நூல்: பாரதியின் வைர வரிகள் தந்த கதைகள்
ஆசிரியர்: ஶ்ரீவி
***********************************************
அணிந்துரை
நண்பர் ஸ்ரீவி என் மீது கொண்ட அன்பினால், அவர் "பாரதியின் வைர வரிகள் தந்த கதைகள்" எனத் தலைப்பிட்டு எழுதிய இருபத்தைந்து கதைகளுக்கு ஒரு முன்னுரை எழுதுமாறு கேட்டார். அதற்குத் தகுதி எனக்கு உண்டா என்ற ஐயம் எனக்குள் எழுந்தாலும், அவர் என் மீது வைத்த நம்பிக்கை வீண்போகக் கூடாது என்ற எண்ணமே இந்த முன்னுரையை எழுதத் தோன்றுகிறது.
முதலில் திரு ஸ்ரீவி எழுதிய ஒவ்வொரு கதையைப் பற்றி, நீங்கள் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் நோக்கத்துடன், ஓரிரு வரிகளில் அறிமுகப்படுத்திவிட்டு, பின் இக்கதைகளின் அடியோட்டமாக அமைந்துள்ள கருத்துகள் மற்றும் பொதுவான அடிப்படைகள் பற்றிப் பார்க்கலாம்.
கதை 1:
இக்கதை ஒரு மறைக்கப்பட்ட வரலாற்று உண்மையை உயிர்ப்பிக்க முயலும் சிறந்த முயற்சி. ஒரு கிராமப்பெண் எப்படி ஒரு சமூக நீதிக்காக போராடும் போராளியாக மாறுகிறாள் என்பதையும், அச்சமின்றி செயல் படுபவர்களை எல்லாம் அரசியல் மற்றும் அதிகாரம் உடையோர் எப்படி அடக்க முயல்கிறார்கள் என்பதையும் திறம்பட வெளிப்படுத்துகிறது. மிகவும் வலுவான, தனித்துவமான ஒரு கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டுள்ளது. கதையின் மொழி சரளமாகவும், ஓரளவு பழமையான தமிழ் நயத்துடன் இருக்கிறது. கிராமத்தின் அமைப்பு, தெய்வங்கள் மற்றும் பாரம்பரிய நடைமுறைகள் போன்ற தமிழ்க் கலாச்சாரக் கூறுகள் கதையை ஒரு குறிப்பிட்ட சூழலில் நிலைநிறுத்துகின்றன. பிரிட்டிஷ் அடக்குமுறை மற்றும் விடுதலைப் போராட்டம் போன்ற உண்மையான வரலாற்று நிகழ்வுகளின் குறிப்புகள் கதைக்கு நம்பகத்தன்மையையும் ஆழத்தையும் சேர்க்கின்றன.
கதை 2:
கதையின் முதல் இரண்டு வரிகளிலேயே சித்திரக் குளத்தின் வறட்சி, அந்தச் சிற்றூர் நீரின்மையால் படும் பாடுகளை தெரியப்படுத்துகிறார். அந்த ஊரில் பிறந்த ஒருவரது கொடையுள்ளமும், ஏழையாக இருந்தாலும், ஊருக்கு நன்மை செய்ய வேண்டும் என்று துடிக்கும் ஓர் இளைஞரின் கனவுகளும் இணையும் போது ஏற்படும் நல்விளைவுகளை இந்தக் கதை கூறுகிறது. இது ஒரு ஊரின் சவால்கள், ஒரு மனிதனின் விடாமுயற்சி, மற்றும் அவர்களின் இணைந்த முயற்சிகள் எப்படி சமூக வளர்ச்சிக்கு வழிவகுக்கும் விதத்தை அழகாக விவரிக்கிறது.
கதை 3:
மனித வாழ்க்கையின் இயல்பே போராட்டம். சிலர் அதனை வெற்றி கொள்ள, சிலர் அதற்குள் அடங்கி விடுகின்றனர். இக்கதையின் நாயகனின், வறுமை மற்றும் நெருக்கடிகளுக்கு இடையேயும் தடுமாற்றத்தை புறந்தள்ளி நேர்மையைக் கடைப்பிடிக்கும் மன உறுதியை சித்தரிக்கிறது. நாம் அன்றாடம் சந்திக்கும், ஓர் ஓரப்பார்வையில் நாம் கடந்து செல்லும் எளியவர்கள் பலரது வாழ்க்கைப் போராட்டங்களுக்கு நெருங்கிய கதைக்களம், கொரோனா காலத்தின் பொருளாதார நெருக்கடிகள், குடும்பத்தின் பிரச்சினைகள், குழந்தைகளின் கல்விச் செலவுகள் போன்றவை மிக இயல்பாக இக்கதையில் வெளிப்பட்டிருக்கின்றன. இவை பலரின் வாழ்க்கையில் நடக்கக்கூடியவை என்பதால், நாம் இக்கதையுடன் எளிதாக உறவு கொள்ள முடியும்.
கதை 4:
நீர் மேலாண்மை, மணல் கொள்ளை, அரசு மற்றும் கோயில் நிலங்களை மீட்டல் என்ற கருதுகோள்களின் அடிப்படையில் இந்தக் கதை படைக்கப் பட்டிருக்கிறது. கதையின் ஆரம்பம், பிரம்மதேசம் பற்றிய வரலாற்று விவரங்களுடன் தொடங்கி, பின்னர் தற்போதைய சீரழிவைச் சொல்லி, இறுதியில் அந்த சீரழிவை எப்படி சரிசெய்கிறார்கள் என்பதைக் கூறுவது, ஒரு நல்ல கட்டமைப்பு. முயற்சி திருவினையாக்கும் என்பதற்கும், ஆசிரியர் கூற்றுப்படி "உள்ளம் நல்லதையே நினைத்தால், சிந்தனைகள் நல்லவைகளாக இருந்தால், செயல்கள் நல்லதாக அமைந்தால் எல்லாம் நல்லதாக நடக்கும்" என்பதை விளக்கும் விதமாகவும் இந்தக் கதை புனையப்பட்டுள்ளது. குளங்கள், ஏரிகள் போன்ற நீர்நிலைகள் நமது வாழ்வாதாரத்திற்கு மட்டுமல்ல, பண்பாட்டு மற்றும் சமூக அடையாளத்திற்கும் முக்கியமானவை என்பதை இக்கதை வலியுறுத்துகிறது. கதை நெல்லை மாவட்டத்தின் பிரம்மதேசம் என்ற ஊரைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இது கதைக்கு ஒரு புவியியல் மற்றும் வரலாற்று ஆழத்தையும், நம்பகத்தன்மையும் தருகிறது.
