Wednesday, April 8, 2026

ஹூஸ்டனிலிருந்து வந்த மறுநாள்- பயணக் கட்டுரை( 12)

 பாகம் 12

பயணங்கள் முடிவதில்லை…


ஹூஸ்டனிலிருந்து வந்த மறுநாள்…

இந்தியாவிலிருந்து புதிதாக வந்திருந்த நாங்கள் மூவரும் மட்டுமே அந்த வீட்டில் தனியாக விடப்பட்டிருந்தோம். டெக்சாஸ் துப்பாக்கி மாநிலம்… “கதவை யார் என்று பார்த்த பிறகே திறக்கவும். ஜன்னல் திரைகளை எப்போதும் மூடியே வைத்திருங்கள்” என்ற அறிவுரைகள் எங்களைச் சற்று பதட்டப்படுத்தியிருந்தன. பயணத்தில் எல்லாமே புதிது. எல்லாமே சற்று பயமாகவும் இருந்தது.

மாலை நேர நடைபயிற்ச்சிக்காக வெளியே சென்றோம். ஜார்ஜ் புஷ் டர்ன்பைக் சாலையில், திடீரென 3-4 போலீஸ் வாகனங்கள் சைரன் ஒலியுடன் பறந்து சென்றன. அந்த வேகம், அந்தக் கூர்மையான ஒலி… இதயம் துடித்தது. “என்ன நடக்கிறது இங்கே?” என்ற கேள்வியுடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு, வேகமாக வீட்டுக்குத் திரும்பினோம்.

வீட்டுக்குள் நுழைந்ததும், அமைதியை உடைத்துக் கொண்டு தொலைக்காட்சியும், எங்கள் கைபேசிகளும் ஒரே நேரத்தில் ஒலிக்கத் தொடங்கின. ரோமிங் வசதி இல்லாத போனில் கூட, திடீரென ஒரு பயங்கரமான அலாரம் ஒலி எழுந்தது. திரையில் பளிச்சென்று மின்னிய அறிவிப்பு:

AMBER எச்சரிக்கை, குழந்தை கடத்தல் அவசர நிலை

ஒரு குழந்தை கடத்தப்பட்டிருக்கிறது.

அந்தச் செய்தி என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்நிய நாட்டில், ரோமிங் இல்லாத போனில் இப்படி ஒரு எச்சரிக்கை எப்படி வந்தது? அந்த ஒலியின் தீவிரமும், அதன் திடீர் தன்மையும் இன்னும் என் நினைவில் பசுமையாகப் பதிந்திருக்கிறது. அந்த ஒரு தருணத்தில், அமெரிக்காவின் சமூகப் பாதுகாப்பு அமைப்பின் வலிமையையும், வேகத்தையும் நேரடியாக உணர்ந்தேன்.

AMBER எச்சரிக்கை , ஒரு சிறுமியின் பெயரில் உருவான உயிர்காக்கும் அமைப்பு

1996-ம் ஆண்டு. டெக்சாஸ் மாநிலத்தில் ஆம்பர் ஹேகர்மேன் என்ற 9 வயது சிறுமி கடத்தப்பட்டு, கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்காவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்தச் சோகத்திலிருந்து பிறந்ததுதான் இந்த AMBER எச்சரிக்கை முறை.

(America’s Missing: Broadcast Emergency Response) அமெரிக்காவின் காணாமல் போனவர்களுக்கான ஒளிபரப்பு அவசரப் பதில் என்ற வார்த்தைகளின் முதல் எழுத்துக்களின் சுருக்கமே AMBER.

ஒரு குழந்தை கடத்தப்பட்டதாக போலீஸார் உறுதிப்படுத்திய உடனேயே இந்த எச்சரிக்கை வெளியிடப்படுகிறது. நோக்கம் குழந்தையை விரைவாகக் கண்டுபிடித்து, உயிருடன் மீட்பது ஒன்றே. சமூகமே ஒன்றிணைந்து தேடும் ஒரு பெரிய இயக்கம் இது.

எச்சரிக்கை எப்படி எல்லோருக்கும் சென்றடைகிறது?

