Saturday, April 4, 2026

சிலம்பொடு ஒரு பயணம்-{15}-இன்பமான இல்லறமும் தனிக் குடித்தனமும்

 •••••••••••••••••••••••••••••••


*{15} சிலம்பொடு ஒரு பயணம்*


*மனை அறம் படுத்த காதை*


*இன்பமான இல்லறமும் தனிக் குடித்தனமும்*

•••••••••••••••••••••••••••••••


பித்தன் சூடிய பிறையே நுதலாம்

காமன் எடுத்த வில்லே புருவமாம் 

என கண்ணகி நல்லாளைப் புகழத் துவங்கி 


மஞ்ஞையின் சாயலான மங்கை

கொண்டிருந்தாள் அன்ன நடை 

கிளி யாழ் குழல் ஒத்த பேச்சு என வானளாவ புகழ்ந்ததோடு நில்லாது, அவளது அலங்காரத்தை - ஆடை அணிகளைப் பார்த்து

மேலும் தொடர்கிறான் கோவலன்: 


*மறு இல் மங்கல அணியே அன்றியும் பிறிது அணி அணியப் பெற்றதை எவன் கொல்*


(இயற்கை வழங்கிய மங்கல அணி எனும் நிறை அழகு உன்னிடம் இருக்க பிற அணி மணிகளை ஏன் வீணாக பூட்டுகின்றனர்!)


 *பல் இரும் கூந்தல் சின்மலர் அன்றியும், எல் அவிழ் மாலையோடு என் உற்றனர் கொல்*


(உன் பன்வகை கூந்தலில் சிறு அழகிய மலர்களைச் சூடினால் போதாதோ..! ஏன் வீணாகப் பெரிய மாலைகளை சூட்டுகின்றனர்!)


*சிறுகு இடை வருந்தவும்* 

அதாவது அணிகலன்கள் ஆடை ஆபரணங்கள் பெரிய மாலைகள் எல்லாவற்றின் எடையையும் அவளது சிறிய இடை தாங்குமா என வேறு வருந்துகிறான். 


அத்தோடு நின்றானா! காதல் வயப்பட்டு மதி மயங்கித் தொடர்கிறான் விடாது: 


*மாசறு பொன்னே வலம்புரி முத்தே! காசறு விரையே கரும்பே தேனே! அரும் பெறல் பாவாய் ஆருயிர் மருந்தே!*


என புகழ்ந்து மகிழ்கிறான். இவ்வரிகளைப் படிக்கும் கால், வாசகர்கள் செவிகளில் இவ் வரிகள் இன்பமாய் ரீங்காரமிடும். காரணம், பூம்புகார் எனும் திரைப்படத்தில் வரும் "பொன்னாள் இது போலே" - எனும் திரை இசைப் பாடலே. இளங்கோ அடிகளின் இவ் வைர வரிகள் டி. எம். சௌந்தரராஜன் குரலில் நம் செவிகளில் ஒலிப்பது இயற்கையே. 


(இவ்விடத்தில் எனக்கு ஓர் ஐயம். வலம்புரி சங்கு உண்டு! வலம்புரி முத்து உண்டா?)


இதோடும் அவன் நிற்கவில்லை! இன்னும் புகழ்கிறான் பாருங்கள் :


*மலை இடைப்  பிறவா மணியே அலை இடைப் பிறவா அமிழ்தே யாழிடைப் பிறவா இசையே*


என்று வர்ணனை மழையில் கண்ணகியை நனைவிக்கிறான். அடிகளும் தன் சொல்லாட்சியால் படிப்போர் மனங்களை மகிழ்விக்கிறார்! 


இப்படி ஆடிப் பாடி காதலில் மூழ்கி திளைத்து மகிழ்ந்திருக்கும் வேளையிலே, அவர்தம் இல்லறத்தில் முக்கிய நிகழ்வு ஒன்று நடக்கிறது. என்ன அது?


*வார் ஒலி கூந்தலை பேர் இயல் கிழத்தி*


(நீண்டு வளர்ந்த நெடுங் கூந்தலும் போற்றுதலுக்குரிய உயர் பண்புகளும் கொண்ட கோவலனின் தாயார், மாசாத்துவானின் மனைவி) 


*கேண்மையோடு அறப்பரிசாரமும் விருந்து புறந்தரும் பெருந்தண் வாழ்க்கையும்*


(அறநெறி உணர்ந்த சான்றோரை ஆதரித்துப் போற்றுதல் விருந்தென வந்தவருக்கு உண்டி கொடுத்து உபசரித்தல் ஆகிய இல்லற தர்மங்கள். இல்லறம் எப்படி நல்லறம் ஆகும் என்பதை இவ் வரிகளில் அடிகள் தெள்ளன விளக்குகிறார். இல்வாழ்க்கை இந்த அறங்களோடு இருப்பின் அந்த இல்லறம் நல்லறமாக இருக்கும் என்பது தமிழ்ச் சமூகம் உயர்த்திப்பிடித்த சமூகவியல் கோட்பாடு) 


*ஒரு தனிப் புணர்க்க*


(தனிக்குடித்தனம் வைக்கிறாள். ஒருவேளை இது நடவாது இருந்திருந்தால், கோவலன் தடுமாறி - தடம் மாறிப் போகாமல் இருந்திருப்பானோ!?) 


அவ்வாறு தனிக் குடித்தனம் வைக்கப் பட்ட பின், 

கோவலனும் கண்ணகியும் 


*தொலையாத இன்பம் எல்லாம் துன்னினார் மண்மேல் நிலையாமை கண்டவர் போல் நின்று*

 

(இல்லற வாழ்வில் இன்பம் பெருகி ஓட, காமனும் ரதியும் போல, அழகு நலம் கெடாத இல்லற இன்பத்தை இடையறாது துய்த்து மகிழ்ந்திருந்தனர்.  அதாவது, நிலையற்ற உலக வாழ்வினில், யாக்கை உள்ள போதே வாழ்க்கையை வாழ்ந்து விட வேண்டும் என்கின்ற பெரும் அவாவுடன் வாழ்ந்தனராம்)


இன்பத்தைச் சுவைத்து வாழ்ந்தனர் என்று விவரிக்கையில் *நிலையாமை*  என்ற சொற்றொடரை உள்ளே நுழைத்து, கோவலனுக்கு நேரப் போகும் துயரத்தை குறிப்பால் உணர்த்துகிறார் இவ்விடத்திலும் அடிகள்.


தற்போது மழலைக் கவியின் பார்வை:


ஐயா,


இன்றைய பயணத்தில் கண்ணகி உடனுறை கோவலன் தம்பதியினரின்

இன்பமான இல்லறம் மற்றும் தனிக்குடித்தனம்  தாங்கள் கண்ட விதம் பகிர்ந்தீர்.

என்பார்வையில் கண்டு உங்களுடன் பகிர விழைகிறேன்.


இல்லறம், குடித்தனம் இரண்டும் ஒன்றா ? அல்லது வெவ்வேறா?

இல்லறம் என்பது வாழ்வியலின் அறம் சார்ந்த கொள்கை, குடித்தனம் என்பது அந்த வாழ்க்கையை நடைமுறையில் நடத்தும் செயல்முறை எனக் கொள்ளலாம்.

அறக் கோட்பாடுகள் இல்லறத்தை வரையறுத்துக் கூற அந்த கோட்பாடுகளுக்கு உட்பட்டு நடைமுறையில் செயல் படுத்துவதே குடித்தனம்.


உயர்ந்த மாளிகையின் உச்சி மாடம் ஒன்றில் கோவலன் தன் அன்பு மனைவி கண்ணகியின் எழிலைப் பலவாறு புகழ்ந்த பின்னர் அவளது பாங்கு, நடை, பேச்சு என அணு அணுவாக அனுபவித்துப் போற்றும் காட்சிகளைக் கண்டோம். களித்தோம். இயற்கையிலேயே அழகு வாய்க்கப் பெற்ற கண்ணகியின் ஆடை அலங்காரம் பற்றி அவன் பேசாவிட்டால் எப்படி? அவள் நாணத்தால்  பேசா மடந்தையாக இருந்தாலும், அவள்   பெண்  உள்ளம்  "நான் அழகாக இருக்கிறேனா!" என்று கேட்கத் தூண்டுவதை அறிந்தவன் போல , கோவலன் தன் வர்ணனையைத் துவங்குகிறான்.


இயற்கையோடு இணைந்த மங்கல அழகு அவளுக்கு இயல்பாகவே உள்ளதால் *"பிறிது" அணிகள் "எவன் கொல்-"* ( எதற்காகவோ)!என வியக்கிறான். இந்த அணிகளில் ஒன்றுதானே பின்னர் கண்ணகி நீதியை நிலை நாட்ட உதவும் என நினைக்கத் தோன்றுகிறது!


இவளது அளகாபாரம், பாரமான மலர்களைத் தாங்குமா? அணிகலன்களின் எடை  *"சிறுகு இடை"* யை வருத்துமோ எனப்பலப்பல எண்ணங்கள் காதல் வயப்பட்டவனுக்கு! 


*இடை "இல்லாதது போல்"* இருப்பதால் "சிறகு இடை"

 என்றானோ?!


ஐயா, அடுத்து பொன், முத்து போன்றவற்றை வைத்து அவன் அவளை " போற்றி போற்றி " என்று புகழுவதை நன்கு விவரித்தீர்.


ஓர் ஐயமும் உமக்கு உண்டாயிற்று.

