இன்று ஒரு சித்திரம்
படைப்பாளிகளின் பசி தீர்க்க!👇🏽
சுமை ஒன்று
சுமக்கும் பெண்கள் மூன்று
பானையை பிடித்ததால்
பாக்கியசாலிகள் என்று
பாராட்டுப் போகிறீர்களா
பானை வடிவில்
யானை கனத்தை
தன் தோளிலும் இடுப்பிலும்
தலையிலும் தன்பாணியில்
சுமக்கும் இந்த சுமை தாங்கிகள் சொல்ல விரும்புவது என்னவோ?
- ஸ்ரீவித்யா
**********************
*சித்திரத்தில் விசித்திரம்!*
ஒரே பானையில் மூன்று பானைகளை சித்தரித்த விசித்திரம்!
மூன்று பெண்களும் சுமக்கின்ற பானையாக உருவகப் படுத்திய அதிசயம்!
சுமை தாங்கிகள் பெண்களே என கலை நயத்தோடு சொன்ன அற்புதம்!
கணினி யுகம் வந்து உலகமே அடியோடு மாறிப்போன
நவீன நவயுகம்!
கலியுகம் தான் இது என
பானை சுமந்து
பலமைல் நடந்து தண்ணீர் கொணரும் கிராமப் பெண்களின் அவலம்.
அனைத்தும் கூறும் இது விசித்திர சித்திரம்!!
-ஸ்ரீவி
***************
தோளில் சுமப்பவளுக்குத்
தோள் கொடுக்க யாருமில்லை!
இடுப்பில் சுமப்பவளுக்கோ
இடுக்கண் இல்லா
நாளில்லை!
தலை மேல் தூக்கி
வைத்து சுமந்தாலும்
"தலைக்கனம்" என்ற
பேச்சுக்கு குறைவில்லை!
இவர்களின் பானைகளில்
தண்ணீர் மட்டும்
நிறையவில்லை..
கண்ணீரும் சேர்ந்ததால்
சுமைக்கு என்றும் குறைவில்லை!
நவீன மங்கையானாலும்
எதுவும் மாறுவதில்லை
சுமக்கும் பானைகளைத் தவிர...
எதுவுமே மாறுவதில்லை!
- சாய்கழல் சங்கீதா
***********
அற்புதமான படம்...
படத்தில் அழகிய குடம்..
கவிழ்த்து வாசித்தால் கடம்
இல்லறத்தைத் துறந்தால் மடம்..
இது கவிதை என்று
நான் சொன்னால்
உங்களுக்கு படிக்க
வேண்டும் மனதில் திடம்!😀
மூன்று பெண்களுக்கும் ஒரே குடம்..
குழாயடியில் குடத்திற்கும்
சண்டை வரும் !
- சாய்கழல் சங்கீதா
************
புக்ககத்தாரை
தலையிலும்,
பிறந்த வீட்டாரை
தோளிலும்,
உன்குடும்பத்தாரை
இடுப்பிலும்
சுமந்தாலும்,
உன்னை சுமக்கவே
படைக்கப் பட்டவளாக
உருவகப் படுத்திய
இந்த உலகம்
உனது
விருப்பங்களுக்கும்
உணர்வுகளுக்கும்
சிறிது செவி
கொடுத்தால்
பெண்ணே உனக்கு
அதுவே பெரிய
கைமாறு அல்லவா!!!
- முகம்மது சுலைமான்
********************
No comments:
Post a Comment