தாத்தா தினமாம்
மூத்தோர்க்கு அந்நாள் முதலிடம் இருந்தது
மூலையே இன்று போதும் என்றானது
ஆற்றுப் படுகை போல் அத்துணை அவரிடம்
அள்ள அள்ளக் குறையா அரிய அனுபவம்
சாத்தனூர் அணை போல் சேமித்து வைப்பார்
சங்கடம் வரும் நேரம் அளவாகக் தருவார்
ஆத்தா எனைக் கோபித்தால் ஆடிப்போவார்
அப்பா அடிக்கும்போது அணைத்துத் தடுப்பார்
வாத்து போல் நடந்தும் ஓய்வெடுக்க மாட்டார்
வாசல் வரை நாளும் வந்து டாடா காட்டுவார்
சாத்தான், பேய் சொல்லிச் சாப்பிட வைப்பார்
சரியாக ஒன்பது மணி உறங்கச் செய்வார்
பாத்துக் கொண்டிருக்கும் கண்காணிக்கும் கேமரா (CCTV)
பழையதை அசைபோடும் பரியா? காளையா?
தாத்தா தினமாம் இன்று ஊரே சொல்லுது
தனியே தவிக்க விடுது, நாடகம் ஆடுது.
__ குத்தனூர் சேஷுதாஸ்
★०★०★०★०★०★०★०★०★
*ஆனந்தமோ ஆனந்தம்*
★०★०★०★०★०★०★०★०★
அம்மா கைபிடித்து நடப்பதும் ஆனந்தம்
கடைத் தெருவுக்கு போவதும் ஆனந்தம்
தாத்தாக் கடையில்
வாங்குவதும் ஆனந்தம்
கடலை மிட்டாயும் கமர்கட்டும் ஆனந்தம்
தாத்தாக் கொடுக்கும்
கொசுறும் ஆனந்தம்
வாயெல்லாம் இனிக்க மனதெல்லாம் மகிழ
உலகையே வென்ற
பெருமித நடைபோட்டு
வீட்டுக்குத் திரும்புவது
ஆனந்தமோ ஆனந்தம்.
*குறிப்பு: தேசிய தாத்தா தினத்தில் தாத்தாக் கடை நினைவுகளுக்கு அர்ப்பணம்*
*உங்கள் தோழன் ஸ்ரீவி*
-------------------------------
தாத்தா
-------
தா, தா என பெயரனோ,பெயர்த்தியோ, எது கேட்டாலும்
வாங்கித்தரும் கற்பகத் தரு, தாத்தா!
மகனோ, மருமகளோ
குழந்தை என்அப்பாவை
உரித்து வைத்திருக்கிறது என்று உரிமைப்போர்
கொடி தூக்க வைக்கும்
தாத்தாக்கள்!
தாம் பணி சுமை காரணமாக, தம்மக்களோடு
வளரும் பருவத்தில்
நிறைய மனநிறையும் பொழுதுகளைக்கழிக்காத ஏக்கத்தில்
தம் ஓய்வுக்காலத்தில்
தம் பேராண்டிகளைக்
கண் போல் பேணும்
காவல் தெய்வம்.
இன்று ஒரு தினம் மட்டும் இவர்களை
நினைவு கூர்ந்து விட்டு
முதியோர் காப்பகத்தில் "பாதுகாப்பாக" விட்டுச்செல்லும்
இன்றைய சமுதாய நோக்கு மாறினால்
தினமுமே தேசிய தாத்தாக்கள் தினம்தான்!
நம் பூர்வா 'நுழைவாயில் சமூகத்தில்' வசிக்கும்
தாத்தாக்களுக்குப் பல
பெயரன், பெயர்த்திகள்
உறவுகள் ;இரத்த தொடர்பினால் மட்டும்
உருவாவதில்லை.
- மோகன்
-
No comments:
Post a Comment