வலம்புரி சங்கு உண்டு. வலம்புரி முத்து உண்டா என்று?


கவிஞர்களின் உயர்வு நவிற்சியாக, இம்முத்து இலக்கியங்களில் அறியப் படுகிறதாம். வலம்புரி சங்கே உயர்ந்தது. அதற்குள் முத்தும்இருந்தால் அருமைக்கு அருமை சேர்க்காதோ!வலம்புரி முத்தை விட குடும்பநலம் பேணும் நம் கண்ணகி உயர்ந்தவள். 

இந்தக் *"குல மாதர்கள் கொண்டாடும் குண  மாமணி"* - 

யைக் கோவலன் பலவாறாகப் போற்றுவதில் தாங்கள் அடிகளின் சொல்லாட்சி கண்டு உவகித்தீர். கூறியது கூறல் என்ற குற்றத்திற்கு ஆளாகாமல் மேலே செல்கிறேன்.


இந்த காதல் பறவைகள் அன்புச் சிறகுகளால் அணைத்து மகிழும் வாழ்வில் மேலும் இன்பம் சேர்க்கிறாள், காவிய நாயகியின் மாமியார். அட அப்படியா! ஆம் இவர்களுக்குத் தனிக் குடித்தனம் வைக்கிறார். இக்கால மருமகள்கள் ஆச்சரியப் படலாம் இதனைக் கேட்டு. ஆச்சரியம் ஆனால் உண்மை அக்காலத்தில் இது நடந்துள்ளது.


உற்றம், விருந்தினர் யாவரையும்,  இருவரும் மனையறம் வழுவாது, பெற்றோர் சொத்தை எதிர்பாராமல். தங்கள் ஈட்டும் செல்வத்தை வைத்து இல்லறம் நடத்த, மாநாய்கனின் பெருங்கிழத்தி

செய்த ஏற்பாடு! 


இன்று தனிக்குடித்தனம் செல்லத் துடிப்பவர்கள் சற்றே நின்று உள்வாங்க வேண்டிய விடயம்.


இவ்வாறு இல்லறம்அது நல்லறம் என

இருவரும், 

*"தொலையாத இன்பம் எல்லாம் துன்னினார்". ........ நிலையாமை கண்டவர் போல்."*


இந்த நிலையாமை என்ற எண்ணம் பின்பு வரும் துயர 

நிகழ்வுகளுக்குக்கட்டியம் கூறுகிறதா?

இல்லை , இன்று  நிச்சயம் நல்ல வாழ்வு வாழ்வோம், நாளை பற்றி யாரறிவார்  என" காமர் மனைவியெனக்  கைகலந்தனரோ"!


அடுத்து அரங்கேற்றக் காதையில் பயணிப்போம். மாதவிப் பொன் மயிலாளைக் காணும் ஆர்வம் அதிகரிக்கிறது



*இதோடு மனை அறம் படுத்த காதை நிறைவுறுகிறது. அடுத்து அரங்கேறப் போவது *அரங்கேற்றக் காதை. அதில் நாமும் மாதவி என்னும் நல்லாளோடு அரங்கேறுவோம்.*

 

!

Monday, March 30, 2026

ஹூஸ்டன் நகரின் சாலை & ரயில் -ஒரு பயணியாக…(பாகம் 11)

 


பாகம் 11

பயணங்கள் முடிவதில்லை…


*ஹூஸ்டன் நகரின் சாலை & ரயில் -ஒரு பயணியாக…

ஹூஸ்டன் இந்த அமெரிக்க நகரம், வானத்தை நோக்கி உயரும் கட்டிடங்களுக்கும், பூமியைத் தொடும் பசுமைக்கும் இடையே ஒரு சமநிலையைப் பேசுகிறது. நான் இங்கு பயணித்த அனுபவம், போக்குவரத்து எப்படி ஒரு நகரத்தின் உயிரோட்டமாக மாறும் என்பதை எனக்குக் கற்றுத் தந்தது. இங்கு ரயில் என்பது தனியொரு உலகமல்ல; அது சாலையின் இயல்பான பகுதியாக, நகரத்தின் ஓட்டத்தோடு கலந்துவிட்ட ஒரு புத்திசாலித்தனமான அம்சம்.

சாலையோடு சேர்ந்து ஓடும் ரயில்

ஹூஸ்டனின் METRORail லைட் ரயில் பாதைகள் சாலையின் நடுப்பகுதியில், தரை மட்டத்திலேயே அமைக்கப்பட்டுள்ளன. கார்களும், பேருந்துகளும், ரயிலும் ஒரே சாலையில் பக்கம் பக்கமாக நகரும் காட்சி முதலில் ஆச்சரியத்தையும் நம் கல்கத்தாவையும் நினைவு படுத்தியது.

டிராஃபிக் சிக்னல்களைப் பகிர்ந்துகொண்டாலும், ரயிலுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

எந்தத் தடுமாற்றமும் இல்லாமல், ஒழுங்கான ஓட்டம்.

ரயில் என்றாலே தனி தடம், கேட், நீண்ட காத்திருப்பு என்ற எண்ணம் வரும். ஆனால் இங்கு ரயில் நகரத்தின் இரத்த ஓட்டத்தில் கலந்துவிட்டது. அது நகர வாழ்க்கையின் ஒரு அங்கம்.

நான் தங்கியிருந்த Hilton Americas-Houston ஹோட்டலுக்கு அருகிலேயே METRO ரயில்  நிலையம் இருந்தது. ரயிலில் இறங்கினால் சில அடிகள் நடந்து, நேராக ஹோட்டல் வளாகத்துக்குள் நுழையலாம். வழி தெரியாமல் அலைவது, டாக்ஸி தேடுவது போன்ற சிரமங்கள் இல்லை. பயணிகளுக்காக நகரம் எப்படி அறிவார்த்தமாக திட்டமிடப்பட்டுள்ளது என்பதற்கு இது சிறந்த உதாரணம்.

ஹூஸ்டனின் சாலைகள் நகரத்தின் பரப்பை உணர்த்துகின்றன, ரயில் அதன் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது. வசதியையும், நேரத்தையும் சேமிக்கும் திறன்.

இரண்டும் இணைந்தபோது, நாம் ஒரு சுதந்திர உணர்வைப் பெறுகிறோம். போக்குவரத்து என்பது வெறும் இடத்திலிருந்து இடத்துக்கு செல்லும் வழி மட்டுமல்ல; அது வாழ்க்கையை எளிதாக்கும், இனிமையாக்கும் ஒரு வடிவமைப்பு.


ஹூஸ்டன் என்றாலே NASA, Johnson Space Center விண்வெளி ஆராய்ச்சியின் உச்சம் நினைவுக்கு வருகிறது. மனிதன் விண்ணை எட்ட முயலும் இடம் இது. ஆனால் இந்த உயரத்தில் நின்றாலும், மண்ணை மறக்கவில்லை.

சாலையோரங்களில் நட்ட மரங்கள் அனைத்தும் திட்டமிட்டு பாதுகாக்கப்படுகின்றன. புதிய மரங்களுக்கு வலுவான ஆதரவுக் கம்பிகள் அமைக்கப்படுகின்றன. காற்று அல்லது வெளிப்புற அழுத்தங்களால் சாயாமல் இருக்க, மரத்தின் தோலை காயப்படுத்தாத மென்மையான பாதுகாப்புப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மரத்தின் அடிப்பகுதியில் நீர் வடிகால் வசதிகள் செய்யப்பட்டு, தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளப்படுகிறது. கான்கிரீட் காட்டுக்குள் மரங்களுக்கு தேவையான இடம், காற்றோட்டம், வளர்ச்சிக்கான சூழல், அனைத்தும் கவனமாக வழங்கப்படுகின்றன.

விண்வெளியை நோக்கிப் பறக்கும் நகரமாக இருந்தாலும், பூமியுடனான உறவைப் பாதுகாக்கும் இந்த மனப்பான்மைதான் ஹூஸ்டனின் உண்மையான மேன்மை. விண்ணைத் தொட்டாலும், மண்ணை மறக்காத மனம் இதுவே ஹூஸ்டனின் அடையாளம்.


ஹூஸ்டனிலிருந்து டல்லாஸ் நோக்கி மேற்கொண்ட அந்த இரவுப் பயணம், சாதாரணமாகத் தொடங்கி ஒரு பாடமாக மாறியது.

Google Maps தொடர்ந்து 71 மைல் வேக வரம்பைக் காட்டியது. ஆனால் நமது ஓட்டுநர், “10% வரை அதிகமாக ஓட்டலாம்” என்ற நம்பிக்கையில் 78 மைல் வரை சென்றார். நேர அழுத்தம், வேகம் 91 மைல் வரை உயர்ந்தது.

திடீரென காரின் கணிப்பொறி “Police Ahead” என்று எச்சரித்தது. சினிமாவில் மட்டும் பார்த்த அமெரிக்க போலீஸ் துரத்தல், நிஜமாக நம்மை வந்தடைந்தது.

சில நொடிகளில் போலீஸ் வாகனம் முன்னால் நின்றது. அதிகாரி டார்ச் ஒளியை காரை நோக்கி வீசினார். ஓட்டுநர் உடனே இரு கைகளையும் ஸ்டீரிங்கிலிருந்து எடுத்து உயர்த்திக் காட்டினார் “என்னிடம் ஆயுதம் இல்லை” என்ற அமைதியான சைகை.

