Saturday, August 23, 2025

துண்டுக்கு என்ன விலை?/!

 நற்சுனை 6


துண்டுக்கு என்ன விலை?/!


குளித்து துடைக்க 

குட்டியாய் ஒரு துண்டு..


ஆயிரம் முறை 

யோசித்து

ஆறு ரூபாய்க்கு

வாங்கினார் தாத்தா


ஆறு முறை யோசித்து

அறுபது ரூபாய்க்கு

வாங்கினார் அப்பா


ஆறு நிமிடங்கள்

யோசித்து

அறுநூறு ரூபாய்க்கு

வாங்கினான் மகன்


ஆராயமலே வாங்கப்படுகிறது

ஆயிரம் ரூபாய்க்கு!

மகனின் மகளுக்கு..


விலைவாசி ஏறியதால்  இந்த விலையா?

குடும்பப் பொருளாதாரத்தின் 

வளர் நிலையா?

நாகரீகம் வீசிய  வலையா?


செல்ல மகள் அவள்!

குடும்ப பட்ஜெட்டில் துண்டுக்கு மட்டும் துண்டு விழவில்லையோ!! ??


- சாய்கழல் சங்கீதா

Friday, August 22, 2025

எனக்கு விவரம் தெரிந்த பின் பார்த்த சென்னை:

எனக்கு விவரம் தெரிந்த பின் 

பார்த்த சென்னை:


1967 ஆம் வருடம். 

நான் ஏழாம் வகுப்பு 

படித்துக் கொண்டிருந்தேன்.


 சென்னையில் எக்ஸ்போ 67 என்ற ஒரு உலகப் பொருட்காட்சி. 


அதனைக் காண்பதற்கு என் தந்தை என் அக்கா வீட்டுக்காரருடன் (நாங்கள் அவரை மச்சான் என்று அழைப்போம்) அனுப்பி வைத்தார்.


 மணப்பாறையில் இருந்து தூத்துக்குடி சென்னை விரைவுப் புகைவண்டியில் இரவுப் பயணம். அப்போதெல்லாம் முன் பதிவு செய்யப்பட்ட பெட்டிகள்ஒரு புகைவண்டியில்இரண்டுதான் இருக்கும். 

பதிவில்லாப் பெட்டியில்தான் என் பயணம்.  

எந்த புகைவண்டி நிலையத்தில் ஏறினாலும் உட்கார இடம் கிடைத்துவிடும். 

இரு இருக்கைகளுக்கு 

இடையில் போர்வையை விரித்துக் கீழே படுத்துக் கொள்ளலாம் (வாய்ப்பிருந்தால்).


காலையில் கரி பூசிய முகத்துடன் 

தாம்பரத்தில் இறங்கினோம்.

தாம்பரம் இரயில் நிலையத்தை ஒட்டியே உறவினர் ஒருவர் தங்கி இருந்தார். அவருடன் நாங்களும் 

தங்கினோம். 

அவர் எரிந்த புகைவண்டிக் கரியை ஏலத்தில் எடுத்து வியாபாரம் செய்து வந்தார். எனவே அவருக்கு தாம்பரம் புகைவண்டி நிலையத்தில் மிகுந்த மரியாதை. 

எங்களுக்கு குளிக்க வெந்நீர் இரயில் இஞ்சினில் இருந்து சுடச்சுட இரும்பு வாளியில் தினமும் கிடைத்தது.

குளித்து உறவினர் அளித்த சிற்றுண்டியை அருந்தியதும் 

மின்சார வண்டிப் பயணம்.


பொருட்காட்சி தற்போதைய 

அண்ணா நகரில் நடந்தது.

அன்று அண்ணா நகர் வெறும்

பொட்டல் காடு. 

இப்போதுள்ள அண்ணா நகர் கோபுரம் (டவர்)பொருட்காட்சிக்காக கட்டப்பட்டதாகும். மின்துக்கியில் 

மேலே அழைத்துச் சென்று 

சறுக்கும் படிக்கட்டுகளில் 

கீழே அனுப்பினார்கள்.


"கலாட்டக் கல்யாணம்" படத்தில் வரும் எங்கள் கல்யாணம் கலாட்டாக் கல்யாணம்  பாடல் படமாக்கப் பட்டது 

அந்தப் பொருட்காட்சியில்தான்.


பொருட்காட்சியில் நிறைய அரங்குகள்.  அனைத்தும் இயந்திரங்கள்.

