உப்புமா 11
"சும்மா இரு" க்க பயிலும் மனம்
சும்மா இல்லாமல்
சும்மா சும்மா
சும்மாவுக்குள்
சதா சத்தமிடுகிறது
சும்மாவே!
- சாய்கழல் சங்கீதா
===========
சும்மா என்பது சும்மா இல்ல!
நாவலர் நெடுஞ்செழியன் ஒரு சொற்பொழிவில் “
"சும்மா" என்ற தலைப்பில் பேசினார்.
உலகில் தோன்றிய பல மொழிகள் அழிந்து இருந்த இடமே தெரியாமல் போயிருக்கின்றன! தமிழ் மட்டும் இன்றளவும் பேச்சிலும், எழுத்திலும் நீடித்து நிலைத்து தன்னையும், தான் சார்ந்த இனத்தையும் பெருமைப்படுத்திக்கொண்டிருக்கின்றது.
"சும்மா" சொல்லுவோம் தமிழின் சிறப்பை! அடிக்கடி நாம் பயன்படுத்தும் வார்த்தை தான், இந்த "சும்மா". அதுசரி "சும்மா" என்றால் என்ன?
பேச்சுவழக்குச் சொல்லாக இருந்தாலும், தமிழ்மொழியில் உள்வாங்கப்பட்டுள்ள ஒரு வார்த்தை தான் இந்தச் "சும்மா".
"சும்மா" என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் 15க்கும் மேற்பட்ட அர்த்தங்கள் உண்டு என்றால் பாருங்களேன்... வேறு மொழிகளில் இல்லாத சிறப்பினை, நாம் அடிக்கடி கூறும் இந்த "சும்மா" என்ற வார்த்தை அழகாக எடுத்துக்காட்டுகிறது.
1. கொஞ்சம் "சும்மா" இருடா? (அமைதியாக )
2. கொஞ்சநேரம் "சும்மா" இருந்துவிட்டுப் போகலாமே? (களைப்பாறிக்கொண்டு)
3. அவரைப் பற்றி "சும்மா" சொல்லக்கூடாது! (அருமை)
4. இது என்ன "சும்மா" கிடைக்கும் என்று நினைத்தாயா? (இலவசமாக)
5. "சும்மா" கதை விடாதே? (பொய் )
6. "சும்மா" தான் இருக்கு. நீ வேண்டுமானால் எடுத்துக்கொள். (உபயோகமற்று )
7. "சும்மா, சும்மா கிண்டல் பண்ணுகிறான்". (அடிக்கடி)
8. இவன் இப்படித்தான், சும்மாசொல்லிக்கிட்டே இருப்பான். (எப்போதும்)
9. ஒன்றுமில்லை "சும்மா" தான் சொல்லுகிறேன்- (தற்செயலாக)
10. இந்தப் பெட்டியில் வேறெதுவும் இல்லை "சும்மா" தான் இருக்கின்றது. (காலி )
11. சொன்னதையே "சும்மா" சொல்லாதே. (மறுபடியும் )
12. ஒன்றுமில்லாமல் "சும்மா" போகக்கூடாது (வெறுங்கையோடு)
13."சும்மா" தான் இருக்கின்றோம். (வேலையில்லாமல்)
14. அவன் "சும்மா" ஏதாவது உளறுவான். (வெட்டியாக)
15. எல்லாமே "சும்மா" தான் சொன்னேன். (விளையாட்டிற்கு)
நாம் அன்றாடம் பயன்படுத்தும் இந்த "சும்மா" என்கிற ஒரு சொல், நாம் பயன்படுத்தும் இடத்திற்கு ஏற்றபடியும், தொடரும் சொற்களுக்கு ஏற்றபடியும் பலவிதமான அர்த்தங்களை, இங்கே கொடுக்கிறது என்றால், அது "சும்மா" இல்லை."
கணவன் ஓய்வு பெற்று வீட்டில் இருக்கையில், மனைவி" சும்மாதானே இருக்கீங்க; இந்த துணியை எல்லாம் ஒழுங்கா மடிச்சி வையுங்க" என்று ஒரு " செல்லக்" கட்டளி இடுவார்.
சூபர் ஸ்டார் ரஜினி" சும்மா அதிருது இல்லே!" என்றால் அரங்கம் அதிருமர கைத்தட்டல்கள்.
ஒரே " சும்மா" தான்.
ஆனால் புரிதல் வேறு; அர்த்தங்கள் வேறு!
- மோகன்
============
இள வயதில்
சும்மா இருந்தால்
வீட்டிலே மட்டுமல்ல
வெளியேயும்
பட்டப் பெயர்
"வேலையில்லா
சோம்பேறி" என்று.
அலுவலகத்தில்
சும்மா இருந்தால்
வேலைக்கு
உலை வைப்பார்
உயரதிகாரி.
ஓய்வு பெற்றபின்
சும்மா இருந்தால்
இந்த பெருசு
வயதான காலத்தில்
படுத்துதுனு
வீட்டிலே புலம்பல்.
வலி இருந்தாலும்
"சும்மா"
இருப்பதொரு
சுகம்.
- முகம்மது சுலைமான்
No comments:
Post a Comment