான் தமிழ்ல பேச முடியறது. அப்பா, அம்மா கூட இங்கிலீஷ்தான்!
அம்மா வேற டெல்லிலே, வளந்தவோ. எதுக்கெடுத்தாலும் " அச்சாதான்"!
பா- என்னமோ போங்க! வீட்ல தமிழ் பேசலேனா, நாட்ல தமிழ் எப்படி வளரும்!
பெ- மேட்டருக்கு , சாரி, சாரி , விஷயத்துக்கு வருவோம். வரகரிசிக்கு வேற என்ன விசேஷம்?
பா -இன்னொரு விசேஷம் என்னன்னா, கோவில் கோபுரங்கள் பற்றியது. அந்த காலத்திலே, கோவில் கோபுரம்தான் ஊரிலேயே உயரமான கட்டுமானம். இப்போதான் பல மாடிக்கட்டடங்கள் கோபுரத்தையே,மறைக்கற மாதிரி கட்றாங்களே! உயரமான கோபுர உச்சிலே கலசங்கள் இருக்கும், ஐம்பொன்னாலே செஞ்சது. அது உள்ளே நான் சொன்ன நவதானியங்கள கொட்டி வைப்பாங்க. கோபுரம் உயரமா இருக்கிறதால, வெள்ளம் வந்தாலும் கலசத்துக்கு உள்ள இருக்கிற விதைகள சேதமாகாது. தேவைப்பட்ட வெள்ளம் பாதித்த கிராமத்தில, திரும்பி பயிர் செய்ய பயன்படு த்துவாங்க. இந்த விதைகளுக்கு 12 வருஷம் உயிர் இருக்குமாம் அதனாலதான், கோவில் கும்பாபிஷேகம் 12 வருஷத்துக்கு ஒரு முறை செய்யணும்னு சொல்றா.
வரகரிசி கலசத்துல, வைக்கிற தானியங்கள்ள, முக்கிய பங்கு வகிக்கும்.
இன்னொரு செய்தி. இங்கிலாந்தில, லண்டன் kew gardenல, அரிய வகை தாவரங்கள, விதைகளைப் பாதுகாக்க millenium seed bank(ஆயிரமாண்டு விதைவங்கி )வச்சருக்காங்க," உயரினப் பன்மயத்த" ( bio diversity) பாதுகாக்க. இது 'தாவரங்களுக்கான நோவாப் பேழை' (Noah's Ark for plants) என்றும் அழைக்கப்படுகிறது. நாம்பளும் வெள்ளகாரனை,அவன் பொய் சொல்ல மாட்டானோ இல்லையோ,இந்த விஷயத்தில பின்பற்றலாம் இல்லையா?
பெ- ஆமாம் பாட்டி. இந்த பொங்கல் விசேஷமா இருக்கும்எனக்கு. ஏன்னா,உன்னோடு சேர்ந்து , வரகரிசி பொங்கலை( தாத்தா சாப்டு, மிச்சம் இருந்தா!) ருசிச்சிட்டு, பல விஷயங்கள, தெரிஞ்சிண்டுனு, சொல்லிண்டே போலாம்.
நாம ரெண்டு பேரும் சேந்து யூட்யூபுல பாரம்பரிய உணவு முறை உணவுகளை செஞ்சு காட்டலாம்."பங்கஜ பிரியாவின் பக்குவ சமையல் "
சானல்!
அதிலேயே பேச்சுத்தமிழ பத்தி நீ பேசி அந்த பதிவ முடிக்கலாம்
பா- வாடி என்கண்ணு.
சமத்து!
என்கண்ணே படும் போல இருக்கே! திருஷ்டி கழிக்கிறாள்.
சேர்த்துக் கட்டிக்கொள்கிறாள்.
இருவரும் சேர்ந்து" வரகரிசி பொங்கலோ பொங்கல்" என்று மகிழ்ச்சிக்குரல் எழுப்புகின்றனர்.
தாத்தா வரகரிசிப்பொங்கல் என்றவுடன் , ஆவலுடன்,எட்டிப்பார்க்கிறார்!
- மோகன்
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
*கற்றது என்ன?*
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
முதுகில் 'சுள்'ளென கதிரொளி விழுகிறது.
முதியவரின் உடலெங்கும் உஷ்ணம் பரவுகிறது
உழைத்துக் களைத்த உடம்பெங்கும்
வலி இருக்கிறது
இல்லம் திரும்ப பேருந்துக்காக
நிற்கையில்
உடலின் வலி அதிகமாக
தெரிகிறது...
பெஞ்சு மீது மூவர் அமர்ந்து இருக்கின்றனர்.
மையத்தில் இருப்பவளோ பள்ளி செல்லும் சிறுமி..
வயது முதிர்ந்த முதியவர் ஒருவர்
நிற்கும்போது
இடம் தந்து உதவாமல்
சொகுசாக அமர்ந்திருக்க
பார்ப்போரின் மனதில் வலி தோன்றுகிறது
பெரியோருக்கு இடம் தராது
இருக்கையில் அமர்ந்திருக்கும்
இதுபோன்ற குழந்தைகள் கற்றது தான் என்ன!
பள்ளிக் கல்வியால் பெற்றதுதான் என்ன?
இப்படத்தில் காணும் காட்சி
பற்பல பொது இடங்களில் நாம் காண்பவையே!
முதலில் குழந்தைகள் மனிதத்தை கற்கட்டும்!
நல்ல மனிதனாய் வளரட்டும்!!
பள்ளிகள் அதை செய்யத் தவறின்
மதிப்பெண்கள் மட்டுமே மதிப்பு தரும்
என நாம் யாரும் நினையாது
நற்பழக்கங்களை
குழந்தைகளுக்கு நாம் கற்பிப்போம்!
நற்குண நலன்களை
குழந்தைகளின் மனதிலே
விதைத்திடுவோம்!
நல்ல மனிதர்களாய் அவர்களை வளர்த்திடுவோம்!!
*ஶ்ரீவி*
காத்திரு!
இருள் சூழ்ந்த வேளை
காத்திரு!
வெளிச்சத்தின் கீறல்
இமை முடி வருடி
இருளை கிழித்து
தன் இயல்பினை
இயம்பும் வரை
காத்திரு!