என் இள வயது காரணமாக என்னைக் கவரவில்லை. 


நான் முதன்முதலில் 

தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்தது அங்கிருந்த ஒர் அரங்கில்தான்.  

தொலைக்காட்சிப்பெட்டியில் ஒரு பெண் பரத நாட்டியம் ஆடிக் கொண்டிருந்தார். 

சிறிது நேரம் கழித்ததும் பக்கவாட்டில் இருந்த திரை விலக்கப்பட்டு அந்தப் பெண் எங்கள் எதிரே நிஜமாக மேடையில் ஆடிக் கொண்டிருந்தார். 

அதை ஒளிப்பதிவுக் கருவி மூலம் படம் பிடித்து தொலைக்காட்சியில் 

ஒளி பரப்பிக் கொண்டிருந்தனர்.

கூடியிருந்த நாங்கள் வாய் பிளந்து 

வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தோம். 


அடுத்தடுத்த நாட்களில் விமான நிலையம்,

செத்த காலேஜ் (மியூசியம்),

உயிர் காலேஜ்  (மிருகக்காட்சிசாலை)

(அன்று மிருகக்காட்சிசாலை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் இருந்தது), 

மெரீனா கடற்கரை என்று ஐந்து நாட்கள் ஓடியது தெரியவில்லை.


அன்றைய சென்னைக்கும்

இன்றைய சென்னைக்கும் 

மலைக்கும் மடுவுக்கும் உள்ள

வேறுபாடு.


சென்னையைப் பற்றி எழுத 

எண்ணிய என் பதிவு 

பசுமாட்டைத் தென்னை 

மரத்தில் கட்டிய கதையாக

முடிந்து விட்டது.



- முகம்மது சுலைமான்

சென்னை தினம்- மதராஸ் தினம், இன்று.

 சென்னை தினம்- மதராஸ் தினம், இன்று.

22/08/2025.


22/08/1640-சர். பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன்  மதராச பட்டினத்துக்கு வித்திட்ட நாள். 

இட்ட வித்து, இன்று ஆலமரமாக, பல விழுதுகளுடன்.


எண்ணூர்,மயிலை,திருஅல்லிக்கேணி,திருவான்மியூர்,எழுமூர், தண்டையார்பேட்டை எனப்பல விழுதுகள்.


 இருப்போருக்கும், வந்தாருக்கும், வாழ்வாதாரம் கிட்டச்செய்யும் பேர் பெற்ற மாநகரம், பேர் மாறினாலும்.


" தரும மிகு சென்னை என வள்ளலார் போற்றிய இடம்.


வெள்ளையனே வெளியேறு என நாம் அவனை விரட்டினாலும், நம்  ஆறுகளை( கூவம் , அடையாறு) மாசுபடுத்தாமல், பாரம்பரிய சதுப்பு நிலத்தை ஆக்ரமிக்காமல்

மண்ணும், நீரும். காத்து விட்டுச்சென்ற தகைமை பாராட்டத்தக்கது.


சென்னை வாசிகள் நாம்" நமது சென்னை" யைப்பற்றி நன்கு அறிய வேண்டும்.  சுற்றிப்பார்க்க வேண்டும்.


பல இடங்களின்பெயருக்குப் பின்னால் சரித்திரம் புதைந்திருக்கிறது.


உதாரணம்- தண்டையார்பேட்டை(Tondaiyarpet) - 18ஆம் நூற்றாண்டில் ராமநாதபுரம் மாவட்டதில் தொண்டி என்ற ஊரில் பிறந்த குணங்குடி மஸ்தான் சாஹிப் இப்பகுதியில் வாழ்ந்து மறைந்தார். அதனால் இது தொண்டியார் பேட்டை என அழைக்கப்பட்டு பின்னர் தண்டையார்பேட்டை ஆனது.

              இன்னும்பல.


பதிவு நீண்டுவிடும்.


இன்று வடக்கு , மேற்கு, கிழக்கு என வேறுபாடு காட்டாமல் அரவணைக்கும் தாயாக நமது சென்னை,  தனக்கே உரித்தான பாஷையுடன்.


சென்னை வாசிகளுக்கு வாழ்த்துகள்.🌺🌺



- இ.ச.மோகன்


***************

பெயர்க்காரணங்கள்- சில வேறு கருத்துகளும்உண்டு.


