நற்சுனை 13
கொஞ்சாத தாத்தா!
இருந்தீர் என பிறர் சொல்ல
வளர்ந்தேன்
மறைந்தீர் என வளர்ந்த
பின் தெளிந்தேன்
சுவரில் பெரிய புகைப்படம்
தேதிகள் சொன்னது என்னிடம்
உங்கள் முகம் மட்டுமே உண்மை
மற்றவை ஓவியரின் திறமை
(இ)லயோலாவில் படித்தீர்களாம் உயர் கல்வி
இல்லாமல் போனதே என் கல்வியில் உம் உதவி
அடுக்கடுக்காய் புத்தகங்கள் இசைத்தட்டுகள் உம் வசம்
அனைவர் மீதும் வைத்தீராம் வேட(ஷ)மில்லா பாசம்
மெட்ராஸிலிருந்து வீட்டுப் பிள்ளைகளுக்கெல்லாம்
பிஸ்கெட்டுகளும் கேக்குகளும்..
இதனால் பிரியம் வைத்தனரோ
உம் வயிற்றில் பிறக்காத பிள்ளைகளும்?
ஆசிரியை பிள்ளைகளோடு மார்கழி உலா வீதியிலாம்
பக்தியோடு தமிழ் மணமும் கமழ்ந்தது உம் ஏற்பாடாம்
ஆங்கில அகராதியை கரைத்துக் குடித்தீராம்
" ஆ" என்று வாய் பிளக்க பொருள் உரைப்பீராம்
வியந்து சொன்னார் தாய் வழிப் பாட்டன்
அவருக்கு நீர் தானே தாய்வழி மாமன்..
உங்களுக்கும் சேர்த்து
அவரே கொஞ்சினார்..
அறிவுரையும் உம் உருவாய் அவரே நல்கினார்..
என்னைக் கண்டு பூரித்திருப்பீராம்..
தலைக்கு மேல் கொண்டாடி மகிழ்ந்திருப்பீராம்...
மேலும் மேன்மையாய் வளர்த்திருப்பீராம்..
அன்பில் ஆழ்த்தி அணைத்திருப்பீராம்..
என் உடன் பிறந்தவன்
உம் சாயலாம்
உம் புராணமே பாட்டியின் வாயெலாம்
கொடுத்து வைக்கவில்லை என்றார் பாட்டி ..
உங்கள் புகைப்படத்தை கை தூக்கிக் காட்டி..
நீங்களா?? பாட்டியா?? நானா?
ஒருவர் மட்டும் என்று தவறாய் நினைப்பேனா?
விடை பெற்றீர் உதறிவிட்டு உலகத்தை
கடைக்குட்டி சிறு குழந்தை என் அத்தை
நான்கு பிள்ளைகள் ஒன்றாய் இழந்தனர் நல்ல தந்தை
வதைந்த பாட்டி மீண்டது தனிக் கதை
யாருக்கு வேண்டுமென
விரைவாக விரைந்தீர்?
நல்லவர்கள் பட்டியலில் இங்கொன்று குறைத்தீர்!
புகைப்படத்துடன் பேசுவேன் விழியால் உங்களிடம்
மீசைக் கவியின் இயற்பெயரே
உம் பெயரும்
யார் நிரப்புவார் நீங்கள் நிரப்பா வெற்றிடம்?
தமிழால் நிரப்பலாம் என்று சேர்த்தீரா அவனிடம்?
- சாய்கழல் சங்கீதா
No comments:
Post a Comment