கதை 5:
கதையின் துவக்கத்தில் பாரதியின் தீர்க்கதரிசனத்தைப் பற்றிய விவாதம், பின்னர் ஒரு மனிதனின் எளிமை, அன்பு மற்றும் பரிவு ஆகியவற்றைப் பற்றிய ஆராய்ச்சி என மாறுகிறது. பாரதியாரின் சொற்களான "யார்க்கும் எளியனாய்.. யார்க்கும் அன்பனாய்.. யார்க்கும் இனியனாய்.." என்பது போல் ஒருவர் இருக்க முடியுமா என்று ஆராய்கிறது இக்கதை. பாரதி சொன்ன மிகைச் சொற்கள் இவை என்று நினைக்கின்ற, வாதம் செய்கின்றவர் பேராசிரியர் கில்பர்ட். ஆதர்ஷ் என்ற பொருத்தமான பெயரைக் கொண்ட இளைஞர் ஒருவரைச் சந்தித்தவுடன் தான் இப்படியும் சிலர் இருக்கின்றனர் என்றத் தெளிவு அவருக்கு வருகிறது. ஆதர்ஷ் போன்ற நல்மாந்தரைப் பற்றித் தான் கணியன் பூங்குன்றனார் "உண்டாலம்ம இவ்வுலகம்" என்றும், பாரதியார் "யார்க்கும் எளியனாய்.. யார்க்கும் அன்பனாய்.. யார்க்கும் இனியனாய்.."
என்றும்,
"நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை" என்று மூதுரையில் அவ்வையாரும் சொல்லிச் சென்றார்கள் போலும். இக்கதை இந்தக் கருத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.
கதை 6:
இராணுவத்தில் எதிரிகளை வீழ்த்திய போர்வீரன் புற்றுநோய் எனும் மரணச் சுழலில் சிக்கியபோது நவீன மருத்துவம் அவரை குணப்படுத்த இயலாது என்று கைதூக்கும்போது, ஒரு சித்தரின் பரிகாரத்தின் மூலம் அவர் உயிர்த்தெழுவது கதையின் மையப்புள்ளியாக இருக்கிறது. இக்கதை, மருத்துவத்தின் எல்லைகளை மீறி, ஆன்மீகத்தின் மூலம் குணமடையும் ஒரு மனிதனின் அனுபவத்தை விவரிக்கிறது. நவீன மருத்துவ அறிவுக்கும் பாரம்பரிய சித்த மருத்துவத்திற்கும் இடையே ஒரு விரிவான விவாதத்தைக் கிளப்புகிறது. இது வெறும் நம்பிக்கையா, அண்டத்திற்கும் உடலுக்கும் இடையே உள்ள மர்ம இணைப்புகளாஎன்பதே அந்த விவாதப் பொருள். கதையின் சில பகுதிகள் மிகவும் கற்பனையாகவும், நம்பத்தகாததாகவும் தோன்றலாம். சித்தரின் திடீர்த் தோற்றமும், ராவின் குணமடைதலும் சிலருக்கு நம்பிக்கைக்கு அப்பாற்பட்டதாகத் தோன்றலாம். ஆனால், இக்கதையின் முக்கிய நோக்கம், மருத்துவம் மற்றும் ஆன்மீகத்தின் இடைவெளியில் நம்பிக்கையின் சக்தியை வலியுறுத்துவதாகும்.
கதை 7:
இந்தச் சிறுகதை, ஒரு கால்பந்து போட்டியின் பரபரப்பை மட்டுமல்ல, வாழ்க்கையில் வெற்றி கொள்ளும் வழியை விளக்கும் ஒரு சக்திவாய்ந்த செய்தியையும் கொண்டு வருகிறது. இக்கதை, வெறும் விளையாட்டு வெற்றியைப் பற்றியது அல்ல. இதுவே ஒரு நம்பிக்கையின்மை, வீண் பயங்கள், எதிர்மறை எண்ணங்கள் தோன்றாத தான் செய்யும். அவற்றை மீறி வெற்றிபெறுவது எப்படி என்பதை உணர்த்துகிறது. முக்கியமாக, நமக்குள் இருக்கும் சந்தேகத்தையும் பயத்தையும் நீக்கிவிட்டால், எதையும் சாதிக்க முடியும் என்பதே கதையின் வாழ்வியல் செய்தி.
கதை 8:
இரண்டு மகளிரைப் பெற்ற தந்தை, அவர்கள் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்று மருகுவது இயல்பு தான். அதே சமயம், தன்னை மிகவும் நம்பி நிலத்தைக் குத்தகைக்கு விட்டிருப்பவரிடம் பணம் கேட்கலாம் என்று அறிவுரை கூறும் உறவினரது பேச்சைக் கேட்பதா என்ற குழப்பமும் எழுகிறது. அதற்கு அவரது பெண்மக்கள் கூறும் தீர்வு என்ன, அவரது பெண்களின் வாழ்வுக்கு வழி கிடைத்ததா என்ற முடிச்சுகளைக் கொண்ட கதை. இக்கதை, மரபு மற்றும் நேர்மை, அறம் போன்ற மதிப்புகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.
கதை 9:
ஒரு கிராமத்தின் அடையாளமாக விளங்கும் ‘கதை சொல்லித் தாத்தா’ கதையின் மையப்புள்ளி. 1950களில் கதையூரார் பட்டிணம் கிராமத்தில் வாழ்ந்த அவரின் பெயர் கூட மக்களுக்குத் தெரியவில்லை. அவரது அறிமுகம் நன்கு அமைந்திருக்கிறது. அந்தக் கதைசொல்லித் தாத்தாவின் கதை சொல்லும் திறனை மையமாகக் கொண்டு, இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகத்தையும், அவர்கள் பட்ட பாடுகளையும் விவரிக்கிறது. கதைசொல்லித் தாத்தா, தனது கதைகளின் மூலம் ஊர்மக்களுக்கு விடுதலைப் போராட்டத்தின் முக்கியத்துவத்தையும், அதில் ஈடுபட்ட வீரர்களின் தியாகங்களையும் உணர்த்துகிறார். நமது தாத் தாக்கள், பாட்டிகள் நமக்கு விட்டுச் சென்ற கதை சொல்லும் பாரம்பரியத்தைக் கொண்டாடும் கதை இது.