அடைய வேண்டியதும்
அடையும் பாதையும்
அறிவின் ஆளுமைக்குள்
அடங்க மறுக்கும்போது
அச்சம் சிறிதுமின்றி
அலறிடும் குழப்பக் கூச்சல்கள்
அடங்கி ஒடுங்கும் வரை
அமைதியாய் காத்திரு!
சேற்று நீர்
தெளியும் வரை காத்திரு
ஊற்று நீர்
சுரக்கும் வரை காத்திரு
சீறும் புயல் காற்று
தென்றலாய் புன்னகைக்கும்
வரை காத்திரு
வறண்ட பூமியில்
வசந்த மழை கொட்டும்
வரை காத்திரு
விதை தன் வீரியத்தை
விளக்கும் வரை
காத்திரு!
கூட்டுப் புழுவாய்
நீ இருக்க நேர்ந்தால்
வெறுமை உலகில்
வண்ணங்களை தெளிக்க
நீ விரும்பினால்..
சுதந்திர வானில்
சிறகடித்துப் பறக்கும்
பட்டாம்பூச்சியாய்
உருமாறும் வரை
காத்திரு!
காத்திரு!
காத்திருப்பின் கடைசி நொடி வரை
கலங்காமல் காத்திரு!
காத்துக் கொண்டே
காலம் கழிக்காமல்
காத்திருப்பை உடைக்கும்
கருவியாய் உன்னையே
உருவாக்கி மெருகேற்றி
உருப்படியாய் காத்திரு!
- சாய்கழல் சங்கீதா
சூரியனைக் காணோமுங்க; கண்டு பிடிச்சித் தாங்க!!
**********
(ஒரு கற்பனை நிகழ்வுதான்; ரொம்ப ஸீரியஸா எடுத்துக்கிட்டுச் சங்கடப்படாதீங்க!)
கற்பனை உலகில் உலவும் ஒரு தமிழ் கவிஞர், பொங்கலுக்கு இரு தினங்களுக்கு முன் வானம் மேக மூட்டமாய் இருந்ததால், சூரியன் கண்ணுக்குத்தென்படாத நிலையில், காவல் நிலையத்தில் , சூரியனைத் தேடித் தருமாறு, ஒரு புகாரைத் தருவதாக ஒரு கவி படைத்தார்.
அது என் கற்பனைக்குதிரையை உந்தி விட்டது.
விளைவு.....
கீழே காணுங்கள்:
பாத்திரங்கள்:
கவிஞர்- க
காவல் நிலைய துணை ஆய்வாளர்- து ஆ
க- ஐயா வணக்கம். காணாம போன ஒத்தர தேடி கண்டு பிடிக்கணுங்க; புகார் குடுக்க வந்தேங்க.
து ஆ- ஒக்காருங்க. மேட்ருக்கு வாங்க
க- ஐயா, சூரியன ரெண்டு நாளா காணோமுங்க
து ஆ- யாரு அவரு? உங்களுக்கு என்ன ஒறவு?
க- ஒறவனு இல்லீங்க, ஆனா காலேல அவர் மொகத்தை கண்டுகினு கும்பிட்டு நாளை ஆரம்பிப்பேங்க.
து ஆ- மைண்ட் வாய்சில்- என்ன கொடுமையா இது? காலங்காலேல, காமெடி பீசா ஒரு கிராக்கி. இன்னிக்கு விடிஞ்சா மாதிரிதான்!
க- இன்னிக்கு விடிஞ்சா மாதிரியே இல்லீங்க!
து ஆ- (மனதுக்குள்- ஆஹா! அப்படியே மைண்டைப் படிக்கிறானே!)
சரி, ரெண்டு நாளா என்ன கிழிச்ச? இப்ப புகார் குடுக்கற?
க- (உணர்ச்சி வசப்பட்டு, நல்ல தமிழில்)
ஐயா ,அவர் மறைவார்; திரும்ப வருவார்; ஒரு நாளில் பல தடவை இப்படி நிகழ்வதுண்டு . ஆனால், இரண்டு நாட்களாக நாளாக தலையே காட்டவில்லை என்றதும் மனதில் வியாகூலம்; சிந்தாகுலம்.
து ஆ- என்ன குப்ப கூளமா?நல்ல பேசிக்கினு இருந்த. தீடீல்னு சொதப்பறியே! தமிழ்ல பேசக்கூடாதா! பேஜாரா போச்சுய்யா உன்னோட!
து ஆ- சரி, சரி,அங்க அடையாளம் சொல்லு
க- வட்டமா இருப்பாருங்க!
து ஆக்கு, தூக்கி வாரிப்போடுகிறது.
து ஆ-என்னய்யா? வட்டமா, வட சென்னைக்கா? தென் சென்னைக்கா?
க- அவர் பொதுங்க .
து ஆ- என்னய்யா குழப்பிக்கினே கீறியே!
அட்ரஸ் என்ன?
க-காலைல அடிவானம், மதியம் நடுவானம்,சாய ரட்சை சமயம், மேல்வானம்
து ஆ - ரொம்ப ஊர்சுத்தியா இருப்பாரு போல. நம்ப ஏரியா கீழ வருமா? டவுட்டுதான்!சரி புகார குடுத்துட்டுப்போ; கவனிக்குறேன்.தனிப்படை அமச்சுத் தேட வேண்டி இருக்கும் போல. செலவாகும்; சொல்லி அனுப்புறேன்.
யோவ் 101, டீ சொல்லுயா. சமூக சேவை செஞ்சே நெஞ்சு வறண்டு போச்சுயா!
கவிஞர் வெளியே வருகிறார். மேக்கூட்டங்களிடையே, கண்ணாமூச்சி ஆடியபடி சூரியன் தலை காட்டுகிறான்.
கவிஞருக்கு ஒரே மகிழ்ச்சி.
"ஞாயிறு போற்றுதும்; ஞாயிறு போற்றுதும்" என்று முணுமுணுத்தபடி வேகமாக நடக்கிறார்.
- ,இ.ச.மோகன்,
•••••••••••••••••••••••••••••
*பொங்கல் பெரு விழா விவரணம்*
•••••••••••••••••••••••••••••
*முத்திரை பதித்த கோலாகல பொங்கல் பெருவிழா*
24 ஜனவரி 2026, சனி மாலை 5:30 மணிக்கு பன் பயன்பாட்டு பெருவரங்கில் நமது மகாகவி பாரதி தமிழ்ச் சங்கத்தின் கோலாகல பொங்கல் பெருவிழா சிறப்பாகத் துவங்கியது.
பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக எனும் முழக்கத்துடன் கொண்டாடப்படும் பொங்கல் நிகழ்ச்சியின் முதல் நிகழ்ச்சியாக மங்கலகரமாக குத்துவிளக்கினை திருமதிகள் சுமதி, சுகன்யா மற்றும் அடக்கம்மை ஆகியோரிடம் திருவாளர்கள் கே. எஸ். சுந்தரம் மற்றும் சுந்தர் ராஜன் ஆகியோர்
ஏற்றி வைத்தனர்.
பிறகு முதலில் செல்வி. தீப்தி அவர்களுடன் இணைந்து அரங்கமே தமிழ்த் தாய் வாழ்த்து பாடியது.
நிர்வாகச் செயலர் திருமதி. சிவகாமி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
முதல் நிகழ்ச்சியாக டாக்டர். விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் அவர்கள் பாடிய பிரபலமான பாடலின் தாள நயத்தினை ஒத்து தலைவர் ஸ்ரீவி அவர்கள் எழுதிய சங்ககால இலக்கியம் மற்றும் தமிழ்ச் சங்கத்தின் பெருமையை விளக்கும் பாடலை துர்கா சாய்ராம், ஸ்ரீவித்யா, பிரியா ஆரத்தி ஆகியோருடன் ஸ்ரீவி இணைந்து பாடினார். பாடலின் தாள நயத்தால் வசீகரிக்கப்பட்ட அரங்கமே கரவொலி எழுப்பிக் கொண்டாடியது.
பிறகு 20 நாட்களாக பொறுப்பாளர்களின் மேற்பார்வையில் அவர்களின் வழிகாட்டுதலில் கடினமான பயிற்சி செய்து தயார் நிலையில் இருந்த 21 குழந்தைகள் கலந்து கொண்ட வில்லுப்பாட்டு நிகழ்ச்சி அரங்கேறியது. வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மட்டுமில்லாமல் உழவினைப் பற்றியும், உழவர்கள் பற்றியும் பயிர் வளர்ந்து வரும் ஒவ்வொரு நிலை பற்றியும் அனைவரும் அறிந்து கொள்ளும் முகத்தான் பல்வேறு சமூக செய்திகளைச் சொல்லி சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் பழுதினையும் சரி செய்யக்கூடிய - பல்வேறு கருத்துக்களை கூறுகின்ற ஒரு மிகச்சிறந்த நிகழ்ச்சியாக அது அமைந்திருந்தது. வில்லுப்பாட்டுக்குள்ளேயே பல்வேறு சமூக செய்திகளை வெளிப்படுத்தும் பட்டிமன்றம், திருவிளையாடல் சிவன்–தருமி வசனம், நடனம், குடும்ப கொண்டாட்டம், சிலம்பம் என ஒரு கலக்கு கலக்கியது வில்லுப்பாட்டு குழுவினுடைய கடுமையான உழைப்பும் நல்ல தயாரிப்பும்.
அதன் பொறுப்பாளர்களான மகாலட்சுமி, தேவி அருண், சுல்தானா, மற்றும் சிவகாமி ஆகியோரை பாரதி தமிழ்ச் சங்கம் உளமார பாராட்டி மகிழ்கிறது.
அதன் பிறகு கார்த்திக் ரமணி அவர்களும் வெங்கடேஸ்வரன் அவர்களும் இணைந்து பாடிய *காட்டுக் குயிலு* பாடல் இன்னிசைக்கப் பட்டது.
இதனைத் தொடர்ந்து தலைவர் ஸ்ரீவி அவர்களும் உதவி தலைவர் தியாகராஜன் ஐயா அவர்களும் பொங்கல் நிகழ்ச்சிகளின் ஆயத்தப் பணிகளில் எடுக்கப்பட்ட முயற்சிகள் பற்றியும் குழந்தைகள் வளர்த்த முளைப்பாரி அவர்கள் வரைந்த ஓவியங்கள் பற்றியும் பெருமையுடன் விளக்கினர்.
தலைவர் ஸ்ரீவி அவர்கள் நமது குடியிருப்பின் அருகில் உள்ள அணை ஏரியை ஒட்டி உள்ள நடைபாதையில் 260 மரக்கன்றுகளை நட முன் கை எடுத்த நமது உறுப்பினர் ராஜா முகமது அவர்களுக்கும் அதனைத் தொடர்ந்து தினமும் அதற்கு நீர் ஊற்றுவதற்காக இருக்கும் பலரில் முதலில் நிற்கும் திரு சீனிவாசன் (நிர்வாக குழு உறுப்பினர் காமாட்சி அவர்களின் தந்தை) அவர்களுக்கும், தான் எழுதிய *குட்டிக் குட்டிக் கதைகள் சொல்லவா* நூலினை அன்பளித்து கௌரவப் படுத்தினார். அந்த நல்லதொரு மரக்கன்று வளர்க்கும் நிகழ்ச்சியில் உடன் இருந்த நமது தமிழ் சங்க உறுப்பினர்கள் தியாகராஜன், தேவி அருண், பாலன், கணேசன் போன்றோரையம் பாராட்டினார்.
