Thursday, November 27, 2025

சிலம்போடு ஒரு பயணம்

 *{6} இளங்கோ காவியம் எழுத ஒப்புதல்*


குறிஞ்சி மக்கள் கூறியதைக் கேட்டு 

கற்சிலையாய் நின்ற இளங்கோவிடம் 


கூல வாணிகன் தாமே முன்வந்து 

கற்பு நிறை நின்ற கண்ணகிக் கதையை 


மனம் உவந்து சொல்லியதோடு 

அக்காப்பியத்தை அடிகளே வடித்தெடுக்க 

வேண்டுகோளும் வைத்திடவே 


மணி மகுடம் துறந்து சமண துறவியாய் ஆன இளங்கோ அடிகளும் 

தன் நண்பர் கூறியதைக் கேட்டு


*அரைசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்று ஆவதூஉம்* – எனப் பகன்று 

கண்ணகி காப்பியத்தை எழுதவும் முடிவெடுத்தார்.


தன் தோழர் சாத்தனாரிடம் 

*உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும், ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பதும், சூழ்வினைச் சிலம்பு காரணமாக, சிலப்பதிகாரம் எனும் பெயரால், நாட்டுதும் யான் ஓர் பாட்டுடைச் செய்யுள்* என உறுதி சொன்னார்.


இளங்கோ அடிகளின் இந்தக் கூற்றில் 

ஊழ்வினை காரணமாக 

கோவலன் மாண்டான் 

எனும் கருத்து எதிரொலிப்பதை 

காணலாம் நாமும்.


சிலம்பொடு நாம் பயணிக்கையில் 

நமக்கு ஒன்று உறுதியாய் புலப்படுகிறது. 

ஐம்பெருங் காப்பியங்கள் ஐந்திலுமே 

ஊழ்வினையே முந்தி வந்து நிற்கிறது.


உலகப் பொதுமறை தந்த 

ஐயன் வள்ளுவனும் 

ஊழ்வினைக்கென ஓர் அதிகாரமே படைத்தான்.


சங்க இலக்கியங்களில் முந்தைய தான பதினெண்மேற் கணக்கு நூல்களில் 

ஊழ்வினை பற்றி குறிப்புகள் இல்லை. 


பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளில் மட்டும் ஓர் அதிகாரம் ஊழ்வினைக்காய் உண்டு. 


சங்க இலக்கிய காலத்தைத் தொடர்ந்து 

வந்திட்ட ஐம்பெருங் காப்பியங்களில்

ஊழ்வினையே முக்கிய பாத்திரம் 

வகிப்பதை அறிக! 


சங்ககாலத்தில் 

தொல்குடியினர் யாவரும் 

ஊழ்வினை என்ற ஒன்று 

இருப்பதாகக் கருதவில்லை 

எனக் கொள்க!!


சங்ககாலத்திற்கு பின்னரே, 

காப்பியங்கள் படைக்கப்பட்ட காலத்தில் 

ஊழ்வினை என்பது 

கருப்பொருளாய் ஆனது

என்பதை உணர்க.


இளங்கோ உறுதி கூறிய பின், 

சீத்தலைச் சாத்தனார் 

மனம் குளிரக் கூறலானார்:


*முடி கெழு வேந்தர் மூவர்க்கும் உரியது அடிகள் நீரே அருளுக* என மகிழ்வோடு வழிமொழிந்தார். 


(சிலம்பொடு நம் பயணத்தை தொடர்வோம்..)


*ஶ்ரீவி*

Tuesday, November 25, 2025

காத்திருந்து....

 நற்சுனை 24


காத்திருந்து....


காத்துக் கொண்டிருக்கின்றன...

துரத்தப்படாத கனவுகளும்..

மன்னிக்கப்படாத உறவுகளும்..


உறங்கிக் கொண்டிருக்கின்றன...

முயலாமையின் மடியில் 

முளைத்து எழும் முயற்சியும். 

இயலாமையின் மடியில் 

மன்னித்துவிடும் முதிர்ச்சியும்..


இன்று விழிக்கவேயில்லை!


நாளை 

அடுத்த வாரம்

அடுத்த மாதம்

அடுத்த வருடம்

என்றோ ஒரு நாள்.....

உறக்கம் கலைந்துவிடும் என

காத்திருக்கலாம்...


காத்திருப்பது கடினமில்லை..

ஏனோ காலத்தற்கு காத்திருக்க தெரியவில்லை...


