Wednesday, February 12, 2025

சிறார்கள் கையில் கைபேசி வேண்டாம்

 ●०●०●०●०●०●०●०●०●०●०

     சிறார்கள் கையில்

 கைபேசி வேண்டாம்

●०●०●०●०●०●०●०●०●०●०


செல்ஃபோன் எனும் 

கையடக்க அரக்கனின்

கோரப்பிடியில் -

அது உருவாக்கிய 

மாயச் சுழலில்

சிக்கிய தன் தோழனை

மீட்க புத்தகத்தின்

துணையோடு

முயற்சிக்கும் சிறுவன்!


இவன் முயற்சி 

வெல்லட்டும்!

இந்த அவனியில்

இவன் போல பலர்

உருவாகட்டும்!!


சிறார்களின் கையில்

நூல்கள் தவழட்டும்

கைபேசிகள் சற்று 

விலகி வழி விடட்டும்!


உங்கள்_தோழன்_ஸ்ரீவி


-----------------------------------

இதுவும் விடாத கருப்பு


எட்டாத தூரத்தில் உணவகம் இருந்தும்

   எவர்க்கும் கவலையில்லை இது உதவும்


பட்டன் போல் தட்டுவார், பாதை நோக்குவார்

   பத்து மணித்துளி கடந்தால் பதைபதைப்பார்


வட்டமாக அமர்ந்து உண்டோமே அது கனவா? 

   வாரிசாம் ஒன்று, அதுவும் இதன் பிடியிலா ! 


குட்டிச் சிறார் கையில் கொடுத்து விட்டோம் அணுகுண்டு

   கொள்ளை போயின அவரின் குறும்பு, விளையாட்டு


தொட்டுத் தொட்டுப் பேசிய சொந்தங்கள் எங்கே? 

   தொடும் தொலைவுக்கும் குறுஞ்செய்தியாம் இங்கே


பட்டான விழிகள் எல்லாம் பாழாய்ப் போகின்றன

   படிக்க வைத்த நூல்கள்   cell கள் அரிக்கின்றன


சொட்ட வியர்வை வங்கியில் சேர்த்த பணமெலாம்

   சொடுக்கிடும் நேரம் காணாமல் போகுதாம்


விட்டு விடாது தொடரும் இதுவும் ஒரு கருப்பு

   விரைந்து நம் குலம் பொசுக்கும் " செல் " நெருப்பு. 


__  குத்தனூர் சேஷுதாஸ்

-------------------------------------------

👍

அன்று தொலை பேசி

தொல்லை பேசி என்று 

அறியப்பட்டது.


"பேசித் தொலை" என்று கூறுவாரும் உண்டு.


இன்று அலைபேசியாக

புது உருமாற்றம்- காதில் வைத்துக்கொண்டு பேசியே அலைய வைப்பதாலோ!


இந்த " செல் " போன்களைப்பேணி

நூல்களைப் புறக்கணித்தால்

அவை " செல்"

அரித்துப்போகும்

அபாயம்😒


அன்று " ஹலோ கேக்குதா" என்று கதற 

வைத்த தொலைபேசிகள்!

இன்று காதுகளில் " தொங்கட்டான்களை"

மாட்டிக்கொண்டு பேசுவதால் கேட்பதில்

தொல்லையில்லை.


எதிரே பார்ப்போர்க்கு

தனக்கு தானே பேசிக்கொண்டு செல்லும் பித்தர்கள்என்று 

தோன்றலாம்.


இதெல்லாம் சரி-

அலை பேசி ஒரு தொல்லையா அல்லது

இல்லையா?!


பயன்பாட்டில் உள்ளது சுட்சுமம்!


இன்றைய பாதுகாப்பற்ற சூழ நிலையில் சிறார்களின்

நடமாட்டத்தைக் கண்காணிக்க;


இன்றைய அவசர உலகில் குடும்பத் தலைவன் விபத்தின்றி

அலுவலகம் சென்றானா என்று அறிய;


தனிமரங்களாக மோட்டுவளையை நோக்கும் முதியோர் நிலை அறிய


எனப்பல நன்மைகளைத்

தரும் கைக்கு அடக்கமான கருவி.


மூர்த்தி சிறிது எனினும்

கீர்த்தி பெரிது


இதை ஒரு வழித்துணையாக ஆள வேண்டும்; வாழ்க்கைத்

துணையாக அல்ல.


சிறார்களும் பதின்ம வயதினரும்அல்லவை நீக்கி நல்லவை காணச்

செய்வது பெற்றோர்களின் மற்றும் மற்ற மூத்த குடும்பத்தினரின்

(உடனுறைந்தால்)

கடமையாகும்.


முதல் கடமையாக முழுமையாக எழுதப் பழக்க வேண்டும்

Lol! Omg! எல்லாம்

நமக்கு எதற்கு ஐயா!

- மோகன்

---- ---------------------------------------------------


No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...