Monday, August 11, 2025

இருட்டு

 இருட்டுக்குள் தள்ளப் பட்டேன்.என் கண்களை திறக்க எனக்கே உரிமையில்லை..

கும்மிருட்டில்லை..

வெளிச்சத்தின் மிகச் சில துகள்களே மூடிய விழிகளில்

பட்டு என்னை உயிர்ப்பித்துக் கொண்டிருந்தன.

காதுகளை கூர்மையாக்கினேன்..

கொலுசு சத்தம் அங்குமிங்குமாய்..

கதவுகள் "கிரீச் கிரீச்"

என சத்தமிட்டன..

மெல்லிய குரல்கள் என்

செவிகளை மோதின..

சில பெயர்களை அவ்வப்போது சத்தமாய்

யாரோ சொன்னார்கள்..

காதருகே  திடீரென

சிரிப்பொலி..

நிச்சயம் அது ஒரு இளம் வயது பெண்ணின் சிரிப்பொலியாகத் தான் இருக்க வேண்டும்.

நடு நடுவே  தொலைப்பேசியின் அழைப்பு மணி ஒலித்தது.யாரேனும் பேசுகிறார்களா?? கேட்கவில்லை.சற்று தொலைவில் இருக்குமோ? காகிதங்களை கிழிக்கும் சத்தம் மட்டும் மிகத் தெளிவாக கேட்டது. சிலர் அங்குமிங்கும் செல்வது போல் தோன்றியது.கையில் வைத்திருந்த பையை அடிக்கடி தொட்டுப் பார்த்துக் கொண்டேன்.

யாரேனும பிடுங்கிக் கொள்வார்களோ??? உள்ளூர பயம் பற்றிக் கொண்டதால் பையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டேன்.

கூடவே கண்களை திறக்கக்கூடாது என்ற கட்டளை ஒரு புறம்.

சற்று நேரத்தில் அனைத்து ஓசைகளும்

அடங்கியது போன்ற உணர்வு.என்னை அறியாமல் உறக்க நிலைக்கு சென்று விட்டிருக்கிறேன். 

திடீரென்று யாரோ தீண்டுவது போல் இருந்தது. சற்றே சுதாரித்துக் கொண்டேன்..ஒரு பெண் குரல் தான். "கண்ணைத் திறங்க.. இன்னொரு முறை மருந்து விடனும்"என்றார் கண் மருத்தவமனைக்கு பரிசோதனைக்காக வந்த என்னிடம்.. 


- சாய்கழல் சங்கீதா

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...