"டிட்வா மழை" ஓய்ந்த பின்
பாச மழைக்கு ஒரு பதிவு.
தவிட்டிற்கு
வாங்கப்பட்டவர்கள்:
ஐந்து சகோதர,
சகோதரிகளுடன்
தம்பியாய்ப் பிறப்பதற்கு
மாதவம் செய்திடல்
வேண்டும்.
ஐவரும்
அம்மா, அப்பா போல்
சிவப்பாக இருக்க
நான் மட்டும்
என் தாத்தா போல்
மாநிறம்.
சிறுவயதில்
என் தந்தை
கிண்டலாகச்
சொல்வார்:
"உடன்பிறந்தோர்
அனைவரையும்
தவிட்டிற்கு
வாங்கினேன்.
ஆனால்
உன்னை மட்டும்
அடுப்புக்கரிக்கு
வாங்கினேன்."
என்று.
அடுப்புக்கரிக்கு
வாங்கப்பட்டாலும்
வீட்டில் அன்புக்கும்
பாசத்திற்கும்
பஞ்சமில்லை.
கலங்கரை விளக்குப்
போல வழிகாட்ட
அண்ணன்.
அன்னையை விட,
பாசத்தை அள்ளிக்
கொட்டும் அக்காக்கள்.
தங்கையாய் பிறந்தாலும்
"டேய் தம்பி" என்று
வாஞ்சையுடன் அழைக்கும்
தங்கை.
குறும்பு செய்து
அப்பாவிடம் அடி
வாங்கும் தருணம்,
அரண் போல்
தமக்கைகள்.
காலச் சக்கரம் சுழன்று
ஆளுக்கொரு மூலையாய்
பிரிந்தாலும் இன்றும்
குறையாத அரவணைப்பு.
உண்மையில் நான்
இறைவனால்
ஆசீர்வதிக்கப்பட்ட
"அடுப்புக்கரிக்கு
வாங்கப் பட்டவன்".
No comments:
Post a Comment