அதிகாரி மெதுவாக வந்து, ஜன்னல் வழியாக உரிமத்தைக் கேட்டார். எந்த வாக்குவாதமும் இல்லை. சில நிமிடங்களில் $200 அபராத ரசீது (challan) வழங்கப்பட்டது.

அதிகாரி கூறிய விதிகள்:

ஒரு மாதத்துக்குள் அபராதத்தைச் செலுத்த வேண்டும்.

இல்லையெனில் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்.

அபராதம் செலுத்தினாலும் ஓட்டுநர் உரிமத்தில் black mark பதிவாகும்.

மூன்று முறை இத்தகைய குற்றம் சேர்ந்தால் உரிமம் ரத்து செய்யப்படும்.

அந்த இரவுப் பயணம் வேகத்தின் கவர்ச்சியையும், சட்டத்தின் கடுமையையும் ஒரே நேரத்தில் உணர்த்தியது. அமெரிக்காவில் சட்டம் என்பது புத்தகத்தில் மட்டுமல்ல, சாலையிலேயே உயிரோட்டமாக இயங்குகிறது.

ஹூஸ்டன் விண்ணை எட்டும் கனவுகளுக்கும், மண்ணைப் பாதுகாக்கும் பொறுப்புக்கும் இடையே சரியான சமநிலையைக் காட்டும் அழகான நகரம். ஒரு பயணியின் பார்வையில், இது ஒரு பயணம் மட்டுமல்ல… ஒரு பாடமும் கூட.

தெரிந்து கொள்வோம்-இட்லி

 *****தெரிந்து கொள்வோம்***


*”இட்லி"* தென்னிந்தியாவில் இந்த மூன்றெழுத்து உணவு இல்லாத ஹோட்டல்களே இல்லை என்று கூறி விடலாம். 


சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை தீபாவளி போன்ற சிறப்பு தினங்களில் மட்டுமே வீடுகளில் அத்திப் பூத்தது போல் சமைக்கப்பட்ட இந்த இட்லியை, தமிழகத்தில் இன்று இட்லி வேகாத வீடுகளும், ஹோட்டல்களும் இல்லை என்ற அளவுக்கு நம்மவர்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துவிட்டது.


 *வரலாறு* 


இட்லியின் பூர்வீகம் இந்தோனேசியா என உணவு வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். சுமார்  கிபி 800-1000  காலப்பகுதியில், இந்தோனேசியாவின் இந்து அரசர்களால் ஆளப்பட்ட பகுதியில் உருவான புளிக்கவைக்கப்பட்டு ஆவியில் வேகவைக்கப்பட்ட உணவு, காலப்போக்கில் தென்னிந்தியா வந்து தமிழக பாணியில் அரிசி உளுந்து மற்றும் வெந்தயம் சேர்த்து நவீன இட்லியாக உருமாறியதாக கூறப்படுகிறது.


10ம் நூற்றாண்டு முதல் தமிழ்நாட்டு மக்கள் இட்லி என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர்.


உலக இட்லி தினம் கடந்த 2015ம் ஆண்டு, முதல் முதலாக சென்னையில்தான் கொண்டாடப்பட்டது.


சென்னையைச் சேர்ந்த இட்லி ஆர்வலர் இனியவன் என்பவர், 2015-ஆம் ஆண்டு மார்ச் 30-ஐ முதல் உலக இட்லி தினமாக அறிவித்தார்.


ஆவியில் வேக வைத்து தயாரிக்கப்படும் இட்லி, இடியாப்பம், புட்டு போன்ற ஆரோக்கியமான உணவு வகைகளில், தமிழ்நாட்டின் முதல் சாய்ஸ் இட்லி தான்.


கொழுப்புச் சத்து அறவே இல்லாத இட்லிக்கு, பல்வேறு வகையான சைட் டிஷ் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப தயாராகிறது. கிராமப் புறங்களில் இன்றளவும் பல வீடுகளில் கறிக் குழம்பும், ஆவி பறக்கும் இட்லியும் தான் ஞாயிற்றுக் கிழமை காலை நேரங்களில் ஸ்பெஷல் டிஷ் ஆக திகழ்கின்றன.


சாம்பாரில் மட்டுமின்றி பல வகை சட்னிகளுடன் இட்லி சாப்பிடுவதை சைவப் பிரியர்கள் பெரிதும் விரும்புவர்.


தமிழகத்தில் சாலையோர தள்ளு வண்டிக் கடை முதல் ஸ்டார் ஹோட்டல்கள் வரை இட்லி கிடைக்காத உணவகங்களே இல்லை எனக் கூறலாம்.


சென்னை போன்ற பெரு நகரங்களில் இட்லிக்காகவே பிரத்யேக உணவகங்களும் வியாபித்திருக்கின்றன.இட்லியில் இத்தனை வெரைட்டியா? என்று ஆச்சரியப்படும் அளவுக்கு பல்வேறு ரகங்களை இந்த உணவகங்களில் ருசிக்க முடியும்.


ஜீரண சக்தி குறைவாக இருக்கும் மழலையர்களுக்குக் கூட தாய்ப் பாலுக்கு அடுத்தபடியாக இட்லியை தயக்கமின்றி ஊட்டுவார்கள் தமிழகத் தாய்மார்கள்.

 மருத்துவமனைகளில் நோயாளிகளாக இருப்பவர்களுக்கும் மருத்துவர்களின் உணவு லிஸ்ட்டில் இடம்பெறும் முதல் சாய்ஸ் இட்லி தான்.


உலகளவில் ஆரோக்கியமான உணவுகளை பட்டியலிட்டால் முதல் 10 இடங்களில் இட்லியும் இடம்பிடிக்கும்.


இத்தனை சிறப்புகளை பெற்ற இட்லியை  இன்ஸ்டண்ட் உணவுகள் போல்  சில நிமிடங்களில் தயாரித்து விட முடியாது என்பது மட்டுமே இதில் உள்ள சிக்கலாகும்.


 *அக்ரி சா.இராஜா முகமது *

Friday, March 27, 2026

அந்த கால காபி ஹோட்டல்:/கிளப் (II)

இன்றும் தோசை மாஸ்டரின் தோழன் விளக்குமாறும் ஒரு எவர்சில்வர் கப்பும் !!

கைமுறையில் செய்யும் தோசையே மேலும் உண்ண ஆசையைத் தூண்டும். ஐசிஐசிஐயில், வங்கியும் அதுவும் இணையும் முன்,  ஒரு தொழில் முனைவர் தோசை செய்யும் இயந்திரம்  உருவாக்கிப் பல தடவை செயல் முறை விளக்கம் அளித்தார். அது இயந்திர தோசைதான். இன்று செயற்கை நுண்ணறிவு மூலம் கூட தோசை சுடலாம். ஆனா நம்ப ஊர் மாஸ்டருங்களை, அடிச்சிக்க முடியாது, அடிச்சிக்க முடியாது!!

- நாகராஜ்


==========================

அத்தனை உணவகங்கள் பற்றி பதிவுகள் போட்டாலும் எங்கள் ஊர் காளியாகுடி பற்றி யாரும் போடாதது ஒரு குறை என்பதால் நானே போடுகிறேன்.

அங்கு அதிகாலையில் அதிகாலை என்றால் ஆறு மணிக்கு  முன்னால் மட்டுமே கிடைக்கும் பொங்கல்!

உங்கள் இலையில் சுடச் சுட கொண்டு வந்து வைப்பார்கள். அது வழுக்கி கொண்டு ஓடும். அவ்வளவு நெய். அந்த சூட்டில் இலை லேசாக கருக ஆரம்பிக்கும். அதற்கு அற்புதமான ஒரு சட்டினி மற்றும் சாம்பார். 6 மணிக்கு மேல் போனால் கிடைப்பது அரிது. அதே போல காபி. ஆனால் எங்களுக்குப் பிடித்தது அங்கு காலை 11 மணிக்கு மேல் கிடைக்கும் ஒரு முறுகலான ஊத்தப்பம், வேறு வகையான சட்னி.

எங்கள் பள்ளி தேசிய உயர் நிலைப்பள்ளி அதன் அருகில் இருப்பதால் மதிய உணவு சமயங்களில் அங்கு செல்வோம்.