- சாய்கழல் சங்கீதா

தாத்தாவின் பெருமை

 பெயர்த்தியைப் 

பள்ளியிலிருந்து 

அழைத்து வரும் 

மதிய வேளையில் 


சாலையில்,

தேர்க் காலில் 

அடிபட்ட கன்று போல 

தண்ணீர் லாரியில் 

அடிபட்ட ஒரு 

நாகப்பாம்புக்குட்டி.


நியாயம் கேட்க 

சோழனுமில்லை 

ஆராய்ச்சி 

மணியுமில்லை.


பாம்பைப் பார்த்துப் 

பயந்த பெயர்த்தியை 

சமாதானப் படுத்த,


தாத்தா இளவயதில் 

கிணற்றில் தண்ணீர்ப் 

பாம்புடன் விளையாடிக் 

கடி பட்ட கதையைச் 

சொல்ல,  


பெயர்த்தி 

நாளை பள்ளியில்,

வகுப்புத் தோழர்களிடம்

நா.முத்துக்குமாரின் 

"சுண்டு விரல் தாத்தாக்கள்"

போல தாத்தாவின் 

பெருமையைச் 

சொல்வாளோ?


- முகம்மது சுலைமான்,

Sunday, November 23, 2025

23.11.25 : வாசிப்பு வட்டம் அமர்வு விவரணம்

 *23.11.25 : வாசிப்பு வட்டம் அமர்வு விவரணம்*


23 11 25 ஞாயிறு மாலை 5 மணிக்கு சிறுவர்களுக்கான வாசிப்பு வட்டம் துவங்கியது.   


கலந்துகொண்ட குழந்தைகள்:

வருண், 

அகரன், 

ஆதவன், 

ஹர்ஷிதா, 

ஆராதனா, 

ஜனனி, 

சாய் பிரணவ், 

ருத் விக்ரம், கௌசலேஷ், அவினாஷ், 

ஸ்ரீராம், 

அர்ஃபா, 

அர்மான், 

ஸ்ரீ நிகேதன், 

நித்தின், 

இளமாறன்.


வழக்கம் போல புதிய செயல் திட்டங்களுடன் பொறுப்பாளர் திருமதி. மகாலட்சுமி அந்த அமர்வை நடத்தினார். நவம்பர் 14 நடந்த குழந்தைகள் தின சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு வழங்கிய நூல்களை படித்த குழந்தைகள் அதனைப் பற்றி பேசலாம் என்று சொன்னதும், ஜனனி, நித்தின், அர்மான், வருண் ஆகியோர் தாங்கள் படித்த கதைகளை கூறினர். அதன்பின் கலந்து கொண்ட குழந்தைகளை மூன்று அணியினராகப் பிரித்து, அவர்களிடம் ஓர் எழுத்து அடங்கிய சிட்டுகளைக் கொடுத்து அவற்றை வைத்து சொற்களை எழுதுமாறு கூறினார். குழந்தைகள் மிகச் சிறப்பாக அதனை செய்து முடித்தனர். முதல் அணி 40 சொற்களையும் இரண்டாவது அணி 35 சொற்களையும் மூன்றாவது அணி 33 சொற்களையும் கண்டுபிடித்து இருந்தனர். இந்த விளையாட்டை குழந்தைகள் மிகுந்த ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் விளையாடியதோடு, பல்வேறு புதிய சொற்களைக் கண்டுபிடித்தது மிகச் சிறப்பாக இருந்தது. இதனை வடிவமைத்த மகாலட்சுமி அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். 


பின்னர் பெரியவர்களுக்கான வாசிப்பு வட்ட அமர்வு தொடங்கியது. அதில் கலந்து கொண்டோர்: 


ஸ்ரீவி, 

சிவகாமி, 

மல்லிகா, 

தேவி அருண், 

நா கணேசன், சுல்தானா, தியாகராஜன், 

தியா அனில்,  

லட்சுமி நாராயணன். 


இந்த அமர்வில் லட்சுமி நாராயணன் அவர்கள் *திரு. ஜெயமோகன் எழுதிய அறம்* கதைத் தொகுப்பிலிருந்து அறம் எனும் கதையை வாசித்தார். 

