*ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா*
இரண்டு நாள் வார விடுமுறை முடிந்து
இன்று திங்கள்.
போர் மூண்டுள்ளதால்
சிறப்பு விடுமுறை கிடைக்குமா?!
பக்கத்து வீட்டு
அமெரிக்க கோமாளிகளுக்கும்
எதிர் வீட்டு
ஈரானிய கோமானிகளுக்கும்தானே சண்டை —
“நமக்கு சம்பந்தமில்லை” என்று
சன்னலை மூடி
வேடிக்கை பார்க்கும்,
அஸ்திவாரத்தைத் தின்னும்
கரையானை அறியாத
அடுக்குமாடிகளாய் நாம்.
இது
பக்கத்து – எதிர் வீட்டுச் சண்டையும் அல்ல…
முத்தரப்பு மட்டைபந்தாட்டமுமில்லை…
எல்லைக் கோடுகளை கடப்பது
விளையாட்டுப் பந்துகள் அல்ல —
எண்ணெய் தாகம் கொண்ட
எறி(ரி)பந்துகள்!
அணுகுண்டுகளுக்கு முந்தைய
அக்னிப் பந்தங்கள் அவை.
அரேபிய பாலைவனங்களில்
ஓடுகிற எண்ணெய்…
அனைத்து நாடுகளின்
தொழிலாளர்களின் வியர்வை…
ஏகாதிபத்திய வேரை
எதேச்சதிகார நீரே
அழிக்கும்.
யார் மரித்தாலும்
போர் மட்டும்
தைரியமாக வளர்கிறது!
துண்டான அம்மாவின் மாரை பிடித்து
அழும் குழந்தையின் அழுகையை
யார் நிறுத்துவார்?
துளைத்த அப்பாவின் கை பிடித்த
மகனின்
கைவிடப்பட்ட கனவை
யார் நனவாக்குவார்?
கைகளில் அடிபட்டால்
கண்கள் அழுவதில்லையா?
கண்களில் விழுந்த தூசியை
கைகள்
அகற்றுவதில்லையா?
வெறும் பார்வையாளராக
பக்கங்களைப் புரட்டாமல்,
வாடிய பயிரைக் கண்டு
வாடும் மெல்லிய மனங்கள்,
மீண்டும் மனிதனாக
மாற வேண்டிய நேரம்
இப்போதே!
ஒரு சொட்டு கண்ணீரால்
முனகுகிற அரபுகளின்
உயிர்ச் சத்தத்திற்கு
மோட்சதீபம்
ஏற்றுவோம்!
No comments:
Post a Comment