மொபைல் போன்கள்: வயர்லெஸ் அவசர எச்சரிக்கை (WEA) மூலம். அருகிலுள்ள செல் டவர்களிலிருந்து ஒளிபரப்பு செய்யப்படும். ரோமிங் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அந்தப் பகுதியில் இருக்கும் அனைத்து போன்களுக்கும் உடனடியாகச் செல்லும்.

•  தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்கள்

•  நெடுஞ்சாலைகளில் உள்ள பெரிய மின்னணு பலகைகள்

•  சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி ஆப்-கள்

எச்சரிக்கையில் குழந்தையின், வயது, உடை விவரம், கடத்துபவரின் தோற்றம், வாகனத்தின் நிறம், எண் அனைத்தும் தெளிவாக இருக்கும். ஒவ்வொரு கண்ணும் விழித்திருக்கட்டும் என்பதே செய்தியின் சாரம்.

போனில் ரோமிங் இல்லாதபோதும் அந்த எச்சரிக்கை வந்ததற்குக் காரணம் இந்த செல் ஒளிபரப்பு தொழில்நுட்பம்தான். இது தனிப்பட்ட SMS அல்ல. ஒரு முழுப் பகுதியில் உள்ள அனைத்து போன்களுக்கும் ஒரே நேரத்தில் செல்லும் அமைப்பு. அதனால்தான் வெளிநாட்டுப் பயணிகளான நாங்களும் அந்த எச்சரிக்கையை உணர முடிந்தது.


அந்த AMBER எச்சரிக்கையைப் பார்த்த பிறகு, என் மனதில் இந்தியா பற்றிய எண்ணங்கள் அலைமோதின. நம்முடைய நாட்டிலும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான கொடூரச் சம்பவங்கள் இன்றும் தொடர்கின்றன. 2012-ம் ஆண்டு டெல்லி நிர்பயா வழக்கு நாட்டையே உலுக்கியது. இன்றும் பல மாநிலங்களில் குழந்தை கடத்தல், பாலியல் துஷ்பிரயோகம், காணாமல் போகும் சம்பவங்கள் இடைவிடாமல் நடக்கின்றன.

அமெரிக்காவைப் போலவே, இந்தியாவிலும் ஒரு தேசிய அளவிலான குழந்தை கடத்தல் எச்சரிக்கை அமைப்பு வலுவாக அமல்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வலுத்தது.


இந்தியாவில் ஏற்கனவே சில மாநிலங்களில் சில முயற்சிகள் உள்ளன. ஆனால் அது இன்னும் தேசிய அளவில், தொழில்நுட்ப ரீதியாக முழுமையான, வலுவான அமைப்பாக உருவாகவில்லை. ஒரு சிறிய தகவல் கூட ஒரு குழந்தையின் உயிரை மீட்கும் சக்தி வாய்ந்தது.


 அந்த மாலை நடைபயணம் வெறும் உடற்பயிற்சியாக முடியவில்லை. அது எனக்கு ஒரு ஆழமான பாடத்தை கற்றுக் கொடுத்தது, சமூக ஒற்றுமையின் வலிமை.

ஒரு குழந்தை ஆபத்தில் இருக்கும்போது, அந்நியர்கள் கூட ஒன்றிணைந்து தேடுகிறார்கள். போலீஸ், ஊடகம், பொதுமக்கள் அனைவரும் ஒரே இலக்கில் செயல்படுகிறார்கள். அந்த AMBER எச்சரிக்கை ஒலி இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அது ஒரு அலாரம் மட்டுமல்ல… அது ஒரு அழைப்பு:

நீயும் பார்த்துக் கொள். நீயும் உதவி செய்.


ஒரு சிறிய எச்சரிக்கை… ஒரு உயிரை காப்பாற்றலாம்.

இந்தப் பயணம் எனக்கு அளித்த மிகப் பெரிய பரிசு மனிதாபிமானத்தின் அழகை நேரில் காணும் வாய்ப்பு. அடுத்த முறை எந்த நாட்டுக்குச் சென்றாலும், அந்த நாட்டின் மக்களின் பாதுகாப்பு அமைப்புகளை மிகுந்த மரியாதையுடனும், பாராட்டுடனும் பார்ப்பேன்.

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...