பேட்டை, பட்டினம், புரம், நகர், ஊர் உள்ளிட்ட பல, பொதுவாக இடத்தை குறிக்கும். சென்னையின் பல இடங்கள், பாக்கம், பேட்டை, ஊர், புரம், நகர், சாவடி, மேடு என, முடிகின்றன.

ஆதம்பாக்கம், வில்லிவாக்கம் போன்ற, பாக்கம், வாக்கம் என முடியும் ஊர்கள், கடலோர வணிகர்கள் வாழ்ந்த பழமையான குடியிருப்பு பகுதிகள். 


கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை போன்ற, பேட்டையில் முடியும் பகுதிகளில், சந்தைகள் இருந்துள்ளன. 


கொரட்டூர், கொளத்துார், போரூர் உள்ளிட்ட, ஊர் என, முடியும் இடங்களில், பழமையான குடியிருப்புகள் இருந்துள்ளன. 


ரெட்டேரி, பொத்தேரி, வெப்பேரி போன்றவை, ஏரி இருந்த இடங்களை குறிக்கின்றன.

ராமாபுரம், மாதவரம் போன்ற, புரம், வரம் என முடியும் ஊர்கள், எம்.ஜி.ஆர்.,நகர், கே.கே.நகர் போன்ற, நகர் என முடியும் ஊர்கள், பழமையும் புதுமையும் கலந்தவையே.


கொத்தவால்சாவடி, வேலப்பன்சாவடி போன்ற, சாவடி என முடியும் இடங்களில், வரி வசூலிக்கப்பட்டது. 


சைனாபஜார், பர்மாபஜார் போன்ற, பஜார் என முடியும் இடங்கள், கடைவீதிகளை குறிக்கும். 


சில குறிப்பிட்ட இடங்களுக்கான காரணங்கள், செவி வழி, ஆவண வழியாக வந்தாலும், கேட்பதற்கு சுவாரஸ்யமாகவே உள்ளன.


அவற்றில் சில:* 108 சக்தி ஸ்தலங்களில், 50வது ஊர் என்பதால், 'ஐம்பத்துார்' என வழங்கி பின், 'அம்பத்துார்' என, மருவியதாகக் கூறப்படுகிறது* 


முஸ்லிம் நவாப் ஒருவரின் குதிரைகளின் பசி போக்கும் பகுதி எனும் பொருளில், 'கோடா பேக்' என, வழங்கப்பட்டு, பின், கோடம்பாக்கமாக மருவியதாம்* 

கூவம் ஆற்றின் முற்பெயரான நுளம்பியாற்றங்கரையில் உள்ள, திருவேங்கட பெருமுடையார் எனும் சிவன் கோவில், சமஸ்கிருதத்தில், சந்தான சீனிவாச பெருமாள் என மாற்றப்பட்டு, சந்தானம் என்பதற்கு, மகப்பேறு என, பொருள் கொள்ளப்பட்டு, பின், முகப்பேர் என, மாறியதாம்* 


குதிரை வியாபாரியான, சையது அகமது கான், அடையாறு ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்டியதால், சையது ஷா பேட்டை எனவும், பின், சைதாப்பேட்டை எனவும் மாறியது. சரபோஜி மன்னரின் தாயான, சைதாம்பாளுக்கு சொந்தமான நிலப்பகுதி இருந்ததால், சைதாப்பேட்டையாக மாறியதாகவும் சொல்லப்படுகின்றன* 


வேலிச்சேரி, வெலிச்சேரி என்று இருந்த பகுதி, வேளச்சேரி என்று மாறியதாகக் கூறப்படுகிறது* 


ஆறு தோட்டங்கள் எனும் பொருளில் உள்ள, 'சே பேக்' எனும் உருது வார்த்தை மருவியதே, சேப்பாக்கம் என, மாறியதாம்* 


சவுந்தர பாண்டியன் பஜார் என்பதே, பாண்டி பஜார்* 

பசுக்களை வளர்க்கும் இடையர்கள் அதிகம் இருந்த, பல் ஆ புரம், பல்லவபுரம் எனவும், பின் பல்லாவரம் எனவும் மருவியது* 


மதராஸ் மாகாண முதல்வரான, பனகல் ராஜாவின் நினைவை போற்ற, பனகல் பார்க் என, பெயரிடப்பட்டது.* 