ஒரு முறை அங்கு சென்றபோது நடந்தது இன்றும் மனதில் நிற்கிறது. அன்று வகுப்பில் நாங்கள் நிறைய சத்தம் போட்டு பேசிக் கொண்டிருந்ததால் வந்த தலைமை ஆசிரியர் மதிய உணவு இடைவெளி விடாமல் இரண்டு வகுப்பு நீட்டித்து விட்டார். எங்களுக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. எங்களுக்கு என்றால் எனக்கும் என் தம்பிக்கும். என் தம்பி வேறு வகுப்பில் இருந்தாலும் எனக்காக சேர்ந்து சாப்பிட வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தான். இருவரும் காளியாகுடி போவதாக திட்டம். ஆனால் போகும்போது மதியம் இரண்டு மணிக்கு மேல் ஆகிவிட்டது. மதிய சாப்பாடு எல்லாம் முடிந்து மேஜை மேல் நாற்காலிகள் கவிழ்ந்து இருந்தன. நாங்கள் அடிக்கடி அங்கு செல்வோம் என்பதால் எங்களுக்கு அங்குள்ள பரிமாறுபவர்கள் மற்றும் முதலாளி அனைவரையும் நன்கு தெரியும். எங்கள் பசி முகத்தை பார்த்தவுடன் உள்ளே போய் சாப்பிடுங்கள் என்று சொன்னார். அப்போது காளியாக்குடியில் இரண்டு பகுதிகள் இருக்கும். முன் பகுதியில் மேசை நாற்காலி. உள்ளே தரையில் பலகைகள் போட்டிருப்பார்கள். அங்கு ஆசாரம் பார்ப்பவர்கள் சாப்பிடுவார்கள். அங்கு சென்று அமர்ந்தோம். ஒரே ஒரு பரிமாறுபவர் மட்டும் இருந்தார். அப்போது அவர்  சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். எங்களைப் பார்த்தவுடன் இருங்கள், ஐந்து நிமிடத்தில் வந்து விடுகிறேன் சாப்பிட்டு முடித்து என்று சாப்பாட்டைத் தொடர்ந்தார். கொடூர பசியுடன் அமர்ந்திருந்தோம். அவர் சாப்பிடுவதை பார்த்துக் கொண்டிருந்தோம். அவர் தயிர் சாதத்துக்கு வந்து விட்டார். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. தயிர் சாதத்தை ஒரு யானைக்கு போடும் கவளம் போல உருட்டினார். இலையில் வைத்தார் ஊறுகாய் மூன்று விரல்களால் எடுத்து நெற்றியில் திருநீறு இடுவது போல அந்தக் கவளத்தின் மீது இட்டார். தயிர் சாத உருண்டை மேல் அந்தச் சிவப்பு அற்புதமாக காட்சியளித்தது. கையால் எடுத்து வாயை நன்றாகத் திறந்து போட்டுக் கொண்டார்.


பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்கு வயிறு நிறைந்து விட்டது!

- சண்முகசுந்தரம்


===========================


-அனைவரும் தங்கள் இளமைக்காலத்தில் உணவகங்கள் சென்று உண்ட நினைவுகளைப் பதிவிட்டதும் பெண்கள் ஏன் பகிரவில்லை என்ற கேள்வி தோன்றியது. பண்டமாற்று பதிவு ஒன்று தான் வந்திருந்தது. சரி நாம் பதிவிட சிந்திப்போம் என்றால் காலணாவுக்கு மாம்மை(தாய்வழிப்பாட்டி) வாசலுக்கு வரும் வயதான பாட்டியிடம் அவித்த மொச்சையை வாங்கித் தந்தது மட்டுமே நினைவில் உள்ளது. அந்த பயறின் சுவையும் மணமும் தனித்தன்மையானது. அதன் பிறகு நினைவில் வருவது சம்பள நாள் மட்டும் அப்பா அருகில் கடையில் வாங்கித் தரும் மசாலா தோசை. அதன் பிறகு கல்லூரி காலத்தில் பக்கத்தில் பேக்கரி உண்டு. புகை சூழ்ந்த அவ்விடத்தில் பெண்கள் இருக்க மாட்டார்கள்.‌என்றாலும் ஒரு முறை 4 பெண்கள்  சேர்ந்து தேநீர் அருந்த நுழைந்தோம். ஈக்களைவிட அதிகமாக மொய்த்தன கண்கள்.  சமீபத்தில் அலுவலகம் அருகில் இது போல் ஒரு தேநீர் கடை. புகை மற்றும் ஆண்கள் நிறைந்த அவ்விடத்தில் பெண்கள் சென்றோம். அவ்வளவு கண்கள் மொய்க்க வில்லை...என்பதே பெரிதாக இருந்தது.  சிறப்பாக கவனிக்கப்பட்டோம். முன்னேற்றம் ...நான் இந்த புத்தகத்தைப் படித்ததில்லை. ஆனால் இந்த நிகழ்வுகள் நான் படிக்க வேண்டும் என எண்ணிக் கொண்டு இருக்கும் புத்தகத் தலைப்பை நினைவுறுத்தும் (இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவது இல்லை).


உண்ட மயக்கத்தில் 

சாய்வு நாற்காலியில் 

டீக்கடை நினைவுகளை 

இதமாக அசைபோடும்...

தாத்தாவின் மனம்.


தேநீர் போடும் நேரம்

கணக்கில் கொண்டு 

சற்றே கண்ணயர்வாள்

டீக்கடை கடந்து செல்வதே

போராட்டமாகக் கடந்த பாட்டி



- அமுதவல்லி

அந்த கால காபி ஹோட்டல்:/கிளப்

 அந்த கால காபி ஹோட்டல்:/கிளப் 


(A)காலை

                   

1.1960 களில்  அதிகம் உடுப்பி ஹோட்டல் என்ற பெயர் இருக்காது.  2. ஒரு பெயர் கூடவே காப்பி ஹோட்டல் என்றும் காபி கபே  என்றும் இருக்கும். 

                    

3.சிமெண்ட் தரை; சுத்தம் என்று சொல்ல முடியாது. 


4.நுழைவில் ஒரு கல்லாப்பெட்டி டேபிள்  அதன் மேல் பில் குத்தி  வைக்கும் ஒரு குத்தூசி, ஒரு ஹார்லிக்ஸ் மற்றும் ரகோடின்  பாட்டில் / டப்பி இருக்கும். 


5.பின்னால் சில சாமி படம். அதில் அழுது வடியும்  ஸிரோ வாட்ஸ் பல்பு. 


6.கதம்பம் பூ இருக்கும்.


7.படம் இருத்தி வைத்த கட்டையில் ஊதுவத்தி சொருகி இருக்கும். 


8.சாப்பிட வருபவர்கள் உக்கார பெரும்பாலும் மர டேபிள், அதன் மேல் ஒரு வெள்ளை கல், உக்கார மர சேர், அவைகள் எல்லாம் விரைவில் உயிர் விட்டு விடுவேன் என்று சொல்லாமல் சொல்லும் நிலையில் இருக்கும் . 

                 

9.ஒரு கண்ணாடி வைத்த ஷோ கேஸ்.


10.அதன் ஓரம் கொஞ்சம் வழி...அது வழியாக சமையல் அறைக்கு போக வேண்டும் .


11.ஒரு மூலையில் கை கழுவும் இடம்.


12.வெகுவாய் அதை சுற்றி சுத்தம் இருக்காது. 

                   

13.ஷோ கேஸ் கீழே ஒரு பெரிய மர பென்ச் இருக்கும். 


14.அதில் மந்தார இலை இருக்கும்.


15.அல்லது ஷோ கேஸ் உள்ளே ஒரு மூலையில் இருக்கும்.


16.அப்போதிருந்த மந்தாரை இலை பற்றி ஒரு காவியம் எழுத வேண்டும்; அற்புத வாசனை இருக்கும்.


17.அதில் கட்டித் தரும் பகோடா பொட்டலம், (பட்டிணம் பகோடா) வாசம் வேறு லெவல். 


18.பார்சல் மசால் தோசை, இந்த மந்தாரை இலையில் சுருட்டப்பட்டு, கூடவே கெட்டி தேங்காய் சட்னி. ம்ம்ம்!  இன்றும் நினைவில்.


19.எப்போதாவது வாங்கி வந்தால், வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் பங்கு போட்டு ஆளுக்கு ஒரு துண்டு. 


20.இப்படி கிடைத்ததே ஒரு அற்புதம். 

                     

21.காலை நேரம் ஷோ கேசில் மெது வடை, இட்லி  ஒரு அலுமினிய டிரேயில் இருக்கும்.


22.அப்போதெல்லாம் ஒரு தேங்காய் சட்னி மட்டுமே; கூடவே ஒரு சாம்பார் உண்டு.


23.சின்ன வெங்காயம் சாம்பார், அதன் வாசம், சுவை ஒரு அற்புதம்.


24.உள்ளே சமையல் அறையில் பெரும்பாலும் ஒரு கனவு காட்சி போல புகை மண்டலம்   இருந்து கொண்டே இருக்கும்.


25.அப்போதெல்லாம் கட்டை அடுப்புதான்.


26.அவ்வப்போது, சொய் என்று தோசைக்கல் சத்தம் இருக்கும்.


27.சமையலறை மூலையில் ஒரு மேடை அங்கே ஒரு திரி ஸ்டவ்.


28.அதில் பால் காய்ந்து கொண்டிருக்கும். 


29.ஒரு அலுமினிய ட்ரே, அதில் பித்தளை டவரா செட் சிலது இருக்கும். 


30.ஒரு எவர்சில்வர் கிண்ணம்;அது தேய்த்து பல யுகம் ஆகி இருக்கும். 


31.அதில் தான் சக்கரை இருக்கும்;அதில் இருக்கும் ஸ்பூனில் பாதி சக்கரை ஈஷிக்கொண்டு இருக்கும்.


32.கீழே தரையில் பித்தளை பில்டர்; அதில்தான் காபி டிகாக்க்ஷன்  இருக்கும். 


33.அதை ஒரு மூடி போட்ட பாத்திரத்தில் கொட்டி  வைத்திருப்பார்கள்.


34.எப்போதாவது ஹார்லிக்ஸ், ஓவல் , என்று ஆர்டர் வந்தால், டபரா செட் கெல்லா பெட்டி பக்கம் போய், முதலாளி  ஏதோ தர்மம் போடுவது போல அதில் ஸ்பூனால் எடுத்து போடுவார். 


35.மறுபடி சமையலறை வந்து, அதற்கு பால் அபிஷேகம் ஆகி, சக்கரை சேர்ந்து ஒரு ஆத்து, கூடவே டவராவில் கொஞ்சம் பால் ஊற்றி பின் டேபிளுக்கு வரும்.