கதை 10:
இத்தொகுப்பில் இதுவரை பார்த்த கதைகளில் இருந்து சிறிது மாறுபட்ட கதை. விளையாட்டு என்பது தன்னம்பிக்கை, ஒழுக்கம், நெறிமுறை போன்ற உயரிய பண்புகளின் ஒரு வெளிப்பாடு. இக்கதை, விளையாட்டு உலகின் மறுபக்கத்தை, வெளிச்ச மேடைகளுக்கு அடியில் மறைந்து கிடக்கும் இருண்ட பக்கங்களை வெளியே கொண்டு வருகிறது. கிரிக்கெட் என்ற விளையாட்டு, திறமை, உழைப்பு மற்றும் நேர்மை என்பவற்றின் மூலம் வெற்றியை அடையும் ஒரு வாய்ப்பாக இருக்க வேண்டும். ஆனால், இக்கதையில் அந்த விளையாட்டில் மறைந்துள்ள உள்ளடி வேலைகள், லஞ்சம், குழு மனப்பான்மை, பரிந்துரை, அரசியல், சூழ்ச்சி மற்றும் போதைப் பழக்கம் போன்ற இருண்ட பக்கங்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன. மேலும், மற்ற கதைகளைப் போல அல்லாமல், ஒரு சிறிய கேள்விக்குறியுடன் முடிகிறது இக்கதை.
கதை 11:
இந்தச் சிறுகதை திருமண மண்டபத்தில் ஆரம்பித்து, இசை கலைஞர்களின் உலகிற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. கதையின் மையக் கருவாக ஒரு சிறுவன் விளங்குகிறான். திருமண நிகழ்வின் பரபரப்பில், அவன் ஒரு சிறிய, ஆனால் நேர்மையான செயலில் ஈடுபடுகிறான். ஆனால், அவன் நேர்மையான செயலுக்கு நன்றி சொல்லவில்லை என்பது மட்டுமல்ல அவன் மீதே தவறாகக் குற்றம் சாற்றும் நிலையும் ஏற்படுகிறது. இது வாசகர்களுக்கு, சிறிய மனிதர்களின் பெரிய தியாகங்களை புரிந்து கொள்ளும் வாய்ப்பாக இருக்கும்.
கதை 12:
சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பரபரப்பு, அங்குள்ள மனிதர்களின் அவசரம், ஆதரவற்ற சிறார்களின் வாழ்க்கை என்று ஆரம்பிக்கும் கதை, உழைப்பும், திறமையும் இருந்தால், முன்னேறி விடலாம் என்ற தன்னம்பிக்கை செய்தியை சென்னை புகைவண்டி நிலயத்தில் ஆதரவின்றி விடப்பட்ட ஒரு சிறுவனான நாகராஜனின் வாழ்க்கைப் பயணத்தின் வழியாக சொல்கிறது. தனது உழைப்பால் கடைக்குத் துணையாகி, பிறருக்குத் துணையாகி, தனது வாழ்க்கையை நேர்மையான, மேன்மையான பாதையில் அமைத்துக்கொள்ளும் நாகுவின் மாறுபட்ட பயணம் தான் இந்தக் கதையின் மையக்கருத்து.
கதை 13:
இக்கதையில் வரும் சிவனாண்டி மெஸ் என்பது வெறும் உணவகம் மட்டுமல்ல, உணவுப் பாரம்பரியத்திற்கும், பண்பாட்டுக்கும், கடமைக்கும் ஒரு மறுவடிவம் ஆகிறது. அது மட்டுமல்ல. பணமே குறியாக வாழும் உலகத்தில், செய்யும் தொழிலில் ஈடுபாடும், செய்நேர்த்தியும் இருந்தால், தொழில் மென்மேலும் வளர்வது தானாக நிகழும் என்ற உண்மையை எடுத்துக் கூறும் கதை இது. சேர்ந்த பணம் பெட்டியில் தூங்காமல், ஊருக்குப் பயன்பட்டால் நல்லது என்ற சமூகப் பார்வையும் உள்ள கதை. உணவு வழங்குவதை வெறும் வணிகமாகக் கருதாமல், ஒரு கலாச்சாரப் பணியாக மாற்றி, பலருக்கு வாழ்வாதாரமும் கல்வியும் அளிக்கிற பணி, கோவிலில் உள்ள சிவனைப் போலவே நகரின் பெருமையாக மிளிர்கிறது.
கதை 14:
இக்கதை, சமூக நீதி மற்றும் கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்ட ஒரு கதையாக இருக்கிறது. இரவில் விழுந்து விழித்துக் கொண்டிருக்கும் விவசாயக் கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, கல்வி என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை விளக்குகிறது. மேலும், வறுமை எந்த அளவுக்கு கல்வியைத் தொலைக்கும் என்று சுட்டிக்காட்டுவதோடு, சமூக ஒற்றுமையின் சக்தியையும் வெளிப்படுத்துகிறது
கதை 15:
இந்தச் சிறுகதை, 19ஆம் நூற்றாண்டின் பஞ்ச காலத்தின்போது நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. கொடும் பஞ்சக் காலத்தில், குஞ்சரம்மா என்ற கணிகையின் வீட்டு அடுப்பு 'அணையா அடுப்பாக' ஊரின் பசியை ஆற்றியது. அவரின் கடைசிக் காசு வரை செலவழித்து, மதுரைப் பகுதியில் பல ஆயிரம் உயிர்களைக் காப்பாற்றி, அவ்வூர் மக்கள் அவரை தெய்வமாகக் கொண்டாடும் நிலைக்கு உயர்ந்த ஒரு பெண்ணின் கதை. அதனாலேயே, அவர் வாழக்கை மனிதாபிமானத்தின் உன்னதமான எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
கதை 16:
இந்தக் கதையின் நாயகி கயல்விழி. அவளது தந்தை பெயர் ரஹ்மத்துல்லா. வளர்ப்புத் தந்தை அல்ல. உண்மையான தந்தை. கயல்விழி தனது செவிலியர் கடமையில் வழுவாது, மிகுந்த அர்ப்பணிப்புடன் உதவி செய்யும் சிறுவன் பெயர் இம்மானுவேல். மத நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இக்கதை மாந்தர்கள் மதத்தால் வேறுபட்டிருக்கிறார்கள். ஆனால், அன்பால், மனித நேயத்தால் இணைந்திருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை, கருணை, பரிவு, மத நல்லிணக்கம் ஆகியவற்றின் பிரதிபலிப்பாக இக்கதை இருக்கிறது. கயல்விழியின் இனிய பண்புகள், அவளது சேவை மனப்பான்மை, மற்றும் அவள் சுற்றியுள்ளவர்களுக்கு அளிக்கும் ஆறுதல் இக்கதையின் மையக் கருவாகும்.