-நீதி கட்சி தலைவர் சர் பி.டி.தியாகராஜரின் பெயரால், தியாகராய நகர் உருவானது* 


புரசை மரங்கள் அடர்ந்த பகுதி, புரசைவாக்கம் ஆனது* 


மல்லிகை தோட்டம் நிறைந்த பகுதி. திருக்கச்சி நம்பி ஆழ்வார் இங்கிருந்து, காஞ்சி வரதராஜ பெருமாளுக்கு பூ எடுத்து சென்று வழிபட்டார். அப்பகுதி, சமஸ்கிருதத்தில், புஷ்பகவல்லி என்றும், தமிழில் பூவிருந்தவல்லி என்றும் அழைக்கப்பட்டு, தற்போது பூந்தமல்லியாக உள்ளது* 


ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் இருந்து வந்தவர், முஸ்லிம் துறவியான, 'குணங்குடி மஸ்தான் சாகிப்'. அவரை தொண்டியார் எனவும், அவர் வசித்த பகுதியை தொண்டியார் பேட்டை எனவும் அழைத்தனர். தற்போது, தண்டையார் பேட்டை என, மாறி உள்ளது* 

ஆடு, மாடுகள் மேய்ந்த மைதான பகுதி, மந்தைவெளி* 


மயிலை எனும், இருவாச்சி பூக்கள் நிறைந்த ஊர், மயில்கள் ஆர்ப்பரிக்கும் ஊர் எனும் பொருளில், மயிலாப்பூராக அமைந்தது* 


முருகன் போர் நடத்தி, திருமணம் செய்த ஊர் என்பதால், போரூர் எனப்பட்டது. பல்லவர் காலத்திலும் இங்கு, போர்கள் நடந்ததாம்* 


பிரம்பும், மூங்கிலும் அடர்ந்த, பிரம்பூர் பகுதி, பெரம்பூராக மாறியுள்ளது* 


திரிசூல நாதர் கோவில் இருக்கும் ஊர், திரிசூலம்* 


அல்லி பூக்கள் நிறைந்த கிணற்றுப்பகுதி அமைந்த ஊர், திருவல்லிக்கேணி* 


தாமஸ் பாரி வணிகம் செய்த ஊர், பாரிமுனை* 


மா அம்பலம் இருந்த ஊர், மாம்லான் என்ற ஆங்கிலேய கலெக்டர் வசித்த ஊர், எனும் பொருளில், மாம்பலம் உருவானது* 


விகடக் கூத்து ஆடும் தேவதாசிகளான, கோட்டாள கொண்டி பெண்கள் வாழ்ந்த பகுதி, கொண்டி. அது தற்போது, கிண்டி என, மாறி விட்டது* 


குயவர்கள், மண்ணை குழைத்து சேறாக்கி, மாட்டு வண்டியில் ஏற்றும் இடம் சேற்றுப்பட்டு. தற்போது, சேத்துப்பட்டு* 


முதலில் சூரியோதயம் எழும் மேட்டுப்பகுதி, எழுமீஸ்வரர் கோவில் உள்ள பகுதி, எழும் ஊர் என்றாகி, எழும்பூர் என, அழைக்கப்படுகிறது* 


பல்லவ மன்னனின் அமைச்சரவையில் இருந்த, ராயர்களுக்கு தானமாக வழங்கப்பட்ட பகுதி, ராயர்புரம்; இன்று, ராயபுரம்* 


பிரிட்டிஷ் ஆட்சியில், நெசவாளர்கள் குடியேறிய பகுதி, சின்ன தறிகளை வைத்து தொழில் செய்ததால், சின்ன தறிபேட்டையாகவும், தற்போது சிந்தாதரிப்பேட்டை எனவும் உள்ளது* 


ராமபிரான் அமர்ந்த கூவக்கரை இன்று, இன்றைய அமைந்தகரையாம்* 


பெரிய குளங்கள் நிறைந்த ஊர் பெருங்குளத்துார்* 


தற்போது, நந்த வம்சத்தினர், ராமனை வரவேற்ற இடமாம், நந்தம்பாக்கம்* 


ராமர் தங்கிய இடம், ராமாபுரம்.* 


குன்றுகள் நிறைந்த ஊர், குன்றத்துார்* 


வரி வசூலித்த இடம், சுங்குவார் சத்திரம்* 


மா அம்பலத்திலிருந்த சிவன் கோவிலுக்கான நந்தவனம் இருந்த இடம் நந்தவனம், தற்போது நந்தனம்* 


