^°^°^°^°^°^°^°^°^°^°^°
*அந்த நாளும் வந்திடாதோ..?*
^°^°^°^°^°^°^°^°^°^°^°
கோடை விடுமுறையில் பாட்டி வீடு செல்லும் போது,
அக்கம்பக்க சிறார்களுடன் வயல்வெளியில் விளையாடும் போது,
உச்சி வெயிலில் குளுகுளு நிழல் தரும் மரத்தடியில் இளைப்பாறும் போது,
மண் தரையில் கோடு போட்டு ஆடுபுலி ஆட்டம்
ஆடும் போது,
பசிக்கையிலே புளியம்பழம் பறிக்க
மரம் மீது ஏறும்போது,
ஓடையிலே களைப்பு நீங்க நீந்திக்
களிக்கும் போது,
ஆவினங்கள் கத்தும் போதும்,
புள்ளினங்கள் கூவும் போதும்
உடன் சேர்ந்து கூவும் போது,
கொண்டாட்டமும் குதூகலமுமாய்
வாழ்ந்து நாமும்
மகிழ்ந்த போது,
*பூவுலகே நம் காலடியில் இருந்ததன்றோ..*
புத்துணர்வு மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதன்றோ..
*அந்த நாளும் இனிமேல் வந்திடாதோ..?*
ஆனந்தத்தை அள்ளித் தந்திடாதோ..!
*ஶ்ரீவி*
------------------
பாட்டி வீடில்லை,
என் வீடே அங்கேதான்.
கொள்கைக்
கூட்டணியுடன்
பத்து பேர்.
வெம்மையான
கதிரவனும்
எங்கள்
விளையாட்டுத்
தோழன்.
எல்லா விடுமுறை
நாட்களும்
காலை முதல்
மாலை வரை
களை கட்டும்.
ரோட்டோரப்
புளிய மரத்தில்
மரக்குரங்கு.
கல்லா மண்ணா,
கோலிக் குண்டு,
கிட்டிப் புள், பம்பரம்,
வகை வகையான
விளையாட்டு.
சைக்கிள் டயரை
உருட்டுவதில்
போட்டி.
சைக்கிளை
வாடகைக்கு
எடுத்து எங்களுக்குள்
பங்கு.
ஓட்டத் தெரியாத
நண்பனுக்குக்
குரங்குப் பெடலில்
ஓட்டப் பயிற்சி.
அரசமரக் கிணற்றில்
மணிக் கணக்காய் ஊறி,
வெளியேறும்போது
உரிந்து வரும் தோல்.
மழைக் காலங்களில்
நிரம்பி வழியும்
மணப்பாறைக் குளத்தில்
உள்ளே விழுந்தால்
யார் முதலில்
வெளியேறுவது
என்று எங்களுக்கும்
எருமைகளுக்கும் போட்டி.
பசி எடுத்தால்
ஐந்து பைசாவிற்கு
கை நிறைய வாங்கிய
பிஸ்கட் தூளில் பங்கு.
வெயிலோடு
விளையாடி
மாலை கருப்பாய்
வீடு திரும்பும்போது
அன்னையிடம்
ஆரம்பிக்கும்
ஓட்டப் பந்தயம்.
- முகம்மது சுலைமான்
===================================-
நினைவலையில் மீனாம்
குற்றாலம் என்றாலே சிலருக்கு குதூகலம்
குத்தனூர் என குதிப்பேனாம் நானும்
பெற்ற தாய் அடுத்து இது தான் வருமாம்
பிறந்த, வளர்ந்த ஊர் அதுவே தானாம்
முற்றம், திண்ணை, தோட்டமும் உண்டாம்
மோர் உறையாக கேட்பாரும் உண்டாம்
வற்றாத ஏரி, குளம், வாய்க்கால்கள் எங்கும்
வழுக்கும் மீன்கள் அவை பிடிக்க ஆசையும்
இற்று அறுந்து விடும் இல்லை அஞ்சுதல்
எமக்கு ஆலமர விழுதுகளே ஊஞ்சல்
பற்றி மந்தியாய்ப் பனைமரம் ஏறுவோம்
பழமதைச் சுட்டு, தின்று பசியாறுவோம்
மற்றதெலாம் மறந்து போக இவை இல்லை ஏனாம்!
மண்ணோடு மனது அது ஒட்டியது தானாம்
கற்க, காசு தேடி மண் விட்டுப் போனோம்
காலம் கடந்து நினைவலையில் மீனாம்.
__. குத்தனூர் சேஷுதாஸ் 7/9/2025
No comments:
Post a Comment