Friday, August 8, 2025

என்றும் நானறியேன்

 



நூல்: என்றும் நானறியேன்

ஆசிரியர்: அமுதவல்லி நாராயணன்


************************************************

அணிந்துரை:

மகாகவி பாரதி தமிழ்ச் சங்கம் எனக்கு பல அரிய நல் தமிழ் உறவுகளைக் கொடுத்துள்ளது. அதில் முக்கியமான ஒருவர், இளைய சகோதரி திருமதி. அமுதவல்லி. ‘சுழல்’ எனும் தலைப்பில் ‘ழகரக் கவியரங்க’ மேடையையும், அந்த அரங்கத்தையும் தன் கவிதையால் சுழல வைத்தவர். *வாசித்தலை நேசித்தலும், நேசித்து வாசித்தலும் நம்முள்ளே இருந்து விட்டால் நற்றமிழ் தானே வரும்* எனும் கூற்றினை மெய்ப்பித்தவர். கணினியிலே பணியென்றாலும் கன்னித் தமிழ் மேல் தீரா பற்றுக் கொண்டவர். தமிழ்ச் சேவையில் முன்னிற்பவர். இவரது இந்த *‘என்றும் நானறியேன்’* எனும் இந்த கவிதைத் தொகுப்பு நூலுக்கு என்னை அணிந்துரை எழுதிட பணித்துள்ளார். உள மகிழ்வோடு அதனைச் செய்ய சம்மதித்தேன்.


சிறந்த சொல்லாட்சியோடு *108 கவிதைகள்* புனைந்து இந்நூலை வெளியிடுகிறார். துவங்குகையில், கவிதைக்கு விளக்கமாக *‘தனித்தன்மையுடன் பூப்பதே கவிதை’* - எனத் துவங்கி அடுத்த கவிதையில் *‘மனதைத் தொட்ட வடிவெல்லாம் எனக்குக் கவிதையானது’* -என முரசடித்து கோலாகலமாய்த் துவங்குகிறார் கவிஞர்.


எல்லாருக்கும் பிடித்ததை செய்து தரும் *அம்மாவுக்கு தனக்கு எது பிடிக்கும் என்பது மறந்து போனதை* நெகிழ்ச்சியோடு மூன்றாம் கவிதை சொல்கிறது.

அதற்கு அடுத்த கவிதையோ வயிற்றில் சுமக்க முடியாது போனாலும் தோளிலும் முதுகிலும் சுமந்த பின், *வாழ் நாளெல்லாம் மனதில் சுமக்கும் தந்தையின் பாசத்தை* உணர்ச்சியோடு சொல்கிறது.

அலைபேசி உலகில் *பாட்டிகள்* பற்றி ஒரு கவிதை, கவலைகளைப் பகிர, *வாழ்க்கைக் கோலம்* எனும் கவிதையில் ‘கோலமோ அலங்கோலமோ அழிந்தாக வேண்டும் என்றுலும் வாழ்ந்துதான் தீர வேண்டும்’ - என தத்துவத்தைச் சொல்கிறது

*‘வண்ணம்’* கவிதையில் வண்ண பேதம் பார்க்கும் மனிதனை கவிஞர் சாடுகிறார். *'போனஸ்’* கவிதையிலோ வெயிலில் மழையும், மழையில் வெயிலையும் போனஸாகப் பார்த்தவர், இயற்கையை சீரழித்து மைனஸாகும் மனிதன் தொலைத்த மனிதத்தைத் தேடுகிறார்.


பூத்துக் குலுங்கும் செந்நிற மலர்கள் இவரை சிலிர்க்க வைத்ததைப் பார்க்கலாம். ரயில் நிலையத்தில் உறவுகளை நோக்கி ஓடும் குழந்தை மூலம் உறவுகள் மகிழ வைப்பதைப் படிக்கலாம்.

14-ம் கவிதை புள்ளினங்களின் ஒலியை சிதறடிக்கும் வாகனத்தின் ஒலிப்பான் ஒலியை விவரிக்கிறது. 18-ஆம் கவிதையோ கடிதங்கள் பற்றி உணர்வுகளைத் தட்டி எழுப்புகிறது. அதற்கு அடுத்த கவிதையோ கையெழுத்து பற்றிய சிந்தனைகளை கல்வெட்டு போல் பதிவேற்றி வைக்கிறது. அதிலும் *‘கையெழுத்து எப்படி இருந்தாலும் மனதின் மொழி புரிந்து விடும்* எனும் கூற்று உறவின் மேன்மையை உரக்கச் சொல்கிறது.

‘வீடென்பது’ உணர்வுகளின் பின்னல் எனப் பதிவேற்றியதோடு காலியான வீடு, நினைவுகள் பூட்டிய வீடு, திண்ணை தொலைத்த வீடு, ஊரில் வீடு, திண்ணையின் கதை என வீட்டைப் பற்றிய கவிதைகளில் ஒவ்வொருவரின் இளமைக் கால நினைவுகளையும் அசை போட வைக்கிறார் கவிஞர்.


 *‘என்சொல்வேன்’* எனும் கவிதையில் பெண் குழந்தைகளுக்கு, *‘தலை நிமிர்ந்து வாழ்வோம்... தலை குனிந்து ஒதுங்கோம்!!!...”* (மூன்று ஆச்சரியக் குறிகளோடு) என ஆணித்தரமாய் அறிவுறுத்துகிறார்.

மண், மழை எனவும் பயணிக்கிறார். மரணம் எனும் தலைப்பில் முத்தான நான்கு ஹைக்கூ...

கனவு, கடமை, ஏக்கம் என எல்லாவற்றையும் நசுக்கிச் செல்லும் வாகனத்தை *‘விபத்து’* கவிதையில் பார்க்கலாம். துரத்தும் கனவுகளை, பற்பல கேள்விகளை நாமும் வாசிக்கலாம்.

சிக்னலில் பொருட்கள் விற்கும் ஏழையின் குரலாய், சாலைகளில் விளையாடவியலா சிறார்களின் குரலாய் கவிஞர் ஆதங்கம் தெறித்து வெடிக்கிறது. மருத்துவமனை பொழுதுகள், நீர்க்குமிழி கனவுகள் பற்றி உணர்ச்சியோடு பேசுகிறார்.


மனதைக் குளமாய், மாயையாய், கண்ணாடியாய் சித்தரிப்பது *‘மனம்’* எனும் கவிதை. நிராகரிக்கப் பட்ட / படாத கவிதைகளை முத்துகளோடு ஒப்பிடுகிறது *‘முத்துகளும் கவிதைகளும்’.* இதனைப் படிக்கையில் இவர் கவிதைகள் எல்லாம் நிராகரிக்கக் கூடாத, நிராகரிக்கப்பட முடியாத,  நல் முத்துகளே எனும் எண்ணம் நம் மனதில் இழையோடுவது உண்மை.

காற்றை வரவழைக்க கதை பேசக் கூப்பிடுகிறார் ஒரு கவிதையில். *‘சன்னல் திறந்தால் சுதந்திரமாக நுழைந்தன காற்றும் வெளிச்சமும்’* என சிலிர்க்கிறார் வேறொரு கவிதையில்.


*“ஓசை ஒத்தப் பாக்கள்”* படைத்து அளித்துள்ளார் 72-ஆம் கவிதையில்.

77-ஆம் கவிதையிலோ காணாமல் போன காக்கை குருவி மீண்டு வர விண்ணப்பிக்கிறார்.

மழலையின் சிரிப்பு, தித்திக்கும் முத்தம், மழலை இன்பம் என குழந்தைகளைச் சுற்றிச் சுற்றி ருசியாய் ரசித்திடவே சில கவிதைகள். மனதின் அடியாழத்தில் தேங்கிக் கிடக்கும் ஏக்கங்களின் வெளிப்பாடாய் சில கவிதைகள், சமூகப் பார்வை கொண்டு பெண்ணியம் பேசும் புரட்சிக் கவிதைகள் என நூல் நெடுக மனங்கவரும் சொல்லாடல்களோடு, சிந்தனையைத் தூண்டும் கருத்தாங்களோடு, படிக்க வைக்கும் சுவாரசியத்தை அதிகரிக்கும் சொல்லாட்சி கொண்டு இந்நூலினை வடித்துக் கொடுத்துள்ள கவிஞர். அமுதவல்லி நிச்சயமாக தமிழன்னையின் பரிபூரண அருள் பெற்றவர். இவரது எழுத்துகள் இவர் வாசித்தலில் நாட்டம் கொண்டவர் என்பதை உறுதி செய்கிறது.

அதிலும் முத்தாய்ப்பாக இந்நூலின் நிறைவுக் கவிதையாக *‘என்றும் நானறியேன்’* எனும் கவிதையைப் படைத்துள்ளார். அதில் தாத்தா, பாட்டி, சின்ன அத்தை, மாமா என ஒவ்வொரு உறவுகளையும் ஒவ்வொரு பொருள் நினைவு படுத்துவதை பட்டியலிட்டு விட்டு, தன்னை நினைவுறுத்த என்ன இருக்கும் என அறியேன் என அங்கலாய்ப்போடு நூலை நிறைவு செய்கிறார். 


கவிஞர் இப்படி அங்கலாய்க்கத் தேவையில்லை என்பதை *‘என்றும் நானறியேன்’* எனும் இந்நூலே உரக்கச் சொல்கிறது. கவிஞரின் கால் தடத்தை தமிழ்ச் சமூகத்தில் கல் வெட்டாய்ப் பதிக்கிறது. தலைமுறைகள் கடந்து நிற்பது படைப்பாளியின் எழுத்துகளே! இவர் தன் தடத்தைப் பதிப்பதிலே வெற்றி வாகை சூடியிருக்கிறார்.

நான் அறுதியிட்டு உறுதியாகச் சொல்லிடுவேன்! அமுதவல்லி அவர்களின் கவிதைகள் நல் முத்துகளே. வெகுசீக்கிரம் இவர் நவமணிகள் கொண்ட கவிமாலை ஒன்றினை தமிழன்னைக்குச் சூடட்டும். அந்நாள் விரைவில் வந்திடட்டும். இவர் இலக்கிய உலகில் உற்சாகமாய் வெற்றி உலா வருவார் என்பதை ‘என்றென்றும் நானறிவேன்’. உறுதி செய்கிறது.


என்னையும் மதித்து இந்நூலுக்கு அணிந்துரை வழங்கச் சொன்ன கவிஞருக்கு என் நன்றிகள். சிறந்ததொரு நூலினை படைத்தளித்தமைக்கு வாழ்த்துகள்.

அன்புடன்,

*ஸ்ரீவி* 

(ஜெ. ஸ்ரீவெங்கடேஷ்)

கவிஞர்,

எழுத்தாளர்,

தலைவர்,

*மகாகவி பாரதி தமிழ்ச் சங்கம்.*

******************************************

*கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம்* எனும் பழமொழிக்கு உதாரணமாக நான் இங்கு நிற்கிறேன். அறுபது ஆண்டுகள் தமிழை ஒருபுறம் வைத்து வாழ்ந்து, இப்போது அதன் இனிமையில் மூழ்கி மகிழும் என்னைப் புத்தக விமர்சனம் எழுதச் சொன்ன தலைவரின் துணிச்சல் பாராட்டத்தக்கது.


ஒரு திரைப்படத்தில் வடிவேலு, காமெடி காட்சியொன்றில், “இசை என்றால் என்ன?” என்று கேட்டு, *குட்டும்போது கேட்கும் சத்தமும் இசையே* எனக் கூறுவார்., அதேபோல் அமுதவல்லி தன் *என்றும் நானறியேன்* கவிதைத் தொகுப்பின் முதல் கவிதையே *கவிதை* என்று தொடங்கி, ஒரே கருத்தை ஆயிரம் பேர் ஆயிரம் விதங்களில் சொன்னாலும், சொல்லாக்கத்தின் தனித்தன்மையால் *கவிதை புதுமையாகப் பூப்பதாகக் கூறுகிறார்.*

கவிதையின் இலக்கணத்தை அழகுற வரையறுத்து, *கவிதை என்று எதைச் சொல்வேன்..* என்று கேட்டு மழலையையும் மலரையும் ரசிக்கும்போது அவற்றை அன்பெனவும் அழகெனவும் உணர்பவர்கள், *தோட்டத்தில் மழலையை மலரென உருவகிக்கும்போது* 


அதுவே கவிதையென மனமுவந்து ஏற்றுக்கொள்கின்றனர் என்று முடிக்கிறார். இத்தகைய உணர்வு நயத்துடன், அமுதவல்லி தன் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வையும் 108 மந்திரங்களாக (108 கவிதைகளாக) தீட்டியுள்ளார். ஒவ்வொரு கவிதையும் வாழ்வின் சுவடுகளை, உணர்ச்சிகளின் உன்னதத்தை, அன்பின் ஆழத்தைப் பிரதிபலிக்கிறது.