திருக்குடை வைபவத்தில் பெருமாள், யானை போல் ஓடி தாண்டிய இடம், யானை கவுனி* 


மாதவன், ஈசனிடம் வரம் பெற்ற இடம், மாதவ வரம், தற்போது மாதவரம்* 


முருகன், வள்ளியுடன் சேர்ந்த இடம், வள்ளி சேர் பாக்கம், தற்போது வளசரவாக்கம்* 


தண்ணீரில் மிதக்கும் காட்டுக்கு நடுவில் உள்ள சோலைக்கு, ஆண்டுக்கு ஒரு முறை, திருவல்லிக்கேணி பெருமாள் இரவில் வந்து தங்கும் இடம், ஈர காடு தங்கல், தற்போது, ஈக்காட்டு தாங்கல்* 


கோவூர் ஈசனின் மவுளி எனும் கிரீடம் இருந்த இடம், மவுளிவாக்கம், தற்போது முகலிவ


நரி மேட்டில் இருந்து, பள்ளத்தில் மண்ணடித்து சமமாக்கிய  இடம் மண்ணடி.



ஆங்கிலேயர் காலத்தில், தங்கம், வெள்ளி காசுகள் அச்சடித்த இடம், தங்கசாலை, தற்போது, மின்ட்.* 


சென்னையில் வசிக்க வரிகட்ட வேண்டும் எனும் திட்டத்தை முன்மொழிந்த, ஆங்கிலேய பேப்பமன்ஸ் பிராட்வேயின் பெயரில் 

அமைந்த இடம் பிராட்வே.


தெய்வநாயக முதலியார் வசித்த ஊர், தெய்வநாயகம் பேட்டை எனவும், தென்னை மரங்கள் நிறைந்த பகுதி தென்னம்பேட்டை எனவும் இருந்து, தற்போது தேனாம்பேட்டை ஆனதாக கருதப்படுகிறது* 


ஆவடி எனும் ஊர், - Armoured Vehicles And Depot of India எனும் ஆங்கில வார்த்தையின் சுருக்கம்.


- - இ.ச.மோகன்


நான்/தான்

 நற்சுனை 5



நான்/தான்



என்னை விட்டு

தொலைந்து கொண்டே இருக்கிறது

உறவு

பறந்து கொண்டே இருக்கிறது 

பாசம்

நகர்ந்து கொண்டே செல்கிறது

நட்பு

அமிழ்ந்து கொண்டே இருக்கிறது அன்பு


பழகப் பழகப் பாலும் புளிக்கும்

விலக விலக விழியும் தொலைக்கும்

 

எடுப்பதற்கே ஆசை உண்டு எல்லோர்க்கும்!

எண்ணம் உண்டா எடுக்க நினைப்பதை கொடுப்பதற்கும்???


"நான்" என்பது விலகினால்..

 

உயிராய் உறவாடுமே உறவு

பயிராய் செழிக்குமே பாசம்  

நாடிப் பாராட்டுமே நட்பு

அள்ளக் கிடைக்குமே அன்பு


அழிக்க வேண்டியது

"நான்" என்ற கர்வமே..

"தான்" என்ற தன்மானமும்

தற்காக்க வேண்டுமே!


நீர்த்துளியாய் தாமரை இலை மேல் 

ஒட்டியும் ஒட்டாமல் இருப்பதே மேல்..


- சாய்கழல் சங்கீதா

Thursday, August 21, 2025

தமிழ்ப் பழமொழிகள்.

 தமிழ்ப் பழமொழிகள்.

------

 தமிழ் பழ மொழிகள் பழைய மொழிகள் அல்ல.

பழம் பெரும் மொழிகள்.

பழம் போல் இனிக்கும்மொழிகள்.

வட்டார வழக்கை ஒட்டி எழுந்த மொழிகள்.

நம் மண்ணின்மணம் கமழும் மொழிகள்.

நம் பண்பாட்டின் வேர்கள்.

நமது தஞ்சை, இராமநாதபுரம், சிவகெங்கைபோன்ற  மாவட்டங்களில் பழமொழி சர்வ சாதாரணமாக பயன்படுத்தப்படுவதைக் காணலாம்

காலப்போக்கில் , பல சிதைந்து வேறு பொருளைத்தந்தாலும், நன்கு ஆய்ந்தால், மெய்ப்பொருள்

விளங்கும்.


உதாரணம்:

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான்.

தப்பு தப்பு.  

