•••••••••••••••••••••••••••••••
*{14} சிலம்பொடு ஒரு பயணம்*
*கோவலன் கண்ணகி இல்வாழ்க்கை சிறப்புற நடந்தது*
•••••••••••••••••••••••••••••••
கயமலர்க் கண்ணியாம் கண்ணகியும்
காதல் கொழுநனாம்
கோவலனும்
இயைந்த இல்வாழ்க்கையை இனிமையாய்த்
துய்க்கின்றனர்.
அடிகள் அந்த அழகை *சூரியனும் சந்திரனும் போல* எனும் பாடலில் அழகாக விவரிக்கிறார்:
*கதிர் ஒருங்கு இருந்த காட்சி போல, வண்டு வாய் திறப்ப நெடுநிலா விரிந்த*
ஏழெடுக்கு மாளிகையில்,
நிலா முற்றத்தில் தென்றல் வந்து இதமாய் வருட,
வண்ண வண்ண வாசமிகு மலர்கள் பாங்குற அழகாய் அமைக்கப்பட்டிருக்க, மலர் தேடி வந்த வண்டுகள் ரீங்காரமிட
ஆணிப்பொன் கட்டிலில் அமர்ந்தபடி
இருக்கும் கண்ணகியையும் கோவலனையும் பார்த்தால்
'பகலில் உலகை வலம் வரும் சூரியனும்,
இரவில் உலகைக் குளிர்விக்கும் சந்திரனும்
ஒருங்கே அமர்ந்திருப்பது' போல் இருக்கிறதாம் அடிகள் பார்வையில்.
இந்த நயமிகு வரிகளை படிக்கையில் கண்முன்னும் அதே காட்சி விரிகிறது அல்லவா!
தீராக் காதலில் திளைத்த கோவலன் என்ன செய்கிறானாம்! அதையும் பார்க்கலாம்... வாருங்கள்!
*தீராக் காதலின் திருமுகம் நோக்கிக் கோவலன் கூறும் ஓர் குறியாக் கட்டுரை*
என்கிறார் ஆசிரியர்.
காதல் எனும் பெரு நதியில் நீந்திக் களிக்கும் கோவலன் தீராக் காதலுடன் கண்ணகியைப் பார்த்து புகழ்ந்து உரைக்கிறானாம்.
(கட்டுரை : புகழுரை)
எவ்வாறு புகழ்ந்து உரைக்கிறான் தெரியுமா!
சமீபகால திரைப்பட பாடல்கள் துவங்கி பற்பல கவிஞர்கள் பெண்களை வர்ணிக்கும் வர்ணனைக்கெல்லாம் முன்னோடி இந்த *கண்ணகி அழகை கோவலன் புகழ்தல்* எனும் ஒரே பாடல் தான். இந்த கவிநயம் மிகு பாடலிலிருந்து ஒளிரும் சில வைர வரிகளைப் பார்ப்போம்:
*பெரியோன் தருக திரு நுதல் ஆக*
(உலகைக் காக்கும் இறைவன், தன் தலைமேல் இருக்கும் பிறை நிலவையே உன் நெற்றித் திருநுதலாக அமைக என்று அன்பளித்தானோ!)
*உருவி லாளன் ஒரு பெருங் கருப்புவில் இரு கரும் புருவம் ஆக ஈக்க*
(உருவமற்ற அரூபியான மன்மதன், நீ என்னோடு காதல் களத்தில் போரிட்டு வெல்ல வேண்டும் என்பதற்காகவே தன் கரும்புவில்லை உன் விற்புருவமாக அமைத்துக் கொடுத்தானோ!)
*தேவர் கோமான் தெய்வக் காவல் படை நினக்கு அளிக்க அதன் இடை நினக்கிடை என*
(தேவருக்கு அரசன் இந்திரன் வானுலகைக் காக்க கைக்கொண்ட வச்சிரப் படையையே உன் இடையாக இருக்க விட்டு விட்டானோ)
*அறுமுக ஒருவன்...... சுடர் நெடு வேல் ஒன்றும் நின் முகத்துச் செங்கடை மழைக்கண் இரண்டா ஈத்தது*
(ஆறுமுகம் கொண்ட முருக பெருமான் என்னை வெல்வதற்காகவே தன்னுடைய ஒளி பொருந்திய
வேல் படையை உன்னிரு கண்களிலும் பொருந்தச் செய்து விட்டானோ!)