அதன் பின் திரு. சண்முகசுந்தரம் அவர்களுடன் உதவித் தலைவர் தியாகராஜன் இணைந்து *பேச்சு தமிழ்ப் பேச்சா தான் இருக்கணும்* எனும் ஒரு அருமையான நிகழ்ச்சிதன்னை நடத்தினர். ஆங்கிலக் கலப்பு இல்லாத - கொடுக்கப்பட்ட தலைப்பில் உரையாட வேண்டும் என்கின்ற அந்த நிகழ்ச்சியில் எதிர்பார்த்ததற்கும் அதிகமான உறுப்பினர்கள் / பூர்வா குடிவாசிகள் கலந்து கொண்டதோடு, சில வினாடிகளில் ஆங்கிலத்தில் பேசி விடுவார்கள் என்ற நமது எதிர்பார்ப்பை முறியடிக்கும் வகையில் பலரும் நல்ல தமிழில் ஒரு நிமிடம் பேசியது அனைவரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது. இந்த நிகழ்ச்சியும் அனைவரின் கருத்தையும் கவர்ந்தது. பலருக்கும் உற்சாகமாக பங்கேற்கும் வாய்ப்பினையும் தந்தது. இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்:
அனிதா,
லட்சுமி,
மைதிலி நீலகண்டன்,
பாலன்,
சிவகாமி,
I.B. ஸ்ரீனிவாசன், சரஸ்வதி, நாகராஜன், பத்மாவதி, திருஞானசம்பந்தம், நாகராஜன்,
வித்யா மற்றும் ஹேமாவதி
இதில் கலந்துகொண்டோரில், வெற்றியாளர்களைத் தீர்மானிக்க திரு. நா. கணேசன் ஐயா அவர்களும் அசோக் அவர்களும் நடுவர்களாக இருந்தனர். அவர்கள் வழங்கிய மதிப்பெண்கள் அடிப்படையில் கீழ்க்கண்டோர் வெற்றியாளர்களாக அறிவிக்கப் பட்டனர்:
சரஸ்வதி, நாகராஜன், பத்மாவதி, திருஞானசம்பந்தம், பாலன்
யாருமே பதில் சொல்ல விருப்பமில்லாத ஒரு கேள்விக்கு மிக அருமையாக தெளிவான தமிழில் எந்த ஆங்கில மொழி கலப்பும் இல்லாமல் தீர்க்கமான கருத்துக்களை முன்வைத்த வித்யா சிவக்குமார் அவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப் பட்டது.
அடுத்து துர்கா சாய்ராம் மற்றும் சுவாதி அவர்கள் திருமதி சுமதி அவர்களுடன் இணைந்து *பூ பூக்கும் மாதம்* பாடலை இன்னிசைத்தனர்.
பிறகு ஐந்து முதல் எட்டு வயது வரையிலான பிறகு 10 முதல் 15 வயதிலான சிறுவர் சிறுமிகளுக்காக வினாடி வினா நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது அனைத்து குழந்தைகளும் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டது குறிப்பிடத் தக்கது. அனேகமாக அனைத்து குழந்தைகளும் சரியான விடையினை நல்கியது நமது தமிழ்ச்சங்கு குடும்பங்களின் குழந்தைகள் தமிழில் நன்றாக எழுத படிக்க கற்று இருக்கிறார்கள் என்பதோடு, பொது அறிவையும் நன்கு வளர்த்திருக்கின்றனர் என்பதை உணர முடிந்தது. அனைத்து குழந்தைகளுக்கும் நமது வாழ்த்துகள்!
கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் நமது தமிழ்ச் சங்கத்தின் இலச்சினை பொறித்த ஓர் எழுது கோலும் ஓர் இனிப்பும் வழங்கப் பட்டன. குழந்தைகளின் மகிழ்ச்சி தெள்ளென தெரிந்தது. இந்த வினாடி வினா நிகழ்ச்சியின் பொறுப்பாளர்களாக இருந்து மிக சிறப்பாக செயல்பட்ட அமுதவல்லி, மலர்விழி மற்றும் இமான் சுல்தானா அவர்களை தமிழ்ச் சங்கம் மனதார பாராட்டி மகிழ்கிறது.
அதன் பின்னர் துர்கா, கார்த்திக் ரமணி, ஸ்வாதி ஆகியோர் பாடிய *மார்கழி தான் ஓடிப் போச்சு* பாடலுடன் நிகழ்ச்சிகள் இனிதே நிறைவுற்றன.
நிகழ்ச்சியை மிக அருமையாக கிருத்திகா அவர்கள் தொகுத்து வழங்கினார். முதன்முறையாக அவர் தொகுப்பாளினியாக தனது சேவையை செய்கிறார். அவருக்கு நமது பாராட்டுதல்கள்.
பிறகு அமைப்பாளர்களுக்கும், பங்கேற்பாளர்களுக்கும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது.
நிறைவாக மல்லிகாமணி அவர்கள் நன்றியுரை வழங்கியதும், நாட்டுப்பண் இசைக்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது.
*நன்றி நவிலல்*
நமது நிகழ்ச்சிக்கு சிற்றுண்டியும் தேநீரும் இலவசமாக வழங்கியது குவாலிட்டி பைட்ஸ் நிறுவனம். அதற்கு நமது நன்றிகள்.
இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்காக பல நாட்களாக தொடர்ந்து உழைத்திட்ட நிகழ்ச்சியின் பொறுப்பாளர்களுக்கு நமது உளம் நிறை நன்றிகள்.
பங்கேற்பாளர்களுக்கும் கலந்து கொண்டு சிறப்பித்த பூர்வா குடிவாசிகளுக்கும் இதயம் கனிந்த நன்றிகள்.
ஶ்ரீவி
தலைவர்.
குளிரில் குயில் ஒன்று
நம்ம சென்னையா இப்படிக் குளுருது !
நாக்கு மேல் பல்லும் தாளம் போடுது
கம்மல் காதுகளில் ஆடுது தொடர்ந்து
கழுத்தும் ஆடாது நிற்கவிலை நிமிர்ந்து
அம்புட்டு வேலையா ! ஆதவனைக் காணோம்
அடிக்கடி விடுப்பு கேட்டால் ஆளை மாத்தணும்
தும்மலாய் வானம் தூறிக் கொண்டிருக்குது
துவட்ட இயலாக் காகம் தலையை ஆட்டுது
கும்பகர்ணன் போலே தூங்கத் தோணுது
கோலங்கள் வாசலில் மாயமாய் மறையுது
சொம்பு நிறையத் தேநீர் மனமும் விரும்புது
"சூடாக கூட" எனச் சொல்ல வார்த்தை வருது
" அம்பு இலா வில் " லொன்று ஒலிக்க இருக்குது
அதிர்ந்த அணை ஏரியில் அலை எழப் போகுது
தெம்பு தரும் பாரதி தமிழ்ச் சங்கம் உழைக்குது
திரள்வோம் " புதுக் குயில் " இன்று மாலை இசைக்குது.
__. குத்தனூர் சேஷுதாஸ் 24/1/2026
பாரதி
ஓ பாரதி !
