Thursday, September 4, 2025

ஆசிரியர் தினம்

 நற்சுனை 10


ஆசிரியர் தினம்


பேசும் புத்தகங்களாய்

அறிவுச் சாவிகளாய்

சீராக்கும் சிற்பிகளாய்

வழி காட்டும் லாந்தர்களாய்

நீவிர்!


கரும்பலகையில் நீங்கள் இட்ட

நட்சத்திரங்களால்

மாணவர்கள் மின்னும் நட்சத்திரங்களாய்!


நீங்கள் கரம் பிடித்த 

" சாக்பீஸ்" தேயத் தேய 

வளர்பிறையாய் ஆகுவோம் முழு"மதி"யாய்!


உதிர்த்த சொற்களெல்லாம்

உயர்த்தும் சொற்களன்றோ!

திட்டித் தீர்த்ததெல்லாம்

தீயவை அகற்ற அன்றோ!


நன்றிகள் கோடி உரைத்தேன்

உம் நாளில்.

ஒரு நாள் போதுமா??? 

என்றென்றும் 

எம் நினைவில்...


இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்💐


- சங்கீதா


=======================

வணக்கத்துக்குரிய குருவே !


கல்லாக இருப்பதைக் கனிய வைப்பீர்

   களிமண் கொடுக்க பாண்டமாக்குவீர்


புல்லைக் கொடுத்தாலும் புலவனாக்குவீர்

   புழு ஒன்றையும் நீர் புலியாக்குவீர் 


பொல்லாதன செய்தால் பிரம்பெடுப்பீர் 

   பொத்தான் போடாதாரை ஓட வைப்பீர்


செல்லாக்காசையும் தங்கமாக்குவீர்

   செழிக்க கிளர் நிலம் பார்த்து மகிழ்வீர்


கொல்லாமை மேன்மை எனும் நீர் வள்ளுவன் 

   கொடுப்பதின் சிறப்பில் ஔவையும் தான் 


கல்விக் கண் திறந்து விடும் நீரும் சிற்பி

   காதில் ஒலிக்கிறதோ "கற்பி! கற்பி!!"


எல்லாரையும் ஏற்றி விடும் நீரும் ஏணி

   இறைக்க இறைக்க வற்றா அக் கேணி


கல்லால மரம் கீழ் அருளும் அக் குருவாம்

   கல்விக் கூடங்களில் உம் போல் பலராம். 


என்றும் வணங்கும் 

__. குத்தனூர் சேஷுதாஸ் 5/9/2025

===================================

ஏற்றி விடும் ஏணியாய் 

ஆற்றைக் கடக்கும் தோணியாய்

நாற்றைக் காக்கும் நல்லுரமாய்

ஊற்றெடுக்கும் ஞானக் கேணியாய் 


கல்வி கற்பித்த நல்லாசிரியரை 

நல்வழி காட்டி 

வழி நடத்தியவரை

அன்போடு நாமும் நினைவு கூர்வோம்

நன்றியும் சொல்லி வாழ்த்துரைப்போம் 


*ஆசிரியர் தின   நல் வாழ்த்துகள்*


- ஸ்ரீவி


--------------------------

ஆசிரியர் தினம்

05/09/2025


ஆசான்  மற்றும்ஆசிரியை தம் சேவைகளை நன்றியுடன்  

நினைவு கூறும் நாள்.


ஓர்ஆசிரியர் நாட்டின் அதிபராக உயர்ந்த நம்நாடு " பாருக்குள்ளே நல்ல நாடு" அன்றோ!


'முளைத்து மூன்று இலை நன்றாக விடும்வரை' பேணி வளர்த்து விடும் பெற்றோர் முதல் ஆசான்கள்.


பள்ளி, கல்லூரி என உயர உயர சளைக்காமல் தூக்கி விட்ட ஆசிரியர் கரங்கள்.


தாம் இருந்த இடத்தில் இருந்தாலும் மாணாக்கனின் உயர்வு கண்டு கண்கள் பனிக்க இறும்பூது அடையும் கரும்பு நெஞ்சங்கள்!


அல்லவை நீக்கி நல்லவை

 பயிற்றுவிக்கும் " வாலறிவர்கள்".


வாழ்வின்ஓட்டத்தில்  முறையான கல்வி கற்பித்தவர்களோடு  , பயணம் சரியாக செல்ல கற்பித்த  மற்ற ஆசான்கள் ஏராளம் !ஏராளம்!


துவிச்சக்கர வண்டி ஓட்ட கற்றுக்கொடுத்த தந்தை,

கணிப்பொறி தட்டி வாழக்கையின் வளமான கதவுகளைத்திறக்க உதவிய கணிப் பொறியாளர்,

சாதம் செய்வது எப்படி என்று காட்டிய இல்லாள்,

தலையில் காப்புக்கவசம்அணிய அறிவுறுத்தும் பாதுகாவலர் ........ம்ம் சொல்லி மாளாது.


 தினமும் ஓர்ஆசிரியர், கற்பது வாழ்க்கைக் கல்வியில் மற்றோர் பாடம்.


ஆசிரியர் பதவிக்குத்தான் ஓய்வு; ஆசிரியர்களுக்கு அல்ல.


எல்லா ஆசிரியர்களையும் எவ்வளவு முறை வணங்கினாலும் போதாது. இரு கைகள் போதாது என்றால் தலை 

இருக்கிறதே!


நன்றி கலந்த வாழ்த்துகள்🙏🙏

- மோகன்


================================


No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...