அமுதவல்லியின் முன்னுரையும் அறிமுகமும் இத்தொகுப்பில் தேவையற்றவையாகத் தோன்றுகின்றன, ஏனெனில் *என்றும் நானறியேன்* தன் கவிதைகளின் வழியாகத் தன்னை முழுமையாக வெளிப்படுத்துகிறது. இதைப் படிக்கும் வாசகர்கள், ஆசிரியரின் உள்ளத்தை, அவரது வாழ்வின் நுட்பமான தருணங்களை, அவரது சிந்தனைகளின் ஆழத்தை உணர முடிகிறது. “என்றும் நானறியேன்” என்ற தலைப்பு, தன்னைத் தேடும் பயணத்தின் அடையாளமாக இருப்பினும், இந்தத் தொகுப்பு 


*அமுதவல்லியை முழுமையாக அறிந்து கொள்ள வாசகர்களுக்கு வழிகாட்டுகிறது.*

- தியாகராஜன்

*************************************************

அமுதவல்லி அவர்களே உங்கள் அருமையான "  என்றும் நான் அறியேன்"  கவிதை புத்தகம் பெற்றேன்  

என்ன  பேரு பெற்றேன்

 என்றே சொல்ல வேண்டும்


 கவிதை என்று எதைச் சொல்வேன்  வினவினீர்கள்

 விடை இதோ  உங்கள் தமிழை!


  தனக்கு என்ன பிடிக்கும் என்று மறந்து போன அம்மாவுக்கும்

 அடுத்து வரும் தந்தை பாசம்

 ஏங்குகிறேன் நானும் சமீபத்தில் இழந்ததால்


 பாவம் பாட்டி  அலைபேசி உலகில் மாட்டிக் கொண்டார்

 பக்கத்தில் பார்த்தால் வண்ணங்களின் ஓவியம்


 வீடு என்பது  நினைவூட்டுகிறது  பாவேந்தரின்  குடும்ப விளக்கு

 காலியான வீட்டுக்கு  அவர் எழுதிய  இருண்ட வீடு


 இருந்த நினைவால்  நீங்கள் பூட்டிய வீட்டில்

 தொலைந்து போன திண்ணைக்காய்  ஆழ்ந்த இரங்கல்


 உங்களைப் போல் எனக்கும் ஓரத்தில் உறுத்தல்

 நன்றிகள்,  சந்தித்த துரோகங்கள், செய்த தவறுகள்  என


 உங்கள் இணை சொல் நயம் இல்லாததால்  உங்கள் வரிகள்  சிலவற்றையே இங்கு சமர்ப்பிக்கிறேன்


 இழப்பின் ஆழத்தில்  இழுக்கும்

 இரவொன்று   விழுங்கக்  காத்திருக்கும்  தனிமையில்...

  காட்சிப்பிழையாக நீண்டு தெரிகிறது  வாழ்க்கை!


 *என்றும் அறிந்திடுங்கள்  உங்கள் கவிதையே  உங்களை  நினைவுறுத்தும்!!*

- ஸ்ரீவித்யா


************************************************

கோடையிடிக்காமுவும் தொடைநடுங்கி‌சோமுவும்

 




நூல் : கோடையிடிக்காமுவும் தொடைநடுங்கி‌சோமுவும்

ஆசிரியர்: ஸ்ரீவி

****************************************************************************

 அணிந்துரை:


தொலைக் காட்சியில் வரும் நெடுந் தொடர்கள் என்றாலே அழுது வடியும் தொடர்களும், இயற்கைக்கு மாறான தவறான உறவுகளை சித்தரிக்கும் தொடர்களும் - இல்லை என்றால் நூற்றுக்கணக்கான எபிசோட்களைக் கடந்து வருடக் கணக்கில் அனுமார் வால் போல் நீண்டு கொண்டே போகும் ரப்பர் சீரியல் தொடர்களும்தான் என்கின்ற எண்ணம் எல்லார் மனதிலும் ஆழமாக இருக்கிறது. ஆனால், அத்தி பூத்தது போல, டிவி-யில் ஓர் அதிசயம் நடக்கும். காமெடித் தொடர்கள் டிவி-யில் வந்து ஒரு கலக்கு கலக்கும். அந்த வரிசையில்,

 திரு. எஸ்.வி. சேகரின் ‘நம் குடும்பம்’ எனும் தொடர்,

 திரு. கிரேசி மோகன் அவர்களின் ‘நில் கவனி கிரேசி’ எனும் தொடர்,

 திரு. ஒய் ஜி மகேந்திரா அவர்கள் தயாரித்த ‘வசூல் சக்கரவர்த்தி’ எனும் நகைச்சுவைத் தொடர்,

 நடிகை திருமதி. ஸ்ரீபிரியா அவர்கள் எழுதி இயக்கிய “சின்ன பாப்பா பெரிய பாப்பா” - நகைச்சுவை தொடர், 

 அடடே மனோகர் எழுதிய இயக்கிய அதே பெயரிலே வந்த ‘அடடே மனோகர்’ எனும் தொடர்,

 திரு. காத்தாடி ராமமூர்த்தி அவர்களது ‘துப்பறியும் சாம்பு’ தொடர்,

 இயக்குனர் சிகரம் திரு. கே. பி. அவர்கள் இயக்கிய ‘வீட்டுக்கு வீடு’ எனும் தொடர்,

 நான் நடித்த ‘காமெடி காலனி’ மற்றும் திருமதி. ஊர்வசியும் நானும் நடித்த “ருக்கு ருக்குமணி” எனும் தொடர்கள்,

 நாகா சார் அவர்கள் இயக்கிய ‘ரமணி Vs. ரமணி’ எனும் தொடர்.

இவைகள் எல்லாம் முத்திரை பதித்த நகைச்சுவை தொடர்கள். போர் அடிக்கும் சீரியல்களை பார்த்து நொந்து போயிருந்த ரசிகர்களை மன மகிழ்ச்சிக்கு உள்ளாக்கிய மிகப் பிரபலமான நகைச்சுவை தொடர்கள்.

ஒரு நூல் அணிந்துரையில் எதற்கு தொலைக் காட்சித் தொடர்களைப் பற்றி இவ்வளவு பெரிய பீடிகை என்ற ஓர் ஆச்சரியம் வருகிறதா! இதற்கு ஒரு காரணம் உண்டு. அலுப்பு தட்டிப் போன விஷயங்களில் கூட ஆர்வம் தரக்கூடிய ஒரே ஒரு விஷயம் நகைச்சுவையே. ஆதலால் ஒரு நகைச்சுவை புத்தகத்தைப் பற்றி அணிந்துரை வழங்கும் பொழுது இந்த முன்னுரை அவசியமாகிறது.

இனிமேல் டிவியில் நெடுந் தொடர்களாகவோ அல்லது வாராந்திரியாகவோ நகைச்சுவைத் தொடர்கள் எடுக்கலாம் என யாராவது நினைத்தார்கள் என்றால் அவர்களுக்கு திரு. ஸ்ரீவி அவர்கள் எழுதிய இந்த நகைச்சுவை நூலை நான் பரிந்துரைக்கின்றேன். அவரின் முதல் நகைச்சுவை படைப்பு மாதிரி இந்நூல் தெரியவில்லை. இவர் எழுதிய பிற படைப்புகளை நான் படித்திருக்கின்றேன் அவருடன் நெருங்கி பழகியும் வருகிறேன். அவருடைய தமிழ் ஆற்றல் என்னை வியக்க வைத்தது. ஆனால் அவர் தனது நகைச்சுவை கதைகள் மூலமாக முதன் முறையாக என்னை மிகவும் அசத்தியிருக்கிறார். நிச்சயமாக நகைச்சுவைக் கதைகள் எழுதுவதில் அவருடைய கன்னி முயற்சியாக இது தெரியவில்லை. அவர் மிகவும் ரசித்திருக்கும் *பாக்கியம் ராமசாமியின் ‘அப்புசாமி - சீதாப்பாட்டி’* தொடராகட்டும், *தேவனின் ‘துப்பறியும் சாம்பு’* தொடராகட்டும் காலத்தால் அழியாத நகைச்சுவை காவியங்கள் ஆகும். அந்த வரிசையில் எந்த விதத்திலும் சோடை போகாது, எல்லோர் வாழ்க்கையிலும் இயல்பாக நடக்கக் கூடிய இயல்பான நகைச்சுவையை மிக இயல்பாக நல்லதொரு நடையில் அனைவரும் ரசித்து மகிழக்கூடிய அளவில் அவர் எழுதியிருப்பது பாராட்டுக்குரியது. ஒரு டீசன்ட் டிராயிங் ரூம் ஹியூமர் *(Decent drawing room humour)* என ஆங்கிலத்தில் சொல்லக் கூடிய குடும்பத்தோடு அமர்ந்து பகிரக் கூடிய, கதைகள் பற்றி பேசக்கூடிய சிறந்த நகைச்சுவை கதைகளாக இக்கதைகள் அமைந்திருப்பது மிகச் சிறப்பு.

இந்நூலில், உடல் அமைப்பை கிண்டல் செய்யும் பாடி ஷேமிங் (body shaming) அறவே இல்லாமல், நகைச்சுவை மிகவும் தரமானதாக இருக்கிறது. இதைப் போன்ற தரமான நகைச்சுவை தொடர்கள் அதிகமாக வர வேண்டும் என்பதே என் போன்ற நகைச்சுவை ரசிகர்களின் பேரவா. அநேகமாக, பெரும்பான்மை ரசிகர்களின் அவாவும் இதுவாகத்தான் இருக்கும். 

குடும்பத்தில் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை எல்லாரும் படிக்கக்கூடிய, பகிர்ந்து மகிழக் கூடிய ஒரு மிகச்சிறந்த நகைச்சுவை நூலாக நான் *ஸ்ரீவி அவர்கள் எழுதிய ‘கோடையிடிக் காமுவும் தொடை நடுங்கி சோமுவும்’* என்கின்ற இந்த நூலை குறிப்பிடுவேன். காமு - சோமு என்கின்ற அந்த இரண்டு கதாபாத்திரங்களை ரசிக்காமல் யாருமே இருக்க முடியாது. என் நினைவு இதுபோன்ற பல இந்தி காமெடி சீரியல்கள் பக்கம் செல்கிறது. ஏஹ் ஜோ ஹை ஜிந்தகி, இதர் உதர், மிஸ்டர் அண்ட் மிஸஸ், வாக்லே கி துணியா போன்ற இந்தி காமெடி சீரியல்கள் ஒரு காலத்தில் கோலோச்சின. நான் துவக்கத்தில் பட்டியலிட்ட பற்பல தமிழ் காமெடி சீரியல்கள், தமிழ் நாட்டில் மிகப் பெரிய வெற்றியை ஈட்டியதை நாம் அறிவோம். 


*அந்த வரிசையில் இந்த நூலும் ஒரு தொலைக்காட்சித் தொடராகவோ அல்லது திரைப் படமாகவோ வரக்கூடிய அளவிற்கு இதில் சரக்கு உள்ளது.* அப்படி நடந்தால் சந்தோஷப்படக்கூடிய முதலாவது நபர் நான் தான்.

அந்த அளவிற்கு சிறப்பாக இந்நூலை ஸ்ரீவி அவர்கள் எழுதியிருக்கிறார். நகைச்சுவை வறட்சி இருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில், மிகச் சிறப்பாக நகைச்சுவை எழுதக்கூடிய ஒரு நகைச்சுவை எழுத்தாளராக இவர் வந்திருப்பது நகைச்சுவைப் பட்டாளம் (comedy battallion) என சொல்லக்கூடிய நகைச்சுவை ரசிகப் பெருமக்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு செய்தி. என்னைப் போன்ற காமெடியை ரசிக்கக் கூடிய வாசகர்களுக்கு இவரது வருகையும் இந்நூலும் ஒரு வரப் பிரசாதமே.

கதைகளைப் படிக்கும் போதே என் கண் முன்னே அந்த காட்சிகள் விசுவலாக விரிந்தன. அவ்வளவு பிரமாதமாக அவர் எழுதியிருக்கிறார். கதைகளைப் பற்றி இதற்கு மேலும் அதிகமாக நான் கூறி, கதைகளைப் படிக்காமலேயே அதைப்பற்றி ஒரு கருத்தியலை வாசகர்களிடம் உருவாக்க நான் தயாராக இல்லை. ஏனெனில் அது கதை படிப்பவர்களுக்கு ஸ்பாய்ல் - ஸ்போர்ட்டாக (spoil sport) ஆக ஆகி விடக் கூடாது. ஆனாலும் ஒன்றை நான் இங்கு வலியுறுத்தி கூற விரும்புகிறேன் எல்லார் வீட்டிலும் காமு சோமு என்கின்ற இந்த இரண்டு கதாபாத்திரங்களும் நிச்சயமாக இருக்கின்றார்கள். நீங்கள் படிக்கும் போதே அதை நிச்சயமாக உணருவீர்கள். மிகவும் ரசிக்கும்படியாக தினம் தினம் நமது இல்லங்களில் நடைபெறும் காட்சிகளை நகைச்சுவையாக அவர் அளித்திருப்பதோடு கதையில் ஒவ்வொரு கதையின் முடிவிலும் ஒரு சின்ன ட்விஸ்ட் வைத்திருப்பது மிகவும் ரசிக்கும்படி அருமையாக இருக்கிறது. அந்த முடிவுகளும் சந்தோஷமாக அமைவது கூடுதல் சிறப்பு.