36.பதினோரு மணிக்கு மேல் கொஞ்சம் மந்தம்தான்.  


(B)மதியம் சாப்பாடு உண்டு. 


1.பெரும்பாலும் அளவு சாப்பாடு தான். 


2.இலை போட்டு,கூட்டு பொரியல் எல்லாம் இரண்டாம் தரமும் உண்டு. 


3..சாதம் மட்டும் ஒரு பட்டை. கூடவே ஒரு அப்பளம். பித்தளை டம்பளரில் குடிக்க தண்ணீர். 


4.பில் என்றால், உள்ளங்கை அளவில் ஒரு சிறு புத்தகம்,  வேட்டியை (அழுக்கு) மடித்து  கட்டி, மேல் பட்டன் போடாது, காதில் சொருகிய பென்சில். என்ன எத்தனை பேர் சாப்பிட்டாலும், அற்புதமாய் கூட்டி பென்சிலில் கிறுக்கி கொடுத்திடுவார். 


5.டாக்டர் சீட்டை படிக்கும்  பார்மசி ஊழியர் போல, கல்லாவில் இருப்பவர் , சுலபமாய் இதை புரிந்து கொள்வார். 


(C).மாலை 


1.மெதுபக்கோடா, மைசூர் போண்டா,  தோசை ,கிச்சடி என்று ஒரு களை கட்டும். 


2.இந்த மெது பகோடா  கூடவே கெட்டி தேங்காய் சட்னி.


3.அதுவும் போண்டா சூடாக இருக்க, ஜென்ம சாபல்யம் அடைந்தது போன்ற ஒரு உணர்வு. 


(D)இரவு சாப்பாடும் உண்டு.

    

1.இந்த வெஜிடேரியன்  ஹோட்டல்களில்  ஸ்வீட் கிடைக்கும். 


2.மைசூர் பாக் , பாதுஷா, அம்மி குழவி போல, குலாப் ஜாமூன் ...இவைகள் சில நாள் அந்த ஷோ கேசில் கொலு விருக்கும். 


3.காலை வேலை சேமியா பாயசம் கிடைக்கும். 


4.எது எப்படி இவர்கள் மெனு  லிஸ்டில் வந்தது என்று தெரியவில்லை; ஆனால் கிடைக்கும்.  


5.அவை எல்லாம் அன்று எங்களுக்கு ஒரு எட்டாத கனவு போல 


6.கொஞ்சம் இன்னும் சற்று பெரிய ஹோட்டல்களில் பாஸந்தி  கிடைக்கும்.


7.நான் இதை எழுத வந்ததின் முக்கிய காரணம் மந்தார இலை. 


8.எங்கே பேய்க்கரும்பு இனிக்கும் என்று பட்டினத்தார் தேடினாரோ, நானும் அது போல, அந்த வாசம் உள்ள மந்தார இலையை இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறேன்.


9.இன்னொன்று, அந்த கண்ணாடி ஷோ கேஸ்; அதன் உள்ளே ஒரு தகர  டப்பா அதில் இருந்து வரும் நூல், ஒரு திரௌபதி சேலை போல வந்து கொண்டே இருக்கும்.


10.என்ன சாபிடறீங்க ? என்று  கைவிரல் எல்லாம் அந்த பித்தளை டம்ளரில் நனைத்து, 


11."நங் " என்று வைத்துவிட்டு, "ஒரு மாசால் தோசை " என்று குரல் கொடுக்க, உடனே ஒரு வாழை இலை உங்கள் டேபிளுக்கு வந்து விடும்.


11.இவை எல்லாம் இன்று இல்லை; அவைகள் எல்லாம், நம் வீட்டில் இருந்த வயதான பெரியவர்கள் இல்லாது போனது போல, காணாது போய்விட்டது. 


12.அவர்கள் இல்லை என்றாலும், அவர்கள் பற்றிய நினைவு இன்னும் உள்ளே இருக்கிறது;இந்த, அந்த நாட்கள்  ஹோட்டல்கள் போல.


13.ஒரு மறக்க முடியாத சுவை அன்று அந்த உணவில் இருந்தது; அந்த மந்தார இலை வாசனை போல


14.ஒரு தக்காளிக்காய் பொரிச்ச கூட்டு; தண்ணியாகதான் இருக்கும்.


15.ஆனால் அந்த சுவை இன்னும் தொண்டையில் இருந்து கொண்டு இருக்கிறது.


16.பொடி போட்ட கத்தரிக்காய் பொரியல், சாம்பார், ரசம்  எல்லாமே ஒரு அற்புதம். 


17.பின்னால் கால போக்கில் சமையலே படிப்பாக கொண்டு வேலையும் அதன் தொடர்பாய் ஆகிட, இப்போதும் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் முப்பது வருடமாய் பல நூறு கல்யாணம் செய்து கொடுத்த அற்புத அனுபவம்  அமைந்தது போல, வாழ்வில் , அந்த பழைய கால ஹோட்டல்களின் நினைவுகள் என்றுமே ஒரு அற்புதம்.


ஆனால், பழங்காலத்தில் சத்தியமாக பழைய எண்ணெய் வாசனை கிடையாது, பழைய எண்ணெய் அடுத்த நாள் சாலையோரக் கடைக்காரர்களுக்கு விற்பனை கிடையாது. கட்டுப்பாடாக கண்டிப்பாக சுத்த புது எண்ணெய் வாசனையுடன் வந்த தரமான பலகாரங்கள் ...ஆஹா. ... இனி அந்த ஹோட்டல் முதலாளி களைப்போல ஒரு மஹானுபாவர்களை பரோபகாராகளையும் காண முடியாது. அவர்கள் ஏதோ யாரோ சம்மந்திகள் வரூவதுபோல ' வாங்கோ வாங்கோ சாப்பிடுங்கோ என்று நமக்கு வரவேற்பு மரியாதையுடன் பணிவுடனும் பரிவுடனும் இருக்கும்


அதேபோல் திருவல்லிக்கேணியில் சைடோஜி மெஸ்,ஐயர் ஓட்டல், உடுப்பி ஓட்டல்களும் ப்ரசித்தமாக இருந்தன .


அதுமட்டுமல்ல ...மாம்பலம் ரங்கநாதன் தெரு 'பட்ஸ் ஓட்டல் ,பாண்டி பஜார் கீதா கேப், வசந்த பவன் ஓட்டல் இவைகள் ஒரிஜினலாக முதல் முறை துவக்கப்படபோது எந்த முதலாளியிடம் இருந்ததோ ....அவைகளின் தரம் சுவையை எங்களைப்போல 70 வயதை கடந்த வர்களுக்கு தான் தெரியும்.


அந்த பழங்கால ஓட்டல்களில் தரம் அலாதியானது .


இன்று நாங்கள் ஏதோ நேரத்திற்கு உணவு செய்து கொடுக்க ஆட்கள் இருந்தால் போதும்...சுவை சுமாராக தான் இருக்கும். 


ஒன்று மட்டும் நிச்சயம்....நாங்க அனுபவித்த சுவையை ...பாவம்....இந்த கால இளைஞர்களுக்கு சாப்பிட கொடுப்பனையில்லை. கிடைத்ததை சாப்பிட்டு நேரத்துடன் போட்டி...ஓட்டம்...அவசரம்....ஆனால் தரமான உணவு கிடைக்க Kitchen master காணோம்.


- சாய் ராம்


================================

சென்னையின் அடையாளங்களில் ஒன்றான ட்ரிப்ளிகேன் (Triplicane) ரத்னா கஃபே, 1948 முதல் அதன் தனித்துவமான சாம்பார் இட்லிக்கு புகழ்பெற்ற ஒரு பாரம்பரிய உணவகம். வெல்லம் கலந்த, அடர்த்தியான மற்றும் சூடான சாம்பார் இட்லி மீது ஊற்றப்பட்டு பரிமாறப்படும் விதம், இவர்களின் அடையாளமாகும். 75 ஆண்டுகளுக்கும் மேலாக அதே சுவையைத் தக்கவைத்துள்ள இந்த உணவகம், காலை உணவு, வடை மற்றும் பில்டர் காபிக்கு மிகவும் சிறந்தது.  


எனது பள்ளிப் பருவம் முதல் கல்லூரி காலம் வரை  பல முறை இங்கு சுவைத்திருக்கிறேன். இங்கு இட்லிக்கு சாம்பார் சாப்பிடுகிறவர்களை விட சாம்பருக்கு இட்லியை சாப்பிடுகிறவர்களே அதிகம் நானும் உட்பட 😂😂😂

- ஷங்கர்

=============================

எப்போதும் நமது இளமைக்கால நினைவுகளை தூண்டும் விதத்தில் பதிவுகளை பார்த்தவுடன் மனம் துள்ள ஆரம்பிக்கும். 

வார்த்தைகள் தானே வந்து விழ ஆரம்பிக்கும். 


மதுரையில் வடக்கு மாசி வீதியில் நாங்கள் இருந்த வீட்டைச் சுற்றி மூன்று காபி கிளப்கள்/கஃபேகள்.