சொற்சுவை
பொருட்சுவை
கூட்டி
தீந்தமிழை ஊட்டி
சுதந்திரத் தீ மூட்டி
தீமைகளை வாட்டி
நீதிநெறி நாட்டி
மூட நம்பிக்கை ஓட்டி
புதுவுலகம் காட்டி
அரும் கவிதைகளை
எழுதினாய் நீ..
உனக்கு தலைப்பாகை
கோட்டு மாட்டி
உன் புத்தியைத் தீட்டி
உன் எழுதுகோலை ஆட்டி
"மகாகவி பாரதி" என்ற பட்டமும் சூட்டி
எழுத வைத்தது யாரோ?
பாரதி!!!
உனக்கு தமிழ் ஊட்டினாளே
ஒரு சீமாட்டி..
உனக்கு முன்னரே
தமிழன்னையின்
அருள் பெற்றாள்
ஆத்திசூடிய மூதாட்டி
நம் ஔவைப் பாட்டி!
- சாய்கழல் சங்கீதா
°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°
*மழைச் சாரலில் நனைவது பேரானந்தம்*
°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°
கீழ் திசை வானம்
ஏனோ இன்று சிவக்கவே இல்லை..
கார்மேகம் சூழ்ந்த
கதிரவன் ஒளி வீசவே இல்லை!
காலை முதல் தூவானமாய்
தூறலின் சிதறல்!
கூதல் காற்றோடு
குற்றால அருவியாய்
சாரலின் பரவல்!
துளித்துளியாய் மழைத்துளி பூமியில் வீழ்கையில்
குடை பிடித்து அமர்ந்திருக்கும்
சிறுவனும் சிறுமியும்..
கையில் குடை இருந்தாலும் மழையில் நனைந்தபடி
*மழைச் சாரலில் நனைவது பேரானந்தம்*
*குடையை மடித்து விட்டு அனுபவி அண்ணா*
சொல்கிறாள் இந்த தேன் சிட்டு.
அனுபவித்தவர் ஆமோதிப்பர் உடன்பட்டு...
*ஶ்ரீவி*
==============
இடிகள் கோஷமிட
கருவானம் வேஷம்
கலைத்து பெய்துவிடும்
விஷம் நீங்கிய
மாசற்ற மழை நீரில்
நனைவது மிகவும் பிடிக்கிறது...
சந்தோஷம் தான்!
என்ன செய்வது...??!
ஒரு நிமிஷம் நனைந்தாலும்
உடனே பிடிக்கிறதே
ஜலதோஷம் தான்...!
- சாய்கழல் சங்கீதா
=================
மழை
தூறலாய், சாரலாய்
பெய்யும் போது
பேரானந்தம்.
பள்ளி விட்டவுடன்
சிலு சிலுவெனப்
பிடித்த மழையில்
வகுப்புத் தோழர்களுடன்
நனைந்தபடி ஓடியது
கொட்டும் மழையில்
சிற்றாறாய் ஓடும் நீரில்
நோட்டுப் புத்தகத் தாளைக்
கிழித்து படகு செய்து
போட்டியிட்டது
மழை விட்ட தூவானத்தில்
அடுக்குமாடி வீடுகளால்
மறைக்கப் படாத
வண்ண வண்ண
வானவில்லை
இரசித்தது
மழை என்றும்
நம் சிறு வயதுத்
தோழன்
- முகம்மது சுலைமான்
===
*பூர்வா குடியிருப்பு நலச் சங்கம் 18.1.26 ஞாயிறு அன்று நடத்திய பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சிகளில் நமது மகாகவி பாரதி தமிழ் சங்கம் பங்கேற்று நடத்திய பட்டிமன்ற விவரணம்*
நமது உதவித்தலைவர் தியாகராஜன் ஐயா அவர்களிடம் நலச் சங்க நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில்,
18 ஜனவரி 26 அன்று நடந்த பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சிகளில் நமது மகாகவி பாரதி தமிழ்ச் சங்கம் சார்பில் பட்டிமன்றம் நடத்தப்பட்டது.
தலைப்பு: *திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகளில் தற்போது குடும்பங்களில் உண்டாவது சந்தோஷமே / சங்கடமே*
*சந்தோஷமே* அணியில்
ஸ்ரீவித்யா,
சுல்தானா மற்றும் மஞ்சுளா அணிவகுத்தனர்.
*சங்கடமே* அணியில் வெங்கட்ராமன், நாகராஜன் மற்றும் அனிதா பங்கேற்றனர்.
நடுவராக சங்கத் தலைவர் ஸ்ரீவி அவர்கள் இருந்தார்.
வெளி மேடை ஒன்றில் நமது பட்டிமன்ற குழு பங்கேற்கும் முதல் நிகழ்வு இதுதான். நமது கோரிக்கையை ஏற்று மேடை அமைத்து தந்த நலச்சங்கம் நல்ல ஏற்பாடுகளை செய்திருந்தது. வெளி அரங்கில் பட்டிமன்றம் நடக்கையில் குறிப்பாக உணவுப் பதார்த்தங்கள் விற்கும் தற்காலிக அங்காடிகள் இருக்கும் போது சலசலப்பு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்ப்போடு தான் நமது பட்டிமன்றக் குழு களம் இறங்கியது. ஆனால், நமக்கு ஆச்சரியம் தரும் வகையில் நானூறுக்கும் அதிகமான நமது பூர்வாகுடி வாசிகள் உன்னிப்பாகவும் மிகவும் கவனத்துடனும் பட்டிமன்ற நிகழ்வை கவனித்தது நமக்கு பெரும் மகிழ்வை தந்தது.
அதிலும் மகிழ்ச்சியோடு பெருத்த கர ஒலி எழுப்பி உற்சாகம் தந்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டு அணியினரும் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் நல்ல சூடான, சுவையான, சுவாரசியமான வாதங்களை முன் வைத்தனர். ஒருவர் தீவிரமாக வாதங்களை அடுக்கினார். இன்னொருவர் நகைச்சுவை ததும்பத் ததும்ப பேசினார்.
அனைத்து பங்கேற்பாளர்களும் அவரது பாணிக்கு ஏற்றவாறு மிகச்சிறப்பாக உரையாற்றி அரங்கத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தனர்.