*கூடிய விரைவில் அவர் நகைச்சுவை உலகத்திற்கு ஒரு நகைச்சுவை வசனகர்த்தாவாகவோ அல்லது நகைச்சுவைத் தொடர்களுக்கு எழுதக் கூடிய கதாசிரியராகவோ அல்லது இதைப் போன்ற தரமான நகைச்சுவை நூல்களை தொடர்ந்து தரக்கூடிய ஒரு நல்ல நகைச்சுவை எழுத்தாளராகவோ கொடி கட்டி பறக்கக் கூடிய அளவிலே அவர் வலம் வருவார்* என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. அவர் எழுதக் கூடிய பிற நகைச்சுவை தொடர்களையும் படிப்பதற்காக ஆவலோடு நான் காத்திருக்கிறேன்.


இதுபோலவே, அவர் எழுதியிருக்கக் கூடிய பிற நூல்களையும் நான் இங்கு பரிந்துரைக்க விரும்புகிறேன். பாரதியாரின் புதிய ஆத்திசூடியை ஒட்டி அவர் எழுதியிருக்க கூடிய “புதிய ஆத்திசூடிக் கதைகள்” (பாகம் 1 & பாகம் 2) ஆகிய இரு நூல்களும், சமீபத்தில் அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய “பாரதியின் வைர வரிகள் தந்த கதைகள்” எனும் நூலும் வெளியிட்டதோடு, சென்னை பள்ளிக்கரணையில் இருக்கும் ‘மகாகவி பாரதி தமிழ் சங்க’த்தின் சார்பில் நடத்தப்பட்ட ‘ழகர கவியரங்க’த்தில் அரங்கேறிய கவிஞர்களின் பல்வேறு கவிதைகளை தொகுத்து ஒரு நூலையும் அவர் வெளியிட்டு இருக்கிறார். எனக்கு மிகவும் பிடித்த நூல்கள் இவை.

தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கும், தமிழ் வாசிப்பை விரும்புவர்களுக்கும், நகைச்சுவை பிரியர்களுக்கும் தொடர்ந்து தனது எழுத்தால் தீனி போட்டுக் கொண்டிருக்கக் கூடிய ஸ்ரீவி அவர்கள் மேலும் மேலும் எல்லாப் புகழும், வளமும் பெற்று சரஸ்வதியின் ஆசியோடு தொடர்ந்து தமிழ் எழுத்து உலகில் வெற்றியோடு பயணிப்பார் என்பதில் சிறிதளவும் சந்தேகம் கிடையாது. நல்ல நகைச்சுவை நூலை தந்தமைக்கு எனது பாராட்டுகள். அவர் மென்மேலும் வெற்றிகளைக் குவிக்க எனது வாழ்த்துக்கள். என்னை அணிந்துரை எழுத கேட்டுக் கொண்டதற்கு எனது நன்றிகள்.

பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்,


அன்புடன்,

*சாய்ராம்*

பன்முகக் கலைஞர்,

(சின்ன/பெரிய திரை) நடிகர், பாடகர்,

நிதிச் செயலர்,

*மகாகவி பாரதி தமிழ் சங்கம் - சென்னை 100.*

***************************************************************************


********************************************************************

கோடையிடிக்காமுவும் தொடைநடுங்கி‌சோமுவும்

---விமர்சனம் 

*******************************

இன்று இந்த புத்தகத்தை கையில் எடுத்தேன்...முடித்த பின் தான் கீழே வைத்தேன். மிக சுவாரஸ்யமான நகைச்சுவை இழையோடும் கதைகள். ஆசிரியரின் கதை சொல்லும் திறன் அவரது ஒவ்வொரு புத்தகத்திலும் மெருகேறிக் கொண்டே இருக்கிறது. கதைகள் அனைத்தும் யதார்த்தங்களை பிரதிபலிக்கின்றன. அலை பாயும் மனதை  கொசுறுகள் தூண்டிலாக  மயக்கும் கதையை சொல்கின்றன. இயல்பான நடை மனதை கவர்கிறது. அணிந்துரையில் சாய்ராம் ஐயா சொன்னது போல் தொடராக (அ) திரைப்படமாக வந்தால் நிச்சயம் நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். ரமணி vs ரமணி போல் கோமு-சோமுவை மனதில் ஓடவிட்டு ரசித்தேன். இயல்பான நடைக்காக நிறைய ஆங்கில வசனங்கள் இருந்தன. அவை சற்றே குறைத்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது.  வாசிப்பை அனுபவிப்போர் கட்டாயம் இப்புத்தகத்தை விரும்புவர். ஆசிரியரின் எழுத்துலக பயணம் மேலும் பல மைல்கல்களை அடைய வாழ்த்துகள் 💐


- அமுதவல்லி

********************************************************************

*காமு-சோமு என் பார்வை*


இந்த தொடர் உரையாடல், கதை, காமுவின் இயல்பான வாழ்க்கை, அதில் நிகழும் சில்லறை மாற்றங்கள், பின்னர் பரிணாமமாகும் வாழ்க்கை மாற்றங்களை நம்மிடம் நகைச்சுவையோடும், நுட்பமான மன ஓட்டங்களோடும் சொல்கிறது. சிறந்த கதை சொல்லல் நயங்களும் மனித உறவுகளின் உள்ளார்ந்த பரிமாணங்களும் நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது.

*நல்ல அம்சங்கள்:*

1. சோமுவின் உள்ளார்ந்த எண்ணங்கள் (mind voice) தனிப்பட்ட சுவையை தருகின்றன. “சோமசுந்தரா… வசமா மாட்டிக்கிட்டடா” போன்ற இடங்களில் வாசகர் நிஜமாகவே சிரிக்காமல் இருக்க முடியாது.

2. காமு-சோமு உறவின் இயல்பு மற்றும் அதன் சிக்கலான அமைப்புகள், தம்பதியினர் மனநிலை மற்றும் உரையாடல் வழியே அழகாகத் தெரிகின்றன. சிறு குறிப்பு கூட, பிணைப்பு அல்லது பிளவு உருவாக்கக்கூடியது என்பது ந்ன்கு காணப்படுகிறது.

3. நகைச்சுவை:

தொடர்ச்சியான மெல்லிய நகைச்சுவை, குறிப்பாக சோமுவின் எதிர்பாராத சந்தேகங்கள் மற்றும் தப்பிக்க முயற்சிகள் (“*ஐய்யய்யோ… செத்தாண்டா சேகரு”)* புன்னகை செய்ய வைக்கின்றன.

4. சமூகக் கிண்டல்:

ஹெர்பல் ப்ராடக்ட்ஸ், ஆர்கானிக் உணவு, யோகா, பிளாட்டினம் கார்டு போன்ற சமகால வாழ்க்கை முறைகளை வெகு நயமாக கிண்டலாகவும் விமர்சனமாகவும் நகைச்சுவையோடும் சொல்லும் விதம் மிக அருமை.

5. நேர்த்தியான பின்தள அமைப்பு:

ஹரிகதா காலட்சேபம், சுண்டல், திருப்பதி தரிசனம் போன்ற ஊடாடும் காட்சிகள் தமிழின் மதவழக்குகள் மற்றும் நினைவுக் களங்களை வரைவது போல காமுவின் வாழ்க்கையின் ஓரங்களில் ஒட்டுகின்றன.

*சிறிதளவு கவனிக்க வேண்டிய அம்சங்கள்:*

1. சில இடங்களில் வாசிப்பு நீட்டிப்பாக உணரலாம்:

திடீர் தகவல்கள் (விக்கி, இன்டஸ்ட்ரி விவரங்கள்) காமுவின் உணர்வியல் பாதையை சற்று மங்கச் செய்யும். அவற்றைக் கொஞ்சம் சுருக்கமாக சொல்லியிருந்தால் கதையின் ஓட்டத்தில் இடையூறு குறைந்திருக்குமே.

2. சில வார்த்தைகள் புழக்கச் சுவை குறைந்து போகலாம்:

“*பிளாட்டினம் கார்ட்”* போல சில வார்த்தைகள் திரும்பத் திரும்ப வருவதால் சற்றே புனைவு போலவும் விளம்பரக் கலப்பு போலவும் தோன்றலாம்.

*முடிவுரை:*

காமுவின் யோகா பயணம் ஒரு யோகா பயிற்சியின் புறக் கூறுகளைவிட அதன் பின்நிலையான வாழ்க்கை மாற்றங்களை, சிந்தனையின் குழப்பங்களை, உறவுக் கோட்பாடுகளின் சிக்கல்களை நகைச்சுவையாக வழங்குகிறது. சமகால வாழ்க்கையின் பரிமாணங்களைப் பேசி எழுதுவதில் இந்தப் பகுதியில் ஆசிரியரின் திறமையான எழுத்து தெளிவாகக் காட்சியளிக்கிறது.

👏👏👏👏

- தியாகராஜன்

*******************************************************************


"ஊர்க்குருவி"

 



நூல்: ஊர்க்குருவி

ஆசிரியர்: குத்தனூர் சேஷுதாஸ்


*****************************************************************************

திரு எம் கணேசன் எனும் குத்தனூர் சேசுதாஸ் அவர்களின் *ஊர் குருவி* எனும் கவிதை நூலின் அணிந்துரை:


*அணிந்துரை*


"மகாகவி பாரதி தமிழ்ச்சங்கம்" எமக்கு பல நல்ல தமிழ் உறவுகளைக் கொடுத்துள்ளது. அதில் ஒரு முக்கியமான தமிழ் உறவு அருமை *நண்பர் என். கணேசன்.* இவர் மகாகவி பாரதி தமிழ்ச் சங்கப் புலனக் குழுவில் தினம் ஒரு கவிதையாக தனது படைப்புகளைப் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. காஞ்சிபுரம் அருகே இருக்கும் குத்தனூர் கிராமத்தில் பிறந்த இவர், தனது ஊரின் பெயரையும் தனது பெயர் சொல்ல வந்த பேரனின் பெயரையும் இணைத்து *குத்தனூர் சேஷுதாஸ்* என்கின்ற புனைப் பெயரிலே கவிதைகளைப் படைத்து அளித்து வருகிறார். 


எங்கள் மகாகவி பாரதி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நாங்கள் நடத்திய *"ழகரக் கவியரங்கம்"* என்னும் சிறப்புமிகு கவியரங்கத்தில் *"உழல்''* எனும் எதிர்மறைப் பொருள் தரும் அந்தச் சொல்லெடுத்து மிகச் சிறப்பானதொரு கவிதையை அவர் வாசித்தளித்தது குறிப்பிடத் தக்கது. 


அவரது தமிழ் ஆற்றல் மற்றும் தினம் ஒரு கவிதை பகிர வேண்டும் என்கின்ற அந்த ஆர்வம் அவரது படைப்புத் திறனை மேலும் மேலும் மெருகூட்டுகிறது கண்கூடு. அவரது படைப்புகள் பலவற்றைத் தொகுத்து அதனை ஒரு நூலாக வெளிக் கொணர வேண்டும் என்கின்ற எனது அவாவினை அவருடன் பலமுறை பேசி வந்தேன். அந்த அடிப்படையிலே இந்த நூலை அவர் தொகுத்து தன்னுடைய முதல் நூலாக வெளியிடுவது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி தருகிறது. மேலும் எனது மகிழ்ச்சி இரட்டிப்பானது அவர் என்னை இந்நூலுக்கு அணிந்துரை எழுதச் சொன்னபோது. 


தினம் ஒரு கவிதை என்கின்ற அளவிலே, தன்னுடைய படைப்புகளைப் பகிர்ந்து வரும் ஒரு கவிஞர் தனது முதல் நூலுக்கு அணிந்துரை எழுதித் தரச் சொல்லும் போது அதை செய்வதற்கு தயக்கம் ஏதாவது வருமா என்ன! மிக மகிழ்ச்சியோடு அப்பொறுப்பினை ஏற்றேன்.


ஊர் நடப்புகளைப் படம் பிடிக்கும் கவிதைகளை *"ஊர் குருவி"* எனும் பெயரில் தொகுத்து ஒரு நூலாய் இவர் வெளியிட்டிருப்பது சிறப்பு. உயரப் பறந்தாலும் பருந்தாக இயலாது எனும் தன்னடக்க எண்ணத்தோடு இவர் இப்பெயரை இந்நூலுக்கு சூட்டியிருக்கக் கூடும். பருந்தாகாவிடில் என்ன, படிப்போருக்கு நல் விருந்தாக கவிதைகளைக் கொடுத்துள்ளாரே! அதுதானே ஒரு படைப்பாளிக்கு வெற்றி. 


