Wednesday, March 19, 2025

எங்கே காணோம்?

 எங்கே காணோம்? 


விட்டுப் பிரிந்த தலைவன் வீடு திரும்பவில்லை

   வேதனை இதைச் சொல்ல தோழியும் இல்லை


சிட்டுக்குருவி! அன்று பறந்தாய், திரிந்தாய்

   சேதி சொல உன்னிடம் துயரம் குறைத்தாய்


வட்டக் கிணறு ஒன்று வீடுதோறும் இருந்தது

   வளைந்த ஓடுகள் அடுக்கிய கூரை இருந்தது


எட்டா இடங்களில் முட்டைகள் இடுவாய்

   எத்தனை பொறுப்புடன் அடைகாப்பாய்! 


குட்டியாய் குஞ்சுகள் வெளிவந்தும் கேட்கும்

   கொண்டு வந்து சிறு புழுக்கள் வாயில் ஊட்டுவாய்


அட்டிகை வேண்டாய், அரிசி நொய்யே போதும்

   அதுவும் இல்லையா ஆண்டவன் ஏதோ தரும் 


துட்டு துட்டு என தொடர்ந்து நாங்கள் ஓடுவோம்

   தொலைத்து இன்பம் பல பின்னர் வாடுவோம்


சிட்டுக்குருவியே!  இந்நாள் எங்கே நீ காணோம்? 

   " செல் "லரிக்கும் டவர்கள் துரத்தியதோ உன்னையும்? 


__  குத்தனூர் சேஷுதாஸ்


------------------------------------------------

சிட்டுக்குருவி என்

" பெட்" குருவிநீ.


உருவில் சிறிய 

உன்னைக்காணும் போது எல்லாம்

எம்உள்ளத்தில் எழுப்பிய மகிழ்ச்சி

மிகப்பெரியது.


எம்இளமைப்பருவம்

உன்னோடு ஒட்டி

வளர்ந்தது.


காலையில் எழுந்தவுடன் வீட்டு

சாளர விளிம்பில்

உனைக்கண்டால்தான்

அன்று விடியும்.


மனிதனின் ஆரவாரக்கூச்சலில்

உன்னுடைய  மெல்லிய

குரல் அமுங்கி விட்டது.


இத்தனைக்கும் நீ

உழவனின் நண்பன்.


ஆனால் பூச்சி கொல்லி மருந்துகளும், அலைபேசிக் கோபுரங்களும்

உனக்கு ஹிட்லராக

அமைந்தன போலும்!


வீட்டுக்கு வீடு உன்னைக்கண்டு

மன அழுத்தங்கள்

போன நாட்கள

கடந்து இன்று மிருக காட்சி சாலையில்

காசு கொடுத்து

காணும் காட்சிப்

பொருளனாய்.


இன்று கள்ளக்கடத்தல்

செய்பவருக்கு, " குருவிகள" என்று பெயர். என்ன கொடுமை இது?!


 நீ செய்த கடத்தல்எல்லாம்

எங்கள் துயரங்களைக்

கடத்தியதுதான்!

 


 ஒரு சிறு ஆறுதல்-

பூர்வாவில் எங்கள்

சாளர விளிம்பில்

உன்னையும் உன்துணையையும்

காண முடிகிறது, அவ்வப்போது.


ஆனால் என்று கூடு கட்டுவாய் என்ற எதிர்

பார்ப்புடன் என் நேரங்கள் கழிகின்றன.

= மோகன்

------------------------------------------


No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...