1950 களில் எழுத்தாளர்களின் நிலை எவ்வளவு வறிய நிலையில் இருந்தது என்பதும் பதிப்பகத்தார் அவர்களை எப்படி வஞ்சித்தார்கள் என்பதும், இரு எழுத்தாளர்களுக்கு இடையே நடக்கும் உரையாடல் மூலம் விளக்கியது மிக அருமையாக இருந்தது. நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து அதனைப் படித்து பிறரை மகிழ்விக்கின்ற திரு. லட்சுமி நாராயணன் அவர்களுக்கு நன்றி. 


நேரமின்மை காரணத்தாலும் அதிக நபர்கள் இல்லாத காரணத்தாலும்

இலக்கண வகுப்பு இன்று நடைபெறவில்லை.


இந்த அமர்வுகளில் குழந்தைகளுக்கான அமர்வில் 15 க்கும் குறையாத குழந்தைகள் தொடர்ந்து கலந்து கொள்வது சிறப்பானது என்றாலும் அந்த எண்ணிக்கையை அதிகப் படுத்த வேண்டும். 


மற்ற அமர்வுகளை விட இந்த அமர்வில் கலந்து கொண்ட பெரியவர்களின் எண்ணிக்கை பத்துக்கும் குறைவாகவே இருந்தது என்பது கவலையைத் தருகிறது. இதைப் பற்றியும் சரியான திட்டமிடுதலும் நடைமுறைப் படுத்துதலும் தேவை.  


இவற்றை மனதில் கொண்டு, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தங்கள் பணிகளை செய்திட வேண்டும். 


*ஶ்ரீவி*

தலைவர்.

Friday, November 21, 2025

சிலம்போடு ஒரு பயணம்

 *{5} இளங்கோ அடிகளின் நண்பர் சாத்தனார் அவரை கண்ணகி வரலாறு எழுதச் சொல்லுதல்*


குன்றத்துக் குறவர்கள் கூறியதெல்லாம் 

செவி மடுத்த இளங்கோவும் சிலையாய் நின்றார் ..

சாத்தியந்தானா இதுவென்று மலைத்து நின்றார். ..


இளங்கோவின் முகக் குறிப்பினை பார்த்தார் சாத்தனார்.

அடிகளின் வியப்பை போக்குதல் தன் கடன் என்று உணர்ந்தார். 


*யான் அறிகுவன் அது பட்டது*

என இளங்கோவிடம் சொல்லலானார் 

தானறிந்த கண்ணகிக் கதையை 

அடிகள் அறிய கூறலானார். 


பூவுலகம் புகழ் 

புகார்ப் பட்டினத்தில்

மாசாத்துவான் 

மாநாய்க்கன்

எனும் வணிகப் பெருமக்கள் 

தம் வாரிசுகளான 

கோவலன்–கண்ணகி

மணம் முடித்த நிகழ்வோடு துவங்கி,


கோவலன் நாடகம் ஏத்தும் நாடகக் கணிகையோடு

கொஞ்சிக் குலாவியதால் 

அரும் பொருள் கேடுற 


தன் மனைவி கண்ணகியின் காற்சிலம்பை விற்றுப்பிழைக்க மதுரை ஏகிய கதையும், 


*வினை விளை காலம்* ஆதலின்

தனை மணந்த கோவலனை கண்ணகி

தான் இழந்து போன கதையை 

கண்ணீரோடு சொல்லி முடித்தார். 


தன் கணவன் கொலைக்காக 

நீதி கேட்டுப் போராடிய 

கண்ணகியின் பெருமை சொன்னார்.

*யானே கள்வன்* என்று தன் உயிரைத் தானே விட்ட மதுரை மன்னன்

பாண்டியனும்,

*கணவனை இழந்தோருக்கு காட்டுவதில்* 

என அவனுடன் உயிர் நீத்த கோப்பெருந்தேவியும்,

கண்ணகியின் சீற்றத்தால் எரிந்து தணிந்த மதுரை நகரும்,

மதுரையை எரித்த பின்னர் கண்ணகி

சேர மன்னர்களின் தலைநகரான கொடுங்களூருக்குச் சென்று, 

அங்கு கொடுங்களூர் பகவதி அம்மன் கோவிலில் வணங்கி நின்ற போது,

விண்ணுலகத்தாரே தமது 

பறக்கும் பூப்பல்லத்தில் வந்து 

அழைத்துச் சென்ற நிகழ்வும்

என வரிசையாய் பட்டியலிட்டு உணர்ச்சி பொங்க அவர் பகர்ந்தார். 


கதை கேட்டு கலங்கிய இளங்கோவும் 

வினை விளை காலம்  என்றீரே..