நூலில் உள்ள சில கவி வரிகளை மட்டும் தொட்டுக் காட்டுதலை எனது கடமையாக நான் பார்க்கிறேன். இந்நூலைப் படிக்க விழையும் வாசகரின் வாசிப்பு முழுமை அடைய உதவும் ஒரு சிறு முயற்சியாக இதனை செய்வது நலமென உறுதியாக நம்புகிறேன். 


துவக்கமே வாழ்த்துக் கவியோடு களை கட்டும் இந்நூல் ஆர்வம் ஊட்டுகிறது. அந்தக் கவிதையில் இறையை, இயற்கையை, நாட்டைப் போற்றுவதோடு, தமிழன்னையால் வாழ்கிறேன் என பதிவு செய்து துவக்குகிறார் அவர் பயணத்தை. அடுத்து, இவரது அன்னையைப் போற்றும் கவிதையோடு தொடர்கிறார். 


இவரது கவிதைகள் ஒவ்வொன்றிலும் யதார்த்தம் இழையோடுகிறது. மலரும் நினைவுகள் மலர்கின்றன *[கூட்டாஞ்சோறு],* நாட்டுப் பற்று மிளிர்கிறது *[வெள்ளைக் காஷ்மீரம்],* தற்கால அவலம் விமர்சிக்கப் படுகிறது *[குட்டிப் பிசாசு]*

வறுமையின் கொடுமை தாண்டவம் ஆடுகிறது *[குழந்தைகள் பாரீர்]* தமிழை மறக்கும் தமிழ் சமுதாயம் பற்றி கவலைப் படுகிறது *[தள்ளாடும் தாய்மொழி தினம்]* இன்றைய ஊடகங்களின் நிலையை எள்ளி நகையாடுகிறது *[பாவம் பத்திரிக்கை]* 


இவ்வாறு பற்பல சிந்தனைகள் ஊற்றெடுக்கும் அற்புத படைப்பு இந்நூல். மேலும் *அன்னை, தந்தை, தாத்தா, பாட்டி, மகள், பேரன், பேத்தி*  என உறவுகள் பற்றிய கவிதைகள் நல்லுறவுகள் பற்றி முரசறைகின்றன. *அன்னையர் தினம், மழலையர் தினம்* என கொண்டாடப் படும் பற்பல தினங்கள், இவரால் கொண்டாடப் படுகின்றன.


இதற்கு மேலும் உங்களுக்கும், இக்கவிதைகளுக்கும் இடையே நிற்க  மாட்டேன். படித்து ரசியுங்கள். இந்த கவிதைகளைப் படித்த பின், உங்கள் கருத்துகளையும் அந்தப் படைப்பாளியோடு பகிர்ந்து கொள்ளுங்கள். அவருக்கு அது பேருதவியாக அமையும்.


குத்தனூர் கவிஞரே! உங்களுடைய தமிழ்ப் பயணம் மிகச் சிறப்பாகத் துவங்கியுள்ளது. உங்களுடைய முதல் நூல் இதோ வெளியாகிவிட்டது. இந்த துவக்கம் நல்லதொரு இனிய துவக்கமாக அமைந்து, உங்களுடைய தமிழ்ப் பயணம் தொய்வின்றி மிகச் சிறப்பாகத் தொடர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நிறைய எழுதுங்கள். அடுத்தடுத்த நூல்களை வெளியிடுங்கள்! நன்றி.


அன்புடன், 

*ஸ்ரீவி*

(என்கின்ற)

ஜெ. ஸ்ரீ வெங்கடேஷ் கவிஞர், 

எழுத்தாளர், 

தலைவர்,

*(மகாகவி பாரதி தமிழ்ச் சங்கம் சென்னை 100).*

*****************************************************************************

ஊர்க் குருவி -நூல் விமர்சனம் 

--_----------------------------------

கவிதைகள் வாசிப்பதில் ஒரு வசதி...ஊர்க்குருவி கொத்தி கொத்தி அரிசி எடுப்பது போல் பட்டென்று பக்கம் ஒன்றை எடுத்து சட்டென்று கவிதை படித்துவிடலாம். கணேசன் ஐயாவின் கவிதைகள் ஏற்கனவே வாசித்தது என்றாலும்...புத்தகத்தில் வாசிப்பது , வாழை இலையில் விருந்து அருந்துவது போல் தனிச் சுவை. இம்மென்றால் கவிதை ஏனென்றால் கவிதை என எதை பற்றி வேண்டும் என்றாலும் எழுதும் திறன் கொண்ட நம் கவிஞர் இந்த நூறு கவிதைகளில் எதையும் விடவில்லை. தாய் தந்தை குழந்தை பேரக்குழந்தை என உறவுகள் இயற்கை, வாய் காது என உறுப்புகள் , முருங்கை, சுண்டை என காய்கள் , பாரதியார், பாவேந்தர் உலக தினங்கள்  மட்டுமல்ல எருமையுடன் கொசுவையும் பாடி அசத்தி உள்ளார் நம் கவிஞர். அடிக்கடி நிறம் மாற்றும் நீ! பச்சோந்தியா? என சமூகத்தின் சீர்கேடுகளைச் சாடவும் தவறவில்லை இவர். ஊர்க்குருவி வாசிப்பவரின் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் என்பதில் ஐயமில்லை. 


- அமுதவல்லி நாராயணன்

********************************************************************************

115 கவிதைகளை அனாயசியமாக எழுதிவிட்டு தன்னை “ஊர்க்குருவி” என்றும், ஆனால் உயரப் பறக்கத் துடிப்பதாகவும் சொல்வது நம் *குத்தனூர் சேஷுதாஷ் கணேசன் ஐயாவின் தன்னடக்கத்தைக் காணும் போது மெய் சிலிர்க்கிறது.*


தன் எளிய கவிதைச் சிறகுகளால் நாளும் உயர முயல்வதாக அவர் கூறும்போது, பேரனைக் கண்ட பின் உறங்கிக் கிடந்த தமிழார்வம் மீண்டும் முளைத்ததாக அவர் சொல்வதிலும் அவரது உள்ளார்ந்த உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது.


ஐயா, *விதை எப்போதும் உறங்குவதில்லை.* சரியான நேரத்தில் அதை விதைக்க வேண்டும், அவ்வளவுதான்! அந்த “சரியான நேரம்” என்பதே, நீங்கள் பேரனைக் கண்ட தருணம் தான்.


“ஊர்க்குருவி” என்ற உங்கள் சொற்றொடரை, நான் “சிட்டுக்குருவி” என்றே எடுத்துக்கொள்கிறேன்.


*தாயில் சிறந்த கோயில் இல்லை* என்பதற்கிணங்க, தமிழ்த்தாயை வாழ்த்தி, அன்னையை போற்றி, அவளின் அமுதமாம் கூட்டாஞ்சோறு என்று தொடங்கிய உங்கள் வரிகள், ஏற்கனவே உங்களை உயரத்தில் எடுத்து நிறுத்தி விட்டன ஐயா. அப்படி இருக்க, இன்னும் *ஏன் இந்த பேராசை?*


*சிங்கத்தின் வாலாக இருப்பதைவிட, எலியின் தலையாக இருப்பதே சிறப்பு* என்பார்கள். அதுபோல், பருந்தாக உயரப் பறந்து சிலரால் மட்டுமே பாராட்டப்படுவதற்குப் பதில், *அனைவராலும் விரும்பப்படும் ஊர்க்குருவியாகவே (சிட்டுக்குருவியாகவே) இருத்தல் நன்றன்றோ!*


இன்றைய காலத்தில் மொபைல் போன்களின் தாக்கத்தால் சிட்டுக்குருவிகள் மறைந்துவிட்டன; மண்ணின் மனம் மங்கியிருக்கிறது. அத்தகைய நேரத்தில் நமக்கு அந்த மண்ணின் மனதை மீட்டுக் கொடுக்க வேண்டியது ஊர்க்குருவிகள் தான்.


அதனால் தான், ஐயா, நீங்களே ஊர்க்குருவியாக இருந்து, இன்னும் பல சிறந்த படைப்புகளை தந்து, எங்களை மகிழ்விக்க வேண்டும். எங்களுக்கு தங்களைப்  போன்ற ஊர்க்குருவிகள் மிகவும் தேவை!

அனைவரும் ஊர்க்குருவியை படிக்கவும்! அப்போது தான் நான் கூறுவதில் உள்ள நியாயம் புரியும்.

- தியாகராஜன்

*********************************************************************************

என்னங்க இப்படி ஏமாற்றி இருக்கிறார் இந்த  குத்தனூரார்

  இப்படியும் தன்னடக்கமா

 குருவி என்று கூறிவிட்டு

 ஒரு பறவை பார்வையில் முழு

 உலகையும் உலாவரச் செய்திருக்கிறார்  இவர் கவிதையால்!!


 முன்னுரை தமிழே உன்னால் வாழ்கிறேன் என்றார்

 வள்ளுவரைப் போல் ஆதி பகவன் அம்மையப்பனை போற்றி எழுத ஆரம்பிக்கிறார் 

 என்றே நினைத்தேன் நானும்  ஓர் அதிர்ச்சி

 வாழ்க்கையின்  அடிக்கல் அப்பாவை  கல் என்று கூறியிருப்பார்

 அந்தக் கல்லையும் காதலால் கரைத்த  அம்மாவின் புகழ் பாட!


 சற்றே சுதாரித்து  அடுத்த கவிதைக்குச் சென்றால்

 சோறு முக்கியம்  என்பதாக கூட்டாஞ்சோறு

 பிளாஷ்பேக் ஓடும் பாவம் இந்த காலத்துப் பிள்ளைகள்  என்னவென்று தேடும்!


 அப்படியே நம் நினைப்பை கடத்தி இந்த காலத்துக்கு வரவழைக்க

 அமைதி கொடி பறக்க  ஒரு வெள்ளை காஷ்மீரம்!


 ஒரு வருடத்தில் இவ்வளவு தினங்கள் கொண்டாடுகிறார்களா

 தகவல் அறிந்தேன் 

 இருந்தாலும் பாம்பு தலைவரேனோ கோபத்தில் இருக்கிறார்

 உலக பாம்புகள்  தினம் பற்றி  கதைக்கவில்லை என்று

 நீங்கள் தான்  உலகளந்த பெருமாளை போல்  கவிதையால்

 புவி  அளந்துள்ளீரே

 ஆதிசேஷனை எப்படியோ அமைதிப்படுத்துங்கள்!


ஓ !!இப்போது அறிந்தேன் பூமி தினத்தன்று உங்கள் காதலியை மாமன் மகள் போல்  நேசிக்க சொன்னதன்  அர்த்தம்

 இல்லையென்றால் பயமுறுத்த

 குறும் பிசாசு ஏவினீர் அலைபேசி மூலம்!


 உங்கள் வரிகளிலேயே குழந்தை பாரீர்

  அழித்த பொட்டுக்காரி ஆத்தாவுக்கு  துணையாம்

 அப்பனை அடித்துப் போனது சாராய அலையாம்!

 என்னே அவல நிலையாம்!


 புலவனைப் போல் பொய்யுரைக்கா உங்கள் கண்ணாடியும்

 கொல்லையில் இருந்து குரல் கொடுக்கும் முருங்கை மரமும்

 பல வகை சுவாரசியங்கள்!


 பகையாய் பார்க்காதீர் என்பார் கொசுவை

 டெங்கு மலேரியா பற்றி  அறியா  சிசு போல்!


 உலக கவிதை நாளில் படைத்தது அவியல்

 தள்ளாடும் தாய் மொழியோ  தங்கிலீஷில் புகல்


 இனி யாரையும் வையாதீர்

 பெரிய சுண்டைக்காய் என்று

 பற்பல  பயனாம்  படித்தறியுங்கள்!


 மூங்கில் தினம் பற்றி கூறாமல் இருப்பாரா  உலகளந்த  கண்ணன்

  சுடச்சுட காப்பியும் உண்டாம்

 படித்து மகிழுங்கள்  ஆறும் முன்னே!


- ஸ்ரீவித்யா

****************************************************************************

பாரதியின் வைர வரிகள் தந்த கதைகள்





நூல்:  பாரதியின் வைர வரிகள் தந்த கதைகள்

ஆசிரியர்: ஶ்ரீவி

***********************************************

அணிந்துரை

நண்பர் ஸ்ரீவி என் மீது கொண்ட அன்பினால், அவர் "பாரதியின் வைர வரிகள் தந்த கதைகள்" எனத் தலைப்பிட்டு எழுதிய இருபத்தைந்து கதைகளுக்கு ஒரு முன்னுரை எழுதுமாறு கேட்டார். அதற்குத் தகுதி எனக்கு உண்டா என்ற ஐயம் எனக்குள் எழுந்தாலும், அவர் என் மீது வைத்த நம்பிக்கை வீண்போகக் கூடாது என்ற எண்ணமே இந்த முன்னுரையை எழுதத் தோன்றுகிறது.

