காணும் பொங்கலில்...
சாணம் தெளித்த வாசல் கோலங்கள் மின்னட்டும்
" சரியான போட்டி " என வீரப்பா வியக்கட்டும்
காணும் பொங்கல் இன்று கொண்டாடப் படட்டும்
கயிறாம் உறவுகள் இன்னும் இறுகட்டும்
வேணும் வேணும் என்பார்க்குச் செல்வம் சேரட்டும்
வீட்டின் கூரையதைப் பிய்த்துக் கொட்டட்டும்
ஆணும், பெண்ணும் பரஸ்பரம் விட்டுக் கொடுக்கட்டும்
அஸ்திவாரம் குடும்பத்தின் வலிமை கூடட்டும்
மூணேனும் பிள்ளைகள் இல்லமதில் பிறக்கட்டும்
முதிய பெற்றோரருகில் யாரேனும் இருக்கட்டும்
நாணும் மலர்களாம் நம்மிடையே பெண்கள்
நல்லதொரு தோழனாய் ஆணும் பழகட்டும்
தூணாக அங்கங்கே அறம்சார் அன்பர்கள்
தூக்கிப் பிடிக்க இச் சமுதாயம் நிற்கட்டும்
காணும் இடமெல்லாம் தீந் தமிழே தெரியட்டும்
கம்பன் பல முளைக்கட்டும், கவிதைகள் பூக்கட்டும்
__ குத்தனூர் சேஷுதாஸ்
No comments:
Post a Comment