Sunday, September 21, 2025

பாரதி கிரிக்கெட் போட்டிகள் 2025

 *நமது தமிழ் சங்க பயணத்தில் மீண்டும் ஒரு மைல் கல். வரலாற்று மிக்க வெற்றி பெற்ற பாரதி கிரிக்கெட் போட்டிகள் 2025*


நமது பொதுக்குழுவில் நாம் எடுத்த முடிவின் அடிப்படையில் நேற்று 20 செப்டம்பர் 2025 சனிக்கிழமை அன்று மிகச் சிறப்பாக நமது சங்கம் நடத்திய கிரிக்கெட் போட்டிகள் நடந்தேறின. திரு ராம் பிரசாத் மற்றும் திருமதி பிரபு குமாரி இருவரும் அமைப்பாளர்களாக இருந்து மிகச் சிறப்பான பணி செய்து இந்த போட்டிகளை திறம்பட, வெற்றிகரமாக நடத்தி முடித்து இருக்கிறார்கள். அவர்களுக்கு நமது இதய பூர்வமான நன்றிகள். 🙏


முதல் நாள் இரவு முழுதும் மழை பெய்தும், மறுநாள் காலை தொடர்ந்து தூறல் இருந்து கொண்டே இருந்த போதும், ஏழு மணிக்கு துவங்கவிருந்த நமது போட்டிகள், சரியாக எட்டு மணிக்கு துவங்கி விட்டன. அடாது மழை பெய்தாலும் விடாது நாங்கள் கிரிக்கெட் விளையாடுவோம் என்ற நமது இளைஞர்கள் அணி திரண்டு ஆடியது அவர்களுக்கு அந்த ஆட்டத்தின் மீது இருக்கக்கூடிய அபரிமிதமான ஆர்வமும், ஆசையும், அவர்களது துடிப்பும் வெளிப்பட்டன. இடையில் ஒரு மணி நேரம் உணவு இடைவேளை தவிர காலை எட்டு மணிக்கு துவங்கிய போட்டிகள் இரவு ஒன்பதரை மணி வரையிலே தொடர்ந்து நடந்து வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்குவதோடு இனிதே நிறைவுற்றது. 


மிக ஆர்வமாக நமது போட்டியில் கலந்து கொள்ள விண்ணப்பித்த எட்டு ஆடவர் அணிகளுக்கும், இரண்டு மூத்தோர் அணிகளுக்கும் இரண்டு சிறார் அணிகளுக்கும் நமது நெஞ்சு நிறை நன்றிகளும் வாழ்த்துக்களும். 🙏🙏


மிக ஆர்வமாக கலந்து கொண்ட அனைத்து விளையாட்டு வீரர்களும் மிக அருமையாக தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். கிரிக்கெட் விளையாட்டின் மேலாண்மையை உயர்த்தி பிடித்து, எந்த ஒரு சிறு சல சலப்புமின்றி, கிரிக்கெட் ஒரு கனவான்களின் ஆட்டம் (Gentleman's Game) என்பதை அவர்கள் நிரூபித்தனர். கலந்து கொண்ட அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் வெளியில் இருந்து உற்சாகமளித்த பார்வையாளர்களுக்கும் நமது சங்கம் உளமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறது. 🙏


மகளிர் அணி மட்டும் போட்டிகள் நடத்த முடியாமல் போனது வருத்தமே. என்றாலும், எதிர்காலத்தில் ஆர்வத்துடன் மகளிர் முன்பதிவு செய்து விளையாடுவார்கள் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. 


கொண்டாட்டமும் குதூகலமுமாக நேற்றைய தினம் காலை 7:00 மணி முதல் இரவு 9:30 மணி வரை விளையாட்டு மைதானம் களைகட்டி இருந்தது நமக்கு மகிழ்ச்சியை தந்த ஒரு நிகழ்வு. 


நமது குடியிருப்பில் நமது நலச் சங்கத்தால் ஜனவரி மாதம் மட்டும் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகள் மட்டும் போதாது என நமது இளைஞர்களும் சிறார்களும் எண்ணுவதை போட்டிகள் உறுதி செய்தன. வருடத்தின் மத்தியில் கூட ஒரு போட்டி நடத்த வேண்டிய அவசியத்தை நேற்றைய உற்சாகமான பங்கேற்பு சுட்டிக் காட்டுகிறது. எதிர்காலத்திலும் இதுபோன்ற போட்டிகளை நடத்துவது பற்றி நமது சங்கம் மிகத் தீவிரமாக ஆலோசித்து முடிவெடுக்கும். 


பரிசளிப்பின் போது, இதுவரை உறுப்பினராக இல்லாதவரும் உறுப்பினராக இணைந்து நமது சங்கத்தின் கரங்களை பலப்படுத்தவும் – மேலும் மேலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை, விளையாட்டுப் போட்டிகளை நடத்த ஒத்துழைக்குமாறும் வேண்டுகோள் நமது தமிழ் சங்கத்தின் சார்பாக தலைவராலும் நிதிச் செயலாளரும் முன் வைக்கப் பட்டது.


வெற்றி பெற்ற அணிகளுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும், கோப்பைகளை – பரிசுப் பொருள்களை – மெடல்களை நமது மூத்த உறுப்பினர் மழலை மோகன் ஐயா அவர்கள் வழங்கினார்கள். 


போட்டிகளை நேரடி வர்ணனை செய்து பார்வையாளர்களை விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க மகிழ்விக்க நமது சங்க உறுப்பினர்கள் ஐ.பி.ஸ்ரீனிவாசன் ஐயா மற்றும் சுந்தரம் ஐயா அவர்கள் கொடுத்து உதவிய ஒலிபெருக்கிக் கருவி மிக உதவிகரமாக இருந்தது. அவர்களுக்கும் நமது மனமார்ந்த நன்றிகளை கூறிக் கொள்கிறோம். 🙏🙏


தங்களது நா வன்மையால் வர்ணனை கூறி எல்லாரையும் உற்சாகப்படுத்திய மவுலீஸ்வரன் மற்றும் உமேஷ் இருவருக்கும் நமது நன்றிகள். 


விரைவில் மீண்டும் ஒரு விளையாட்டு களத்தில் களமிறங்கி கலக்கிடுவோம்! அனைவருக்கும் நன்றி🙏🙏🙏

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...