 

முதலில் திரு ஸ்ரீவி எழுதிய ஒவ்வொரு கதையைப் பற்றி, நீங்கள் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் நோக்கத்துடன், ஓரிரு வரிகளில் அறிமுகப்படுத்திவிட்டு, பின் இக்கதைகளின் அடியோட்டமாக அமைந்துள்ள கருத்துகள் மற்றும் பொதுவான அடிப்படைகள் பற்றிப் பார்க்கலாம்.

 

கதை 1:

இக்கதை ஒரு மறைக்கப்பட்ட வரலாற்று உண்மையை உயிர்ப்பிக்க முயலும் சிறந்த முயற்சி. ஒரு கிராமப்பெண் எப்படி ஒரு சமூக நீதிக்காக போராடும் போராளியாக மாறுகிறாள் என்பதையும், அச்சமின்றி செயல் படுபவர்களை எல்லாம் அரசியல் மற்றும் அதிகாரம் உடையோர் எப்படி அடக்க முயல்கிறார்கள் என்பதையும் திறம்பட வெளிப்படுத்துகிறது. மிகவும் வலுவான, தனித்துவமான ஒரு கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டுள்ளது. கதையின் மொழி சரளமாகவும், ஓரளவு பழமையான தமிழ் நயத்துடன் இருக்கிறது. கிராமத்தின் அமைப்பு, தெய்வங்கள் மற்றும் பாரம்பரிய நடைமுறைகள் போன்ற தமிழ்க் கலாச்சாரக் கூறுகள் கதையை ஒரு குறிப்பிட்ட சூழலில் நிலைநிறுத்துகின்றன. பிரிட்டிஷ் அடக்குமுறை மற்றும் விடுதலைப் போராட்டம் போன்ற உண்மையான வரலாற்று நிகழ்வுகளின் குறிப்புகள் கதைக்கு நம்பகத்தன்மையையும் ஆழத்தையும் சேர்க்கின்றன.

 

கதை 2:

கதையின் முதல் இரண்டு வரிகளிலேயே சித்திரக் குளத்தின் வறட்சி, அந்தச் சிற்றூர் நீரின்மையால் படும் பாடுகளை தெரியப்படுத்துகிறார்அந்த ஊரில் பிறந்த ஒருவரது கொடையுள்ளமும்ஏழையாக இருந்தாலும், ஊருக்கு நன்மை செய்ய வேண்டும் என்று துடிக்கும் ஓர் இளைஞரின் கனவுகளும் இணையும் போது ஏற்படும் நல்விளைவுகளை இந்தக் கதை  கூறுகிறது. இது ஒரு ஊரின் சவால்கள், ஒரு மனிதனின் விடாமுயற்சி, மற்றும் அவர்களின் இணைந்த முயற்சிகள் எப்படி சமூக வளர்ச்சிக்கு வழிவகுக்கும் விதத்தை அழகாக விவரிக்கிறது.

 

கதை 3:

மனித வாழ்க்கையின் இயல்பே போராட்டம். சிலர் அதனை வெற்றி கொள்ள, சிலர் அதற்குள் அடங்கி விடுகின்றனர்இக்கதையின்  நாயகனின், வறுமை மற்றும் நெருக்கடிகளுக்கு இடையேயும் தடுமாற்றத்தை புறந்தள்ளி நேர்மையைக் கடைப்பிடிக்கும் மன உறுதியை  சித்தரிக்கிறது. நாம் அன்றாடம் சந்திக்கும், ஓர் ஓரப்பார்வையில் நாம் கடந்து செல்லும் எளியவர்கள் பலரது வாழ்க்கைப் போராட்டங்களுக்கு நெருங்கிய கதைக்களம், கொரோனா காலத்தின் பொருளாதார நெருக்கடிகள், குடும்பத்தின் பிரச்சினைகள், குழந்தைகளின் கல்விச் செலவுகள் போன்றவை மிக இயல்பாக இக்கதையில் வெளிப்பட்டிருக்கின்றன. இவை பலரின் வாழ்க்கையில் நடக்கக்கூடியவை என்பதால், நாம் இக்கதையுடன் எளிதாக உறவு கொள்ள முடியும்.

 

கதை 4:

நீர் மேலாண்மை, மணல் கொள்ளை, அரசு மற்றும் கோயில் நிலங்களை மீட்டல் என்ற கருதுகோள்களின் அடிப்படையில் இந்தக் கதை படைக்கப் பட்டிருக்கிறது. கதையின் ஆரம்பம், பிரம்மதேசம் பற்றிய வரலாற்று விவரங்களுடன் தொடங்கி, பின்னர் தற்போதைய சீரழிவைச் சொல்லி, இறுதியில் அந்த சீரழிவை எப்படி சரிசெய்கிறார்கள் என்பதைக் கூறுவது, ஒரு நல்ல கட்டமைப்பு. முயற்சி திருவினையாக்கும் என்பதற்கும், ஆசிரியர் கூற்றுப்படி "உள்ளம் நல்லதையே நினைத்தால், சிந்தனைகள் நல்லவைகளாக இருந்தால், செயல்கள் நல்லதாக அமைந்தால் எல்லாம் நல்லதாக நடக்கும்" என்பதை விளக்கும் விதமாகவும் இந்தக் கதை புனையப்பட்டுள்ளதுகுளங்கள், ஏரிகள் போன்ற நீர்நிலைகள் நமது வாழ்வாதாரத்திற்கு மட்டுமல்ல, பண்பாட்டு மற்றும் சமூக அடையாளத்திற்கும் முக்கியமானவை என்பதை இக்கதை வலியுறுத்துகிறது. கதை நெல்லை மாவட்டத்தின் பிரம்மதேசம் என்ற ஊரைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இது கதைக்கு ஒரு புவியியல் மற்றும் வரலாற்று ஆழத்தையும், நம்பகத்தன்மையும் தருகிறது.

 

கதை 5:

கதையின் துவக்கத்தில் பாரதியின் தீர்க்கதரிசனத்தைப் பற்றிய விவாதம், பின்னர் ஒரு மனிதனின் எளிமை, அன்பு மற்றும் பரிவு ஆகியவற்றைப் பற்றிய ஆராய்ச்சி என மாறுகிறது. பாரதியாரின் சொற்களான "யார்க்கும் எளியனாய்.. யார்க்கும் அன்பனாய்..  யார்க்கும் இனியனாய்.." என்பது போல் ஒருவர் இருக்க முடியுமா என்று ஆராய்கிறது இக்கதை. பாரதி சொன்ன மிகைச் சொற்கள் இவை என்று நினைக்கின்ற, வாதம் செய்கின்றவர் பேராசிரியர் கில்பர்ட். ஆதர்ஷ் என்ற பொருத்தமான பெயரைக் கொண்ட இளைஞர் ஒருவரைச் சந்தித்தவுடன் தான் இப்படியும் சிலர் இருக்கின்றனர் என்றத் தெளிவு அவருக்கு வருகிறது. ஆதர்ஷ் போன்ற நல்மாந்தரைப் பற்றித் தான் கணியன் பூங்குன்றனார் "உண்டாலம்ம இவ்வுலகம்" என்றும், பாரதியார் "யார்க்கும் எளியனாய்.. யார்க்கும் அன்பனாய்..  யார்க்கும் இனியனாய்.."  என்றும், "நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை" என்று மூதுரையில் அவ்வையாரும் சொல்லிச் சென்றார்கள் போலும். இக்கதை இந்தக் கருத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.

 

கதை 6:

இராணுவத்தில் எதிரிகளை வீழ்த்திய போர்வீரன் புற்றுநோய் எனும் மரணச் சுழலில் சிக்கியபோது நவீன மருத்துவம் அவரை குணப்படுத்த இயலாது என்று கைதூக்கும்போது, ஒரு சித்தரின் பரிகாரத்தின் மூலம் அவர் உயிர்த்தெழுவது கதையின் மையப்புள்ளியாக இருக்கிறது. இக்கதை, மருத்துவத்தின் எல்லைகளை மீறி, ஆன்மீகத்தின் மூலம் குணமடையும் ஒரு மனிதனின் அனுபவத்தை விவரிக்கிறதுநவீன மருத்துவ அறிவுக்கும் பாரம்பரிய சித்த மருத்துவத்திற்கும் இடையே ஒரு விரிவான விவாதத்தைக் கிளப்புகிறது. இது வெறும் நம்பிக்கையா, அண்டத்திற்கும் உடலுக்கும் இடையே உள்ள மர்ம இணைப்புகளாஎன்பதே அந்த விவாதப் பொருள். கதையின் சில பகுதிகள் மிகவும் கற்பனையாகவும், நம்பத்தகாததாகவும் தோன்றலாம். சித்தரின் திடீர்த் தோற்றமும், ராவின் குணமடைதலும் சிலருக்கு நம்பிக்கைக்கு அப்பாற்பட்டதாகத் தோன்றலாம். ஆனால், இக்கதையின் முக்கிய நோக்கம், மருத்துவம் மற்றும் ஆன்மீகத்தின் இடைவெளியில் நம்பிக்கையின் சக்தியை வலியுறுத்துவதாகும்.

 

கதை 7:

இந்தச்  சிறுகதை, ஒரு கால்பந்து போட்டியின் பரபரப்பை மட்டுமல்ல, வாழ்க்கையில்  வெற்றி கொள்ளும் வழியை  விளக்கும் ஒரு சக்திவாய்ந்த செய்தியையும் கொண்டு வருகிறதுஇக்கதை, வெறும் விளையாட்டு வெற்றியைப் பற்றியது அல்ல. இதுவே ஒரு நம்பிக்கையின்மை, வீண் பயங்கள், எதிர்மறை எண்ணங்கள் தோன்றாத தான் செய்யும். அவற்றை மீறி வெற்றிபெறுவது எப்படி என்பதை உணர்த்துகிறது. முக்கியமாக, நமக்குள் இருக்கும் சந்தேகத்தையும் பயத்தையும் நீக்கிவிட்டால், எதையும் சாதிக்க முடியும் என்பதே கதையின் வாழ்வியல் செய்தி.

 

கதை 8:

இரண்டு மகளிரைப் பெற்ற தந்தை, அவர்கள் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்று மருகுவது இயல்பு தான். அதே சமயம், தன்னை மிகவும் நம்பி நிலத்தைக் குத்தகைக்கு விட்டிருப்பவரிடம் பணம் கேட்கலாம் என்று அறிவுரை கூறும் உறவினரது பேச்சைக் கேட்பதா என்ற குழப்பமும் எழுகிறது. அதற்கு அவரது பெண்மக்கள் கூறும் தீர்வு என்ன, அவரது பெண்களின் வாழ்வுக்கு வழி கிடைத்ததா என்ற முடிச்சுகளைக்  கொண்ட கதை. இக்கதை, மரபு மற்றும் நேர்மை, அறம் போன்ற மதிப்புகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.

 

கதை 9:

ஒரு கிராமத்தின் அடையாளமாக விளங்கும் கதை சொல்லித் தாத்தா கதையின் மையப்புள்ளி. 1950களில் கதையூரார் பட்டிணம் கிராமத்தில் வாழ்ந்த அவரின் பெயர் கூட மக்களுக்குத் தெரியவில்லை. அவரது அறிமுகம் நன்கு அமைந்திருக்கிறது. அந்தக் கதைசொல்லித் தாத்தாவின் கதை சொல்லும் திறனை மையமாகக் கொண்டு, இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகத்தையும், அவர்கள் பட்ட பாடுகளையும் விவரிக்கிறது. கதைசொல்லித் தாத்தா, தனது கதைகளின் மூலம் ஊர்மக்களுக்கு விடுதலைப் போராட்டத்தின் முக்கியத்துவத்தையும், அதில் ஈடுபட்ட வீரர்களின் தியாகங்களையும் உணர்த்துகிறார். நமது தாத் தாக்கள், பாட்டிகள் நமக்கு விட்டுச் சென்ற கதை சொல்லும் பாரம்பரியத்தைக் கொண்டாடும் கதை இது.

 

கதை 10:

இத்தொகுப்பில் இதுவரை பார்த்த கதைகளில் இருந்து சிறிது மாறுபட்ட கதை. விளையாட்டு என்பது தன்னம்பிக்கை, ஒழுக்கம், நெறிமுறை போன்ற உயரிய பண்புகளின் ஒரு வெளிப்பாடு. இக்கதை, விளையாட்டு உலகின் மறுபக்கத்தை, வெளிச்ச மேடைகளுக்கு அடியில் மறைந்து கிடக்கும் இருண்ட பக்கங்களை வெளியே கொண்டு வருகிறது. கிரிக்கெட் என்ற விளையாட்டு, திறமை, உழைப்பு மற்றும் நேர்மை என்பவற்றின் மூலம் வெற்றியை அடையும் ஒரு வாய்ப்பாக இருக்க வேண்டும். ஆனால், இக்கதையில் அந்த விளையாட்டில் மறைந்துள்ள உள்ளடி வேலைகள், லஞ்சம், குழு மனப்பான்மை, பரிந்துரை, அரசியல், சூழ்ச்சி மற்றும் போதைப் பழக்கம் போன்ற இருண்ட பக்கங்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன. மேலும், மற்ற கதைகளைப் போல அல்லாமல், ஒரு சிறிய கேள்விக்குறியுடன் முடிகிறது இக்கதை.

