நினைவு நல்லது வேண்டும்
தமிழ்த் தாய்க்கு
முதல் வணக்கம்
நற்றமிழ் போற்ற
கூடி இருக்கும் அவையோர்க்கு
தமிழ் வணக்கம்
இன்று தமிழ் அன்னை எனக்களித்த தலைப்பு
மகாகவியின் நல் வரிகள் ...
'நினைவு நல்லது வேண்டும் '
நினைவு என்று எதைச் சொல்வீர்?
கடந்த காலத்தின் தடங்களா?
இக்கணத்தின் மனதின் துடிப்பா?
இல்லை
நாளைய பொழுதின் கனவா?
நினைவென்பது
நனவின் முத்திரைகளா?
அல்லது
கனவின் சித்திரங்களா?
பாரதி கூறும் நினைவோ...
கனவுகளை மெய்ப்படுத்தும்...(2)
நினைவை
சிந்தையில் நிறுத்தினால் அன்றோ
கனவுகள் நனவாகும்
நிகழ்வுகள் நலமாக...
உலகம் உய்ய...
நினைவு நல்லது வேண்டும்
உயிரின் படைப்பில்..
உடலுக்கு உருவம் உண்டு
மனதிற்கு வடிவம் இல்லை...
மனதை...நாம்
வடிவமைக்க வேண்டும் ...
சுயமாக சிந்தித்து
செதுக்க வேண்டும் ...
சிந்தையில்
எண்ணங்கள் நிலைக்க செய்து
எனவே...
வாழ்வை நிர்ணயிக்கும்...
மனதிற்கு வடிவம் இல்லை
மனம் ஒன்று இல்லை எனில்
மனிதன் என்று சொல்வோமா?
குணம் அது திரிந்து விட்டால்
மனிதம் மறைந்து போகாதோ?
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
என்பதே வாழ்க்கை என்றானால்
தமிழில் திளைத்து மனமுருக
சங்கமம் இங்கே நடந்திடுமா?
மிருகங்களுக்கும் மனமுண்டு
அவற்றுக்கென குணமுண்டு
மனிதனின் குணமென எதைச் சொல்வீர்?
தங்கக் கோட்டையில் வாழ்ந்தாலும்
கள்ளமும் கயமையும் நிறைந்திருந்தால்
உதடுகள் மட்டும் புகழ் பாடும்
உள்ளம் அதையே நகையாடும்
மனிதம் தழைக்க உலகம் சிறக்க
நினைவு நல்லது வேண்டும் crescendo - 2
அல்லவை சொல்ல தேவையில்லை
தரணி அறிய தானாக வலம்வரும்
நல்லவை சொல்வது அரிதென்றாலும்
காரிருள் சூழ்ந்தாலும்
ஒற்றை தாரகையாக வழிகாட்டும்
இருள் படர்கிறது என
இருளோடு உறைவீரோ?
மின்னும் நட்சத்திரத்தின்
ஒளித்துகளாய் ஒளிர்வீரோ?
ஒளித்துகளாக நினைத்தால் அன்றோ
கதிராக இருள் விலக்க
வழி தோன்றும்
வாழ்வும் மிளிரும் உலகும் ஒளிரும்
நினைவு நல்லது வேண்டும்
உடலின் திண்மை ஊன் வளர்க்கும்
மனதின் திண்மை உயிர் வளர்க்கும்
நன்மை பயக்கும் செயலால் தான்
திண்மை என்பதே மேன்மையுறும்
செயல்கள் நலமாய் அமைந்திட
நினைவும் நலமாய் வேண்டும்
உணர்ந்தே வரம் வேண்டினான் மகாகவி
நினைவு நல்லது வேண்டும் என...
எண்ணியது ஈடேற்றும்
நினைவென்பது...
காலத்தின் முகவரி
மனதின் முகம்
உயிரின் நாதம்
உடலின் மறைபொருள்
வாழ்வின் நிலை
இன்று கனவின் பிம்பம்
அதுவே
நாளை நனவின் உருவம்..
எனவே நாளை
நாமும் நலம்பெற
உலகில் யாவும் நலம்பெற
நினைவு நல்லது வேண்டும்
வாழ்வது ஒருமுறை தான்
அதில்
பாரதி சொன்ன
வேடிக்கை மனிதராக வீழ்ந்திட வேண்டாம்
வழி காட்டும்
துருவ நட்சத்திரமாக வாழ்ந்திட வேண்டும்(2)
அதற்கு
நமக்கும் வரம் வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
மகாகவியின் வரிகளைப் பகிர நல் வாய்ப்பளித்ததற்கு நன்றி. வணக்கம்
- அமுதவல்லி,
No comments:
Post a Comment