கவிதைகள் தினம்!
கவிதைகள் எழுத வேண்டுமே தினம் தினம்!
எனினும்...
கவிதை எழுதியே ஆக வேண்டும் இன்றைய தினம்!
க..ற்பனை என்னும்
வி..தை தூவி
தை..ரியமாய்
ஒரு கவிதை படைத்திடலாம்
என கனவில் மூழ்கினேன்..
விதைகள் முளைத்து
பயிர் விளைந்து
அறுவடையாய் ஒரு நல்ல
கவிதை கிடைக்கும் என்றெண்ணி..
கனவு களைந்து கண்
விழித்துப் பார்த்தால்
கண்முன் பல கவிதைகள்!
மகாகவி பாரதி தமிழ்ச் சங்கத்தின் புலனக் குழுவில்...
தமிழ் உறவுகளின் நிலங்களில்
விதைகளெல்லாம்
பயிராகி அறுவடையும்
ஆகிவிட்டது..
நான் தூவிய விதைகள் முளைப்பது எப்போது?????
--------------------
அறுவடையில் கிடைத்தது ஒரே நெல்!
கவிதையா இது???
பரவாயில்லை...
நான் என்ன
"கவிதைக் கொம்பன்"
கம்பனா?
கவிதைகளைக் கட்டவிழ்த்த கம்பன் வீட்டுக்
கட்டுத் தறியும்
கவி பாடுமே..
கம்பன் வீட்டுக்
கம்பஞ் சோறு
எனக்கும் கிடைத்தால்
"கவிதை" எழுத
நான் ஏறிய
கற்பனைக் குதிரை
தறிகெட்டு ஓடுமே!
கிடைக்குமா கம்பஞ் சோறு?
----------------------------
காற்று வாங்கப் போனால்
கவிதை வாங்கி வரலாமாம்!
மிதி வண்டி ஏறி
காற்று வாங்கப் போனேன்..
சக்கரத்தில் காற்று
இறங்கி விட்டது🙁
- சாய்கழல் சங்கீதா
No comments:
Post a Comment