கதை 17:
ஒரு கல்லூரியின் சிற்றுண்டிச்சாலை மேலாளராக இருக்கும் சுரேந்திர மேனன், பணம் சம்பந்தமான விஷயங்களில் கடுமையாக இருந்தாலும், பொருளாதாரத்தில் சிக்கல் அடைந்தவர்களுக்கு தாராளமாக உதவுகின்றார். மாணவர்கள் மட்டுமல்ல, பேராசிரியர்களுக்கும் தேவை அறிந்து அவர் துணை நிற்பது, அவரை ஒரு சிறந்த மனிதராகவும், கருணை மிக்கவராகவும் காட்டுகிறது. மனஅழுத்தத்தில் இருக்கும் புதிய கணிதவியல் பேராசிரியரான ரவீந்திரனின் நிலையை உணர்ந்து, அவருக்கு உகந்த தீர்வு அளித்து, அவரை வாழ்க்கையில் உற்சாகத்துடன் செயல்பட வைக்கும் மேனனின் செயல்பாடு இக்கதையின் கரு.
கதை 18
:
இந்த சிறுகதை, ஒரு வேலை தேடும் இளைஞனின் வாழ்க்கைப் பயணத்தை மையமாகக் கொண்டு பயணிக்கிறது. இளஞ்செழியன், வேலைக்காக பல இடங்களில் அலைந்து, தனியார் நிறுவனமொன்றில் வேலை கிடைக்கப் போகிறது என்று நம்பிய நிலையில், கடைசி நிமிடத்தில் அதுவும் கைகூடாத நிலைக்கு சென்று விடுகிறான். வாழ்க்கையின் பிரச்சினைகள் அவனை வாட்டுகின்றன. ஆனால், அதே போல வேலை கிடைக்காமல் அல்லாடும் ஃப்ரெட்ரிக்ஸுடன் சேர்ந்து அவன் வாழ்க்கையைப் புதுமையான கோணத்தில் பார்க்கத் தொடங்குகிறான். அதன் விளைவு என்ன என்பது தான் இக்கதையின் மையம்.
கதை 19:
தான் தேர்ந்தெடுத்த விளையாட்டுக் களத்தில் முடிசூடா மன்னனாக விளங்கிய ஒரு விளையாட்டு வீரனுடைய வாழ்வின் குறுக்குவெட்டு சித்தரிப்பு இக்கதை. உண்மை நிகழ்வுகளின் கோர்வையாக அமைந்துள்ளது. ஒரு விளையாட்டு வீரனாக மட்டுமின்றி நிறவெறிக் கொள்கைகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி, அதனால் அரசின் வெறுப்புக்கு ஆளான நிலையிலும், தன் கொள்கையில் எந்த சமரசமும் இல்லாமல் தன் வாழ்க்கையை வாழ்ந்த ஒரு சமூகப் போராளியின் கதை.
கதை 20:
"வீழ்வேன் என்று நினைத்தாயோ" என்ற தலைப்பு எழுப்பும் கேள்வியை கதையின் நாயகி லிஸா ஸ்தலேகர் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் மௌனமாகவே கேட்டிருக்கலாம். பிறந்த உடனே, பூனா நகரில் குப்பைத்தொட்டியில் விடப்பட்ட ஒரு பெண் குழந்தை, தத்தெடுக்கப்பட்டு உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மேடையில் வெற்றி கொடி நாட்டும் பயணம், இக்கதையின் கரு. கிரிக்கெட்டின் சாதனையாளர்களில் ஒருவரான கவாஸ்கர் பிறந்த மருத்துவமனையில் ஒரு ஏழை மீனவக் குழந்தையுடன் தவறுதலாக இடம் மாற்றப் பெற்றார். கவாஸ்கரின் மாமா அதைக் கவனித்து சரி செய்தார் என்று கவாஸ்கரே பதிவு செய்துள்ளார். கவாஸ்கர் ஒரு மீனவக் குழந்தையாக வளர்ந்து இருந்தால், இத்தகைய உயரங்களை எட்டியிருப்பாரா என்ற கேள்வி எழுகிறது. அந்தக் கேள்வியை இக் கதை, உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில், மறுபடியும் எழுப்புகிறது.
கதை 21:
தனது வாழக்கை துயர் மிக்கதாகவும் வறுமையின் பிடியில் பரிதவித்ததாகவும் கூறிய இக்கதையின் நாயகி, சிறார்கள் முதல் முதிர்ந்தவர்கள் படித்து மகிழ்ந்த ஹாரி பாட்டர் நாவல்களின் ஆசிரியர் ஜே கே ரௌலிங். அவரது வாழக்கை வரலாற்றை இக்கதை சுருக்கமாகக் கூறுகிறது. குழந்தைப் பருவத்தில் கதைகள் எழுதத் தொடங்கி, பல இன்னல்களை எதிர்கொண்டு, கடைசியில் உலகம் கவனிக்கும் ஒரு சிறந்த எழுத்தாளராக உருவாகியுள்ள விதம் இதில் சித்தரிக்கப்படுகிறது
கதை 22:
ஒரு குடும்பத்தின் தரும வழக்கத்தையும், மத பக்தியையும் அடிப்படையாகக் கொண்டு, வாழ்க்கையின் உண்மையான பொருள் பற்றிய ஒரு தேடலாக நகர்கிறது இக்கதை. குணாளன் என்பவரும் அவரது குடும்பமும் மகா கும்பமேளாவிற்காக காரைக்குடியிலிருந்து வாரணாசிக்குப் புறப்படுகிறார்கள். ஆனால் இந்தப் பயணம் அவர்களுக்குப் பல சவால்களை உருவாக்குகிறது. நெரிசல், பொருளாதார சிக்கல்கள், மதத்துடன் பின்னிப் பிணைந்த வணிகமயமான சூழ்நிலைகள் போன்றவை அவர்களை வருத்துகின்றன. இந்தச் சிக்கல்களை எதிர்கொள்ளும் போதே, அவர்கள் ஓர் எளிய குடும்பத்தை சந்திக்கிறார்கள். அந்தக் குடும்பம் பொருளாதாரத்தில் ஏழ்மையாக இருந்தாலும், அவர்கள் கொண்டிருந்த மன நிறைவு மற்றும் பக்தி குணாளனுக்கும் அவரது மனைவிக்கும் ஒரு புதிய பார்வையை உருவாக்குகிறது. புனிதப் பயணம் என்பதுஆன்மிகத் தேடலை நோக்கிய ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால், நம்முடைய சமுதாயம் அதை ஒரு பொருளாதாரச் சூழலில் ஆழ்த்தி விட்டதை இக்கதையில் காட்டுகிறது. சிறிய நகைச்சுவை தொடர்களும் கதைக்கு அழகு சேர்க்கின்றன. மனிதனின் உண்மையான செல்வம் என்பது பணம் அல்ல, மன நிறைவு மற்றும் மகிழ்ச்சி என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.