ஹரிஹர விலாஸ், குருவாயூரப்பன் காபி கிளப், எஸ்.எஸ். கஃபே. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஐட்டத்துக்கு ஸ்பெஷல். இதைத் தவிர வடக்கு வடம்போக்கு தேர்வில் லட்சுமி கஃபே அதைத் தாண்டி சரஸ்வதி கஃபே. இவையே எனது இளமைக் கால உணவகங்கள். வீட்டில் கடைக்குட்டி என்பதால் செல்லம் சிறிது அதிகம். ஹரிஹர கஃபேயில் இருந்த ஒரு சரக்கு மாஸ்டர் ஆமைவடை மிக அருமையாகப் போடுவார். அவர் பேரே 'ஆமை வடை மாமா'. 


முருகல் தோசை எப்படி இருக்க வேண்டும் என்பதை சொன்னது லட்சுமி கஃபே. பொன் முறுவலான அந்த முருகல் தோசை அதன் பிறகு இதுவரை நான் எங்கும் பார்க்கவில்லை.. ருசித்ததில்லை. இங்கே முருகல் தோசை என்றால் கருகல் தோசையாக கொடுப்பதுதான் நடக்கிறது. 


எஸ் எஸ் கஃபே ரோஸ் மில்க் மிகவும் பிரசித்தம். குருவாயூரப்பன் காபி கிளப் ஸ்பெஷல் அடை- அவியல். நினைத்தாலே இப்போதும் நாவில் எச்சில் ஊறுகிறது..


சரஸ்வதி கஃபே யில் போட் லோ என்று ஒரு குளிர்பானம். விளையாடி விட்டு அந்த போட் லோ குடித்தால் சொர்க்கமே நம் முன் வந்து கைகட்டி நிற்கும். 


மேலக் கோபுர வாசலில் இருக்கும் டெல்லிவாலா  சப்பாத்தி/சாகு- விற்கு ஈடு இணை எதுவும் இல்லை.


இது எல்லாவற்றிற்கும் மேலாக எங்கள் வீட்டருகே இருந்த *செண்டாச்சி*  எனும் பாட்டி இரவு நேரங்களில் போடும் இட்லி - கெட்டி சட்டினிக்கு அந்தத் தெருவே அடிமையாக இருந்தது. அந்த பாட்டியின் நினைவாகத்தான் நான் எழுதிய கதை ஒன்றில் *செம்பாச்சி* என்ற ஒரு கதாபாத்திரத்தை சித்தரித்தேன்.


இதையெல்லாம் எழுதுகையில், நமது நாவில் சுவை அரும்புகள் ஏங்கத் துவங்குகின்றன.


- ஸ்ரீவி

==============================

பழங்கால உடுப்பி ஓட்டலகளுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம். சாய்ராம் ஐயாவை இவ்வளவு நீண்ட பதிவு போட வைத்து விட்டனவே!👍ஐயா, எங்கள் உலகத்துக்கு( நீண்ட பதிவாளர்) உங்களை  வரவேற்கிறோம்🙏🙏



என்பதிவும் சற்று நீண்டது. பல ஆங்கில சொற்களுக்கு மன்னிக்கவும்.


சரவண பவன் இராஜ கோபால் அவர்கள் வருவதற்கு முன், சென்னையில் உடுப்பி ஓட்டல்களே அதிகம். டிபன் பத்ததியை வணிக முறையில் அறிமுகப்படுத்தியவர்களே உடுப்பி மக்கள்தாம் என்பர்.

இரண்டு இட்லி 10 பைசா அதற்கு 3 அல்லது 4 அலுமினிய மக்கில் சாம்பார்  கேட்டால் ஊற்றுவார்கள். கெட்டி தேங்காய் சட்னி வேறு.சுலபத்தில் கெட்டுப்போகாது.


ஐயா விவரித்தபடிதான் ஓட்டல் செட்டிங் இருக்கும்.


எக்மோர் கெங்கு ரெட்டி தெருவில் பத்மாவதி, எக்மோர் ஐரோட்டில்பங்கஜா, உடுப்பி( இன்றைய மத்ஸ்யா), ப்பூந்த மல்லி ஐரோட்டில், தாசப்பிரகாஷ், புரசவாக்கத்தில் கௌரிசங்கர், கார்டன்,  எக்மோர் ஸ்டேஷன்எதிரில் குருபிரசாத்,

பெரிய மேட்டில் மர்ச்சண்ட்ஸ் கபே, பிராட்வேயில் மாடர்ன் கபே என்று உடுப்பி ஓட்டல்களின் சூழலில் வாழ்ந்தவன் 

நான்.



இன்றும் கார்டன்,  மாடர்ன் கபே போன்றவை உள்ளன.


சர்வர் பற்றி இரண்டு குறிப்புகள்:

- டபராவுக்கும் டம்ளருக்குமாக காபியை ஆற்றும் இலாவகம்( சர்வர்சுந்தரம் நாகேஷ்!)

-நண்பர்கள் சர்வர் சரியாக பில் போடுகிறாரா என்று சோதனை செய்ய கூட்டமாக சென்று கண்டபடி( வழக்கமான வரிசை ப்படி இல்லாமல் ) - சிலர் முதலில் காப்பி, பின்பு இட்லி, சிலர் முதலில் தோசை, பின்பு ஐஸ்க்ரீம்,இப்படி மாற்றி மாற்றிக்கேட்டு அவரை ஏமாற்றப்பார்த்தனர். அவர்எத்தனுக்கு எத்தன். உள்ளே சென்று 

ஒரு பேப்பரில் கிரமமாகஎல்லா அயிட்டங்களையும் எழுதி சரியான பல்லைக்கொடுத்தார்!


இந்த சர்வர்கள் மாலை போண்டா, பஜ்ஜி போன்றவை சூடாக இல்லை எனில் சொல்லிவிடுவார்கள்.

ஐஸ் க்ரீம் 60 களில் அவ்வளவாக இந்த ஓட்டல்களில் கிடைக்காது. ரோஸ் மில்க் கிடைக்கும்.

அக்காலத்தில் உணவை விற்றாலும், சுற்றுச்சூழல் அவ்வளவு சுத்தமாக இருக்காது என்றாலும்

அவர்களின் கரிசனம் உணவைச்சுவை ஆக்கியதோ!


மந்தார இலை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. 

சூடாக காராசேவை மந்தார இலப்பொட்டணத்திலிருந்து எடுத்து உண்பதே தனி சுவை!

மேடவாக்கம் நாட்டு மருந்து கடையில் கூட  இந்த இலைக்கட்டைப் பார்த்த ஞாபகம்.


- ,இ.ச.மோகன்


===================

எல்லோரும் அவரவர் நாவின் ருசியைச் சொன்னவுடன் நான் மட்டும் விலக்கா?


எங்களூர் (மணப்பாறை) புகைவண்டி நிலையத்தில் மணி ஐயர் நடத்தி வந்த வி.எல்.ஆர் .(வெஜிடேரியன் லைட் ரெஃப்ரஷ்மென்ட்) ஸ்டால் மிக பிரசித்தம்.

அங்கு கிடைக்கும் உணவுப் பதார்த்தங்களின் ருசி இன்று நினைத்தாலும் நா ஊறும்.

இரண்டு முன்று விரைவு வண்டிகளும், நான்கைந்து பாஸஞ்சர் வண்டிகளுமே நின்று செல்லும். அந்த வண்டிகளில் பயணம் செய்வோர் அருகில் உள்ள

பெரிய ஊர்களான திருச்சியிலோ அல்லது திண்டுக்கல்லிலோ சிற்றுண்டி சாப்பிடாமல் மணி அய்யர் கடையைத் தெரிவு செய்து மணப்பாறையில் வந்து சாப்பிடுவார்கள். அதற்காகவே புகை வண்டிகளும் சிறிது நேரம் தாமதித்தே கிளம்பும்.

வண்டிகள் வரும்போது டிரைவருக்கும் கார்டுக்கும் தனித்தனி உணவுப் பொட்டலங்கள் மணி ஐயரால் அனுப்பி வைக்கப் படும்.

அங்கு கிடைக்கும் இட்டிலி, மெதுவடை, மசால்வடை, பூரி கிழங்கு,

நெய் ஒழுகும் ரவா கேசரி, பட்டணம் பக்கோடா, வாழைக்காய் மற்றும் வெங்காய பஜ்ஜி.

அடடா ஒவ்வொன்றும் தனித்தனி ருசி.

கள்ளிச்சொட்டாட்டம் ஃபில்டர் காபி,

திக்கான பாலில் போட்ட டீ.

பட்டணம் பக்கோடா (இதை மெது பக்கோடா என்றும் சொல்வார்கள்)

வெளிப்புறம் மொறு மொறுவென்றும் உள்ளே மெத்தென்று நாக்கில் கரையும் பக்குவத்தில் இருக்கும்.

ஒரு பூரியைக் கீழே வைத்து அதன் மேல் கிழங்கை வைத்து மேலே இன்னொரு பூரியால் மூடி வாழை இலையில் வைத்துக் கொடுக்கும் போது ஆஹா அதற்கு இந்த உலகையே எழுதி வைக்கலாம்.

பூரிகிழங்கில் வெங்காயத்தை அதிகம் போட்டு உருளைக்கிழங்கை குறைவாகப் போட்டு இஞ்சி, பச்சை மிளகாயைப் பொடிப்பொடியாய் அரிந்து போட்டு

கூடவே பட்டாணியும் போட்டு, அடடா இப்போதும் நாக்கில் எச்சில் ஊறுகிறது. 

மணப்பாறை முறுக்கு பிரசித்தி பெற 

மணி ஐயரும் ஒரு காரணம்.