சற்றேறக்குறைய ஒரு மணி நேரம் நடந்த அந்த நிகழ்வில் ஒட்டுமொத்த அரங்கமும் ரசித்து மகிழ்ந்து, ஒருவர் கூட இருக்கையை விட்டு எழுந்திடாத அளவு ஈடுபாட்டுடன் ரசித்தது நமது பூர்வா குடிவாசிகளின் ரசிப்புத்தன்மையை – நல்ல நிகழ்ச்சியை பாராட்டும் நல்ல குணத்தை வெளிக் காட்டியது.
சங்கடங்கள் அணியினர் அடுக்கடுக்காக குறிப்பிட்ட அந்த சங்கடங்களை உணர்ந்து எதிர்கால விழாக்களில் சங்கடங்களைக் குறைத்து, விழாக்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து சந்தோஷத்தை அதிகப்படுத்தி விழாக்கள் நடத்தப் பட வேண்டும் – அத்திசைவழி மக்கள் தங்கள் சமூகப் பொறுப்பு உணர்ந்து செயல்பட வேண்டும் என்கின்ற தீர்ப்போடு பட்டிமன்றம் நிறைவுற்றது.
நிகழ்ச்சி நிறைவுற்றதும் நமது தமிழ் சங்கத்தின் சார்பில் தலைவர் ஸ்ரீவி தான் எழுதிய ஐந்து நூல்களோடு நமது சங்க கவிஞர்கள் அரங்கேற்றிய கவிதைத் தொகுப்பையும் இணைத்து ஆறு நூல்களாக வரவிருக்கும் நூலகத்திற்கு நலச்சங்க தலைவரிடம் அன்பளித்தார்.
குறிப்பு:
நமது பார்வை:
1) நமது பட்டிமன்ற குழுவிற்கு முதன்முறையாக ஒரு வெளிமேடை கிடைத்தது.
அந்த வாய்ப்பினை நமது குழு மிகச் சிறப்பாக பயன்படுத்தியும் கொண்டது.
2) நமது மகாகவி பாரதி தமிழ் சங்கத்தின் பதாகையை மேடையில் நிறுத்தி அந்த நிகழ்ச்சியை நடத்தியது. இதனால் நமது சங்கம் பற்றி அறிந்திடாத பல பூர்வா குடிவாசிகளுக்கும் இந்த செய்தி சென்றடைந்தது.
3) தீர்ப்பு வழங்கும் முன் ஒரு வேண்டுகோளாக நமது சங்கத்தின் கரங்களை பலப்படுத்த பூர்வாகுடி வாசிகள் பலரும் சங்கத்தில் இணைய வேண்டும் என்கின்ற வேண்டுகோளை நாம் முன் வைத்தது.
4) போட்டி போட்டுக் கொண்டு நமது பங்கேற்பாளர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றமை, நமது பூர்வாகுடி வாசிகளிடம் நமது சங்கத்தின் பெருமையை உயர்த்தி இருப்பது.
4) பற்பலரும் வந்து நமது அணியினரை நிகழ்ச்சி முடிந்ததும் பாராட்டிச் சென்றது.
அழியாக் கோலம்
காலத்தின் கோலத்தால்
அன்பு பாராட்டிக் கொண்டிருந்த சிலரின் மரண கோலத்தை சென்று
காண முடியவில்லை...
என் மனத்தரையில் அவர்கள்
போட்டுக் கொண்டிருந்த
வண்ணக் கோலம்
கொஞ்சமும் கலையாமல்
அப்படியே இருக்கத்தானோ?!
- சாய்கழல் சங்கீதா
அணை ஏரியில் அதிசயம்
துளிர்க்கத் தொடங்கும் நட்சத்திர மரக் கன்றுகள்
தோகை விரித்தாடும் மயில்களே ! வாருங்கள்!
வளர்க்க முனைந்தார் நம் தமிழ்ச் சங்க *உறுப்பினர்
வாடும் பயிரதைக் கண்ட போதே வாடுபவர்
குளித்து அணை ஏரியில் நாரைகள் கூத்தடிக்கும்
கொத்தி மீன்களை நீர்க் கோழி ஏப்பம் விடும்
இளைக்க உடல் ஏரிக்கரை அதில் நடக்கலாம்
இடையிடையே சுவைக்க மா, பலா, நாவலாம்
விளையாட குழந்தையோடு வேண்டும் போது போகலாம்
விரிந்த இயற்கை பற்றிய வினாக்கள் எழலாம்
*வளியது நமைச் சுற்றி மேலும் தூய்மை ஆகும்
வந்து நமைப் பார்ப்போர்க்கு வயிறும் எரியும்
துளியும் தொய்வின்றி பராமரிக்கும் பலராம்
தொகுப்பாளர் திருமதி காமாட்சி *தந்தையுமாம்
களிப்பு அது வேண்டுமா முற்றாக இலவசம்?
கன்றுகளுக்கு நீரூற்றிப் பெறலாம் பரவசம்.
*திரு. ராஜா முகமது
* வளி - காற்று
*திரு. ஸ்ரீனிவாசன்
__. குத்தனூர் சேஷுதாஸ் 19/1/2026
அன்பெனும் நூலெடுத்து
அன்பெனும் நூலெடுத்து
அகிலாத்தாருடன் பிணைந்திட
எண்ணும் போதெல்லாம்
ஆணவம் அதிகாரம்
கோபம் வெறுப்பு
தன்மானம் தற்பெருமை
பேராசை பொறாமை
பகை பொய்மை
துரோகம் இகழ்ச்சி
சாதி மதம்
என பல சிக்கல்கள்
விழுந்து....நூலை
அறுத்து அறுத்து
அன்பின் நீளம்
குறைவதென்ன
பராசக்தி!