விளக்குவீரோ நீரும் அதை 

எனக் கேட்டார்!


முற்பிறவியில் சிங்கபுரம் எனும் ஊரில் 

சிறந்து விளங்கிய சங்கமன் எனும் வணிகனை 

கோவலன் தன் முற்பிறப்பில் 

பொய் கூறி திருடன் என சொல்லி 

அவன் இறப்பிற்குக் காரணமானதால், 

சங்கமன் மனைவி இட்ட சாபம்

என சாத்தனார் விளக்கம் சொன்னார்.


கண்ணகி கதையை கண்ணீரோடு சொல்லிய பின், 

அடிகளிடம் அவர் விண்ணப்பமும் செய்திட்டார்.


‘நீரே இதனை காவியமாக வடித்திட வேண்டும்’ – என அன்போடு கேட்டுக் கொண்டார்.

அடிகள் அதற்கு என்ன சொன்னார்...! 


தொடர்வோம் தமிழ்ப் பயணத்தை.


*உங்கள் தோழன் ஸ்ரீதே*

சிலம்போடு ஒரு பயணம்

 *{4} இளங்கோவிடம் மலைக்குறவர்கள் தாங்கள் கண்டதைச் சொல்வது*


மணி மகுடம் துறந்து 

அரண்மனை வாழ்வும் துறந்து 

சுகபோக இன்பங்கள் மறந்து 

துறவறம் பூண்ட இளங்கோவோ 

நகரை விட்டு வெளியேறி நாடோடியாய் 

அலைந்து திரிந்தார்.


மலைக்குன்றங்கள் இடையே 

தொட்டில் போல் அமைந்திருந்த 

குணவாயிற் கோட்டம்

எனும் இடம் 

ஒரு பூவுலக சொர்க்கம்.


வானளாவி உயர்ந்திருக்கும் குன்றங்கள்,

குறிஞ்சித் திணையின் வளமையைக் காட்டின 


அடர்ந்த காடுகளும் அதில் வாழ்ந்த உயிரினங்களும் முல்லைத் திணையை முழங்கிக் கூறின.


பச்சை பசேல் 

வயல் வெளிகளோ

மருதத் திணையின் பசுமையை விளம்பின. 


மோகத்தை துறந்து இன்பத்தை மறந்து 

யோக வாழ்வைத் தேடி 

அலைந்திட்ட இளங்கோவும் 

குணவாயிற் கோட்டத்தில்

அமைதியை கண்டார்;

மகிழ்வு கொண்டார்; 

அங்கேயே தங்கினார். 


ஒரு நாள் காலை,

குன்றத்துக் குறவர்கள் 

அடிகளைக் காண 

கூட்டமாய் வந்தனர்.

தேனுடன் திணைமாவும் 

அன்பாய்த் தந்தனர்.

அடிகளின் அடிபணிந்து 

வணங்கி நின்றனர். 


அவர்களோடு அடிகளின் தோழர் சாத்தனாரும் இருந்திட்டார்.

மணிமேகலை எழுதிய 

சீத்தலைச் சாத்தனார்

அடிகளாரின் உற்ற நண்பர். 

தமிழன்னை ஆசி பெற்ற புதல்வர்களில் ஒருவர். 


ஒன்று திரண்டு வந்த 

மலைவாழ் மக்கள் 

அடிகளிடம் 

தாங்கள் கண்ட அதிசய நிகழ்வை 

வியப்பு மேலிட கூறலுற்றனர்.


சினம் கொண்ட பார்வையும் 

சீற்றத்துடன் விட்ட பெரு மூச்சும் 

தலைவிரி கோலமும் 

ஒற்றை மார்பும் 

கொண்ட 

நங்கை நல்லாள் ஒருவளை 

விண்ணுலகத்தார் 

பறக்கும் பூப்பல்லக்கில்

அவள் கணவனுடன் 

வந்திறங்கி 

கையோடு விண்ணுலகம் அழைத்துச் சென்றதை 

கண்கள் விரிய 

வியப்பு மேலிட 

விவரித்தனர். 


சிலப்பதிகாரம் எனும் காவியம் படைக்க

அங்கு தான் விழுந்தது முதற் புள்ளி.

தமிழன்னையும் வழங்கினாள் 

ஆசிகளை அள்ளி.


