பாரதியின் நினைவு நாள் இன்று..
ஏன் மறந்தாய் மனமே????!!!
நித்தம் தமிழ் வாசம்
அவன் சங்கத்த்தால்
தானே உன் வசம்?
நன்றி உண்டா உனக்கு?
நன்றி சொன்னாயா அவனுக்கு?
தமிழில் ஊறிய அவனுக்கு நன்றிகள் பல
தமிழால் நவின்றிட
வேண்டாமா?
அவன் ஆற்றிய தமிழனைத்தும்
நினைத்து உவக்க வேண்டாமா?
படிக்க சொன்னான்
தமிழ் இலக்கணம்
நினைக்க வேண்டாமா இன்று அவனை சில கணம்?
பிறந்தது நல்ல
வாசிப்பு வட்டம்
வாசிக்க வைக்க
அவன் போட்ட திட்டம்
குழந்தைகளை சேர்க்கிறான் படவரியில்..
நன்றியுரைக்க முடியுமா
ஒரு வரியில்?
ஒரு நாளும் பிரியவில்லை மனதளவில்...என்பதால்
மறந்தாயோ அவன் பிரிந்ததை உடலளவில்?
- சாய்கழல் சங்கீதா
-------------------------------
•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•
செப்டம்பர் 11 :
*ஞானச் சூரியன் அஸ்தமனம் ஆன தினம்*
•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°
சூரியன் அஸ்தமனம் ஆகாத நாடென
ஆழிசூழ் உலகே கொண்டாடிய நாடு
பூரித்து கர்வத்தோடு இருந்த நாடு
ஆங்கில ஏகாதிபத்திய இங்கிலாந்து நாடு
புண்ணிய பூமி பாரத நாட்டை
அடக்கி ஆண்ட இங்கிலாந்து நாடு
அந்நிய ஆட்சியை எதிர்த்தனர் பலர்
அடங்கா சினத்தோடு களமும் கண்டனர்
சூரியன் அஸ்தமனம் ஆகா அரசை
அஸ்தமிக்க செய்ய கிளர்ந்து எழுந்தது
ஞானச் சூரியனாக அக்கினிக் குழம்பொன்று
எமக்குத் தொழில் கவிதை என முழங்கியது
அச்சம் என்றால் ஏதென அறியாது
ஆங்கில அரசை அலறச் செய்து
சுதந்திரக் கனலை வளர்த்தெடுத்து
ஆங்கிலேயரை அச்சுறுத்தியது.
காலனுக்கே அஞ்சிடா நெஞ்சு
ஆங்கிலேய ஏகாதிபத்திய கொடுங்
கோலனுக்கா அஞ்சி நடுங்கும்
கதற விட்டது பரங்கியரை.
காலருகே வரச் சொல்லி காலனையே
மிதிப்பேன் எனச் சொன்ன ஞானச்சூரியனும்
தன் பணியை நிறைவு செய்து
அஸ்தமனம் ஆன தினம் இன்று
அஸ்தமனம் ஆன பின்பும்
தான் பரப்பிய அறிவொளியால்
பூவுலகை ஒளிரச் செய்யும்
ஞானச்சுடரை போற்றிடுவோம்.
அவன் ஏற்றிய தமிழ் ஒளியை
அணையாது காத்திடுவோம்
அவனி எங்கும் அவன் புகழை
பேரொளி வீச ஏற்றிடுவோம்!
*உங்கள்_தோழன்_ஶ்ரீவி*
---------------------------------
மாகவியே ! பாரதியே !...
அருவியாய்ச் செந்தமிழை எங்கிருந்து கொட்டினாய் !
அழகுத் தமிழ்ப் பாவால் அனைவரையும் கட்டினாய்
சரஸ்வதி எனும் பொருளில் "பாரதி" என்ற பட்டம்
சாத்தியமாம் சிறு வயதில் உனக்கு மட்டும்
குருவி, காக்கையையும் தன் சாதியில் சேர்த்தாய்
குவலயம் முழுதும் ஒரே குடும்பமாய்ப் பார்த்தாய்
விரி உலகில் பாரதமே சிறந்ததெனப் போற்றினாய்
விடுதலை கிடைத்ததாய் முனமே பறை சாற்றினாய்
குருதியது பலர் சிந்தி கிட்டிய நம் சுதந்திரம்
கொஞ்சு தமிழ் அதுவாம் நீ எடுத்த ஆயுதம்
அரிமாவாய்ப் பகைவர்களை ஓட வைத்தாய்
ஆணும், பெணும் நிகரென ஆட வைத்தாய்
வறுமை கண்டு அஞ்சி என்றும் துவளவில்லை
வான்மழையாய் கொட்டிய கவிதை அளவேயிலை
மரணமெனும் அரவு தீண்ட மரிப்பார் மனிதராம்
மாகவியே! பாரதியே! வாழ்வாய் இனியுமாம்.
__. குத்தனூர் சேஷுதாஸ் 11/9/2025
==============================
No comments:
Post a Comment