 

கதை 11:

இந்தச் சிறுகதை திருமண மண்டபத்தில் ஆரம்பித்து, இசை கலைஞர்களின் உலகிற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. கதையின் மையக் கருவாக ஒரு சிறுவன் விளங்குகிறான். திருமண நிகழ்வின் பரபரப்பில், அவன் ஒரு சிறிய, ஆனால் நேர்மையான செயலில் ஈடுபடுகிறான். ஆனால், அவன் நேர்மையான செயலுக்கு நன்றி சொல்லவில்லை என்பது மட்டுமல்ல அவன் மீதே தவறாகக் குற்றம் சாற்றும் நிலையும் ஏற்படுகிறது. இது வாசகர்களுக்கு, சிறிய மனிதர்களின் பெரிய தியாகங்களை புரிந்து கொள்ளும் வாய்ப்பாக இருக்கும்.

 

கதை 12:

சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பரபரப்பு, அங்குள்ள மனிதர்களின் அவசரம், ஆதரவற்ற சிறார்களின் வாழ்க்கை என்று ஆரம்பிக்கும் கதை, உழைப்பும், திறமையும் இருந்தால், முன்னேறி விடலாம் என்ற தன்னம்பிக்கை செய்தியை சென்னை  புகைவண்டி நிலயத்தில் ஆதரவின்றி விடப்பட்ட ஒரு சிறுவனான நாகராஜனின் வாழ்க்கைப் பயணத்தின் வழியாக சொல்கிறது. தனது உழைப்பால் கடைக்குத் துணையாகி, பிறருக்குத் துணையாகி, தனது வாழ்க்கையை நேர்மையான, மேன்மையான பாதையில் அமைத்துக்கொள்ளும் நாகுவின் மாறுபட்ட பயணம் தான் இந்தக் கதையின் மையக்கருத்து.

 

கதை 13:

இக்கதையில் வரும் சிவனாண்டி மெஸ் என்பது வெறும் உணவகம் மட்டுமல்ல, உணவுப் பாரம்பரியத்திற்கும், பண்பாட்டுக்கும்கடமைக்கும் ஒரு மறுவடிவம் ஆகிறது. அது மட்டுமல்ல. பணமே குறியாக வாழும் உலகத்தில், செய்யும் தொழிலில் ஈடுபாடும், செய்நேர்த்தியும் இருந்தால், தொழில் மென்மேலும் வளர்வது தானாக நிகழும் என்ற உண்மையை எடுத்துக் கூறும் கதை இது. சேர்ந்த பணம் பெட்டியில் தூங்காமல், ஊருக்குப் பயன்பட்டால் நல்லது என்ற சமூகப் பார்வையும் உள்ள கதை. உணவு வழங்குவதை வெறும் வணிகமாகக் கருதாமல், ஒரு கலாச்சாரப் பணியாக மாற்றி, பலருக்கு வாழ்வாதாரமும் கல்வியும் அளிக்கிற பணி, கோவிலில் உள்ள சிவனைப் போலவே நகரின் பெருமையாக மிளிர்கிறது.

 

கதை 14:

இக்கதை, சமூக நீதி மற்றும் கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்ட ஒரு கதையாக இருக்கிறது. இரவில் விழுந்து விழித்துக் கொண்டிருக்கும் விவசாயக் கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, கல்வி என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை விளக்குகிறது. மேலும், வறுமை எந்த அளவுக்கு கல்வியைத் தொலைக்கும் என்று சுட்டிக்காட்டுவதோடு, சமூக ஒற்றுமையின் சக்தியையும் வெளிப்படுத்துகிறது

 

கதை 15:

இந்தச் சிறுகதை, 19ஆம் நூற்றாண்டின் பஞ்ச காலத்தின்போது நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. கொடும் பஞ்சக் காலத்தில், குஞ்சரம்மா என்ற கணிகையின் வீட்டு அடுப்பு 'அணையா அடுப்பாக' ஊரின் பசியை ஆற்றியது. அவரின் கடைசிக் காசு வரை செலவழித்து, மதுரைப் பகுதியில் பல ஆயிரம் உயிர்களைக் காப்பாற்றி, அவ்வூர் மக்கள் அவரை தெய்வமாகக் கொண்டாடும் நிலைக்கு உயர்ந்த ஒரு பெண்ணின் கதை. அதனாலேயே, அவர் வாழக்கை மனிதாபிமானத்தின் உன்னதமான எடுத்துக்காட்டாக  விளங்குகிறது.

 

கதை 16:

இந்தக் கதையின் நாயகி கயல்விழி. அவளது தந்தை பெயர் ரஹ்மத்துல்லா. வளர்ப்புத் தந்தை அல்ல. உண்மையான தந்தை. கயல்விழி தனது செவிலியர் கடமையில் வழுவாது, மிகுந்த அர்ப்பணிப்புடன் உதவி செய்யும் சிறுவன் பெயர் இம்மானுவேல். மத நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இக்கதை மாந்தர்கள் மதத்தால் வேறுபட்டிருக்கிறார்கள். ஆனால், அன்பால், மனித நேயத்தால் இணைந்திருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை, கருணை, பரிவு, மத நல்லிணக்கம் ஆகியவற்றின் பிரதிபலிப்பாக இக்கதை இருக்கிறது. கயல்விழியின் இனிய பண்புகள், அவளது சேவை மனப்பான்மை, மற்றும் அவள் சுற்றியுள்ளவர்களுக்கு அளிக்கும் ஆறுதல் இக்கதையின் மையக் கருவாகும்.

 

கதை 17:

ஒரு கல்லூரியின் சிற்றுண்டிச்சாலை மேலாளராக  இருக்கும் சுரேந்திர மேனன், பணம் சம்பந்தமான விஷயங்களில் கடுமையாக இருந்தாலும், பொருளாதாரத்தில் சிக்கல் அடைந்தவர்களுக்கு தாராளமாக உதவுகின்றார். மாணவர்கள் மட்டுமல்ல, பேராசிரியர்களுக்கும் தேவை அறிந்து அவர் துணை நிற்பது, அவரை ஒரு சிறந்த மனிதராகவும், கருணை மிக்கவராகவும் காட்டுகிறது. மனஅழுத்தத்தில் இருக்கும் புதிய கணிதவியல் பேராசிரியரான ரவீந்திரனின் நிலையை உணர்ந்து, அவருக்கு உகந்த தீர்வு அளித்து, அவரை வாழ்க்கையில் உற்சாகத்துடன் செயல்பட வைக்கும் மேனனின் செயல்பாடு இக்கதையின் கரு.

 

கதை 18 :

இந்த சிறுகதை, ஒரு வேலை தேடும் இளைஞனின் வாழ்க்கைப் பயணத்தை மையமாகக் கொண்டு பயணிக்கிறது. இளஞ்செழியன், வேலைக்காக பல இடங்களில் அலைந்து, தனியார் நிறுவனமொன்றில் வேலை கிடைக்கப் போகிறது என்று நம்பிய நிலையில், கடைசி நிமிடத்தில் அதுவும் கைகூடாத நிலைக்கு சென்று விடுகிறான். வாழ்க்கையின் பிரச்சினைகள் அவனை வாட்டுகின்றன. ஆனால், அதே போல வேலை கிடைக்காமல் அல்லாடும்  ஃப்ரெட்ரிக்ஸுடன் சேர்ந்து அவன் வாழ்க்கையைப் புதுமையான கோணத்தில் பார்க்கத் தொடங்குகிறான். அதன் விளைவு என்ன என்பது தான் இக்கதையின் மையம்.

 

கதை 19:

தான் தேர்ந்தெடுத்த விளையாட்டுக் களத்தில் முடிசூடா மன்னனாக விளங்கிய ஒரு விளையாட்டு வீரனுடைய வாழ்வின் குறுக்குவெட்டு சித்தரிப்பு இக்கதை. உண்மை நிகழ்வுகளின் கோர்வையாக அமைந்துள்ளது. ஒரு விளையாட்டு வீரனாக மட்டுமின்றி நிறவெறிக் கொள்கைகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி, அதனால் அரசின் வெறுப்புக்கு ஆளான நிலையிலும், தன் கொள்கையில் எந்த சமரசமும் இல்லாமல் தன் வாழ்க்கையை வாழ்ந்த ஒரு சமூகப் போராளியின் கதை.

 

கதை 20:

"வீழ்வேன் என்று நினைத்தாயோ" என்ற தலைப்பு எழுப்பும் கேள்வியை கதையின் நாயகி லிஸா ஸ்தலேகர் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் மௌனமாகவே கேட்டிருக்கலாம். பிறந்த உடனே, பூனா நகரில் குப்பைத்தொட்டியில் விடப்பட்ட ஒரு பெண் குழந்தை, தத்தெடுக்கப்பட்டு உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மேடையில் வெற்றி கொடி நாட்டும் பயணம், இக்கதையின் கரு. கிரிக்கெட்டின் சாதனையாளர்களில் ஒருவரான கவாஸ்கர் பிறந்த மருத்துவமனையில் ஒரு ஏழை மீனவக் குழந்தையுடன் தவறுதலாக இடம் மாற்றப் பெற்றார். கவாஸ்கரின் மாமா அதைக் கவனித்து சரி செய்தார் என்று கவாஸ்கரே பதிவு செய்துள்ளார். கவாஸ்கர் ஒரு மீனவக் குழந்தையாக வளர்ந்து இருந்தால், இத்தகைய உயரங்களை எட்டியிருப்பாரா என்ற கேள்வி எழுகிறது. அந்தக் கேள்வியை இக் கதை, உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில், மறுபடியும் எழுப்புகிறது.

 

கதை 21:

தனது வாழக்கை துயர் மிக்கதாகவும் வறுமையின் பிடியில் பரிதவித்ததாகவும் கூறிய இக்கதையின் நாயகி, சிறார்கள் முதல் முதிர்ந்தவர்கள் படித்து மகிழ்ந்த ஹாரி பாட்டர் நாவல்களின் ஆசிரியர் ஜே கே  ரௌலிங். அவரது வாழக்கை வரலாற்றை இக்கதை சுருக்கமாகக் கூறுகிறது. குழந்தைப் பருவத்தில் கதைகள் எழுதத் தொடங்கி, பல இன்னல்களை எதிர்கொண்டு, கடைசியில் உலகம் கவனிக்கும் ஒரு சிறந்த எழுத்தாளராக உருவாகியுள்ள விதம் இதில் சித்தரிக்கப்படுகிறது

 

கதை 22:

ஒரு குடும்பத்தின் தரும வழக்கத்தையும், மத பக்தியையும் அடிப்படையாகக் கொண்டு, வாழ்க்கையின் உண்மையான பொருள் பற்றிய ஒரு தேடலாக நகர்கிறது இக்கதை. குணாளன் என்பவரும் அவரது குடும்பமும் மகா கும்பமேளாவிற்காக காரைக்குடியிலிருந்து வாரணாசிக்குப் புறப்படுகிறார்கள். ஆனால் இந்தப் பயணம் அவர்களுக்குப் பல சவால்களை உருவாக்குகிறது. நெரிசல், பொருளாதார சிக்கல்கள், மதத்துடன் பின்னிப் பிணைந்த வணிகமயமான சூழ்நிலைகள் போன்றவை அவர்களை வருத்துகின்றன. இந்தச் சிக்கல்களை எதிர்கொள்ளும் போதே, அவர்கள் ஓர் எளிய குடும்பத்தை சந்திக்கிறார்கள். அந்தக் குடும்பம் பொருளாதாரத்தில் ஏழ்மையாக இருந்தாலும், அவர்கள் கொண்டிருந்த மன நிறைவு மற்றும் பக்தி குணாளனுக்கும் அவரது மனைவிக்கும் ஒரு புதிய பார்வையை உருவாக்குகிறது. புனிதப் பயணம் என்பதுஆன்மிகத் தேடலை நோக்கிய ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால், நம்முடைய சமுதாயம் அதை ஒரு பொருளாதாரச் சூழலில் ஆழ்த்தி விட்டதை இக்கதையில் காட்டுகிறது. சிறிய நகைச்சுவை தொடர்களும் கதைக்கு அழகு சேர்க்கின்றன. மனிதனின் உண்மையான செல்வம் என்பது பணம் அல்ல, மன நிறைவு மற்றும் மகிழ்ச்சி என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.