- சாய்கழல் சங்கீதா
*அழகு*
கண்ணிற்கு மை அழகு,
கவிதைக்கு பொய் அழகு,
பூவிற்கு நிறம் அழகு,
பூவைக்கு நாணம் அழகு, கடலுக்கு அலை அழகு,
காக்கைக்கு கருப்பழகு,
மயிலுக்கு தோகை அழகு, மன்னவருக்கு குடி அழகு,
கோபுரத்து சிலை அழகு, கோடி இருந்தாலும் கொடை அழகு,
நீருக்கு குளுமை அழகு,
நெருப்பிற்கு ஜ்வாலை அழகு,
தாயின் அன்பழகு,
தகப்பனின் பண்பழகு,
தலைவனிடம் பணிவழகு,
தொண்டனிடம் பின்பற்றுதல் அழகு,
ஆதவனின் ஒளி அழகு,
ஆன்மீகத்தில் மெய் அழகு,
மண்ணிற்கு மாந்தர் அழகு, இத்தனை அழகு இருந்தும் உன் மனம் எதை அழகு என்று நினைக்கின்றதோ அது ஒன்றுதான் உண்மையான அழகு.
சிசு
16/01/26
காவல் துறைக்கு ஜே!
காணவில்லை புகார் அது வேலை செய்தது
காவல் துறை கதிரவனைக் கண்டு பிடித்தது
"ஆணழகன் போட்டிக்குச் சென்றேன்" என்றான்
அவனை விட அண்டத்தில் அழகன் எவனாம்?
நாணமிகு சூரிய காந்தியை நாடினானா?
நற்றாமரைக் குளம் தேடி ஓடினானா?
வேணுமா இவ்வாராய்ச்சியது நமக்கு இங்கே?
வெட வெடக்கும் குளிர் விரட்ட வந்து விட்டானே.
__. குத்தனூர் சேஷுதாஸ் 13/1/2026
காவல் நிலையத்தில்...
கதிரவனைக் காணவிலை இருநாளாய் எங்கும்
காவல் நிலையமதில் தந்தோம் புகாரும்
அதிகாலை நாள்தோறும் விழித்தெழுவான்
அனைவரையும் வழியில் விழிக்கச் செய்வான்
சதி நிறைந்த இருளதை ஒட்டி விடுவான்
சக்கையாய் நமைப் பிழிந்து வாட்டுவான்
கொதிக்கும் தேநீர்,:காஃபி குடிக்கச் சொல்வான்
கூடவே வேறு சில சுவைக்கவும் செய்வான்
கொழிக்க பயிர்களைத் தழைக்கச் செய்வான்
கோயில் மணி, கோழியை "அறிவி" என்பான்
" வழிபடு இறைவனை " அதையும் சொல்வான்
வயிறு அது குறைய நடக்கவும் செய்வான்
தொழில்கள் பல உலகில் தொடங்க வைப்பான்
துரத்தி பணம் நோக்கி ஓடவும் செய்வான்
குழந்தை அவன் பற்றிய விவரங்கள் இவைதாம்
கொஞ்சம் தயவு பண்ண கண்டு பிடித்து விடலாம்.
__. குத்தனூர் சேஷுதாஸ் 12/1/2026
நடந்தேன், நடக்கிறேன்
மதியுடைய நம் முன்னோர் முடிந்த வரை நடந்தார்
மாய்ந்து போகும் வரை நடந்து கொண்டிருந்தார்
மிதிவண்டி வாங்கினேன் மிக்க மகிழ்ச்சி
மிகச் சில மாதங்களே காலில் அழற்சி
உதவ வங்கி வர வந்தது *விசையுந்து
ஓரிரு ஆண்டுகளில் வலித்தது முதுகு
பதவி உயர்ந்தது இல்லம் அதில் *மகிழுந்து
பார்ப்பவர் சொன்னார் "தொப்பை கூடுது"
விதவிதமாய் ஆலோசனை வந்தன பலவும்
வேறு வழி? சென்றேன் உடற்பயிற்சிக் கூடம்
சதையது வயிற்றைச் சுற்றி குறையவில்லை
சாப்பாட்டில் உப்பில்லை, நெய்யுமில்லை
கதை எலாம் கேட்ட தாத்தா புன்னகைத்தார்
காசேதும் செலவிலா அறிவுரை வைத்தார்
அதிகாலை விழிக்கிறேன், நடக்கின்றேன்
அடடா! மாற்றம் அதை உணர்கின்றேன்.
* விசையுந்து -- motor bike
* மகிழுந்து. -- car
__. குத்தனூர் சேஷுதாஸ் 11/1/2026
என்றோ ஒரு நாள் தம் குஞ்சுகளெல்லாம் சிறகுகளை விரித்துப் பறந்து செல்வதை
வாயிலில் நின்று
வேதனை கலந்த பெருமிதத்துடன்
வேடிக்கை பார்க்கத்தானே
இத்துனை நேர்த்தியாய் கூட்டினை
கட்டிக் கொண்டிருக்கிறது இந்த தாய்ப்பறவை...
என்றோ ஒரு நாள்
வானத்து வீதிகளில்
மீண்டும் சந்திக்கும்
வாய்ப்பு கிடைத்தால்
தன் படைப்புகளை உரசாமல்
வாஞ்சையோடு வருடிச் செல்ல
வாசம் பழகிக் கொள்ளவே
இந்த வீடு...
- சாய்கழல் சங்கீதா
உப்புமா 24
அஜீரணம்
போஜனம் அளவுக்கு மிஞ்சினால்...அஜீரணம்!!!
கூடவே உணவு சகிப்புத்தன்மையின்மை,
பறக்க பறக்க உண்ணும் போது பறக்கும் வாயுவையும் விழுங்குதல்,
அமிலத்தை அதிகரிக்கும் காரசாரமான உணவு,தூக்கமின்மை
காபி,மது,உடல் பருமன்,
பெப்ஸி கோக் மிராண்டா
மிட்நைட் பிரியாணி
மன அழுத்தம்
என பல காரணம்.......
வயிற்றில் வாயு போடும் குட்டிக்கரணம்....
உலகத்தை சுற்றிப்பார்க்க
வெளியே கிளம்பினால்
சுற்றியிருப்போர் எல்லை
தாண்டி ஓடனும்..
பூரி போல் வயிறு உப்பும்
ஏப்பம் குமட்டலோடு
விட்டு விட்டு வலியும்
விடாமல் மிரட்டும்..
ஜெலுசில்,கேவிஸ்கான் ,
டைஜீன்
எதையாவது தேடி ஓடனும்..
வுட்வர்ட்ஸ் க்ரைப் வாட்டரோ குழந்தைகளுக்கு மட்டும் ...
சித்த மருத்துவத்தில்
திரிபலா சூரணம்...
கதைகளுக்கும் கஷாயத்திற்கும் பாட்டியிடமே சரணம்..
கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் ஏன் செய்யனும்?
வருமுன் காப்பதில் தானே
உண்டு பிரயோஜனம்
உடம்பை நிறைக்கும் வாய்வு
வயிறுக்கு வேண்டும் ஓய்வு!
மனசும் வயிறும் நோகாம பாத்துக்கணும்..
சோம்பு,சீரகம், ஓமம், பெருங்காயம்,சுக்கு
இஞ்சி,பூண்டு ,தயிர்,மோர்
உணவில் சேர்த்துக்கணும்..
கண்டதையெல்லாம் உண்ண நினைக்கும் முன் யோசிக்கனும்..
இல்லை என்றால்
அஜீரணத்தின் ஆட்டம் அதகளம்..
- சாய்கழல் சங்கீதா
உப்புமா 23
சும்மா தான் இருக்கிறாள்/ன்
காலை விழித்தது முதல்
இரவு விழிகளை மூடும் வரை
அவள் சும்மா தான் இருக்கிறாள்..
சும்மாவே இருக்கிறாள்...
சும்மா
இருந்துகொண்டே
வீட்டிலுள்ளோர்க்கு தேவையில்லை என்றாலும் உணவு படைத்துக்கொண்டே இருக்கிறாள்
சும்மா இருந்துகொண்டே
பள்ளியிலிருந்தும்
பணியிடத்திலிருந்தும் திரும்பும்
வீட்டினர்க்கு தனக்குப் பிடித்ததை தயார் செய்துவிட்டு காத்துக் கொண்டே இருக்கிறாள்
சும்மா இருந்துகொண்டே
வீணாக வீட்டையும் பாத்திரங்களையும் சுத்தப்படுத்தி வீட்டின் அழுக்குகளையெல்லாம் அழித்துக் கொண்டே இருக்கிறாள்
சும்மா இருந்துகொண்டே
அனைவரும் அணிந்த உடைகளை சுத்தம் செய்து உலர்த்திவிட்டு
மீண்டும் அணியச் சொல்லி
வற்புறுத்துகிறாள்
சும்மா இருந்துகொண்டே
தன் குழந்தைகளை
படிக்கும்படியும் வீட்டுப்பாடம்
செய்யும்படியும் தினமும்
இம்சை செய்கிறாள்
சும்மா இருந்துகொண்டே
வீட்டில் உள்ளோர்க்கு
உடல்நிலை சரியில்லையெனில்
தனக்குத் தெரிந்த வைத்திய முறைகளை அவர்கள் மீது
திணிக்கிறாள்
சும்மா இருந்துகொண்டே
தம் குழந்தைகள் வளரும் வரை
தான் மட்டுமே அவர்களை
பள்ளிக்கு அழைத்து செல்வேன்
என்று அடம் பிடிக்கிறாள்
சும்மா இருந்துகொண்டே
வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு
அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று காபி குடிக்கச் சொல்லி தொந்தரவு செய்கிறாள்
பள்ளியிலிருந்து வீடு திரும்பும்
தம் பிள்ளைகளை
பூட்டிய கதவுகள் வரவேற்று சொந்தம் கொண்டாடுவதை விரும்பாமல்...
வீட்டின் சுவர்களும் ஜன்னல்களும்
தன் பிள்ளைகளோடு உரையாடி மகிழ்ந்துவிடுமோ என்று
பொறாமை கொண்டு...
சோம்பல் முறித்தபடி
வீட்டிலேயே சுகமாய் சும்மா இருக்கிறாள்...
தன் சுய ஒளியை
பட்டப்பகலில் மனமகிழ்ச்சியோடு கொள்ளையடிக்க விட்டுவிட்டு தன்னையே தேடி
இருட்டில் அலைகிறாள்!
அவளின் தன்னம்பிக்கையோடு
அவளுக்கு
தோள் கொடுக்கவும்
தட்டிக் கொடுக்கவும்
ஒரு கை போதும்..
சும்மா அதிரும்படி மீண்டும் ஒளிர்வாள்!
- சாய்கழல் சங்கீதா
••••••••••••••••••••••••••••••••
*உலகில் உய்ய வழி*
••••••••••••••••••••••••••••••••
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
என வாழ்வோன் உத்தமன்
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் மனிதன் கொடூரன்
உலகினிலே உத்தமரும்
இருந்திடுவர்
உறவாடிக் கெடுப்போரும்
இருந்திடுவர்
ஆய்ந்தறிந்து பழகுதலே
உலகில் உய்ய வழியாம்!
*ஸ்ரீவி*
நற்சுனை 28
திருஷ்டிப் பொட்டு!
தன் குழந்தைக்கு எதிராக தொடுக்கப்படும் கண் அஸ்திரங்களை
முறியடிக்கும் கேடயமாய்
எதிராளிகளின் மனக் கருமை ஊடுருவாமல் பிரதிபலிக்கும்
கருப்புக் கண்ணாடியாய்
தன் கண்மணியின் கன்னத்தில் "கண்"மை" வைத்தாள்..
கண் திருஷ்டி உண்மையா என
அலசி ஆராய்ந்து அறிந்து கொள்ள விரும்பாத அன்னை!
- சாய்கழல் சங்கீதா
••••••••••••••••••••••••••••••••••••
முள்ளை உதிர்த்த ரோஜா
••••••••••••••••••••••••••••••••••••
தொட்டியில் இருந்த ரோஜா செடியில்
ரத்த சிவப்பில் ரோஜா ஒன்று மலர்ந்தது!
கண்ணை பறிக்கும் நிறத்தில் ஒளிர்ந்தது.
தன்னைப் பார்த்து அழகில் மயங்கி
தன்னை நோக்கி தவழ்ந்து வந்த
அழகிய சிறு குழந்தை கண்டதுமே
அன்றலர்ந்த அந்த ரோஜாவோ
தானே மனமுவந்து தன் முள்ளை உதிர்த்தது.
வருகின்ற குழந்தையை ஆசையாய்ப் பார்த்தது
அதனாலேயே அந்த அழகிய ரோஜா
இருந்ததை விட
மேலும் அழகானது.
கதிரொளியில் வைரம் போல் ஜொலித்தது.
- ஸ்ரீவி
மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel சுட்டி : youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...