விரல் நுனியில் உலகமாம்!!!
அன்றே பாடினார்
கலைவாணர்
பொத்தானைத் தட்டி விட்டால்
ஒரு தட்டுல இட்லி சட்டினியுடன் வந்திட.
இன்று கைபேசியில் விரல் பட்டால் இட்லி மட்டுமல்ல
பிரியாணியும் சேர்ந்தே வரும்.
அன்னையின் அன்பும் பாசமும்
அதில் வருமா?
அன்பு மகன் அமெரிக்காவில்.
கிராமத்தில் அம்மா.
தினமும் காணுகிறார் மகனைக் கையடக்கத் திரையில்.
அன்பு மகனின் தலையைக் கோதத்
துடிக்கும் கை.
அன்னையால் முடியுமா?
முன்னெல்லாம் வீட்டில்
அழையா விருந்தாளிகள்.
மாமன் மச்சான் உறவுடன்.
உடன் பிறந்தாரைக் காணக் கூட
முன் அனுமதி வேண்டும் இன்று.
அன்றாட மளிகைச் சாமானைக் கூட
அலை பேசியில் பெற்றிட இயலும்.
மளிகைக் கடை அண்ணாச்சியின்
அன்பும் பரிவும் அதில் வருமா?
முக நூலில் அயல் தேசத்தார்
கூட உனக்கு நண்பர்.
ஆனால் அடுத்த வீட்டில் யார்
என்றால் தெரியாது.
எல்லா வங்கிக் கணக்கும்
உன் ஆன்ட்ராய்டு போனில்
ஆனால் எல்லாக் கடன்களுக்கும்
ஈ எம் ஐ உன் தலையில்.
இயற்கையைக் காட்டி அமுதூட்டினர் அந்நாள் அம்மாக்கள்.
சாப்பிட இன்ஸ்டா ரீல் கேட்கும்
இந்நாள் குழந்தைகள்.
ஆபத்தில் மனிதர்கள்.
அதை அவசரமாகப் படமாக்கும்
அறிவிலிகள்.
பாசத்தையும் பணத்தால்
அளக்கும் குணம்.
இயந்திரமானது
மனிதா உன்
வாழ்க்கை மட்டுமல்ல
நீயும்தான்.
விரல் நுனியில்
விரிந்து விட்டது
உனக்கு உலகு.
ஆனால்
கூட்டுக்குள்
சுருங்கி விட்டது
உன் மனது.
- முகம்மது சுலைமான்
No comments:
Post a Comment