கதை 23:
மகாத்மா காந்தி இந்தியாவுக்கு வந்து, விடுதலை இயக்கத்தை வழி நடத்தி, இந்தியாவுக்கு விடுதலை பெற்றுத்தருமுன், தென்னாப்ரிக்காவில் அவர் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு, தன் உயிரையே இழந்த பதினாறு வயது தமிழ்ச் சிறுமியின் கதை இது. தென்னாப்பிரிக்காவில் நிலவிய நிறவெறிக் கொள்கைகள், அங்கு வாழ்ந்த இந்தியர்கள் சந்தித்த சிக்கல்கள், மற்றும் அவர்களது எதிர்ப்புப் போராட்டங்கள் இவற்றின் பின்புலத்தில் இக்கதை நடக்கிறது. தனது சிறிய வயதில் வீரம் மிக்க பேச்சுக்களாலும், செயல்களாலும், உள்ள உறுதியாலும் மகாத்மா காந்தியின் மனதைக் கவர்ந்தவர் தில்லையாடி வள்ளியம்மை. வரலாற்றில் பதிவு செய்யப்படாமல், பதிவு செய்யப்பட்டாலும் ஓர் அடிக்குறிப்பாக மட்டுமே இடம் பெற்றவர்களில் ஒருவரது உண்மை வாழக்கைக் கதை இது. ஆங்கிலேயருக்கு அடிவருடியாக இருந்த சிலர் இன்று ஏற்றம் பெற்று விளங்கும் நிலையில், தில்லையாடி வள்ளியம்மை போன்றோரை நாம் நினவு கூர்வது நம் கடமை.
கதை 24:
இந்தக் கதை, நீலகிரி மாவட்டத்திலுள்ள அழகிய மலை சிற்றூரான பெட்டாதொடியா பற்றியது. இங்கு சிறிய ஆறு ஒருபுறம் அம்மக்களுக்கு உயிர்நாடியாக விளங்கினாலும், மறுபுறம் பெருவெள்ளம் ஏற்படும் போது அழிவையும் விளைவிக்கிறது. இந்தக் சிற்றூரில் வசிக்கும் வசும்பத்தி என்ற எட்டு வயது சிறுமி, தனது சிற்றூரின் நிலையை மாற்றுவதற்காக முயல்வதும், அதில் வெற்றி பெறுவதும் இக்கதையின் கரு. பெட்டாதொடியா சிற்றூரின் சூழல் மற்றும் இயற்கை விவரிப்புகள் அருமையாக வடிக்கப்பட்டுள்ளன. ஆங்கிலேயர்களின் காலனிய ஆட்சிக் காலத்தில் உருவான சிற்றூரின் வரலாறு, அதன் இயற்கை எழில், மற்றும் அடிக்கடி ஏற்படும் வெள்ளப் பிரச்சினைகள் விரிவாக காட்டப்பட்டுள்ளன.
கதை 25:
இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள "உண்மை நின்றிட வேண்டும்" தலைப்பில் உள்ள இக்கதை, நவீன துப்பறியும் கதைகளுக்கேற்ப சமூக சிக்கல்களையும், அரசியல் வலைப்பின்னல்களையும், அவற்றின் பின்னிருக்கும் ஊழல்களையும், அவ்வூழல்களுக்கு ஊற்றுக்கண்ணாக இருக்கும் முதலாளிகளையும் ஒருங்கிணைத்துள்ள பரபரப்பான மர்மங்கள் பற்றிய கதையாகும். சமூகநலப் போராளி சந்தோஷ்குமார் மர்மமான முறையில் இறந்து போவதிலிருந்து தொடங்கி, ஒரு தனியார் துப்பறியும் குழு அதன் பின்னணியில் இருக்கும் உண்மையை கண்டுபிடித்து உண்மையை வெளிக்கொணரும் முயற்சியே கதையின் மையக்கருத்து.
இதுவரை, நாம் திரு ஸ்ரீவியின் கதைகளின் சுருக்கத்தைப் பார்த்தோம். இனி இக்கதைகளின் நிறை மற்றும் குறைகளைப் பார்ப்போம்.
கதை சொல்லுதல் ஒரு கலையாக மட்டுமின்றி, சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய சக்தியாகவும் விளங்க வேண்டும் என்ற ஒரு கருத்தோட்டமும், அதற்கு நேர் எதிராக "கலை என்பது கலைக்காகவே" என்ற கருத்தோட்டமும் காலங்காலமாக இருந்து வந்திருக்கின்றன. கலை என்பது நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களின், சமூகத்தின், வாழ்வைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி. உண்மையைத் தேடுவதே, அந்த உண்மையை உரக்கச் சொல்வதே கலையின் நோக்கம்; தீர்வு கூறுவதல்ல என்ற இடைநிலைப் பார்வையும் உண்டு. திரு ஸ்ரீவியின் கதைகளின் நோக்கம் மனிதநேயம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு. மேலும், முயன்றால் இந்தச் சமூகத்தின் அவலங்களை மாற்றலாம் என்பதுவும் ஒரு மையப்புள்ளியாக அமைகிறது இக்கதைகளில். அனைத்துக் கதைகளிலும், கதை நாயகர்கள், நாயகிகள் உயரிய எண்ணமும், மன உறுதியும் கொண்டவர்கள். சிறுமை கண்டு பொங்குபவர்கள். பொங்குவதோடு நிற்காமல், மாற்றத்துக்காக போராடி அதில் வெற்றியும் காண்பவர்கள். இக்கதைகளைப் படிக்கும் அனைவரும், நம்மால் இக்கதைகளின் நாயகர்கள், நாயகிகள் போல இருக்க முடியாதா என்ற எண்ணம் எழுந்து, தங்களைச் சுற்றியுள்ள சமூகத்தில் ஒரு சிறிய அல்லது பெரிய நல்மாற்றத்தைக் கொண்டு வந்தால், அதுவே இக்கதைகளின், ஆசிரியரின் மிகப் பெரிய வெற்றி என்று கொள்ளலாம். அவ்வாறே ஆகுக என்று நாமும் விழைவோம்; வாழ்த்துவோம்.