 

கதை 23:

மகாத்மா காந்தி இந்தியாவுக்கு வந்து, விடுதலை இயக்கத்தை வழி நடத்தி, இந்தியாவுக்கு விடுதலை பெற்றுத்தருமுன், தென்னாப்ரிக்காவில் அவர் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு, தன் உயிரையே இழந்த பதினாறு வயது தமிழ்ச் சிறுமியின் கதை இது. தென்னாப்பிரிக்காவில் நிலவிய நிறவெறிக் கொள்கைகள், அங்கு வாழ்ந்த இந்தியர்கள் சந்தித்த சிக்கல்கள், மற்றும் அவர்களது எதிர்ப்புப் போராட்டங்கள் இவற்றின் பின்புலத்தில் இக்கதை நடக்கிறது. தனது சிறிய வயதில் வீரம் மிக்க பேச்சுக்களாலும், செயல்களாலும், உள்ள உறுதியாலும் மகாத்மா காந்தியின் மனதைக் கவர்ந்தவர் தில்லையாடி வள்ளியம்மை. வரலாற்றில் பதிவு செய்யப்படாமல், பதிவு செய்யப்பட்டாலும் ஓர் அடிக்குறிப்பாக  மட்டுமே இடம் பெற்றவர்களில்  ஒருவரது உண்மை வாழக்கைக் கதை இது. ஆங்கிலேயருக்கு அடிவருடியாக இருந்த சிலர் இன்று ஏற்றம் பெற்று விளங்கும் நிலையில், தில்லையாடி வள்ளியம்மை போன்றோரை நாம் நினவு கூர்வது நம் கடமை.

 

கதை 24:

இந்தக் கதை, நீலகிரி மாவட்டத்திலுள்ள அழகிய மலை சிற்றூரான பெட்டாதொடியா பற்றியது. இங்கு சிறிய ஆறு ஒருபுறம் அம்மக்களுக்கு உயிர்நாடியாக விளங்கினாலும், மறுபுறம் பெருவெள்ளம் ஏற்படும் போது அழிவையும் விளைவிக்கிறது. இந்தக் சிற்றூரில் வசிக்கும் வசும்பத்தி என்ற எட்டு வயது சிறுமி, தனது சிற்றூரின் நிலையை மாற்றுவதற்காக முயல்வதும், அதில் வெற்றி பெறுவதும் இக்கதையின் கரு. பெட்டாதொடியா சிற்றூரின் சூழல் மற்றும் இயற்கை விவரிப்புகள் அருமையாக வடிக்கப்பட்டுள்ளன. ஆங்கிலேயர்களின் காலனிய ஆட்சிக் காலத்தில் உருவான சிற்றூரின் வரலாறு, அதன் இயற்கை எழில், மற்றும் அடிக்கடி ஏற்படும் வெள்ளப் பிரச்சினைகள் விரிவாக காட்டப்பட்டுள்ளன.

 

கதை 25:

இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள "உண்மை நின்றிட வேண்டும்" தலைப்பில் உள்ள இக்கதை, நவீன துப்பறியும் கதைகளுக்கேற்ப சமூக சிக்கல்களையும், அரசியல் வலைப்பின்னல்களையும், அவற்றின் பின்னிருக்கும் ஊழல்களையும், அவ்வூழல்களுக்கு ஊற்றுக்கண்ணாக இருக்கும் முதலாளிகளையும் ஒருங்கிணைத்துள்ள பரபரப்பான மர்மங்கள் பற்றிய கதையாகும். சமூகநலப் போராளி சந்தோஷ்குமார் மர்மமான முறையில் இறந்து போவதிலிருந்து தொடங்கி, ஒரு தனியார் துப்பறியும் குழு அதன் பின்னணியில் இருக்கும் உண்மையை கண்டுபிடித்து உண்மையை வெளிக்கொணரும் முயற்சியே கதையின் மையக்கருத்து.

 

இதுவரை, நாம் திரு ஸ்ரீவியின் கதைகளின் சுருக்கத்தைப் பார்த்தோம். இனி இக்கதைகளின் நிறை மற்றும் குறைகளைப் பார்ப்போம்.

 

கதை சொல்லுதல் ஒரு கலையாக மட்டுமின்றி, சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய சக்தியாகவும் விளங்க வேண்டும் என்ற ஒரு கருத்தோட்டமும், அதற்கு நேர் எதிராக "கலை என்பது கலைக்காகவே" என்ற கருத்தோட்டமும் காலங்காலமாக இருந்து வந்திருக்கின்றன. கலை என்பது நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களின், சமூகத்தின், வாழ்வைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி. உண்மையைத் தேடுவதே, அந்த உண்மையை உரக்கச் சொல்வதே கலையின் நோக்கம்; தீர்வு கூறுவதல்ல என்ற இடைநிலைப் பார்வையும் உண்டு. திரு ஸ்ரீவியின் கதைகளின் நோக்கம் மனிதநேயம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு. மேலும், முயன்றால் இந்தச் சமூகத்தின் அவலங்களை மாற்றலாம் என்பதுவும் ஒரு மையப்புள்ளியாக அமைகிறது இக்கதைகளில். அனைத்துக் கதைகளிலும், கதை நாயகர்கள், நாயகிகள் உயரிய எண்ணமும், மன உறுதியும் கொண்டவர்கள். சிறுமை கண்டு பொங்குபவர்கள். பொங்குவதோடு நிற்காமல், மாற்றத்துக்காக போராடி அதில் வெற்றியும் காண்பவர்கள். இக்கதைகளைப் படிக்கும் அனைவரும், நம்மால் இக்கதைகளின் நாயகர்கள், நாயகிகள் போல இருக்க முடியாதா என்ற எண்ணம் எழுந்து, தங்களைச் சுற்றியுள்ள சமூகத்தில் ஒரு சிறிய அல்லது பெரிய நல்மாற்றத்தைக் கொண்டு வந்தால், அதுவே இக்கதைகளின், ஆசிரியரின் மிகப் பெரிய வெற்றி என்று கொள்ளலாம். அவ்வாறே ஆகுக என்று நாமும் விழைவோம்; வாழ்த்துவோம்.

 

திரு மு வரதராசனாரின் கதைகளைப் பற்றிச் சொல்லும் போது, ஒருவர் சொன்னார் "மு. வவின் கதை மாந்தர்கள் தரையில் நிற்பதில்லை. தரைக்கு மேல் அரை அடி உயரத்தில் நிற்கிறார்கள்". திரு ஸ்ரீவியின் கதை மாந்தர்களுக்கும் இது பொருந்தும்இது குறையா அல்லது நிறையா என்பது அவரவர் மானப்பக்குவத்தைப் பொறுத்தது. தருமன் ஊர் சுற்றி வந்து "ஊரில் ஒரு கெட்டவர் கூட இல்லை" என்றானாம். துரியன்  ஊர் சுற்றி வந்து "ஊரில் ஒரு நல்லவர் கூட இல்லை" என்றானாம். அதே போல, இக்கதை மாந்தர்கள் திரு ஸ்ரீவி அவர்களின் ஆழ்ந்த நம்பிக்கைகளையும், அவர் ஈடுபட்ட இயக்கத்தின் போராட்டக் குணத்தையும், சமூகத்தை மேம்படுத்த வேண்டும் என்ற அந்த இயக்கத்தின் வேட்கையையும்  பிரதிபலிக்கிறார்கள் என்று கொள்வோம். நம்பிக்கை தானே வாழ்க்கை! இக்கதைகள் அனைத்தும் முயன்றால் முடியாதது இல்லை; நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும் என்றே திரும்பத் திரும்ப சொல்கின்றனநம்பிக்கையை விதைக்கின்றன.

 

இக்கதைகளின் இன்னொரு பொதுவான அம்சம், கதை மாந்தர்களின் அக வாழ்க்கை அறவே இல்லை என்பதுவும். கதைகள் வெளி விவரணைகளாலும், ஆசிரியரின் அவதானிப்பு மற்றும் பார்வைகளாலும் நிரம்பி உள்ளனகதை மாந்தர்களின் குரல், அவர்களது நினைவுகள், ஐயங்கள், சமரசங்கள் போன்ற நிகழ்வுகள் இல்லை என்றே சொல்லிவிடலாம். கதை மாந்தர்கள் அனைவருமே ஒன்று தூய வெள்ளையாக இருக்கிறார்கள் அல்லது மிகக் குறைவான சிலர் தூய கருப்பாக இருக்கிறார்கள். நாம் பார்க்கும் மனிதர்களோ, வெள்ளை, கருப்பு மற்றும் பலவித நிறங்கள் கொண்டவர்களாக இருக்கிறார்கள் தானே?

 

ஆனால், இவை எல்லாம் பெரிய குறைகள் என்று கருத மாட்டேன். காரணம், திரு ஸ்ரீவி இக்கதைகளை எழுதிய நோக்கம் ஒரு உளவியல் நோக்கம் அல்ல; இந்தச் சமூகம் இப்படிச் சீரழிந்து கிடக்கிறதே, அதை மாற்ற வேண்டுமே என்ற ஆதங்கமும், நாம் படைக்கும் கதை மாந்தர்கள் அவற்றைச் செய்து, ஓர் எடுத்துக்கட்டாக இருக்கட்டுமே என்ற நோக்கமும் தான். அந்த நோக்கத்தில் திரு ஸ்ரீவி வெற்றி பெற்றிருக்கிறாரா என்பது, முன்பே சொன்னது போல, இக்கதைகளைப் படிக்கும் ஒவ்வொருவரும் சமூகத்தில் ஒரு சிறிய அல்லது பெரிய நல்மாற்றத்தைக் கொண்டு வருவதில் தான் இருக்கிறது.

 

என் மீது நம்பிக்கை வைத்து இக்கதைகளுக்கு முன்னுரை எழுதச் சொன்ன திரு ஸ்ரீவிக்கு எனது நன்றிகள்.

 

அன்புடன்

இரா சண்முக சுந்தரம்

***********************************************

பாரதியின் வைரவரிகள் தந்த கதைகள்


    நற்றுணையாவது நம் தமிழே

    நற்றமிழ் என்றால் நம் உயிரே


      என்பதை ஒப்புக்குச் சொல்லவில்லை  ஓர் உரையாகச் சொல்லவில்லை உளமாரச் சொல்லி உள்ளீர்கள் என்பதை இந்நூலை வாசிக்கையில் உணர்ந்தேன்.


    எத்துணைக் காதல் தமிழ்மீது பூத்திருந்தால், நித்தம் அந்நினைவோடு, தமிழை நேசிப்போரை எல்லாம் நேசித்து அவர்கள் வாய்மொழி உரைகளை, வைர வரிகளை யாவரும் நுகரவும், எவ்விடத்தும் தமிழர் மாண்பு பரவவும் முழுமூச்சாய் முயன்றிருப்பீர்கள். அதற்காக எத்தனை நூல்களை வாசித்து உள்ளீர்கள்.


       மலர்தேடி  பறந்தோடும் தேனியென வரலாற்று உண்மைகளை, வாழ்வாதாரம் நாடிப் போராடிய சின்னஞ் சிறு வீரச் சிறுமியரின் போராட்டங்களை, என உணர்த்தப்பட வேண்டிய பல உன்னதக் கருத்துத் தேன்துளிகளை கவர்ந்து வர பறந்திருக்கிறீர்கள் பல நூலகங்களாம் அறிவாலயங்களுக்கு என்று வியக்கிறேன்.


         அயராது பாடுபட்டு அளப்பரிய செய்திகளைச் சேகரித்து அழகு தமிழில் வடித்துள்ள உங்கள் படைப்பு கண்டு மலைக்கிறேன்.


         சுதந்திரப் போராட்டத்தில் பெயர் பொறித்த லீலாவதியை,  சித்திரக்குளத்தில் உதித்திருந்த சின்ன வள்ளல் லூர்துவை, அவனால் கவரப்பட்டு அந்த ஊருக்கு உதவிய அறிவழகனை,

என்று நாட்டுப்பற்று கதைகள் ஒருபுறம் என்றால், 


      ராம், செல்வா, ஜான்,மரியா, என்ற துள்ளலும் துடிப்பும் கொண்ட இளைஞர் குழாம், சந்தோஷ் என்ற நல்லுள்ளம் கொண்டவரின் மரணத்தில் உள்ள மர்மங்களைக் கண்டறியும் திகில் கதையும், வசும்பத்தியின் விடாமுயற்சியால் எழுப்பப்பட்ட  டேம்கள் அதிலும் குறிப்பாக வசும்பத்தி-ஜான்ஸன் டேம் பற்றியும்,  தில்லையாடி வள்ளியம்மை பற்றிய உணர்வு பூர்வமான உண்மைக்கதையும்  (இதைச் சொல்ல ஜோகன்ஸ்பர்க் வரையிலும் நம்மைக் கூட்டிச் சென்றதற்கு தனிப் பாராட்டு)


      உளம் தொட்டதென்றால் மிகையில்லை.