அரிசியால் செய்த மொறுமொறுப்பான முறுக்கும் சிறப்பு.

நான் திருச்சியில் கல்லுரியில் படிக்கும் போது கல்லூரித் தோழர்களுக்கு அடிக்கடி வாங்கிச் செல்வேன்.

மணி ஐயரின் கடைப் பதார்த்தங்களுக்கு இரயில் பயணிகள் மட்டுமல்ல மணவை நகரம் மக்கள் அனைவருமே அடிமைகள்.


கொசுறு:

மணப்பாறை அரசுப் பள்ளியில், தேசிய மாணவர் படை ( என்.சி.சி)

பரேட் வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறும்.

பரேட் முடிந்தவுடன் சிற்றுண்டியாக 

மணி ஐயர் கடை பூரி கிழங்கு வழங்கப்படும். இதற்காகவே தேசிய மாணவர் படையில் சேர கூட்டம் 

அலைமோதும்.


- முகம்மது சுலைமான்

==========================

அதே போல் நானும் தஞ்சையில் KHS பள்ளியில் படித்த போது NCC  பயிற்சி நடக்கும் நாளில் சரவண பவன் ஓட்டலில் இருந்து வரும் பூரி மசாலா மற்றும் ரவா உப்புமா இப்போதும் நினைவில் நிற்கிறது. நினைத்தாலே இனிக்கிறது.


- சந்திரசேகரன் 

=======================


மும்பை நாட்களில் மாதுங்கா உணவு மிக அரியது....சாம்பார் மீதம் வைத்தாலும் அபராதம் குடுக்கணும்...சுத்தமாக ஹிந்தி தெரியாமல், நவி மும்பையில் இருந்து மாதுங்கா வரை போய் வருவது இன்று நினைத்தாலும் சிறப்பு...


-திருவள்ளுவன்

==============



சிலம்பொடு ஒரு பயணம்-{14} கோவலன் கண்ணகி இல்வாழ்க்கை சிறப்புற நடந்தது

 •••••••••••••••••••••••••••••••


*{14} சிலம்பொடு ஒரு பயணம்*


*கோவலன் கண்ணகி இல்வாழ்க்கை சிறப்புற நடந்தது*

•••••••••••••••••••••••••••••••


கயமலர்க் கண்ணியாம் கண்ணகியும் 

காதல் கொழுநனாம்

கோவலனும் 

இயைந்த இல்வாழ்க்கையை இனிமையாய்த் 

துய்க்கின்றனர்.

அடிகள் அந்த அழகை *சூரியனும் சந்திரனும் போல* எனும் பாடலில் அழகாக விவரிக்கிறார்: 


*கதிர் ஒருங்கு இருந்த காட்சி போல,               வண்டு வாய் திறப்ப நெடுநிலா விரிந்த*


ஏழெடுக்கு மாளிகையில், 

நிலா முற்றத்தில் தென்றல் வந்து இதமாய் வருட,

வண்ண வண்ண வாசமிகு மலர்கள் பாங்குற அழகாய் அமைக்கப்பட்டிருக்க, மலர் தேடி வந்த வண்டுகள் ரீங்காரமிட 

ஆணிப்பொன் கட்டிலில் அமர்ந்தபடி 

இருக்கும் கண்ணகியையும் கோவலனையும் பார்த்தால் 

'பகலில் உலகை வலம் வரும் சூரியனும், 

இரவில் உலகைக் குளிர்விக்கும் சந்திரனும் 

ஒருங்கே அமர்ந்திருப்பது' போல் இருக்கிறதாம் அடிகள் பார்வையில்.


இந்த நயமிகு வரிகளை படிக்கையில் கண்முன்னும் அதே காட்சி விரிகிறது அல்லவா! 


தீராக் காதலில் திளைத்த கோவலன் என்ன செய்கிறானாம்! அதையும் பார்க்கலாம்... வாருங்கள்!


*தீராக் காதலின் திருமுகம் நோக்கிக் கோவலன் கூறும் ஓர் குறியாக்  கட்டுரை* 

என்கிறார் ஆசிரியர். 


காதல் எனும் பெரு நதியில் நீந்திக் களிக்கும் கோவலன் தீராக் காதலுடன் கண்ணகியைப் பார்த்து புகழ்ந்து உரைக்கிறானாம். 

(கட்டுரை : புகழுரை)


எவ்வாறு புகழ்ந்து உரைக்கிறான் தெரியுமா! 

சமீபகால திரைப்பட பாடல்கள் துவங்கி பற்பல கவிஞர்கள் பெண்களை வர்ணிக்கும் வர்ணனைக்கெல்லாம் முன்னோடி இந்த *கண்ணகி அழகை கோவலன் புகழ்தல்* எனும் ஒரே பாடல் தான். இந்த கவிநயம் மிகு பாடலிலிருந்து ஒளிரும் சில வைர வரிகளைப் பார்ப்போம்:


*பெரியோன் தருக திரு நுதல் ஆக*


(உலகைக் காக்கும் இறைவன், தன் தலைமேல் இருக்கும் பிறை நிலவையே உன் நெற்றித் திருநுதலாக அமைக என்று அன்பளித்தானோ!)


*உருவி லாளன் ஒரு பெருங் கருப்புவில் இரு கரும் புருவம் ஆக ஈக்க*


(உருவமற்ற அரூபியான மன்மதன், நீ என்னோடு காதல் களத்தில் போரிட்டு வெல்ல வேண்டும் என்பதற்காகவே தன் கரும்புவில்லை உன் விற்புருவமாக அமைத்துக் கொடுத்தானோ!)


*தேவர் கோமான் தெய்வக் காவல் படை நினக்கு அளிக்க அதன் இடை நினக்கிடை என*


(தேவருக்கு அரசன் இந்திரன் வானுலகைக் காக்க கைக்கொண்ட வச்சிரப் படையையே உன் இடையாக இருக்க விட்டு விட்டானோ)


*அறுமுக ஒருவன்...... சுடர் நெடு வேல் ஒன்றும் நின் முகத்துச் செங்கடை மழைக்கண் இரண்டா ஈத்தது*


(ஆறுமுகம் கொண்ட முருக பெருமான் என்னை வெல்வதற்காகவே தன்னுடைய ஒளி பொருந்திய 

வேல் படையை உன்னிரு கண்களிலும் பொருந்தச் செய்து விட்டானோ!)


என்றெல்லாம் வர்ணித்துவிட்டு இதுவெல்லாம் போதாது என, வர்ணனையின் உச்சமாக என்ன சொல்கிறார் பாருங்கள்: 


*பீலி மணி நிற  மஞ்ஞை,  சாயற்கு அடைந்து தன் கான் அடையவும்*


(நீல மணி கழுத்தும், கருந்தோகையும் உடைய கோலமயில் உன் சாயலை கண்டு நாணி காட்டுக்குள் போய் விட்டன) 


*அன்னம் நல் நுதல் மெல் நடைக்கு அழிந்து நல்நீர்ப் பண்ணை நனி மலர்ச்செறியவும்*


(அழகிய நடைக்கு அடையாளமான அன்னப் பறவையோ உன் நடையை கண்டு நாணி, நீர் நிறைந்த தடாகத்தில் மலர்களுக்கு இடையே போய் ஒளிந்து கொண்டது)


*பசுங்கிளியே குழலும் யாழும் அமிழ்தும் குழைத்த நின் மழலைக் கிளவிக்கு வருந்தினவாகியும்,* 


(பச்சைக்கிளியும் குழலும் யாழும் அமுதோடு சேர்த்து கலந்தது போல் இனிக்கும் உன் மழலைப் பேச்சுக்கு முன்னே தோற்றுப் போனதை எண்ணி வருந்தி நிற்கின்றன)


என்று அவள் அழகை அற்புதமாக வர்ணித்து விட்டு, நிறைவாக ஒரு வரியில் வரப்போகும் துன்பவியல் நிகழ்வை மறைமுகமாக குறிப்பு உணர்த்துகிறாரோ ஆசிரியர்? அந்த வரியும் பார்க்கலாமே:  


*மடநடை மாது நின்மலர்க் கையின் நீங்காது உடன் உறைவு மரீஇ ஒருவா ஆயின*


(இவ்வாறெல்லாம் காதல் எனும் கடலில் மூழ்கித் திளைத்து முத்துக் குளித்த கோவலன் கண்ணகியைப் பார்த்து, 'உன்னுடைய மலர்க் கையை விட்டு பிரியாது என்றும் இணைந்து மகிழ்ந்திருக்கும் இனிமை உடையதாக இருக்க வேண்டும் என் கரங்கள்' என இறைஞ்சுகிறான். விரைவில் அவன் அவள் கரங்களை விட்டு விலகிச் செல்லப் போகிறான் என்பதை குறிப்பால் உணர்த்துகிறாரா இளங்கோவடிகள்) 


இதோ இப்பயணத்தில் நம் கரம் பிடித்து கண்ணகி கோவலன் இல்வாழ்வை படம் பிடிக்க வருகிறார் நம் மழலைக் கவி:


ஐயா ,


தாங்கள் சிறப்புறவே கோவலனும் கண்ணகியும் இல் வாழ்வைத் துய்த்த  பாங்கை விவரித்தீர் உம் பார்வையில். மிகச்சிறப்பான எழுத்தோவியம்!


இனி நான் முயற்சிக்கிறேன்.


கோவலன் "கரும்பும் வல்லியும் பெருந்தோள் எழுதி" என்கிறார்.