திரு மு வரதராசனாரின் கதைகளைப் பற்றிச் சொல்லும் போது, ஒருவர் சொன்னார் "மு. வவின் கதை மாந்தர்கள் தரையில் நிற்பதில்லை. தரைக்கு மேல் அரை அடி உயரத்தில் நிற்கிறார்கள்". திரு ஸ்ரீவியின் கதை மாந்தர்களுக்கும் இது பொருந்தும். இது குறையா அல்லது நிறையா என்பது அவரவர் மானப்பக்குவத்தைப் பொறுத்தது. தருமன் ஊர் சுற்றி வந்து "ஊரில் ஒரு கெட்டவர் கூட இல்லை" என்றானாம். துரியன் ஊர் சுற்றி வந்து "ஊரில் ஒரு நல்லவர் கூட இல்லை" என்றானாம். அதே போல, இக்கதை மாந்தர்கள் திரு ஸ்ரீவி அவர்களின் ஆழ்ந்த நம்பிக்கைகளையும், அவர் ஈடுபட்ட இயக்கத்தின் போராட்டக் குணத்தையும், சமூகத்தை மேம்படுத்த வேண்டும் என்ற அந்த இயக்கத்தின் வேட்கையையும் பிரதிபலிக்கிறார்கள் என்று கொள்வோம். நம்பிக்கை தானே வாழ்க்கை! இக்கதைகள் அனைத்தும் முயன்றால் முடியாதது இல்லை; நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும் என்றே திரும்பத் திரும்ப சொல்கின்றன. நம்பிக்கையை விதைக்கின்றன.
இக்கதைகளின் இன்னொரு பொதுவான அம்சம், கதை மாந்தர்களின் அக வாழ்க்கை அறவே இல்லை என்பதுவும். கதைகள் வெளி விவரணைகளாலும், ஆசிரியரின் அவதானிப்பு மற்றும் பார்வைகளாலும் நிரம்பி உள்ளன. கதை மாந்தர்களின் குரல், அவர்களது நினைவுகள், ஐயங்கள், சமரசங்கள் போன்ற நிகழ்வுகள் இல்லை என்றே சொல்லிவிடலாம். கதை மாந்தர்கள் அனைவருமே ஒன்று தூய வெள்ளையாக இருக்கிறார்கள் அல்லது மிகக் குறைவான சிலர் தூய கருப்பாக இருக்கிறார்கள். நாம் பார்க்கும் மனிதர்களோ, வெள்ளை, கருப்பு மற்றும் பலவித நிறங்கள் கொண்டவர்களாக இருக்கிறார்கள் தானே?
ஆனால், இவை எல்லாம் பெரிய குறைகள் என்று கருத மாட்டேன். காரணம், திரு ஸ்ரீவி இக்கதைகளை எழுதிய நோக்கம் ஒரு உளவியல் நோக்கம் அல்ல; இந்தச் சமூகம் இப்படிச் சீரழிந்து கிடக்கிறதே, அதை மாற்ற வேண்டுமே என்ற ஆதங்கமும், நாம் படைக்கும் கதை மாந்தர்கள் அவற்றைச் செய்து, ஓர் எடுத்துக்கட்டாக இருக்கட்டுமே என்ற நோக்கமும் தான். அந்த நோக்கத்தில் திரு ஸ்ரீவி வெற்றி பெற்றிருக்கிறாரா என்பது, முன்பே சொன்னது போல, இக்கதைகளைப் படிக்கும் ஒவ்வொருவரும் சமூகத்தில் ஒரு சிறிய அல்லது பெரிய நல்மாற்றத்தைக் கொண்டு வருவதில் தான் இருக்கிறது.
என் மீது நம்பிக்கை வைத்து இக்கதைகளுக்கு முன்னுரை எழுதச் சொன்ன திரு ஸ்ரீவிக்கு எனது நன்றிகள்.
அன்புடன்
இரா சண்முக சுந்தரம்
***********************************************
பாரதியின் வைரவரிகள் தந்த கதைகள்
நற்றுணையாவது நம் தமிழே
நற்றமிழ் என்றால் நம் உயிரே
என்பதை ஒப்புக்குச் சொல்லவில்லை ஓர் உரையாகச் சொல்லவில்லை உளமாரச் சொல்லி உள்ளீர்கள் என்பதை இந்நூலை வாசிக்கையில் உணர்ந்தேன்.
எத்துணைக் காதல் தமிழ்மீது பூத்திருந்தால், நித்தம் அந்நினைவோடு, தமிழை நேசிப்போரை எல்லாம் நேசித்து அவர்கள் வாய்மொழி உரைகளை, வைர வரிகளை யாவரும் நுகரவும், எவ்விடத்தும் தமிழர் மாண்பு பரவவும் முழுமூச்சாய் முயன்றிருப்பீர்கள். அதற்காக எத்தனை நூல்களை வாசித்து உள்ளீர்கள்.
மலர்தேடி பறந்தோடும் தேனியென வரலாற்று உண்மைகளை, வாழ்வாதாரம் நாடிப் போராடிய சின்னஞ் சிறு வீரச் சிறுமியரின் போராட்டங்களை, என உணர்த்தப்பட வேண்டிய பல உன்னதக் கருத்துத் தேன்துளிகளை கவர்ந்து வர பறந்திருக்கிறீர்கள் பல நூலகங்களாம் அறிவாலயங்களுக்கு என்று வியக்கிறேன்.
அயராது பாடுபட்டு அளப்பரிய செய்திகளைச் சேகரித்து அழகு தமிழில் வடித்துள்ள உங்கள் படைப்பு கண்டு மலைக்கிறேன்.
சுதந்திரப் போராட்டத்தில் பெயர் பொறித்த லீலாவதியை, சித்திரக்குளத்தில் உதித்திருந்த சின்ன வள்ளல் லூர்துவை, அவனால் கவரப்பட்டு அந்த ஊருக்கு உதவிய அறிவழகனை,
என்று நாட்டுப்பற்று கதைகள் ஒருபுறம் என்றால்,
ராம், செல்வா, ஜான்,மரியா, என்ற துள்ளலும் துடிப்பும் கொண்ட இளைஞர் குழாம், சந்தோஷ் என்ற நல்லுள்ளம் கொண்டவரின் மரணத்தில் உள்ள மர்மங்களைக் கண்டறியும் திகில் கதையும், வசும்பத்தியின் விடாமுயற்சியால் எழுப்பப்பட்ட டேம்கள் அதிலும் குறிப்பாக வசும்பத்தி-ஜான்ஸன் டேம் பற்றியும், தில்லையாடி வள்ளியம்மை பற்றிய உணர்வு பூர்வமான உண்மைக்கதையும் (இதைச் சொல்ல ஜோகன்ஸ்பர்க் வரையிலும் நம்மைக் கூட்டிச் சென்றதற்கு தனிப் பாராட்டு)
உளம் தொட்டதென்றால் மிகையில்லை.