சிலம்பில் இந்நிகழ்வை விளக்கும் பதிகம்:


"குணவாயில் கோட்டத்து, அரசு துறந்து இருந்த,


குடக் கோச் சேரல் இளங்கோ அடிகட்கு-


குன்றக்க குறவர் ஒருங்குடன் கூடி 


‘பொலம் பூ வேங்கை நலம் கிளர் கொழு நிழல்,


ஒரு முலை இழந்தாள் ஓர் திரு மா பத்தினிக்கு,


அமரர்க்கு அரசன் தமர் வந்து ஈண்டி, அவள்


காதல் கொழுநனைக்

காட்டி, அவளொடு, எம்


*கட்புலம் காண, விட்புலம் போயது*


இறும்பூது போலும்; அஃது அறிந்தருள் நீ’ என- 


(இந்த வரிகளில் எங்கள் கண்முன்னே வந்து விண்ணுலகம் அழைத்துச் சென்றனர் என்பது சிறப்புற உள்ளது 

*கட்புலம்* என்பது *கண் புலம்* எனப் பிரிக்கலாம். எங்கள் கண்முன்னே என்ற பொருள். *விட் புலம்* என்பது *விண்புலம்* ஆகிடும். அதாவது விண்ணுலகம் என்று பொருள்)


பயணம் தொடரும்...


*உங்கள் தோழன் ஸ்ரீவி*

Wednesday, November 19, 2025

 {3} *நெருடலை நீக்கிவிட்டு சிலம்பொடு பயணிப்போம்*


நெஞ்சிலே ஓரிரு நெருடல்கள் 

நெருஞ்சி முள்ளாய் நெருடினாலும் 

நெஞ்சுகுளிர் தீந் தமிழில் 

நிறைவான காப்பியம் தந்தார் 


நெருடல்களை கொஞ்சம் ஒதுக்கிவிட்டு 

சிலம்போடு நாம் பயணிப்போம் வாரீர்!


தமிழன்னையை அலங்கரிக்கும் 

ஐம்பெரும் காப்பியங்களில்

இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படும்

காப்பியங்களில் இது

 ஒன்று 


மாதவியின் பொன்மகளாள் 

மணிமேகலையை 

முன்னிறுத்தி எழுதிய காப்பியம் மற்றொன்று. 


சேர நாட்டின் அரச வம்சம் 

செழுமையாய்த் தொடர பிறந்தவர் இருவர் 

மூத்தவர் செங்குட்டுவனாம் 

இளையவர் இளங்கோவாம்


அரண்மனை வந்த நிமித்திகன் ஒருவன் 

இளங்கோவின் வதனத்தைப் பார்த்து 

‘இவனே சேர நாட்டு அரசன் ஆவான் 

அறமும் மறமும் இணைந்து 

நல்லாட்சி புரிவான்’ –

என சோதிடம் சொன்னான். 


மூத்தவன் செங்கட்டுவனோ 

முகம் வாடலானான்   

மனம் சோர்ந்து போனான். 


தமையனின் முகவாட்டம் பார்த்த 

தம்பியோ உறுதி  பூண்டான்

அரியணை தமக்கில்லை என 

சூளுரைத் தான்

துறவறமும் மேற்கொண்டான்.


அரச போகத்தை அண்ணனுக்காக தியாகம் செய்த 

இளங்‘கோ’

அரண்மனை வாழ்க்கையைத் துறந்து 

சமண அடிகளாய் மாறியது 

காலத்தால் அழியாத காப்பியம் படைக்கவோ!


அரண்மனை வாழ்வில் அரியணையில் அமர்ந்து 

ஆட்சியவர் செய்திருந்தாலும் இறவா புகழ் அவருக்குக் கிடைத்திருக்குமோ?


அண்ணனுக்காய் அரியணை துறந்தார் 

அரச போக வாழ்வை முழுவதுமாய் மறந்தார்

அரசாளும் முடி துறந்ததோடு 

தன் முடியையும் துறந்து 

காவி உடுத்தி சமணத் துறவியும் ஆனார். 


சமணத் துறவியாய் ஆனவர் 

தமிழன்னை தன் கால்களை அலங்கரிக்க 

சிலம்பினை எப்போது அணிவித்தார்! 


காலம் அவருக்கு எப்படி இந்தக் கட்டளை இட்டது! 


அறிய வேண்டுமெனில், 

நம் பயணத்தைத் தொடர வேண்டும்.


தொடர்வோம் நாமும்!


- இ.ச.மோகன் & ஸ்ரீவி,

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...