என்றெல்லாம் வர்ணித்துவிட்டு இதுவெல்லாம் போதாது என, வர்ணனையின் உச்சமாக என்ன சொல்கிறார் பாருங்கள்:
*பீலி மணி நிற மஞ்ஞை, சாயற்கு அடைந்து தன் கான் அடையவும்*
(நீல மணி கழுத்தும், கருந்தோகையும் உடைய கோலமயில் உன் சாயலை கண்டு நாணி காட்டுக்குள் போய் விட்டன)
*அன்னம் நல் நுதல் மெல் நடைக்கு அழிந்து நல்நீர்ப் பண்ணை நனி மலர்ச்செறியவும்*
(அழகிய நடைக்கு அடையாளமான அன்னப் பறவையோ உன் நடையை கண்டு நாணி, நீர் நிறைந்த தடாகத்தில் மலர்களுக்கு இடையே போய் ஒளிந்து கொண்டது)
*பசுங்கிளியே குழலும் யாழும் அமிழ்தும் குழைத்த நின் மழலைக் கிளவிக்கு வருந்தினவாகியும்,*
(பச்சைக்கிளியும் குழலும் யாழும் அமுதோடு சேர்த்து கலந்தது போல் இனிக்கும் உன் மழலைப் பேச்சுக்கு முன்னே தோற்றுப் போனதை எண்ணி வருந்தி நிற்கின்றன)
என்று அவள் அழகை அற்புதமாக வர்ணித்து விட்டு, நிறைவாக ஒரு வரியில் வரப்போகும் துன்பவியல் நிகழ்வை மறைமுகமாக குறிப்பு உணர்த்துகிறாரோ ஆசிரியர்? அந்த வரியும் பார்க்கலாமே:
*மடநடை மாது நின்மலர்க் கையின் நீங்காது உடன் உறைவு மரீஇ ஒருவா ஆயின*
(இவ்வாறெல்லாம் காதல் எனும் கடலில் மூழ்கித் திளைத்து முத்துக் குளித்த கோவலன் கண்ணகியைப் பார்த்து, 'உன்னுடைய மலர்க் கையை விட்டு பிரியாது என்றும் இணைந்து மகிழ்ந்திருக்கும் இனிமை உடையதாக இருக்க வேண்டும் என் கரங்கள்' என இறைஞ்சுகிறான். விரைவில் அவன் அவள் கரங்களை விட்டு விலகிச் செல்லப் போகிறான் என்பதை குறிப்பால் உணர்த்துகிறாரா இளங்கோவடிகள்)
இதோ இப்பயணத்தில் நம் கரம் பிடித்து கண்ணகி கோவலன் இல்வாழ்வை படம் பிடிக்க வருகிறார் நம் மழலைக் கவி:
ஐயா ,
தாங்கள் சிறப்புறவே கோவலனும் கண்ணகியும் இல் வாழ்வைத் துய்த்த பாங்கை விவரித்தீர் உம் பார்வையில். மிகச்சிறப்பான எழுத்தோவியம்!
இனி நான் முயற்சிக்கிறேன்.
கோவலன் "கரும்பும் வல்லியும் பெருந்தோள் எழுதி" என்கிறார்.
கரும்பு வில்லும், ( காதல் சின்னம்) ,மலர்க்கொடியும், ( பெண்மையின் மென்மை குறிக்கும்) சந்தனக்குழம்பு கொண்டு, கண்ணகியின் பெருந்தோளில் வரைகிறான்.
இல்லற இணக்கத்தைக் குறிக்கும், இரண்டு சின்னங்கள்.
இந்த வரைதல் "தொய்யல் "எனப்படும்.
நவீன " டாட்டூ" ( tatoo)போல!