குணாளன் என்ற சாதாரண தள்ளு வண்டி வியாபாரியின் வாயிலாக எத்தனை தத்துவ முத்துகளை உதிர்த்துள்ளீர்கள் வாழ்க்கைப்பாடம் மிக இயல்பாய் கதையோடு ஒன்றி அற்புதமாய் எடுத்தாளப்பட்டுள்ளது. விடாமுயற்சியினால் வென்ற ரௌலிங், ஷெனாய் வாசித்த சின்னஞ்சிறு மொட்டு உதிர்த்த சீரிய கருத்துகள் என வரிக்கு வரி ரசிக்கும்படியும் உளம் களிக்கும்படியும் கருத்துக் களஞ்சியமாகத் திகழ்கிறது தங்கள் நூல்.
இன்னொன்றும் சொல்லவேண்டும். ஆவணங்கள், சான்றுகள், வரலாற்று உண்மைகள் என்ற வரிசையில் அண்டை வீட்டினர் சொன்ன கதைக்கும் வாய்ப்பு வழங்கி உள்ளீர்கள். அதுதான் சற்று தனித்து நிற்கிறது. உடன்படவும் இயலாமல் ஒதுக்கிடவும் இயலாமல் உள்ள ஓர் கருத்தை துணிவுடன் கதையாகப் படைத்துள்ளீர்கள்.
உங்கள் முயற்சியும், செயல்பாடும் நூல் முழுவதும் விரவிக் கிடக்கிறது வாழ்த்துகள்.
மைதிலி ராமையா.
(குறிப்பு- நால்வர் குழு கொலையைக் கண்டறியும் கதையில் சில நெருடல்கள் உள்ளன. இத்தனை தடயங்கள் தண்டவாளத்தில் இவர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை. உண்மையான விசாரணை என்றாலும், மறைக்கப் பார்த்தாலும் தடயங்களை அவர்களே கைப்பற்றி விடுவார்கள் அல்லவா விட்டுச் செல்ல மாட்டார்களே. இது மனதில் பட்டது எனவே உரைத்துள்ளேன். மற்றபடி கதை நகர்வு வெகு சுவாரஸ்யம்.)
~ மைதிலி ராமையா எழுத்தாளர்,
கவிஞர்.
***************************
************************************************
எனது நண்பரும் மகாகவி பாரதி தமிழ்ச்சங்க தலைவரும் ஆகிய திரு ஶ்ரீவியின் புதிய அவதாரம் “*எழுத்தாளர்”*
எழுத்தாளர் திரு ஸ்ரீவி அவர்களது பண்பாட்டு உணர்வும் சமூகப் பொறுப்பும் சேர்ந்த எழுத்துத் தேனீட்டிலிருந்து பிறந்துள்ள இந்தக் கதைத்தொகுப்பு – “*பாரதியின் வைர வரிகள் தந்த கதைகள்”*– எனக்கு முதலில் ஒரு வாசகனாகவே பரவசம் அளித்தது. அதன் பிறகு, இதற்கான முன்னுரை எழுத தூண்டியது “எனக்குத் தகுதி உள்ளதா?” என்ற ஐயம் ஒரு கணம் தோன்றியது. ஆனால், அவர் என்னை நம்பி எழுத்துப்பிழை (proof reading) கண்டறியும் படி கூறி தட்டச்சு பதிப்பை பகிர்ந்தது, இதை எழுதத் தூண்டிய உந்துசக்தியும், என் உள்ளத்தில் நிலைத்துப் போனது.
இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதைகள், பாரதியாரின் சிந்தனைகளுக்கு நேரடி பிரதிபலிப்பாக மட்டும் இல்லாமல், அவற்றை நவீன வாழ்வியல் சூழலில் உயிரூட்டும் முயற்சிகளாகவும் அமைந்துள்ளன. ஒவ்வொரு கதையும் – கிராமத்திலிருந்து நகரம் வரை, வரலாற்றிலிருந்து சாமானியரின் வாழ்வளவுகள் வரை – இந்திய வாழ்க்கையின் பல தரப்புக்களையும் தொட்டுச் செல்லுகின்றன. இதனாலேயே, இவை வாசகரின் மனத்தில் நெஞ்சுறுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
திரு ஸ்ரீவி அவர்களின் எழுத்தில் உள்ள பெருமை, அவரது கதாபாத்திரங்களில் நம்மைப் போல் தோன்றும் மக்களை வாழ்வாதாரச் சிக்கல்கள், மன உளைச்சல்கள், சமூக உணர்வுகள், மத நல்லிணக்கம், வரலாற்று தேடல்கள் மற்றும் மனித நேயத்தின் விசித்திரத் துளிகள் மூலம் நம்முடன் உரையாடச் செய்கின்றன. கதைகள் பல நேரங்களில் பாரதியின் எண்ணங்களுக்குச் சூழலான கவிஞரின் வீர சொற்களை ஒத்திசைக்கின்றன. “*யார்க்கும் எளியனாய்…யார்க்கும் இனியனாய்…”* என்ற வரிகளின் உயிரோட்டமே, இத்தொகுப்பின் அடித்தளமாக அமைந்துள்ளது.
மகாகவி பாரதியாரின் ஒவ்வொரு வரியையும் உணர்ந்து, அதை வாசகர் வாழ்வுக்குள் ஊற்றுவதாக, சிறப்பாக செயல்பட்டுள்ளார். கற்பனை, வரலாறு, வாழ்க்கை அனுபவம், உணர்ச்சி, சமூக சிந்தனை – இவை அனைத்தும் கூடிய இந்தத் தொகுப்பு, வாசகனை சிந்திக்கவும், உணர்வுபூர்வமாக அனுபவிக்கவும் செய்கிறது.
இது ஒரு கதைத்தொகுப்பாக மட்டுமல்ல; இது ஒரு உணர்வுத் தொடர். பாரதியாரின் பார்வையில், நம்மை மீண்டும் மீண்டும் நோக்க வைக்கும் ஒரு கண்ணாடி.
இத்தொகுப்பைப் படிக்கும்போது, நீங்கள் வாழ்க்கையின் பல பரிமாணங்களையும் பார்க்கலாம். சில கதைகள் உங்கள் கண்ணில் பனித்துளிகளை வரவழைக்கும், சில மனதைக் கசக்கும், சில சிந்திக்க வைக்கும். ஆனால் எல்லா கதைகளும் வாசிக்கத் தூண்டும்.