கரும்பு வில்லும், ( காதல்  சின்னம்) ,மலர்க்கொடியும், ( பெண்மையின் மென்மை குறிக்கும்) சந்தனக்குழம்பு கொண்டு, கண்ணகியின் பெருந்தோளில் வரைகிறான். 

இல்லற இணக்கத்தைக் குறிக்கும், இரண்டு சின்னங்கள்.

இந்த வரைதல் "தொய்யல் "எனப்படும். 

நவீன " டாட்டூ" ( tatoo)போல!

இன்றைய அலங்கார முறைகளுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இருந்த முன்னோடி.


இவர்கள் கூடி இருந்தது , சூரிய, சந்திர சேர்க்கை போல என்கிறார். வெங்கதிரும் தண்கதிரும் ஒன்று கூடின- ஆண் மகனின் வெம்மையைப் பெண்மையின் தண்மை தணிப்பதை நாசூக்காக, கூறும் பாங்கு நம்மை வியக்க வைக்கிறது. 


இவர்கள் சேர்கையில் தாரும், மாலையும்

" மயங்கிக் கையற்று " இருந்ததாம். தார்- ஆண் அணியும்மாலை,  மாலை பெண்அணியும் மாலை எனக்கொள்க.


கோவலன் மனையாளைப் புகழ்வதை "குறியாக் கட்டுரை" என்கிறார். அதாவது, திட்டமிடாத, இயல்பாக உள்ளத்தில் அப்போது உதித்த காதல் உணர்வுகள்; புகழுரைகள். உண்மையான உள்ளக்கிடக்கைகள்!


ஐயா, தாங்கள் கூறியது போல நாயகியை வர்ணிக்கும் இன்றைய திரைப்பாடல்களுக்கு அடிகளின் வர்ணனை வழி காட்டலாக அமைந்தது என்பது

வெள்ளிடைமலை.


கவிஞர் வாலி அவர்களின் " கூனல் பிறை நெற்றியில் குழலாட" என்பதுஅடிகளின்"" பெரியோன் தருக திருநுத". லோடு ஒப்பு நோக்கத்தக்கது.


அடிகள் கண்களுக்கு வேலையும் , இடைக்கு வச்சிராயுதத்தையும் ஒப்பிடுகிறார் . ஆயுதங்கள்! கண்ணகிக்கு கால்சிலம்பே ஆயுதம்!


கண்ணகியின் எழில் எத்தகையதாம், கோவலன் பார்வையில்?

கண்ணகி பனிரெண்டு வயதினள்- மங்கை!

மங்கைக்கு அழகு,  நற்சாயல்,மெல்லிய நடை மற்றும் மென்மையான பேச்சு.


"கோலமயில்... அடைந்து" நாணி கானகம் புக்கும்" சாயலாம்.

சாயல் என்பது பிம்பம் என்றால் இவள் திருவின் சாயலன்றோ! மயில் ஏன் நாணாது?


அவளின் " நல்நுதல் மெல்நடை"கண்டு அன்னம்" அழிந்து தடாகத்தில் ஒளிந்து கொண்டது.சாதாரண தடாகமன்று, " "நன்நீர்ப்பண்ணை" - அக்கால நீர் மேலாண்மையின் மேன்மை.


இவள்" மெல்நடை" இக்கால கவிஞரை" ஒரு நாடகமன்றோ நடக்குது" என வியக்க வைத்திருக்கும்!


பேச்சு ஏச்சாக இன்றி இவளின் "குழலும் யாழும் அமிழ்தும் குழைத்த மழலைக் கிளவி" கேட்டு பச்சைக்கிளி வருந்தியது.

இவள் மழலை  ,குழல், யாழோடு அமிழ்தும் கலந்தது  போன்ற இனிமையோ இனிமை. வள்ளுவர் கேட்ட குழல், யாழ் இசைகளில் அமிழ்து கலக்கவில்லையோ?! 

(கிளவி- பேச்சு!)


இன்ப இல்லாளை இவ்வாறெல்லாம் வர்ணித்து

மகிழ்ந்த  கோவலன் "நினது மலர்போலுங் கையினின்றும் நீங்காவாய்" என்கிறான்.

இவன்கரங்கள் அவள் கரங்களை  விட்டுப்பிரியமலிருக்க வேண்டுகிறான்.


இவன் கரங்கள் பிரியுமே தவிர, அவள் கரங்கள் பின்னால் சிலம்பை ஏந்தி இவன் நேர்மையை நிலைநாட்டும்!


*பயணம் தொடரும்*

Monday, March 23, 2026

மனித முயற்சியின் மகத்துவம்-பயணக் கட்டுரை(10)

 பாகம் 10

பயணங்கள் முடிவதில்லை…

ஹூஸ்டன் நகரத்தின் அமைதியான பகுதியில் அமைந்துள்ள இந்த Space Center-இல் நுழைந்தவுடன், ஒரு உற்சாகம் மனதில் எழுகிறது. இது ஒரு சாதாரண சுற்றுலா அனுபவம் அல்ல; மனிதன் கனவு கண்ட உயரங்களை நினைவூட்டும் ஒரு பயணம்.


நுழைந்த அந்த நொடியிலேயே, நாம் ஒரு அறிவியல் அருங்காட்சியகத்தில் அல்ல; *மனிதன் விண்ணை வென்ற வரலாற்றின் மையத்தில் நிற்கிறோம் என்ற உணர்வு வருகிறது. ஒவ்வொரு மாடலும், புகைப்படமும், தகவல் பலகையும் *மனித முயற்சியின் மகத்துவத்தை அமைதியாகச் சொல்கின்றன.*


Saturn V ராக்கெட்டை புத்தகங்களில் பார்த்திருப்போம்; ஆனால் அதை நேரில் காணும் அனுபவம் முற்றிலும் வேறு. அதன் அளவும் அமைப்பும் மனிதன் சாதித்ததின் பெருமையை உணர்த்துகின்றன.


Apollo காலத்தின் Mission Control அறையைப் பார்த்தபோது, அந்த அறையில் எடுக்கப்பட்ட முடிவுகள் மனித வரலாற்றை மாற்றியவை என்ற எண்ணம், உள்ளத்தில் ஒரு அமைதியான மரியாதையை உருவாக்கியது.


Tram மூலம் Johnson Space Center வளாகத்திற்குள் சென்றபோது, விண்வெளி வீரர்கள் பயிற்சி பெறும் சூழலை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது. *இது சினிமா காட்சி அல்ல; நிஜ வாழ்க்கையின் கட்டுப்பாடும் கடின உழைப்பும் சேர்ந்த ஒரு உலகம்.*


*என்னுள் எழுந்த எண்ணம்*


விண்வெளி என்பது வெறும் அறிவியல் சாதனை அல்ல; *அது மனிதனின் “முடியுமா?” என்ற கேள்விக்கான உறுதியான பதில்.* அங்கு கழித்த சில மணி நேரங்கள், *சாதனைகள் ஒரே நாளில் உருவாகாது; எண்ணற்ற மனிதர்களின் அர்ப்பணிப்பின் பலனாக தான் உருவாகும் என்பதை உணர்த்தின.*


விண்ணை எட்டிய மனிதனின் கதை,

மனதை எட்டிய ஒரு பயணமாக மாறியது.


*Visitors Training – ஒரு சிறிய அனுபவம்*


இங்கு பார்வைக்கு மட்டுமல்ல, செயலில் ஈடுபடும் அனுபவமும் கிடைக்கிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்ற செயல்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளன. விண்வெளி கருவிகள் பற்றிய விளக்கங்களும், mission control simulation போன்ற அனுபவங்களும் இதில் அடங்கும்.


*Rocket Diagram Activity*


ஒரு ராக்கெட் வரைபடம் வழங்கப்படுகிறது. அதை தங்கள் விருப்பப்படி நிறம் தீட்டி, பின்னர் scan செய்தால், அது திரையில் ஒரு உண்மையான ராக்கெட்டாக பறக்கும். ஒரு சிறிய கற்பனை, கண்முன்னே உயிர் பெறும் தருணம்.


*Launch Simulation*


Countdown ஒலி, engine ignition, lift-off காட்சி, இவை அனைத்தும் சேர்ந்து, ஒரு *உண்மையான launch அனுபவத்தை தருகின்றன.*


*கற்றலும் மகிழ்ச்சியும் சேரும் இடம்*


இவை வெறும் விளையாட்டு அல்ல. *அறிவியல் மீது ஆர்வத்தை வளர்க்கின்றன;* கற்பனைக்கும் அறிவுக்கும் இடையே ஒரு பாலமாக அமைகின்றன. குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சமமாகப் புதிய உணர்வை அளிக்கின்றன.


Johnson Space Center-இல் கிடைத்த அனுபவம் ஒரு எளிய உண்மையை நினைவூட்டுகிறது:


*ஒரு சிறிய வரைபடம் கூட, சரியான வழிகாட்டுதலுடன் விண்ணைத்தொட முடியும்.*


ஒரு கணம், நாம் வெறும் பார்வையாளர்கள் அல்ல; விண்வெளி வீரர்கள் போல உணர்கிறோம். கையில் இருந்த காகிதம், கண்முன்னே விண்ணில் பறக்கும் ராக்கெட்டாக மாறும் அந்த நொடியில், அறிவியல், கற்பனை, மகிழ்ச்சி மூன்றும் அமைதியாக ஒன்றாக இணைகின்றன.

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...