ஜெயச்சந்திரனிலிருந்து
தியாகராயநகர் வரை
ஒரு நகரப் பேருந்துப்
பயண அனுபவம்.
ஓட்டுனரின் அருகே
முன்னிருக்கை.
மகளிர் விடியல் பயணம்.
பேருந்தில் பெண்கள்
கூட்டம்.
இள மாலை நேரம்.
கதிரவனின் இதமான
அரவணைப்பு.
மாலை வெயில்
மாந்தர்க்கு நல்லதாம்.
விலையில்லா
விட்டமின் டி.
வடிவேலு பாணியில்
பயண ஆரம்பம்
என்னவோ
அமர்க்களம்.
ஆனால் முடிவுதான்
பயங்கரம்.
இராஜபாட்டை
தந்தை போட்ட
நினைப்பில்
பாதையின் நடுவே
கைப்பேசியுடன்
ஒய்யாரமாய்
ஊர்ந்து செல்லும்
இரு சக்கர வாகன ஓட்டி.
அவசரமாய் குறுக்கே
வரும் பயணியர்
மூன்று சக்கர வாகனம்.
ஆங்காங்கே
இடப்புறம்
வேகமாய் முந்தும்
ஸ்விக்கி,ஸொமாட்டோ
ஊழியர்கள்.
சட்டெனக் குறுக்கிடும்
பாதசாரிகள்.
இடித்து விடுமோ என்று
இல்லாத பிரேக்கைக்
காலால் போடும் நான்.
ஓட்டுனருக்கோ
அவரது
திறமையில்
நம்பிக்கை.
எனக்கோ
இறங்கும் வரை
எதிரில் எமன்.
.
மூத்த குடிமக்களுக்கு
என் கனிவான
வேண்டுகோள்.
இருக்கை
கிடைத்ததென்ற
இறுமாப்பில்
பேருந்தின்
முன் இருக்கையை
தெரிவு செய்யாதீர்.
இரத்தக் கொதிப்பு
மாத்திரை ஒன்றைக்
கூடுதலாய்ப் போடாதீர்.
- முகம்மது சுலைமான்,
No comments:
Post a Comment