எனவே, இந்த தொகுப்பை நீங்கள் படிக்கத் தொடங்கும் அந்தச் சின்னக் கணம் – உங்கள் மனதில் நீண்டபொழுதுகள் ஒலிக்கப்போகும் ஒரு சிந்தனைக்குரலாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
********************************************************************
பாரதியின் வைர வரிகள் தந்த கதைகள்- பாகம்-1
ஶ்ரீவீ ஐயாவின் படைப்பு
-------
ஐயாவின்நூலை மதிப்பீடு செய்து விமர்சனம் செய்ய எளியவன் எனக்குத்தகுதி உள்ளதா என்பதே விடை தர இயலாத வினா.
ஆனால்ஒரு படைப்பாசிரியர் தமது படைப்புகளைப்பற்றிய கருத்துகளை வரவேற்கிறார்- நல்லவை ஊக்குவிக்கும்; அல்லவை திருத்தங்களை,மேற்கொள்ள உதவும், என்பதால் ,
இந்த முயற்சி.
இந்த நூலில் 25 வைரங்கள், அல்ல , அல்ல, வைரவரிக்கதைகள் உள்ளன. மொத்தமாக ,
தமிழ்தாயின் மூக்கில் அணிவிக்கப்பட்ட வைர பேசரி!
கதை கதையாகப்பார்த்து கருத்திடாமல், ஒரு முழுமையான பார்வையில் காண முயல்கிறேன்.
கதை சொல்வது, கதை கேட்பது என்பது நம் தமிழர் உணர்வில் ஊறிய ஒன்று.
கதை கேட்டே வளர்ந்த தலைமுறைகள் ஏராளம்.
அதிலும் நல்ல கருத்துகளைப் பொதிந்து கூறும கதைகள் தேனில் தோய்த்த பலாச்சுளைகள் போல.
-இங்கும் அப்படியே!
சுவைத்தேன்; இன்னும்அந்த தமிழ்த்தேன்கனிச்சுவை நாவை விட்டு அகலவில்லை!
பல இடங்களை, நம்நாட்டிலும் வெளி நாட்டிலும் உள்ள இடங்களை,அழகுபட விவரித்து, கதைகளின் களங்களாக வைத்தது நல்ல உத்தி.
அதிலும் அந்த அந்த இடங்களை, சொல்லோவியமாகத் தீட்டுகின்ற தூரியத்
திறமை அபாரம்.
சென்ட்ரல் ஸ்டேஷன் கண்முன்னால் நிற்கிறது!
இன்றைய சமூகத்துக்குத் தேவையான பல கருத்துகள்/செய்திகள்/ அறிவுரைகள், பல கதைகளின் மையக் கருத்துகளாக அமைந்துள்ளன. சிறு கதைகளை, சிறப்புக்கதைகளாக மாற்றுவதே , மையக்கருத்துகளாம்.
இங்கோ, சிறப்போ, சிறப்பு.
நீர் மேலாண்மை, குள சீரமைப்பு போன்ற " நீரின்றி அமையா உலகை "நிலை நாட்ட மூன்று கதைகள். இன்றும் பல குளங்கள் மீட்கப்பட காத்து இருக்கின்றன.
அதிகாரிகள் மனம் ஈரப்பட வேண்டும். கதைக்கும் மற்றும்கதை விடும் அவர்கள் காதில் இந்தக்கதைகள விழுந்தால், விடியல் கிடைக்கலாம்.
பல கதாபாத்திரங்கள் நல்லவர்களாகவும், ஈர மனம் படைத்தவர்களாகவும் உள்ளனர்.
பாத்திரப்படைப்பில் குற்றமா?
இல்லை.
நல்ல கருத்துகளை வெளிக்கொணர இம்மாதிரிப் பாத்திரங்கள் தேவை போலும்.
நான் மக்கள்திலகம் அவர்களின்படங்களைப்பார்த்து, இரசித்து வளர்ந்தவன். அவர் இம்மாதிரிப் பாத்திரங்களில்வந்தே மக்கள் மனதில் இடம்
பிடித்தவர். எளிய நலிந்த மக்கள் தாங்களே தீய சக்திகளுக்கு எதிராகப் போராடி வென்றது போல உணர்வை உண்டாக்கியவர்.
அந்த உணர்வு இக்கதைகளைப்படிக்கும்போது,
என்க்கும் கிட்டியது.
பல" நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட நெஞ்சும்" கொண்ட வீராங்கனைகளைக் கொண்டாடும்கதைகளும் உண்டு.
உரிமைப்போராளி தில்லையாடி வள்ளியம்மை நினைவாக அரசின் எழுமூர் கைத்தறி மாளிகைக்கு அவர் பெயர் இடப்பட்டுள்ளது.
விளயாட்டு வீரர்கள்/ வீராங்கனைகள் முட்டுக்கட்டைகளை
எதிர் நீச்சல்போட்டு தகர்த்து எறிந்த கதைகளும்உண்டு.
ஆன்மீக, மத சம்பந்தமான விழாக்களில் பணம் படைத்தவர்களின் ஆதிக்கம் நமக்கு மிகவும்பழக்கமான ஒன்றுதான்.
அதை ஒரு கதை சுட்டுகிறது.
மகா கும்பமேளா நடந்தது .
ப்ரயாக்ராஜில்;வாரணாசியில் அல்ல. திருத்தம்
தேவைப்படலாம்.
கதைகள் பல கால கட்டங்களில்
நடை பெறுவதாக அமைக்கப்பட்டுள்ளன.
காலத்திற்கு ஏற்ப சூழ்நிலைகள், பாஷைகள் என விவரித்து இரசவாத வித்தை புரிகிறார் படைப்பாளி.
வேலை தேடுபவர்களின் அவல நிலை,நவீன துப்பு துலக்கும்முறைகள் என காலத்துக்கு ஏற்ற மையக்கருக்களையும் விட்டு வைக்கவில்லை.
இந்நூலில் உள்ள பல கதைகள் குறு நாடகங்களாக நடிக்கவோ, வலையொலியில் படிக்கப்பட்டு பகிரவோ ஏற்றவை.
மொத்தத்தில் புத்தம் புதிய புத்தகம்; புரட்டப் புரட்ட , படிக்கப் படிக்க ஆவலை அதிகரிக்கும் கதை சொல்லும் திறன்.
இரசித்தேன்; பகிர்ந்தேன்,
யான்பெற்ற இன்பம் பெறுக, நம்" பூர்வ" தமிழ்க்குடிகள், என்று.
- .மோகன்
************************************************************************