      குணாளன் என்ற சாதாரண தள்ளு வண்டி வியாபாரியின் வாயிலாக எத்தனை தத்துவ முத்துகளை உதிர்த்துள்ளீர்கள் வாழ்க்கைப்பாடம் மிக இயல்பாய் கதையோடு ஒன்றி அற்புதமாய் எடுத்தாளப்பட்டுள்ளது. விடாமுயற்சியினால் வென்ற ரௌலிங்,  ஷெனாய் வாசித்த சின்னஞ்சிறு மொட்டு உதிர்த்த சீரிய கருத்துகள் என வரிக்கு வரி ரசிக்கும்படியும் உளம் களிக்கும்படியும் கருத்துக் களஞ்சியமாகத் திகழ்கிறது தங்கள் நூல்.


      இன்னொன்றும் சொல்லவேண்டும். ஆவணங்கள், சான்றுகள், வரலாற்று உண்மைகள் என்ற வரிசையில் அண்டை வீட்டினர் சொன்ன கதைக்கும் வாய்ப்பு வழங்கி உள்ளீர்கள். அதுதான் சற்று தனித்து நிற்கிறது. உடன்படவும் இயலாமல் ஒதுக்கிடவும் இயலாமல் உள்ள ஓர் கருத்தை துணிவுடன் கதையாகப் படைத்துள்ளீர்கள்.


      உங்கள் முயற்சியும், செயல்பாடும் நூல் முழுவதும் விரவிக் கிடக்கிறது வாழ்த்துகள்.


     மைதிலி ராமையா.


  (குறிப்பு- நால்வர் குழு கொலையைக் கண்டறியும் கதையில் சில நெருடல்கள் உள்ளன. இத்தனை தடயங்கள் தண்டவாளத்தில் இவர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை. உண்மையான விசாரணை என்றாலும், மறைக்கப் பார்த்தாலும் தடயங்களை அவர்களே கைப்பற்றி விடுவார்கள் அல்லவா விட்டுச் செல்ல மாட்டார்களே. இது மனதில் பட்டது எனவே உரைத்துள்ளேன். மற்றபடி கதை நகர்வு வெகு சுவாரஸ்யம்.)


~ மைதிலி ராமையா எழுத்தாளர், 

கவிஞர். 

***************************

************************************************

எனது நண்பரும் மகாகவி பாரதி தமிழ்ச்சங்க தலைவரும் ஆகிய திரு ஶ்ரீவியின் புதிய அவதாரம் “*எழுத்தாளர்”*

எழுத்தாளர் திரு ஸ்ரீவி அவர்களது பண்பாட்டு உணர்வும் சமூகப் பொறுப்பும் சேர்ந்த எழுத்துத் தேனீட்டிலிருந்து பிறந்துள்ள இந்தக் கதைத்தொகுப்பு – “*பாரதியின் வைர வரிகள் தந்த கதைகள்”*– எனக்கு முதலில் ஒரு வாசகனாகவே பரவசம் அளித்தது. அதன் பிறகு, இதற்கான முன்னுரை எழுத தூண்டியது “எனக்குத் தகுதி உள்ளதா?” என்ற ஐயம் ஒரு கணம் தோன்றியது. ஆனால், அவர் என்னை நம்பி எழுத்துப்பிழை (proof reading) கண்டறியும் படி கூறி தட்டச்சு பதிப்பை பகிர்ந்தது, இதை எழுதத் தூண்டிய உந்துசக்தியும், என் உள்ளத்தில் நிலைத்துப் போனது.


இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதைகள், பாரதியாரின் சிந்தனைகளுக்கு நேரடி பிரதிபலிப்பாக மட்டும் இல்லாமல், அவற்றை நவீன வாழ்வியல் சூழலில் உயிரூட்டும் முயற்சிகளாகவும் அமைந்துள்ளன. ஒவ்வொரு கதையும் – கிராமத்திலிருந்து நகரம் வரை, வரலாற்றிலிருந்து சாமானியரின் வாழ்வளவுகள் வரை – இந்திய வாழ்க்கையின் பல தரப்புக்களையும் தொட்டுச் செல்லுகின்றன. இதனாலேயே, இவை வாசகரின் மனத்தில் நெஞ்சுறுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.


திரு ஸ்ரீவி அவர்களின் எழுத்தில் உள்ள பெருமை, அவரது கதாபாத்திரங்களில் நம்மைப் போல் தோன்றும் மக்களை வாழ்வாதாரச் சிக்கல்கள், மன உளைச்சல்கள், சமூக உணர்வுகள், மத நல்லிணக்கம், வரலாற்று தேடல்கள் மற்றும் மனித நேயத்தின் விசித்திரத் துளிகள் மூலம் நம்முடன் உரையாடச் செய்கின்றன. கதைகள் பல நேரங்களில் பாரதியின் எண்ணங்களுக்குச் சூழலான கவிஞரின் வீர சொற்களை ஒத்திசைக்கின்றன. “*யார்க்கும் எளியனாய்…யார்க்கும் இனியனாய்…”* என்ற வரிகளின் உயிரோட்டமே, இத்தொகுப்பின் அடித்தளமாக அமைந்துள்ளது.


மகாகவி பாரதியாரின் ஒவ்வொரு வரியையும் உணர்ந்து, அதை வாசகர் வாழ்வுக்குள் ஊற்றுவதாக, சிறப்பாக செயல்பட்டுள்ளார். கற்பனை, வரலாறு, வாழ்க்கை அனுபவம், உணர்ச்சி, சமூக சிந்தனை – இவை அனைத்தும் கூடிய இந்தத் தொகுப்பு, வாசகனை சிந்திக்கவும், உணர்வுபூர்வமாக அனுபவிக்கவும் செய்கிறது.


இது ஒரு கதைத்தொகுப்பாக மட்டுமல்ல; இது ஒரு உணர்வுத் தொடர். பாரதியாரின் பார்வையில், நம்மை மீண்டும் மீண்டும் நோக்க வைக்கும் ஒரு கண்ணாடி.


இத்தொகுப்பைப் படிக்கும்போது, நீங்கள் வாழ்க்கையின் பல பரிமாணங்களையும் பார்க்கலாம். சில கதைகள் உங்கள் கண்ணில் பனித்துளிகளை வரவழைக்கும், சில மனதைக் கசக்கும், சில சிந்திக்க வைக்கும். ஆனால் எல்லா கதைகளும் வாசிக்கத் தூண்டும்.


எனவே, இந்த தொகுப்பை நீங்கள் படிக்கத் தொடங்கும் அந்தச் சின்னக் கணம் – உங்கள் மனதில் நீண்டபொழுதுகள் ஒலிக்கப்போகும் ஒரு சிந்தனைக்குரலாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

********************************************************************

பாரதியின் வைர வரிகள் தந்த கதைகள்- பாகம்-1


ஶ்ரீவீ ஐயாவின் படைப்பு

-------

ஐயாவின்நூலை மதிப்பீடு செய்து விமர்சனம் செய்ய எளியவன் எனக்குத்தகுதி உள்ளதா என்பதே விடை தர இயலாத வினா.


ஆனால்ஒரு படைப்பாசிரியர்  தமது படைப்புகளைப்பற்றிய கருத்துகளை வரவேற்கிறார்- நல்லவை ஊக்குவிக்கும்; அல்லவை திருத்தங்களை,மேற்கொள்ள உதவும், என்பதால் ,

இந்த முயற்சி.


இந்த நூலில் 25 வைரங்கள், அல்ல , அல்ல, வைரவரிக்கதைகள் உள்ளன. மொத்தமாக ,

தமிழ்தாயின் மூக்கில் அணிவிக்கப்பட்ட வைர பேசரி!


கதை கதையாகப்பார்த்து கருத்திடாமல்,  ஒரு முழுமையான பார்வையில் காண முயல்கிறேன்.


கதை சொல்வது, கதை கேட்பது என்பது நம் தமிழர் உணர்வில் ஊறிய ஒன்று.

கதை கேட்டே வளர்ந்த தலைமுறைகள் ஏராளம். 

அதிலும் நல்ல கருத்துகளைப் பொதிந்து கூறும கதைகள் தேனில் தோய்த்த பலாச்சுளைகள் போல. 

 -இங்கும் அப்படியே! 


சுவைத்தேன்; இன்னும்அந்த தமிழ்த்தேன்கனிச்சுவை நாவை விட்டு அகலவில்லை!


பல இடங்களை, நம்நாட்டிலும் வெளி நாட்டிலும்   உள்ள இடங்களை,அழகுபட  விவரித்து, கதைகளின் களங்களாக வைத்தது நல்ல  உத்தி. 

அதிலும் அந்த அந்த இடங்களை, சொல்லோவியமாகத் தீட்டுகின்ற தூரியத்

திறமை அபாரம்.

சென்ட்ரல் ஸ்டேஷன் கண்முன்னால் நிற்கிறது!


இன்றைய சமூகத்துக்குத் தேவையான பல  கருத்துகள்/செய்திகள்/ அறிவுரைகள், பல கதைகளின் மையக் கருத்துகளாக  அமைந்துள்ளன. சிறு கதைகளை, சிறப்புக்கதைகளாக மாற்றுவதே , மையக்கருத்துகளாம். 

இங்கோ, சிறப்போ, சிறப்பு.


நீர் மேலாண்மை, குள சீரமைப்பு போன்ற " நீரின்றி அமையா உலகை "நிலை நாட்ட மூன்று கதைகள். இன்றும் பல குளங்கள்  மீட்கப்பட காத்து இருக்கின்றன.

அதிகாரிகள் மனம் ஈரப்பட வேண்டும். கதைக்கும் மற்றும்கதை விடும் அவர்கள் காதில் இந்தக்கதைகள விழுந்தால், விடியல் கிடைக்கலாம். 


பல கதாபாத்திரங்கள் நல்லவர்களாகவும், ஈர மனம் படைத்தவர்களாகவும் உள்ளனர்.

பாத்திரப்படைப்பில் குற்றமா? 

இல்லை.


நல்ல கருத்துகளை வெளிக்கொணர இம்மாதிரிப் பாத்திரங்கள் தேவை போலும்.


நான் மக்கள்திலகம் அவர்களின்படங்களைப்பார்த்து, இரசித்து வளர்ந்தவன். அவர் இம்மாதிரிப் பாத்திரங்களில்வந்தே மக்கள் மனதில் இடம்

பிடித்தவர். எளிய நலிந்த மக்கள் தாங்களே  தீய சக்திகளுக்கு எதிராகப் போராடி வென்றது போல உணர்வை உண்டாக்கியவர்.


அந்த உணர்வு  இக்கதைகளைப்படிக்கும்போது,

என்க்கும் கிட்டியது.


பல" நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட நெஞ்சும்" கொண்ட வீராங்கனைகளைக் கொண்டாடும்கதைகளும் உண்டு. 


உரிமைப்போராளி தில்லையாடி வள்ளியம்மை  நினைவாக அரசின் எழுமூர் கைத்தறி மாளிகைக்கு அவர் பெயர் இடப்பட்டுள்ளது.


விளயாட்டு வீரர்கள்/ வீராங்கனைகள் முட்டுக்கட்டைகளை

எதிர் நீச்சல்போட்டு தகர்த்து எறிந்த கதைகளும்உண்டு.


ஆன்மீக, மத சம்பந்தமான விழாக்களில் பணம் படைத்தவர்களின் ஆதிக்கம் நமக்கு மிகவும்பழக்கமான ஒன்றுதான். 

அதை ஒரு கதை சுட்டுகிறது.


மகா கும்பமேளா நடந்தது .

ப்ரயாக்ராஜில்;வாரணாசியில் அல்ல. திருத்தம்

 தேவைப்படலாம்.


கதைகள் பல கால கட்டங்களில்

நடை பெறுவதாக அமைக்கப்பட்டுள்ளன.

காலத்திற்கு ஏற்ப சூழ்நிலைகள், பாஷைகள் என விவரித்து இரசவாத வித்தை புரிகிறார் படைப்பாளி.


வேலை தேடுபவர்களின் அவல நிலை,நவீன துப்பு துலக்கும்முறைகள் என காலத்துக்கு ஏற்ற மையக்கருக்களையும் விட்டு வைக்கவில்லை.


இந்நூலில் உள்ள பல கதைகள் குறு நாடகங்களாக நடிக்கவோ, வலையொலியில் படிக்கப்பட்டு பகிரவோ ஏற்றவை.


மொத்தத்தில் புத்தம் புதிய புத்தகம்; புரட்டப் புரட்ட  , படிக்கப் படிக்க ஆவலை அதிகரிக்கும் கதை சொல்லும் திறன்.


இரசித்தேன்; பகிர்ந்தேன்,

யான்பெற்ற இன்பம் பெறுக, நம்" பூர்வ" தமிழ்க்குடிகள், என்று.


- .மோகன்

************************************************************************





மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...