இன்றைய அலங்கார முறைகளுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இருந்த முன்னோடி.
இவர்கள் கூடி இருந்தது , சூரிய, சந்திர சேர்க்கை போல என்கிறார். வெங்கதிரும் தண்கதிரும் ஒன்று கூடின- ஆண் மகனின் வெம்மையைப் பெண்மையின் தண்மை தணிப்பதை நாசூக்காக, கூறும் பாங்கு நம்மை வியக்க வைக்கிறது.
இவர்கள் சேர்கையில் தாரும், மாலையும்
" மயங்கிக் கையற்று " இருந்ததாம். தார்- ஆண் அணியும்மாலை, மாலை பெண்அணியும் மாலை எனக்கொள்க.
கோவலன் மனையாளைப் புகழ்வதை "குறியாக் கட்டுரை" என்கிறார். அதாவது, திட்டமிடாத, இயல்பாக உள்ளத்தில் அப்போது உதித்த காதல் உணர்வுகள்; புகழுரைகள். உண்மையான உள்ளக்கிடக்கைகள்!
ஐயா, தாங்கள் கூறியது போல நாயகியை வர்ணிக்கும் இன்றைய திரைப்பாடல்களுக்கு அடிகளின் வர்ணனை வழி காட்டலாக அமைந்தது என்பது
வெள்ளிடைமலை.
கவிஞர் வாலி அவர்களின் " கூனல் பிறை நெற்றியில் குழலாட" என்பதுஅடிகளின்"" பெரியோன் தருக திருநுத". லோடு ஒப்பு நோக்கத்தக்கது.
அடிகள் கண்களுக்கு வேலையும் , இடைக்கு வச்சிராயுதத்தையும் ஒப்பிடுகிறார் . ஆயுதங்கள்! கண்ணகிக்கு கால்சிலம்பே ஆயுதம்!
கண்ணகியின் எழில் எத்தகையதாம், கோவலன் பார்வையில்?
கண்ணகி பனிரெண்டு வயதினள்- மங்கை!
மங்கைக்கு அழகு, நற்சாயல்,மெல்லிய நடை மற்றும் மென்மையான பேச்சு.
"கோலமயில்... அடைந்து" நாணி கானகம் புக்கும்" சாயலாம்.
சாயல் என்பது பிம்பம் என்றால் இவள் திருவின் சாயலன்றோ! மயில் ஏன் நாணாது?
அவளின் " நல்நுதல் மெல்நடை"கண்டு அன்னம்" அழிந்து தடாகத்தில் ஒளிந்து கொண்டது.சாதாரண தடாகமன்று, " "நன்நீர்ப்பண்ணை" - அக்கால நீர் மேலாண்மையின் மேன்மை.
இவள்" மெல்நடை" இக்கால கவிஞரை" ஒரு நாடகமன்றோ நடக்குது" என வியக்க வைத்திருக்கும்!
பேச்சு ஏச்சாக இன்றி இவளின் "குழலும் யாழும் அமிழ்தும் குழைத்த மழலைக் கிளவி" கேட்டு பச்சைக்கிளி வருந்தியது.
இவள் மழலை ,குழல், யாழோடு அமிழ்தும் கலந்தது போன்ற இனிமையோ இனிமை. வள்ளுவர் கேட்ட குழல், யாழ் இசைகளில் அமிழ்து கலக்கவில்லையோ?!
(கிளவி- பேச்சு!)
இன்ப இல்லாளை இவ்வாறெல்லாம் வர்ணித்து
மகிழ்ந்த கோவலன் "நினது மலர்போலுங் கையினின்றும் நீங்காவாய்" என்கிறான்.
இவன்கரங்கள் அவள் கரங்களை விட்டுப்பிரியமலிருக்க வேண்டுகிறான்.
இவன் கரங்கள் பிரியுமே தவிர, அவள் கரங்கள் பின்னால் சிலம்பை ஏந்தி இவன் நேர்மையை நிலைநாட்டும்!
*பயணம் தொடரும்*
No comments:
Post a Comment