அர்ப்பணித்து வாழ்பவன் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான்!


சமீபத்தில் கண்ட ஒரு சுவாரஸ்யமான பழமொழி:


மொட்டைத்தலைக்கும்,முழங்காலுக்கும், முடிச்சு போட்டாற் போல.


ஒரு கதை இந்த பழமொழி உருவானதை விவரிக்கிறது.

நாட்டை ஆண்ட அரசனுக்கு, முழங்காலில் வலி. அரசவை வைத்தியர் பொடுதலை என்னும்மூலிகையை வைத்துக்கட்டினால் சரியாகி விடும், என்று கூறிவிட்டு, அதைக்கொணர வெளியே சென்றார்.

அரசனுக்கு அவசரம். அரசனிடம் நல்ல பெயர் வாங்க  நினைத்த ஓர் அவசரக்குடுக்கை அமைச்சர்(!நமக்குப் புதிது அல்ல!) பொடுதலை என்றால் மொட்டைத்தலை என்று கருதி, ஒரு மொட்டைத்தலையனைப்பிடித்து, அரசவைக்குக் கொணர்ந்தார். மொட்டைத்தலைக்கும் அரசன் முழங்காலுக்கும் முடிச்சுப்போட்டு, பரிட்சை எழுதாமலே மூத்த அமைச்சராகப் பதவி உயர்வு பெறலாம் என மனக்கோட்டை கட்டினார்.

மொட்டைத்தலையிலும் பயம் காரணமாக வியர்வைத்துளிகள்!

அவன் முன்னோர் செய்த நற்காரியங்களின் பலன், வைத்தியர் வந்து விட்டார், பொடுதலையைக்கையில் பிடித்தவாறு. 

பிறகென்ன?

மொட்டைத்தலை , தலை தப்பித்தது தம்பிரான் புண்ணியம் என்று  பிடித்தான் ஓட்டம்!

நமக்கோ ஒரு பழமொழி கிடைத்தது,


-இ.ச.மோகன்

சம்பந்தம்,இல்லாமல் இரண்டு விடயங்களை இணைப்பதைக்குறிக்க.

Wednesday, August 20, 2025

*எது லட்சிய பயணம்*

 *எது லட்சிய பயணம்*

கொடிமல்லியில் இருந்து தவறி

அவள் நெற்றியில் விழுந்த எறும்பு 

நடுவகுட்டில் பயணித்து சூடிய

மல்லிகைப்பூவை அடைவதே

லட்சிய பயணம்!

Tuesday, August 19, 2025

களேபரம்

 களேபரம்

----

இச்சொல்லைக் குழப்பம் என்ற பொருளில் நாம்பயன்படுத்துகிறோம்.

நான் நீண்ட காலம் களப்பிரர் காலம் இருண்ட காலம் என்று சிலர் கருதுவதால் இச்சொல் எழுந்திருக்கலாம் என நினைத்தேன். 

ஆனால் 

களப்பிரர்களுக்கும், களேபரத்துக்கும் தொடர்பு இல்லை.


களேபரத்துக்கு,உடம்பு, குழப்பம், பிணம் , எலும்பு என்ற பொரள கள உண்டு- இடத்துக்குத் தக்கவாறு பயன்படுத்தப்படும்.


தேவாரத்தில்"இக்களே பரத்தை யோம்ப வென்செய்வான் றோன்றி னேனே" கன்று   காணப்படுகிறது. இங்கு உடம்பு என்று பொருள்.


குமார சதகம் (18 ஆம் நூற்றாண்டு)-"களேபரம் சுடுபுகையில் நீசர்நிழலில்"

என்று கூறுகிறது. இங்கு பிணம் என்ற பொருளில்.


இன்றைய கால கட்டத்தில் குழப்பம் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறது.


ஆச்சரியப்படத் தேவையில்லை.

காலப்போக்கில் சொற்களின் பொருள் மாறுபடுவது வழுவல்ல, கால வகையினானே.


ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பிரமாதம் என்றால் தவறு, அபாயம், அலட்சியம் என்று பொருள்.இன்று பொருள்வேறு. 


பழைய பொருளில்" சமையல் பிரமாதம்"  என்று  இன்று சொன்னால், பூரிக்கட்டையால் அடி விழாதா!


சமீபத்தில் படித்தது:

பெருந்தன்மைக்கு அகந்தை என்று ஒரு பொருளும் உண்டாம்!!!


- மோகன்

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...